Monday, May 22, 2023

"பரிசுத்த தந்தாய், நாம் ஒன்றாய் இருப்பதுபோல, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் ஒன்றாயிருக்கும்படி உமது பெயரால் அவர்களைக் காத்தருளும்." ( அரு.17:11)

"பரிசுத்த தந்தாய், நாம் ஒன்றாய் இருப்பதுபோல, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் ஒன்றாயிருக்கும்படி உமது பெயரால் அவர்களைக் காத்தருளும்." ( அரு.17:11)

நம்மைத் தனது சாயலில் படைத்த கடவுள் நமது வாழ்க்கையும் தனது சாயலில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

 தம திரித்துவத்தின் மூன்று ஆட்களும் ஒரே அன்பினால் ஒரே கடவுளாக இருக்கிறார்கள்.

ஆட்கள் மூன்று, கடவுள் ஒன்று.

நூற்றுக்கு நூறு தம திரித்துவத்தைப் போல் நம்மால் இருக்க முடியாது.


நாம் ஒவ்வொருவரும் அன்பு உள்ளவர்களாக இருந்தாலும் நமக்குள் இருப்பது ஒரே அன்பு அல்ல.

ஆனால் தம திரித்துவத்தின் மூன்று ஆட்களும் ஒரே அன்பு ஆனவர்கள்.

நமக்குள் அன்பு இருக்கிறது, ஆனால் நாம் அன்பு அல்ல.
We have  love, but we are not love.

But God is love.
கடவுள் அன்பு மயமானவர்.

நாம் கடவுளைப் போல அன்பு மயமானவர்களாக இல்லாவிட்டாலும்,

அன்பினால் பிணைக்கப்பட்டு எல்லோரும் ஒருவர் வாழ்வது போல வாழ்ந்தால் நாம் கடவுளின் சாயலில் வாழலாம்.

கிறிஸ்துவின் அன்பினால் நாம் அனைவரும் பிணைக்கப்பட்டால் அனைவரும் கிறிஸ்துவின் சாயலில் வாழ்வோம்.

கிறிஸ்து தன்னை பகைத்தவர்களையும் அன்பு செய்தார்.

நாமும் நம்மை பகைப்பவர்களை அன்பு செய்தால் நாம் கிறிஸ்துவின் சாயலில் வாழ்கிறோம்.

கிறிஸ்து அவருக்கு விரோதமாக பாவம் செய்கிறவர்களை மன்னிக்கிறார்.

நாமும் நமக்கு விரோதமாக குற்றம் செய்கிறவர்களை மன்னித்தால் நாம் கிறிஸ்துவின் சாயலில் வாழ்கிறோம்.

கிறிஸ்து நமது பாவங்களுக்கு பரிகாரமாக பாடுகள் பட்டார்.

நாம் நமக்கு வரும் துன்பங்களை மற்றவர்களின் பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுத்தால் நாம் கிறிஸ்துவின் சாயலில் வாழ்கிறோம்.

ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார்.

நாம் அனைவரும் ஒரே அன்பினால் பிணைக்கப்பட்டு ஒரே குடும்பமாக வாழ்ந்தால் பரிசுத்த தம திரித்துவத்தின் சாயலாக வாழ்கிறோம்.

மூன்று ஆட்களும் ஒருவருள் ஒருவராக இருப்பதால் ஒரே கடவுளாக இருக்கிறார்கள்.

கடவுளின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும் ஒருவர் உள்ளத்தில் ஒருவர் வாழ்ந்து ஒரே திருச்சபையாக இயங்கும்போது 

 நமது திருச்சபை கடவுளின் சாயலில் செயல்படுகிறது.

கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் திருச்சபையாகிய அவரது ஒரே ஞான உடலின் உறுப்புக்கள்.

ஆட்கள் மூன்று. கடவுள் ஒருவர்.
கிறிஸ்தவர்கள் பலர், திருச்சபை ஒன்று.

"பரிசுத்த தந்தாய், நாம் ஒன்றாய் இருப்பதுபோல, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் ஒன்றாயிருக்கும்படி உமது பெயரால் அவர்களைக் காத்தருளும்."

இயேசு தந்தையிடம் செய்த இந்த செபத்தின் மூலம் 

தந்தையும், மகனும் ஒரே கடவுளாய் இருப்பது போல

அவரை பின்பற்றும் நாம் அனைவரும் ஒரே குடும்பமாய் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்.

கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினர்கள் கோடிக்கணக்கானோர் உலகெங்கும் இருக்கலாம்.

ஆனால் அனைவருக்கும் ஒரே விசுவாசம், ஒரே நம்பிக்கை, ஒரே இறையன்பு.

அனைவருக்கும் ஒரே தலைவர், பாப்பரசர்.

அனைவரையும் கண்காணிக்க ஒரே விதமான அதிகாரம் கொண்ட குருக்கள்.

ஒரே திருப்பலி.

பலியாக ஒப்புக் கொடுக்கப்படுபவர் அதே கிறிஸ்து.

கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆன்மீக உணவாக உண்பது ஒரே இயேசுவைத்தான்.

அனைத்து கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் வாழ்வதும் ஒரே இயேசுதான்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆலயங்களின் திவ்ய நற்கருணை பேழையில் வாழ்ந்து கொண்டிருப்பது அதே இயேசுதான்.

பெரிய வியாழன் அன்று இயேசு செபித்த செபத்தின் படி தான் கிறிஸ்தவர்கள் அனைவரும் வாழ வேண்டும்.

இயேசுவும், நாமும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்பது நமது மனதில் எப்பொழுதும் இருந்தால்,

நமது சொற்களும், செயல்களும் ஒன்று போலவே இருக்கும்.

தந்தை, மகன், தூய ஆவி வாழ்வது போல,

நாமும் கடவுளின் சாயலில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment