Friday, April 29, 2022

"அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்: முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள்."(அரு.6:27)

"அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்: முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள்."
(அரு.6:27)

"தாத்தா!"

", பேரப்புள்ள, ரொம்ப நாளா ஆளக் காணல."

"நான் தினமும் வந்து கொண்டுதான் இருக்கிறேன்.

நான் வரும்போதெல்லாம் ஏதாவது வாசித்துக் கொண்டு, அல்லது எழுதிக் கொண்டு இருப்பீர்கள்.

தொந்தரவு படுத்தக் கூடாது என்று போய்விடுவேன்."

",அப்போ இன்றைக்கு என்னை தொந்தரவு படுத்துவது என்று தீர்மானித்து விட்டாய்."

"ஆமாமா. ஆனால் தொந்தரவாக நினைக்காதீர்கள். வயசு காலத்தில் பேசுவதற்கு ஆள் கிடைத்துவிட்டது என்று சந்தோஷப்படுங்கள்."

",ரொம்ப சந்தோஷம். பேசு."

"தாத்தா, உணவு இல்லாமல் வாழ முடியுமா?"

", முடியாது."

"சாப்பிட்ட உணவு அழிந்து தானே போகும்?"

",ஆமா, அழிந்தால் தானே சீரணிக்கும்?"

"உழைத்தால் தானே உணவு கிடைக்கும்?"

", ஆமா."

"ஆனால் ஆண்டவர் உழைக்க வேண்டாம் என்கிறாரே?

",ஆண்டவர் உழைக்க வேண்டாம் என்றுசொல்லவே மாட்டார்.

அவரே பெரிய உழைப்பாளி.

ஒரு உழைப்பாளியையே தனது வளர்ப்புத் தந்தையாக தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

அவரே 30 வயது வரை தச்சுத்தொழில் தானே செய்தார்."

"அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம் என்று அவர் சொன்னதை அருளப்பர் எழுதி வைத்திருக்கிறாரே! 

இந்தா வாசித்துப் பாருங்கள்."

",நான் ஏற்கனவே வாசித்து விட்டேன்.

இப்போ நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.

உழைப்பதற்காக சாப்பிடுகிறாயா?

சாப்பிடுவதற்காக உழைக்கிறாயா?"

"இது சிக்கலான கேள்வி. உழைக்காமல் சாப்பிட முடியாது.

 சாப்பிடாமல் உழைக்க முடியாது."

", சுவாசிப்பதற்காக வாழ்கிறாயா?

வாழ்வதற்காக சுவாசிக்கிறாயா?"

"இரண்டில் வாழ்வது தான் முக்கியம். ஆகவே வாழ்வதற்காகவே சுவாசிக்கிறேன்."

இப்போ ஒரு கேள்வி.

உடல் சம்பந்தப்பட்ட உணவு முக்கியமா?

ஆன்மீக உணவு முக்கியமா?"

"இரண்டில் ஆன்மீக உணவுதான் முக்கியம்.''

", ஏன்?"

"உடல் அழியக்கூடியது. என்ன உணவு சாப்பிட்டாலும் அது ஒரு நாள் அழிந்து போகும்.

ஆன்மா அழியாதது. ஆன்மீக உணவினால் அழியாத ஆன்மா பயன் பெறுகிறது.

ஆகவே ஆன்மீக உணவுதான் அதிக முக்கியமானது."

",இப்போது நீ சந்தேகம் எழுப்பிய முழு வசனத்தையும் வாசி."

"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்:

 முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள். 

அதை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார்:

 ஏனெனில், அவருக்கே தந்தையாகிய கடவுள் தம் அதிகாரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்"

",இப்போ புரிகிறதா?"

"புரிகிறது."

", என்ன புரிகிறது?"

"அழிந்துபோகும் உணவை விட 
முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுதான் முக்கியம்.

ஆகவே அழிந்துபோகும் உணவுக்காக உழைப்பதை விட

 முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழைப்பதுதான் முக்கியம்."

", முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவு எங்கே இருக்கிறது?"

"இறைமகன் இயேசுவிடம் இருக்கிறது."

",அவரிடமிருந்து நமக்கு எப்படி கிடைக்கும்?"

"அவருடைய நற்செய்தியின்படி வாழ்வதாலும், அவரை நோக்கி வேண்டுவதாலும் கிடைக்கும்."

", அவர் அளிக்கும் வாழ்வளிக்கும் நிலையான உணவு எது?"

"நமது ஆன்மீக வளர்ச்சிக்காக இயேசு நமக்கு அளிக்கும் அருள் வரங்கள்தான்

 அவர் ஒவ்வொரு வினாடியும் நமக்கு அளித்துக் கொண்டிருக்கும் ஆன்மீக உணவு. 

அவரைப்பற்றி தியானிக்கும் நமது சிந்தனையும்,

அவரை மற்றவர்களுக்கு அறிவிக்கும் நமது சொல்லும்,

அன்பின் நிமித்தம் அவருக்காக நாம் செய்யும் நற்செயல்களும்,

அவரை நோக்கி நாம் செய்யும் செபமும் 

அவரிடமிருந்து நமக்கு அருள் வரங்களைப் பெற்றுத் தருகின்றன.

அவர் ஏற்படுத்திய தேவ திரவிய அனுமானங்கள் மூலமும் நமக்கு அருள் வரங்கள் வருகின்றன.

அவர் தரும் அருள் வரங்களால்தான் நாம் அவருடைய உறவில் வளர்கிறோம்."

",அவர் நமக்கு தரும் மிக முக்கியமான உணவை மறந்து விட்டாயே!" 

"மறந்துவிட்டேன் என்று யார்
 சொன்னது?

"வானினின்று இறங்கிவந்த உணவு நானே" என்று அவர் சென்னதை எப்படி, தாத்தா, மறக்க முடியும்.

அவர் உயிருள்ள உணவு.

அவரைத்தானே திவ்ய நற்கருணை மூலமாக உணவாக அருந்துகிறோம்.

திரு விருந்தின்போது அருள் வரங்களை தருபவரையே உணவாக உண்கிறோம்.

அவரை உணவாக உண்ணும் நாம் என்றென்றும் வாழ்வோம்.

 திவ்ய நற்கருணை ஏழு தேவ திரவிய அனுமானங்களில் ஒன்று.

நம்மைப் பெற்ற தாய் நமக்கு அவளது பாலை மட்டும் ஊட்டினாள்.

 ஆனால் நம்மைப் படைத்த இறைவன் தன்னையே முழுமையாக நமது உணவாகத் தருகிறார்."

",இப்போ சொல்லு நாம் எதற்காக உழைக்க வேண்டும்?"

"எந்நாளும் வாழ உதவும் உணவுக்காகவே உழைக்க வேண்டும்.

ஆனாலும் ஒரு சந்தேகம். அழியக்கூடிய உணவு கூட உழைத்தால் தானே கிடைக்கும்.

அதற்காக உழைக்கக் கூடாதா?"

",நீ எங்கே வாழ்கிறாய்?"

"பாவூர்சத்திரத்தில்."

", உன்னுடைய அக்காள்?"

"சென்னையில்."

", உனது அக்காள் மகளுக்கு திருமணம் என்று வைத்துக்கொள்வோம். உனக்கு அழைப்பு கொடுப்பார்களா?"

"அதிலென்ன சந்தேகம்?"

",.சந்தேகம் ஒன்றும் இல்லை. நீ கேட்டதற்கான பதிலை உன் வாயிலிருந்தே வரவழைக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தக் கேள்வி."

"அழைப்பு கொடுப்பார்கள்.
நானும் அழைப்பை ஏற்று போவேன்."

',எப்படி போவாய்?"

"Bus க்கு டிக்கெட் எடுத்து, Busல் போவேன்."

",நீ டிக்கெட் எடுப்பது பஸ்ஸில் போவதற்கா, சென்னைக்குப் போவதற்கா?"

"பஸ்ஸில் சென்னைக்குப் போவதற்காக."

",சென்னைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லாவிட்டால் டிக்கட் எடுத்திருப்பாயா?"

 "எடுக்கதிருக்க மாட்டேன்."

", இப்போ ஆன்மீகத்திற்கு வருவோம். 

கடவுள் உன்னைப் படைத்தது உலகில் வாழ்வதற்காகவா? விண்ணகத்தில் வாழ்வதற்காகவா?"

"உலகத்தில் வாழ்ந்து அதன்மூலம் விண்ணகம் செல்வதற்காக."

",அதாவது பஸ்ஸில் பயணித்து சென்னைக்கு போவதற்காக மாதிரி."

"இப்போது புரிய ஆரம்பித்து விட்டது.

டிக்கெட் பஸ்ஸில் போவதற்காக. பஸ்ஸில் பயணிப்பது சென்னைக்கு போவதற்காக.

சென்னைக்குப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் பஸ்சுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும்.

உழைத்தால்தான் அழிவுள்ள உணவு கிடைக்கும்.

அழிவுள்ள உணவை சாப்பிட்டால் தான் அழியாத உணவைப் பெற வாழ முடியும், விண்ணகமும் செல்ல முடியும்.

அழிவுள்ள உணவை உண்ணும்போது நாம் விண்ணகம் போவதற்காகத்தான் இந்த உணவை உண்கிறோம் என்ற நினைப்பு மனதில் இருக்க வேண்டும். 

விண்ணக உணவைப் பற்றி கவலைப்படாமல், மண்ணக உணவுக்காக மட்டும் உழைக்கக்கூடாது.

விண்ணகம் செல்லும் நோக்கத்துடன்தான் மண்ணகத்தில் வாழவேண்டும்.

"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்" என்றுஆண்டவர் சொல்லும்போது,

அழியாத உணவை நோக்கமாக கொள்ளாமல் அழிந்துபோகும் உணவுக்காக மட்டும் உழைக்கக்கூடாது என்ற பொருளில் சொல்கிறார்.

நாம் உழைப்பதின் நோக்கம்

முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவைப் பெறுவதற்காக மட்டுமே.

மண்ணுலக வாழ்வின் நோக்கம் விண்ணுலக வாழ்வுதான்.

எதைச்செய்தாலும் இறைவனுக்காக என்று நினைத்துக்கொண்டு செய்தால் 

லௌகீக செயல்களும் ஆன்மீக செயல்களாக மாறிவிடும்."

", உனது கேள்விக்கான பதிலை நீயே சொல்லிவிட்டாய்.

இனி எதற்காக உழைப்பாய்?"

"முடிவில்லா வாழ்வை அடையும் நோக்கத்தோடு இவ்வுலகில் வாழ்வதற்காக.

பாவம் தவிர மற்ற எல்லா செயல்களையும் விண்ணக வாழ்விற்காக இறைவனுக்கு ஒப்புக் கொடுப்போம்.

ஆன்மீக உணவாகிய அருள் வரங்களை ஆண்டவர் அள்ளித் தருவார். அவரையே நமக்கு உணவு தருவார்.

உழைப்போம், அருள் வரங்களைப் பெறுவதற்காக." 

லூர்து செல்வம்.

Thursday, April 28, 2022

"என் நுகம் இனிது, என் சுமை எளிது." (மத்.11:30)

"என் நுகம் இனிது, என் சுமை எளிது." (மத்.11:30)

 ஆண்டவரது வாயிலிருந்து வந்த நுகம் என்ற வார்த்தை என்னை எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய பையன் பருவ அனுபவங்களுக்கு அழைத்துச்
 சென்றுவிட்டது.

நுகம் என்பது மாட்டு வண்டியின் முன்பகுதியில் மாடுகளைப் பூட்டுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் 
நுகக்காலைக் குறிக்கும்.

நாங்கள் அதை ஸ்டைலாக 'நோக்கால்' என்போம்.

மாட்டு வண்டியில் பாரத்தை ஏற்றிவிட்டு,

(பாரம் ஆட்களாகவும் இருக்கலாம், பொருட்களாகவும் இருக்கலாம்)

நுகக்காலின் இரு புறமும், நோக்கால் குச்சியின் உதவியோடு மாடுகளைப் பூட்டி,

இருப்புச் சட்டத்தில் இருந்து கொண்டு,

ஓட்டுநர் வண்டியை ஓட்டுவான்.

மாடுகள் பாரவண்டியை இழுத்துக் கொண்டு போகும். 

வண்டியில் எவ்வளவு பாரம் ஏற்றினாலும் மாடுகள் இழுத்துச் செல்லும்.

ஆனாலும் இழுக்க எளிதாக இருக்க வேண்டுமென்றால்

பாரம் வண்டியின் அச்சுக்குப் முன்னும், பின்னும் சமமாக அமைந்திருக்க வேண்டும்.

அச்சுக்கு முன்னால் அதிகமாக இருந்தால் பாரம் மாட்டின் கழுத்தை கீழ் நோக்கி அமுக்கும், அதாவது பாரம் அதிகமாக இருக்கும்.

அச்சுக்குப் பின்னால் அதிகமாக இருந்தால் நோக்கால் குச்சியிலுள்ள கயிறு மாட்டின் கழுத்தை மேல் நோக்கி இழுக்கும்.

மாடுகளால் நடக்க முடியாது.

பாரம் சமமாக இருந்தால் நுகக்கால் இருப்பதே மாட்டுக்குத் தெரியாது.

பாரத்தின் அளவு எவ்வளவு அதிகமாக இருந்தாலும் மாடுகள் எளிதாக இழுத்துச் செல்லும்.

இயேசு தன்னையே ஒரு மாட்டு வண்டிக்கு ஒப்பிடுகிறார்.

'உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.''

வண்டியில் சுமை இருக்கும்.

வண்டியின் (இயேசுவின்) நுகத்தை நமது கழுத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசுவாகிய வண்டியின் நுகத்தை நாம் ஏற்றுக் கொண்டால், 

சுமை இழுப்பதற்கு எளிதாக இருக்கும்.

" என் நுகம் இனிது, என் சுமை எளிது.

என்னுடைய நுகக்கால் உங்களுடைய கழுத்தில் பாரமாக இருக்காது, இனிமையாக இருக்கும்.

என்னுடைய நுகக்காலை உங்கள் கழுத்தில் ஏற்றுக் கொண்டால், எனது சுமை இழுக்க இலேசாக இருக்கும்."

நாம் உலகில் சுமக்கும் சுமைகள் இரண்டு வகை.

1. லௌகீக சுமைகள். உலக வாழ்க்கையைச் சார்ந்த கஷ்டங்கள், கவலைகள், நோய் நொடிகள், வலிகள், எதிர்ப்புகள், இயலாமைகள் போன்றவை.

இவற்றைச் சுமப்பது கடினம் தான். அளவு அதிகரித்தால் அதிக கடினமாகிவிடும்.

2. ஆன்மீகச் சுமை. இயேசுவுக்காகச் சுமக்கும் சிலுவைகள். இவற்றின் அளவு அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் 
இயேசுவுக்காகச் சுமக்கும்போது எளிதாகி விடுகின்றன.

சுமக்க கடினமான முதல் வகை சுமைகளை இரண்டாம் வகை சுமைகளாக மாற்றிவிட்டால் சுமப்பது எளிதாகிவிடும்.

நமக்காக சுமப்பவற்றை, இயேசுவுக்காக சுமந்தால்

 சுமை சிலுவையாக மாறிவிடும்.

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள்"

என்று ஆண்டவர் சொல்லும்போது 

"சுமக்க கஷ்டமான லௌகீக சுமைகளை சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள்." என்று கூறுகிறார்.

வந்து என்ன செய்ய வேண்டும்?

அவர் முன்னால் நமது சுமைகளை இறக்கி வைத்து விட வேண்டும்.

அவர் தன்னையே சுமை சுமந்து செல்லும் ஒரு பார வண்டிக்கு ஒப்பிட்டு விட்டார்.

நமது சுமைகளை அவர்மேல் ஏற்றுக்கொள்வார்.

அவரது நுகத்தடியை 
நமது கழுத்தில் ஏற்றுவார்.

அவரது நுகம் மிக இனிமையாக இருக்கும். 

அவர் சாந்தமும் மனத் தாழ்ச்சியும் உள்ளவர்.

அவை நமது சுமையை அவர் மேல் சமமாக (Balanced) வைத்திருக்கும்.

நாம் இறக்கிவைத்த சுமை அவர்மேல் ஏறும்போது சிலுவையாக மாறி விடும்.

இப்போது நுகத்தில் மாட்டப் பட்ட நாம் இழுக்க வேண்டியது

இயேசுவை, அதாவது, சிலுவையை.

ஆன்மீகத்தில் இயேசு என்றால் அன்பு.

சிலுவை என்றாலும் அன்பு தான்.

இப்போது நாம் இழுக்க வேண்டியது,

அதாவது சுமக்க வேண்டியது அன்பை.

அன்பைச் சுமப்பது கடினமானது அல்ல,

இனிமையானது.

"என் நுகம் இனிது."

உலக வாழ்வில் நம்மால் தூங்காமல் இருக்க முடியாது.

ஆனால் நாம் நேசிக்கும் மனைவிக்குச் சுகமில்லாதிருந்தால் நாட்கணக்காக அவளுக்காகத் தூங்காமல் இருக்கிறோமே!

கடமைக்காகத் தூங்காமல் இருப்பது கடினம்.

ஆனால் அன்புக்காகத் தூங்காமல் இருப்பது இனிது.


அதேபோல்,

வேறு வழியில்லாமல் நாம் படும் கஷ்டங்களைத் தாங்குவது கடினம்.

ஆனால் இயேசுவுக்காகத் தாங்குவது எளிது.

இயேசுவையே தாங்குவது மிக மிக எளிது.

என்னவிதமான கஷ்டங்களாக இருந்தாலும், 

காணிக்கை கொடுப்பது போல, 

இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து விட வேண்டும்.

"ஆண்டவரே, நான் கஷ்டப்பட்டு அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னுடைய நோயை,

 என்னுடையவும், உலகத்தினுடையவும் பாவங்களுக்கு பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்."
என்று செபிக்க வேண்டும்.

ஒப்புக்கு ஒப்புக்கொடுக்கக் கூடாது. இயேசு மீது நாம் கொண்டுள்ள உண்மையான அன்போடு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

அவரும் ஏற்றுக் கொள்வார்.

அந்த நொடியிலிருந்து

 இயேசுவையும், நம்மையும் இணைக்கும் அன்பின் காரணமாக

 நமது நோய் இயேசு சுமந்த 
சிலுவையாக மாறிவிடும்.

அதன்பின் நாம் சுமக்கப் போவது இயேசுவையே.

நமது அன்பு உண்மையாக இருந்தால், நாம் சுமக்கும் சிலுவை மிக எளிதாகவும், இனிதாகவும் இருக்கும்.

இந்தக் காரணத்திற்காகத்தான் புனிதர்கள் துன்பங்களை மகிழ்ச்சியோடு அனுபவித்தார்கள்.

நமது நல்ல நடத்தையினால் நாம் இயேசுவைப்போல் மாறிவிட்டால்,

நமது துன்பங்களும் அப்படியே மாறிவிடும்.

துன்பங்களை சிலுவையாக மாற்றுவோம்.

சிலுவை நம்மைப் புனிதர்களாக மாற்றும்.

லூர்து செல்வம்.

Wednesday, April 27, 2022

"நான்தான், அஞ்சாதீர்கள்" (அரு.6:20)

, "நான்தான், அஞ்சாதீர்கள்" 
(அரு.6:20)

அப்போஸ்தலர்கள் புயல் காற்று வீசிக் கொண்டிருந்த கடலில் படகில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது அவர்களை நோக்கி கடல் மீது நடந்து வந்து கொண்டிருந்த இயேசுவைப் பார்தது பயப்படுகிறார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து,

"நான்தான், அஞ்சாதீர்கள்"
என்கிறார்.

கடல் என்றாலே ஞாபகத்துக்கு வருவது அங்கு அடிக்கும் அலைகளும், வீசும் காற்றும் தான்.

கடற்காற்றின் சுகத்தை அனுபவித்துக் கொண்டே

கடல் அலைகளில் நனைவதற்கே அநேகர் கடற்கரைக்குப் போவார்கள்.

ஆனால் அலைகள் பேரலைகளாகவும்,

காற்று புயலாகவும் மாறும்போது யாரும் கடல் பக்கம் போவதில்லை.

சுனாமியின் போது மக்கள் கால்களை நனைக்கச் சென்ற அலைகள்தான் மக்களைத் தேடி கரையைத் தாண்டி வந்தன.

தேடி வந்து அநேகரை அழைத்துச் சென்றன.

இது விஷயத்தில் நாம் வாழும் நிலப்பரப்பான உலகம் கடலைவிட மோசமாக நிலையில் இருக்கிறது.

கடல் வழக்கமாக சிறிய அலைகளுடன் அமைதியாகவே இருக்கும்.

 எப்போதாவதுதான் பேரலைகளும், சுனாமியும், புயலும் ஏற்படும்.

 ஆனால் நாம் வாழும் உலகம் வருடம் முழுவதும் பிரச்சனைகள் நிறைந்ததாகவே இருக்கிறது.

எப்போதாவதுதான் அமைதி நிலவுவது போல தோன்றும்.

அனைவருக்கும் பொதுவான சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைகள் போக,

தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும்,
வித்தியாசம், வித்தியாசமான பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.

இந்த பிரச்சனைகளை கண்ணோக்குவதில் உலகியல் வாதிகளுக்கும் (Worldly people) 

ஆன்மீக வாதிகளுக்கும் இடையில் வித்தியாசம் இருக்க வேண்டும்.

உலகியல் வாதிகள் உலக சம்பந்தமான இலாப, நட்டக் கண்ணோக்கோடு தான் அவற்றை நோக்குவார்கள்.

குடும்பத்தில் பொருளாதார பிரச்சனை ஏற்பட்டால் வரவுக்கு மிஞ்சிய செலவையும், கடன் வாங்குதல், கொடுத்தல் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுவார்கள்.

ஆனால் ஆன்மீக வாதிகள் இயேசுவின் கண்வழியே பிரச்சனைகளை நோக்குவார்கள்.

பிரச்சனைகள் வரும்போது,

அன்று ஆண்டவர் அப்போஸ்தலர்களுக்குக் கூறிய வார்த்தைகளை நம்மிடமும் கூறுவார்,

"நான்தான், அஞ்சாதீர்கள். பிரச்சனைகளைப் பார்க்காதீர்கள்.

பார்த்தால் அச்சம்தான் ஏற்படும்.

அவற்றின் வழியாக உங்களை நோக்கி வரும் என்னைப் பாருங்கள்.

நான் உலகிற்கு வரும்போது யூதேயா நாட்டில் இல்லாத பிரச்சனைகளா?

யூதர்கள் அனைவரும் உரோமையருக்கு அடிமைகளாக வாழ்ந்தார்கள்.

தங்கள் நாட்டில் உழைத்து ஈட்டிய பணத்திலிருந்து வரியை அயல் நாட்டுக்குக் கொடுத்தார்கள்.

யூதர்களிடையேயும் ஒற்றுமை இல்லை.

பரிசேயர்களும், யூத மத குருக்களும், மறை நூல் வல்லுநர்களும் சாதாரண மக்களை தங்கள் நலனுக்காகப் பயன் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் நான் நற்செய்தியை அறிவித்தேன்.

தீமையிலிருந்து வரவழைப்பவன் நான்.

இந்த பிரச்சனைகளை உலகினரை பாவத்திலிருந்து மீட்க பயன் படுத்திக் கொண்டேன்.

பரிசேயரும், யூத மத குருக்களும், மறை நூல் வல்லுநர்களும் என்னைக் கொலை செய்ததையே உலக மீட்புக்காக பயன் படுத்திக் கொண்டேன்.

பிரச்சனை வாதிகள்தான் உலகை மீட்க எனக்கு உதவினார்கள்.

பிரச்சனைகளைக் கண்டு பயப்பட வேண்டாம். 

அவற்றினிடையே உங்களை நோக்கி வரும் என்னைப் பாருங்கள்.

என்னை அழையுங்கள்.

பிரச்சனைகளை வாழ்வின் ஊற்றாக மாற்றிக் காட்டுகிறேன்.

குற்றவாளிகளைத் தண்டிக்க பயன்படும் சிலுவையை மீட்பின் ஊற்றாக நான் மாற்றியதை மறக்காதீர்கள்."

என்று நம்மை நோக்கி இயேசு கூறுகிறார்.

"ஆண்டவரே, ஏழ்மை பிரச்சனை எங்களை வாட்டுகிறது. இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா?"

 "நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், என்னுடைய அரசு உங்களதே.

எனக்காக வாழ்வவர்களுக்கு ஏழ்மை உதவியே செய்யும்.

அதனால்தான் எனக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பவர்கள் ஏழ்மையை எனக்காக ஏற்றுக்கொள்வதாக வாக்களிக்கிறார்கள்.

ஏழ்மையை உலக கண்ணோடு பார்க்காமல் எனது கண்ணோடு பாருங்கள்.

உலகையே படைத்தவன் நான்.

நான் மனிதனாகப் பிறப்பதற்கு ஒரு மாட்டுத் தொழுவைத்தானே தெரிந்து கொண்டேன்.

ஐந்து அப்பங்களை கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த நான்,

என்னைப் பெற்ற அன்னையைக் காப்பாற்ற தச்சுத்தொழில் தானே செய்தேன்."

"ஆண்டவரே, உமது சீடர்கள் நாங்கள். உமது நற்செய்தியின்படி வாழவே முயற்சி செய்கிறோம். ஆனால்உமது சீடர்களாக இருக்கிற ஒரே காரணத்திற்காக உலகம் எங்களை அழிக்கத் தேடுகிறதே."
 
"எனது மக்களே, பயப்படாதீர்கள். உங்களை யாராலும் அழிக்க முடியாது.

உங்களது ஆன்மா அழியாதது.
என்றென்றும் என்னோடு நித்திய பேரின்பத்தில் வாழ்வதற்கென்றே படைக்கப் பட்டது."

"ஆனால் எங்கள் உடல்?"

"எனது சீடர்களாகிய நீங்கள் வாழ்வது ஆன்மாவிற்காகவா உடலுக்காகவா?"

"ஆன்மாவுக்காகத்தான்."

"பின் ஏன் உடலைப்பற்றி கவலைப் படுகிறீர்கள்?

உங்களை அழிக்க நினைக்கும் எதிரிகளால் உங்களை விண்ணகத்துக்கு மட்டுமே அனுப்ப முடியும்.

அதை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள்."

"அப்படியானால் இந்த உலகில் நீண்ட நாள் வாழ வழி சொல்ல மாட்டீர்களா?"

"நீண்ட நாள் வாழ வேண்டுமா? என்றென்றும் வாழ வேண்டுமா?"

"என்றென்றும் வாழ வேண்டும்."

"உலகில் அது முடியாது. பிரச்சனைகள் நிறைந்த உலகில் என்றென்றும் வாழ்ந்து என்ன செய்ய போகிறீர்கள்?

விண்ணகத்துக்கு வழி காட்டுவதற்காகத்தானே பிரச்சனைகள் மத்தியிலும் உங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்." 

"மன்னியுங்கள் ஆண்டவரே,
உமது சீடர்களாக இருந்துகொண்டே இவ்வுலக வாழ்வுக்கு ஆசைப்படுவது தவறுதான்.

இனி விண்ணகத்தையே குறிக்கோளாக கொண்டு வாழ்வோம்."


"ஆண்டவரே, நீங்கள் கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவி அதன் தலைவராக இராயப்பரை நியமித்தீர்கள்.

சிலர் கத்தோலிக்கத் திருச்சபையை ஏற்றுக் கொள்ளாமல்,

உங்களையும், பைபிளையும் ஏற்றுக் கொள்வதாகக் கூறிக் கொண்டு,

உங்களையும், பைபிளையும் வியாபாரப் பொருட்களாக மாற்றி,

பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

அவர்கள் நீங்கள் நிறுவிய திருச்சபைக்குப் பெரிய பிரச்சனையாக இருக்கிறார்கள்.

நம்மில் அநேகர் அவர்களது வார்த்தைகளில் மயங்கி அவர்களைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்றே தெரிய வில்லை."

"அவர்களும் நமது சகோதரர்களே.

அவர்களையும் நேசியுங்கள்.

அவர்களோடு வாதாடி நேரத்தை வீணாக்காமல், முன் மாதிரிகையாக கத்தோலிக்க திருச்சபையை வாழ்ந்து காட்டுங்கள்.

முதலில் நீங்கள் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,
நான் வாழ்ந்தது போலவே ஏழைகளாக வாழ்ந்து காட்டுங்கள்.

பணம் என்னுடைய 12 சீடர்களில் ஒருவனையே கெடுத்து விட்டது உங்களுக்குத் தெரியும்.

அசிசி நகர் பிரான்சிசைப் போல, ஏழையாக என்னை வாழ்ந்து காட்டுங்கள்.

கோடிக் கணக்கில் நன்கொடை வசூலித்து பெரிய பெரிய கோயில்கள் கட்டுங்கள் என்று நான் சொல்லவில்லை.

தேவையில் இருக்கும் ஏழைகளுக்குக் கொடுங்கள் என்று தான் சொன்னேன்.

நான் ஏழையாக மாட்டுத் தொழுவத்தில் பிறந்த விழாவை இலட்சக் கணக்கில் செலவழித்து  ஆடம்பரமாகக் கொண்டாடுங்கள் என்று நான் சொல்லவில்லை.

பணம் பொல்லாத சத்துரு. வேலைக்காரன் உருவத்தில் வீட்டிற்குள் நுழையும்.

வீட்டு உரிமையாளர்களையே வேலைக்காரர்களாக மாற்றி விடும்.

நீங்கள் முதலில் ஏழைகளாக என்னை வாழுங்கள்.

பணத்துக்காக என்னைப் பயன் படுத்துபவர்கள் மனம் திரும்பி உங்களோடு வந்து விடுவார்கள்.

நான் எல்லோரையும் நேசிப்பது போல நீங்களும் அவர்களை நேசியுங்கள்.

பிரிந்து சென்றோரை வார்த்தைகளால் அழைப்பதற்குப் பதிலாக,

வாழ்க்கையால் அழையுங்கள்."

"நன்றி, ஆண்டவரே."

அலைகடலில் இயேசு நடந்து வந்தது போல,

பிரச்சனைகள் வழியாக இயேசு நம்மை நோக்கி நடந்து வருகிறார்.

அவருடைய உதவியுடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம்.

லூர்து செல்வம்.

Tuesday, April 26, 2022

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."(அரு.3:17)

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."
(அரு.3:17)

மனித மொழியில் குற்றம் சாட்டப்பட்டவனை விசாரித்து 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையும், நிரூபிக்கப்படாவிட்டால் விடுதலையும் வழங்குவதையே தீர்ப்பு என்கிறோம்.

ஆதிமனிதன் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்தான்.

கடவுளைப் பொருத்தமட்டில் அவன் செய்தது பாவமா இல்லையா எங்கே விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை.

 அவன் செய்தது பாவம் என்று அவருக்கு தெரியும்.

அவர் தீர்ப்பு வழங்குவதாக இருந்திருந்தால் அன்றே அவனுக்குத் தண்டனை வழங்கியிருப்பார்.

தண்டனை வழங்கவில்லை.
இரக்கமுள்ள கடவுள் பாவியைத் தண்டிக்க விரும்பவில்லை.

மாறாக, மனுக் குலத்தைப் பாவத்திலிருந்து மீட்க மீட்பரை அனுப்புவதாக வாக்களித்தார்.

அவரது மகனையே மனிதரை பாவத்திலிருந்து மீட்க உலகிற்கு அனுப்பினார்.

இயேசு உலகிற்கு வந்தது நம்மை பாவத்திலிருந்து மீட்கவே,

நமக்குத் தீர்ப்பு அளிக்க அல்ல.

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."

என்று இயேசுவே கூறிவிட்டார்.

ஆகவே இதற்கு வேறு ஆதாரம் தேவை இல்லை.

ஆனால் இயேசுவை, அதாவது, மீட்பரை ஏற்றுக் கொள்ளாதவன் பாவத்தின் விளைவை ஏற்றுக்கொள்ள நேரிடும்.

பாவத்தின் விளைவு: கடவுளின் உறவை முறித்துக் கொள்ளுதல்.

மீட்பரை ஏற்றுக் கொள்பவன் பாவத்தின் விளைவிலிருந்து விடுதலை பெறுகிறான் நித்திய பேரின்பத்தை அடைகிறான்.

இறுதிவரை மீட்பரை ஏற்றுக் கொள்ளாதவன் நித்திய பேரின்பத்தை இழக்கிறான்.

நித்திய பேரின்பத்தை அடைவது மீட்பின் காரணமாக.

நித்திய பேரின்பத்தை இழப்பது தீர்ப்பின் காரணமாக அல்ல.

தீர்ப்பே அளிக்கப்படுவதில்லை.

அவனேதானே இறையுறவை 
முறித்துக் கொள்கிறான்!

"ஒளி உலகத்திற்கு வந்துள்ளது: மனிதர்களோ ஒளியைவிட இருளையே விரும்பினர்: ஏனெனில், அவர்களுடைய செயல்கள் தீயனவாயிருந்தன."

மீட்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பற்றி இயேசு கூறுகிறார்:

ஒளி உலகத்திற்கு வந்துள்ளது.
அதாவது,
மீட்பர் உலகத்திற்கு வந்துள்ளார்.

மனிதர்களோ ஒளியைவிட இருளையே விரும்பினர்:
அதாவது,
அவர்கள் மீட்பரை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஏனெனில், அவர்களுடைய செயல்கள் தீயனவாயிருந்தன.
அதாவது,
அவர்கள் பாவ வாழ்க்கையை விடவில்லை.



நீச்சல் தெரியாத ஒருவன் கணற்றுக்குள் குதித்துவிட்டான்.

அவன் மூழ்கும் நிலையில் இருக்கும்போது அவனைக் காப்பாற்ற ஒருவன் உள்ளே குதிக்கிறான்.

காப்பாற்ற வந்தவனை ஏற்றுக் கொள்ளாமல் உதைத்துத் தள்ளிவிட்டான்.

மூழ்கி உயிர் இழக்கிறான்.

அவன் உயிர் இழப்பதற்கு காரணம் யார்?

அவனேதான்.

நாம் பாவம் என்னும் கிணற்றுக்குள் விழுந்து விட்டோம்.

நம்மை பாவத்திலிருந்து மீட்க இயேசு வந்தார்.

அவரை ஏற்றுக் கொள்பவர்கள் மீட்பு அடைவார்கள்.

ஏற்றுக் கொள்ளாதவர்கள் பாவத்தின் விளைவைச் சந்திப்பார்கள்.

மீட்புக்குக் காரணம் இயேசு.

மீட்புப் பெறாமைக்குக் காரணம் இயேசு அல்ல. அவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள்தான் காரணம்.

அவர் மீட்கவே வந்தார்.
தீர்ப்பிட அல்ல.

 
அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும் என்று டாக்டர் சொன்னார்.

 ஒருவன் அவருடைய வார்த்தையை மீறி அதிகமாகச் சாப்பிட்டு விட்டான்.

வயிற்று வலி வந்துவிட்டது.

வலி குணமாக சாப்பிட ஒரு மாத்திரை கொடுத்தார்.

அவன் மாத்திரையைச் சாப்பிடவில்லை.

வயிற்று வலி நீடித்தது.

வயிற்று வலி நீடித்ததற்கான காரணம் நோயாளியா?

அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும் என்று சொன்ன டாக்டரா?

நோயாளிதான்.

 இயேசு உலகுக்கு வந்தது பாவிகளை மீட்கவே.

அவர் தரும் மீட்பை ஏற்க வேண்டியவர்கள் நாம்.

நாம் இறந்தவுடன் தனித்தீர்வையும்,

உலக இறுதி நாளில் பொதுத் தீர்வையும் உண்டு என்று விசுவசிக்கிறோம்.

இயேசு தீர்ப்பிட வரவில்லை, அப்படியானால் நாம் விசுவசிப்பது தவறா?

நமது விசுவாசம் சரியே, அதைப் புரிந்து கொள்ள வேண்டிய விதமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவன் சம்பந்தப்பட்ட உண்மைகள் மனித மொழிக்கு அப்பாற்பட்டவை.

அவற்றை நமக்குத் திருச்சபை நமது மொழியில்தான் விளக்குகிறது.

அவற்றை விளக்கப் பொருத்தமான வார்த்தை மனித மொழியில் இல்லாவிட்டால்,

பயன்படுத்தப்படும் வார்த்தைகளை புரிந்து கொள்ள வேண்டிய விதமாகப் 
புரிந்து கொள்ள வேண்டும்.

இறைமகனைப் பற்றி பேசும்போது

"இவர் தந்தையிடமிருந்து ஜெனித்தார், 

தந்தையிடமிருந்து பிறந்தார் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.

மனித மொழிப்படி தந்தையிடமிருந்து பிறந்தவர் தந்தைக்கு இளையவராய் இருப்பார்.

ஆனால் இறைமகன் தந்தைக்கு இளையவர் அல்ல.

தந்தையும் நித்தியர்,
மகனும் நித்தியர்.

இறைமகன் தந்தையிடமிருந்து நித்திய காலமாகப் பிறக்கிறார்,

எப்படி தந்தை துவக்கம் இல்லாதவரோ,

அப்படியே மகனும் துவக்கம் இல்லாதவர்.

இதுதான் விசுவாச சத்தியம்.


தனித் தீர்வை, பொதுத் தீர்வை என்ற வார்த்தைகளையும் புரிந்து கொள்ள வேண்டிய விதமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மரணிக்கும் மனிதன் மோட்சத்துக்குப் போக வேண்டுமா,

நரகத்துக்குப் போக வேண்டுமா என்று தீர்மானிப்பது அவனது ஆன்மாவின் நிலைதான்.

ஆன்மா பரிசுத்த நிலையில் இருந்தால் இறந்த வினாடியே இறைவனிடம் சென்று விடும்.

பாவ நிலையில் இருந்தால் நரகத்துக்குச் சென்று விடும்.

பரிசுத்தவான்கள் எங்கே செல்ல வேண்டும்,

பாவமுடையோர் எங்கே செல்ல வேண்டும் 

என்பது இறைவன் வகுத்த நியதி.

ஆனால் யார் யார் எங்கே செல்ல வேண்டும் என்பதை அவரவர் தான் தீர்மானிக்க வேண்டும்.

யார் யார் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் யார் யார் பாவ நிலையில் இருக்க வேண்டும் என்று இறைவன் தீர்மானிப்பதில்லை.

இதை அவரவர் அவரவருடைய பரிபூரண சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவரவர் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

மனிதனின் சுதந்திரத்தில் இறைவன் குறுக்கிடுவதில்லை.

மரணத்தின் போது நடப்பது இறைவன் வகுத்த நியதிப்படி நடப்பதால் நாம் அதைத் 'தீர்வை' என்கிறோம்.

தனித்தீர்வை தனி மனிதனுக்கு நடப்பது போல, பொதுத் தீர்வை மனுக்குலத்திற்கு நடக்கிறது.
 
பொதுத் தீர்வையில் ஆன்மாவும், சரீரமும் சேர்ந்து அடையவேண்டிய நிலையை அடையும்.

மக்கள் அனைவரும்  அடைவதால்  இதைப் பொதுத் தீர்வை என்கிறோம்.
அதாவது எல்லோருக்கும் பொதுவான தீர்வை.

தேர்வை எப்படி எழுத வேண்டும் என்று ஆசிரியர் கூறியது போல எழுதினால் வெற்றி உறுதி.

மீட்பர் கூறியபடி நாம் நடந்தால் நமக்கு மீட்பு உறுதி.

லூர்து செல்வம்.

Monday, April 25, 2022

"விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்."(மாற்கு.16:16)

"விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்."
(மாற்கு.16:16)

"தாத்தா, இயேசு 'உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

16 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்,'

என்று கூறியிருக்கிறார்.

அப்படியானால் நமக்கு அறிவிக்கப்படும் நற்செய்தியை விசுவசித்து, ஞானஸ்நானம் பெற்றால் நாம் மீட்பு பெறுவோம் என்றுதானே அர்த்தம்."

",ஆமா, அதிலென்ன சந்தேகம்?"

"எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் சிலர் சந்தேகம் படுவதுபோல் தெரிகிறது. 

அவர்கள் விசுவசித்தால் மட்டும் போதாது, நற்செயல்கள் புரிய வேண்டும் என்கிறார்களே, ஏன்?"

",ஒரு தந்தையிடம் "உங்கள் பையனை இந்த பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுங்கள். 

அவன் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவது உறுதி."

என்று சொன்னேன்.

அவரும் நான் சொன்னபடி
 சேர்த்துவிட்டார்.

மறுநாள் அவர் என்னிடம் வந்து,

"நீங்கள் சொன்னபடி சேர்த்துவிட்டேன், ஆனால் ஆசிரியர் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தால் மட்டும் போதாது நன்கு படிக்க வேண்டும் என்று சொல்கிறாராம். 

அப்போ யார் சொல்வது உண்மை?"
என்று கேட்டார்."

"அவருக்கு மூளை இல்லை என்று அர்த்தம். பள்ளிக்கூடத்தில் சேர்வதே படிப்பதற்காக தானே. படிக்காமல் எப்படி தேர்வில் வெற்றி பெற முடியும்?"

",அப்போ உனக்கும் மூளை இல்லை என்றுதான் அர்த்தம்."

"ஏன், தாத்தா?"

",நற்செய்தி இறைவனின் வாக்கு. 

நற்செய்தியை விசுவசிக்கும் போது இறைவனை விசுவசிக்கிறோம்.

இறைவனை ஏற்றுக் கொண்டு அவருக்காக நமது வாழ்வை முற்றிலும் அர்ப்பணிப்பது தான் உண்மையான விசுவாசம்..

விசுவசிப்பதே வாழ்வதற்காகத்தான்.

சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும்தான் நம்மை வாழ வைக்கின்றன.

சிந்தனையிலும், சொல்லிலும்,
 செயலிலும் நமது வாழ்வை முற்றிலுமாக இறைவனுக்கு அர்ப்பணிப்பது தான் உண்மையான விசுவாசம்.

'இந்த மருந்தை சாப்பிடுங்கள் நோய் குணமாகிவிடும்' என்று மருத்துவர் கூறும்போது,

அவரிடம் 'நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்' என்று கூறினால் மட்டும் போதாது.

அவர் சொன்ன மருந்தைச் சாப்பிட வேண்டும்.

அப்போதுதான் நோய் குணமாகும்.

அதேபோல இறைவனது நற்செய்தியை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது, அதன்படி நடக்க வேண்டும்.

நற்செய்தியைச் செயல்படுத்த வேண்டும்.

நற்செய்தியின் செயல் வடிவம்தான் நற்செயல்.

'உனக்கு தீமை செய்பவர்களுக்கு நீ நன்மை செய்.'

இது நற்செய்தி.

அதை நாம் செயல்படுத்துவது நற்செயல்.

நாம் நமக்கு தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யாவிட்டால் 

அதை   ஏற்றுக்கொண்டதனால் நமக்கு என்ன பயன்?

நாம் விசுவசிப்பதற்கு உயிர் கொடுப்பது நமது செயல்.

 செயல் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம்.

உயிரில்லாத மனிதனை என்ன சொல்வோம்?

செத்த மனிதன் என்று தானே!

ஞானஸ்நானம் பெறுவது கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கே.

கிறிஸ்தவர்களாக வாழாமல் அஞ்ஞானிகளாக வாழ்ந்தால். நாம் ஞானஸ்நானம் பெற்றும் பயனில்லை.

' நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானை நேசி'

என்பது நற்செய்தி.

நாம் நம்மை நேசிப்பதால் தான் வேளாவேளைக்கு சாப்பிடுகிறோம்.

வேளாவேளைக்கு சாப்பிட எதுவும் கிடைக்காத நமது அயலானுக்கு சாப்பாடு கொடுத்து உதவாவிட்டால் நாம்

 நம்மை நேசிப்பது போல அயலானை நேசிக்கவில்லை.

உணவு கிடைக்காதவர்களுக்கு உணவு கொடுப்பது ஒரு நற்செயல்.

இதை நாம் செய்யாவிட்டால் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு என்ன பயன்?

நமக்கு விரோதமாக குற்றம் செய்தவரை மன்னித்து விட்டு தான்,

இறைவனுக்கு விரோதமாக நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

இது நற்செய்தி.

நாம் பிறரை மன்னிக்காமல் நமக்கு மட்டும் இறைவனிடம் மன்னிப்பு கேட்டால் எப்படி மன்னிப்பு கிடைக்கும்?"

''நாம் விசுவசிக்கும் நற்செய்தியை பயன்படுத்தாவிட்டால் 

நாம் விசுவசித்தும் பயனில்லை என்கிறீர்கள், அப்படித்தானே?"

", அப்படியேதான்.

நாம் கடவுளை விசுவசித்தால்,
(If we have faith in God) அவர் என்ன செய்தாலும் நமது நன்மைக்காகவே செய்வார் என்பதை ஏற்றுக் கொள்வோம்.

அவரது சொல்லை செயல்படுத்தும்போது நமக்கு எந்த தீங்கும் வராது என்பதையும் ஏற்றுக் கொள்வோம்.

"நான் நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்."

இவை நல்லவர்களை நோக்கி இயேசு இறுதி நாளில் கூறப்போகும் வார்த்தைகள்.

ஒருவன் கொரோனா நோய் வாய்ப்பட்டிருந்தால் நமது விசுவாசத்தின்படி அவனில் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

நாம் இயேசுவைப் பார்க்கப் போகாவிட்டால்?"

''நமது விசுவாசத்தில் உயிர் இல்லை."

",நமது விசுவாசத்தில் உயிர் இருக்கிறதா என்பதை நாமே பரிசோதித்துப் பார்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

நாம் மிகவும் நேசிக்கும் ஒருவன் கிணற்றுக்குள் விழுந்து விட்டால்

 நமது உயிரையும் பணயம் வைத்து தான் அவனை காப்பாற்ற உள்ளே குதிக்கிறோம்.

நமது சொந்த மகனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு காணும்போது நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி நாம் கவலைப் படுவதில்லை.
 
இதற்குப் பெயர்தான் தன்னல மற்ற அன்பு.

நமது அன்பின் தன்னலமற்ற தன்மை நமது அன்பின் ஆழத்தைப் பொறுத்தது.

தொழுநோய் ஒரு தொற்று நோய் என்று அன்னைத் தெரெசாவுக்குத் தெரியும்.

ஆனால் அவள் தெருவில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் தொழுநோயாளிகளை தன் கைகளால் தூக்கி,

 இல்லத்திற்கு எடுத்துச் சென்று,

அவர்களது புண்களைத் தன் கைகளாயே கழுவி மருந்து போட்டாள்.

புனித தமியான் (Saint Damien of Molokai), தொழுநோயாளிகள் மத்தியில், அவர்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்து, தொழுநோயிலேயே இறந்தார்.

அது தான் தன்னலமற்ற அன்பு,

இயேசுவுக்குப் பிடித்தமான அன்பு.

தன்னலமற்ற அன்பு உடையோர்

பாம்புகளைக் கூட கையால் பிடிப்பர்,
மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக.

அவர்கள் பிணியாளிகள் மேல் கைகளை வைத்தால் நோய் குணமாகும்."

"புனிதர்கள் செய்கின்ற புதுமைகள் எல்லாம் அவர்கள் உலகில் வாழும்போது கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாகத்தான் என்கிறீர்கள்."

", சந்தேகம் இல்லாமல்.

மோட்சத்தில் நமக்கு விசுவாசம் இருக்காது.

  உலகில் வாழும் போது விசுவசித்ததையெல்லாம்  
நேரடியாக பார்த்து அனுபவிிப்போம்.

உலகில் இருக்கும்போது நாம் கொண்டிருந்த மூன்று 
தேவசம்பந்தமான புண்ணியங்களில்

மோட்சத்தில் இருப்பது அன்பு மட்டுமே.

அன்புக்கு முடிவே கிடையாது.

இவ்வுலகில் விசுவசிப்போம், நம்புவோம், நேசிப்போம்.

மறுவுலகில் நேசிப்போம், நேசித்துக் கொண்டேயிருப்போம்."

லூர்து செல்வம்.


Saturday, April 23, 2022

"என் தந்தை என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்"(அரு.20:21)

"என் தந்தை என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்"
(அரு.20:21)

இயேசு தன் சீடர்களிடம் சொல்கிறார்:

"என் தந்தை எதற்காக என்னை உலகிற்கு அனுப்பினார்?

உலக மக்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, அவற்றை மன்னிப்பதற்காகத்தான் என்னை உலகிற்கு அனுப்பினார்.

நான் உலகிற்கு வந்ததின் நோக்கமே பாவமன்னிப்புதான்.

தந்தையிடமிருந்தும், தூய ஆவியிடமிருந்தும் என்னைப் பிரிக்க முடியாது.

நானும், தந்தையும் ஒன்றாயிருப்பது போலவே தூ ஆவியும் எங்களோடு ஒன்றாக, ஒரே கடவுளாக இருக்கின்றார்.

 தந்தையோடு ஒன்றாக இருந்து கொண்டே நான் உலகிற்கு வந்தது போல எங்களோடு  ஒன்றாக இருக்கும் தூய ஆவியை உங்களிடம் அனுப்புகின்றேன்.

தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

எதற்காக?

நான் உலகிற்கு வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக.

அதாவது உலகினரின் பாவங்களை மன்னிப்பதற்காக.

பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்.


பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்போது தந்தையையும், என்னையும் சேர்த்துதான், 

அதாவது பரிசுத்த திரித்துவத்தைப், 

பெற்றுக் கொள்கிறீர்கள்.

நாங்கள் எப்போதும் ஒன்றாய் இருப்பதுபோல  நீங்களும் எங்களோடு,

அதாவது,

ஒரே கடவுளோடு ஒன்றாய் இருங்கள்.

நீங்கள் மக்களிடம் செய்யும் ஒவ்வொரு செயலும் பாவ மன்னிப்பை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

நற்செய்தியைப் போதியுங்கள்,

தேவத் திரவிய அனுமானங்களை நிறை வேற்றுங்கள்,

திருப்பலி நிறைவேற்றி, மக்களுக்கு என்னை உணவாகக் கொடுங்கள்,

இவை எல்லாம் மக்கள் பாவம் இல்லாமல் பரிசுத்தமான வாழ்வு வாழ்வதற்காகத்தான்.

அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து, பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

மக்களின்  பாவங்களை மன்னிக்கும் முழு அதிகாரத்தை உங்களிடம் தந்திருக்கிறேன்.

அதை முழுமையாகப் பயன்படுத்துங்கள்.

அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்யும்படி மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

மக்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றுமுன் பாவசங்கீர்த்தனத் தொட்டியில் உட்காருங்கள்.

பாவம் இன்றி திருப்பலியில் கலந்து கொண்டால் தான் எனது அருள் வரங்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

பாவத்தோடு என்னை உணவாக உட்கொண்டால் அது என்னை அவமதிக்கும் செயல் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

பரிசுத்தமான உள்ளத்தோடு தான் மக்கள் என்னை வரவேற்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

நான் உங்களுக்குத்  தந்திருக்கும் 
பாவங்களை மன்னிக்கும்  அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள். 

நான் தந்தையோடும், தூய ஆவியோடும்  எப்போதும் உங்களோடு இருக்கின்றேன்.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் பாவங்களை மன்னியுங்கள்."

*           *                  *                *              *



அன்புள்ள சகோதர, சகோதரிகளே,

இயேசு தனது சீடர்களிடம் கூறிய வார்த்தைகள்  நமக்காகத்தான்.

நமது மீட்புக்காகத்தான் இயேசு தனது சீடர்களை நம்மிடம் அனுப்பியுள்ளார்.

ஆகவே இயேசுவின் விருப்பப்படி நாம் அனைவரும் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்வோம்,

பரிசுத்தமாய் வாழ்வோம்,

பரலோக சாம்ராச்சியம் நமதே!

லூர்து செல்வம்.

Thursday, April 21, 2022

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."(அரு.21:25)

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."
(அரு.21:25)

தாய்த் திருச்சபை எதைச் சொன்னாலும்,

 "இது பைபிளில் இருக்கிறதா?

 என்று கேட்கும் நம்முடைய பிரிவினை சகோதரர்களுக்காக

அருளப்பர் எழுதிய வசனம் இது.

இயேசு அப்போஸ்தலர்களைப் பார்த்து,

"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,

 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள்."
(மத்.28:19,20) என்று சொன்னார்.

இயேசு தனது அனைத்து போதனைகளையும்,

அனைத்து மக்களுக்கும் போதிக்கும்படி தன் சீடர்களுக்குக் கட்டளையிடுகிறார்.

புனித அருளப்பரின் கூற்றுப்படி
 இயேசு சொன்னவை, செய்தவை அனைத்தும் நற்செய்தி நூல்களில் எழுதப்படவில்லை. 

அப்போஸ்தலர்கள் இயேசு சொன்னபடி செய்தார்கள்.

அதாவது, நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டவற்றை மட்டுமல்ல,

 இயேசு சொன்னவை செய்தவை அனைத்தையும் போதித்தார்கள்.

அவர்கள் போதிக்க ஆரம்பிக்கும்போது நற்செய்தி நூல்கள் எதுவும் எழுதப்படவில்லை.

ஆரம்பகால திருச்சபையில் போதிக்க பட்டவை அனைத்தும் நற்செய்தி நூல்களில் எழுதப்படவில்லை.

போதிக்கப் பட்டவை அனைத்தும் நடைமுறைப் படுத்தப்பட்டன.

ஆகவே நற்செய்தி நூல்கள் எழுதப்பட்ட பின் திருச்சபையின் நம்பிக்கைகளிலும்,  நடைமுறையிலும்  

எழுதப்பட்டவையும் இருந்ததன,

எழுதப்படாதவையும் இருந்தன.

எழுதப்பட்டவற்றை பைபிள் என்போம்.

பைபிளில் எழுதப்படாதவற்றைப் பாரம்பரியம் என்போம். 

முதலில் பாரம்பரியமாக போதித்ததைத்தான் நற்செய்தி நூல்களில் எழுதினார்கள்.

ஆகவே பாரம்பரியத்தின் குழந்தைதான் நற்செய்தி நூல்கள்.

ஆரம்பகால திருச்சபையில் அப்போஸ்தலர்களால் போதிக்கப் பட்டவைதான் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து இந்நாள் வரையிலும் போதிக்கப் படுகின்றன.

எல்லா தேவத்திரவிய அனுமானங்களும் திருச்சபையின் ஆரம்பகாலத்திலிருந்தே செயல்பாட்டில் இருந்தன.

ஆகவே பைபிளையும், பாரம்பரியத்தையும் ஏற்றுக் கொள்பவர்கள் தான் இயேசு நிறுவிய திருச்சபையை ஏற்றுக் கொள்கிறார்கள், 

அதாவது,

இயேசுவை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இயேசுவின் ஞான உடல்தான் திருச்சபை

பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இயேசுவை. ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசுவின் போதனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளாதவர்கள் இயேசுவை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசுவை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

நாம் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நமது தந்தை படிப்புச் செலவிற்காக நேரடியாகவும் பணம் தந்திருப்பார், 

Money order மூலமாகவும் அனுப்பியிருப்பார்.

 Money order மூலமாக அனுப்பியது மட்டுமே அவருடைய பணம்,

நேரடியாகத் தந்தது அவருடைய பணம் அல்ல என்று வாதாடினால்

 அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா?

எழுத்து மூலம் வந்தவைதான் இயேசுவின் போதனைகள்,

 வாய்மொழி மூலம் வந்தவை இயேசுவின் போதனைகள் அல்ல என்று வாதாடுவதும் அதே போன்றதே.

கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைகளை இயேசுவின் முழுமையான போதனைகள் என்று ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும்தான் உண்மையான கிறிஸ்தவர்கள்.

இயேசுவின் காலத்திலிருந்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது கத்தோலிக்க திருச்சபை மட்டுமே. 

இயேசுவின் பெயரையும், அரைகுறையான பைபிளையும் வைத்துக்கொண்டு இடையில் தோன்றியவை அல்ல.

"என் ஆட்டுக்குட்டிகளை மேய்"

"என் ஆடுகளைக் கண்காணி"

"என் ஆடுகளை மேய்."

என்ற வார்த்தைகள் மூலம் இயேசு இராயப்பரை கத்தோலிக்கத் திருச்சபையின் முழு நிர்வாகத் தலைவராக ஏற்படுத்தினார்.

இராயப்பரின் வாரிசுதான் பாப்பரசர்.

பாப்பரசரைத் திருச்சபையின் தலைவராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே இயேசுவால் நிறுவப்பட்ட திருச்சபையை ஏற்றுக்கொள்கிறார்கள்.

லூர்து செல்வம்.

Wednesday, April 20, 2022

"இயேசு, அவர்கள் நடுவே தோன்றி, "உங்களுக்குச் சமாதானம்" என்றார்."(லூக்.24:36)

"இயேசு, அவர்கள் நடுவே தோன்றி, "உங்களுக்குச் சமாதானம்" என்றார்."
(லூக்.24:36)

 "தாத்தா, இயேசு பிறந்த அன்று வானதூதர்கள் "பூமியில் நன் மனதோற்கு சமாதானம்" என்று வாழ்த்தினார்கள்.

இயேசு தன் சீடர்களை நோக்கி,

"உங்களுக்குச் சமாதானம்" என்று வாழ்த்துகிறார். 

இதிலிருந்து என்ன தெரிகிறது?"

", தன்னுடைய சீடர்கள் நல்ல மனது உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார் என்று தெரிகிறது.

நல்ல மனதையும் சமாதானத்தையும் பிரிக்க முடியாது.

நல்ல மனது உள்ளவர்கள் தங்களை படைத்த இறைவனோடும், 

தங்களோடு வாழ்கின்ற மற்ற மனிதர்களோடும் சமாதான உறவில்தான் இருப்பார்கள்.

தன்னுடைய சீடர்கள் நல்ல மனதுடனும், சமாதான உறவுடனும் வாழ வேண்டும் என்று இயேசு வாழ்த்துகிறார்."

"ஒருவன் நல்ல மனதுடன் இருக்கின்றான். ஆனால் அவன் உறவு கொண்டாட அவனோடு யாரும் இல்லை. அவன் மனதில் சமாதானம் இருக்குமா?"

", நீ ஆணா? பெண்ணா?"

"ஆண்."

", நான் பெண்ணாக இருந்தால் என்ற நிபந்தனையுடன் கேள்வி கேட்கக் கூடாது. அதற்கான பதில் waste. ஏனெனில் அது உனக்கு பொருந்தப் போவதில்லை.

'உறவு கொண்டாட அவனோடு யாரும் இல்லை என்றால்' என்ற 
நிபந்தனை அடிப்படையில் கேள்வி கேட்கக் கூடாது.

ஏனெனில் யாராலும் தனியாக இருக்க முடியாது. கடவுள் அவனோடு இல்லாவிட்டால் அவனால் வாழவே முடியாது.

 நாம் நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தாலும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

 கடவுள் எங்கும் இல்லாவிட்டால் நாம் என்று சொல்ல நாமே இருக்க மாட்டோம்.

அதுமட்டுமல்ல மனிதன் ஒரு சமூக பிராணி. குறைந்த பட்சம் அப்பா, அம்மா இருந்துதான் ஆகவேண்டும்.

அவர்கள் இறந்துவிட்டாலும் "நான் அப்பா, அம்மா இல்லாமல் பிறந்தேன்" என்று ஒருவன் கூற முடியாது.

ஆகவே உனது கேள்வியே தவறு.

கேள்வியை மாற்றி கேள்."

"சரி. நல்ல மனது உள்ளவனிடம் சமாதானம் இருந்துதான் ஆக வேண்டுமா?"

",இருந்துதான் ஆக வேண்டும். அவன் அவனில் வாழும் கடவுளோடும், அவனோடு வாழும் அயலானோடும் நல்ல உறவில் தான் இருப்பான்.

நல்ல மனது இல்லாதவனிடம் சமாதானம் இருக்க முடியாது.

இன்று மக்களிடையே நல்ல உறவை கெடுக்கும் பிரச்சனைகள் எழுவதற்குக் காரணமே அவர்களிடம் நல்ல மனது இல்லை என்பதுதான்."

" நல்ல மனது என்றால்?"

",பிறருக்கு நல்லதையே நினைக்கும் மனது, அதாவது, பிறர்மேல் உண்மையான அன்பு உள்ள மனது.

யார் யாரோடு சமாதான உறவில் இருக்கிறோமோ அவர்களுக்கு நல்லதுதான் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம்.

யாருக்கும் எந்தவிதமான தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைத்தாலும் அதுவும் நல்ல மனதுதான்."

"எதுவுமே நினைக்காவிட்டால்?"

", நினைக்கிற மனதைப் பற்றிதான் பேசுகிறேன். 

நல்லதையே நினைத்தால் நல்ல மனது, தீங்கு நினைத்தால் கெட்ட மனது.

நினைக்காத மனதை பற்றி பேசுவது இல்லாத ஆளைப் பற்றி பேசுவதற்குச் சமம்." 

"சமாதான உறவு கெட்டுவிட்டால் அதை நல்ல உறவாக மாற்றுவது எப்படி?"

", நாம் பாவம் இல்லாமல் இருக்கும்போது இறைவனோடு சமாதான உறவில் இருக்கின்றோம்.

பாவம் செய்யும்போது இறைவனோடு நமக்குள்ள உறவை முறித்துக் கொள்கிறோம்.

கடவுள் மாறாதவர்.

நாம் பாவம் செய்யும் போதும் கடவுள் நமக்கு நல்லதையே நினைக்கின்றார்.

நம்மீது அவருக்குள்ள உறவை ஒரு போதும் முறிக்க மாட்டார்.

நாமாகவே முறித்துக்கொண்ட உறவை நாம் திரும்பவும் பெற்றுக்கொள்ள நாம் செய்த பாவத்திற்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அதற்காகத்தான் பாவசங்கீர்த்தனம் என்னும் திரு அருள் சாதனத்தை இயேசு ஏற்படுத்தியிருக்கிறார்.

நாம் மன்னிப்பு கேட்க வருவதற்காக,

ஊதாரி மகன் உவமையில் தந்தை காத்துக் கொண்டு இருந்தது போல,

இறைவனும் நமது வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

மன்னிப்பு கேட்டு இறைவனிடம் வந்த வினாடியே இறைவனோடு நமக்கு இருந்த நல்ல உறவு புதுப்பிக்கப்படும்.

நன்றாக நினைவில் வைத்துக்கொள்,

கடவுள் நம்மீது கொண்டுள்ள உறவை எந்த சூழ்நிலையிலும் முறித்துக் கொள்ள மாட்டார்.

யாராவது ஒருவன் தனக்கு இறைவனோடு உள்ள உறவை முறித்துக்கொண்டு நரக நிலைக்கு சென்று விட்டாலும்,

இறைவனது உறவு, அன்பு, தொடரும்.

ஆனால் நரக நிலையில் உள்ளவர்கள் மன்னிப்பு கேட்க முடியாது.

ஆகவே உறவை முறித்துக்கொண்டு சென்றவர்கள் உலகில் வாழும்போதே திரும்பி வந்து விட வேண்டும்."

"இரண்டு நண்பர்களுக்கு இடையே உள்ள சமாதான உறவு முறிந்து விட்டால் எப்படி சேர்ப்பது?"

",இருவரும் ஒருவரை ஒருவர் மன்னித்து உறவை புதுப்பித்துக்கொள்ள வேண்டியதுதான்.

உறவு முறிய காரணமாக இருந்தவர் முதலில் மன்னிப்பு கேட்பதுதான் முறை.

மனிதன் குறைபாடுகள் உள்ளவன். ஆகவே உறவு முறிய இருவருமே காரணமாக இருக்கலாம்.

ஆகவே ஒருவரை ஒருவர் மன்னிப்பது தான் சிறந்த நடைமுறை."

"திருப்பலியின் போது ஒருவருக்கொருவர் சமாதான வாழ்த்து கூறுகிறோம்..."

",ஒருவருக்கொருவர் கூறுகிறோமா?

ஒருவரைப் பார்த்து ஒருவர் 
கூறுகிறோமா?

என்பதுதான் தெரியவில்லை.

சிலர் இரண்டு பக்கமும் பார்த்து கூறுவார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சுவர் அருகே இருப்பவர்கள் சுவரைப் பார்த்தும் கூறுவார்கள்!

ஒருவரிடம் சமாதானம் கூறும்போது அவர் நல்ல மனது உள்ளவராகவும், எல்லோரோடும் சமாதான உறவில் இருக்கும்படியாகவும் வாழ்த்துகிறோம்.

Facebookல் like போடுவதுபோல் சிந்திக்காமல் சமாதானம் சொல்லக் கூடாது.

Facebookல் ஒருவரது மரணச் செய்தி வெளியாகியிருக்கும் அதற்கு ஆயிரம் பேர் like போட்டிருப்பார்கள்.

ஒருவரிடம் போய்,
"என்னுடைய அப்பா காலமாகிவிட்டார்" என்று சொன்னால்

அதற்கு அவர்

 "சந்தோஷம்" என்று பதில் சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்!

 Facebookல் செய்தி 
போட்டவருக்கும் அப்படி இருக்க வேண்டும்."

"நாம் ஜெபமாலை சொல்லும் போது மங்கள வார்த்தை செபத்தில் பாதியை விழுங்கி விடுகிறோமே!"

",கர்த்தர் கற்பித்த செபத்தில், 

'எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல
எங்கள் குற்றங்களை மன்னியும்.'

என்ற மன்றாட்டை உணர்வுபூர்வமாக நாம் சொன்னால்  

நம்மிடையே பரிபூரண சமாதான வாழ்வு நிலவும்.

நாம் செபிக்கிறபடியே,

மன்னிப்போம்,
மன்னிக்கப்படுவோம்.

எல்லோருக்கும் சமாதானம்.

லூர்து செல்வம்..

Tuesday, April 19, 2022

எம்மாவுஸ் அனுபவம்.

எம்மாவுஸ் அனுபவம்.

இயேசுவின் சீடர்களில் இருவர் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டு எம்மாவுசுக்கு போய்க்கொண்டிருந்தபோது இயேசுவும் தான் யாரென்று காட்டிக் கொள்ளாமலேயே அவர்களுடனே பயணிக்கிறார்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம் 

என்ன நடந்தது?" என்று கேட்கிறார்.

அவர்கள் இயேசுவின் பாடுகளைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் கூறி, 

"இஸ்ராயேலுக்கு விடுதலை அளிப்பவர் அவரே என நாங்கள் நம்பியிருந்தோம்."

அவர்களுடைய பேச்சில்

தங்களுக்கு விடுதலை அளிப்பார் என்று நம்பியிருந்தவரை 

அவருடைய விரோதிகள் கொன்று விட்டார்கள் என்ற வருத்தம் தெரிந்தது.

அவர்களைச் சார்ந்த பெண்கள் கூறியபடி "அவரைக் காணவில்லை"

, இயேசு உயிரோடு இருக்கிறார் என்று வானதூதர்கள் கூறியதை நம்பியதாகத் தெரியவில்லை.

நம்பியிருந்தால் ஜெருசலேமை விட்டு வந்திருக்க மாட்டார்கள்.

இயேசு தான் யாரென்று காட்டிக்கொள்ளாமலேயே 

தன்னைப்பற்றிய தீர்க்கதரிசனங்களை விளக்கினார்.

மெசியா பாடுகளைப் பட்டுதான் மகிமையடையவேண்டும் என்ற உண்மையையும் எடுத்துக் கூறினார்.

அவர்கள் கேட்டுக்கொண்டபடி அவர்களோடு தங்குவதற்காக அவர்களோடு சென்றார்.

அங்கு அவர்களுடன் பந்தியமர்ந்திருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, இறைபுகழ் கூறி, பிட்டு, அவர்களோடு அளித்தார்.

அதாவது அவர்களுக்குத் திவ்ய நற்கருணையை அளித்தார்.

அவரை அவர்கள் உணவாக உண்ட வினாடியே அவரை இயேசு என்று அடையாளம் கண்டுகொண்டார்கள்.

அவரோ அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.

அவர்கள் ஜெருசலேமுக்குத் திரும்பிச்சென்று, அப்போஸ்தலர்களுடன் 
தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்கள்.

பைபிளுக்கும், மற்ற உலகைச் சார்ந்த நூல்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம்.

மற்ற நூல்கள் நமது அறிவுக்குத் தீனி போடுகின்றன

பைபிள் நமது ஆன்மாவுக்குத் தீனி போடுகிறது.

மற்ற நூல்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களைத் தருகின்றன.

பைபிள் நாம் தியானித்து நமது ஆன்மீக வாழ்வுக்குப் பயன்படும் விசயங்களைத் தருகின்றது.

பைபிள் தரும் ஒவ்வொரு நிகழ்வும் நமது அன்றாட வாழ்வின் நிகழ்வில் பிரதி பலிக்க வேண்டும்.

எம்மாவுஸ் அனுபவத்தின் இறுதிக் கட்டத்தில், சீடர்கள் திவ்ய நற்கருணையைப் பார்த்ததுமே இயேசுவை அடையாளம் கண்டு கொண்டார்கள்.

இந்த அனுபவம் நமது அனுபவமுமாக இருக்க வேண்டும்.

திவ்ய நற்கருணை வாங்கும்போது இயேசுவையே வாங்குகிறோம் என்ற முழுமையாக உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும்.


சீடர்களின் எம்மாவுஸ் அனுபவத்தை பல முறை வாசித்திருப்போம்.

இதே அனுபவத்தை நாமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறோமா?

இயேசு ஒவ்வொரு வினாடியும் நம்மோடு பேசிக் கொண்டிருக்கிறார்,

பைபிள், குருக்கள் மூலம் பேசும்போது நேரடியாகவே பேசுகிறார், ஏனெனில் பைபிள் இறைவாக்கு என்றும், குருக்கள் அவருடைய பிரதிநிதிகள் என்றும் நமக்கு தெரியும்.

ஆனால் பைபிள் எப்போதுமே கையில் இருப்பதில்லை குருக்களும் எப்போதுமே உடன் வருவதில்லை. 

ஆனால் நாம் செல்லும் இடமெல்லாம் உலகம் இருக்கிறது,

மனிதர்கள் இருக்கின்றார்கள்,

உயிர்ப் பிராணிகள் இருக்கின்றன.

இவற்றின் மூலமாகவும் இறைவன் நம்மோடு பேசுகிறார்.

பேசுவது தானென்று காட்டிக் கொள்ளாமலேயே நாம் நடக்கவேண்டிய சரியான பாதையை காட்டிக் கொண்டிருக்கிறார்.

நாம் அவர் காட்டுகின்ற பாதை வழியே நடக்கின்றோமா, அல்லது அதை உதாசீனப்படுத்திவிட்டு நமது இஸ்டம் போல் நடக்கின்றோமா?

கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர், நம்பிக்கை இல்லாதது மட்டுமல்ல அதை மற்றவர்களுக்கும் பிரச்சாரம் செய்பவர் காட்டுவழியே போய்க் கொண்டிருந்தார்.

திடீரென்று மேகம் கருத்து மழை வரப்போவது போல் தெரிந்தது.

ஆங்காங்கே ஒன்றிரண்டு மின்னல்கள் வெட்டின.

திடீரென்று எதிர்பாராத விதமாக ஒரு மின்னல் நண்பருக்கு அருகிலிருந்த பனை ஒன்றில் பலத்த இடியுடன் இறங்கியது.

இடிச்சத்தம் கேட்டவுடனே நண்பருடைய வாயிலிருந்து அவரே அறியாமல் வந்த வார்த்தைகள்,

"கடவுளே, காப்பாற்றும்."

அவர் தன் நிலைக்கு வர சிறிது நேரம் ஆகியது.

தன் நிலைக்கு வந்தவுடன் அவரது நினைவுக்கு வந்தன அவர் சொன்ன வார்த்தைகள்.

தன்னையே அவர் நம்ப முடிய வில்லை.

அடுத்து முழு நினைவுடன் அவர் சொன்ன வார்த்தைகள்,

"கடவுளே, நன்றி."

மின்னல் மூலம் இறைவன் பேசினார்.

காட்டை விட்டு வெளியே வரும்போது அவர் முழுமையான கடவுள் பக்தர்.


புனித லொயோலா இஞ்ஞாசியாருடன் கடவுள் பேசியது அவரது காலில் ஏற்பட்ட காயங்களின் மூலமாக.

ராணுவத்தில் போர்வீரராக பணியாற்றிக் கொண்டிருந்த அவர் யுத்தத்தின்போது அவரது காலில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஓய்வு நேரத்தின்போது இயேசுவையும், புனிதர்களையும் பற்றிய நூல்களை வாசிக்க நேர்ந்தது.

அதன் விளைவாகக் கிடைத்த பக்திதான் அவரை சேசு சபையை ஏற்படுத்தத் தூண்டியது.

காலில் காயங்கள் ஏற்படாதிருந்தால் அவர் ஒரு படைத் தளபதியாக மாறியிருவார்.

புனித பிரான்சிஸ் அசிசியுடன் அவரது தந்தையின் கோபத்தின் மூலமாக இறைவன் பேசினார்.

அவருடைய ஜவுளி கடையை பிரான்சிஸ் கவனித்துக் கொண்டிருந்தார்.

ஏழைகளிடம் துணிகளை விற்பதற்கு பதிலாக இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்தார்.

இதனால் கோபமடைந்த அவரது தந்தை,

"கடையை விட்டு வெளியே போ.
இனி இங்கே உனக்கு வேலை இல்லை. அப்பா என்று அழைத்துக்கொண்டு திரும்பி வராதே."

என்று கூறி விரட்டிவிட்டார்.

"இனி விண்ணகத்தில் இருக்கிற தந்தையே எனது தந்தை." என்று கூறி வெளியேறியவர் ஏழையாகவே வாழ்ந்து திருச்சபைக்குப் பணி புரிவதையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தார்.

அதன் விளைவாகத்தான் ஏழைகளின் சபையாகிய பிரான்சிஸ்கன் சபையை நிறுவினார்.

அநேகரிடம் இறைவன் நோய்கள் மூலமாகவே பேசுகிறார்.

நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் அவற்றிலிருந்து விடுதலை பெற இறைவனை தேடிவருகிறார்கள்.

இறைவனிடம் வந்தபின் நோய்களை சிலுவையாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

கொரோனா நோயினால் இறைவனை தேடிவந்து மனம் திரும்பியவர்கள் அநேகர் இருக்கின்றார்கள்.

இயற்கை பொருள்களைக் கூர்ந்து கவனித்தால் அவை நம்மிடம் அவற்றை படைத்த இறைவனின் சர்வ வல்லமையை பற்றிப் பேசும்.
 
 நம்மை நேசிக்கிற நண்பர்கள் மூலமாக மட்டுமல்லாமல் நம்மை வெறுக்கிற விரோதிகள் மூலமாகக் கூட நம்முடன் செயல் புரிவார்.

நமக்கு முன் உதாரணமாக நமது ஆண்டவராகிய இயேசுவே தனது வாழ்வில் இதை நடத்தி காண்பித்திருக்கிறார்.

இயேசு உலகிற்கு வந்தது நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு, மரித்து, நம்மை மீட்பதற்காக.

இப்பணியைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் அவருடைய விரோதிகள்.

அவர் நமக்காகப் பாடுகள் படவும், மரிக்கவும் உதவியவர்கள் அவர்கள்தான்.

கிறிஸ்தவ சமயம் பரவ உதவியவர்கள் யார்?

அதன் விரோதிகள்.

வேதசாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து என்பார்கள்.

வேதசாட்சிகளை உருவாக்கியவர்கள் யார்?

திருச்சபையை அழிக்க திட்டம் போட்ட மன்னர்கள்.

நாம் அனைவரையும் நேசிக்க வேண்டும்.

நம்மை வெறுக்கும் விரோதிகள் உண்மையில் நமது நண்பர்கள் தான்.

"உங்களை வெறுப்பவர்களை நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்." என்னும் இயேசுவின் கட்டளையை நிறைவேற்ற நமக்கு உதவுபவர்கள் அவர்கள்தானே!

மக்கள் அனைவரிலும் இயேசுவைக் காண்போம்.

அனைவரையும் நேசிப்போம்.

இயேசு அனைவர் மூலமாகவும் செயல்புரிந்து நம்மை மீட்கிறார்.

உயிர்த்த இயேசு தான் யாரென்று காட்டிக் கொள்ளாமலேயே நம்மோடு வாழ்கிறார்.

இந்த எம்மாவுஸ் அனுபவத்தை அனுபவிப்போம்.

லூர்து செல்வம்

Sunday, April 17, 2022

விண்ணுலக வாழ்வு.

விண்ணுலக வாழ்வு.

"தாத்தா..."

", என்னடா, ஏதாவது சந்தேகமா?"

"இல்லை, தாத்தா. சில விஷயங்களைப் பற்றி விளக்கம் கேட்க வேண்டியதிருக்கிறது."

", சரி, கேள்."

"இயேசு பாடுகள் பட்டு மரித்தார், முன்றாம் நாள் உயிர்த்தார் என்று கிளிப்பிள்ளை மாதிரி சொல்லி விடுகிறோம்.

அதற்குள் இருக்கும் இறையுண்மைகளை கொஞ்சம் விளக்குங்கள்."

", முதலில் சில அடிப்படை உண்மைகளைச் (Basic facts)
சொல்லிவிடுகிறேன்.

நாம் வாழ்வது மண்ணுலகில்.
இறைவன் வாழ்வது விண்ணுலகில்.

மண்ணுலக வாழ்வு 
இடம், நேரத்துக்கு உட்பட்டது.
Subject to Space and time.

நாம் இருப்பது இடத்தில். (Material place)

ஒரு இடத்தில் இருக்கும் பொருள் இன்னொரு இடத்தில் இருக்க முடியாது.

நாம் ஒரே நேரத்தில் இரண்டு ஊர்களில் இருக்க முடியாது.

 ஒரே நேரத்தில் நாற்காலியிலும், கட்டிலிலும் இருக்க முடியாது.

பொருள் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும்.

 ஒரு பொருள் அடைத்துக் கொண்டிருக்கும் இடத்தில்  இன்னொரு பொருள் இருக்க முடியாது.

'
இடத்துக்கு இடம், பொருளுக்குப் பொருள் தூரம் உண்டு.

சடப் பொருட்களுக்கு காலம், நேரம் உண்டு.

காலத்துக்கு துவக்கமும் முடிவும் உண்டு.

ஆகவே காலத்தில் வாழும் மனிதனுக்கும் துவக்கமும் முடிவும் உண்டு.

காலத்தை ஒரு நீள கோட்டிற்கு ஒப்பிட்டால், இரண்டு புள்ளிகளுக்கு இடையே (Between two points of time) இடைவெளி (Length of time) உண்டு.

விண்ணுலகம் ஒரு இடம் அல்ல. அங்கு நேரமும் கிடையாது.

மண்ணுலகில் வாழும் சடப் பொருட்களால் விண்ணுலகில் வாழ முடியாது, ஆவிகள் மட்டுமே வாழ முடியும்.

இறைவன் ஒரு ஆவி. சம்மனசுக்கள் ஆவிகள்.

மனிதன் சடப்பொருளாகிய உடலும், ஆவியாகிய ஆன்மாவும் இணைந்தவன்.

உலக வாழ்வின் இறுதியில் ஆன்மா உடலை மண்ணுலகில் விட்டு விட்டு விண்ணுலகிற்குச் சென்று விடும்.

மண்ணுலகில் நாம் இடத்தையும், நேரத்தையும் பயன்படுத்தி வாழ்வதுபோல,

விண்ணுலகில் வாழ முடியாது.

அங்கு  நாம் அனுபவிக்க இருப்பது வாழ்க்கை நிலையைத்தான்.

அங்கு உலக அனுபவத்தில் உள்ள எங்கு, எப்போது, என்ற கேள்விகளே கேட்க முடியாது.

ஏனெனில் அங்கு இடமும் இல்லை, நேரமும் இல்லை.

இயேசு மனிதனாய் பிறக்கும் போது தேவ சுபாவத்தில் நித்தியத்தில் வாழ்ந்து கொண்டே,

மனித சுபாவத்தில் துவக்கமும் முடிவும் , இடமும், நேரமும் 
உள்ள காலத்திற்குள் நுழைந்தார்.

இடத்தைப் பொறுத்த மட்டில் பெத்லகேமில் பிறந்தார்,

 நசரேத் ஊரில் வாழ்ந்தார், யூதேயாவிலும்,
கலிலேயாவிலும் நற்செய்தி அறிவித்தார், 

ஜெருசலேமில் உள்ள கல்வாரி மலையில் சிலுவையில் மரித்தார்.

காலத்தைப் பொறுத்த மட்டில் 33 ஆண்டுகள் வாழ்ந்தார்.

33வது ஆண்டு அவர் மரிக்கும்போது அவரது ஆன்மா உடலை உலகில் விட்டு விட்டு விண்ணகத்திற்குள் துழைந்தது."

"தாத்தா, கத்தோலிக்க விசுவாசப் பிரமாணத்தில்

"இயேசு பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து .
உயிர்த்தெழுந்தார்."

என்றுதான் சொல்கிறோம்.

நீங்கள் 'விண்ணகத்திற்குள் துழைந்தது என்று சொல்கிறீர்கள்?"

",முதலில் பாதாளத்தில் என்ற வார்த்தையை விளக்கி விடுகிறேன். மற்றவற்றை நீயே புரிந்து கொள்வாய்.

எப்படி மோட்சம் என்பது ஒரு இடம் இல்லை, வாழ்க்கை நிலையோ (State of life)

அதேபோல பாதாளம் என்பதும் ஒரு இடம் இல்லை, வாழ்க்கை நிலைதான்.

இயேசு சிலுவையில் நமது பாவங்களுக்கு பரிகாரமாக உயிர் விட்ட வினாடிதான் மனுக்குலம் மீட்பு பெற்றது.

அதுவரை வாழ்ந்து  மரித்த பரிசுத்தவான்களின்  வாழ்க்கை நிலைதான் பாதாளம்.

இயேசு சிலுவையில் மரித்த வினாடியே அவர்கள் மீட்பு பெற்று விட்டார்கள்,

அதாவது இறைவனோடு இணைந்து வாழும் மோட்ச நிலையை அடைந்து விட்டார்கள்.

இதைத்தான் நமக்கு புரியும் வகையில் நமது மண்ணக மொழியில் 

இயேசு பாதாளத்தில் இறங்கி அங்குள்ள ஆன்மாக்களை மோட்சத்திற்கு அழைத்து சென்றார் என்று கூறுவோம்.

நாம் புரிந்துகொள்ள வேண்டியது

 பாதாள நிலையில் இருந்த ஆன்மாக்கள் மோட்ச நிலைக்கு மாறினார்கள், 

அதாவது, மீட்பு அடைந்தார்கள்.

உலக கணக்குப்படி இறந்த மூன்றாம் நாள் இயேசு  உயிர்த்தார்.

உயிர்க்கும்போது அவரது சட நிலையில் இருந்த உடல் ஆன்மீக நிலைக்கு மாறியது.

His material body became a spiritual body.

உயிர்த்தபின் இயேசு ஆன்மாவுடனும், உடலுடனும் விண்ணுலகில் வாழ்கிறார்."

"இயேசு  உயிர்த்த நாற்பதாவது நாள்தான் விண்ணகம் எய்தினார் என்று நாம் விசுவாசிக்கிறோம்.

நீங்கள் உயிர்த்தவுடனே என்கிறீர்கள்?"

"இயேசு உயிர்த்த பின் நாற்பது நாட்கள் அப்போஸ்தலர்களுக்கு காட்சிகள் கொடுத்து

அவர்களோடு பேசினார்.

 நாற்பது நாட்களுக்குப் பின் அவர்களுக்கு காட்சி கொடுத்து பேசவில்லை.

இயேசு மரித்த பின் அதற்கு முன்னால் உலகில் வாழ்ந்தது போல வாழவில்லை.

உலக கணக்குப்படி நாற்பது நாட்களும் அப்பப்போ அப்போஸ்தலர்களுக்கு காட்சி கொடுத்தார்.

அதற்குப் பிறகு பரிசுத்த ஆவி அப்போஸ்தலர்கள் மீது இறங்கி வந்தபின் அவர்களது உள்ளத்தில் பேசி அவர்களை வழி நடத்தினார், இன்றும் அவர்களது வாரிசுகளை வழி நடத்திக்கொண்டு வருகிறார்."

"தாத்தா, இறந்தவர்களுக்கு இடம், நேரம் கிடையாது என்றீர்கள், ஆனால் இயேசு அப்போஸ்தலர் இருந்த இடங்களுக்குச் சென்று காட்சி கொடுத்திருக்கிறார்? 

(கலிலேயாவின் மலை
(மத்.28:16-20)

எம்மாவுஸ் (லூக்.24:15 - 31)

. ஜெருசலேம் (லூக்.24:36-49)

திபேரியாக் கடலருகே 
(அரு.21:3-14)


", விண்ணக வாசிகளுக்கு தான் இடம், நேரம் கிடையாது.

அப்போஸ்தலர்கள் மண்ணக வாசிகள். அவர்களுக்கு இடம், நேரம் உண்டே!"

"அங்கே இயேசு எப்படிப் போனார்? போக நேரம் பிடிக்குமே."

",நீ  எங்கே இருக்கிறாய்?"

" .இந்தியாவில்."

", அண்ணன் எங்கே இருக்கிறான்?"

"அமெரிக்காவில்." 

", இரண்டு பேருக்கும் அந்தோனியார் மீது பக்தி உண்டா?"

"உண்டு."

",அவர் எங்கே இருக்கிறார்?"

"மோட்சத்தில்."

",நீங்கள் இருவரும் அந்தோனியாரை நோக்கி செபிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

 யாருடைய செபத்தை அந்தோணியார் கேட்பார்?"

"இருவருடைய செபத்தையும்தான்."

", உன்னுடைய செபத்தைக் கேட்க அவர் இந்தியாவில் இருக்க வேண்டும்.

 உன்னுடைய அண்ணனுடைய செபத்தைக் கேட்க அவர் அமெரிக்காவில் இருக்க வேண்டும்.

 எப்படி ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் இருக்கிறார்?"

"மோட்சத்தில்  இடமும் நேரமும் இல்லை.

நாங்கள் இருவர் மட்டும் அல்ல, உலகிலுள்ள அத்தனை பேரும் அவரை நோக்கி செபித்தாலும் அனைவருடைய செபத்தையும் அவர் கேட்பார்.

யாரெல்லாம் தன்னை நோக்கி செபிக்கிறார்களோ அவர்களிடாமல்லாம் அவர் இருப்பார்."

", ஒரே நேரத்தில்?"

"அவருக்குதான் இடமும், நேரமும் கிடையாதே."

",இப்போது இயேசுவையும் அப்போஸ்தலர்களையும் நினைத்துப்பார்."

"இப்போ புரிகிறது. இயேசு யாருக்கெல்லாம் காட்சி கொடுக்க விரும்புகிறாரோ 

அங்கே இருப்பார்.
 
உலக முடிவில் நம் எல்லோரையும் கடவுள் உயிர்ப்பிப்பார்.

அதன் பின் இயேசுவையும், மாதாவையும் போல் நாமும் ஆன்ம சரீரத்தோடு விண்ணுலகில் வாழ்வோம்."

விண்ணக வாழ்வுதான் நமது நிரந்தர வாழ்வு என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

Friday, April 15, 2022

யூதாஸ் மோட்சத்துக்குப் போயிருப்பானா? நரகத்துக்குப் போயிருப்பானா?"

யூதாஸ் மோட்சத்துக்குப் போயிருப்பானா? நரகத்துக்குப்
 போயிருப்பானா?"

''யூதாஸ் பண ஆசை பிடித்தவன். அவன்    இயேசுவுக்கு ஊழியம் செய்தானா? பணத்திற்கு ஊழியம் செய்தானா?"

",அவன் இயேசுவின் சீடன். அவர் அழைத்தபோது அவருக்கு ஊழியம் செய்யத்தான் போயிருப்பான்.

ஆனால் அவனுக்கு பண ஆசை இருந்தது. இயேசுவின் சீடனாக இருந்தாலும் அவன் பணத்துக்காக அவரைக் காட்டிக் கொடுத்தான். ஆகவே அவன்பணத்திற்குதான் ஊழியம் செய்தான்.

 பணத்திற்கு மட்டும் ஊழியம் செய்தவன் மோட்சத்திற்குப் போயிருக்க வாய்ப்பு இல்லை,"

"இதைப் பற்றி தாய்த் திருச்சபையே அதிகாரப் பூர்வமான கருத்து எதுவும் கூறவில்லை.

கடவுளுக்கு மட்டும்தான் இது தெரியும்.

நமக்கு ஒன்று மட்டும் தெரியும்.

 எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் அவன் மனம் திரும்ப அவனது வாழ்வின் கடைசி வினாடி வரை

 கடவுள் அவனுக்கு நேரம் கொடுக்கிறார்.

A small fraction of one's last second is enough for one to get converted.

கடைசி வினாடியை அவன் பயன் படுத்தினானா இல்லையா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்."

"தாத்தா, எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது.

இயேசு சிலுவையில் தொங்கும் போது,

"தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்.23:34)

என்று செபித்தார் அல்லவா?"

", ஆமா."

"அதை உண்மையாகத்தானே செபித்திருப்பார்?"

", நிச்சயமாக. அவர் ஒப்புக்காக எதையும் செய்யமாட்டார்."

"அதுமட்டுமல்ல, தாத்தா. தந்தையும், அவரும் ஒன்று
என்று அவரே கூறியிருக்கிறார்.
அவரே கடவுள்.

அவரது விருப்பம் தனது மரணத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்க வேண்டும் என்பதுதான்.

ஆகவே யூதாஸ் மனந்திரும்ப போதுமான அருள் வரங்களை அள்ளிக் கொடுத்திருப்பார்.

அவற்றை அவன் படுத்தி கடைசி வினாடியில் மனம் திரும்பியிருப்பான் என்று நம்புவது தப்பா?"

", நல்ல பையன் இப்படித்தான் எதையும் positive வாக நினைக்க வேண்டும்."

"எனக்கு இன்னொரு நம்பிக்கையும் இருக்கிறது.

யூதாஸ் பணத்தை நேசித்தான். 
உண்மை. ஆனால் இயேசுவையும் நேசித்திருப்பான்."

", ஆனால் யாரை அதிகமாக நேசித்தான் என்பதுதான் கேள்வி. பணத்தையா? இயேசுவையா? பணத்துக்காக இயேசுவை காட்டிக் கொடுத்து விட்டானே!"

"ஆனால் எதற்காக காட்டிக் கொடுத்தான்?"

",அவரது விரோதிகள் அவரைத் கொல்லத் தேடினார்கள். அவர்களுக்கு அவரை காட்டிக் கொடுத்தான்."

"இப்போ கேள்வி அதுவல்ல. கொல்வதற்காகக் காட்டிக் கொடுத்தானா?

கொல்வதற்காகக் காட்டிக் கொடுத்திருந்தால் அவருக்கு மரணத் தீர்வை கிடைத்தவுடன்  அவன் சந்தோசப்பட்டிருக்க வேண்டுமே. 

அவன் சந்தோசப்பட்டானா?"


"அப்போது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு, 

மனம் வருந்தி, 

முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமைக்குருக்களிடமும்
 மூப்பரிடமும் கொண்டுவந்து,


4 "மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்றான். 

அவனோ வெள்ளிக்காசுகளை ஆலயத்தில் எறிந்துவிட்டுப் போனான். போய் நான்றுகொண்டான்."
(மத்.27:3-5)

இப்போ சொல்லுங்கள்.

அவன் சந்தோசப்பட்டானா?"

", இல்லை. அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு, 

மனம் வருந்தினான்."

''ஆக, அவரைக் கொல்வது அவனது நோக்கமல்ல."

", அப்போ, எது நோக்கமாக இருந்திருக்கும்?"

"பணம் மட்டும் தான்."

",கொல்வது அவனது நோக்கமல்ல என்றால் கொல்ல தேடியவர்களிடம் ஏன் காட்டிக் கொடுத்தான்?"

"கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். 

ஆரம்பத்திலிருந்தே அவருடைய விரோதிகள்  அவரைக் கொல்ல வழி தேடிக் கொண்டிருந்தார்கள். கொல்ல முடிந்ததா?

ஒரு முறை அவரது ஊரைச் சேர்ந்தவர்களே 

அவ்வூர் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிடக் கொண்டுசென்றனர்.

 அவரோ அவர்களிடையே நடந்து தம் வழியே போனார்."

நாம் காட்டிக் கொடுத்தால் நமக்கு பணத்துக்கு பணமும் கிடைக்கும், 

அவரை அவர்களால் கொல்லவும் முடியாது என்று எண்ணியே காட்டிக் கொடுத்திருப்பான்.

 அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக அவருக்கு மரணத்தீர்ப்பு இட்டு விட்டார்கள்.

அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு,  மனம் வருந்தினான்.

அதுமட்டுமல்ல, பணத்தை   ஆலயத்தில் எறிந்துவிட்டான்.

அப்போ அவனுக்கு பணத்தின் மீது அதிக பற்று இருந்ததா? இயேசுவின் மீது அதிக பற்று இருந்ததா?"

", அதாவது, அவன் இரண்டு எசமானர்களுக்கு ஊழியம் செய்ய ஆசைப்பட்டான்.  முடியவில்லை. 

அவன் இயேசுவிடம் சென்று மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.

ஆனால் தற்கொலை செய்து கொண்டானே.

அது பெரிய பாவம் அல்லவா.

தற்கொலை செய்து கொண்டால் எப்படி மோட்சத்துக்குப். போக முடியும்?"

"உண்மைதான். போக முடியாது.

ஆனால் கொஞ்சம் இப்படி சிந்தித்துப் பாருங்கள்.

இயேசு இரக்கம் உள்ளவர். தன்னைக் காட்டிக் கொடுத்ததற்கு வருந்திதானே அவன் தற்கொலை செய்து கொண்டான்.

அவன் மீது இரங்கி கடைசி நேரத்திலாவது அவன் மனந்திரும்ப 

அவனுக்கு அருள் வரங்களை அள்ளிக் கொடுத்திருக்கலாம் அல்லவா?

கடைசி வினாடியில் அவன் அவற்றை பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா?

நான் இயேசுவின் இரக்கப் பெருக்கத்தை நினைத்து இதைச் சொல்கிறேன்.

என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது.

ஆனால் நல்லதையே நினைப்போமே."

", ஆனால் இன்னொரு பக்கம் இடிக்கிறதே!

மனுமகனைக் காட்டிக்கொடுப்பவனுக்கோ ஐயோ கேடு! 

அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்."

என்று இயேசுவே சொல்லி விட்டாரே.

நீ யூதாசுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறாய்."


"தாத்தா, நான் யூதாசுக்கு வக்காலத்து வாங்கவில்லை.

ஆண்டவரது இரக்கத்தை பற்றி பேசுகிறேன்.

வார்த்தைகளுக்கு பொருள் காணவேண்டுமென்றால் பேசுகின்றவர்களுடைய தன்மை தெரிய வேண்டும்.

அம்மா வாயிலிருந்து என்ன வார்த்தை வந்தாலும் அதற்கு. அன்பின் பின்னணியில்தான் பொருள் காண வேண்டும்.

மகனைப் பார்த்து தாய்
'' நீ உருப்பட மாட்டாய் என்று சொன்னால்,"

"உனது நடவடிக்கைகள் சரியில்லை,
தவறுகளைத் திருத்தி உருப்படப் பார்." என்று தான் அர்த்தம், "உன்னால் உருப்பட முடியாது" என்று அர்த்தமல்ல


"மனுமகனைக் காட்டிக் கொடுப்பவனுக்கோ ஐயோ கேடு!"

இதிலுள்ள "ஐயோ கேடு"  என்ற வார்த்தைகளை வைத்து யூதாஸ் மோட்சத்துக்கு  போயிருக்கமாட்டான்  என்று தீர்மானிக்கக் கூடாது.

இயேசுவின் அன்பின் பின்னணியில் இதற்கு பொருள் கொள்ள வேண்டும்.

இயேசு பரிசேயர்களைப்பற்றியும், மறைநூல் அறிஞர்களைப்  பற்றியும், யூதமத தலைவர்களைப் பற்றியும் பேசும்போது "ஐயோ கேடு"  என்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பார்.

அதற்கு, "நீங்கள் தவறான பாதையில் போகின்றீர்கள். உங்களையே திருத்திக் கொள்ளுங்கள்." என்ற அன்பான கண்டிப்பு தான் இது.

அவர்களுக்கும் சேர்த்துதான் இயேசு ரத்தம் சிந்தி தன்னையே பலிக்கினார். 

காட்டிக் கொடுத்தல் பாவத்தின் கனா கனத்தை யூதாசுக்கும், அவனைப் பற்றி வாசிக்கும் நமக்கும் உணர்த்தவே அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பார்.

ஆண்டவர் பாடுகள் படக்கூடாது
என்று இராயப்பர் கூறியபோது 

"போ பின்னாலே, சாத்தானே," 

 என்று இயேசு கூறினார். 

இராயப்பர் ஒரு சாத்தான் என்ற பொருளிலா கூறினார்?

அவருடைய கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல
என்பதை வலியுறுத்தவே அவ்வாறு கூறினார்.

அதைப் போன்றதே ஐயோ கேடும்."

",அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்" என்று ஏன்
 கூறினார்?"

"இயேசு கடவுள். அவர் மனிதர்களுடன் பேசும்போது  மனித மொழியில் மனித பேச்சு வழக்கின் படியே பேசினார்.

மிகத் தவறான வாழ்க்கை நடத்தும் மகனைப் பார்த்து,

"ஏண்டா என் வயிற்றில் வந்து பிறந்தாய்." என்று தாய் சொன்னால்

அவள் மகன் பதில் சொல்ல கேள்வியா கேட்கிறாள்?

'அவன் போகிற பாதை மிகவும் தவறானது,

  அவன் திருந்தி நல்ல வாழ்வு வாழ வேண்டும்' என்ற பொருளில் தான் அந்த வார்த்தைகளை பேசுகிறாள்.

அது கேள்வியாக இருந்தால் மகன் என்ன பதில் சொல்வான்?

"உங்கள் வயிற்றிலிருந்து நானாக பிறக்கவில்லை. நீங்கள்தான் பெற்றீர்கள்." என்றுதான் சொல்வான்.

யூதாசும் அவனாகப பிறக்கவில்லை. இயேசுதான் அவனைப் படைத்தார்.

அவனது நடவடிக்கையின் தவறுகளைச் சுட்டிக் காண்பிக்கவே அவ்வாறு கூறினார்.

மொத்தத்தில் யூதாஸின் நடவடிக்கைகளை கண்டு அவர் எந்த அளவுக்கு வருந்தினார் என்பதைச் சுட்டிக்காட்டினார்."

",மொத்தத்தில் உனது முடிவுதான் என்ன?"

"யூதாஸின் பாவம் பெரியதுதான்.

ஆனால்  இயேசுவின் இரக்கம் அதைவிட மிக மிகப் பெரியது.

அவர்  யூதாசின் மீது அளவு கடந்த இரக்கமாய் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

கடவுளுக்கும், ஒரு ஆன்மாவுக்கும் இடையே உள்ள உறவின் இரகசியத்தை நம்மால் அறிய முடியாது.

ஒருவர் மீது தீர்ப்பு சொல்ல நமக்கு அதிகாரம் இல்லை.

நல்லதையே நினைத்தால் அதில் தவறில்லையே.

கடவுள் இரக்கம் மிகுந்தவர். நாம் சாகும்வரை எந்த வினாடியில் மன்னிப்பு கேட்டாலும், நமது பாவம் எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும் கடவுள் அதை மன்னிப்பார்.

நாம் இறந்த பின்பு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

வாழும்போது கடவுளின் இரக்கத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வோம்."

லூர்து செல்வம்.

Thursday, April 14, 2022

"என்ன, ஒரு மணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா ?(மத்.26:40)

"என்ன, ஒரு மணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா ?
(மத்.26:40)

இயேசு எந்த பணிக்காக உலகிற்கு வந்தாரோ அதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.

வியாழக்கிழமை இரவு உணவு முடிந்தவுடன் தனது சீடர்களுடன் கெத்சமனி தோட்டத்திற்கு வருகிறார்.

முன்பெல்லாம் அவருடைய விரோதிகள் அவரைப் பிடிக்க வலை வீசிக் கொண்டிருந்தபோது அவர்கள் கையில் அவர் அகப்படவேயில்லை.

ஏனெனில் அதற்காக அவர் நித்திய காலமாய் குறித்து வைத்திருந்த நேரம் வரவில்லை.

இப்போது அவர் குறித்து வைத்திருந்த நேரம் வந்து விட்டது.

யூதாஸ் அவர்களுடைய விரோதிகளுடன் கெத்சேமனி தோட்டத்திற்கு வருவான் என்று தெரிந்திருந்தும்,

தானே தன்னை ஒப்படைப்பதற்காக மற்ற சீடர்களுடன் அங்கே வருகின்றார்.

மறுநாள் அனுபவிக்கப் போகும் பாடுகளை நினைத்து அவருடைய மனது பயத்தினால் நடுங்க,

ஆறுதல் பெறுவதற்காக தந்தையிடம் பேசுவதற்காக, 

எட்டு சீடர்களை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு,

இராயப்பர், அருளப்பர், யாகப்பருடன் கொஞ்சம் தள்ளிப் போகிறார்.


 அவர்களை நோக்கி, "என் ஆன்மா சாவுக்கு ஏதுவான வருத்தமுற்றிருக்கிறது. 

இங்கே தங்கி என்னுடன் விழித்திருங்கள்" என்று கூறிவிட்டு,

கொஞ்சம் தள்ளிப் போய், இரத்த வியர்வையுடன் தந்தையுடன் செபிக்கிறார்.

, "என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும். எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" என்று செபித்துவிட்டு,

திரும்பி வந்து பார்க்கும்போது மூவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தாபோர் மலையில் இயேசு மறுரூபம் ஆகியபோது தூங்கியது போலவே இங்கேயும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிசயப் பிறவிகள்!

இயேசு இராயப்பரை நோக்கி, "என்ன, ஒரு மணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா ?
என்று கேட்கிறார்.

இயேசுவின் ஆன்மா சாவுக்கு ஏதுவான வருத்தமுற்றிருக்கும் போது அவர்களுக்கு எப்படித்தான் தூக்கம் வந்ததோ!

இன்று நம்மிடமும் இயேசு அதே கேள்வியைக் கேட்கிறார்.

"ஒரு மணி நேரம் என்னுடன் விழித்திருந்து செபிக்க உங்களால் முடியவில்லையா?"

அவர் தன்னை முழுவதும் நமக்குத் தந்திருக்கிறார்.

24 மணி நேரமும் நம் நினைவோடு இருக்கும் அவருக்காக நாம் ஒரு மணி நேரத்தை ஒதுக்கக் கூடாதா?

எததுக்கெல்லாமோ நேரத்தை 
ஒதுக்குகிறோம்.

Walking போக நேரம் ஒதுக்குகிறோம்,

Gym க்குப் போக நேரம் ஒதுக்குகிறோம்,

குறித்த நேரத்தில் tea சாப்பிடுவோம்,

தூங்குவதற்கு நேரம் ஒதுக்குகிறோம்,

இப்படி நேரம் ஒதுக்குகிற காரியங்களுக்கு list போட்டால் பக்கம் பக்கமாய் வரும்.

ஆனால் இன்று குடும்ப செபம் சொன்னீர்களா என்று கேட்டால்

"இன்று வேலை ரொம்ப tight, செபத்துக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை," என்போம்.

மனம் வைத்தால் இடம் உண்டு.

நம்மைப் பார்த்து ஆண்டவர் கேட்கிறார்,

"எனக்காக ஒரு மணி நேரம் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா?" என்று.

அவருக்கு என்ன பதில் சொல்வோம்?

நமக்கு நித்திய காலம் மோட்சத்தில் இடம் கிடைக்க வேண்டுமென்றால்,

இறைவனுக்கு நாம் தினமும் கொஞ்ச நேரமாவது நமது நினைவில் இடம் கொடுக்க வேண்டும்.

முறைப்படிக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் அவருக்கு ஒதுக்க வேண்டும்.

உண்மையில் அது மிக எளிது.
ஒரு குழந்தை தன் தாயின் அருகில் இருந்து மணிக்கணக்காய் விளையாடுவதுபோல,

நாமும் நமது விண்ணகத் தந்தையின் முன்னால் இருந்து கொண்டு வாழ்ந்தால்,

அதாவது அவருடைய சந்நிதானத்தில் வாழ்ந்தால்,

அவரோடு பேச நேரம் ஒதுக்கி விட்டுதான் மற்ற வேலை என்று தீர்மானிப்போம்.

அதைவிட எளிய வழி ஒன்றும் இருக்கிறது.

நித்தியரான கடவுள் நமக்காக பாடுகள் பட நேரம் ஒதுக்கியிருப்பதை நினைப்போம்.

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது அவரது பாடுகளைத் தியானிப்போம்.

செபமாலையின் துக்கத் தேவ இரகசியங்களைத் தியானிப்போம்.

விழித்திருந்து செபிக்க தினமும் 24 மணியையும் ஒதுக்கிவிட தயாராகி விடுவோம்.

இயேசுவோடு நாமும் விழித்திருந்து செபிப்போம்.

லூர்து செல்வம்.

Wednesday, April 13, 2022

"என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்." (மத்.26:39)

"என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்." (மத்.26:39)

"தாத்தா, இயேசு நித்திய காலம் வாழ்பவர். அவருடைய நித்திய கால திட்டப்படியே செயல்புரிபவர். 

அவர் மனிதனாகப் பிறந்தது, வாழ்ந்தது, பாடுகள் பட்டது, மரித்தது, உயிர்த்தது எல்லாம் அவரது நித்திய கால திட்டப்படி தான்.

அப்படியிருக்க, அவரது பாடுகளுக்கு முந்திய நாள்,

 "என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்." 

என்று தந்தையிடம் வேண்ட காரணம் என்ன? 

மாறாத கடவுளாகிய அவர் தன் திட்டத்தை மாற்ற விரும்ப காரணம் என்ன?"

", அவர் செய்தது எல்லாம் நமக்காகத்தான்."

"நமக்காகவா? நமக்காகத்தான் பாடுகள் பட்டு மரிக்கத் திட்டமிட்டார். நமக்காகத்தான் அதை மாற்ற விரும்பினார் என்கிறீர்கள்!"

",நமக்காகத்தான் அதை மாற்ற விரும்பினார் என்று நான் சொல்லவேயில்லையே.

  அவர் செய்தது எல்லாம் நமக்காக என்றுதான் சொன்னேன்."

"எல்லாம் என்றால் அதுவும் உள்ளே அடங்கிவிடுமே."

", ஆம். எல்லாம் உள்ளே அடங்கிவிடும். நீ அதை மட்டும்தானே கேட்டாய்.


அவர் மனிதனாகப் பிறந்தது, 
வாழ்ந்தது, 
கெத்சமனி தோட்டத்தில் செபித்தது,
பாடுகள் பட்டது, 
சிலுவையில் தொங்கும் போது கூறிய வார்த்தைகள்,
 மரித்தது, 
உயிர்த்தது

எல்லாமே நித்திய கால திட்டம் தான்.

அவர் தன் திட்டம் எதையும் மாற்ற மாட்டார்."

"துன்பக்கலத்தை ஏற்கத் திட்டம் போடும்போது அது அவரைவிட்டு அகலும்படி செபிக்கவும் திட்டம் போட்டாரா?

நீங்கள் சொல்வது எதுவுமே புரியவில்லை."

"அவர் சர்வ வல்லமையுள்ள, பலகீனம் எதுவும் சிறிது கூட இல்லாத கடவுள்.

மனிதனோ பாவங்களும், பலகீனங்களும் நிறைந்தவன்.

கடவுளால் பாவம் செய்ய முடியாது. அவர் மனித சுபாவத்தை ஏற்கும்போது 

பாவம் தவிர 

மனிதனுடைய மற்ற பலகீனங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே திட்டமிட்டார்.

பயம் மனித பலகீனங்களில் ஒன்று. பயப்படுவது பாவம் அல்ல.

இயேசு முழுமையான கடவுள்.
முழுமையான மனிதன்.
 
கடவுள் சுபாவத்தில் பயம் சிறிதும் கிடையாது.

மனித சுபாவத்தில் பயம் இருந்தது.

மனிதருடைய பாவங்களுக்கு பரிகாரமாக மிக அதிகமான வேதனைகள் நிறைந்த பாடுகள் பட தீர்மானித்துவிட்டார்.

பாடுகள் நெருங்கும் போது அவற்றின் மிக அதிகமான வேதனைகளை நினைத்து பயப்பட ஆரம்பித்தார்.

இது அவரே முழுமனதோடு ஏற்றுக்கொண்ட பலகீனமான பயம்.

பயத்தின் காரணமாக தந்தையை நோக்கி,

"என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்." என்று செபித்தார்.

ஆனால் அடுத்த வினாடியே,

 "எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" 

என்று செபித்தார்.

அவர் அப்படி செபித்ததும் நித்திய கால திட்டப்படிதான். 

இந்த செபத்தினால்,

1. தான் முழுமையான மனிதன் என்பதை நமக்கு புரியவைக்கிறார்.

2.பயம் ஏற்படும்போது நாம் தந்தையை நோக்கி செபிக்க வேண்டும் என்பதை நமக்கு கற்பிக்கிறார்.

3. "எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" என்று. செபித்தபோது

 நாம் நமது சொந்த விருப்பத்தை அல்ல, இறைவனது விருப்பத்தையே நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார், 

4. இந்த செபத்திற்குப் பின் தைரியமாக எதிரிகளிடம் தன்னை ஒப்படைக்கப் போகிறார். அதன் மூலம் பலகீனத்தை செபத்தின் மூலம் மாற்ற வேண்டும் என்று போதிக்கிறார். 

அவரது ஒவ்வொரு சொல்லும், செயலும் நமக்கு ஆன்மீக பாடம் கற்பிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளன."

"சிலுவையில் தொங்கும் போது கூறிய வார்த்தைகள் என்று எவற்றைச் சொல்கிறீர்கள்?

அவை எந்த பலகீனத்தை குறிக்கின்றன?"

",என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?"

அவர்தான் கடவுள். அவரே அவரைக் கைவிடுவாரா?

இங்கேயும் இது மனித பலகீனத்தின் வெளிப்பாடு.

கொஞ்சம் கடுமையாக சுகமில்லாதிருக்கும் ஒருவனுக்கு

 அவனால் இயன்ற மருத்துவ முயற்சி, செப முயற்சிக்குப் பின்னும் சுகம் கிடைக்காவிட்டால் 

இந்த மாதிரி எண்ணம் தோன்றும்.

பைபிளை ஒழுங்காக வாசித்து, தியானிப்பவனுக்கு இந்த மாதிரி எண்ணம் வந்தால்

 கூடவே இயேசு தரும் ஆறுதலும் வரும்.

"தந்தையே, உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்"

என்று அடுத்து கூறிய வார்த்தைகள் ஆறுதலைத் தரும்.

இந்த மாதிரி நேரங்களில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு இயேசு முன்னுதாரணம் காட்டியிருக்கிறார்.

"பயப்படாதே, மகனே. தந்தை உன்னைக் கைவிடவில்லை.
உன் வரவுக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இரு.
உனது ஆன்மாவை அவரிடமே ஒப்புக் கொடு."

என்று தன் மேல் அசையாத விசுவாசத்தில் இருப்பவர்களுக்கு இயேசு கூறுவார்."

"அதாவது எந்த சூழ்நிலையிலும் கடவுள் மேல் உள்ள நம்பிக்கையை சிறிதுகூட விட்டுவிடக்கூடாது என்பதை நமக்கு போதிக்கவே இந்த பலகீனத்தை ஏற்றுக்கொண்டார்."

", பாரமான சிலுவையை சுமந்து வரும் போது மூன்று முறை கீழே விழுந்தது அவரது பலகீனம். 

நாம் நமது பலகீனம் காரணமாக ஆன்மீக ரீதியாக எத்தனை முறை கீழே விழுந்தாலும்,

துணிந்து எழுந்து நடக்க வேண்டும் என்பதை நமக்குப் போதிக்கவே உடல் ரீதியாகக் கீழே விழுந்தார்.

எதிரிகள் அவரை விசாரிக்கும் போது ஏற்பட்ட அவமானங்களை மௌனமாக ஏற்றுக் கொண்டது  அவருக்கு மறுமொழி கொடுக்கத் தெரியாமலா?

நமக்காகப் பாடுகள் பட்டபோது அவருக்கு ஏற்பட்ட அவமானங்களை அவர் மௌனமாக ஏற்றுக் கொண்டது போல,

அவருக்காக மற்றவர்கள் நம்மை அவமானப் படுத்தும்போது 

அதை நாம் அவருக்காக மௌனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நமக்குப் போதிப்பதற்காக அவ்வாறு செய்தார்.

இன்று கிறிஸ்தவ விரோத சக்திகள் நம்மை அவமானப் படுத்தும் போது,

இயேசுவின் பாடுகளைத் தியானித்து,

இயேசுவுக்காக எந்த அவமானத்தையும் ஏற்றுக் கொள்ள நம்மை நாமே தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

சிலுவைப் பாதைதான் நமது ஆன்மீகப் பாதை.

அதில் இயேசு நடந்தது போலவே நாமும் நடக்க வேண்டும்.

பாடுகளுக்குப் பின்தான் மரணம்.

மரணத்திற்குப் பின்தான் உயிர்ப்பு.

வெள்ளிக் கிழமை இல்லா விட்டால் ஞாயிற்றுக் கிழமையும் இல்லை என்பதை நமது தவக்காலத்தில் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நமது வாழ்க்கையே நமக்கு தவக்காலம்தான்."

"இயேசுவின் மனித பலகீனம்தான் நமக்கு ஆன்மீக பலத்தைத் தர வல்லது என்பது நன்றாகவே புரிகிறது."

", நிறைவேற வேண்டியது நமது விருப்பமல்ல, விண்ணகத் தந்தையின் விருப்பமே."

லூர்து செல்வம்.

Tuesday, April 12, 2022

" என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்."(அரு. 6:56)இயேசுவின் வாக்குறுதி.(தொடர்ச்சி)

." என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்."
(அரு. 6:56)

இயேசுவின் வாக்குறுதி.
(தொடர்ச்சி)


அநேக பழைய ஏற்பாட்டின் நிகழ்வுகள் புதிய ஏற்பாட்டின் நிகழ்வுகளுக்கு முன் அடையாளம் என்பார்கள்.

இஸ்ரயேலர்கள் எகிப்தில் நிகழ்த்திய பாஸ்கா நிகழ்வு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

அவர்கள் எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து மீட்கப்பட்டதற்கு முந்திய இரவு

ஆட்டுக் குட்டி ஒன்றை அறுத்து, அதன் இரத்தத்தை வீட்டில் நிலைக்காலில் தெளித்து விட்டு

அறுக்கப்பட்ட ஆட்டுக் குட்டியை உண்ணவேண்டும் என்பது கடவுளின் கட்டளை.

"நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்கு அடையாளமாய் இருக்கும். அந்த இரத்தத்தைக் காணவே, உங்களை நாம் கடந்து போவோம். இவ்வாறு, நாம் எகிப்து நாட்டைத் தண்டிக்கும்போது, கொள்ளைநோய் உங்கள்மேல் வந்து அழிக்காதிருக்கும்."
(யாத்.12:13)

நிலைக்காலில் தெளிக்கப்பட்ட
இரத்தத்தைப் பார்த்து அவ்வீட்டின் தலைச்சன் பிள்ளையைக் கொல்லாமல் ஆண்டவர் கடந்து போனார்.

இதைத்தான் இஸ்ரயேலர்கள் கடத்தல் (Passover) விழாவாக தங்கள் சொந்த நாட்டுக்கு வந்தபின் ஆண்டுதோறும் கொண்டாடினார்கள்.

அந்த பாஸ்கா திருநாளை ஒட்டிதான் இயேசுவின் பாடுகளும், மரணமும், உயிர்ப்பும் நடைபெற்றன.

அன்று எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப் படுவதற்காக அறுத்து, பலியிடப்பட்டு, உண்ணப்பட்ட ஆட்டுக்குட்டி,

புதிய ஏற்பாட்டில் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்பதற்காக பாடுகள் பட்டு சிலுவையில் பலியிடப்பட்ட இயேசுவுக்கு அடையாளம்.

அன்று பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டி உண்ணப்பட்டது போல 

புதிய ஏற்பாட்டில் நாம் பாவங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காக பலியிடப்பட்ட இயேசு உண்ணப்பட வேண்டும்.

பலியிடப்பட்ட நாள் வெள்ளிக் கிழமையாக இருந்தாலும்,

பலிப் பொருள் உண்ணப்படும் நாளை வியாழக்கிழமையாக வைத்துக் கொண்டார் இயேசு.

"சீடரும் இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்து பாஸ்கா உணவுக்கு ஏற்பாடு செய்தனர்."

பாஸ்கா உணவின்போது,

"அப்பத்தை எடுத்து, நன்றிகூறி, பிட்டு, அவர்களுக்கு அளித்து, " இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல்."

"இக்கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை."

இந்த வார்த்தைகள் மூலம் இயேசு மறுநாள் பலியிட படவிருக்கும் தன்னை 

முந்திய நாளே தனது அப்போஸ்தலரகளுக்கு உணவாகக் கொடுத்தார்.

"என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்."

என்று அவர் 

ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததற்கு மறுநாள்

 ஏற்கனவே மக்களுக்குக் கூறியிருந்த இவ்வார்த்தைகள்

உலகம் முடியும் வரை வாழும் அனைவருக்கும் பொருந்தும்.

திவ்ய நற்கருணை மூலம் 
அவரை உணவாக உட்கொள்கின்ற அனைவருள்ளும் அவர் நிலையாக இருக்கின்றார்.

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

என்று அவர் அப்போஸ்தலர் களுக்கு கூறிய வார்த்தைகளின் முழுமையான பொருளை அறிய வேண்டுமென்றால் 

"என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்."

என்ற இயேசுவின் வார்த்தைகளின் பொருளை அறிய வேண்டும்.

யாரெல்லாம் இயேசுவை உணவாக உட்கொள்கிறார்களோ அவர்களோடு இயேசு நிலையாக இருந்து அவர்களை வழிநடத்துவார்.  

உலகம் முடியு மட்டும் உள்ள மக்கள் அவரை உணவாக உட்கொள்ளும் போது 

அவர் அவர்களுடைய உள்ளத்தில் தனது உடலோடும், ஆன்மாவோடும் தங்குவார்.

உலகம் முடியுமட்டும் நம்மோடு இருப்பார்.

அதற்காகத்தான் அவர் புனித வியாழனன்று திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

திவ்ய நற்கருணையை நாம் இரண்டு கோணங்களிலிருந்து பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும்.

1. இயேசு நமக்காக பலியிடப் பட்ட பலிப் பொருள். பலிப் பொருளை பலி கொடுத்தவர்கள் உண்ண வேண்டும். அப்போதுதான் பலி முழுமையாகும்.

2. இயேசு உலகம் முடியும் மட்டும் நம்மோடு தங்குவதற்காக, நமது உணவாக நம்மிடம் வருவதற்காக அவரே நிருவிய அருட்சாதனம்.

அன்று கல்வாரி மலையில் இயேசு தனது இரத்தத்தைச் சிந்தி ஒப்புக் கொடுத்த அதே பலியைத்தான்,

இன்று இரத்தம் சிந்தாத விதமாய் குருவானவர் ஒப்புக்கொடுக்கிறார்.

அன்று இயேசுவின் இரத்தம் பிலாத்துவின் அரண்மனையிலிருந்து கலவாரி மலை வரை சிந்திக் கிடந்தது.

மிச்சமிருந்த கொஞ்ச ரத்தத்தையும் வீரன் ஒருவன் இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தி வெளியேற்றி விட்டான்.

இன்று அதே ரத்தம்,(The very same Blood) பலி பீடத்தில் பாத்திரத்தில் இருக்கிறது.

நாம் இயேசு பலியிட்ட அதே உடலையும், அதே ரத்தத்தையும்தான் உணவாக உட்கொள்கிறோம்.

புனித வாரத்தில் இயேசுவைப் போலவே நற்கருணை விழாவை வியாழக் கிழமையும், 

சிலுவைப் பலி விழாவை வெள்ளிக் கிழமையும் கொண்டாடுகிறோம்.

நாம் திருப்பலியில் கலந்து கொள்ளும்போது குருவோடு சேர்ந்து பலியை ஒப்புக் கொடுக்கிறோம்.

நாம் ஒப்புக்கொடுத்த பலிப் பொருளாகிய இயேசுவை நாம் உணவாக உட்கொண்டால் தான் நமது பலி முழுமை பெறும்.

முழுப் பலியிலும் கலந்து கொள்பவர்கள் தான் திருவிருந்திலும் கலந்து கொள்ள வேண்டும்.

திருவிருந்து நேரத்தில் மட்டும் வந்து கையை நீட்டிக் கொண்டு இருக்கக்கூடாது.

ஆண்டவர் பரிசுத்தமானவர்.
அவரை வரவேற்கும் நமது உள்ளமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

தேவைப் பட்டால் பாவசங்கீர்த்தனம் செய்தபின் நற்கருணை வாங்க வேண்டும்.

சாவான பாவத்தோடு நற்கருணை வாங்குவதே சாவான பாவம்.

நற்கருணையை வாங்கியபின் என்ன செய்ய வேண்டும்?

நம்முள் வந்திருப்பது அகில உலகத்தையும் படைத்த கடவுள்.

நம்மைப் படைத்தவரே நம்மிடம் வந்திருக்கிறார் என்று எண்ணிப் பார்த்தாலே நமக்குள் மகிழ்ச்சி பொங்கும்.

 அந்த மகிழ்ச்சியோடே அவரிடம் பேசுவோம்.

நம்மை படைத்து பராமரித்து வருவதற்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

அவர் மீது நமக்குள்ள அன்பை தெரிவிப்போம்.

அன்பை அதிகரிக்கும்படி அவருடைய அருள் வரங்களைக் கேட்போம்.

அவருடன் நித்திய காலம் பேரின்பத்தில் வாழ நம்மை வழி நடத்தும்படி மன்றாடுவோம்.

நமது பாவங்களை மன்னிக்கும்படி கேட்போம்.

நமக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அதையும் அவரிடம் சொல்வோம்.

அவரும் நம்மிடம் உட்தூண்டுதல்கள் (Inspirations) மூலம் பேசுவார்.

அவற்றின் மூலமே நம்மை வழிநடத்துவார்.

நாம் அவரிடம் பேசுவது போல அவர் பேசுவதையும் கேட்க வேண்டும்.

அவரது உட்தூண்டுதல்களை அன்றைக்கே செயல்படுத்துவோம்.

தன்னையே நமது உணவாகத் தந்து நம்மை ஆன்மீகத்தில் வளர செய்வதற்காகவும், 

உலகம் முடியுமட்டும் தனது திருச்சபையோடு இருந்து அதை விண்ணகப் பாதையில் வழிநடத்திச் செல்வதற்காகவும்

இயேசு திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவை உண்போம், 
என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.