Tuesday, February 28, 2023

அன்னை மரியாள் முக்காலமும் கன்னி.

அன்னை மரியாள் முக்காலமும் கன்னி.

"மிஸ்டர், கொஞ்சம் நில்லுங்க.''

"'..........."

"இன்றைக்கு உங்கள் கோவிலில் என்ன விசேசம்?"

"'இன்று தவக்கால வெள்ளிக் கிழமை. மாலையில் கோவிலில் செபமாலையும், சிலுவைப் பாதையும் தொடர்நது திருப்பலியும் நடைபெறும்"

"சிலுவைப் பாதையும், திருப்பலியும் - சரி.

தவக்காலத்துக்கும் செபமாலைக்கும் என்ன சம்பந்தம்?"

"'செபமாலை என்றால் என்ன என்று தெரியுமா?"

"தெரிந்ததால்தான் கேட்கிறேன்."

"'என்ன தெரியும்?"

"செபமாலை மரியாளுக்கு ஒப்புக் கொடுக்கப்படும் செபம்.

ஆனால் தவக்காலம் இயேசுவின் பாடுகளைப் பற்றித்
தியானிப்பதற்காக கொடுக்கப்பட்ட காலம்.

அதற்கும் மரியாளுக்கும் என்ன சம்பந்தம்?"

"உங்களுக்கும் உங்களது, அம்மாவுக்கும் உள்ள சம்பந்தம்.

உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வுக்கும், உங்களது, அம்மாவுக்கும் உள்ள சம்பந்தம்.

உங்களை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது உங்களது பெற்றோர்களது பெயர்களைக் கேட்டார்களே.

அப்போது எனது படிப்புக்கும் எனது பெற்றோருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டீர்களா?"

"என்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்தது என்னுடைய பெற்றோர்கள் தான்."

"'பாடுகள் படப்போகும் இயேசுவை பெற்றவள் மரியாள்தான் என்பது உங்களுக்கு தெரியாதா?" 

''மரியாளுக்கு இயேசு மட்டுமா பிள்ளை? வேறு பிள்ளைகளும் இருந்தார்களே. அதற்கு பைபிளில் ஆதாரம் இருக்கின்றது."

"'என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

மரியாளுக்கு இயேசு மட்டும்தான் பிள்ளை என்பதற்கு பைபிளில் வலுவான ஆதாரம் இருக்கிறது.

மரியாளுக்கு அதே பெயரில் ஒரு சகோதரி இருந்தது உங்களுக்கு தெரியுமா?"

"அப்படி எங்கே கூறப்பட்டிருக்கிறது?"

"'இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும், 

அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும், 

மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்,"
(அரு.19:25)


"அவர்களுள் மதலென் மரியாளும், 

யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும்,

 செபெதேயுவின் மக்களின் தாயும் இருந்தனர்."
(மத்.27:56)

அவர்களுள் மதலேன் மரியாளும், 

சின்ன யாகப்பருக்கும் யோசெத்துக்கும் தாயான மரியாளும், 

சலோமேயும் இருந்தனர்.
(மாற்.15:40)

.1.அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும், 


2., யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும்,


3. யாகப்பருக்கும் யோசெத்துக்கும் தாயான மரியாளும், 

 ஒரே ஆள் தான்,

 அன்னை மரியாளின் சகோதரி,

 இயேசுவின் சகோதரர்களாக குறிக்கப்படுபவர்கள் இவருடைய பிள்ளைகள்தான்,

 இயேசுவுக்கு சித்தி மக்கள்.

புரிகிறதா?"

"மரியாளுக்கு வேறு குழந்தைகள் இல்லை என்பதற்கு வேறு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?"

"'அன்னை மரியாளின் வாக்குமூலம்தான் ஆதாரம்."

"என்னது?

 மரியாளே எனக்கு வேறு பிள்ளைகள் இல்லை என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்களா?"

"'பைபிள்தான் எல்லாம் என்கிறீர்கள், அதை ஒழுங்காக வாசிப்பதில்லையா? 

கபிரியேல் தூதர் அன்னை மரியாளுக்கு மங்கள வார்த்தை கூறியதை வாசித்திருக்கிறீர்களா?"

"வாசித்திருக்கிறேன்."

"'தூதர் மரியாளைப் பார்த்து என்ன சொன்னார்?"


"அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " 

"மரியே, அஞ்சாதீர்: கடவுளின் அருளை அடைந்துள்ளீர்.

 இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்."
என்று சொன்னார்.

"' அதற்கு மரியாள் என்ன சொன்னாள்?"

" "இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே" என்றாள்."

'''ஒரு பெண்ணுக்கு திருமணம் உறுதியாகி நிச்சய தாம்பூல விழா நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அந்த விழாவில் வாழ்த்துரை வழங்கிய ஒருவர் 

பெண்ணை வாழ்த்தும் போது 

"உங்களுக்கு முதல் குழந்தையாக வீரம் உள்ள ஒரு ஆண் மகன் பிறப்பான்."

என்று சொன்னால் அந்தப் பெண் மகிழ்ச்சி அடைவாளா,

அல்லது,

"இது எங்ஙனம் ஆகும்? நான் கணவனை அறியேனே"

என்று கூறுவாளா?"

"நிச்சயமாக மகிழ்ச்சி அடைவாள். அவளுக்குதான் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதே."


"'கபிரியேல் தூதர் தூதுரைக்க வரும் முன்பே மரியாளுக்கு
தாவீது குலத்தவராகிய சூசை என்பரோடு திரு மண ஒப்பந்தம் ஆகிவிட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?"

"தெரியும்."

"'அப்படியானால் 

"உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்."

என்ற இறைவாக்கை இறைவனின் தூதுவர் மூலம் கேட்டபோது அவர் மகிழ்ச்சிதானே அடைந்திருக்க வேண்டும்!

ஏன் இது எங்ஙனம் ஆகும்? என்று கேட்டார்."

"ஏன்?"

"'ஏனென்றால் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பது அவளது திருமண ஒப்பந்தத்தின் நோக்கம் அல்ல.

அவள் எப்போதும் கன்னியாக இருக்க வேண்டும் என்று இறைவனுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாள்.

அவளது கன்னிமைக்குப் பாதுகாவலாகத் தான் அவள் வயதான சூசையப்பரை மணம் செய்ய சம்மதித்தாள்."

"அதற்கு பைபிளில் எந்த ஆதாரமும் இல்லையே!"

"'பைபிளில் கூறப்பட்டது எல்லாம் உண்மை.

ஆனால் பைபிளில் கூறப்பட்டது மட்டும்தான் உண்மை என்று வாதாடக் கூடாது.

நற்செய்தி நூலில் இயேசுவைப் பற்றிய எல்லா உண்மைகளும் எழுதப்படவில்லை என்று அருளப்பரே கூறிருக்கிறார்.

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."(அரு.21:25)

"வேறு ஏதாவது ஆதாரம்?"

"'பைபிள்தான் எல்லாம் என்று சொல்பவர்கள் நீங்கள்.

"உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும், அதற்கு இயேசு என்று பெயரிடுங்கள்"

என்று கபிரியேல் தூதர் சொன்னபோது 

இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே"

என்று சொன்ன அன்னை மரியாள்,

"பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும்."

என்று தூதர் சொன்னபோது


"இதோ! ஆண்டவருடைய அடிமை.

 உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" 

என்று ஏன் சொன்னாள்?

தனது வயிற்றில் மனுவுரு எடுக்கப் போகின்றவர் இறைமகன், 

அது பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான் நிகழும்,

அதனால் தனது கன்னிமைக்கு எந்த பழுதும் வராது.

என்று தெரிந்த பின்புதான் அவர் இயேசுவை பெற்றெடுக்க சம்மதம் தெரிவித்தாள்.

தனது கன்னிமை வார்த்தைப்பாடு இறைவனுக்குக் கொடுக்கப்பட்டது,

அது பழுதுபடாமல் இறைவன் பார்த்துக் கொள்வார்

என்ற உறுதியான விசுவாசம்தான் அவளை இயேசுவைப் பெற சம்மதிக்க வைத்தது. 

தனது கன்னிமைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த அன்னை மரியாள் 

எப்படி வேறு குழந்தைகள் பெற்றுக் கொள்ள சம்மதிப்பாள்?

நான் என் தாயை நம்புகிறேன்.

தாயை நம்பாதவன் மனிதப் பிறவியே அல்ல."

''மரியாள் உங்கள் தாயா?"

"'சிலுவை அடியில் எங்களைப் பெற்ற தாய். நற்செய்தி நூலை ஒழுங்காக வாசிக்கவும்.

உங்களது அப்பா யார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?"

''அம்மா சொல்லித்தான் தெரியும்."

"'அம்மாவை நம்புனீர்களா அல்லது வேறு ஆதாரம் கேட்டீர்களா?"

"தாயை நம்பினேன்."

"'இயேசு சிலுவை அடியில் நமக்குத் தந்த தாயையும் நம்புங்கள்."

லூர்து செல்வம்.

Monday, February 27, 2023

"இரண்டு நாள் கழித்துப் பாஸ்கா விழா வரும் என்று உங்களுக்குத் தெரியும். அப்போது மனுமகன் சிலுவையில் அறையப்படக் கையளிக்கப்படுவார்" என்று சொன்னார்." (மத். 26:2)

"இரண்டு நாள் கழித்துப் பாஸ்கா விழா வரும் என்று உங்களுக்குத் தெரியும். அப்போது மனுமகன் சிலுவையில் அறையப்படக் கையளிக்கப்படுவார்" என்று சொன்னார்." (மத். 26:2)

பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீண்ட அன்று  உண்ட பாஸ்கா உணவின் ஞாபகமாக 

கானான் தேசத்துக்கு வந்த பின்னும் பாஸ்கா விழாவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடினார்கள்.

இயேசுவும் ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கா விழாவில் கலந்து கொண்டார்.

இயேசு தனது மக்களை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து  மீட்பதற்காகப் படப்போகும் பாடுகளுக்கும்,

 அடையப் போகும் மரணத்திற்கும் முந்திய நாள் தனது சீடர்களோடு 

பாஸ்கா விருந்தில் கலந்து கொள்ள  ஆவலாக இருந்தார்.

பழைய ஏற்பாட்டு யூதர்கள் ஆட்டுக்குட்டியை பாஸ்கா உணவாக உண்டார்கள்.

இயேசுவோ ஆட்டுக்குட்டிக்கு பதில் தன்னையே தனது சீடர்களுக்கு உணவாக அளிக்கத் தீர்மானித்தார்.

 பாஸ்கா விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு
இயேசு சீடர்களிடம்,

பாஸ்கா  உணவு முடிந்தவுடன்

"மனுமகன் சிலுவையில் அறையப்படக் கையளிக்கப்படுவார்" என்று சொன்னார்."

பாஸ்கா உணவு உண்ணப்போவது வியாழக்கிழமை அன்று இரவு.

அன்று இரவோடு இரவாக இயேசு கைது செய்யப்படுவார்.

மறுநாள் அவரைச் சிலுவையில் அறைந்து கொல்வார்கள்.

தனது பாடுகள் பற்றிய செய்தியை இதற்கு முன்பே இயேசு தனது சீடர்களிடம் பல முறை கூறியிருக்கிறார்.

தனது மரணத்தைப் பற்றியும் உயிர்ப்பை பற்றியும் அவர் தனது சீடர்களிடம் கூறியதை அவர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

அதற்காக தங்களை தயார் படுத்தி கொண்டதாகவும் தெரியவில்லை.

புரிந்து கொண்டிருந்தால் வியாழன் அன்று கெத்சமனி தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்து செபித்துக் கொண்டிருந்தபோது 

முக்கியமான மூன்று சீடர்கள் தூங்கிக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள்.

அவரைக் கைது செய்த போது சீடர்கள் அவரை விட்டு ஓடிப் போயிருக்கவும் மாட்டார்கள்.

இவ்வளவுக்கும் அவர்கள் மூன்று ஆண்டுகளாக இரவும் பகலும் இயேசுவோடு தங்கி அவருடைய போதனைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவர்கள்.

அவர் செய்த எல்லா புதுமைகளையும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்.

வியாழன் இரவு இயேசு அப்பத்தையும், ரசத்தையும் தன்னுடைய உடலாகவும் இரத்தமாகவும் மாற்றி அவர்களுக்கு கொடுத்த போது

முழு அறிவோடும் உணர்வோடும் தான் இயேசுவை உணவாக உண்டவர்கள். 

"இதை என் நினைவாகச் செய்யுங்கள் "  என்ற  இயேசுவின் வார்த்தைகளால் குருப் பட்டம் பெற்றவர்கள்.

வசீகர வார்த்தைகளைக் கூறி அப்பத்தையும் ரசத்தையும் இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றும் சடங்குக்கு அவர்கள் வைத்திருந்த பெயர்

"அப்பம் பிட்குதல்."

திருச்சபையின் முதல் திருப்பலியை நிறைவேற்றியவர் நமது ஆண்டவராகிய இயேசு,

அவருக்குப் பின் அவருடைய அப்போஸ்தலர்கள்,

தொடர்ந்து அவர்களுடைய வாரிசுகள்.

திருப்பலி நிறைவேற்றி, நற்கருணை விருந்தை அளித்த பின்பு தான் 

 இயேசு உலக மீட்பிற்கான தனது  பாடுகளை ஆரம்பித்தார்.

அப்போஸ்தலர்கள் இயேசுவோடு இருந்தபோது அவர்களுக்குப் புரியாதிருந்த அநேக விசயங்கள் பரிசுத்த ஆவியின் வருகையின்போது புரிந்திருக்கும்.

நமக்கும் ஒன்று புரிய வேண்டும்.

நித்திய காலமாக சர்வ வல்லமையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இறைமகன்

அன்னை மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுத்து

 33 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தது

33வது ஆண்டில் புனித வியாழன் அன்று தனது உடலையும், இரத்தத்தையும்

தனது சீடர்களுக்கு உணவாக கொடுத்துக் கொண்டாடிய பாஸ்கா திரு விருந்துக்காகவும்,

மறுநாள் அவர் பட்ட பாடுகளுக்காகவும், சிலுவை மரணத்திற்காகவும்தான்.

எங்கே திருப்பலியும்,

 திவ்ய நற்கருணையும்,

திரு விருந்தும்,

அதை பரிசுத்தமான உள்ளத்தோடு அருந்த உதவும் பாவ சங்கீர்த்தனமும்,

 உள்ளனவோ அங்கேதான் இயேசு நிறுவிய திருச்சபை இருக்கிறது.

யார்  பரிசுத்தமான உள்ளத்தோடு இயேசுவின் திரு உடலையும் திரு ரத்தத்தையும், உணவாக உண்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான கிறிஸ்தவர்கள்.

லூர்து செல்வம்.

Sunday, February 26, 2023

"சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்." (மத்.25:40)

"சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்." (மத்.25:40)

"தாத்தா, தாத்தா.... நேரம் இப்போது பிற்பகல் 4.14. தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்."

"'நான் தூங்கிக் கொண்டிருக்கவில்லை.
தூக்கம் தான் என்னைக் கொண்டிருக்கிறது."

"என்ன சொல்கிறீர்கள்?"

"'எனது விருப்பத்திற்கு மாறாக தூக்கத்தின் கையில் மாட்டிக் கொண்டேன்."

"முதலில் எழுந்திருங்கள். நான் உங்களைக் கூப்பிடும்போதே தூக்கம் உங்களை விட்டுப் போய்விட்டது."

"'ஏதாவது சந்தேகமா?" 

"நீ பிச்சையிடும்பொழுதோ, உன் வலக்கை செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும். என்று இயேசு ஏன் சொன்னார்?"

"' நாம் விளம்பரத்திற்காக நற்செயல்கள் புரிய கூடாது என்பதற்காகத்தான். 

நாம் எதை யாருக்குச் செய்தாலும் இறைவனுக்கே செய்கிறோம்.

இறைவனுக்கு செய்வதை அவர் மட்டும் அறிந்தாலே போதும்.

விளம்பரத்திற்காக செய்யப்படும் நற்செயல் நற்செயலே அல்ல.

நற்செயல்களுக்கான சம்பாவனை நிலை வாழ்வு.

நமக்கு நிலை வாழ்வைத் தருவது இறைவன் மட்டும்தான்.

விளம்பரத்திற்காக நற்செயல் செய்தால் அதனால் கிடைக்கும் அற்பப் புகழ்தான் நமக்குக் கிடைக்கும் சம்பாவனை.

அது நீடிக்காது.''

"அயலானுக்குக் கொடுக்காமல் நேரடியாகக் கடவுளுக்குக் கொடுத்தால்?"

"' நம்மால் நேரடியாகக் கடவுளுக்குக் கொடுக்க முடியாது.

நமது ஊனக் கண்களால் கடவுளை பார்க்க முடியாத போது எப்படி அவருக்கு நேரடியாக கொடுக்க முடியும்?

அதனால்தான் நமது அயலானுக்குக் கொடுப்பதன் மூலம் தனக்கு தரச் சொல்லியிருக்கிறார்."

"கோவிலில் நாம் போடும் காணிக்கை அவருக்கு நேரடியாக கொடுப்பது இல்லையா?"

"'கோவிலில் நாம் போடும் காணிக்கையைத் திருச்சபை ஏழை எளியவர்களின் நலனுக்காகத்தான் பயன்படுத்துகிறது.

இவ்வுலக பொருள்களை மட்டும் தான் கடவுளுக்கு நேரடியாக கொடுக்க முடியாது.

ஆனாலும் அவரது அளவற்ற அன்புக்கு நன்றியாக நமது அன்புடன், நம்மை முழுவதும் அவருக்கு அர்ப்பணித்து விடலாம்.

நாம் விடும் மூச்சு முதல் கொண்டு நமது அனைத்து செயல்களையும் அவருக்கு அர்ப்பணித்து விடலாம்.

அதன்பின் நமது அன்னை  மரியாள் வாழ்ந்தது போல நாமும் இறைவனது அடிமைகளாக 

அவருக்காக மட்டுமே வாழ வேண்டும்."

"தாத்தா, முன்னுக்குப் பின் முரணாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

நமது அயலானுக்குப் பணி புரிவதுதான் இறைவனுக்கு செய்யும் பணி என்கிறீர்கள்.


அடுத்த நிமிடம் இறைவனுக்காக மட்டுமே வாழ வேண்டும் என்கிறீர்கள்.

மட்டுமே என்ற வார்த்தைக்கு பொருள் தெரியவில்லையா?" 

''பேரப்புள்ள, ஒரு காலத்தில் இறைவன் மட்டுமே இருந்தார்.

படைப்புகள் அனைத்தும் அவரது உள்ளத்தில் திட்ட வடிவிலேயே இருந்ததன.

அவரது திட்டங்களைச் செயல்படுத்தும் விதமாக  நாம் வாழும் பிரபஞ்சத்தையும், நம்மையும் படைத்தபோது

அவர் படைத்த அனைத்தும் அவருக்கே உரிமை பொருள்களாக இருந்தன, இருக்கின்றன, இன்னும் இருக்கும்.

நாம் அவரை மட்டும் நேசிப்பது என்றாலே அவரையும் அவரால் படைக்கப்பட்ட அனைத்தையும் நேசிப்பது என்பதுதான் பொருள்.

அவரது படைப்புகளை நேசிக்காமல் தனியாக அவரை மட்டும் நேசிக்க முடியாது.

ஒரே நேசத்தைத்தான்

இறை நேசம், பிறர் நேசம் என்று கடவுள் விளக்கமாகச் சொல்லுகிறார்.

கண்ணால் காண முடியாத கடவுளை நேசிக்கும் நாம்

 அந்த நேசத்தை  கண்ணால் காணக் கூடிய நமது அயலானிடம் வெளிப்படுத்த வேண்டும்.

நமது அயலானுக்கு என்னவெல்லாம் செய்கிறோமோ அதையெல்லாம் கடவுளுக்கே செய்கிறோம்.

நமது அயலானுக்கு என்னவெல்லாம் செய்யவில்லையோ அதையெல்லாம் கடவுளுக்கும் செய்யவில்லை."

"கடவுளே இல்லை என்பவர்கள் தங்களது அயலானை மட்டும் நேசித்து அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை எல்லாம் செய்தால் 

அந்த நேசம் கடவுளுக்கு பிடிக்குமா? பிடிக்காதா?"

"'இறையன்பு இல்லாதவர்களிடம் உண்மையான அன்பு இருக்க முடியாது.

பள்ளிக்கூடத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எத்தனை பாடங்களை படித்தாலும் அவர்களால் தேர்வு எழுத முடியாது.

தேர்வுகளால் கிடைக்கும் பலன் எதுவும் அவர்களுக்கு கிடையாது.

இறைவனை ஏற்றுக் கொள்ளாதவர்களால் இறைவனால் படைக்கப்பட்டவற்றை உண்மையாக அன்பு செய்ய முடியாது.

தாங்கள் செய்வதற்கு அன்பு என்றும்,
 சேவை என்றும் அவர்கள் பெயர் சூட்டியிருக்கலாம்.

ஆனால் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத கடவுள் முன் அது அன்பும் அல்ல, சேவையும் அல்ல.

இறைவனை ஏற்றுக் கொள்பவர்களும் 

தங்கள் பிறனை இறைவனுக்காக நேசிக்க வேண்டும்,

இறைவனுக்காக சேவை செய்ய வேண்டும்,

அப்போதுதான் அந்த நேசத்துக்கும், சேவைக்கும் கடவுள் முன் பலன் உண்டு.

சுய திருப்திக்காக நாம் செய்யும் எந்த செயலுக்கும் இறைவன் முன் எந்த பலனும் இல்லை."

"இறைவனுக்காக வாழ்பவர்களால் மட்டுமே இறைவனோடு வாழ முடியும்."


லூர்து செல்வம்.

Friday, February 24, 2023

அவர் எழுந்து, அனைத்தையும் விட்டு அவரைப் பின்சென்றார்."(லூக்.5:28)

"அவர் எழுந்து, அனைத்தையும் விட்டு அவரைப் பின்சென்றார்."
(லூக்.5:28)

"இயேசு சுங்கத் துறையில் அமர்ந்திருந்த லேவி என்ற ஆயக்காரனைக் கண்டு, "என்னைப் பின் செல்" என்றார்.

 அவர் எழுந்து, அனைத்தையும் விட்டு அவரைப் பின்சென்றார்."

இறைமகன் மனு மகனாய்ப் பிறந்தது மனிதர்களின் ஆன்மீக விடுதலைக்காக,

அரசியல்  விடுதலைக்காக அல்ல.

தான் பிறப்பதற்காக அவர் தேர்ந்தெடுத்த இஸ்ராயேல் குலத்தை அந்நியர்கள் அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தியபோது 

அவர் அதைத் தடுக்கவில்லை.

இஸ்ராயேல் குலத் தந்தையாகிய யாக்கோபு வாழ்ந்து வந்தது கானான் நாட்டில்தான்.

அவர் அவரது மக்களோடு எகிப்தில் குடியேறிய போது கடவுள் அவர்களைத் 
தடுக்கவில்லை.

அவர்கள் அங்கு அடிமைப் படுத்தப்பட்டபோது மோயீசன் மூலம் அவர்களை விடுவித்து 

திரும்பவும் கானான் நாட்டிற்கே அழைத்து வந்தார்.

அவர்கள் அங்கே வாழ்ந்த போதும் பிற நாட்டவரால் அடிமைப் படுத்தப்பட்ட போதும் அதையும் அவர் தடுக்கவில்லை.

அவர்களது விடுதலைக்காக மெசியாவை அனுப்பப் போவதாக கடவுள் இறைவார்கினர்கள் மூலம் வாக்களித்தார்.

மெசியா தங்களுக்கு அந்நியர் களிடமிருந்து அரசியல் ரீதியாக விடுதலை பெற்றுத்தருவார் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தனர்.

மெசியா பிறந்த போது அவரால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் ரோமர்களின் அடிமைத் தனத்தில்தான் வாழ்ந்தார்கள்.

அந்த வகையில் இயேசுவும் ரோமர்களின் அடிமைத் தனத்தில்தான் பிறந்தார்.

ஆனால் தம் மக்களின் அரசியல் விடுதலைக்காக எதுவும் செய்யவில்லை.

ஏனெனில் அவர் பிறந்தது அனைத்துலக மக்களின் ஆன்மீக விடுதலைக்காக.

அவர் தன்னைச் சீடராகப் பின் பற்றும் படி அழைத்த லேவி (மத்தேயு) ரோமையர்களின் பணியாள்.

யூதர்களிடம் வரி வசூலித்து ரோமை அரசுக்குக் கட்டுபவர். 

இயேசு அவரை நோக்கி,

"என்னைப் பின்செல்"  

என்று சொன்னபோது

அவர் எழுந்து, அனைத்தையும் விட்டு அவரைப் பின்சென்றார்.

நாம் வாழும் தவக் காலத்தில்
நாம் நாம் செய்ய வேண்டியதும் இதுதான்.

(நமது வாழ்வே தவம் செய்ய வேண்டிய காலம் தான்)

இயேசுவுக்காக ஆன்மீக வாழ்வு வாழ இந்த உலகத்தைச் சார்ந்த அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்ற வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வில் இறைவனது கட்டளைகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள்,

இந்த உலகைச் சார்ந்த எதற்கும் நாம் கட்டுப்பட்டவர்கள் அல்ல.

இவ்வுலகப் பற்றை முற்றிலும் விட்டால் தான் நம்மிடம் இறைப்பற்று வளர முடியும்.

இறைப்பற்று, 
இரைப்பற்று அல்ல.

இரைப்பற்று இருப்பவர்களிடம் 
இறைப்பற்று இருக்க முடியாது.

ஆகவேதான் நாம் நோன்பு இருக்க வேண்டும் என்று இறைவன் நம்மை வலியுறுத்துகிறார்.

வெள்ளிக்கிழமைகளில் உணவை ஒறுப்பதினால் மட்டும் நாம் நோன்பு இருக்கவில்லை.

மறுவுலக வாழ்வுக்காக இவ்வுலகைச் சார்ந்த அனைத்து ஆசைகளையும் விட்டொழிப்பதில்தான் 

உண்மையான நோன்பு இருக்கிறது.

TV யில் Serial பார்ப்பது, திரைப் படம் பார்ப்பது, நண்பர்களுடன் உல்லாசப் பயணம் செல்வது, அரட்டைபடிப்பது போன்ற ஆன்மீகத்துக்கு உதவாத காரியங்களை விட்டு விடுவது நமது ஆன்மீக வளர்ச்சிக்கு நல்லது.

நமது ஐம்பொறிகளுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய சில காரியங்கள் பாவம் அற்றவைகளாக இருந்தாலும்,

அவற்றை ஆண்டவருக்காக தியாகம் செய்யும்போது புண்ணியம் சார்ந்த காரியங்களாக மாறி விடுகின்றன.

YouTube க்குள் சென்று ஒரு பாட்டு கேட்க வேண்டும் என்று ஆசை வரும்போது,

அந்த ஆசையை அடக்கி,

அந்நிடங்களில் மனவல்லப ஒருவரி செபங்கள் சொல்லிக் கொண்டிருந்தால்

ஒரு பைசா செலவில்லாமல் நாம் விண்ணக வாழ்வை நோக்கி நகர்ந்து கொண்டிருப்போம்.

ஒரு நாளைக்கு நாம் குடிக்கும் நான்கு கப் டீயில் ஒரு கப்பைத் தியாகம் செய்வதால் நமக்கு நட்டம் ஒன்றும் வந்து விடாது,

ஆனால் அளவிட முடியாத ஆன்மீக நலன் நம்மை வந்தடையும்,

ஆன்மீகம் சாராத அனைத்தையும் தியாகம் செய்து ஆன்மீக வாழ்வில் வளர்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, February 23, 2023

"மனிதன் தன்னையே நாள் முழுவதும் வதைத்துக் கொள்வது தான் நமக்கு விருப்பமான நோன்பா?"(இசை.58:5)

"மனிதன் தன்னையே நாள் முழுவதும் வதைத்துக் கொள்வது தான் நமக்கு விருப்பமான நோன்பா?"
(இசை.58:5) 

"தாத்தா, தவக்காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும்  நோன்பு இருக்க வேண்டும் என்று சாமியார் சொன்னார்.

நோன்பு நாட்களில் ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு விட்டு

மீதி நேரமெல்லாம் எதுவும் சாப்பிடாமல் பட்டினி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

சாப்பிடாமல் இருப்பதுதான் நோன்பு என்றால் 

உணவு கிடைக்காமல் சாப்பிடாமல் இருப்பவர்கள் எல்லாம் நோன்பு இருக்கிறார்களா? அவர்களது பட்டினி தவ முயற்சியா?"

"'மாணவர்கள் பள்ளிக் கூடத்துக்குப் போகிறார்கள்.

பள்ளிக் கூடத்துக்குப் போகிறவர்கள் எல்லாம் மாணவர்களா?"

"இல்லை. ஆசிரியர்களும் பள்ளிக் கூடத்துக்குப் போகிறார்களே."

"'அது போல் தான் நோன்பு இருப்பவர்கள் சாப்பிடாமல் இருக்கிறார்கள்.

ஆனால் சாப்பிடாமல் இருப்பவர்கள் எல்லாம் நோன்பு இருக்கவில்லை.

சாப்பிட எதுவும் கிடைக்காதவர்களை மட்டும் நான் சொல்லவில்லை.

 நோன்பு இருப்பதற்காகவே சாப்பிடாமல் இருப்பவர்களில் கூட அநேகர் நோன்பு இருக்கவில்லை."

''புரியவில்லை."

'''நோன்பு ஒரு தவ முயற்சி, இறைவனுக்குப் பிடித்தமான செயல்.

ஒரு செயல் இறைவனுக்குப் பிடித்தமான செயலாக இருக்க வேண்டுமென்றால் 

இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிற இரண்டு கட்டளைகளுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்,   

எதிராக இருந்துவிடக் கூடாது.

அதாவது இறைவனை அன்பு செய் என்ற கட்டளைக்கும், 

உனது பிறனை அன்பு செய் என்ற கட்டளைக்கும்

ஏற்றதாக இருக்க வேண்டும்.

இறையன்புக்கும், பிறரன்புக்கும் எதிரான எந்த செயலும் நற்செயல் அல்ல.

நாம் இருக்கும் நோன்பு இறைவனுக்காகவும், பிறனுக்காகவும் இருந்தால் மட்டுமே அது உண்மையான  நோன்பு."

"பிறனுக்காக நோன்பு என்றால் எப்படி?"

"'நீ இன்று நோன்பு இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

இரண்டு நேர சாப்பாட்டை நீ முற்றிலும் ஒறுத்து விட்டால் உனக்கு எவ்வளவு மிச்சமாகும்?"

"50 + 50,  தின்பண்டங்கள் சாப்பிடாமல் இருந்தால்  40 

ஆக 140 ரூபாய் மிச்சமாகும்."

"' அதை என்ன செய்வாய்?"

"வேறு செலவுக்கு வைத்துக் கொள்வேன்."

"'அப்படியானால் நீ எதையும் ஒறுக்கவில்லை.

மொத்த ரூபாயையும் நீயே உனக்காகவே செலவழித்து விட்டாயே."

"இரண்டு நேர சாப்பாட்டை 
ஒறுத்திருக்கிறேனே."

'''சாப்பாட்டுச் செலவைக் குறைத்து   சட்டை வாங்கியிருப்பாய்.

இதில் ஒறுத்தல் எங்கே இருக்கிறது?"

"அப்போ நான் என்ன செய்ய வேண்டும்?"

"'சாப்பாட்டில் பிடித்த மிச்சத்தை சாப்பிட எதுவும் கிடைக்காத ஒரு ஏழை அயலானுக்கு கொடுத்து உதவ வேண்டும்.

இப்படி செய்தால் இறைவனுக்கும் திருப்தி, உனது அயலானுக்கும் திருப்தி.

இறைவனையும்  அயலானையும்
திருப்திப் படுத்தும் செயலே நற்செயல்.

தன்னையே நாள் முழுவதும் வதைத்துக் கொள்வது மட்டும் நோன்பு அல்ல.

"மனிதன் தன்னையே நாள் முழுவதும் வதைத்துக் கொள்வது தான் நமக்கு விருப்பமான நோன்பா?

பசித்திருப்பவனுக்கு உன் அப்பத்தைப் பகிர்ந்து கொடு,

 ஏழைகளுக்கும் அந்நியருக்கும் உன் வீட்டில் தங்குவதற்கு இடங்கொடு:

 ஆடையில்லாதவனைக் கண்டால் அவனைப் போர்த்து:

 உன் இனத்தானை அவமதிக்காதே: 

இதுவன்றோ நாம் விரும்பும் மேலான நோன்பு?

அப்போது, ஆண்டவரை கூவியழைப்பாய், அவரும் உன் மன்றாட்டைக் கேட்டருள்வார்: 

பசித்திருப்பவனுக்கு உன் உணவைப் பகிர்ந்து,

 துன்புற்றவன் விருப்பத்தை நிறைவு செய்தால்,

 உன் வெளிச்சம் இருள் நடுவில் உதயமாகும்,

 உன் காரிருள் பட்டப் பகல் போல் இருக்கும்."

என்று ஆண்டவர் இசையாஸ் இறைவாக்கினர் மூலமாக நமக்குச்  சொல்கிறார்."

"அப்போ நம்மிடம் இருப்பதை நமது அயலானோடு பகிர்ந்து கொள்வது தான் தவக்காலத்தில் நாம் செய்ய வேண்டிய நோன்பு என்கிறீர்கள். சரியா?"

"'40 நாட்கள் கொண்ட தவக்காலத்தில் மட்டுமல்ல,

நமது வாழ்க்கை முழுவதுமாக தவக்காலத்திலும் இப்படித்தான் செய்ய வேண்டும்.

குருவை போலத் தானே சீடனும் இருக்க வேண்டும்.

நாம் இறை மகன் இயேசுவின் சீடர்கள்.

இயேசு எதற்காக நம்மை படைத்தார்?

அன்பு முதலிட்ட தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காகத் தானே.

விண்ணுலக வாழ்வையும் நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காகத் தானே 

அவர் நம்மைப் போல மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு மரித்தார்.''

"இப்போ நன்கு புரிகிறது.

இல்லாமையை இல்லாமையாக்க இருப்பதைப் பகிர்ந்து வாழ்வோம்."

லூர்து செல்வம்.

Wednesday, February 22, 2023

"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."(மத்.6:1)(தொடர்ச்சி)

"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."
(மத்.6:1)
(தொடர்ச்சி)

''தாத்தா, இறைமகன் 
நமக்காக மனுவுரு எடுத்து, 
நமக்காக வாழ்ந்து,
 நமக்காக நற்செய்தி அறிவித்து, நமக்காகப் பாடுகள் பட்டு, 
நமக்காக மரித்தார்.

 நாம் அவருக்காக வாழ வேண்டும் என்று நமக்கு கட்டளை கொடுத்திருக்கும் இறைவன்,

நமக்காக வாழ்ந்து 
நமக்காக மரித்திருப்பது
 எதைக்  காட்டுகிறது?"

"'அன்பர்கள் ஒருவர் ஒருவருக்காக வாழ வேண்டும் என்பதை காட்டுகிறது.

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.

அவர் நமக்காக வாழ்ந்து    நமக்காக மரித்திருப்பது போல 

நாமும் அவருக்காக வாழ்ந்து அவருக்காக மரிக்க வேண்டும்."

" நாம் இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடுவது போலவே அவர் மரித்த நாளையும் கொண்டாடுகிறோம்.

பிறந்தநாளை மகிழ்ச்சியுடனும் மரித்த நாளை துக்கத்துடனும் கொண்டாடுகிறோம்.

இப்போது நாம் இயேசுவின் மரித்த நாளை கொண்டாடுவதற்கான ஆயத்த காலத்தில் இருக்கிறோம்.

அந்த நாளுக்காக நாம் நம்மை எப்படி ஆயத்தப்படுத்த வேண்டும் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்."

'''மரித்த விழாவுக்கான ஆயத்த
காலத்தை தவக்காலம் என்று அழைக்கிறோம்.

அதாவது நாம் தவம் செய்ய வேண்டிய காலம்.

நம்மை நாமே ஒறுத்து வாழ வேண்டிய காலம்."

"தாத்தா, தவக்காலத்தில் மட்டும்தான் ஒறுத்து வாழ வேண்டுமா?

மற்ற நாட்களில் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?"

"'திருமண நாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொன்னால் மற்ற நாட்களில் அழுது கொண்டே இருக்க வேண்டுமா என்று கேட்கக் கூடாது.

ஒரு வகையில் நமது வாழ்க்கை முழுவதும் தவக்காலம்தான்.

இப்போது இயேசுவின் மரண விழாவிற்காக நம்மை தயாரிப்பது போல,

நமது வாழ்க்கை முழுவதும் நமது மரணத்திற்காகத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் எதைச் செய்தாலும் இயேசுவுக்காகச் செய்ய வேண்டும்.

இயேசு நமக்காக வாழ்ந்து மரித்தது போல 

நாம் இயேசுவுக்காக வாழ்ந்து மரிக்க வேண்டும்."

"இயேசுவுக்காக ஒறுத்து வாழ்வது எப்படி?"

"'நமது இயல்பான ஆசைகளை ஒறுத்து வாழ்வதுதான் ஒறுத்தல் வாழ்வு.

இயல்பாக நமது மகிழ்ச்சிக்காக செயல் புரிவோம்.

அதை ஒறுத்து இயேசுவின் மகிழ்க்காக செயல் புரிவதுதான் ஒறுத்தல் வாழ்வு.

நம்மிடம் இருக்கும் தின் பண்டத்தை நாம் தின்னாமல் நமது நண்பனுக்குக் கொடுத்து மகிழ்வது போல,

நமது மகிழ்ச்சியை இயேசுவுக்காகத் தியாகம் செய்வதுதான் தவம்.

பிறர் நம்மைப் பார்த்து புகழ வேண்டும் என்பதற்காக நல்ல செயல்களை புரியாமல்,

இறைவனை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஒறுத்தல் தான்.

நமது வலது கை செய்யும் உதவி நமது இடது கைக்கு தெரியக்கூடாது என்று இயேசு சொல்கிறார்.

அந்த அளவுக்கு நமது மகிழ்ச்சியை ஒறுக்க வேண்டும்.

நாம் செபம் சொல்வது கூட  இறைவனுக்கும் நமக்கும் மட்டும் தெரிந்தால் போதும்.

மற்றவர்கள் நம்மை பக்தியுள்ளவர்கள் என்று சொல்வதற்காக செபம் சொல்லக்கூடாது. 

செபக் கூட்டங்களில் மற்றவர்களின் முன்னால் செபம் சொல்பவர்கள்,

தயாரிக்கப் பட்ட அலங்கார வார்த்தைகளைப் பயன்படுத்தி

 மற்றவர்கள் தங்கள் செபத்தைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கோடு சொல்லக் கூடாது.

"நீங்கள் செபம் செய்யும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம்: ஏனெனில், மனிதர் பார்க்கும்படி, அவர்கள் செபக்கூடங்களிலும் தெருக்கோடிகளிலும் நின்று செபம் செய்ய விரும்புவர்."
(மத்.6:5)

தவக்காலத்தில் நோன்பு இருக்க  வேண்டும்.

இயேசுவே தனது பொது வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்பு 40 நாட்கள் எதுவும் உண்ணாமல் நோன்பு இருந்தார்.

தவக்காலத்தில் வரும் விபூதி புதன் அன்றும், எல்லா வெள்ளிக்கிழமைகளும் சுத்த போசனத்தோடு, ஒரு சந்தியும் கடைபிடிக்க வேண்டுமென்பது திருச்சபையின் கட்டளை.

நாம் தவக்காலம் முழுவதுமே சுத்த போசனத்தை கடைபிடிக்கலாம்.
நோன்பும் இருக்கலாம்"

"இயேசுவுக்காக என்று சொல்கிறீர்கள்.

நமது பாவங்களுக்கு பரிகாரமாக தவ முயற்சிகள் செய்ய வேண்டாமா?"

'"இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரமாக தான் பாடுகள் பட்டு மரித்தார்.

நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்தவருக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமது பாவங்களுக்கு பரிகாரமாக தான் செய்கிறோம்.

நமது சம்பளத்தை வாங்கி அப்பாவிடம் கொடுத்தால் உண்மையில் யாருக்கு கொடுக்கிறோம்?"

"நமக்குதான் கொடுக்கிறோம். நம்மிடமிருந்து பெற்றதை அப்பா நமக்காகத்தான் செலவழிப்பார்."


"'நாம் கடவுளின் பிள்ளைகள். நாம் அவருக்காக செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நமக்கு விண்ணகத்தில் சன்மானம் காத்திருக்கிறது.

"என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்"
(மத்.10:42)

என்று நமது ஆண்டவரே கூறியிருக்கிறார்."

"அப்படியானால் சுயநலத்துடன் நற்செயல்கள் செய்ய வேண்டும் என்கிறீர்களா?"

"'இறைவன் விருப்பப்படி செயல்படுவது எப்படி சுயநலம் ஆகும்?

கடவுளின் அன்பு தன்னலம் அற்ற அன்பு.

அவர் இயல்பாகவே சகல நன்மைகளிலும் முழுமையாக, நிறைவாக இருக்கிறார்.

அவரது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாம் அவருக்காக நற்செயல் செய்யவில்லை.

அவரது சித்தத்தை நிறைவேற்றவே நற்செயல்கள் செய்கிறோம்.

தன்னலம் இன்றி நாம் அவருக்காகச் செய்யும் செயல்களின் பலனை,

அவரும் தன்னலமின்றி தனது பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்.

அது அவரது இயல்பு.

தன்னலமின்றி அவருக்காக அவருக்குள் இருந்து நாம் செய்யும் நற்செயல்களில் பலன்கள்,

அவருள் வாழும் நமது சகோதர சகோதரிகளுக்கும் போய் சேரும்.

நமது ஆண்டவர் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே உலகிற்கு வந்தார்.

அவர்கள் சீடர்களாகிய நாம் அவரைப் பின்பற்றி  தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே செயல் பட வேண்டும்.

"உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக"

என்று நாம் தந்தையிடம் வேண்டும்போது அவரது சித்தத்தால் பூமியில் வாழும் அனைவரும் பயன்பெற வேண்டும் என்று வேண்டுகிறோம்.

அனைவரும் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே வாழ்கிறோம்.

அதன் ஆன்மீக பலனை அனைவரும் அனுபவிக்கிறோம்." 

"தாத்தா, கடவுளின் தன்னலமற்ற அன்பை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது.

 கடவுள் நம்மை அவருக்காக வாழச் சொல்வது அவருக்காகவா நமக்காகவா?"

"'நமது உதவி அவருக்கு எந்த விதத்திலும் தேவையில்லை.

ஆனால் அவருடைய உதவியின்றி ஒரு வினாடி கூட நம்மால் வாழ முடியாது.

நம்மை அவருக்காக வாழச் சொல்வது நாம் நித்திய காலமும் அவரோடு பேரின்பத்தில் வாழ்வதற்காகத்தான்.

அவர்  தன்னலம் இன்றி நம்மை அன்பு செய்வது போல 

நாமும் தன்னலம் இன்றி அவரை அன்பு செய்வோம். 

நமக்கு மோட்ச பேரின்பத்தை தருவார் என்பதற்காக அல்லாமல்,

அவர் சகல நன்மைத் தனங்களையும் கொண்டவரும்,

நம்மைப் படைத்தவருமான கடவுள்  என்பதற்காக அவரை அன்பு செய்வோம்.


"சர்வேசுரா சுவாமி!

தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழு மனதோடு நேசிக்கிறேன்."

 தாய் திருச்சபை நாம் சொல்வதற்காக சொல்லித் தந்திருக்கும் இந்த செபத்தை வாழ்வோம்.

செபமாகவே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, February 20, 2023

"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."(மத்.6:1)

 "மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."
(மத்.6:1)

"தாத்தா, இன்று உங்களிடம் கேள்விகள் எதுவும் கேட்கப் போவதில்லை."

"'ரொம்ப சந்தோசம்."

"ரொம்ப சந்தோசப் பட்டு விடாதீர்கள்.

கேள்விகள் கேட்கப் போவதில்லை என்று தான் சொன்னேன்.

ஒன்றுமே கேட்க போவதில்லை
 என்று நான் சொல்லவில்லை.

தாத்தா என்று சொல்லும்போதே இரண்டு முறை கேட்டு விட்டேனே!"

"'எதற்காக இந்த முன்னுரை?" 

"நான் ஒரு புத்தகம் வாசித்தேன்.

அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரை எனக்குப் புரியவில்லை.

அதைப் புரிந்துதானோ என்னமோ ஆசிரியர்,

 "புத்தகத்தை முழுவதும் 
வாசியுங்கள்.

 முன்னுரை புரியும் என்று முன்னுரையை முடித்திருந்தார்.

நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதாவது நம்மைப் பற்றி கடவுள் எழுதிய புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?"

"'புத்தகத்தை முழுவதும் வாசித்த பிறகு தான் முன்னுரையே புரியும் என்று சொல்லிவிட்டாய்.

ஆகவே இப்போது "புரிகிறதா?" என்று நீ கேட்பது தவறு."

"நமது வாழ்க்கை என்னும் புத்தகத்தின் முன்னுரையைக் கூறுங்கள்."

'"கடவுள் 

அவரை அறிந்து, 

அவரை அன்பு செய்து,

 அவருக்காக வாழ்ந்து 

அவரோடு நித்திய காலம் விண்ணகத்தில் வாழ்வதற்காக

 நம்மை இவ்வுலகில் படைத்தார் படைத்தார்."

"அதாவது கடவுள் நம்மை படைத்தது 

அவரைப் பற்றி அறிய,

 அவரை நேசிக்க,

 அவருக்காக வாழ, 

அவரோடு நித்திய காலம் வாழ. 

நாம் படைக்கப்படுமுன் ஒன்றுமில்லாமையாக இருந்தோம்.

ஒன்றுமில்லாமல் இருந்த நம்மை ஏன் அவருக்காக படைத்தார் என்பது உங்களுக்குப் புரிகிறதா?"

"'அதை நீ ஏற்கனவே சொல்லிவிட்டாய்,

 நமது வாழ்வின் முடிவில் தான் அது புரியும் என்று.

 இப்போது அதை என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்?

நான் இன்னும் வாழ்ந்து முடிக்கவில்லையே!"

"தாத்தா, முள் குத்தினால் வலிக்கும் என்று நமது அனுபவத்தின் மூலமாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

மற்றவர்களுடைய அனுபவத்திலிருந்து தெரிந்து கொள்ள முடியாதா?

நமக்கு முன் பிறந்து, வாழ்ந்து, விண்ணகம் சென்றுவிட்ட புனிதர்களைப் பற்றி நிறைய வாசித்திருக்கின்றோமே.

 அவர்களுடைய அனுபவத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாமே."

"'இவ்வுலகில் பிறந்து கடவுளுக்காகவே வாழ்ந்த புனிதர்கள் இப்போது கடவுளோடு நித்திய பேரின்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்."

''அப்படியானால் நாமும் அவரோடு நித்தியமாக பேரின்ப வாழ்க்கை வாழ்வதற்காகவே நம்மை படைத்தார்.

அதாவது நமது பேரின்ப வாழ்க்கைக்காக நம்மை படைத்தார்."

"'அப்போ நம்மை அவருக்காக படைக்கவில்லையா?" 

"அவருக்காக வாழ்ந்து, அவரோடு 'நாம் வாழ' நம்மை படைத்தார்.

தாத்தா இவ்வுலகில் அவருக்காக வாழப்போவது குறுகிய காலம்தான்.

ஆனால் அவரோடு நாம் பேரின்பத்தில் வாழப்போவது நித்திய காலம்.

இதன் அடிப்படை என்ன?"

"'நீயே சொல்லிவிடு."

"கடவுள் நம் மீது வைத்திருக்கும் நிபந்தனை அற்ற அன்பு தான் இதன் அடிப்படை.

(God's unconditional love for us.)

கடவுள் தன்னிலே நிறைவானவர்.

(By nature God is perfect.)

 நிறைவை அதிக நிறைவாக முடியாது.

(Perfection cannot be made more perfect.)

ஆகவே அவரது நன்மைக்காக நம்மை படைக்கவில்லை.

அவரது தன்னிகரற்ற அன்பின் காரணமாக நமது நன்மைக்காகவே நம்மை அவரது சாயலில் படைத்தார்."

"'அப்படியானால் நம்மை ஏன் அவருக்காக வாழச் சொன்னார்?"

"தாத்தா, கிணறு நிறைய தண்ணீர் இருக்கிறது.

 நமது கையில் ஒரு தம்ளர் இருக்கிறது, அதற்குள் ஒன்றுமே இல்லை.

 ஒன்றுமே இல்லாத தம்ளருக்குள் தண்ணீரைக் கொண்டு வர நாம் என்ன செய்ய வேண்டும்?"

"'நமது வெற்றுத் தம்ளரை கிணற்றுக்குள் முக்கி எடுத்தால் அதற்குள்ளும் தண்ணீர் வந்து விடும்."

"இந்த தத்துவம் தான் நாம் கடவுளுக்காக வாழ வேண்டியதன் தத்துவம்.

நாம் ஒன்றும் இல்லாதவர்கள்.

கடவுள் எல்லாவித நன்மையும் அளவில்லாத விதமாய் கொண்டிருப்பவர்.

அளவற்ற அன்பு, அளவற்ற இரக்கம், அளவற்ற நீதி அளவற்ற வல்லமை .... இப்படியாக எல்லா பண்புகளிலும் அளவற்றவர்.

அன்பு, இரக்கம், நீதி போன்ற அவரது பண்புகளோடு நாமும் வாழ்ந்து

நாம் பெற்றுள்ள அவரது சாயலை பழுதின்றி காப்பாற்ற 
 வேண்டும் என்பதற்காகத்தான்

 நாம் அவருக்காக, அவருக்குள் வாழ வேண்டும் என்று நம்மைக் கடவுள் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்காகத்தான் நாம் இவ்வுலகில்

 கடவுளை அறிய வேண்டும்,

 அவரை நேசிக்க வேண்டும்,

 அவருக்காக வாழ வேண்டும்.

இவ்வுலகில் அவரை மையமாக வைத்து வாழ்ந்தால்

மறுவுலகிலும் அவரை மையமாக வைத்து பேரின்ப வாழ்வு வாழ்வோம்."

"'வெற்றுத் தம்ளருக்குள் தண்ணீர் வர 

அதை முழுமையாக கிணற்றுக்குள் முக்கி எடுப்பது போல,

 நாம் இறைவனோடு நித்தியகாலம் ஒன்றிக்க,

அவர் நம்மோடு பகிர்ந்துள்ள அவரது பண்புகளில் முழுமையாக வாழ 

 இவ்வுலகில் நம்மை முழுவதும் அவருக்குள் முக்கி எடுக்க வேண்டும். 

நாம் அவருக்குள் வாழ்ந்தால்தான் அவரது அன்பு நமக்குள் நிறைய இருக்கும்.

அந்த அன்பு தான் நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

இவ்வுலகில் முழுக்க முழுக்க கடவுளுக்காக வாழ்ந்தால் தான், மறு உலகில் முழுக்க முழுக்க கடவுளோடு வாழ்வோம்.

இவ்வுலகில் முழுக்க முழுக்க நமக்காக, நமது பெருமைக்காக, வாழ்ந்தால் விண்ணுலகில் கிடைக்க வேண்டிய பேரின்பம் கிடைக்காது.

கடவுளை அன்பு செய்ய வேண்டும், அவருக்காக.

நமது அயலானை அன்பு செய்ய வேண்டும், கடவுளுக்காக.

நமது அயலானுக்கு உதவி செய்ய வேண்டும், கடவுளுக்காக.

நாம் நோன்பு இருக்க வேண்டும், கடவுளுக்காக.

நமது தற்பெருமைக்காக நாம் எதையும் செய்யக்கூடாது.


இயேசு சொல்கிறார்,

"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."

நாம் நற்செயல்களைச் செய்ய வேண்டும்.

அவற்றை செய்யும் போது மற்றவர்கள் பார்க்கத்தான் செய்வார்கள்.

மற்றவர்களுக்கு நாம் செய்யும் உதவிகள் தானே நற்செயல்கள்.

ஆனால் அவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நற்செயல்களைச் செய்யக்கூடாது.

நாம் நற்செயல்கள் செய்வதை மற்றவர்கள் பார்க்கும்போது

 யாருக்காக அவற்றை செய்கிறோமோ 

அவரை பற்றி அறிய மற்றவர்கள் ஆசைப்படுவார்கள்.

அதாவது நமது நற்செயல்களில் இயேசு பிரதிபலிக்க வேண்டும்.

நாம் இயேசுவுக்காக வாழும் போது மற்றவர்கள் நம்மை பார்த்து இயேசுவுக்காக வாழ்வார்கள்.

செயலை விட நோக்கம் தான் முக்கியம்.

நோக்கம் தவறாக இருந்தால் செயல் மதிப்பை இழந்து விடும்.

பிறர் நம்மை பாராட்ட வேண்டும் என்பதற்காக நாம் நற்செயல் செய்தால் 

உண்மையில் அது நற்செயல் அல்ல, வெறும் செயல்."

.(தொடரும்)

லூர்து செல்வம்.

சீடர்களின் சந்தேகம்.

சீடர்களின் சந்தேகம்.

இயேசுவின் சீடர்களுக்கு ஒரு சந்தேகம்,

 தங்களுள் யார் பெரியவர்? 

கப்பர்நகூமுக்கும் வீட்டிலிருக்கும்போது இந்த சந்தேகத்தை இயேசு தீர்த்து வைக்கிறார்.

"ஒருவன் முதல்வனாய் இருக்க விரும்பினால் அவன் அனைவரிலும் கடையனாய் இருக்கட்டும், 

அனைவருக்கும் பணியாளன் ஆகட்டும்."

உலகப் பார்வையில்,

ஆள்பவன் உயர்ந்தவன் 

அடிமை தாழ்ந்தவன்.

ஆனால் ஆன்மீகப் பார்வையில் 

"கடைசியாக இருப்பவன் தான் முதல்வனாக கருதப்படுவான்."

பணி செய்பவன் முதலாளியை விட உயர்ந்தவன்.

உலகம் உச்சியில் இருப்பவர்களை பார்த்து பெருமைப்படுகிறது.

ஆனால் கடவுள் தாழ்ந்து இருப்பவர்களை பார்த்தே பெருமைப்படுகிறார்.

தாழ்ச்சிதான் தலையாய புண்ணியங்களுள் முதன்மையானது.

"இதோ ஆண்டவருடைய அடிமை" என்று தன்னைத் தானே தாழ்த்திய அன்னை மரியாள்தான் 

இறுதியில் விண்ணக மண்ணக அரசியாக திரி ஏக தேவனால் முடி சூட்டப்பட்டாள்.

ஆண்டவர் 
ஸ்நாபக அருளப்பரைப் பற்றி குறிப்பிடும்போது,

"நான் உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: 

"பெண்களிடம் பிறந்தவர்களுள் ஸ்நாபக அருளப்பருக்கு மேலான எவரும் தோன்றவில்லை." 

சொன்ன உடனேயே,
"ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவன் அவரினும் பெரியவன்." என்றும் கூறினார்.
(மத்.11: 11)

அன்னை மரியாளும் பெண்ணிலிருந்து பிறந்தவர் தான்.

இயேசுவும் பெண்ணிலிருந்து பிறந்தவர் தான்,

ஆனாலும் இயேசு ஸ்நாபக 
அருளப்பரை அனைவரிலும் உயர்ந்தவராகக் கூறுகிறார்.

(அருளப்பரைப் புகழ்வதற்காக இயேசு மிகைப்படுத்தி கூறிய கூற்று.)

தாழ்ச்சியோடு தன்னை எல்லாரையும் விட மிகச் சிறியவர் என்று எண்ணி வாழ்பவர் 

விண்ணரசில் ஸ்நாபக அருளப்பரைவிட 

பெரியவராக கருதப்படுவார்.

இவ்வாறு உயர்வு நவிற்சியில் இயேசு கூறுவது தாழ்ச்சியின் மகிமையை நமக்கு உணர்த்துவதற்காகத் தான்.

ஆனால் விண்ணரசில் உயர்ந்தவராக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு

இவ்வுலகில் தன்னை சிறியவராக நினைக்க கூடாது.

நோக்கம்  தாழ்ச்சியை அடித்து விடும்.

உண்மையிலேயே நேர்மையுடன் தன்னை மிகச் சிறியவன் என்று கருத வேண்டும்.

அன்னை மரியாள் விண்ணக மண்ணக அரசியாக வேண்டும் என்ற நோக்கத்தோடு தன்னை அடிமை என்று கூறவில்லை.

தன்னை உண்மையிலேயே ஆண்டவருடைய அடிமை என்று கூறினாள்.

சர்வ வல்லமையையும் மகிமையும் உள்ள கடவுள்,

பாவம் தவிர மற்ற எல்லா பலகீனங்களும் உள்ள மனிதனாகப் பிறந்ததே 

தனது போதனையை தானே வாழ்ந்து காட்டி போதிப்பதற்காகத்தான்.

பூங்காவனத்தில் இரத்த வியர்வையின் போது அவர் வெளிப்படுத்திய அச்சம் என்ற பலகீனம்,

அச்சத்தால் நாம் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக,

 அவரே ஏற்றுக் கொண்டது.

பலகீனத்தால் மனிதன் செய்கிற பாவங்களுக்கு

பககீனம் உள்ள மனிதனே பரிகாரம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்,

பாவம் தவிர, மற்ற எல்லா பலகீனங்களும் உள்ள மனிதனாக பிறந்து,

தனது பாடுகளாலும் மரணத்தாலும் மனிதர்களுடைய பாவங்களுக்கு பரிகாரம் செய்தார்.

"தம்மையே வெறுமையாக்கி,

 அடிமையின் தன்மை பூண்டு

 மனிதருக்கு ஒப்பானார். 

மனித உருவில் தோன்றி,

 தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, 

அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்."
(பிலிப்.2:7,8)

நாம் உண்மையான தாட்சியோடு வாழ வேண்டுமென்றால்,

நாம் ஒவ்வொருவரும் நாம் தான் உலகிலேயே சிறியவன் என்று உறுதியாக கருத வேண்டும்.

மற்றவர்களை நம்மை விட சிறியவர்களாக எண்ணக் கூடாது.

ஒரு ஆசிரியர் கூட தனது மாணவர்களை விட தான் சிறியவன் என்று எண்ண வேண்டும்.

மாணவர்களிடமிருந்து ஆசிரியர் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

மாணவர்கள் ஆசிரியருக்கு கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்.

அந்த கீழ்ப்படிதலை ஆசிரியரும் கற்றுக் கொண்டால்தான் அவரால் தலைமை ஆசிரியருக்குக் கீழ்ப்படிந்து நடக்க முடியும்.

நான் 36 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற போது நான் அறிந்த ஒரு பெரிய உண்மை 

என்னிடமிருந்து மாணவர்கள் கற்றதை விட அவர்களிடமிருந்து நான் கற்றதே அதிகம் என்பதுதான்.

தனது 33 ஆண்டு வாழ்நாளில் 30 ஆண்டுகள் அன்னை மரியாளுக்கும் சூசையப்பருக்கும் இயேசு கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

அவரைத் தங்கள் தலைவர் என்று கூறிக் கொள்ளும் அநேகர்

 அவர் ஏற்படுத்திய கத்தோலிக்க திருச்சபைக்கு கீழ்படிய மறுத்ததால்தான் 

இன்று 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரிவினை சபைகள் தலை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  

கத்தோலிக்கர்களாகிய நாம் அனைவரும் நம்மையே திருச்சபையின் கடை நிலை ஊழியர்களாக பணிபுரிவோம். 

அப்போதுதான் இயேசுவுக்கு பிடித்த பிள்ளைகளாக இறை அரசில் என்றென்றும் அவரோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, February 19, 2023

"உன் கை உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டிவிட்டு."(மாற்கு.9:43)

"உன் கை உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டிவிட்டு."
(மாற்கு.9:43)

"'விடுமுறை நாட்களில் tour போகப் போவதாக சொன்னீர்களே, ஏன் போகவில்லை?"

"Tour திட்டத்தைக் கைவிட்டு விட்டோம்."

"'அதுதான் ஏன் என்று கேட்கிறேன்."

"பயணிக்க போவதாக இருந்த இடங்களில் கொரோனா நோய் பரவியிருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதனால் பயண திட்டத்தைக் கைவிட்டு விட்டோம்."

"'அங்கு கொரோனா நோய் பரவியிருப்பதற்கும், பயணத் திட்டத்தைக் கைவிடுவதற்கும்
என்ன சம்பந்தம்?"

"என்ன சார் தெரியாதது மாதிரி கேட்கிறீங்க. அது தொற்று நோய் இல்லையா?

 நம்மைத் தொற்றிக் கொண்டால் என்ன ஆவது?"

"'என்ன ஆகும்?"

"அந்த நோயினால் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற செய்தியை நீங்கள் கேள்விப்பட்டதே இல்லையா?"

"'மோசமான சினிமாக்கள் பார்ப்பதுவும், உங்கள் Smart phone ல் அசிங்கமான காட்சிகளைக் கண்டு ரசிப்பதும்

உங்கள் கண்களையும் கருத்துகளையும் கெடுத்து விடும் என்றும்,

ஆதலால் சிந்தனை, சொல், செயல் சம்பந்தப்பட்ட பாவங்கள் செய்ய நேரிடும் என்றும் 

நீங்கள் ஞானோபதேச வகுப்பில் படித்ததில்லையா?

ஆனாலும் அவற்றையெல்லாம் பார்க்கிறீர்களே, ஏன்?"

"..........."

"'ஏன் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்? 

அவற்றால் உங்கள் உடலுக்கு எந்தவித நோயும் வராது, மரணமும் வராது என்பதால் தானே பார்க்கக்கூடாத காட்சிகளை எல்லாம் பார்த்து ரசிக்கிறீர்கள்.

பாவங்கள் ஆன்மாவைத் தொற்றக்கூடிய நோய்கள் என்றும்,

 அவற்றால் ஆன்மீக மரணம் ஏற்படுகிறது என்றும் உங்களுக்குத் தெரியாதா?"

"தெரியும். ஆனாலும் செலவு இல்லாமல் பாவ சங்கீர்த்தனம் செய்து அவற்றுக்கு மன்னிப்பு பெற்றுக் கொள்ளலாம்.

உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் வந்தால் டாக்டருக்கு நம்முடைய வருமானத்தை முழுவதும்  அள்ளிக் கொடுக்க வேண்டுமே." 

"'செய்த பாவங்களுக்கு மன்னிப்பு பெற 
பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

பாவசங்கீர்த்தனம் இருக்கிறது என்பதற்காக பாவம் செய்யக்கூடாது.

காயங்களை ஆற்ற வீட்டில் மருந்து இருக்கிறது என்பதற்காக யாரும் வேண்டுமென்று கீழே விழுவார்களா?

நமது ஆன்மாவை பாவத்திலிருந்து காத்துக்கொள்ள வேண்டுமென்றால்,

பாவம் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஆழமான, தண்ணீர் வேகமாக ஓடக்கூடிய ஆற்றில் இறங்கி அக்கரைக்கு செல்ல முயன்றால் 

ஆற்றோடு செல்ல நேரிடும் என்று தெரிந்த பின்பும்

 யாராவது ஆற்றில் இறங்குவார்களா?

உலக காரியங்களில் நமக்கு இருக்கும் விவேகம் ஏன் ஆன்மீக காரியங்களில் இல்லை?

இரவில் வெகு நேரம் விழித்தெருந்து விட்டு படுக்கச் சென்றால்,

 மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு நேரத்தோடு போக முடியாது என்பது தெரிந்தும் 

இரவில் வெகு நேரம் தூங்காமல் விழித்திருக்கலாமா?

சீக்கிரம் படுத்து,
சீக்கிரம் தூங்கி,
சீக்கிரம் எழுந்து,
சீக்கிரம் பூசைக்குப் புறப்பட வேண்டும்.

ஆறு மணிக்கு சினிமா என்றால் நான்கு மணிக்கே புறப்படுகின்ற மக்கள்,

எட்டு மணி பூசைக்கு எட்டு மணிக்கு தான் எழுந்திருப்பார்கள்.

திவ்ய நற்கருணை கொடுக்கும்போது வந்துவிட்டு,

ஏதோ சுண்டல் கொடுப்பதை வாங்குவது போல கையில் வாங்கி வாய்க்குள் போட்டுவிட்டு,

ஞாயிறு பூசை கண்ட திருப்தியோடு,
வந்தது போலவே போய்விடுவார்கள்.

ஆன்மீக காரியங்களுக்கு இடைஞ்சலாக இருப்பது எதுவாக இருந்தாலும் அதை விட்டுத் தள்ள வேண்டும்.

வாசிக்கின்ற கதைப் புத்தகம் நமது பரிசுத்தமான எண்ணங்களை கெடுப்பது போல் தெரிந்தால் புத்தகத்தை தூர எறிந்து விட வேண்டும்.

ஆன்மீக காரியங்களில் ஆர்வம் இல்லாதவர்களோடு நட்பு கூடாது.

அவர்களை வெறுக்க கூடாது.

 அவர்களுக்காக வேண்டிக்கொள்ள வேண்டும்.

 ஆனால் நண்பர்களாய் ஏற்றுக் கொண்டால் நம்மையும் ஆன்மீக காரியங்களில் அக்கறை இல்லாதவர்களாக மாற்றி விடுவார்கள்.

அவர்களை மனம் திருப்புவதற்காகத்தான் அவர்களோடு பழகுகிறேன் என்று சொல்பவர்கள் 

தங்கள் ஆன்மீகத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

உண்மையான ஆன்மீகவாதிகள்:

1. பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

2. ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் சந்தர்ப்பங்களைத் தேடி போக வேண்டும்.

3. தங்கள் ஆன்மீகத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

லூர்து செல்வம்.

Friday, February 17, 2023

"உமக்கு ஒன்றும் மோயீசனுக்கு ஒன்றும் எலியாசுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைப்போம்."(மாற்கு.9:5)

"உமக்கு ஒன்றும் மோயீசனுக்கு ஒன்றும் எலியாசுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைப்போம்."
(மாற்கு.9:5)

இயேசு இராயப்பரையும், யாகப்பரையும், அருளப்பரையும்  அழைத்துக் கொண்டு ஒரு மலை மேல் ஏறுகிறார்.

அவர்கள் முன் உருமாறுகிறார்.

அவரோடு மோயீசனும்,
 எலியாசும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இராயப்பர் இயேசுவைப் பார்த்து,

"நாம் இங்கே இருப்பது, 
 எத்துணை நன்று.

 உமக்கு ஒன்றும், மோயீசனுக்கு ஒன்றும், எலியாசுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைப்போம்."

இராயப்பர் நாம் இங்கே இருப்பது நன்று என்கிறார்.

'நாம்' என்றால் எத்தனை பேர்?

ஆறுபேர்.

அமைக்க ஆசைப்படுவது மூன்று கூடாரங்கள்.

ஆண்டவருக்கும், எலியாசுக்கும், 
மோயீசனுக்கும் மட்டும்.

தாங்கள் எங்கே தங்குவது என்பதைப் பற்றி அவர் கவலைப் படவேயில்லை.

இதற்குப் பெயர்தான் 
தன்னலமற்ற அன்பு.

அதிகமான அன்பு சில சமயங்களில் தான் நேசிக்கும் ஆளை பற்றி மட்டுமே கவலைப்படும்,

மற்ற எதைப் பற்றியும் கவலைப்படாது.

ஆண்டவரை இராயப்பர் அதிகம் நேசிக்கிறார். அவருக்கு ஒரு கூடாரம்.

அவரால் நேசிக்கப்படும் மற்ற இருவருக்கும் ஆளுக்கு ஒரு கூடாரம்.

எதைப் பற்றி கவலைப்படவில்லை?

மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் ஆளுக்கொரு கூடாரத்தில் தங்கினால் எப்படி பேசிக் கொண்டிருக்க முடியும்?

மூவரும் ஒரே கூடாரத்தில் தங்கினால் தானே ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருக்க முடியும்!

அதைப் பற்றி கவலைப்பட இராயப்பருக்கு நேரமில்லை.

இராயப்பர் கணக்கில் weak ஆ?
சிந்திப்பதில் weak ஆ?

தெரியவில்லை.

ஆனால் அன்பில் Strong.

அது உறுதியாகத் தெரிகிறது.
அந்த அதிகமான அன்பின் காரணமாகத்தான் தந்தை இறைவன் 

"இவரே என் அன்பார்ந்த மகன், இவருக்குச் செவிசாயுங்கள்"

என்ற தனது செய்தியை அவர்களுக்குக் கொடுக்கிறார்.

கடவுள் நல்ல தந்தை.

தன்னை நேசிக்கின்றவர்களின் 
weak points களை கடவுள் பெரிது படுத்த மாட்டார்,

அன்பை அப்படியே ஏற்றுக்கொண்டு அவர்களை ஆசீர்வதிப்பார்.

நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்திருக்கும் ஒரே கட்டளை "அன்பு செய்."

கடவுள் செய்கின்ற ஒரே வேலை அன்பு செய்வது மட்டும் தான்.

மற்ற வேலைகள் எல்லாம் அன்புக்குள் அடங்குபவை.

நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை அன்பு செய்வது மட்டும் தான்.

நம்மைப் படைத்த இறைவனையும்,

அவரால் படைக்கப்பட்ட மற்ற மனிதர்களையும்

அன்பு செய்ய வேண்டியது மட்டுமே நமது பணி.

புனித அகுஸ்தீனார் சொல்கிறார்:

நேசி, இஷ்டம் போல் செயல்படு.

Love, and do what you like.

அன்பு செய்து கொண்டு நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம்.

"எப்படி வேண்டுமானாலும் வாழலாம்." என்று சொன்னவுடனே 

"பாவம் செய்தும் வாழலாமோ?"

என்று கேட்கத் தோன்றும்.

ஆனால் கடவுளை அன்பு செய்து கொண்டே பாவம் செய்யவும் முடியாதே!

இறையன்பும், பிறர் அன்பும் அனுமதிக்கும் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

இயேசுவின் சீடர்களாகிய நாம் 

அவரது விருப்பப்படி மீட்புப் பெற வேண்டுமென்றால் 

நாம் செய்ய வேண்டியது எல்லாம் 

விசுவசிக்க வேண்டும்,
விசுவாசத்தின் படி வாழ வேண்டும்.

எதை விசுவசிக்க வேண்டும்?

கடவுள் அன்பு நிறைந்த தந்தை என்பதை விசுவசிக்க வேண்டும்.

விசுவசித்தபடி அன்புள்ள தந்தைக்கு ஏற்றபடி வாழ வேண்டும்.

பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு தேவ சாஸ்திரம் படித்த அறிஞர்களாக இருந்தாலும்,

சின்ன குறிப்பிடம் மட்டுமே படித்து அதில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும்,

எதுவுமே படிக்கத் தெரியாமல் பங்கு குருவானவர் வைக்கிற பிரசங்கத்தை மட்டும் கேட்டு அதன்படி வாழக்கூடியவர்களாக இருந்தாலும் 

எல்லோருமே விசுவசிக்க வேண்டும்,

 விசுவசித்தபடி வாழ வேண்டும்.

இயேசு மலை மீது அழைத்துச் சென்ற மூன்று சீடர்களின் குறைகளைப் பற்றி கவலைப்படாமல்,

அவர்களுடைய அன்பை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு தந்தை இறைவன் அவர்களோடு பேசியது போல,

நாம் பலகீனர்களாக இருந்தாலும்,

அறிவிலிகளாக இருந்தாலும்,

எழுதவாசிக்க தெரியாதவர்களாக இருந்தாலும் 

அதையெல்லாம் கடவுள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்.

நமது அன்பை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வார்.

வார்த்தை அலங்காரங்களைப் பயன்படுத்தி மணிக்கணக்காக செய்யும் செபங்களை விட,

"ஆண்டவரே நான் பாவி, என்னை மன்னியும்." 

என்ற ஒரு வாக்கிய செபத்துக்கு சக்தி அதிகம்.

விசுவாசத்தோடும் அன்போடும் வாழும் நமக்கு இறைவன் நித்திய பேரின்ப வாழ்வைத் தருவார் என உறுதியாக நம்ப வேண்டும்.

அவரை அன்பு செய்யும் நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து ஆன்மீக வாழ்வில் நம்மை விண்ணகம் நோக்கி நம் இறைவன் நடத்திச் செல்வார் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.

விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் அன்போடும் வாழ வேண்டும் என்பது 

திருச்சபையின் தலைவர் பாப்பரசர் முதல்,

அடிமட்ட கிறிஸ்தவன் வரை அனைவருக்கும் பொதுவானது.

ஆகவே நாம் அதிகம் படிக்காதவர்கள்,

பலகீனமானவர்கள்,

பைபிள் வசனங்கள் நமக்கு புரியவில்லை

என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.

மொத்த பைபிளும் ஒரே வசனத்தில் அடங்கும்.

"அன்பு செய்யுங்கள்."

எதைச் செய்தாலும் அன்பினால் ஏவப்பட்டு செய்வோம்.

நமது அன்பு அன்பு மயமான கடவுளோடு நம்மை என்றென்றும் ஐக்கியப்படுத்தும்.

அன்பு அன்போடு இணையும்.

அதுவே நிலை வாழ்வு.

லூர்து செல்வம்.

Thursday, February 16, 2023

தாலாட்டு படுத்தும் பாடு.

தாலாட்டு படுத்தும் பாடு.

எல்லோருமே ஒரு காலத்தில தொட்டிலில் படுத்திருந்தவர்கள்தான்.

தொட்டிலில் படுத்து அழும்போது நம்மைத் தூங்க வைப்பதற்காக அம்மா பாடிய பாட்டு ஞாபகத்தில் இருக்கிறதா?

உண்மையில் பாட்டைக் கேட்டு இரசிக்க வேண்டும் என்பதற்காக அம்மா பாடவில்லை, நம்மைத் தூங்க வைப்பதற்காகத்தான் பாடினார்கள்.

"ஆராரோ,

யார் இவரோ?

யார் ஆவாரோ?

ஆராரோ."

இது தாலாட்டு பாடலில் பல்லவி.

தாயின் திறமையைப் பொறுத்தும்,

 குழந்தை தூங்க ஆரம்பிப்பதைப் பொறுத்தும் சரணங்கள் தொடரும்.

பாடலின் பொருளைப் பற்றி தாயும் கவலைப்படுவதில்லை,

 தொட்டில் குழந்தையும் கவலைப்படுவதில்லை.

தாலாட்டு பாடும் போது குழந்தை தூங்க வேண்டும் என்பது மட்டுமே தாயின் கவலை.

தமிழில் ஒரு பழமொழி உண்டு,

"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்."

தொட்டிலில் ஏற்படுகின்ற பழக்கம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

வகுப்பில் ஆசிரியர் பாடம் போதித்து கொண்டிருக்கும் போது மாணவன் தூங்குவதும்,

கோவிலில் சுவாமியார் பிரசங்கம் வைக்கும் போது பக்தர்கள் தூங்குவதும்

தொட்டிலில் ஏற்பட்ட பழக்கம்தான்.

குழந்தை தூங்க வேண்டும் என்பதற்காக தாய் பாடுகிறாள்.

ஆனால் மாணவன் தூங்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர் போதிக்கவில்லை.

பிரசங்கத்தின் போது பக்கர்கள் தூங்க வேண்டும் என்பதற்காக சுவாமியார் போதிக்கவில்லை.

அப்படியானால் தொட்டில் பழக்கம் மோசமானதா?

தாய் செய்தது தப்பா?

இல்லவே இல்லை.

நல்ல பொருளைத் தவறாகப் பயன்படுத்துவதால் பொருள் கெட்டதாக மாறிவிடாது.

தாலாட்டு பாடலின் பல்லவியில் வரும் இரண்டு கேள்விகளுக்கு தாய் சரணங்களில் விடை கொடுத்துப் பாட வேண்டும்.

குழந்தை அதை கேட்டுக் கொண்டே தூங்க வேண்டும்.

"யார் இவரோ?

யார் ஆவாரோ?"

"தொட்டிலில் படுத்திருக்கும் இவர் யாரோ?

 இவர் யாராக மாறுவாரோ?"

தொட்டிலில் படுத்திருப்பது தனது குழந்தை என்று தாய்க்குத் தெரியும்.

ஆனாலும் அந்த கேள்வியைக் குழந்தையின் காதில் போடுகிறாள்.

குழந்தை யாராக மாற வேண்டும் என்ற ஆசையும் தாயிடம் இருக்கும்.

இரண்டு கேள்விகளுக்குமான பதிலைத் தாய் சரணங்களில் போட வேண்டும்.

போடுகிறார்களா என்பது கேள்விக்குறி.

"குழந்தாய் நீ என் வயிற்றில் பிறந்ததால் என் குழந்தை தான்.

ஆனால் பிறக்கு முன்பே நீ கடவுளால் படைக்கப்பட்டதால் உண்மையில் நீ கடவுளின் குழந்தை. (யார் இவரோ?)

விண்ணகத்தில் வாழும் இறைவனே உனது தந்தை.

நீ தந்தை இறைவனின் மகனாகிய இயேசுவைப்போல் மாற வேண்டும்.

என் வயிற்றில் பிறந்தாலும் நீ இயேசுவாக வளர வேண்டும்."
(யார் ஆவாரோ?)

இந்த தாயின் ஆசை சரணங்களில் இருந்தால் அது குழந்தையின் காதுகளில் விழுந்து கருத்துக்குள் செல்லும்.

அதை நினைத்துக் கொண்டே குழந்தை தூங்கும்.

குழந்தை வளரும்போது

 நான் யார்?

 நான் யாராக மாற வேண்டும்? என்ற கேள்விகளுடனும்

 அவற்றுக்கான பதில்களுடனும் வளரும்.

அப்படி வளர்ந்தால்

ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்தும் போதும்,

கோவிலில் சுவாமியார் பிரசங்கம் வைக்கும் போதும் தூங்காது.

தொட்டில் பழக்கத்தை ஆரம்பித்து வைக்கும் தாய்மார் இதை நினைவில் கொள்ள வேண்டும்.

*             *        *           *               *

"தாத்தா, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"

"'என்ன செய்து கொண்டிருப்பது போல் தெரிகிறது?"

"ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. என்ன சிந்தனை என்று தெரியவில்லை.''

"'எல்லோரும் ஏதாவது சிந்தித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

யாராலும் சிந்திக்காமல் இருக்க முடியாது."

"தூங்குபவர்கள்?"

"'நீ தூங்கும்போது கனவுகளே கண்டதில்லையா?"

"கனவுகள் வந்தால்தான் நான் தூங்குவதாக அர்த்தம். 

இரவில் தூங்க வேண்டிய நேரத்தில் தூக்கம் வராவிட்டால் தூங்குவதற்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்."

"'தந்தை, மகன், தூய ஆவியின் பெயராக ஆமென் என்று சொல்லிவிட்டு,

ஒரு செபமாலை சொல்ல ஆரம்பி.

முதல் 10 மணிகள் சொல்லி முடிப்பதற்குள் தூங்க ஆரம்பித்து விடுவாய்"

"செபம் சொல்லும் போது தூங்குவது தப்பில்லையா?"

"'நான் உன்னை செபம் சொல்லும் போது தூங்கச் சொல்லவில்லை.

தூங்கும்போது தான் செபம் சொல்லச் சொன்னேன்.

எப்போது வேண்டுமென்றாலும் தூங்க முடியாது.

ஆனால் எப்போது வேண்டுமென்றாலும் செபம் சொல்லலாம்.

 செபமாலைதான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இறைவனைப் பற்றியாவது, புனிதர்களைப் பற்றியாவது உனக்கு தெரிந்ததைத் தியானித்துக் கொண்டிருந்தாலே போதும்.

அப்படியும் தூக்கம் வராவிட்டால் கவலைப்பட வேண்டாம்.

நமது செபத்தினால் ஏராளமான ஆன்மீகப் பலன்கள் கிடைக்கும்." 

"திருப்பலியின் போது பிரசங்க நேரத்தில் தூங்காமல் இருக்க என்ன செய்யலாம்?"

'"காதுக்கு கொடுக்கும் வேலையை விட கண்ணுக்கு அதிக வேலை கொடு.

திவ்ய நற்கருணை பேழையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இரு.

ஆண்டவரும் தெரிவார், பிரசங்கமும் காதில் விழும்."

"சுவாமியார் பிரசங்கம் வைக்கும் போது எனது அம்மா தாலாட்டுப் பாடுவது போல் இருக்கிறது.

முதல் கால் மணி நேரத்துக்கு தூக்கம் வராது. அதற்குப் பிறகுதான் பிரச்சனை."

"'அதனால்தான் சில குருக்கள் சொல்ல வேண்டிய செய்தியை கால் மணி நேரத்துக்குள் முடித்து விடுகிறார்கள்.

உனது அம்மா தாலாட்டு பாடும் போது என்ன சொல்லி பாடினார்கள் என்று ஞாபகத்தில் இருக்கிறதா?"

"குழந்தைக்கு அம்மாவின் முகம் தெரியும், குரல் கேட்கும். வார்த்தைகள் எப்படி, தாத்தா, தெரியும்?

அம்மாவின் நோக்கம் குழந்தையை தூங்க வைப்பது. நானும் தூங்கியிருப்பேன்.

மற்ற எதுவும்  ஞாபகத்தில் இல்லை."

"'ஆனாலும் நீ அறியாமலேயே அம்மாவின் வார்த்தைகள் உனது காது வழியே உள்ளே சென்று உனது மூளையில் பதிவாகி இருக்கும்.

நீ அறியாமலேயே உன்னை வழி நடத்தியிருக்கும்.

திருப்பலி நிறைவேற்றும் குருவின் பிரசங்கமும் அப்படித்தான்.

அவர் முன்னால் அமர்ந்திருக்கும் அத்தனை பேர்களுடைய காதுகளிலும் நுழைந்திருக்கும்.

அனைவருக்கும் பலன் தரும்.

பலனின் அளவு அவர்களுடைய கவனிப்பை பொறுத்து கூட குறைய இருக்கலாம்.

மனித பலகீனத்தின் காரணமாக பக்தர்கள் தூங்கியிருக்கலாம்.

நம்மைப் பற்றி நமக்குத் தெரிவதை விட கடவுளுக்கு அதிகம் தெரியும்.

நமது மனதில் ஆசை இருந்தால் கடவுள் நமது பலகீனத்தை மன்னிப்பார்.

கடவுளுக்காக எதைச் செய்தாலும் நல்ல மனதுடன் செய்வோம்.

நாம் பலகீனர்கள் என்பது அவருக்கு தெரியும்.

நமது நல்ல மனதை பார்த்து,

நமது பலகீனத்தைச் சரி செய்து,

நம்மை ஏற்றுக் கொள்வார்.

நல்ல மனதுடன் செயல்பட்டால் இறைவனது சமாதானம் நமக்கு கட்டாயம் கிடைக்கும்."

லூர்து செல்வம்.

Wednesday, February 15, 2023

"ஒருவன் தன் ஆன்மாவிற்குக் கேடு விளைவித்து, உலகமெல்லாம் தனதாக்கிக்கொள்வதனால் அவனுக்கு வரும் பயனென்ன?"(மாற்கு. 8:36)

."ஒருவன் தன் ஆன்மாவிற்குக் கேடு விளைவித்து, உலகமெல்லாம் தனதாக்கிக்கொள்வதனால் அவனுக்கு வரும் பயனென்ன?"
(மாற்கு. 8:36) 

"தாத்தா, இதோ இதை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்."

"'என்ன அது?"

"எனது நண்பன் எனக்கு எழுதிய கடிதம்."

"'உனக்கு வந்த  கடிதத்தை நான் ஏன் வாசிக்க வேண்டும்?"

"முதலில் வாசியுங்கள், அப்புறம் சொல்லுகிறேன்."

"அன்புள்ள நண்பனுக்கு,

நான் இங்கு நலம். நீ எப்படி இருக்கிறாய்? எனக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல். இன்னும் சரியாகவில்லை."

இப்போது புரிகிறது. ஏன் வாசிக்க சொன்னாய் என்று."

"இப்படித்தான் முன்னுக்குப் பின் முரணாக எழுதுவதும் பேசுவதும் நமக்கு பழக்கம் ஆகிவிட்டது.

ஒரு கூட்டத்தில் பேசுவதற்கு ஒருவருடைய  கையில் மைக்கைக் கொடுத்து விட்டால்,

"அன்பார்ந்த பெரியோர்களே," என்று ஆரம்பிப்பார்.

ஆனால் உண்மையில் அங்கு உள்ளவர்களில் யாரையும் அவருக்குத் தெரியாது.

தெரியாத ஆள் மீது எப்படி அன்பு இருக்கும்?"

"'இப்போது உன்னிடம் ஒரு உண்மையை சொல்லட்டுமா?

நமது நாட்டில் உள்ளவர்களில் யாருமே நலமாக இல்லை."

"எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?

நான் நலமாகத் தானே இருக்கிறேன். 

என் உடலில் எந்த பிரச்சனையும் இல்லையே?"

"'உடலில் எந்த பிரச்சனையும் இல்லை. ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் உனது ஆன்மாவில் ஒரு சிறு குற்றம் குறை கூட இல்லையா?"

"பாவம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். குற்றம் குறைகள் இல்லை என்று கூற முடியாது."

""குற்றம் குறைகள் இருந்தால் நலம் இல்லை என்று தானே அர்த்தம்."

"அதெப்படி? கொலை, களவு போன்ற பெரிய பாவங்கள் செய்திருந்தால் நலமில்லை என்று சொல்லலாம்.

சிறு குறைகள் இருந்தாலும் நலமென்று சொல்லக்கூடாதா?"

"'பேரப்புள்ள, பெரிய பாவங்கள் செய்திருந்தால் ஆன்மா. இறந்து விட்டது என்று அர்த்தம்."

"என்ன சொன்னீங்க? இறந்து விட்டது என்று அர்த்தமா?

கொலை, களவு செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள்  உலகில்  உயிரோடு உலவிக் கொண்டுதானே இருக்கிறார்கள்."

"'அவர்கள் உலவிக் கொண்டிருக்கலாம், ஆனால் உயிர் இல்லாத ஆன்மாக்களோடு."

"நீங்கள் சொல்வது புரியவில்லை. செத்தவர்கள் எப்படி உலவ முடியும்?"

'"நான் அவர்களுடைய ஆன்மாக்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு ஆன்மா உயிரோடு இருக்க வேண்டுமென்றால் அதில் தேவ இஷ்ட பிரசாதம் (Sanctifying grace,) என்ற அருள் வரம் இருக்க வேண்டும். அதுதான் ஆன்மாவின் உயிர்.

சாவான பாவம் இல்லாத ஆன்மாவில் மட்டுமே அந்த அருள் இருக்கும்.

சாவான பாவம் செய்த   வினாடியே ஆன்மாவின் உயிர் போய்விடும்.

பாவசங்கீர்த்தனத்தின் மூலம் பாவ மன்னிப்புப் பெற்றால் இழந்த தேவ இஸ்டப் பிரசாதம் திரும்பவும் கிடைக்கும். இறந்த ஆன்மா உயிர் பெறும்.

ஆனால் இறந்த ஆன்மாவோடு ஒருவன் மரணம் அடைய நேரிட்டால் அந்த ஆன்மா நித்திய காலமும் நரக வாழ்வு வாழ வேண்டியிருக்கும்."

"அதாவது, களவு செய்வதன் மூலம் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்துக் கொண்டு

 பெரிய மனிதர்கள் என்று பெயரோடு வாழ்பவர்கள் எல்லாம் 

உண்மையில் ஆன்மீக ரீதியாக இறந்தவர்கள் என்று சொல்கிறீர்கள்."

"'Exactly. பெரிய பெரிய பாவங்கள் செய்து ஆன்மாவை சாகடித்து 

அதன் மூலம் உலகம் முழுவதையும் தங்களுக்கு உரிமை ஆக்கிக் கொண்டாலும்

 அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. "

"அதாவது 
உலகில் பெரியவர்கள்.
கடவுள் முன் பிணங்கள். "

"'சரியாகச் சொன்னாய்.

ஒருவன் 12 ஆண்டுகள் பள்ளிக் கூடத்தில் படித்துவிட்டு +2 தேர்வில் 0% மதிப்பெண் வாங்கினால், அவன்  அத்தனை ஆண்டுகள் படித்து அவனுக்கு என்ன பயன்?

ஆன்மாவைச் சாகடிப்பதின் மூலம் உலகத்தின் தலைவர்களாக மாறினால் அவர்களுக்கு அதனால் என்ன பயன்?

நித்தியத்திற்கும் நிலைவாழ்வை இழப்பது மட்டுமே  பாவ வாழ்வின் விளைவாக இருக்கும்

சாவான பாவத்தால் இறந்து போன ஆன்மாவோடு நூறு ஆண்டுகள் வாழ்பவனை விட,

பாவம் இல்லாத ஆன்மாவோடு நூறு நாட்கள் மட்டுமே உலகில் வாழ்பவன் பாக்கியசாலி.

ஒருவன் எத்தனை ஆண்டுகள், எத்தனை பதவிகளோடு உலகில் வாழ்ந்தான் என்பது 

அவனது நித்திய வாழ்வை தீர்மானிக்காது.

அவன்  மரணம் அடையும் போது அவனது ஆன்மா என்ன நிலையில் இருந்தது என்பதே அவனது நித்திய வாழ்வைத் தீர்மானிக்கும்.

பணம் சம்பாதித்து வாழ்வதைவிட பாவம் இல்லாமல் வாழ்வதுதான் முக்கியம்."

"பாவமே செய்யாமல் நமது ஆன்மாவை காப்பாற்றுவது எப்படி தாத்தா?"

"'அது மிக எளிது.

கடவுள் நமது ஆன்மாவை தனது சாயலில் படைத்தார்.

கடவுளைப் போலவே நம்முடைய ஆன்மாவும் ஒரு ஆவி.

கடவுள் தனது எல்லா பண்புகளிலும் அளவில்லாதவர்.

அவரால் ஒரே நேரத்தில் தன்னுடைய அனைத்து படைப்புகளிடனும் தொடர்பில் இருக்க முடியும்.

உலகில் உள்ள அத்தனை மனிதர்களோடும் ஒரே நேரத்தில் தனித்தனியாக கடவுளால் பேச முடியும்.

அவர் ஆவியாகையால் இடத்துக்கும் நேரத்துக்கும் கட்டுப்பட்டவர் அல்ல.

நமது உடல் சடப் பொருள். அதனால் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் தான் இருக்க முடியும்.

அமெரிக்காவில் இருக்கும் உடல் அதே நேரத்தில் இந்தியாவில் இருக்க முடியாது.

கடவுள் இடத்துக்கும் நேரத்துக்கும் கட்டுப்படாத தனது பண்பை அவரைப் போல் ஆவியாக உள்ள நம் ஆன்மாவுடனும்  பகிர்ந்து கொண்டுள்ளார்.

விண்ணகத்தில் உள்ள அவரோடு மண்ணகத்தில் வாழும் நமது ஆன்மா எப்போதும் ஐக்கியமாக இருக்க முடியும்.

கடவுளோடு ஐக்கியமாக இருப்பதைத்தான் செபம் என்கின்றோம்.

Prayer is union with God.

சகல புனிதர்களும் விண்ணகத்தில் தான்  வாழ்கின்றார்கள்.

அவர்களும் நேரத்துக்கும் இடத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.

''விண்ணகத்தில் வாழும் சகல புனிதர்களே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்"

என்று வேண்டும்போது அனைத்துப் புனிதர்களுக்கும் நமது வேண்டுதல் வேண்டும் போதே சென்று சேரும்.

"அருள் நிறை மரியே வாழ்க"

 என்று அன்னை மரியாளை வாழ்த்தும்போதே நமது வாழ்த்துக்கள் வாழ்த்தும் போதே அவளிடம் சென்று சேரும்.

அவ்வாறே ஒவ்வொரு புனிதரிடமும் நாம் நினைக்கும் போதெல்லாம் தொடர்பு கொள்ளலாம். 

எந்த புனிதரை நாம் நினைத்தாலும்

 அவர் நாம் நினைக்கும் போது நம்மோடு இருப்பார்.

நமது ஆன்மா எப்போதும் இறைவனோடு ஐக்கியமாக இருந்தால்

பாவ சோதனைகளால் நம்மை வெல்ல முடியாது.

இறைவனோடு ஐக்கியமாக இருக்கும் நம்மை சாத்தானால் நெருங்க முடியாது.

நமது ஆன்மா இறைவனையும் புனிதர்களையும் நினைத்துக் கொண்டிருப்பது ஒன்றே 

பாவம் செய்யாதிருக்க மிக எளிதான வழி."

"தாத்தா, நான் அன்னை மரியாளிடம் வேண்டும்போது

 நீங்களும் வேண்டினால் நமது இருவர் வேண்டுதையும்

 மரியாள் கேட்பாளா?"

"'நாம் இருவர் மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை கோடி மக்களும் ஒரே நேரத்தில் வேண்டினாலும்

 அத்தனை பேருடைய வேண்டுதல்களையும் அன்னையால் கேட்க முடியும்."


"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நாம் பூமியில் வாழும்போதே விண்ணகத்திலும் வாழலாம் போலிருக்கிறது."
 
"' இறைவன் நம்மோடு வாழ்கிறார் என்று 
விசுவசிக்கிறாயா?''

"விசுவசிக்கிறேன்.''

"'இறைவன் நம்மோடு வாழ்ந்தால் நாமும் அவரோடு தானே வாழ்கிறோம்."

"ஆமா. அப்படியானால் நாம் பூமியில் வாழும்போதே

 விண்ணக  வாழ்வையும் ருசித்துப் பார்க்கிறோம்,

செபிக்கும்போது "

"'When we pray we have a pretaste of heaven.

நமது வாழ்க்கையே செபமாக இருந்தால்!"

"வாழ்க்கையே செபமாக இருந்தால் நாம் விண்ணக வாழ்க்கையை பூமியிலேயே ஆரம்பித்து விட்டோம் என்று அர்த்தம்.

"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் 

நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்:"
(அரு.17:21)

இயேசு தந்தையிடம் வேண்டியது போல நாம் தந்தையுடனும் இயேசுவுடனும் ஒன்றித்திருப்போம்.

ஒன்றித்திரிந்தால்  நமது நாட்டம் எல்லாம் விண்ணகத்திலேயே இருக்கும்.

உலகைப் பற்றி கவலைப்பட மாட்டோம்.

உலக நாட்டம் இல்லாதவர்களை பாவம் நெருங்காது."

லூர்து செல்வம்

Monday, February 13, 2023

இயற்கை நிகழ்வுகள், கடவுள், நாம். (தொடர்ச்சி)

இயற்கை நிகழ்வுகள், கடவுள், நாம். (தொடர்ச்சி)

"அனேக இயற்கை நிகழ்வுகளுக்கு மனிதன்தான் காரணம் என்று சொல்கிறீர்கள்.

மனிதன்தான் காரணம் என்பது உண்மையானால் அவை இயற்கை நிகழ்வுகள் இல்லையே!" 

"'Global warming பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?"

"கேள்விப்பட்டிருக்கிறேன். மனிதனுடைய செயல்பாடுகளின் காரணமாக பூமியின் வளி மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் வெப்பநிலை மாற்றத்தை தான் Global warming என்கிறோம்."

"'இமயமலையில் உள்ள 
பனிக்கட்டி உருகி அதன் விளைவாக வட இந்தியாவில் மூன்று வற்றாத ஜீவ நதிகள் பாய்வது இயற்கை நிகழ்வு.

மனிதனுடைய செயல்பாடுகளின் காரணமாக ஏற்பற்றுள்ள Global warming காரணமாக

பனிக்கட்டி உருகுவதின் அளவு அதிகரித்திருக்கிறது என்பது உனக்குத் தெரியுமா?"

"தெரியும்."

"'அதிகமாக உருகும் நீர் ஆறுகளின் வழியாக கடலை சென்று அடைகிறது என்பது உனக்குத் தெரியுமா?"

"தெரியும்."

"'இதனால் கடல் நீர்மட்டம் உயர்ந்திருப்பது என்பது உனக்குத் தெரியுமா?"

"தெரியும்."

"'நீர்மட்ட உயர்வினால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடலை அடுத்துள்ள நிலப்பகுதிகள் கடலுக்குள் சென்றுவிட்டது உனக்குத் தெரியுமா?"

"தெரியும்."

"'கடல் அரிப்பு என்ன நிகழ்வு?"

"இயற்கை நிகழ்வு."

"'மனிதன் படைக்கப்படுவதற்கு முன்னால் ஏற்பட்ட கடல் அரிப்பு இயற்கை நிகழ்வாக இருந்திருக்கலாம்.

ஆனால் மனிதனின் செயல்பாடுகள் காரணமாக ஏற்பட்டிருக்கும் நிலஅரிப்பை எப்படி இயற்கை நிகழ்வு என்று சொல்லலாம்?

மனிதன் காரணமாய் இருந்துவிட்டு தான் செய்த தவற்றின் பழியை இயற்கை மீது போட்டிருக்கிறான்."

"தாத்தா, மனிதன் வாழ்வதற்காக தானே கடவுள் இயற்கையைப் படைத்தார்.

இயற்கையைப் பயன்படுத்தாமல் எப்படி மனிதன் வாழ முடியும்?

மனிதனின் இன்றைய நாகரிகத்துக்குத் தொழில் புரட்சி தான் காரணம்.

தொழில் புரட்சிக்காக அவன் கண்டு பிடித்து பயன்படுத்திய கருவிகள் தான் வளி மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் வெப்பநிலை மாறுபாட்டுக்கு காரணம்.

மனிதன் நாகரீகமாக வாழ ஆசைப்படாமல் இருந்திருந்தால்,

Global warming ஏற்பட்டிருக்காது.

நாகரீகம் ஏற்படாது இருந்திருந்தால் நாம் இப்போது காடுகளில்தான் வாழ்ந்து கொண்டிருப்போம்.

இயற்கையைப் பயன்படுத்தாமல் எப்படி நாகரிகமாக வாழ முடியும்?"

"'இயற்கையை பயன்படுத்துவது
(use) சரி.

தவறாக உபயோகிப்பது (Misuse) தவறு.

அணு (Atom) ஒரு இயற்கைப் பொருள்.

ஆனால் மனிதன் அதை யுத்தத்திற்கு உதவக்கூடிய அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தியதால் 

உலகில் எத்தனை போர்கள் ஏற்பட்டிருக்கின்றன?

போர்களின்போது மனிதன் பயன்படுத்திய அத்தனை அழிவு கருவிகளும் வளிமண்டல வெப்பநிலை மாற்றத்திற்கு காரணம் என்பது உனக்குத் தெரியாதா?"

"தாத்தா, நான் கேட்டது ஆன்மீகம் சார்ந்த கேள்வி.

நீங்கள் அறிவியல் சார்ந்த பாடத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்."

"'நமது உடல் எப்படி ஆன்மாவை சாகடிக்கும் பாவத்திற்குக் காரணமாக இருக்கிறதோ, 

அதே போல் தான் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளும் மனித குல அழிவுக்கு காரணமாக இருக்கின்றன.

நிலநடுக்கங்களுக்குக்கூட 
மனிதனின் தொழில் புரட்சிக்கு உதவிய 
நிலக்கரி, 
பெட்ரோலியம்,
 தங்கம்,
வைரம்
போன்ற பொருட்களை பூமிற்குள் இருந்து எடுக்க மனிதன் தோன்டிய சுரங்கங்கள் தான் காரணம் என்று நீ படிக்கவில்லையா?"

"நிலநடுக்கங்களுக்கு காரணம் மனிதனா?"

"'இருக்க வாய்ப்பு இருக்கிறது.

பூமிக்குள் இருக்கும் இயற்கை வளங்களை மனிதன் வெளியே கொண்டு வருவதற்காக

 பூமிக்குள் துளையிட்டாலோ,
சுரங்கங்கள் தோண்டினாலோ 

அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நோக்கி நில உட்பகுதி நகரும் என்று படித்திருக்கிறாயா?"

"ஆம்."

"'பூமிக்கு அடியில் நகர்வுகள் ஏற்பட்டால் மேற்பகுதியில் என்ன நடக்கும்?''

"நாம் உட்கார்ந்து இருக்கும் இடத்திற்கு அடியில் தோண்டினால் என்ன நடக்குமோ அது நடக்கும்.

மேலே உள்ள நிலப்பகுதி கீழ் நோக்கி நகரும்."

'''மேலே உள்ள நிலப்பகுதி கீழ் நோக்கி நகர்ந்தால் மேலே உள்ள கட்டடங்கள் என்ன செய்யும்?"

"அவையும் கீழ்நோக்கி செல்லும்.

அப்படியானால் நிலநடுக்கங்களுக்கு மனிதன் தான் காரணம் என்கிறீர்களா?"

"'கடவுள் மனிதன்
 சுரங்கங்கள் தோண்ட வேண்டும் என்று கட்டளை கொடுக்கவில்லையே."

''ஆனால் பூமிக்கு அடியில் பெட்ரோலியம்,நிலக்கரி போன்ற வளங்கள் இருப்பதற்கு காரணம் கடவுள்தானே!"

"'உனது உடலுக்கு உறுப்புகளைக் கொடுத்திருப்பது கடவுள்தான்.

பசித்தால் அவற்றை வெட்டி கறி வைத்துச் சாப்பிடுவாயா?

இயற்கைக்கு எந்தவித பங்கமும் ஏற்படாமல் பூமியின் மேல் உள்ள இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி மனிதன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

பூமியைத் தோண்டி தான் வாழ்வேன் என்று நினைத்தால் அதன் விளைவை அனுபவிக்க வேண்டும்.

மனிதன் செய்யும் காரியங்களின் விளைவை மனிதனே அனுபவிக்கிறான்.

மரம் வெட்டும் ஒருவன் உச்சி மரத்தில் இருந்து கொண்டு அடிமரத்தை வெட்டினால்

 அவன் கீழே விழுவது உறுதி.

 அதற்கு காரணம் அவனே தான்."

"தயவு செய்து ஆன்மீகத்திற்கு நேரடியாக வாருங்கள்."

'''உண்ணும் உணவை வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட பணத்தைக் கொண்டு,

எவ்வாறு மதுபானம் வாங்கி குடிப்பது தவறோ,

அவ்வாறே,

இறைவனது சேவையில் பயன்படுத்த வேண்டிய இயற்கைப் பொருள்களை

  மனித குல அழிவுக்காக மனிதனே பயன்படுத்துவது தவறு.

 கடவுள் படைத்த இயற்கை விதிகளை,

 அறிவியல் மூலமாக மனிதன் கண்டுபிடித்து

 அவற்றைத் தனது அழிவுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.

இதை மனிதன் தனது பரிபூரண சுதந்திரத்தைப் பயன்படுத்தி செய்து கொண்டிருப்பதால்

மனித சுதந்திரத்தில் தலையிட விரும்பாத கடவுள் அதை அனுமதிக்கிறார்."


"ஆக இயற்கை நிகழ்வுகள் மனிதனை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்கிறீர்கள், அப்படித்தானே?"

"'இயற்கையின் எந்த நிகழ்வும் ஆன்மீக ரீதியாக எதிர்மறையில் மனிதனைப் பாதிக்காது.

நாம் கடவுளின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கிறோம்.

கடவுள் எங்கும் இருக்கிறார்.

விண்ணிலும் இருக்கிறார் மண்ணிலும் இருக்கிறார்.

நாம் மண்ணில் வாழ்ந்தாலும்,

 விண்ணில் வாழ்ந்தாலும்

 இறைவனின் கரங்களில் தான் வாழ்கிறோம்.

நாம் விசுவசிக்கிறபடி நாம் கடவுளின் கரங்களில் வாழும்போது

இயற்கை நிகழ்வுகளால் நம்மை கடவுளை விட்டு பிரிக்க முடியாது.

இயற்கை நிகழ்வுகள் நம்மை நாம் வாழும் உலகத்திலிருந்து பிரிக்கலாம், ஆனால் கடவுளை விட்டு பிரிக்க முடியாது.

விசுவாசக் கண் கொண்டு பார்த்தால் நடப்பதெல்லாம் நமது நன்மைக்கே."

"இப்போது புரிகிறது. மனிதன் இயற்கையைப் பயன்படுத்தி வாழ வேண்டும்.

அழித்து வாழ ஆசைப்பட்டால் தானும் அழிய நேரிடும்.

இயற்கை நிகழ்வுகளால் நமது ஆன்மீகத்துக்கு எந்தவித ஆபத்தும் இல்லை."

லூர்து செல்வம்.

இயற்கை நிகழ்வுகள், கடவுள், நாம்.

இயற்கை நிகழ்வுகள், கடவுள், நாம்.

"தாத்தா, ஒரு கேள்வி கேட்பேன், கோபப்படாமல் பதில் சொல்ல வேண்டும்."

""நீ சொல்வதைப் பார்த்தால் கேட்கக்கூடாத கேள்வியை கேட்கப் போகிறாய் போல் தெரிகிறது.''

"கேட்கக்கூடாத கேள்வியா, கேட்கக் கூடிய கேள்வியா என்பது நான் கேட்ட பின்புதான் தெரியும்."

"" சரி, கேள்"

"கடவுளின் அன்பைப் பற்றி தாய்த்திருச்சபை என்ன சொல்கிறது?"

"'கடவுள் அன்பு மயமானவர் என்று கூறுகிறது.
God's very being is love.

God is love."

"கடவுள் தானே உலகையும் அதில் வாழும் நம்மையும் படைத்தார்?" 

"'அதில் என்ன சந்தேகம்?" 

"சந்தேகம் ஒன்றும் இல்லை.

ஆனால் சில விஷயங்கள் புரியவில்லை."

"'சில விஷயங்கள் என்றால்?" 

"படைத்தவர் தானே தனது படைப்புகளைப் பராமரிக்க வேண்டும்."

"'ஆமா. நம்மை படைத்த கடவுள் தான் நம்மைப் பராமரித்துக் கொண்டிருக்கிறார்."

"இயற்கையைப் படைத்த கடவுள் தானே இயற்கை விதிகளையும் படைத்திருப்பார்?"

"'அவர்தான் படைத்தார். அதில் உனக்கு என்ன சந்தேகம்?"

"சந்தேகம் எதுவும் இல்லை.

ஆனால் சில விஷயங்கள் புரியவில்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்."

"'புரியாதவற்றை நேரடியாக கேட்க வேண்டியது தானே. 
எதற்கு இத்தனை கேள்விகள்?"

"சரி, நேரடியாகவே கேட்கிறேன்.

அவர் படைத்த இயற்கையின் சில நிகழ்வுகள் அவர் படைத்த மனிதனைப் பாதித்துக் கொண்டிருக்கிறன.

அதை ஏன் அனுமதிக்கிறார்?"

"'என்ன நிகழ்வுகள்?"

"'சுனாமி, வெள்ளம், கடலால் ஏற்படும் நில அரிப்பு, நில நடுக்கம் போன்றவை."

"'இயற்கை நிகழ்வுகள் மனிதனை எப்படிப் பாதிக்கின்றன?"

''சுனாமியால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தது பாதிப்பு இல்லையா?

துருக்கியில் நடந்த நிலநடுக்கத்தில் பெரிய பெரிய கட்டிடங்கள் சரிந்து விழுந்து ஆயிரக்கணக்கானோர் இறந்தது பாதிப்பு இல்லையா?"

"'நீ கத்தோலிக்க கிறிஸ்தவன் தானே?"

''அதில் என்ன சந்தேகம்?"

"'கடவுள் எப்படிப்பட்டவர் என்று நீ விசுவசிக்கிறாய்?'' 

" கடவுள் அன்பானவர், இரக்கமுள்ளவர், நல்லவர், மற்றும் கத்தோலிக்க திருச்சபை கடவுளைப் பற்றி கூறும் அனைத்தையும் 
விசுவசிக்கிறேன்."

"'நீ விசுவசிப்பது உண்மையானால் உலக நிகழ்வுகளை விசுவாசக் கண் கொண்டு பார்க்க வேண்டும்.

ஒரு மாணவன் அவனுடைய ஆசிரியரை எப்படிப் பார்க்க வேண்டும்?"

"அவன் மீது அக்கறை உள்ளவர்,

 அவனது நன்மைக்காகவே உழைக்கின்றவர் என்று பார்க்க வேண்டும்."

"'அப்படிப் பார்த்தால் ஆசிரியர் கையில் இருக்கும் பிரம்பைப் பற்றி மாணவன் குறை கூறுவானா?"

"நிச்சயமாக மாட்டான்.

ஆசிரியர் என்ன செய்தாலும் அது அவனது நன்மைக்காகவே இருக்கும் என்று தான் நினைப்பான்."

"' சாதாரண மாணவன் அப்படி நினைப்பான் என்றால்,

கடவுள் மீது உண்மையான விசுவாசம் கொண்டவன் 

கடவுளது செயல்களைப் பற்றி எப்படி நினைக்க வேண்டும்?"

"கடவுளது செயல்கள் எல்லாம் அவனது நன்மைக்காகவே என்று
 நினைக்க வேண்டும்."

"'நினைத்திருந்தால் நீ கேட்ட கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டாய்.

இயற்கையைப் படைத்த இறைவன் தான் மனிதனையும் படைத்தார்.

இயற்கையை மனிதனுக்காகவே படைத்தார். 

மனிதனுக்காக படைக்கப்பட்ட இயற்கை எப்படி மனிதனை எதிர்மறையாகப் பாதிக்கும்?"

"அதைத்தான் புரியவில்லை என்று சொன்னேன்."

"' விசுவாசக் கண் கொண்டு பார்த்தால் எல்லாம் புரியும்.

கடவுள் மனிதனை எதற்காகப் படைத்தார் என்று நீ விசுவசிக்கிறாய்?"

"கடவுளை அறிந்து, 
அவரை நேசித்து, அவருக்காகவே வாழ்ந்து அவரோடு நிலை வாழ்வு வாழ்வதற்காகவே படைத்திருக்கிறார் என்று விசுவசிக்கிறேன்."

"'நாம் பிறந்ததன் இறுதி நோக்கம் என்ன?''

"இறைவனோடு வாழ வேண்டிய நிலை வாழ்வு."

"'உலகில் பிறந்த மனிதன் எப்போது நிலை வாழ்வை அடைவான்?"

"அவனுடைய மரணத்துக்குப் பின்."

"'அப்படியானால் மரணம் நிகழ வேண்டிய ஒன்றா?  நிகழக் கூடாத ஒன்றா?"

"நிகழ வேண்டிய ஒன்று. 

அது நிகழ்ந்தால்தான் விண்ணகத்தில் நமக்கு நிலை வாழ்வு கிடைக்கும்."

"'அப்படியானால் மரணம் மனிதனுக்கு உதவுகிறதா? அவனது வாழ்வைப் பாதிக்கிறதா?"

"விசுவாசத்தின் அடிப்படையில் பார்த்தால் உதவுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

உலக வாழ்வின் அடிப்படையில் பார்த்தால் பாதிக்கிறது என்று சொல்ல வேண்டும்."

 "' ஒரு விசுவாசி எந்த அடிப்படையில் பார்க்க வேண்டும்?"

"விசுவாசத்தின் அடிப்படையில்."

"'நீ இயற்கை நிகழ்வுகளைப் பற்றி எந்த அடிப்படையில் கேட்டாய்?"

"உலக வாழ்வின் அடிப்படையில்."

"' ஆன்மீக அடிப்படையில் பார்த்தால் சுனாமி போன்ற இயற்கை நிகழ்வுகள் மனிதனைப் பாதித்திருக்கின்றனவா?

அல்லது,

அவனுக்கு உதவியிருக்கின்றனவா?"

"சுனாமியால் மரணம் அடைந்த மனிதன் விண்ணக வாழ்வுக்கு ஏற்றவனாக இருந்தால் சுனாமி அவனுக்கு உதவியிருக்கிறது என்று சொல்லலாம்.

அவனது ஆன்மா விண்ணக வாழ்வுக்கு ஏற்றதாக இல்லாவிட்டால் சுனாமியால் அவனுக்கு எந்த ஆன்மீக நலனும் இல்லை."

"'தனது ஆன்மாவை ஒவ்வொரு நிமிடமும் விண்ணக வாழ்வுக்கு ஏற்றதாக வைத்திருக்க வேண்டியது மனிதனின் கடமை.

மரணம் கடவுளின் நித்திய காலத் திட்டப்படி

 வயது முதிர்வு காரணமாகவோ,

 நோய் நொடிகள் காரணமாகவோ,

இயற்கை நிகழ்வுகள் காரணமாகவோ,

 விபத்து காரணமாகவோ 
 வரலாம்.

எந்த காரணம் மூலமாக வந்தாலும் 

தனது ஆன்மாவை பாவமாசின்றி வைத்துக்கொள்ள வேண்டியது மனிதனின் கடமை.

மனித ஆன்மாவின் நிலைமைக்கும், சுனாமிக்கும் சம்பந்தம் இல்லை.

உணவு உடலுக்கு நல்லதா? கெடுதியா?"

"உணவு மனித உடல் வளர உதவுகிறது, ஆகவே நல்லது தான்."

"'உணவு கெட்டுப் போயிருந்தால்?"

"தாத்தா, எதனால் கெட்டுப் போய் இருக்கிறதோ அதுதான் கெடுதி,

உணவு அல்ல."

"'மரணம் விண்ணகம் செல்லும் வாசல்.

ஆன்மா விண்ணகம் செல்ல வேண்டுமா 

அல்லது 

எதிர் திசையில் செல்ல வேண்டுமா என்பதை தீர்மானிப்பது மரணம் அல்ல.

ஆன்மாவின் நிலைமைதான் தீர்மானிக்கிறது.

மரணத்தின் காரணத்தை தீர்மானிப்பது இறைவன்.

மரணம் வழியாக எங்கே செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பது மனிதன்.

விண்ணகம் செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க

 அவனுக்கு கடவுள் முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

நமது சுதந்திரத்தில் இறைவன் குறுக்கிட மாட்டார்.

கடவுள் இயற்கையை படைக்கும் போது அது இயங்குவதற்கான விதிமுறைகளை அதற்கு கொடுத்திருக்கிறார்.

அது அவற்றின்படி தான் இயங்கும்..

இயற்கை நிகழ்வுகள் நமக்கு உதவிகரமாக இருக்கின்றனவா

 அல்லது 

கெடுதியாக இருக்கின்றனவா என்பதை 

நமக்கு ஏற்படும் பாதிப்புகளை வைத்து 

நாம்தான் தீர்மானிக்கிறோம்.

மழையும், அதனால் ஏற்படும் வெள்ளமும் இயற்கை நிகழ்வுகள்.

மழையை நல்லது என்கிறோம்.
வெள்ளத்தை கெடுதி என்கிறோம்.

நல்லதால் கெடுதி ஏற்பட முடியாது.

ஆனால் விவசாயத்துக்கு உதவும் மழையை நல்லது என்கிறோம்,

பயிர்களை அழிக்கும் வெள்ளத்தை கெடுதி என்கிறோம்.

ஒருவருக்கு நன்மை பயக்கும் இயற்கை நிகழ்வு இன்னொரு நபருக்கு தீமை பயக்கலாம்."


"தாத்தா, கடவுள், அவர் படைத்த இயற்கையின் சில நிகழ்வுகள் அவர் படைத்த மனிதனைப் பாதிக்க ஏன் அனுமதிக்கிறார்? என்பது என் கேள்வி.

என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஏதோ பாடம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்."

"'நீ இயற்கை நிகழ்வுகள் என்று கூறும் அனேக நிகழ்வுகளுக்கு மனிதன்தான் காரணம் என்பது உனக்கு தெரியுமா?

தான் காரணமாக இருந்துவிட்டு பழியை மனிதன் இயற்கை மேல் போட்டுக் கொண்டிருக்கிறான்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

Sunday, February 12, 2023

"போ பின்னாலே, சாத்தானே.''(மத்.16:23)

"போ பின்னாலே, சாத்தானே.''
(மத்.16:23)

இயேசு தனது சீடர்களிடம், 

"மக்கள், என்னை யாரென்று சொல்லுகிறார்கள்?"

என்று கேட்டபின்,

"நீங்களோ என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?" என்று  கேட்டார்.

இராயப்பர் மறுமொழியாக, "நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்" என்றார்.

அதற்கு இயேசு, 

"யோனாவின் மகன் சீமோனே,

 நீ பேறுபெற்றவன். 

ஏனெனில், இதை உனக்கு வெளிப்படுத்தியது மனித வல்லமையன்று,

 வானகத்திலுள்ள என் தந்தையே.

மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன்.

 உன் பெயர் "பாறை." 

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.

 நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா."

என்று அவரைப் பற்றி பெருமையாகப் பேசினார்.

இந்த வார்த்தைகளின் மூலம் இராயப்பர்தான் திருச்சபையின் தலைவராக நியமிக்கப் படவிருக்கும் செய்தியை இயேசு தெரிவித்தார்.

சிறிது நேரம் கழித்து,

தான் பாடுகள் பட்டு மரிக்கப் போவதையும் மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழப்போவதையும் தெரிவித்தார்.

இராயப்பருக்கு இயேசுவின் மேல் பாசம் அதிகம். தனது பாசத்துக்கு உரியவர் கஷ்டப்பட போவதை அவர் விரும்பவில்லை. 

ஆகவே இயேசுவைப் பார்த்து 

 பாடுகள் பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இது அன்பின் மிகுதியால் கேட்டுக்கொண்டது.

ஆனாலும் அது இறைவனுடைய சித்தத்திற்கு எதிரானது.

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே மனிதனாகப் பிறந்த இயேசு,
   
இராயப்பரிடம், "போ பின்னாலே, சாத்தானே, நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய்." என்றார்.

எந்த அளவுக்கு இயேசு தனது தந்தையையும், மனுக் குலத்தையும் நேசிக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.

 இராயப்பர் இயேசுவைப் மெசியா என்று கூறிய போது அவரைப் பற்றி பெருமையாக பேசிய இயேசு,

அவர் பாடுகள் பட வேண்டாம் என்று சொன்னபோது அவரை "சாத்தானே" என்று அழைத்தார்.

மனிதர்களை பாவத்தில் விழத் தாட்டிய சாத்தான்தான் அவர்கள் மீட்பு பெறுவதை விரும்பாது.

ஆகவேதான் பாடுகளை விரும்பாத இராயப்பரை இயேசு சாத்தானே என்று அழைத்தார்.

இது இயேசுவுக்கும், இராயப்பருக்கும் இடையே நடந்த உரையாடல்..

ஆனாலும் இயேசு யாரோடு பேசினாலும் அந்த இடத்தில் நம்மையும் வைத்து 

 அவர் பேசிய வார்த்தைகள் நமக்கு எந்த அளவுக்கு பொருந்தும் என்பதை தியானிக்க வேண்டும்.

 எதிரிகளை நேசியுங்கள் என்று அவர் காலத்தில் அவரைப் பின் தொடர்ந்த மக்களை மட்டும் பார்த்து சொல்லவில்லை.

அவரது வார்த்தைகளை வாசிக்கும் நம் ஒவ்வொருவரை பார்த்தும் சொல்கிறார்.

இராயப்பரிடத்தில் நம்மை வைத்துக்கொண்டு இயேசுவின் வார்த்தைகளை தியானிப்போம்.

இயேசு தான் பாடுகள் படப்போவதைப் பற்றி சொல்லும் போது இராயப்பர் பேசிய வார்த்தைகளை வாசித்தோம்.

நம்மையும் உள்ளடக்கி இயேசு பேசிய வார்த்தைகள்,

"தன்னுடைய சிலுவையை சுமந்து கொண்டு என் பின்னே வராதவன் என்னுடைய சீடனாக இருக்க முடியாது."

இது இயேசுவின் சீடர்களாக வாழ விரும்பும் அனைவருக்கும் பொருந்தும்.

நமது சிலுவையைச் சுமந்து இயேசுவின் நடக்க வேண்டும் என்பது இயேசுவின் சித்தம்.

சிலுவையைச் சுமந்து,
 அதில் அறையப்பட்டு
 மரிக்கவிருப்பதைத்தான் இயேசு பாடுகள் என்று அழைத்தார்.

தாயைப் போல பிள்ளை. குருவைப் போல சீடன்.

சிலுவையை சுமப்பது பற்றி இயேசு கூறிய வார்த்தைகளைப் பொருள்படுத்தாமல்,

நாம் நமது சிலுவையை சுமக்க விரும்பாவிட்டால்,

இயேசுவின் வார்த்தைகளின்படி

நாம் யார்?

இராயப்பருக்குக் கிடைத்த அதே பட்டம்தான் நமக்கும் கிடைக்கும், 

சாத்தான், சிலுவைக்கு எதிரி.

நிச்சயமாக அந்த பட்டத்திற்கு நாம் ஆசைப்பட மாட்டோம்.

அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்.

நமக்கு சிலுவைகள் வரும் போது அவற்றை வேண்டாம் என்று சொல்லாமல் 

முழு மனதோடு அவற்றை ஏற்று இயேசுவுக்காக சுமக்க வேண்டும்.

நமக்கு வரும் துன்பங்கள் தான் நாம் சுமக்க வேண்டிய சிலுவைகள்.

நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்தது இயேசு சுமந்த சிலுவை.

அதைப் பெற நமக்கு உதவும் நாம் சுமக்கும் சிலுவை

துன்பங்கள் வரும்போது அவற்றை ஏற்றுக் கொள்கிறோமா,

'அல்லது அவற்றிலிருந்து நமக்கு விடுதலை தரும்படி

சிலுவையை அனுமதித்த இயேசுவையே கேட்கிறோமா?

அதற்குரிய விடையை நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

புனித பிரான்சிஸ் அசிசி சிலுவை மீது மட்டற்ற பற்று வைத்திருந்தார்.

அதற்குற்குப் பரிசாக நம் ஆண்டவர் சிலுவையில் பெற்ற ஐந்து திருக்காயங்களையும் அவருக்குக் கொடுத்தார்.


அன்னை மரியாள் முதல் 
 அனைத்து புனிதர்களும் சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவின் பின் சென்றவர்கள் தான்.

இயேசுவின் பின் செல்ல விரும்பும் நாமும் 

நமக்கு வரும் சிலுவைகளை ஏற்று 

சுமந்து 

இயேசுவின் சீடர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.