Saturday, May 6, 2023

மிட்டாய்க்குக் கொடுக்கும் மரியாதையைக் கூட கடவுளுக்குக் கொடுக்காதவர்கள்.

மிட்டாய்க்குக் கொடுக்கும் மரியாதையைக் கூட கடவுளுக்குக் கொடுக்காதவர்கள்.

.
"அண்ணாச்சி, நேற்று நான் உங்க கோவிலுக்கு வந்திருந்தேன்."

"'எங்க கோவிலுக்கா? என்ன விசயம். யாரையாவது பார்க்க  வந்தியா?"

"ஆள் யாரையும் பார்க்க வரவில்லை, உங்க கடவுளைப் பார்க்க வந்தேன்."

"'கடவுளைப் பார்க்கவா? ஆச்சரியமா இருக்கிறது.    பார்த்தியா."

"பார்க்கல. பீடத்தில் ஒரு 
சுவாமியார் மக்களைப் பார்த்து நின்று கொண்டிருந்தார்.

அவர் சொன்னது எதுவும் எனக்குப் புரியவில்லை.

மக்கள் எழுவதும், உட்கார்வதும், பாட்டுப் படிப்பதுமாக இருந்தார்கள்.

பூசைக்கு வந்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் சொன்னார்,

''பூசையின் போது இயேசு கிறிஸ்துவைத் தந்தை இறைவனுக்குப் பலியாக ஒப்புக்கொடுப்போம்" என்று.

இயேசு கிறிஸ்துவைப் பார்க்கவே கோவிலுக்கு வந்தேன்.

ஆனால் நான் அவரைப் பார்க்கவில்லை.

பூசையின் ஏறக்குறைய இறுதிக் கட்டத்தில் சாமியார் மக்கள் கையில் ஏதோ கொடுத்துக் கொண்டிருந்தார்.

மக்கள் அதை இடது கையால் வாங்கி, வலது கையால்  எடுத்து வாயில் போட்டுக் கொண்டு போனார்கள்.

அது என்னவென்று தெரியவில்லை."

"'இப்போது சொல்லப் போவதை கொஞ்சம் கூர்ந்து கவனிக்கவும். 

எங்கள் விசுவாசப்படி  கடவுள் ஒருவர்.

அவர் தந்தை, மகன், தூய ஆவி என மூன்று ஆட்களாய் இருக்கிறார்.

சுபாவம் ஒன்று,  ஆள் மூன்று.

இரண்டாவது ஆள் யார்?"

"மகன்."

"'இரண்டாவது ஆளாகிய மகன் மனிதர் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக மனிதனாகப் பிறந்தார்.

அன்னை மரியாளின் வயிற்றில் மனிதவுரு எடுத்த வினாடியிலிருந்து அவருக்கு இரண்டு சுபாவங்கள்.

'தேவ சுபாவம், மனித சுபாவம்.
ஆள் ஒன்று, சுபாவங்கள் இரண்டு.

மனிதனாக பிறந்த அவர் உலகில் 33 ஆண்டுகள் வாழ்ந்து,

இறுதியில் நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்து விட்டு,

மரித்த மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்து,

விண்ணகம் எய்திய பின்னும் 
உலகம் முடியும் வரை நம்மோடு உலகில் வாழ விரும்பினார்."

"அது எப்படி முடியும்?

உலகில் வாழ வேண்டும் என்றால் ஆத்துமமும் சரீரமும் சேர்ந்து இருக்க வேண்டுமே."

"'நம்மால் முடியாதது கடவுளாகிய அவரால் முடியும். 

அவர் சர்வ வல்லவர். (Almighty)

மரித்த பின்னும் உலகில் தொடர்ந்து வாழ்வதற்காகவே திவ்ய நற்கருணையை இயேசு ஏற்படுத்தினார்."

"அப்படீன்னா?"

"'தனது வல்லமை மிகுந்த வார்த்தைகளால் அப்பத்தை தனது உடலாகவும், திராட்சை ரசத்தைத் தனது இரத்தமாகவும் 

மாற்றி அவற்றை, அதாவது தன்னையே, தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுத்தார்."

"அதாவது சீடர்களுக்கு உணவாகக் கொடுத்தது அப்பம்போல் தோன்றினாலும் அது அப்பம் அல்ல. அது இயேசு கிறிஸ்துவே, சரியா?"

"''சரி. திராட்சை ரசம்  திராட்சை ரசம் அல்ல. அவருடைய ரத்தம்."

"ஒன்றுமில்லாமையிலிருந்து உலகத்தையே உண்டாக்கிய அவருக்கு ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றுவது கடினம் ஒன்றும் இல்லை.

ஆனால் அப்போது அவர் உலகில் இருந்தார். மாற்றினார்.

ஆனால் இப்போது அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.

இப்போது அவர் எப்படி அப்பத்தை தன் உடலாக மாற்றுகிறார்?"

"'அதற்காகத்தான் அவர் குருத்துவத்தை ஏற்படுத்தி,

அவரது குருக்களோடு அந்த வல்லமையை பகிர்ந்து கொண்டார்.

முதலில் தனது சீடர்களுக்கு குருப் பட்டம் கொடுத்தார்.

தனது சீடர்களுக்கும் அவர்களது வாரிசுகளுக்கும், குரு பட்டம் கொடுக்கும் வல்லமையைக் கொடுத்தார்.

இதனால் உலகம் முடியுமட்டும் உலகில் குருக்கள் இருப்பார்கள்.

அவர்கள் உலகம் முடியுமட்டும் இயேசு செய்ததை செய்வதற்காகத்தான் அவர்கள் தினமும் திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்."

"அதாவது, குருவானவர் திருப்பலியின் போது அப்பத்தை இயேசுவின்உடலாகவும்,

 ரசத்தை இயேசுவின் ரத்தமாகவும் மாற்றி,

இயேசுவை உங்களுக்கு உணவாகத் தருகிறார்கள்.

சரியா?"

"'நீங்கள் எப்போதாவது ஞானோபதேசம் படித்தீர்களோ?"

." இல்லை. நீங்கள் சொல்வதை வைத்து நான் சொல்கிறேன்."

"'நீங்கள் சொல்வது சரி.

மக்களுக்குக் குருவானவர் கொடுத்ததாகச் சொன்னது திவ்ய நற்கருணையைத்தான்."


"ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். 
நீங்கள் சொன்ன எல்லா விவரங்களும் அந்த மக்களுக்கு தெரியுமா?''

"'தெரிந்து அதை ஏற்றுக் கொண்டால் தானே அவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியும். 

திவ்ய நற்கருணையில் இயேசு இருப்பது எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெரியும்."

"ஆனால் அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால் அவர்களுக்கு எதுவும் தெரிந்தது போல் தெரியவில்லையே."

"'எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்?."

"அவர்கள் கையில் வாங்கியது மரியாளிடமிருந்து பிறந்த அதே இயேசுவைத் தானே?"

"'ஆமா."

"பாடுகள் பட்டு சிலுவையில் மரித்த அதே இயேசுவைத் தானே?"

"'ஆமா."

"திரும்பவும் கேட்கிறேன், கோபப்படாதீர்கள்.

இயேசு வாழ்ந்த அதே உடலைத் தானே.

நான் திரும்பத் திரும்ப கேட்பதற்கு காரணம் இருக்கிறது.

நான் கிறிஸ்தவன் அல்ல.

கிறிஸ்துவை விசுவசிக்கவுமில்லை.

ஆனால் உங்கள் மக்கள் கிறிஸ்தவர்கள்.

அவர்கள் உணவாக வாங்குவது கிறிஸ்து என்றும்,

 அவர் உலகை படைத்த கடவுள் என்றும் அவர்களுக்கு தெரியும். 

உலகை படைத்த கடவுள் தங்களிடம் வரும்போது கடவுளிடம் காட்ட வேண்டிய மரியாதை எதையும் அவர்கள் காட்டவில்லையே!

நண்பர் கொடுக்கும் மிட்டாயைக் கூட இடது கையால் வாங்குவது அவ மரியாதை.

சாதாரண மக்கள் மிட்டாய்க்கு கொடுக்கும் மரியாதையைக் கூட உங்கள் விசுவாசிகள் கடவுளுக்கு கொடுக்கவில்லையே!

அவர்கள் இயேசுவை நம்புகிறார்கள் என்று நான் எப்படி நம்புவது?"

"'நீங்கள் சொல்வதை மறுத்துப் பேச என்னிடம் தைரியம் இல்லை. 

அந்த அளவுக்கு அவர்களின் விசுவாச நிலைமை இருக்கிறது."

"விசுவாச நிலைமை குறைவாக இருக்கிறது என்கிறீர்கள்.

ஆனால் அவர்கள் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால் அவர்களிடம் விசுவாசமே இல்லை என்று தான் நான் கூறுவேன்.

நீங்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர். உங்களிடம் படித்த ஒரு மாணவன் 

உங்களை பார்த்தவுடன் எழவும் செய்யாமல், 

வணக்கமும் செய்யாமல்,

 பார்த்தும் பார்க்காதது போல் நடந்து கொண்டால் அவனை மாணவன் என்று ஏற்றுக் கொள்வீர்களா?"

"'விசுவாசமே இல்லாத உங்களுக்கு ஏற்படும் உணர்வுகள் கூட விசுவாசம் உள்ளவர்களுக்கு ஏற்பட வில்லையே என்பதை நினைக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது.

ஆனால் வருத்தப்படுவதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்.

கடவுள் தான் அவர்களைத் திருத்த வேண்டும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment