Friday, April 14, 2023

"அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை." (மாற்.16:13)


"அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை."  
(மாற்.16:13)


இயேசு தனது பொதுவாழ்வின் போது சந்தித்த அனைத்து நோயாளிகளையும் குணமாக்கினார்.

ஒவ்வொரு முறை குணமாக்கும் போதும், "உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்பார்.

விசுவாசம் யாரிடம் இருந்தாலும் அது இறைவன் கொடுத்த நன்கொடை.

இறைவன் கொடுத்த நன்கொடையைப் பயன்படுத்தியோர் பயனடைந்தார்கள்.

இயேசுவின் சீடர்களும் அவரை இறைமகன் என்று விசுவசித்து தான் அவரைப் பின்பற்றினர்.

ஆனால் பெற்ற விசுவாசத்தில் ஆண்டவர் எதிர் பார்த்த அளவு வளர்ந்தார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஒரு முறை தூங்கிக் கொண்டிருந்த ஆண்டவரோடு படகில் பயணித்துக் கொண்டிருந்த போது, புயற்காற்று வீச

சீடர் அவரிடம் வந்து அவரை எழுப்பி, "ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்: மடிந்துபோகிறோம்" என்றனர்.

இயேசு அவர்களை நோக்கி, "குறைவான விசுவாசம் உள்ளவர்களே, ஏன் இவ்வளவு பயம் ?" என்று கூறி, எழுந்து காற்றையும் கடலையும் கடியவே, பேரமைதி உண்டாயிற்று.

ஆண்டவர் எதிர்பார்த்த அளவு அவரை அவர்கள் விசுவசிக்கவில்லை.

உண்மையாக விசுவசிப்பவர்களுக்கு கடுகளவு கூட சந்தேகம் வரக்கூடாது.

தான் பாடுகள் பட விருப்பதையும், மரிக்க விருப்பதையும், மரித்த மூன்றாம் நாள் உயிர்க்க விருப்பதையும் தான் பாடுகள் படுவதற்கு முன்பேயே ஆண்டவர் சீடர்களிடம் கூறிவிட்டார்.

ஆண்டவருடைய வார்த்தையை விசுவசித்திருந்தால் 

ஆண்டவர் அடக்கம் செய்யப்பட்ட பின் அதைப் பற்றி கவலைப் படாமல் 

அவர்களது அறையில் உட்கார்ந்து 

மூன்றாவது நாள் அவரை எதிர் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

அன்னை மரியாள் கல்லறைப் பக்கமே வரவில்லையே.

அவளுடைய விசுவாசம் முழுமையானது.

ஆனால் சீடர்கள் இயேசு உயிர்ப்பார் என்று விசுவசிக்கவில்லை.

உயிர்த்த இயேசுவைக் கண்ட மதலேன் மரியாள் 

சீடர்களிடம் போய் இதை அறிவித்தாள். 

அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தனர்.

அவள் சொன்னதை அவர்கள் நம்பவில்லை.

அவர்களுள் இருவர் நாட்டுப்புறத்திற்கு நடந்துபோகையில், அவர்களுக்கு வேற்றுருவில் தோன்றினார்.


 அவர்களும் வந்து மற்றவர்களுக்கு அறிவித்தார்கள். அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.


இறுதியாக, பதினொருவரும் உண்ணும்பொழுது அவர் தோன்றி,

 உயிர்த்தெழுந்த தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாத 

அவர்களுடைய விசுவாசமின்மையையும் பிடிவாதத்தையும் கடிந்துகொண்டார்.


இயேசுவின் பொது வாழ்வின் போது அவருடன் நாம் சென்றிருந்தால் மூன்று வகையான ஆட்களைச் சந்தித்திருப்போம்.

1.இயேசுவின் நற்செய்தியைக் கேட்கவும், அவர் கையால் நோய் நீங்கிக் குணம் பெறவும் விசுவாசத்தோடு அவரைத் தேடி வந்த சாதாரண மக்கள்.

2. அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட, எப்போதும் அவரோடு இருந்த அவருடைய சீடர்கள்.

3. அவரைக் கொல்வதற்கு வழிதேடி அவர் சென்ற இடமெல்லாம் சென்ற பரிசேயர்கள், சதுசேயர்கள், யூத மதத் தலைவர்கள்.

இவர்களில் நமது அனுதாபத்துக்கு உரியவர்கள் தங்கள் நோய்கள் குணமாகவும், இயேசுவின் நற்செய்தியைக் கேட்கவும் அவர் சென்ற இடமெல்லாம் சென்ற சாதாரண மக்கள் தான். ஏனெனில் நமது நிலையும் அதுதான்.

இயேசு உலகில் தனது பணியை முடித்து, விண்ணகம் சென்ற பின் உலகெல்லாம் சென்று நற்செய்தி அறிவிக்கும் பணியைத் தொடர்ந்து செய்ய பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தவர்கள் அவருடைய சீடர்கள்.

புத்தியே இல்லாத சாத்தானால் வழி நடத்தப் பட்டவர்கள் பரிசேயர்களும், சதுசேயர்களும், யூத மதத் தலைவர்களும்.

காரணத்தோடுதான் புத்தியே இல்லாத சாத்தானால் என்று சொன்னேன்.

மனுக்குலத்தையே பாவத்தில் விழத்தாட்டியவன் சாத்தான்.

மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக மனிதனாய்ப் பிறந்தவர் இறைமகன் இயேசு.

சாத்தானுக்குப் புத்தி இருந்திருந்தால் மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்க இயேசுவுக்கு உதவியிருப்பானா?

இயேசுவின் பாடுகளுக்கும், மரணத்திற்கும் பரிசேயர் கூட்டத்தின் மூலம் உதவியவன் சாத்தான் தானே.

மீட்க வந்தவரைக் கொன்று விட்டால் நமக்கு மீட்புக் கிடைக்காது என்று தப்புக் கணக்கு போட்டு,

தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டான் சாத்தான்.

இப்போ எதற்கு இந்தக் கதையெல்லாம்?

பைபிளை வாசிப்பதும், பைபிள் நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுவதும் வெறும் பொழுது போக்குக்காக அல்ல.

நமது ஆன்மீக பாதையில் நாம் ஒழுங்காக நடப்பதற்கு நமக்கு உதவுவதற்காகத்தான் பைபிளை வாசிக்கிறோம், வாசித்ததை தியானிக்கிறோம்.

நாம் எப்படி வாழக்கூடாது என்று தங்கள் நடத்தை மூலம் நமக்கு அறிவுரை கூறுபவர்கள் பரிசேயர் கூட்டம்.

இயேசுவைத் தலைவராக ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது,

அவரது வார்த்தைகளை முழுமையாக விசுவசிக்க வேண்டும் என்று தங்கள் நடத்தை மூலம் நமக்கு அறிவுரை கூறுபவர்கள் இயேசுவின் சீடர்கள்.

அவர்களது விசுவாசப் பற்றாக்குறை பரிசுத்த ஆவி அவர்கள் மேல் இறங்கும் வரைதான் நீடித்தது.

பரிசுத்த ஆவியின் வருகையின் போது அவர்கள் எல்லா வகையிலும் உறுதி அடைந்தார்கள்.

முழுமையான உற்சாகத்தோடு நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்கள்.

கத்தோலிக்க திருச்சபை பிறந்து வளர ஆரம்பித்தது.

அன்றிலிருந்து திருச்சபையை வழி நடத்துபவர் சர்வ வல்லபரான பரிசுத்த ஆவியானவர்தான்.

இதை நமக்கு உணர்த்துவதற்காகத்தான் குறைகள் உள்ள தனது சீடர்கள் வசம் தனது திருச்சபையை ஆண்டவர் ஒப்படைத்தார்.

இன்று நம்மை ஆளும் குருக்கள், ஆயர்கள், பாப்பரசர் ஆகியோர் நம்மைப் போன்ற மனிதர்களாக இருக்கலாம்.

ஆனால் அவர்களைக் கரம் பிடித்து வழி நடத்துபவர் பரிசுத்த ஆவியானவர்தான்.

ஆகவே நம்பிக்கையோடு அவர்கள் காட்டும் வழியே நடக்கலாம்.

விசுவாசிகளான நமது நிலை

 இயேசுவின் நற்செய்தியைக் கேட்கவும், 

தங்கள் நோய்களிலிருந்து குணம் பெறவும்  

இயேசு சென்ற இடத்திற்குச் சென்ற சாதாரண மக்களின் நிலைதான்.

நமது முதல் கடமை இயேசுவின் நற்செய்தியைக் கேட்க வேண்டும்.

அடுத்து பாவ நோயிலிருந்து ஆன்மா குணம் பெற பாவ மன்னிப்புப் பெற வேண்டும்.

குணமடைந்த ஆன்மா ஆன்மீகத்தில் வளர வேண்டும்.

இவற்றிற்கு நம்மிடம் இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதி விசுவாசம்.

"உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று," என்று ஆண்டவர் சொல்லுமளவுக்கு நம்மிடம் விசுவாசம் இருக்க வேண்டும்.

விசுவாசம் விசுவாசப்
பிரமாணத்தை வாயினால் சொல்வதில் அடங்கவில்லை,

அதை வாழ்க்கையில் வாழ்வதில் அடங்கியிருக்கிறது. 

விசுவாசத்தை வாழ்பவன் தான் விசுவாசி.

விசுவாசியின் வாழ்வில் நல்லது மட்டுமே நடக்கும்.

அதாவது விசுவாசியின் வாழ்வில் என்ன நடந்தாலும் அது நல்லதாகவே இருக்கும்.

விசுவாசியின் வாழ்வில் நடப்பதை ஆன்மீகக் கண் கொண்டு பார்க்க வேண்டும்.

நமது ஆண்டவராகிய இயேசு பாடுகளின்போது அடிக்கப்பட்டார்,
உதைக்கப்பட்டார், துப்பப்பட்டார், ஆணிகளால் அறையப்பட்டார், இறுதியில் கொல்லப்பட்டார்.

இவற்றையெல்லாம் இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டார்.

இயேசுவின் பாடுகளுக்குக் காரணமானவர்களுக்கு அது பாவம்.

ஆனால் தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்க இயேசுவுக்குத் தெரியும்.

யூத மதத் தலைவர்கள் அவரைப் படுத்திய பாட்டிலிருந்து அவர் நமக்கு மீட்பை வரவழைத்தார். 


ஒரு விசுவாசியின் வாழ்வில் எது நடந்தாலும் அது இயேசுவின் சித்தப்படி தான் நடக்கும்.

ஆகவே விசுவாசிகள் வாழ்வில் என்ன நடந்தாலும் அது நல்ல நிகழ்வே.

ஆகவே தான் புனிதர்கள் தங்கள் வாழ்வின் போது ஏற்பட்ட எல்லா கஷ்டங்களையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்கள்.

விசுவாசி என்ற முறையில் நாமும் அப்படியே செய்ய வேண்டும்.

ஆயர் ஒருவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது,

"இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்களுக்கு மரணம் வரப்போகிறது.

இப்போது என்ன செய்வீர்கள்?"

அவர் பதில் சொன்னார்,

"மரணம் வரும் வரை எனது தோட்ட வேலை தொடரும்."

அவர் தான் உண்மையான விசுவாசி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment