Thursday, April 21, 2022

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."(அரு.21:25)

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."
(அரு.21:25)

தாய்த் திருச்சபை எதைச் சொன்னாலும்,

 "இது பைபிளில் இருக்கிறதா?

 என்று கேட்கும் நம்முடைய பிரிவினை சகோதரர்களுக்காக

அருளப்பர் எழுதிய வசனம் இது.

இயேசு அப்போஸ்தலர்களைப் பார்த்து,

"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,

 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள்."
(மத்.28:19,20) என்று சொன்னார்.

இயேசு தனது அனைத்து போதனைகளையும்,

அனைத்து மக்களுக்கும் போதிக்கும்படி தன் சீடர்களுக்குக் கட்டளையிடுகிறார்.

புனித அருளப்பரின் கூற்றுப்படி
 இயேசு சொன்னவை, செய்தவை அனைத்தும் நற்செய்தி நூல்களில் எழுதப்படவில்லை. 

அப்போஸ்தலர்கள் இயேசு சொன்னபடி செய்தார்கள்.

அதாவது, நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டவற்றை மட்டுமல்ல,

 இயேசு சொன்னவை செய்தவை அனைத்தையும் போதித்தார்கள்.

அவர்கள் போதிக்க ஆரம்பிக்கும்போது நற்செய்தி நூல்கள் எதுவும் எழுதப்படவில்லை.

ஆரம்பகால திருச்சபையில் போதிக்க பட்டவை அனைத்தும் நற்செய்தி நூல்களில் எழுதப்படவில்லை.

போதிக்கப் பட்டவை அனைத்தும் நடைமுறைப் படுத்தப்பட்டன.

ஆகவே நற்செய்தி நூல்கள் எழுதப்பட்ட பின் திருச்சபையின் நம்பிக்கைகளிலும்,  நடைமுறையிலும்  

எழுதப்பட்டவையும் இருந்ததன,

எழுதப்படாதவையும் இருந்தன.

எழுதப்பட்டவற்றை பைபிள் என்போம்.

பைபிளில் எழுதப்படாதவற்றைப் பாரம்பரியம் என்போம். 

முதலில் பாரம்பரியமாக போதித்ததைத்தான் நற்செய்தி நூல்களில் எழுதினார்கள்.

ஆகவே பாரம்பரியத்தின் குழந்தைதான் நற்செய்தி நூல்கள்.

ஆரம்பகால திருச்சபையில் அப்போஸ்தலர்களால் போதிக்கப் பட்டவைதான் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து இந்நாள் வரையிலும் போதிக்கப் படுகின்றன.

எல்லா தேவத்திரவிய அனுமானங்களும் திருச்சபையின் ஆரம்பகாலத்திலிருந்தே செயல்பாட்டில் இருந்தன.

ஆகவே பைபிளையும், பாரம்பரியத்தையும் ஏற்றுக் கொள்பவர்கள் தான் இயேசு நிறுவிய திருச்சபையை ஏற்றுக் கொள்கிறார்கள், 

அதாவது,

இயேசுவை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இயேசுவின் ஞான உடல்தான் திருச்சபை

பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இயேசுவை. ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசுவின் போதனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளாதவர்கள் இயேசுவை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசுவை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

நாம் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நமது தந்தை படிப்புச் செலவிற்காக நேரடியாகவும் பணம் தந்திருப்பார், 

Money order மூலமாகவும் அனுப்பியிருப்பார்.

 Money order மூலமாக அனுப்பியது மட்டுமே அவருடைய பணம்,

நேரடியாகத் தந்தது அவருடைய பணம் அல்ல என்று வாதாடினால்

 அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா?

எழுத்து மூலம் வந்தவைதான் இயேசுவின் போதனைகள்,

 வாய்மொழி மூலம் வந்தவை இயேசுவின் போதனைகள் அல்ல என்று வாதாடுவதும் அதே போன்றதே.

கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைகளை இயேசுவின் முழுமையான போதனைகள் என்று ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும்தான் உண்மையான கிறிஸ்தவர்கள்.

இயேசுவின் காலத்திலிருந்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது கத்தோலிக்க திருச்சபை மட்டுமே. 

இயேசுவின் பெயரையும், அரைகுறையான பைபிளையும் வைத்துக்கொண்டு இடையில் தோன்றியவை அல்ல.

"என் ஆட்டுக்குட்டிகளை மேய்"

"என் ஆடுகளைக் கண்காணி"

"என் ஆடுகளை மேய்."

என்ற வார்த்தைகள் மூலம் இயேசு இராயப்பரை கத்தோலிக்கத் திருச்சபையின் முழு நிர்வாகத் தலைவராக ஏற்படுத்தினார்.

இராயப்பரின் வாரிசுதான் பாப்பரசர்.

பாப்பரசரைத் திருச்சபையின் தலைவராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே இயேசுவால் நிறுவப்பட்ட திருச்சபையை ஏற்றுக்கொள்கிறார்கள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment