Sunday, February 9, 2020

."சார், ஒரு கதை.(தொடர்ச்சி)

."சார், ஒரு கதை.
(தொடர்ச்சி)
******************************
இயேசு நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருந்தபோது,

 அதை கேட்க வந்தவர்களுள் பாமர மக்களும் இருந்தார்கள், படித்தவர்களும் இருந்தார்கள்.

படித்தவர்களாகிய பரிசேயரும் சதிசேயரும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டார்கள்.

 ஆனால் அவற்றைப் புரிந்து கொண்டு அவற்றின்படி வாழ்வதற்காக அல்ல,

 அவற்றில் குற்றம் கண்டுபிடித்து அதைத் காரணங்காட்டி அவரைக் கொலை செய்வதற்காக! 

பாமர மக்கள் ஆழமாக  கருத்துக்களைப் புரிந்து கொள்ளக்கூடிய சக்தி இல்லாதவர்கள்.

ஆகவே அவர்களுக்கு விளங்கக் கூடிய அளவிற்கு நற்செய்தியை கதைகள் மூலமே இயேசு கொடுத்தார்.

ஒவ்வொரு கதையிலும் பாமர மக்கள்  புரிந்து கொள்ள கூறிய அளவிற்கும்,

ஞானம் உள்ளவர்கள் ஆழமாகச் சென்று புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கும் கருத்துக்கள் இருந்தன.

(Although the parables of Jesus seem simple, the messages they convey are deep.)

இயேசு பாமர மக்களுக்கு ஏற்ற படி கதைகளை கூறினாலும், 

அவற்றின் ஆழமான கருத்துக்களை தன்னுடைய சீடர்களுக்கு 

தன்னுடன் தனியாக இருந்தபோது  விளக்கினார். 

இது சீடர்கள் தனியாக நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கியபோது 

 சாதாரண மக்களுக்கு விளக்கமாக போதிக்க அவர்களுக்கு உதவியாக இருந்தது.

இப்போதுகூட அதே நிலைதான் தொடர்கிறது.

 பாமரர்களாகிய நாம் தேவ சாஸ்திரமோ, தத்துவ சாஸ்திரமோ படித்துவிட்டு நற்செய்தியை வாசிக்கவில்லை. 
 
ஆகவே நற்செய்தியை ஆழமாகப் புரிந்துகொள்ள நம்மால் முடியாது. 

சீடர்களின் இடத்தில் இருக்கின்ற நமது குருக்கள்,

இயேசு சீடர்களுக்கு விளக்கியது போல,

 நமக்கு விளக்குகிறார்கள்.


சீடர்கள்  இயேசுவிடம் பயிற்சி பெற்றது போல நமது குருக்கள் குருமடத்தில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

நாம் நற்செய்தி வாசிக்கும்போது  விளங்காத வசனங்களுக்கு உரிய விளக்கத்தை  

நம்முடைய குருக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.  

நமது இஷ்டம் போல் ஆளுக்கொரு விளக்கத்தை கொடுத்துக் கொண்டிருக்க கூடாது.



இயேசு  நாசரேத்தூரை விட்டு, 
கப்பர்நகூமுக்கு வந்து குடியிருந்த பின்தான் நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார்.(மத். 4:13)



நற்செய்தி அறிவிப்பை

"மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" (மத். 4:17)

என்ற வார்த்தைகளுடன் தான்  தொடங்கினார்.

'நெருங்கிவிட்டது', என்ற சொற்றொடரில் ஒரு ஆழமான கருத்து பொதிந்திருக்கிறது. 

ஆண்டவர், 'விண்ணரசு நெருங்கிவிட்டது' என்கிறார்.

விண்ணரசின்  அரசர்  அவர்தான்.

விண்ணிலிருந்து மண்ணில் இறங்கி மக்களை தேடி வந்திருப்பவர் விண் அரசர்.

விண்ணரசு ஒரு ஆன்மீக அரசு.

அதற்கு இடம் தேவை இல்லை.

The Kingdom of Heaven does not need a material place to occupy.

 அது ஆன்மாவிற்குள் இருக்கும் அரசு. 

 இயேசுவின் ஆன்மாவிற்குள் இருக்கும் அரசு

 நாம் அவரை நமது ஆன்மாவிற்குள் ஏற்றுக்கொள்ளும்போது

  நமக்குள் வந்துவிடும்.

விண்ணரசர் இருக்கும் இடம் தான் விண்ணரசு.

(இடம் என்ற வார்த்தையை place என்ற பொருளில் குறிப்பிடவில்லை. 'நம்மிடம்' என்ற சொல்லில் இருக்கும் இடம் என்ற பொருளில் குறிப்பிடுகிறேன். அதாவது நம்மோடு. இயேசு யாரிடம் இருக்கிறாரோ அவருக்குள் விண்ணரசு இருக்கிறது.)



" விண்ணரசராகிய நான் உங்கள் ஆன்மாவில் எனது அரசை நிறுவ நெருங்கி வந்து விட்டேன்.

 நீங்கள் மனம் திரும்பி, பாவங்களுக்காக வருத்தப்பட்டு, பாவமன்னிப்புப் பெற்றுவிட்டால் 

உங்களது ஆன்மாவில் எனது அரசை உடனே நிறுவுவேன். ''

என்று இயேசு கூறுகிறார்.

இவ்வுலக அரசுக்கும்  விண்ணரசுக்கும் இடையில் பாரதூர வித்தியாசம் இருக்கிறது,

இவ்வுலக அரசின் எல்கைக்குள் நாம் இருந்தாலே நாம் இவ்வுலக அரசைச் சேர்ந்தவர்கள்தான்.

ஆனால் விண்ணரசு நமக்குள் இருந்தால் தான் நாம் விண்ணரசைச் சார்ந்தவர்கள்.


இறையரசு, விண்ணரசு,  பரலோக சாம்ராஜ்ஜியம் இவையெல்லாம் ஒரே பொருளை குறிக்கும் பல வார்த்தைகள்.

நாம் இவ்வுலகத்தில் வாழ்ந்தாலும் இவ்வுலகிற்காக வாழவில்லை.

இவ்வுலகில் வாழும் நாம் இவ்வுலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

நாம் விண்ணுலகைச் சார்ந்தவர்கள்.

விண்ணுலகிற்காக வாழ்பவர்கள்.

விண்ணரசு ஆன்மீக அரசு.

இயேசு தான் அதன் அரசர்.

நம்மை பாவத்திலிருந்து  மீட்டு, விண்ணரசுக்குத் தகுதி உள்ளவர்களாக நம்மை மாற்றவே இயேசு உலகிற்கு வந்தார். அதற்காகவே நற்செய்தியை அறிவித்தார்.

'இயேசு சொன்னார்,

"விண்ணரசு, தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்த அரசனுக்கு ஒப்பாகும். "

இயேசு அவருடைய அரசை தன் மகனின் திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்த அரசனோடு ஒப்பிடுகிறார்.

திருமண வீட்டிற்கு அழைக்கப் பட்டோர் யாரும் வரவில்லை.
ஆளுக்கு ஒரு சாக்குப் போக்கு சொல்லி நின்று விட்டார்கள்.

எனவே விருந்துக்கு அழைத்தவர் தன் ஊழியரிடம் 

"வீதிகளுக்குச் சென்று நீங்கள் காணும் எல்லாரையும் மணவிருந்துக்கு அழையுங்கள், ''

என்று கூறினார். 

ஊழியரும் வீதிகளுக்குச் சென்று 

தாங்கள் கண்ட நல்லவர் கெட்டவர் அனைவரையும் கூட்டிச் சேர்த்தனர். 

மன்றம் நிரம்ப அவர்கள் பந்தி அமர்ந்தனர்.

ஆக அழைக்கப்பட்டோர் விருந்தைச் சுவைக்கவில்லை.

வீதிகளில் இருந்து கூட்டி வரப்பட்டோர் விருந்தைச் சுவைத்தார்கள்.

 யூதர்கள்  'மெசியா பிறப்பார், நம்மை வெளிநாட்டவரின் அடிமைத் தனத்திலிருந்து மீட்பார், நமக்கென தனி அரசை நிறுவுவார்' என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் இயேசு வந்தது அதற்காக  அல்ல.

இயேசு யூதர்களின் அரசு எங்கு குறிப்பிடாமல் விண்ணக அரசு
 என்று குறிப்பிட்டார்.

இயேசுவின் இறையரசில் அழைக்கப்பட்டவர்களாகிய இஸ்ராயேல் மக்கள் நுழையாட்டாலும்

 மற்றவர்கள்,
அதாவது இஸ்ராயேல் அல்லாதவர்கள் நுழைவார்கள்.


அழைக்கப்பட்டவர்கள் விருந்துக்கு வரவில்லை என்று கதையில், குறிப்பிடப்பட்டிருப்பது 

இஸ்ராயேல் மக்கள் யாருமே நுழையமாட்டார்கள் என்ற பொருளில் கூறப்படவில்லை.

இயேசுவின் அம்மாவே ஒரு யூதப் பெண்மணிதானே.

அச்செய்தியை கேட்டுக் கொண்டிருப்போர் சாக்குப்போக்கு சொல்லிவிடக்கூடாது என்று  எச்சரிப்பதற்காகவே அவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமல்ல,

மெசியா பிறந்திருப்பது இஸ்ராயேல் மக்களுக்காக மட்டுமல்ல,

உலகில் வாழும் அனைவருக்காகவும்தான் என்ற உண்மையை வலியுறுத்தவே இந்தக் கதை கூறப்பட்டது. 

இயேசு மனிதன் ஆனது மனுக்குலம் அனைத்துக்காகவும்தான்.

கிறிஸ்தவர்கள் மட்டும்தான் மீட்கப்படுவார்கள், மற்றவர்கள் அனைவரும் நரகத்திற்குப் போவார்கள் 

என்ற தவறான கருத்தை நாம் கொண்டிருக்கக்கூடாது என்பதைப் நமக்குப் புரியவைக்கவே இயேசு இந்த உவமையைச் சொன்னார்.

இயேசு பாடுபட்டு, இரத்தம் சிந்தி, சிலுவையில் தன்னையே பலியாக்கியது மனுக்குலம் முழுவதுக்காகவும்தான்.

கிறிஸ்தவர்களாக இருந்தாலும், மற்றவர்களாக இருந்தாலும் மீட்கப்படப்போவது 

இயேசுவின் பாடுகளின்  பலன்களினால் தான்.

நாம் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம். மற்ற தேவத்திரவிய அனுமானங்களைப் பெறுகிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக நம்மிடம் விசுவாசம் இருக்கிறது.

நாம் மீட்கப்படுவோம்.

மற்றவர்கள் எப்படி?

நமது விசுவாசம் நமக்கு இறைவன் இலவசமாகக் கொடுத்த பரிசு.

நாம் மீட்பை எதிர்பார்ப்பது நமது சொந்த தகுதியினால் (merits) அல்ல.

இறைவன் தான் நம்மை  மீட்பிற்குத் தகுதி உள்ளவர்களாக மாற்ற வேண்டும்.

நம்மை மட்டுமல்ல இறைவனால்  படைக்கப்பட்ட அனைவரையும் மீட்பிற்குத் தகுதி உள்ளவர்களாக மாற்றுவதே இறைவனின் திட்டம்.

ஆகவே இறைவன் அருள் அவரால் படைக்கப்பட்ட அனைவரிடமும் .செயல்படுகிறது.

உலகில் இயேசுவை அறிந்த நம்மைப்போலவே இயேசுவை அறியாதவர்களும் இருக்கிறார்கள்.

அவர்களும் மீட்பு பெறவேண்டும்.

இயேசுவின் மீட்புத் திட்டம் மொத்தமாக மட்டும் அல்ல,

 ஒவ்வொரு ஆன்மாவிலும் செயல்படுகிறது. 

திருச்சபையைச் சேர்ந்த  அனைவரும் திருச்சபையில் சேர்ந்த ஒரே காரணத்திற்காக மொத்தமாக  மீட்கப்படுவது இல்லை.

ஒவ்வொருவரும் மீட்பைப் பெறுவதற்காக  இயேசுவோடு அவரது மீட்புப் பணியில் ஒத்துழைக்க வேண்டும்.

இயேசு  நிறுவிய திருச்சபையின் சொற்படி நடந்தால் மீட்பு உறுதி.

திருச்சபையை சேர முடியாதவர்களுக்கும் இறைவன் மனசாட்சியையும் பத்துக் கட்டளைகளையும் கொடுத்திருக்கிறார்.

அவர்கள் தங்களைப் படைத்த இறைவன்மீது விசுவாசம் கொண்டு,

 அவரவருக்கு அளிக்கப் 
பட்டுள்ள மனசாட்சியின் தூண்டுதல்படி

 பத்துக் கட்டளைகளையும் ஒழுங்காக அனுசரித்து வந்தால் 

அவர்களுக்கும் மீட்பு உண்டு.

பாவம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

அதனால்தான் உவமையில்  திருமண உடையின்றி (மத்.22:12) வந்தவனுக்கு விருந்தில் இடம் கொடுக்கப்படவில்லை.

திருமண உடை என்றால் பாவம் இல்லாத தன்மை.

அதாவது பரிசுத்தத் தனம். 

பரிசுத்தமானவர்கள் தான் இறைவன் தரும் நித்திய விருந்தில் கலந்து கொள்ள முடியும்.

மீட்பு இறைவனுக்கும் அவரால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆன்மாவிற்கும் இடையிலுள்ள  உறவை அடிப்படையாகக் கொண்டது.

இந்த உறவில் தன்மை எத்தகையது என்பது இறைவனுக்கும் அந்த ஆன்மாவிற்கும் மட்டும்தான் தெரியும்.

யார் யார்  மீட்கப்படுவார்கள் என்று தீர்ப்புச் சொல்ல நமக்கு உரிமை இல்லை.

எல்லோரும் மீட்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுவோம்.

அதற்காகச் செபிப்போம்.

நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிப்போம்.

திருச்சபைக்கு வெளியேயும் மீட்பு உள்ளது என்றால் நாம் ஏன் நற்செய்தியை தெரியாதவர்களுக்கு அறிவிக்க வேண்டும்?

உலகத்தவர் அனைவருக்கும் நாம் நற்செய்தியை அறிவிக்க வேண்டும், ஏனென்றால்,

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment