பைபிள் வாசிக்காதவர்கள் மோட்சத்திற்குச் செல்ல முடியுமா?
********    **********     *******
"அண்ணாச்சி! அண்ணாச்சி!
கொஞ்சம் நில்லுங்க."
"தம்பி! வா. சொல்லு."
"அண்ணாச்சி! எனக்கு ஆனா, ஆவன்னா தெரியாது."
"அதாவது மற்ற 245 எழுத்துக்களும்  தெரியும்!"
" இல்ல, இல்ல, எனக்கு எழுத வாசிக்கவே தெரியாது."
"நான் எழுத வாசிக்க சொல்லித் தரணுமா?"
"அதெல்லாம் வேண்டாம், நான் ஒரு மக்கு. எனக்கு இப்போ அது பிரச்சினை இல்லை.
சாமியார் தினமும் பைபிள் வாசிக்கச் சொல்லுகிறார். 
எங்க வீட்டில பைபிள் இருக்கு.
 ஆனா எனக்கு வாசிக்கத் தெரியாது. 
அப்படின்னா எனக்கு இரட்சணியம் கிடைக்காதா?"
"உனக்கு அன்பு செய்யத்  தெரியுமா?"
"சின்னப் பிள்ளையிலிருந்து அது ஒண்ணத்தான் செஞ்சுக்கிட்டு இருக்கேன்."
"இரட்சண்யம் அடைய தேவையானது அது ஒன்றுதான்.
 முதலாவது உன்னைப். படைத்த கடவுளை அன்பு செய்.
 அடுத்து கடவுளால் படைக்கப்பட்ட உன்னுடைய அயலானையும் அன்பு செய்.
கடவுள் உன்னைப்  படைத்ததே அன்பு செய்யத்தான்."
"அப்போ பைபிள்?
"நடக்க வேண்டும்.
 ஆனால் கால் இல்லாதவன்?
 அதேபோல்தான் 
பைபிள் வாசிக்க வேண்டும். வாசிக்கத் தெரியாதவன்? 
கடவுள் உன்னிடம் முடியாததை கேட்கமாட்டார்."
"அன்பு செய்தால் மட்டும் போதுமா?"
"போதும்.
இருட்டாக இருக்கும் போது சுவிட்ச்சைப் போட்டால் போதும்.
 வெளிச்சம் தானாகவே வந்துவிடும்.  
அதோடு வெளிச்சத்தில் செய்ய வேண்டிய வேலைகளும் வந்துவிடும்."
"அது போல, அன்பு செய்தால்?"
"கடவுளை அன்பு செய்தால்
 பாவம் செய்ய மாட்டோம்.
அவருக்காகவே வாழ்வோம்.
அவரது கட்டளைகளுக்குக்  கீழ்ப்படிவோம்.
அவரது சித்தத்தை நிறைவேற்றுவோம்.
நமது வாழ்வை ஜெப வாழ்வாக மாற்றுவோம்.
எப்பொழுதும் அவரது பிரசன்னத்தில் வாழ்வோம்.
அவருக்காக எத்தகைய துன்பத்தையும் ஏற்றுக் கொள்வோம். 
அவருக்காக  உயிரையும் கொடுப்போம். 
அவருக்காகவே வாழ்ந்து
 அவருக்காகவே மரித்து
 அவரோடு நித்திய காலம் இணைந்து வாழ்வோம்."
"பைபிள் வாசிக்காமலேயா? "
"பைபிள் வாசித்தாலும் இதைத் தான் செய்வோம்.
பைபிள் வாசித்துவிட்டு 
அன்பு செய்யாதிருந்தால்
இதைச் செய்ய மாட்டோம்."
"அப்படியானால் பைபிள் வாசிப்பதை விட அன்பு செய்வதுதான் முக்கியமா?"
"எல்லா செயல்களையும் விட அன்பு செய்வதுதான் முக்கியம்.
கடவுள் பைபிள் எழுதப்படுவதற்கு முன்பிருந்தே
 நம்மை அன்பு செய்தார்.
 அவரது அன்பிற்கு ஆரம்பமே இல்லை.
 முடிவும் இல்லை.
நமது முதல் பெற்றோர் பாவம் செய்வதற்கு முன் கடவுளை அன்பு செய்தார்கள். அப்போது பைபிள் இல்லை.
ஆபிரகாம் கடவுளை விசுவசித்தார். அன்பு செய்தார். .அப்போதும் பைபிள் இல்லை.
இயேசுவின் அப்போஸ்தலர்கள் 
இயேசுவை நேசித்தார்கள்.
 அப்பொழுது புதிய ஏற்பாடு எழுதப்பட்டிருக்கவில்லை.
நற்செய்தியாளர்கள் நற்செய்தி நூல்களை எழுதியதால் இயேசுவை அன்பு செய்யவில்லை,
 அன்பு செய்ததால்தான் எழுதினார்கள்.
 ஆரம்பம்  அன்புதான்.
அன்பு செய்தால் அன்பை ஒட்டிய மற்ற செயல்கள் தானே வந்துவிடும்.
அன்பு செய்யாவிட்டால் பைபிள் வாசித்தும் பயனில்லை."
"பிறரை அன்பு செய்தால்?"
"தன்னலம் தவிர்த்து பிறர்நலம் நாடுவோம்.
பிறர் நமக்குத் தீமை செய்தாலும் நாம் அவர்களுக்கு நன்மையையே செய்வோம்.
  குற்றம் செய்தோரை மன்னிப்போம்.
யார் மீதும் அழுக்காறு கொள்ளமாட்டோம்.
எல்லோரிடமும் பரிவோடும் இரக்கத்தோடும் நடந்துகொள்வோம்.
நம்மைப்பற்றி பெருமையாகப் பேச மாட்டோம்.
 மற்றவர்களைப் பற்றி இழிவாகப் பேச மாட்டோம்.
எப்பொழுதும் பொறுமையாக இருப்போம்.
யாருடனும் கோபப்பட மாட்டோம்.
 யாரும் கோபப்பட்டாலும்  பொறுத்துக் கொள்வோம்.
யார் மீதும் வர்மம் வைக்க மாட்டோம்.
யாரையும் பழி வாங்க மாட்டோம்.
மற்றவர் துன்பத்தில் இன்பம் காண மாட்டோம்.
 துன்ப படுவோர் துயர் போக்குவோம்.
 மற்றவர்கள் மகிழ்ச்சியாய் இருக்க ஆவன செய்வோம்.
அழுவாரோடு அழுவோம். சிரிப்பாரோடு சிரிப்போம்.
 அநீதியைக் கண்டு மகிழ மாட்டோம். .
அனைத்தையும் தாங்கிக்கொள்வோம். 
பிறர் மீது நல்லெண்ணம் கொள்வோம்.     
அனைத்தையும் பொறுத்துக்கொள்வோம்.
நமது பெற்றோருக்குக் கீழ்ப்படிவோம்..
பொய் சொல்ல மாட்டோம்.
பிறரது பொருளுக்கோ,  மனைவிக்கோ ஆசை பட மாட்டோம்.
பசியாய் இருப்போருக்கு,  உண்ணக் கொடுப்போம் 
. தாகமாய் இருப்போருக்கு,  குடிக்கக் கொடுப்போம்
. அன்னியர்களை    வரவேற்போம்.   
ஆடையின்றி இருப்போருக்கு, உடை கொடுப்போம்.
 நோயுற்றோரை நலம் விசாரிப்போம்.
சிறையில் இருப்போருக்கு ஆதரவு கூறுவோம். " 
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் 
பைபிள் வாசிக்காமலேயே
 மோட்சத்திற்குச். சென்றுவிடலாம் போலிருக்கிறதே"
"ஹலோ! மோட்சத்திற்குச் செல்லும்போது கடவுள் நமது கையில் பைபிள் இருக்கிறதா என்று பார்க்க மாட்டார்.
 இருதயத்தில் அன்பு இருக்கிறதா என்று மட்டும்தான் பார்ப்பார்.
பைபிள் அன்பை மட்டும்தான்  போதிக்கிறது.
 பைபிள் இறைவார்த்தை.
 இறைவார்த்தை நமக்குத் தருவதும் அன்பைத்தான்.
  அன்பைக் கடைபிடித்தால்தான்  மோட்சம் செல்ல முடியும்."
"பைபிள் இல்லாத நான்
 இவ்வளவும் செய்தால்
 மோட்சம் செல்ல முடியும் என்றால் 
பைபிள் வைத்திருப்பவர்களும்
 அதை வாசிக்காமலேயே
 இதையெல்லாம் செய்தால்
 மோட்சத்திற்குப்  போக முடியும் அல்லவா?
பின் ஏன் பைபிள் வாசிக்க வேண்டுமென்று சாமியார் சொல்கிறார்?"
"கடவுள் நமக்கு அநேக வரங்களைத் தருகிறார். 
அவர் தரும் வரங்களை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
அவர் தந்த வரங்களைச் சரியாகப் பயன் படுத்தாவிட்டால்
 இறுதிநாளில் கணக்குக்  கொடுக்க வேண்டி இருக்கும்.
உனக்கு வாசிக்கும் வரத்தை கடவுள் தரவில்லை.
 ஆகவே நீ வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை.
 ஆனாலும் அன்பு செய்ய இருதயத்தை தந்திருக்கிறார்.
 ஆகவே நீ அன்பு செய்ய வேண்டும்.
வாசிக்கும் வரத்தையும், பைபிளையும் பெற்றிருப்போர்
 கட்டாயம் பைபிளை வாசிக்க வேண்டும்.
 வாசித்தால் மட்டும் போதாது,
 இறைவார்த்தையை வாழ்வாக்க வேண்டும்..
பைபிளை வாசித்துவிட்டு
 அதன்படி நடக்காவிட்டால்
அதற்கு இறுதிநாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்."
"கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்."
"ஒரு ஒப்புமை சொல்லுகிறேன்.
 உன்னுடைய அப்பா உனக்கு நூறு ரூபாய் தருகிறார்.
 உனது தம்பிக்கு ஆயிரம் ரூபாய் தருகிறார்.
தந்த பணத்தை எல்லாம் செலவழிக்க வேண்டும் என்பது நிபந்தனை.
 இப்போ உன் தம்பி எவ்வளவு பணத்திற்குக் கணக்கு கொடுக்க வேண்டும்?"
"ஆயிரம் ரூபாய்க்கு."
" நீ எவ்வளவு பணத்திற்கு கணக்கு கொடுக்க வேண்டும்?"
 "100 ரூபாய்க்கு  கணக்குக் கொடுத்தால் போதுமானது." 
"இப்போது விளங்குகிறதா?"
"நன்றாகவே விளங்குகிறது."
"விளக்கத்துக்கு நன்றி. வரட்டுமா?"
"வா. இறைவனை அன்பு செய்.
 அயலானையும் அன்பு செய்.
 மற்றவை தானே வந்துவிடும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment