" பலிகளைக் காட்டிலும் கீழ்ப்படிதலே மேலானது."
(1 சாமு . 15:22)
********************************
நாம் இவ்வுலகில் படைக்கப்பட்டது
 கீழ்ப்படியவா? 
அன்பு செய்யவா? 
அன்பு செய்ய வேண்டும் என்பதே இறைவன் நமக்கு கொடுத்த கட்டளை தான்.
இக்கட்டளைக்கு கீழ்ப்படிவோர் அன்பு செய்கிறார்கள்.
 கீழ்ப்படியாதோர் அன்பு செய்வதில்லை.
அன்பும் கீழ்ப்படிதலும் பின்னி பிணைந்தவை.
அன்பு செய்பவன் அன்பின் காரணமாக அன்பரின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறான்.
கடவுள் யாருக்கும் கீழ்படிய வேண்டிய அவசியம் இல்லை.
ஏனெனில் அவர் கடவுள், கட்டளைகளைக் கொடுப்பவர் அவரே.
ஆனாலும் அவரே மனிதனாக பிறந்தபோது  மரியாளுக்கும் சூசையப்பருக்கும் முற்றிலும் கீழ்ப்படிந்து நடந்தார்.
ஒருவரிடம் ஒரு பொருளை
 "தாருங்கள்" 
என்று கேட்கும்போது
 'தாருங்கள்' 
என்பது ஒரு மிருதுவான கட்டளை தானே!
நண்பரிடம்,
" தயவுசெய்து என்னோடு வாருங்கள்" 
என்று கெஞ்சிக் கேட்பதும்
 ஒருவகையில் மிக மிக மிருதுவான கட்டளை தானே!
 அதாவது அன்பு பொங்கும் கட்டளை!
"கேளுங்கள், கொடுக்கப்படும்."
 என்று நமது ஆண்டவர் கூறினார்.
நாம் அருள் வரங்களைத்  தரும்படி அவரைக் கெஞ்சிக் கேட்டால் அவர் மறுக்காமல் தருகிறாரே!
 சர்வ வல்லவர் நமது அன்புக்குக் கட்டுப்படுகிறாரே!
என்னே கீழ்ப்படிதலின் மகிமை! 
"தம்மைத் தாழ்த்திச் 
சாவை ஏற்கும் அளவுக்கு,
 அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்
 கீழ்ப்படிபவரானார்."
(பிலி. 2:8)
என்று  புனித சின்னப்பர் இயேசுவைப் பற்றி கூறுகிறார்.
பலிகளைக் காட்டிலும் கீழ்ப்படிதலே மேலானது.
ஏனெனில் பலியிடும்போது மற்ற பொருட்களைப் பலியிடுகிறோம,
ஆனால் கீழ்ப்படியும்போது நம்மையே பலியிடுகிறோம்.
"கீழ்படியாமை சிலை வழிபாட்டுக்குச் சமம்."
(1 சாமு . 15:23)
என்று பைபிள் கூறுகிறது.
இறைவனது கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்கள் 
இறைவன் இல்லாத வேறு ஏதோ ஒன்றுக்கு
 கட்டுப்படுகிறார்கள் என்றுதானே அர்த்தம். 
இறைவன் நம்மை படைத்ததே
 அவரது கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்கவும், 
அவரது சித்தத்தை நிறைவேற்றவும்தானே! 
அவரையும், நமது  அயலானையும் அன்பு செய்ய வேண்டும் என்பது அவரது கட்டளை.
இறைப் பணியும், பிறரன்புப்பணியும் செய்து  வாழ்ந்து 
அவரோடு நித்திய வாழ்வில் பங்கேற்க வேண்டும் என்பது அவரது சித்தம். 
துறவிகள் கொடுக்கவேண்டிய மூன்று வார்த்தைப்பாடுகள்களில் கீழ்ப்படிதலும் ஒன்று. 
ஏன்? எதற்கு? என்று கேள்விகள் கேட்காமல்
 தங்களது சபைத் தலைவருக்கு கீழ்ப்படிய வேண்டியது துறவிகளின் கடமை. 
ஒரு முறை ஒரு துறவி விறகுக் கட்டை ஒன்றை எடுத்து தோட்டத்திற்குச் சென்று,
 அதை நட்டு, பண்ணை பிடித்து, தினமும் தண்ணீர் ஊற்றி வந்திருக்கிறார்.
 அதை மற்றொரு துறவி நெடுநாள் பார்த்துவிட்டு 
ஒரு நாள்,  "சகோதரரே, விறகுக்குத் தண்ணீர் ஊற்றி வருகிறேரே,  
அது தளிர்க்காது என்று உங்களுக்கு தெரியாதா?"  
''தெரியும்.''
"தெரிந்த பின்னும் ஏன் வீணாகத் தண்ணீர் ஊற்றுகிறீர்?"
"வீணாக ஊற்றவில்லை. Superior ருடைய கட்டளைக்குப் பணிந்து ஊற்றுகிறேன்.
இதற்குரிய பரிசு விண்ணகத்தில் கிடைக்கும்."
"பரிசுக்காகவா தண்ணீர் ஊற்றுகிறீர்"
"இறைவன் தருவதைப் பெற மறுத்தால் அதுவே கீழ்ப்படியாமை ஆகிவிடும்."
"இங்கு என்ன பரிசு கிடைக்கும்?''
''இறைவனுக்குக் கீழ்ப்படிய கிடைத்த சந்தர்ப்பமே  மிகப் பெரிய பரிசு." 
"விண்ணகத்தில்?" 
"நித்திய பேரின்பம்."
கீழ்ப்படிதல் நமது ஆன்மீக வாழ்வில்  பெரிய பாதுகாப்பு.
இறைவனால் நமக்கு தரப்பட்ட ஆன்மீக வழிகாட்டிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது  
 இறைவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கிறோம். 
ஆன்மீக வாழ்வில்  என்ன பிரச்சனைகள் வந்தாலும் 
நமது ஆன்மீக குருவைக் கலந்து 
அவர் சொன்னபடி நடக்கும்போது 
நாம் இறைவனுக்கே கீழ்படிந்து நடக்கிறோம்.
ஆன்மீக குரு காட்டும் வழி சந்தேகத்துக்கு இடமில்லாமல்  பாதுகாப்பான  வழி.
If we blindly obey our spiritual Father, we are completely free from all risks of misconduct.
கண்ணை மூடிக்கொண்டு ஆன்மீக குரு சொல்லும் வழி நடந்தால் 
எல்லாவிதமான ஆன்மீக தவறுகளிலிருந்தும் நாம் பாதுகாப்பாக இருப்போம். 
புகைவண்டியில் எஞ்சின் அருகே ஓட்டுநர் நிற்பார்.
கடைசிப் பெட்டியில் guard நிற்பார்.
Guard பச்சைக் கொடி காட்டினால் ஓட்டுநர் எஞ்சினை ஓட்டுவார்.
Guard சிவப்புக் கொடி காட்டினால் ஓட்டுநர் எஞ்சினை நிறுத்துவார்.
ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்.
நமது ஆன்மீக பயணத்தில் நமது ஆன்ம குரு ஒரு guard மாதிரி.
Guard சொன்ன சொல்லைத்  தட்டாமல் நமது ஆன்மீக எஞ்சினை ஓட்டினால் போதும்,
 நாம் பத்திரமாக விண் வீட்டிற்கு சென்று சேர்வோம்.
பெற்றோர் இறைவன் காட்டிய வழியில் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
பிள்ளைகள் இறைவன் கட்டளையை மீறாமல் தங்களது பெற்றோருக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும்.
 ஆனால் பெற்றோரது கட்டளைகள் இறைவனது கட்டளைகளுக்கு மாறாக இருக்குமானால் 
நாம் கீழ்ப்படிய வேண்டியது இறைவனது கட்டளைகளுக்கு மட்டும்தான்.
நமது கீழ்ப்படிதலுக்கு முன்மாதிரியாக விளங்குவது நமது அன்னை மரியாள்தான்.
" இதோ ஆண்டவருடைய அடிமை,
 உமது  வார்த்தையின் படியே எனக்கு ஆகக்கடவது, " 
என்று தன்னை இறைவனுக்கு முற்றிலுமாக அர்ப்பணித்த கீழ்ப்படிதல்தான் நாம் பின்பற்ற வேண்டிய கீழ்ப்படிதல்.    
நம்மைப் படைத்து, பாதுகாத்து, பராமரித்து வரு நமது அன்பு தந்தை இறைவனுக்கு 
நம்மை முற்றிலுமாக நிபந்தனையின்றி அர்ப்பணித்து விட்டு 
அவரது கட்டளைகளுக்கும்
அவர் தரும் உள் உணர்வுகளுக்கும் 
 கீழ்ப்படிந்து நடப்போம்.
மண்ணில் கீழ்ப்பணிந்தால் விண்ணில் உயர்த்தப்படுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment