Saturday, March 12, 2022

"இராயப்பரும் அவரோடு இருந்தவர்களும் தூக்க மயக்கமாயிருந்தனர்."( லூக்.9:32)

"இராயப்பரும் அவரோடு இருந்தவர்களும் தூக்க மயக்கமாயிருந்தனர்."
( லூக்.9:32)

எல்லா அப்போஸ்தலர்களுக்கும் இயேசு இறை மகன், கடவுள், என்பது தெரியும்.

ஆயினும் அவர்களில் இராயப்பர், யாகப்பர், அருளப்பர் ஆகிய மூவருக்கும் இயேசு அவருடைய தெய்வீக தோற்றத்தைக் காண்பிக்க விரும்பினார்.

அதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு மலை மேல் ஏறினார்.

அங்கு அவரது முகத்தோற்றம் மாறியது. அவரது ஆடையும் வெண்மையாய் ஒளிவீசியது.

மோயீசனும் எலியாசும் விண்ணொளியிடையே தோன்றி அவரோடு உரையாடிக் கொண்டிருந்தனர்.

இயேசுவின் பாடுகள் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவருடைய சீடர்கள் தூக்க மயக்கமாயிருந்தனர்.

விழித்தெழுந்து, அவருடைய மாட்சிமையையும், அவரோடு நின்ற இருவரையும் கண்டனர்.

அவ்விருவரும் அவரை விட்டுப் பிரியும்பொழுது இராயப்பர் இயேசுவிடம்,

 "குருவே, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! உமக்கொன்றும், மோயீசனுக்கொன்றும், எலியாசுக்கொன்றுமாகக் கூடாரம் மூன்று அமைப்போம்" என்று

தாம் சொல்லுவது இன்னதென்று அறியாமல்- கூறினார்.

இயேசு தனது சீடர்களை மலைக்கு அழைத்துச் சென்றது தூங்குவதற்கு அல்ல.

ஆனால் அதை அந்த மூவருமே செய்தார்கள்.

இயேசுவும், மோயீசனும், எலியாசும் ஆண்டவரது பாடுகள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது இவர்கள் அதைக் கவனித்திருக்க வேண்டும்.

ஆனால் அப்போது தூக்கக் கலக்கமாய் இருந்து விட்டு,

தூக்கம் கலைந்த பின்

அவருடைய மாட்சிமையையும், அவரோடு நின்ற இருவரையும் கண்டனர்.

நல்ல வேளை ஆண்டவரது மாட்சிமையாவது பார்த்தார்களே!

ஆனால் மோயீசனையும், எலியாசையும் பார்த்த இராயப்பர்,

'அவர்கள் ஆண்டவரை விட்டுப் பிரியும் பொழுது'

 இயேசுவிடம், "குருவே, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! உமக்கொன்றும், மோயீசனுக்கொன்றும், எலியாசுக்கொன்றுமாகக் கூடாரம் மூன்று அமைப்போம்" என்று கூறினார்.


அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது தூங்கிவிட்டு,

புறப்படும்போது இராயப்பர்

"நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று!''
என்று கூறுகிறார்!

அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்தபின் கூடாரம் எதற்கு?

ஆனாலும் மூவருக்கும் சேர்த்து ஒரு கூடாரம் அமைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கலாம்.

மூவருக்கும் தனித்தனியே மூன்று கூடாரங்கள் அமைத்தால் எப்படி மூவரும் பேச முடியும்?

"தாம் சொல்லுவது இன்னதென்று அறியாமல்- கூறினார்."

என்று நற்செய்தி ஆசிரியரே கூறிவிட்டார்!


ஆனால் ஒரு வகையில் அவரைப் பாராட்ட வேண்டும்.

இராயப்பர் தன்னைப் பற்றியும், மற்ற இரு சீடர்களைப் பற்றியும் கவலைப் படவில்லை.

ஆண்டவருக்கும், மோயீசனுக்கும், எலியாசுக்கும் மட்டுமே உதவி செய்ய நினைத்தார்.

இங்கு போலவே இயேசு தனது பாடுகளுக்கு முந்திய நாள் கெக்சமனி தோட்டத்திற்கு செபம் சொல்லப் போகும்போதும்

இந்த மூன்று சீடர்களை மட்டுமே அழைத்துச் சென்றார்.

அங்கும் அவர் செபித்துக் கொண்டிருந்த போது இந்த மூவரும் தூங்கிக் கொண்டுதான் இருந்தார்கள்.

நாம் இவர்களைப் பற்றி தியானிக்கும் போது நம்மைப் பற்றியும் தியானிக்க வேண்டும்.

இயேசு சீடர்களைத் தேர்ந்தெடுத்தது போலவே நம்மையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

குறைகள் உள்ளவர்களைத்தான் சீடர்களாகத் தேர்ந்தெடுத்து,

தான் சென்ற இடமெல்லாம் அவர்களையும் அழைத்துச் சென்றார், தன்னிடமிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக.

அவர் நினைத்திருந்தால் ஒரு புதுமை செய்து அவர்களை நிறைவானவர்களாக (perfect) மாற்றியிருக்கலாம்.

ஆனால் இயேசு மரணமடையும் மட்டும் அவர்கள் குறை உள்ளவர்களாகவே இருந்தார்கள்.

அவர் பாடுகள் ஆரம்பித்தவுடன் அவரை விட்டு ஓடிவிட்டார்கள்.

இராயப்பர் அவரை மூன்று முறை மறுதலித்தார்.

பின் மனம் வருந்தி அழுதார்.
 
'அவர் உயிர்த்ததைக் கூட அவர்கள் முதலில் நம்பவில்லை.

ஆயினும் பரிசுத்த ஆவியின் வருகைக்குப் பின் அவர்கள் முற்றிலுமாக மாறிவிட்டார்கள்.

குறைகள் உள்ள நம்மையும் இயேசு தன்னைப்  பின்பற்ற அழைத்திருக்கிறார்.

அன்று இயேசு மோயீசனோடும், எலியாசோடும் பேசும்போது இராயப்பரும், மற்ற இரண்டு சீடர்களும் தூக்கக் கலக்கத்தில் இருந்தது போலவே

நாமும் ஞான காரியங்களில் தூக்கக் கலக்கத்தோடுதான் செயல்படுகிறோம்.

காலை செபத்தையே தூங்கிக் கொண்டுதான் சொல்கிறோம்.

(உடனே பக்தியுடன் சொல்பவர்கள் கோபப்படக் கூடாது. எனக்கும் நண்பர்கள் இருப்பார்கள்.)

ஞாயிறு திருப்பலியின்போது பிரசங்கம் கொஞ்சம் நீண்டு விட்டால் கனவில் தான் பிரசங்கம் கேட்கிறோம்.

செபமாலை சொல்ல ஆரம்பித்து விட்டாலே தூக்கம் எங்கிருந்தோ வந்து விடுகிறது.

சிலருக்கு இரவில் செபமாலைதான் தூக்க மருந்து.

 பொதுவாகவே ஞான வாழ்வை முழுமையான ஈடுபாட்டோடு வாழ்வதில்லை.

சிலர் நன்மை வாங்கியவுடன் ஆண்டவரையும் அழைத்துக் கொண்டு டீக்கடைக்கும், கசாப்புக் கடைக்கும் போய்விடுகிறார்கள்.

ஞான வாழ்வில் குறைபாடுகள் உள்ளவர்கள் நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம்.

அப்போஸ்தலர்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

ஆண்டவருடனே
இருந்தவர்களுக்கே குறைகள் இருந்தன.

அதற்காக அவர்களை ஆண்டவர் விலக்கி விடவில்லை.

அவரது திருச்சபையையே அவர்கள் கையில்தான் ஒப்படைத்தார்.

தங்கள் உயிரைக் கொடுத்து
திருச்சபையை உலகெங்கும் பரப்பியவர்கள் அவர்கள் தான்.

பரிசுத்த ஆவியின் வல்லமையால் இது சாத்தியம் ஆயிற்று.

நாமும் பரிசுத்த ஆவியை உதவிக்கு அழைப்போம்.

நமது குறைகளை எல்லாம் நீக்க அவரை மன்றாடுவோம்.

பரிசுத்த ஆவி இருக்கும் இடத்தில் மகன் இருக்கிறார்.

மகனும், பரிசுத்த ஆவியும் இருக்கும் இடத்தில் தந்தை இருக்கிறார்.

மூவரும் ஒரே கடவுள்.

ஒவ்வொரு செயலையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்

 ஆரம்பித்து கடவுள் முன்நிலையில் செய்தால்

அது அவருக்கு ஏற்றதாக இருக்கும்.

கடவுள் பெயரால், கடவுளுக்காக வாழ்வோம். 

குறைகள் காணாமல் போய்விடும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment