Saturday, April 1, 2023

"எனக்கு என்ன தருவீர்கள் ? நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுப்பேன்.''(மத்.26:14,15)

"எனக்கு என்ன தருவீர்கள் ?
 நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுப்பேன்.''
(மத்.26:14,15)

''எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது.

 ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனுக்கு அன்பு செய்வான், அல்லது, ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். 

கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது. ( மத். 6:24)

இயேசுவின் இந்த போதனையில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று பன்னிருவரில் ஒருவரான யூதாஸ் இஸ்காரியோத் நிரூபித்து விட்டான்.

பன்னிருவரில் அவன்தான் பொருளாளர்.

"தன்னிடம் ஒப்படைத்திருந்த பொதுப்பணத்திலிருந்து காசை அவன் எடுத்துக்கொள்வதுண்டு."

என்று அருளப்பரே (12:6) கூறுகிறார்.

யாராலும் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது.

யூதாஸ் இயேசுவின் சீடர்.

அவரிடம் பணப்பொறுப்பும் இருந்தது.

அவர் இயேசுவின் உண்மையான சீடராக இருந்திருந்தால் அவரை பணத்திற்காகக் காட்டிக் கொடுத்திருக்க மாட்டார்.

அவரது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் பணத்தைத் தூர விட்டெறிந்ததிலிருந்து 

அவர் ஆழ்மனதில் இயேசுவின் மீது அதிக அன்பு வைத்திருந்தது தெரிய வருகிறது.

இயேசு மரிக்குமுன் தனது நிலைக்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டியதன் பலன் யூதாசுக்கும் கிடைத்திருக்கும் என்று நம்பலாம்.

ஏனெனில் நமக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று அவரே போதித்திருக்கிறார்.

யூதாஸ் செய்த தீமைக்கு காரணமே பணத்தின் மீது அவன் வைத்திருந்த பற்று தான்.

பதினாறாம் நூற்றாண்டில் நம்மிடமிருந்து அனேகர் பிரிந்து சென்றதற்கான  காரணங்களில் ஒன்று நம்மவர்களிடையே நிலவிய பணப் பற்று தான்.

துறவற மடங்களில் கூட பணம் தனது ஆதிக்கத்தைக் காண்பிக்க ஆரம்பித்தது.

இந்த நிலைமையிலிருந்து திருச்சபையைக் காப்பாற்றுவதற்காகத் தான்

 இறைவன் பிரான்சிஸ் அசிசி என்ற ஏழையை தேர்ந்தெடுத்தார்.

இவர் நிறுவிய பிரான்சிஸ்கன் சபை பணத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக ஏழ்மை என்ற ஆயுதத்தைக் கொண்டு போராடியது.

புனித அந்தோனியார் இந்த சபையைச் சேர்ந்தவர் தான்.

ஏழையாகப் பிறந்து, 
 ஏழையாக வாழ்ந்து,
 ஏழையாக மரித்த இயேசு

 தன்னை பின்பற்றுபவர்கள் தன்னை போலவே வாழ வேண்டும் என்று ஆசிக்கிறார்.

'உண்டாகுக" என்ற வார்த்தையால் அகிலத்தையே படைத்த இறைவன்,

மனிதனாய் பிறந்த போது, "நரிகளுக்கு வளைகள் உண்டு:

 வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. 

மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" என்றார்.

தலைசாய்க்கவும் இடமின்றி வாழ்ந்தவரின் சீடர்கள்,

பொது நிலையினராய் இருந்தாலும்,

துறவிகளாய் இருந்தாலும்

 பெரிய பங்களாக்களில் சகல வசதிகளுடன் வாழ ஆசைப்படக்கூடாது.

இயேசு நம்மை பார்த்து,

" என்னைப் பின்செல்" என்று சொன்னபோது,

"என்னுடைய சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் என்னை பின்செல்"

என்ற பொருளில் தான் சொன்னார்.

''பெயரளவுக்கு, எனது பெயரை மட்டும் வைத்துக் கொண்டு, உனது இஷ்டம் போல் நட"

 என்று சொல்லவில்லை.

கிறிஸ்தவன் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டால் போதாது,

கிறிஸ்தவனாக வாழ வேண்டும்.

கிறிஸ்தவர்களாகிய நாம் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ?

அல்லது கிறிஸ்துவுக்கும் அவரது போதனைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோமா?

ஒரு திருத்தலத்தின் நடக்கும் திருவிழாவின் பெருமையை 

அங்கு நடைபெற்ற பாவ சங்கீர்த்தனங்களின் எண்ணிக்கையை வைத்து தீர்மானிக்கின்றோமா?

பிரிகின்ற காணிக்கையின் அளவை வைத்து தீர்மானிக்கின்றோமா?

நமது உள்ளூர் கோவில்களில் நாம் கொண்டாடும் திருவிழாவிற்கு 

நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பது கோவில் அலங்காரத்திற்கும்,
விழாவின் ஆடம்பரத்துக்குமா?
அல்லது,
திருப்பலிக்கா?

அநேக பங்குகளில் சபையாருக்குள் சண்டைகள் வருவது வரவு, செலவு கணக்குகளின் காரணமாகத்தானே?

இயேசு உலகிற்கு வந்தது நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும், நமது பாவங்களை மன்னிக்கவும்தான்.

தனது பிரதிநிதிகளான குருக்களை உலகெங்கும் அனுப்பியிருப்பதும் அதே நோக்கத்திற்காகத்தான்.

ஆர்ஸ் நகர பங்குக் குரு புனித ஜான் மரிய வியான்னி அதிக முக்கியத்துவம் கொடுத்தது பாவ சங்கீர்த்தனம் கேட்பதற்குத்தான்.

எந்த ஊரில் அதிகமான மக்கள் ஒழுங்காக பாவ சங்கீர்த்தனம் செய்கிறார்களோ அந்த ஊர்தான் இயேசுவுக்கு பிடித்தமான ஊராக இருக்கும்.

எந்த ஊர் மக்கள் சங்கீர்த்தனமே செய்வதில்லையோ அந்த ஊர் ஆன்மீக ரீதியாக தூங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

ஊரில் கட்டப்பட்டிருக்கும் கோவிலின் அளவை வைத்தோ,

வைக்கப்படும் திருப்பலிகளின் எண்ணிக்கையை வைத்தோ 

இறைவன் அதன் பெருமையை தீர்மானிக்க மாட்டார்.

அங்கு மக்கள் செய்யும் பாவ சங்கீர்த்தனங்களின் எண்ணிக்கையை வைத்தே அதன் பெருமையை இறைவன் தீர்மானிப்பார்.

இறைவன் விண்ணகத்திலிருந்து மண்ணகத்துக்கு வந்ததே அதற்காகத் தானே.

பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களால் இறைவனுக்கு ஊழியம் செய்ய முடியாது."

"தாத்தா! ஒரு சின்ன சந்தேகம்.
பணம் இருந்தால் தானே நாம் தர்மம் செய்ய முடியும்.

பணம் இல்லாவிட்டால் எப்படி அயலானுக்கு உதவி செய்ய முடியும்?"

"'டேய், பொடியா, நான் பணத்தை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை.

இறை ஊழியத்திற்காகப் பணத்தை பயன்படுத்த வேண்டும்.

பணத்துக்கு ஊழியம் செய்யக்கூடாது.

பணப் பையை யூதாசிடம் கொடுத்ததே இயேசு தான்.

பயன்படுத்துவதற்காகக் கொடுத்தார்.

ஆனால் இயேசுவின் போதனைக்கு மாறாக,

 அவன் அதற்கு அடிமையாகி விட்டான்.

விளைவு?

பணத்திற்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்து விட்டான்.

இப்போதும், இந்த உலகத்தையும் அதில் உள்ள பொருட்களையும் நமக்குத் தந்தவர் இயேசு தான்.

 அவற்றை நாம் இறை ஊழியத்திற்காகப் பயன்படுத்த வேண்டும்.

ஆனால் இயேசுவுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை நாம் உலகப் பொருள்களுக்குக் கொடுக்க ஆரம்பிக்கும்போது 

யூதாசாக மாறிவிடுகிறோம்.

யூதாசுக்கு வந்த நிலை நமக்கு வராமலிருக்க வேண்டுமென்றால் 

பணத்தில் மீது பற்று அற்ற எளிய மனத்தவர்களாக மாற வேண்டும். 

புரிகிறதா?"

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே."
(மத்.5:3)

என்று இயேசுவே கூறியிருக்கிறார்."

"'இயேசுவைப் போல் ஏழையாக வாழ்வோம்.

இயேசுவுடன் விண்ணரசில் வாழ்வோம்."

லூர்து செல்வம்.

,

No comments:

Post a Comment