Friday, April 7, 2023

புதிய ஏற்பாட்டின் ஆரம்பம்.

புதிய ஏற்பாட்டின் ஆரம்பம்.

"தாத்தா, உலகின் ஆன்மீக வரலாற்றை பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறோம்.

பழைய ஏற்பாட்டை ஆரம்பித்தவர் ஆதாம். அவர்தான் மனுக் குலத்தின் முதல் தந்தை.

புதிய ஏற்பாட்டை ஆரம்பித்தவர் யார்?"

"'நற்செய்தி ஆசிரியர் மத்தேயு
இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணையாவது, என்று ஆரம்பித்து, 

அபிரகாம் முதல் சூசையப்பர் வரை அட்டவணையைக் கொண்டு வந்த பின் அதே ரீதியில்,

 இன்னார் மகன் எனப் பெயர் சொல்லி,

அட்டவணையைத் தொடர முடியவில்லை.

ஏனெனில் சூசையப்பருக்கு வாரிசு இல்லை.

ஆகவே, "யாக்கோபுக்கு

 மரியாளின் கணவரான சூசை பிறந்தார். 

இவளிடம் கிறிஸ்து என்னும் இயேசு பிறந்தார்."

என்று முடிக்கிறார்.

இப்போ சொல், புதிய ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவர் யார்?"

"இவளிடம் கிறிஸ்து என்னும் இயேசு பிறந்தார் என்கிறார் மத்தேயு.

குடும்பத்தை ஆரம்பித்து வைப்பது தாயா? மகனா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வோம்?

தாய் என்றுதானே சொல்வோம்.

மனைவியின் சொற்கேட்டு, விலக்கப்பட்ட கனியைத் தின்று பாவத்தில் விழுந்தவர் முதல் ஆதாம்.

அதனால் பாவத்தில் விழுந்த
மனுக்குலத்தை அதிலிருந்து மீட்பதற்காக மனிதனாகப் பிறந்த இயேசு கிறிஸ்து புதிய ஏற்பாட்டின் கதாநாயகன்,

அவரைக் கருத்தரித்து, பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த அன்னை மரியாள் தான் புதிய ஏற்பாட்டின் முதல் பெண்மணி."

"'பழைய ஏற்பாட்டின் முதல் பெண்ணை ஏமாற்றிய சாத்தானின் தலையை நசுக்கிய பெண் அன்னை மரியாள்.

அன்னை மரியாளின் பெருமை 
அவள் சர்வ வல்லப கடவுளின் தாய் என்பதில் தான் அடங்கியிருக்கிறது.

அவளை அருள் நிறைந்த மரியாய்ப் படைத்தவர் அவள் பெற்றெடுத்த அவளுடைய மகன்தான். 

உலக வரலாற்றில் தன்னைப் படைத்தவரயே மகனாகப் பெற்றெடுத்த பெருமை அன்னை மரியாளை மட்டுமே சேரும்.

அவள் கடவுளின் தாய்.

"இதோ ஆண்டவருடைய அடிமை" என்று யாரிடம் சொன்னாரோ

அவரே அவள் வயிற்றில் மனுவுரு எடுத்து, முப்பது ஆண்டுகள் அவளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.

சீடத்துவ பணியையும், தாய்க்குரிய பணியையும் ஒரே நேரத்தில் சிறப்பாகச் செய்தாள் நம் அன்னை.

அவள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள்.

கடவுள் அவளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.

இன்றும் அவர் தாய் சொல் தட்டாத பிள்ளைதான்."

"தாத்தா, காலையில் பைபிள் வாசித்துக் கொண்டிருந்த போது ஒரு குறிப்பிட்ட வசனத்துக்குப் பொருள் புரியவில்லை.

உங்களுக்குப் புரிகிறதா என்று பாருங்களேன்."

"'வசனத்தை வாசி."

"அவள் கணவர் சூசை நீதிமானாயும், அவளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவராயும், இருந்ததால் அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார்."

"'நீதிமான் என்றால் என்ன அர்த்தம்?"

"தாத்தா, நீதி என்ற வார்த்தைக்கு உலகப் பார்வையில் என்ன அர்த்தம் கொடுக்கிறோமோ,

அதே அர்த்தம் கடவுள் பார்வையில் வராது.

நமது நீதிமன்றத்தில் உச்சத்தில் உள்ள நீதிபதியின் வேலை தண்டிப்பது அல்லது விடுதலை செய்வது.

குற்றவாளி தண்டிக்கப்படுகிறான், குற்றமாற்றவன் விடுதலை செய்யப்படுகிறான்.

கடவுள் நீதி உள்ளவர்.

அவர் அன்பே உருவானவர் மட்டுமல்ல, நீதியே உருவானவரும் கூட.

உலக நீதி மன்றத்திற்கு மன்னிக்க தெரியாது.

ஆனால் அன்பும், நீதியும் உள்ள இறைவன் நம்மை மன்னிப்பதற்காகவே மனிதனாக பிறந்தார்.

உலக நீதிபதியைப் போல் அவர் இருந்தால் மனிதர்கள் யாருமே தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.

கடவுள் குற்றவாளிகளாகிய நம்மை மன்னிக்கவே விரும்புகிராரேயொழிய, தண்டிக்க அல்ல.

கடவுளின் பார்வையில் நீதிக்கு என்ன அர்த்தமோ,

 அதே அர்த்தம் தான் சூசையப்பர் நீதிமான் என்பதற்கும்.

சூசையப்பர் நீதிமான், இரக்கமும், மன்னிக்கும் குணமும் உடையவர்."

"இப்போது நீ குறிப்பிட்ட வசனத்திற்கு பொருள் சொல்லு பார்ப்போம்."


"சூசையப்பர் இரக்கமும், மன்னிக்கும் குணமும் உடைய நீதிமானாக இருந்தபடியால்,

அன்னை மரியாளைக் காட்டிக் கொடுத்து அவளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க அவருக்கு விருப்பமில்லை.

யூத மத சட்டப்படி திருமண உறவுக்கு முன்னால் ஒரு பெண் கருத்தரித்தால் அவளைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்.

இத்தகையத் தண்டனையிலிருந்து மரியாளைக் காப்பாற்ற விரும்பினார்."

"'அதற்காக அவர் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார்?"

"அதைப் பற்றி சிந்தித்து கொண்டிருந்த போது தூங்கி விட்டார். 

ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 

"சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். 

ஏனெனில், அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். 

அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.

அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்.

 ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.

சூசையப்பர் தனது சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு,

ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்."

"'இதிலிருந்து உனக்கு என்ன தெரிகிறது?"

"சூசையப்பர் நீதிமான் மட்டுமல்ல மிகச் சிறந்த விசுவாசி என்று தெரிகிறது.

விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கப் பட்ட அபிரகாமுக்கு கடவுள் கனவில் வாக்களிக்க வில்லை.

அன்னை மரியாளுக்கு கபிரியேல் தூதர் நேரடியாகத் தோன்றி இறைச் செய்தியை அறிவித்தார்.

ஆனால் சூசையப்பருக்குக் கனவில் இறைச் செய்தி அறிவிக்கப் பட்டது.

'கனவுதானே' என்று அதைத் தள்ளி விடாமல், செய்தியை அப்படியே ஏற்றுக் கொண்டார்.

அவருடைய ஆழ்மனதில் இறைவன் மட்டில் அவருக்கு இருந்த அதிகமான அன்புதான் அதற்குக் காரணம்."

"'இந்த செய்தி மட்டுமல்ல, திருக்குடும்பத்தை அழைத்துக் கொண்டு எகிப்துக்குப் போகச் சொன்னதும்,

அங்கிருந்து திரும்பச் சொன்னதும்,

கலிலேயாவில் குடியேறச் சொன்னதும் கனவு மூலமாகத்தான்.

ஒரு சமயத்தில் கூட செய்திக்கு விளக்கம் கேட்கவில்லை.

வாய் பேசாமல் சொன்னதைச் செய்தார்.

எப்போதாவது உங்கள் தலைமை ஆசிரியர் 'இன்றைக்கு பள்ளிக்கு விடுமுறை' என்று சொல்லும் போது ஏன் என்று கேட்காமல் இருந்திருக்கிறீர்களா?"

"எவ்வளவு சின்ன விசயத்தைச் சொன்னாலும் ஏன் என்று கேட்காமல் இருந்ததில்லை.

ஆசிரியரிடம் கேட்க முடியாவிட்டாலும் எங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்வோம்.

சூசையப்பரை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. 


சூசையப்பர் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.

கடவுளாகிய இயேசு அவருக்குக்
கீழ்ப்படிந்து நடந்தார்.

திருக்குடும்பம் இன்று விண்ணகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இன்றும் இயேசு தனது பெற்றோருக்கு கீழ்ப்படிந்து தான் நடக்கிறார்.

அன்னை மரியாளிடமும், சூசையப்பரிடமும்

"எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்"

என்று மட்டும் சொல்லுவோம்.

எதற்காக என்று கூட சொல்ல வேண்டாம்.

அது அவர்களுக்குத்
 தெரியும்.

இயேசுவுக்கும் தெரியும்.

"சேசு, மரி, சூசை துணை"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment