Monday, May 29, 2023

தாழ்நிலை நின்ற தம் அடிமையைக் கடைக்கண் நோக்கினார்."(லூக்.1:48)

"தாழ்நிலை நின்ற தம் அடிமையைக் கடைக்கண் நோக்கினார்."(லூக்.1:48)

அன்னை மரியாள் இறைவன் தன் மீது காட்டிய கருணை குறித்து குறிப்பிடும் வசனம் இது.

வசனம் சிறியது, பொருள் பெரியது.

தாழ்நிலை நின்ற

தம் அடிமையைக்

கடைக்கண் நோக்கினார்.

சமூகத்தில் அடிமைகள்தான் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள்.

ஒரு காலத்தில் சமூகம் அடிமைகளை மனிதர்களாகவே நடத்தவில்லை.

பொருட்களை விற்பதும் வாங்குவதுபோல அடிமைகளையும் விற்பதும் வாங்குவதுமான ஒரு காலம்   இருந்தது.

வேலைக்காரர்கள் உழைத்தால் அவர்களுக்கு சம்பளம் உண்டு.

அவர்கள் இஷ்டப்பட்டால் வேலையை விட்டு நின்று விடலாம்.

இஷ்டப்பட்ட இடத்தில் வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம்.

ஆனால் அடிமைகள் வேலைக்காரர்களை விட அதிகமாக உழைக்க வேண்டும்.

ஆனால் சம்பளம் கிடையாது.

வண்டி இழுக்கும் மாட்டுக்கு சம்பளமா கொடுக்கிறோம்?

அந்த நிலைக்கு தாழ்ந்து இருந்தவர்கள் அடிமைகள்.

அவர்களை விட தாழ்ந்தவர்கள் கிடையாது.

முதலாளி கொடுத்த வேலையை அவரது திருப்திக்கு ஏற்ப செய்ய வேண்டும்.

முதலாளிக்கு திருப்தி ஏற்படா விட்டால், வண்டியை ஒழுங்காக இழுக்காத மாடு அடிபடுவது போல அடிபட நேரிடும்.

இதுவரை சொன்னது அடிமையின் நிலை பற்றி அறிய,

அன்னை மரியாள் சிறு வயதிலிருந்தே தாழ்ச்சி மிக்கவளாக வளர்ந்தாள்.

கபிரியேல் தூதர் அவளுக்கு மங்கள வார்த்தை சொன்ன அன்று மரியாள் தனது தாழ்ச்சியை வார்த்தை மூலம் வெளிப்படுத்தினாள்.

அவள் வயிற்றில் இறைமகன் மனுமகனாக உற்பவித்துப் பிறப்பார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை கபிரியேல் தூதர் அவளுக்கு வெளிப்படுத்திய போது,

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது."

என்று அவள் கூறினாள்.

சிறுவயது முதலே கன்னிமை வார்த்தை பாடு கொடுத்திருந்தாள்.

ஆகவே குழந்தைப் பேறு அவளுக்கு விருப்பமில்லாத ஒன்று.

ஆனால் தனது கன்னிமைக்கு பழுது ஏற்படாமல் இயேசு உற்பவித்து பிறப்பார் என்று இறைத்தூதர் கூறிய போது,

இறைவனின் சித்தத்தை ஏற்றுக் கொண்டாள்.

முதலாளி கூறியதைத் தனக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ ஏற்றுக் கொள்ள வேண்டியது அடிமையின் கடமை.

குழந்தைப் பேறு அவளுக்கு விருப்பமில்லாத ஒன்றாக இருந்தாலும்,

அது இறைவனின் சித்தமாக இருந்ததால்,

"இதோ ஆண்டவருடைய அடிமை"
எனக்கூறி அதை ஏற்றுக் கொண்டாள்.

ஒரு அடிமை தனது முதலாளிக்கு கீழ்படிவது போல அவள் தன்னை படைத்த இறைவனுக்குக் கீழ்படிந்தாள்.

"கடைசியானோர் பலர் முதலாவர்."

என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு இணங்க தன்னை மனிதர்களில் கடைசியானவளாகக் கருதிய மரியாள் கடவுளின் தாயாகும் பாக்கியம் பெற்றதோடு,

இன்று விண்ணக மண்ணக அரசியாக விளங்குகிறாள்.

தாழ்ச்சி உள்ளவர்கள் மீது இறைவனின் கடைக்கண் பார்வை எப்போதும் இருக்கும் என்பதற்கு அன்னை மரியாள் ஒரு உதாரணம்.

மரியாள் சென்மப் பாவ மாசின்றி உற்பவித்தது அவளது தாழ்ச்சியான வாழ்வின் விளைவல்ல.

அது தனது அன்னையாக போகின்ற பெண்ணுக்கு இறைவன் கொடுத்த விசேஷ வரம்.

மூன்று வயது முதல் கோவிலில் வளர்ந்த மரியாள் அற்ப பாவத்தின் மாசு கூட இல்லாமல் பரிசுத்தமாய் வளர்ந்தாள்.

அவள் பரிசுத்தமாய் வளர்ந்தது அவளுக்கு தெரியும்.

ஆனால் அவள் அதைப்பற்றி பெருமையாக நினைக்கவில்லை.

கடவுளுக்கு சேவை செய்ய படைக்கப்பட்டுள்ள சாதாரண அடிமை பெண்ணாகவே தன்னை நினைத்து,

இறையன்பிலும், 
பிறரன்பிலும் வளர்ந்து வந்தாள்.

கோவிலில் வளரும் போது கற்பு வார்த்தைப் பாடு கொடுத்தாள்.

இது அவளை வளர்த்த பெரிய குருவுக்கு தெரியும்.

அவளது கற்புக்கு பாதுகாவலாகத்தான் வயதான புனித சூசையப்பருக்கு அவளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்.

திருமண ஒப்பந்தம் செய்திருந்த காலகட்டத்திலேயே கபிரியேல் தூதர் இறைமகன் அவள் வயிற்றில் மனு மகனாக உற்பவித்து, பிறக்கப் போகும் செய்தியை அறிவித்தார். 

இறைவனின் அடிமை உணர்வோடு அதை ஏற்றுக் கொண்டாள்.

அதன்பின் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் அவள் இயேசுவுக்காகவே வாழ்ந்தாள்.

நாம் செபம் சொல்வதற்காக கடவுளை தேடி போகின்றோம்.

ஆனால் அன்னை மரியாள் தன் மகனைப் பற்றி நினைத்த ஒவ்வொரு நினைவும் செபம் தான்.

 இயேசுவோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையும் செபம் தான்.

30 வயது வரை அவரை வளர்த்து பொது வாழ்வுக்கு அர்ப்பணித்தாள்.

இயேசுவின் பொது வாழ்வின் போதும் மரியாள் மகனுக்காகவே வாழ்ந்தாள்.

அவருடைய பாடுகளின் போதும் மரணத்தின் போதும் அவள் அவருடனே இருந்தாள்.

கருவறையை விட்டு அற்புதமான விதமாய் வெளிவந்த குழந்தை இயேசுவை மடியில் வைத்திருந்த மரியாள்,

அவரை கல்லறையில் அடக்கம் செய்யும் முன்னும் தன் மடியிலேயே வைத்திருந்தாள்.

இயேசு உயிர்த்தபின் முதல் முதல் காட்சி கொடுத்தது அன்னை மரியாளுக்குத் தான்.

இது நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலையில் 

இயேசு உயிர்த்தது தெரியாமல்

 அவரது உடலுக்கு பரிமள தைலம் பூசுவதற்கென்று கல்லறைக்கு வந்த பெண்களோடு அவள் வரவில்லை

 என்பதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்.

இயேசு விண்ணகம் எய்திய பின்னும் அவருடைய அப்போஸ்தலர்களோடு இருந்து

அவர்களை வழி நடத்தியதும் அன்னை மரியாள் தான்.

பெந்தகோஸ்தே திருநாள் அன்று கத்தோலிக்க திருச்சபையின் பிறப்பின் போதும் இயேசுவின் சீடர்களுக்கு  வழிகாட்டியவள் அன்னை மரியாள் தான்.

கத்தோலிக்க திருச்சபைக்கும் அதன் உறுப்பினர்களாகிய நமக்கும் ஆன்மீகத் தாய் அவள் தான்.

விண்ணகத்திற்கும் மண்ணகத்திற்கும் ஆன்மீக அரசி அவள் தான்.

தாழ்நிலையில் நின்ற தம் அன்னையாகிய அடிமையின் மீது கடவுள் கடைக்கண் நோக்கியதன் விளைவுதான் அவளது இன்றைய நிலை.

அன்னை மரியாளை நமது அன்னையாக ஏற்று அவள் மீது பக்தியோடு வாழ்கின்றோம்.

தாயைப் போல பிள்ளை இருக்க வேண்டும் என்ற நியதியை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அவளது உயரிய நிலைக்கு காரணம் அவளது தாழ்ச்சி தான்.

நாம் விண்ணக நிலையை அடைய வேண்டுமென்றால் மண்ணகத்தில் அவளைப் போல தாழ்ச்சியோடு வாழ வேண்டும்.

நமது தாழ்ச்சியைப் பார்த்து மற்றவர்கள் நாம் மரியாளின் மைந்தர்கள் என்பதை உணர வேண்டும்.

இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொண்டுள்ள அனைவரும் அவரின் அன்னையை தங்கள் அன்னையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தாயை வெறுப்பவர்களால் அவள் பெற்ற பிள்ளையை நேசிக்க முடியாது.

அன்று மரியாளின் மூலமாகத்தான் உலகம் மீட்பரைப் பெற்றது.

இன்றும் நாம் மரியாளின் வழியாக மீட்பரை அடைய வேண்டும்.

தாழ்ச்சி இல்லாததால்தான் அன்று லூசிபர் விண்ணகத்தை இழந்தான்.

தாழ்ச்சி வழி நின்று நாம் விண்ணகத்தை அடைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment