Thursday, March 31, 2022

"நான் செய்துமுடிக்க தந்தை எனக்கு அருளியுள்ள செயல்களே, நான் செய்துவரும் அச்செயல்களே, தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்குச் சான்று."(அரு.5:36)

"நான் செய்துமுடிக்க தந்தை எனக்கு அருளியுள்ள செயல்களே, நான் செய்துவரும் அச்செயல்களே, தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்குச் சான்று."
(அரு.5:36)

முதன் முதலில் இயேசுவின் இறைத் தன்மைக்கு சான்று பகர்ந்தவர் புனித ஸ்நாபக அருளப்பர்.

அடுத்து இயேசுவே தன் தந்தைக்கும் தனக்கும் உள்ள உறவைக் குறிப்பிடும் போதெல்லாம் தனது இறைத் தன்மையை வெளிப்படுத்தினார்.

ஆனால் தங்களை மட்டுமே 
பரிசுத்தர்கள்  எங்கு நினைத்து வாழ்ந்து கொண்டிருந்த  பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இயேசுவின் வார்த்தைகளை நம்பவில்லை.

ஆகவே

"அருளப்பருடைய சாட்சியத்திலும் மேலான சாட்சியம் எனக்கு உண்டு:

 நான் செய்துமுடிக்க தந்தை எனக்கு அருளியுள்ள செயல்களே, 

நான் செய்துவரும் அச்செயல்களே, தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்குச் சான்று."
(அரு. 5:36)

என்று இயேசு கூறினார்.

இயேசு வாய்ச் சொல் வீரர் அல்ல, செயல்வீரர்.

அவர் மனதில் உள்ளதைச் சொன்னார், சொன்னதைச் செய்தார்.

அவர் அன்பே உருவான கடவுள். 
நேசியுங்கள் என்று சொன்னார். 
அவரே நேசித்தார்.
 தன் தந்தையை நேசித்தார். தன்னைத்தானே நேசித்தார். 
மக்கள் அனைவரையும் நேசித்தார்.

இயேசுவின் செயல்கள் எல்லாம் அவருடைய நேசத்தின் விளைவுகளே.

 தந்தையை நேசித்ததன் விளைவு அவரது சித்தத்தை நிறைவேற்ற மனுவுரு எடுத்து நம்மை தேடி வந்தார்.

சென்ற இடமெல்லாம் தனது அன்பைத் தனது செயல்களில் வெளிப்படுத்தினார். 

நோயுற்றோரை குணப்படுத்த இவர் செய்த புதுமைகள் எல்லாம் அன்பின் விளைவுகளே.

 அநேகர் அவரைத் தேடிவந்து "குணமாக்கும் ஆண்டவரே" என்று கேட்டுக் குணம் பெற்றார்கள்.

அநேகரை இயேசுவே தேடிச் சென்று குணமாக்கினார்.

பெத்சாயிதா மண்டபத்தில் 38 ஆண்டுகள் சுகமில்லாமல் படுத்திருந்தவனைக் குணமாக்கியது இதற்கு ஒரு உதாரணம்.

நயீன் என்ற ஊரில் ஒரு விதவைத் தாயின் இறந்த மகனை அவராகவே உயிர்ப்பித்து அவளிடம் ஒப்படைத்தார்.

இயேசு செய்த எல்லா புதுமைகளும் நற்செய்தி நூல்களில் எழுதப்படவில்லை.


"விண்ணரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்து,

 மக்களிடையே எல்லா நோயையும் பிணியையும் குணமாக்கிவந்தார்."

என்று மத்தேயு குறிப்பிட்டபோது

"எல்லா நோயையும் பிணியையும் குணமாக்க"

இயேசு செய்த புதுமைகளை எல்லாம் குறிப்பிடவில்லை.

வெகு நேரம் சாப்பிடக்கூட போகாமல் அவரது செய்தியை கேட்டு கொண்டிருந்தவர்கள் மேல் அவர் இரங்கி

 அவரே அவர்களுக்கு அப்பங்களைப் பலுகச் செய்து உணவளித்தார்.

5000 பேருக்கும் 4000 பேருக்கும் உணவளித்தது நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறிப்பிடப்படாதவை எத்தனையோ!

இது மக்கள் மீது அவர் கொண்டுள்ள அன்பையும், இரக்கத்தையும், கரிசனையையும் காட்டுகிறது.

பசித்தவர்களுக்கு உணவு அளிக்கும்படி அவர் போதிக்க மட்டும் செய்யவில்லை. அவரே உணவு அளித்து முன்னுதாரணம் காட்டினார்.

தான் சாப்பிட அவர் எந்தப் புதுமையையும் செய்யவில்லை. 

பொது வாழ்வுக்கு வரும்வரை தச்சு வேலை செய்து தான் அவர் பிழைத்திருக்கிறார்.

தனது தாய்க்கு கூட உழைத்து தான் சாப்பாடு கொடுத்திருக்கிறார்.

 ஆனால் மற்றவர்களுக்கு புதுமைகள் செய்து உணவு அளித்திருக்கிறார்.

"உங்கள் எதிரிகளை நேசியுங்கள், உங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்" என்று அவர் போதித்தது மட்டுமல்ல,

அவரே அவரை 
வெறுத்தவர்களையும் நேசித்தார், அவருக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மையே செய்தார்.

அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசைக்கூட  "நண்பனே" என்றுதான் அன்போடு அழைத்தார்.

அவரது பாடுகளுக்கும் மரணத்திற்கும் காரணமானவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார். 

அவர் மரணம் அடைந்த பிறகு

"நூற்றுவர்தலைவனும் அவனுடன் இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்தோரும்

 நிலநடுக்கத்தையும் நடந்தது அனைத்தையும் கண்டு மிகவும் அஞ்சி,

 "உண்மையில் இவர் கடவுளின் மகனாயிருந்தார்" என்றனர்.

அவரை வெறுத்தவர்கள் கூட அவரது செயல்களைப் பார்த்து

 அவரை கடவுளின் மகன் என்று ஏற்றுக் கொண்டார்கள்.


"நான் செய்துமுடிக்க தந்தை எனக்கு அருளியுள்ள செயல்களே, நான் செய்துவரும் அச்செயல்களே, தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்குச் சான்று."

என்ற இயேசுவின் சொற்கள்

உண்மையிலேயே உண்மையானவை.

இயேசுவின் செயல்கள் அவர் இறைமகன் என்பதற்கு சான்று பகர்ந்தன.

நாம் இயேசுவின் சீடர்கள், கடவுளின் பிள்ளைகள் என்று கூறிக் கொள்கிறோம்.

 நமது செயல்கள் அதற்கு சான்று பகர்கின்றனவா?

சிறிது நேரம் சிந்தித்துப் பார்ப்போம்.

நம்மை வெறுக்கும் ஒருவர் நம்மிடம் வந்து நம்மை சண்டைக்கு இழுக்கிறார்.

வேண்டாத வார்த்தைகளைப் பேசி  நமது உணர்ச்சிகளைத் தூண்டுகிறார்.

இயேசு பிலாத்துவின் முன் அவமானப் படுத்தப்பட்டபோதும்  அமைதியாக இருந்தாரே அதை நினைத்து நாம் அமைதியாக இருக்கிறோமா?

அல்லது பதிலுக்குப் பதில் பேசி சண்டை போடுகிறோமா?

அமைதியாக இருந்தால் நாம் இயேசுவின் சீடர்கள், கடவுளின் பிள்ளைகள்.

நமது அமைதிதான் நாம் இயேசுவின் சீடர்கள், கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று.

இது ஒரு உதாரணம்.

நம்மோடு வாழ்பவர்கள் நமது செயல்களைப் பார்த்து,

"உண்மையிலேயே இவர் இயேசுவின் சீடர் தான்" என்று கூறவேண்டும்.

இயேசுவின் போதனைகளையும், 
நமது ஒவ்வொரு செயலையும் ஒப்பிட்டு பார்ப்போம்.

உண்மையை உணர்ந்து இயேசுவின் சீடர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, March 30, 2022

"என் தந்தை இந்நேரம்வரை செயலாற்றுகிறார். நானும் செயலாற்றுகிறேன்" என்றார்.(அரு.5:17)

"என் தந்தை இந்நேரம்வரை செயலாற்றுகிறார். நானும் செயலாற்றுகிறேன்" என்றார்.
(அரு.5:17)

இயேசு தனது தந்தையைப் பற்றியும், பரிசுத்த ஆவியைப் பற்றியும் குறிப்பிடும் போதெல்லாம்

 தன்னைப்பற்றிய,

 அதாவது கடவுளைப் பற்றிய,

இறையியல் உண்மையை நமக்கு வெளிப்படுத்துகிறார்.

இயேசு இறைமகன், கடவுள்.

இறை மகன் மனுக்குலத்தின் மீட்புக்காக கன்னி மரியின் வயிற்றில் மனுவுரு எடுத்த விநாடியிலிருந்து அவருக்கு இரண்டு சுபாவங்கள்:

தேவ சுபாவம். (நித்தியமானது)

மனித சுபாவம். (இவ்வுலகில் பிறப்பு, வளர்ச்சி, துன்பங்கள், மரணம் ஆகியவற்றுக்கு உட்பட்டது.)

இயேசு முழுமையாக கடவுள்.
Fully God.

முழுமையாக மனிதன்.
Fully Man 

ஒரு ஆள், இரண்டு சுபாவங்கள்.

இயேசு பிறந்து, வளர்ந்து, போதித்து, பாடுகள் பட்டு, மரித்தது  மனித சுபாவத்தில்.

அவருடைய சீடர்கள் அவரை மனுவுரு எடுத்த இறைமகன் என்பதை விசுவசித்து ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் அவரை மனிதனாகவே பார்த்தார்கள். அவர் இறைமகன் என்பதை விசுவசிக்கவில்லை.

அவர் கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று சொன்னபோது அதை அவர்கள் தேவ தூசணமாகக் கருதினார்கள்.

அவருடைய சீடர்களாகிய நாம் அவரை விசுவசிக்கிறோம்.

இறைமகனாகிய அவர் தந்தையோடும், பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுள். "

மூவரும் மூன்று ஆட்கள், ஆனால் ஒரே கடவுள்.

மூவருக்கும் ஒரே தேவ சுபாவம், ஒரே ஞானம், ஒரே சித்தம்.

நம்மைப் பொறுத்த மட்டில் நம்மில் பலர் ஒரே மாதிரியான சுபாவத்தையும், ஒரே மாதிரியான ஞானத்தையும், ஒரே மாதிரியான சித்தத்தையும் உடையவர்களாக இருக்கலாம்.

ஆனால் ஒரே சுபாவத்தையும், ஒரே ஞானத்தையும், ஒரே சித்தத்தையும் உடையவர்களாக இருக்க முடியாது.

ஆனால் கடவுளைப் பொறுத்தமட்டில் தந்தையின் ஞானமே மகனின் ஞானமும்,
பரிசுத்த ஆவியின் ஞானமும்.

 தந்தையின் சித்தமே மகனின் சித்தமும், பரிசுத்த ஆவியின் சித்தமும்.

"என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்." 

என்று கூறிய இயேசு, "எனது விருப்பத்தை நிறைவேற்றவே வந்தேன்." என்றே கூறியிருக்கலாம்.

ஆனால் தம திரித்துவ உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தவே,

"என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்." 

என்று கூறினார்.

"எனக்கென்று தனி விருப்பம் கிடையாது. தந்தையின் விருப்பம்தான் எனது விருப்பம்." என்பதை வலியிறுத்தவே

"என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்."  

என்று கூறினார்.

மனிதனாய்ப் பிறந்தது இறைமகன்தான்.

இதை,

கடவுள் மனிதனாகப் பிறந்தார்,
கடவுள் தச்சு வேலை செய்தார்,
கடவுள் நற்செய்தி அறிவித்தார்,
கடவுள் பாடுபட்டார்.
கடவுள் சிலுவையில் நமக்காக மரித்தார் என்றும் கூறலாம்.

இயேசு கடவுளாகையால்தான் கன்னி மரியாளை கடவுளின் தாய் என்கிறோம்.

ஆகவே,
பாடுபட்டு சிலுவையில் மரித்தது இறைமகனாக இருந்தாலும்,

நமக்கு மீட்புத் தருவது பரிசுத்த தம திரித்துவமே.

ஆகவே, நமது எல்லா செபங்களையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே சொல்கிறோம். 

மூவரும் மூன்று தனித்தனி ஆட்கள்தான். (Distinct Persons)

ஆனால் 

தந்தை இருக்குமிடத்தில் மகனும் இருப்பார், தூய ஆவியும் இருப்பார்.

ஞானஸ்நானத்தின்போதும்,
உறுதிப் பூசுதலின்போதும்

நம்மீது பரிசுத்த ஆவி இறங்கும்போது, தந்தையும் இறங்குவார், மகனும் இறங்குவார்.

மகனை நோக்கி வேண்டும்போது நமது வேண்டுதலை தந்தையும் கேட்பார், தூய ஆவியானவரும் கேட்பார்.

தந்தையை நோக்கி வேண்டும்போது நமது வேண்டுதலை மகனும் கேட்பார்,
தூய ஆவியானவரும் கேட்பார்.

தூய ஆவியை நோக்கி வேண்டும்போது
நமது வேண்டுதலை தந்தையும் கேட்பார்,
மகனும் கேட்பார்.

ஏனெனில் மூவரும் ஒரே கடவுள். கடவுளைப் பிரிக்க முடியாது.

தந்தை, மகன், தூய ஆவியிடமிருந்து,

அதாவது கடவுளிடமிருந்து,

நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

கடவுள் நம்மை அவரது சாயலாகப் படைத்தார்.

அவரைப் போல் இருக்கும்படி நம்மை படைத்தார். 

தந்தை, மகன், தூய ஆவி மூவரும் எப்படி ஒரே கடவுள்?

மூவருக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே தேவ சுபாவம், ஆகவே ஒரே கடவுள்.

'ஒரே' என்ற வார்த்தை நமக்கும், கடவுளுக்கும் பொருந்தாது.

 தம திரித்துவ கடவுளுக்கு மட்டுமே பொருந்தும்.

நாம் அவரது சாயலில் மட்டுமே இருக்க முடியும், 

 அவராக இருக்க முடியாது. 

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய்

 'இருப்பதுபோல,'

நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."

அவருடைய சாயல் நம்மிடம் முழுமையாக இருக்க வேண்டுமென்றால் 

அவர் நம்மோடு பகிர்ந்துகொண்ட பண்புகளை நம்மால் முடிந்த அளவு வளர்க்க வேண்டும்.

கடவுளுக்காகவும், நமது பிறனுக்காகவும் நம்மை நாமே தியாகம் செய்யும் அளவுக்கு நமது அன்பு இருக்க வேண்டும்.
(இயேசு நமக்காகத் தன்னையே தியாகம் செய்தது போல)

அன்புக்கு எதிரான குணங்கள் கடவுளிடம் சிறிது கூட இல்லை. அவர் அன்பே உருவானவர்.

 நம்மிடம் எந்த அளவிற்கு அன்பு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நமது இறைச் சாயலும் இருக்கும்.

அன்பு குறைந்தால் சாயலும் குறையும்.

அன்பு முற்றிலும் போய்விட்டால் சாயலும் முற்றிலும் போய்விடும்.

இது கடவுள் நம்மோடு பகிர்ந்து கொண்ட எல்லா பண்புகளுக்கும் பொருந்தும்.

கடவுளும் நமக்கும் ஒரே சித்தம் இருக்க முடியாது.

ஆனால் நம்மால் கடவுளின் சித்தத்தை நமது சித்தமாக ஏற்றுக்கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு நாம் குருவானவர் ஆக வேண்டும் என்பது அவரது சித்தம் என்று வைத்துக் கொள்வோம்.

 நமக்கு தேவ அழைத்தல் இருப்பதை உணர்ந்தால்,

அதை நாம் ஏற்றுக் கொள்ளும்போது கடவுளின் சித்தத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

அவரது சித்தத்தை ஏற்றுக்கொள்ளும்போது நமக்கும் அவருக்கும் இடையே உள்ள ஒன்றிப்பு அதிகமாகும்.

 We enter into unity with God.  

The more we are united with God the more we are like unto Him.

எந்த அளவுக்கு அவரது சித்தத்தை நமது சித்தமாக ஏற்றுக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கும் அவருக்கும் உள்ள ஒன்றிப்பு அதிகமாகும்.

A க்கும், B க்கும் பிரியாணி சாப்பிட விருப்பம் இருந்தால் இருவருக்கும் ஒரே விருப்பம் உள்ளது என்று சொல்வோம். 

ஆனால் உண்மையில் அது ஒரே விருப்பம் அல்ல.

ஒரே மாதிரியான விருப்பம்.

பரிசுத்த தம திரித்துவத்தின் மூன்று ஆட்களுக்கு மட்டுமே ஒரே விருப்பம் இருக்க முடியும்.

இறைவனது விருப்பத்தை நமது விருப்பமாக ஏற்று, அதை நிறைவேற்றி அவரோடு ஒன்றிப்போம்.  

லூர்து செல்வம்.

Monday, March 28, 2022

"குணமாக விரும்புகிறாயா ?" என்று அவனைக் கேட்டார்."(அரு.5:6)

"குணமாக விரும்புகிறாயா ?" என்று அவனைக் கேட்டார்."
(அரு.5:6)

கேட்கும்போது மட்டுமல்ல கேளாமலேயே கொடுப்பவர் இயேசு.

இதற்கு பெத்சாயிதா கட்டடத்தில் அவர் செய்த புதுமையே எடுத்துக்காட்டு.

முப்பத்தெட்டு ஆண்டுகளாகப் பிணியுற்றிருந்த ஒருவன் அங்கே படுத்துக்கிடந்தான்.

அவன் இயேசுவை பார்க்கவில்லை.

இயேசுதான் அவனைப் பார்த்தார்.

பார்த்தது மட்டுமல்ல அவன் எதுவும் கேளாமலேயே,

"குணமாக விரும்புகிறாயா ?" என்று அவனைக் கேட்டார்."


அவன் தனது பிரச்சனையை கூறியவுடன்,

"எழுந்து, படுக்கையைத் தூக்கிக்கொண்டு நட."
என்றார்.

உடனே அவன் குணமடைந்து, தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு நடந்தான்.

இவ்வளவுக்கும் இயேசுதான் தன்னைக் குணமாக்கினார் என்றே அவனுக்குத் தெரியாது. 

 தன்னிடம் எந்த உதவியும் கேட்காத ஒருவனுக்கு இயேசு வலிய சென்று அவனுக்கு தேவையான உதவியைச் செய்கிறார்.

உதவி செய்வது அவருக்கு இயல்பான குணம்.

இயேசுவுக்கும் நமக்கும் உள்ள உறவைப் பற்றி சிறிது சிந்தித்துப் பார்த்தால் நமக்கு ஒரு முக்கியமாக உண்மை புரியும்.

அவரது தந்தையை நோக்கி 

"எங்கள் தந்தையே"

என்று அழையுங்கள் என்று இயேசு நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்.

அதாவது,

"நான் உங்கள் சகோதரன்" என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

நம்மை அவரது சகோதரர்களாக ஏற்றுக்கொண்டுள்ளவர் இயேசு.

ஆகவே இயேசுவுக்கும் நமக்கும் உள்ள முதல் உறவு சகோதர உறவு.

அவர் மனிதனாக பிறந்ததன் நோக்கம், நம்மை நமது பாவங்களிலிருந்து மீட்பது மட்டும்தான்.

ஆகவே இயேசுவுக்கும் நமக்கும் உள்ள அடுத்த முக்கிய உறவு மீட்பருக்கும், பாவிகளுக்கும் இடையே உறவு.

அதாவது நமது பாவங்களிலிருந்து மீட்கப் படுவதற்காகத்தான் அவரது சீடர்களாக நாம் மாறியிருக்கிறோம். 

ஆகவே, இயேசுவிடமிருந்து,
அதாவது, நமது அன்பு சகோதரரிடமிருந்து நாம் எதிர்பார்க்க வேண்டிய ஒரே உதவி பாவமன்னிப்பு மட்டும்தான்,

அதாவது, மீட்பு மட்டும்தான்.

மீட்பு பெறுவதற்காக மட்டும்தான் நாம் கிறிஸ்தவர்களாக மாறி இருக்கிறோம்.

வேலைக்காகவோ,

 வருமானத்திற்காகவோ, 

 குழந்தை பாக்கியத்திற்காகவோ, 

நோய்களிலிருந்து குணம் அடைவதற்காகவோ 

நாம் கிறிஸ்தவர்களாக மாறவில்லை.

இவை சம்பந்தப்பட்ட உதவிகளை இயேசு நாம் கேட்காமலேயே நமக்கு தருவார்.

ஆனால் பாவமன்னிப்பு நாம் கேட்டால்தான் தருவார்.

உலக சம்பத்தப்பட்ட உதவிகளின் பயன் நம்மோடு நித்திய காலத்திற்கும் வருவதில்லை.

ஆனால் பாவமன்னிப்பின் பயன் நம்மோடு நித்திய காலத்திற்கும் தங்கும். நமக்கு நிலை வாழ்வை தரும்.

ஆகவே நமது செபங்களில் மீட்பு சம்பந்தப்பட்ட ஆன்மீக உதவிகளுக்கே முதலிடம் கொடுப்போம்.

உலக சம்பந்தப்பட்ட உதவிகள் நாம் கேட்காமலேயே கிடைக்கும்.

"எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.


 ஏனெனில், புறவினத்தார்தாம் இவையெல்லாம் தேடுவர்.

 உங்களுக்கு இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.


 ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: 

இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
( மத். 6:31 - 33)

லூர்து செல்வம்.

Sunday, March 27, 2022

"பரிசேயரும் மறைநூல் வல்லுநரும், "இவர் பாவிகளை வரவேற்கிறார். அவர்களோடு உண்கிறார்" என்று முணுமுணுத்தனர்."(லூக்.15:2)

"பரிசேயரும் மறைநூல் வல்லுநரும், "இவர் பாவிகளை வரவேற்கிறார். அவர்களோடு உண்கிறார்" என்று முணுமுணுத்தனர்."
(லூக்.15:2)

இயேசு பாவிகளோடு பழகுவதும், உண்பதும் பரிசேயர்களுக்கும், மறைநூல் வல்லுநர்களுக்கும் பிடிக்கவில்லை.

 ஆனால் இயேசுவுக்கு அதுதான் பிடித்திருக்கிறது.

இயேசு கடவுள், பரிசுத்தர்.
பாவிகள் பாவ அழுக்கால் நிறைந்தவர்கள்.

பரிசுத்தர் ஏன் பாவ அழுக்கு உள்ளவர்களை விரும்புகிறார்?

மருத்துவர் வியாதியஸ்தர்களை ஏன் விரும்புகிறாரோ அதே காரணத்திற்காகத்தான்.

மருத்துவர் வியாதியைக் குணமாக்குவதற்காக வியாதியஸ்தர்களை விரும்புவதுபோல்தான் 

பரிசுத்தர் பாவிகளை மன்னிப்பதற்காக அவர்களைத் தேடுகிறார்.

சோப்பு அழுக்குத் துணிகளைத் தேடிச்செல்லும், அழுக்கை அகற்றுவதற்காக.

அதுபோல் தான் பரிசுத்தர் பாவிகளைத் தேடி வருகிறார் பாவங்களை மன்னிப்பதற்காக. 

பாவங்களை மன்னிக்க வேண்டும் என்பதில் கடவுளுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?

இறைவன் தன்னை நேசிப்பது போலவே தன்னால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களையும் நேசிக்கிறார்.

ஆனால் மனிதர்களே கட்டிக்கொண்ட பாவம் என்னும் சுவர் அவர்களை இறைவனை நேசிப்பதிலிருந்து தடுக்கிறது.

பாவத்தை அழித்து மனிதர்கள் தன்னை நேசிப்பதற்கு வழிவகுக்கவே கடவுள் மனிதனாய் பிறந்து பாடுபட்டு சிலுவையில் தன்னையே பலியாக்கினார்.

தன்னைத்தானே பலியாக்கியதன் பயன் மனிதருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக 

மனிதரது பாவங்களை மன்னித்து அவர்களை பரிசுத்தர்களாக மாற்றுவதில் இறைவன் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார்.

மனிதர்கள்மீது அவர் கொண்டுள்ள அன்புதான் அவர்கள் செய்த பாவங்களை மன்னிப்பதற்கு அவர் காட்டும் ஆர்வத்துக்குக் காரணம்.

தனது அன்பு எத்தகையது என்பதை நமக்குப் புரிய வைக்கவே ஊதாரி மைந்தன் உவமையை இயேசு கூறினார்.

ஊதாரி மைந்தன் தந்தையின் சொத்துக்களில் தனது பங்கை வாங்கிக்கொண்டு,

அதை ஊதாரித்தனமாக செலவழித்து கொண்டிருந்தாலும், தந்தைக்கு அவன்மேல் சிறிதுகூட கோபம் வரவில்லை.

அவன் மனம் திருந்தி வரும் நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார். 

அவன் தான் கொண்டு சென்ற சொத்துக்களையெல்லாம் காலி செய்தபின், சாப்பாட்டுக்கு வழியில்லாமல், தனது செயலுக்காக மனம் வருந்தி தந்தையிடம் திரும்பிய பொழுது

அவனது குற்றங்களை எல்லாம் மன்னித்தது மல்லாமல் அவனை முழுமனதோடு தனது இல்லத்தில் ஏற்றுக் கொண்டார்.

அவன் திரும்பியதைக் கொண்டாட பெரிய விருந்து ஒன்றை வைத்தார்.   

அவ்வாறே தான் கடவுளும் நாம் பாவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும்

 நாம் மனம் திருந்தி அவரிடம் வரவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

 நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை தனது குருக்களுக்கு கொடுத்திருக்கிறார்.

நாம் பாவ மன்னிப்பு பெற செய்ய வேண்டியதெல்லாம் நமது பாவங்களுக்காக மனம் வருந்தி பாவசங்கீர்த்தனம் செய்வதுதான்.

எவ்வாறு நமது உடல் சுத்தமடைய குளிப்பது அவசியமோ 

அவ்வாறே நமது ஆன்மா பரிசுத்தம் அடைய பாவசங்கீர்த்தனம் செய்வது அவசியம்.

பாவசங்கீர்த்தனம் செய்யாமல் பாவத்தோடு எத்தனை தவ முயற்சிகள் செய்தாலும் அத்தனையும் வீண்.

இதை தவக்காலத்தில் மட்டுமல்ல நமது வாழ்நாள் முழுவதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நமது பாவங்களை மன்னிப் பதற்காக நம்மோடு வாழவே இயேசு ஆசைப்படுகிறார்.

அவரது ஆசையை நிறைவேற்றுவோம்.

முடிவில்லா காலம் நம்மை பேரின்பத்தில் வாழ வைப்பார்.

லூர்து செல்வம்.

Saturday, March 26, 2022

"எவனும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை."(லூக். 11:33)

"எவனும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை."
(லூக். 11:33)

விருந்தினர்கள் வரும் நேரம் நெருங்கி விட்டது.

சமையலறையில் விருந்திற்கான உணவு வகைகள் ரெடி.

தாய் மகளிடம்,

"எல்லா உணவு வகைகளையும் சாப்பாட்டறையில் கொண்டு போய் வை."

மகளும் தாய் சொன்னதைச் செய்தாள்.

சிறிது நேரத்தில் தகப்பனார் விருந்தினர்களுடன் வந்தார்.

எல்லோரும் ஹாலில் உட்கார்ந்தனர்.

மனைவி கணவனிடம்,

"சாப்பாடெல்லாம் சாப்பாட்டறையில் ரெடிங்க.

எல்லோரையும் உள்ளே அழைத்துச் செல்லுங்கள்."

எல்லோரும் சாப்பாட்டறைக்குச் சென்று நாற்காலிகளில் உட்கார்ந்தனர்.

ஆனால் மேஜையில் எதுவும் இல்லை.

தாய் உள்ளே நுழைந்து கொண்டே,

"சாப்பிட ஆ......"  

சொல்லப் போனவள் Dining Table ஐப் பார்த்தாள்.

அங்கே ஒன்றும் இல்லை.

"அடியே" மகளை அழைத்தாள்.

"சாப்பாட்ட எங்க வச்ச?"

மகள் Cup Board ஐக் காண்பித்தாள்.

"ஏண்டி, சாப்பாட்டை
 Dining Tableல வைக்கச் சொன்னா, Cup Board ல வச்சிருக்க?"

"அம்மா, நீங்க அப்படிச் சொல்லல. 

சாப்பாட்டறையில் கொண்டு போய் வைன்னுதான் சொன்னீங்க. சொன்னதைத்தானே செய்தேன்.

Cup Boardம் சாப்பாட்டறையில் தானே இருக்கிறது."

     * * * *

எதை எங்கே வைக்க வேண்டும் என்று தெரிய வேண்டும்.
 
"இருட்டுகிறது. விளக்கைப் பொருத்து." என்று சொன்னால் 

விளக்கைப் பொருத்தி விளக்குத் தண்டின்மீது வைக்க வேண்டும். மரக்காலுக்கு உள்ளே வைக்கக் கூடாது.

விளக்குத் தண்டின்மீது வைத்தால்தான் ஒளி எங்கும் தெரியும்.

விளக்கும் பயன்படும்.

பங்கு சுவாமியார் பங்கிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும்
குடும்பத்துக்கு ஒரு புது பைபிள் இலவசமாகக் கொடுத்தார்.

சில தினங்களுக்குப் பின் ஒரு குடும்பத்தலைவரிடம்,

"நான் தந்த பைபிளை என்ன செய்கிறீர்கள்."

"அதைப் பத்திரமாகப் பீரோவில் பூட்டி வைத்திருக்கிறேன், சுவாமி."

"பூட்டி வைத்திருக்கிறீர்களா?"

"ஆமா, சுவாமி. அல்லது பையன்கள் எடுத்து வாசிக்க ஆரம்பிச்சிடுவாங்களே!"

"வாசிக்க ஆரம்பிச்சா?"

"புது பைபிள் அழுக்காகி விடுமே!"

"இங்க பாருங்க, நான் பைபிள் தந்தது பீரோவில் பூட்டி வைப்பதற்கு அல்ல.

தினமும் திறந்து வாசித்து, அதன்படி வாழ்வதற்காக.

கைபட்டு பைபிள் அழுக்கு
ஆனதற்காக கடவுள் வருத்தப் படமாட்டார்.

இறைவாக்கினால் நமது ஆன்மா சுத்தம் அடைந்ததற்காக மகிழ்ச்சி அடைவார்.

இறைவாக்கு விளக்கின் ஒளி போன்றது.

யாராவது விளக்கைப் பீரோவுக்குள் பூட்டி வைப்பார்களா?

இறைவாக்கினால் நாம் பயன் பட வேண்டுமென்றால்,

அதை நமது வாழ்வில் அனுசரித்து, அதை நமது வாழ்வாக மாற்ற வேண்டும்.

நாம் அதை வாழ்வாக மாற்றினால் நமது வாழ்க்கை இறைவாக்காகிய ஒளியைப் பிரதிபலிக்கும்.

அதை மற்றவர்கள் பார்த்தால் அவர்களும் இறைவாக்கை தங்கள் வாழ்வாக்க முயல்வார்கள்.

நாம் நடமாடும் பைபிளாக மாறிவிடுவோம்.

உங்களை நடமாடும் பைபிளாக மாற்றுவதற்காகத்தான் நான் குடும்பத்துக்கு ஒரு பைபிள் கொடுத்தேன்.

எனது பீரோவில் வைக்க இடமில்லாமல் தரவில்லை."


"மன்னித்துக் கொள்ளுங்கள், சுவாமி. இனிமேல் குடும்பத்தில் எல்லோரும் பைபிள் வாசித்து அதன்படி வாழ்வோம்."

தட்டில் வைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டால்தான் நமது வயிறு நிறையும்.

உணவைப் பார்த்துக் கொண்டே இருந்தால், உணவின் பயனை அடைய முடியாது.

பைபிள் வசனங்களை வாசிப்பது அவற்றை மனப் பாடம் செய்வதற்காக மட்டுமல்ல, அதை வாழ்வதற்கு.

மனப் பாடம் செய்வது நல்லதுதான்.

மனப் பாடம் செய்ததன்படி நடந்தால்தான் வசனத்தால் நமக்குப் பயன்.

சாத்தானுக்கு நம்மை விட பைபிள் வசனங்கள் நன்கு தெரியும்.

தனக்குத் தெரிந்த வசனங்களை கடவுளைச் சோதிக்கவே அது பயன்படுத்தியது.

ஐயோ பாவம், சாத்தானால் பைபிளை வாழ முடியாது.

ஆனால் நம்மால் வாழ முடியும்,
வாழ வேண்டும்.

எததை எங்கெங்கே வைக்க வேண்டுமோ அததை அங்கங்கே வைக்க வேண்டும்.

இறைவாக்கை சிந்ததையிலும் வைக்க வேண்டும்,

சொல்லிலும் வைக்க வேண்டும்,

செயலிலும் வைக்க வேண்டும்.

அதாவது, வாழ்க்கை  முழுவதிலும் வைக்க வேண்டும்.

இறைவாக்கை நாம் வாழ வேண்டும்.

இறைவன் நம்முள்ளும்,  நாம் அவருள்ளும் வாழ வேண்டும்.

லூர்து செல்வம்.

Thursday, March 24, 2022

Love is a gift of God’

‘Love is a gift of God’

(By ‘Love’ I refer to the virtue of ‘Charity’ which proceeds from God, not to the ‘attractions’ which we wrongly call ‘love’.)

The ability to genuinely love others is always a gift from God; it is not based on our own efforts or goodness.

We claim to love others.

But how can we be sure that our love is sincere and genuine?

There is a false idea that we love, because we are good.

But in fact love is a gift of God given to us free.

We can grow in love only with the grace of God and it also will be given us free if we ask Him for it.

Showing love to others is not something done to show how good we are, but to show how loving and generous God is.

When we show our love to others we must behave in such a way as to enable others to know how gentle and merciful Jesus is.

They must realize that we love only because we are the followers of Jesus who is loving and merciful.

Others must see Jesus in us.

 St. Paul says, “Let love be sincere; hate what is evil, hold on to what is good; love one another with mutual affection; anticipate one another in showing honor. Do not grow slack in zeal; be fervent in spirit; serve the Lord, Rejoice in hope; endure in affliction; persevere in prayer. Contribute to the needs of the holy ones; exercise hospitality.”

These things are not easy to do without the grace of God.

With God’s grace everything is possible.

 We are sinners and that our way of loving is marked by sin.

But Jesus can liberate us from sin and give us salvation.

 We firmly believe that God’s love never fails.

  If we ask, He will give us the grace to love more perfectly.

 The Risen Lord is with us to heal our hearts.

  If we ask He will allow us, despite our littleness and poverty, to experience the compassion of the Father and to celebrate the wonders of his love.”

   God Himself takes residence in our hearts and in our lives to make us instruments of His love.

 We will love others as God loves them, wishing them to be good, and to become saints and friends of God.

 We will be happy to be closer to the poor and the humble to love and serve them.

When we love and serve others we love and serve God.

Lourdu Selvam.

Wednesday, March 23, 2022

" என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்." ( லூக்.11:23)

" என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்." 
(லூக்.11:23)

மனிதன் கடவுளுக்காக வாழ படைக்கப்பட்டிருக்கிறான்.

உலகில் படைக்கப்பட்டிருந்தாலும் உலகிற்காக வாழ படைக்கப்படவில்லை.

கடவுளுக்காக வாழ்வது ஆன்மீக வாழ்வு.

உலகிற்காக வாழ்வது லௌகீக வாழ்வு.

ஒருவன் ஆன்மீக வாழ்வு வாழ்வான், 

அல்லது, 

லௌகீக வாழ்வு வாழ்வான்.

இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வாழ்வு இல்லை.

இரண்டும் எதிர் எதிர் வாழ்வுகள்

ஆன்மீக வாழ்வு  வாழாதவன் அதற்கு எதிராக வாழ்கிறான்.

கடவுளுக்காக வாழாதவன் அவருக்கு எதிராக வாழ்கிறான்.

ஆகவேதான் இயேசு சொல்கிறார்,

"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான்."

இயேசுவுக்காக வாழ்பவன் தனது வாழ்வின் மூலம் அவரது நற்செய்தியை உலகிற்கு அறிவிக்கிறான்.

உலகிற்காக வாழ்பவன் தனது வாழ்வின் மூலம் நற்செய்திக்கு எதிர்ச் செய்தியை உலகிற்கு அறிவிக்கிறான்.

ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவனாக இருந்தாலும் பாவ வாழ்க்கை வாழ்ந்தால் அவன் வாழ்வது ஆன்மீக வாழ்க்கை அல்ல, உலக வாழ்க்கைதான்.

புண்ணிய வாழ்க்கை வாழும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்கு புகழ் சேர்க்கிறார்கள்.

பாவ வாழ்க்கை வாழும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்கு அவப்பெயர் சேர்க்கிறார்கள்.

நல்ல கிறிஸ்தவர்களைப் பார்ப்பவர்கள்,

",கிறிஸ்துவின் சீடர்கள் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள்."

என்று கூறினால் அது கிறிஸ்துவுக்கு மகிமை. 


கெட்ட கிறிஸ்தவர்களைப் பார்ப்பவர்கள்,

",கிறிஸ்துவின் சீடர்கள் மோசமானவர்களாகத்தான் இருப்பார்கள்."

என்று கூறினால் அது கிறிஸ்துவுக்கு அவப்பெயர்.

பிள்ளைகள் தங்களது நல்ல வாழ்க்கை மூலம் பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

பெற்றோர் நல்லவர்களாக இருந்தாலும் பிள்ளைகள் கெட்டவர்களாக இருந்தால் நல்ல பெற்றோருக்கு கெட்ட பெயர்தான் கிடைக்கும்.

நாம் நமது வாழ்க்கை மூலம் நமது ஆண்டவருக்கு மகிமை சேர்க்க வேண்டும்.

நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும்,

செய்யும் ஒவ்வொரு செயலும் 

ஆண்டவரது அதிமிக மகிமைக்காக இருக்க வேண்டும்.

நாம் இயேசுவின் நற்செய்தியின்படி,

தவறு செய்பவர்களை மன்னிப்பவர்களாகவும்,

யார் மேலும் பொறாமைப் படாதவர்களாகவும்,

யாரைப் பற்றியும் கெடுத்துப் பேசாதவர்களாகவும்,

நமக்குத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்பவர்களாகவும்,

விரோதிகளை நேசிப்பவர்களாகவும்,

தேவைப்படுவோருக்குக் கொடுப்பவர்களாகவும்,

எல்லோருக்கும் உதவி செய்பவர்களாகவும்

வாழ்ந்தால்,  

நம்மைப் பார்ப்பவர்களும் நம்மைப் போல் வாழ ஆரம்பித்து விடுவோர்.

நாம் விண்ணகத்துக்கு ஆட்களைச் சேகரிப்பவர்களாக மாறிவிடுவோம்.

நற்செய்திக்கு எதிராக வாழ்ந்தால் வருபவர்களைச் சிதறடிப்பவர்களாக மாறிவிடுவோம்.

ஒன்று சேகரிப்போம், 

அல்லது,

சிதறடிப்போம்.

உலகிற்காக வாழ்வோர் மத்தியில் நாம் ஆண்டவருக்காக வாழ்ந்தால்,

நாம் ஒளிபோல் செயல்பட்டு

நம்மைச் சுற்றி வாழ்வோரையும் ஆண்டவருக்காக வாழவைப்போம்.

நாம் கிறிஸ்தவர்களாக இருந்தால் மட்டும் போதாது,

கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.

வாழ்வோம், வாழ வைப்போம்.

லூர்து செல்வம்.

Tuesday, March 22, 2022

எது கடினம், மன்னிப்பதா, மன்னிப்பு கேட்பதா?

எது கடினம், மன்னிப்பதா, மன்னிப்பு கேட்பதா?

இயேசு நமக்குக் கற்பித்த செபத்தில் உள்ள ஒரு முக்கியமான மன்றாட்டு:

"எங்களுக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல

எங்கள் பாவங்களை மன்னியும்."

அதாவது நாம் மன்னித்தால் 
நாமும் மன்னிக்கப் படுவோம்.

கடவுளைப் பொறுத்த மட்டில் மன்னிப்பு மிக எளிதான செயல்.

 நமது பாவங்கள் எத்தனையாய் இருந்தாலும்,
எவ்வளவு பெரியவையாய் இருந்தாலும் 

"உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டன." என்று அவர் சொன்ன விநாடியே அவை மன்னிக்கப் பட்டு விடும்.

ஆனாலும் நாம் மன்னிப்புக் கேட்டால்தான் கடவுள் நமது பாவங்களை மன்னிப்பார்.

இப்போது பிரச்சனை நாம் மன்னிப்புக் கேட்பதில்தான் இருக்கிறது.

மன்னிப்புக் கேட்குமுன் நாம் நமக்கு விரோதமாகக் குற்றம் செய்தவர்களை மன்னித்துவிட வேண்டும்.

நமக்கு யார் மீதும் கோபமோ, வன்மமோ இருக்கக் கூடாது.

மற்றவர்களை மன்னித்த பின்புதான் நாம் கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மன்னிப்பதில் கஷ்டம் இல்லா விட்டால் மன்னிப்புக் கேட்பதிலும் கஷ்டம் இல்லை.

மன்னிப்பது கஷ்டமானால் மன்னிப்பு கேட்பதும் கஷ்டமாகி விடும்.

ஆகவே நாம் முதலில் மற்றவர்களை மன்னிப்போம்.

கடவுளும் நமது பாவங்களை மன்னிப்பார்.

லூர்து செல்வம்.

Monday, March 21, 2022

உண்மையான அன்புடன் அன்பு செய்வோம்.

உண்மையான அன்புடன் அன்பு செய்வோம்.

".ஹலோ, ஏன் முகத்தை ஒரு மாதிரி வச்சிருக்க?"

"செருப்படி வாங்கியவன்
முகத்தை வேறு எப்படி வச்சிருப்பான்?"

'',என்னது செருப்படி வாங்கினீயா?"

"அதை ஓயாமல் சொல்லணுமா?"

",ஓயாமல் சொல்ல வேண்டாம். செருப்படி வாங்கிக்கினத
நம்ப முடியல. அதுதான் கேட்டேன்."

"என்னால கூட தான் நம்ப முடியல, ஆனால் முதுகு வலிக்கிறதே. நம்பித்தான் ஆகணும்."

". முதுகு?"

"அடிபட்ட இடம்."

", சரி. நடந்தத விபரமா சொல்லு."

"ஞாயிற்றுக் கிழமை சுவாமியார் எதைப் பற்றி பிரசங்கம் வச்சார் ஞாபகம் இருக்கா?"

", பிறரன்பு பற்றி."

"Love your neighbour as you love yourself ன்னு சொன்னதோடு,

நேசிச்சா மட்டும் போதாது, அதைச் சொல்லாலும், செயலாலும் வெளிக் காட்டணும்னும் சொன்னாரு, ஞாபகம் இருக்கா?"

". நல்லா ஞாபகம் இருக்கு."

"நானும் முதல்ல சொல்லால் வெளிப்படுத்துவோம்னு தீர்மானித்து, வீட்டுக்குப் போனவுடன் அப்பாவிடம்,

'I love you, Dad.'ன்னு சொன்னேன்.

அப்போது அவர் அனுபவித்த மகிழ்ச்சியைப் போல ஒரு நாளும் அனுபவித்திருக்க மாட்டார்.

நானும் அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தேன்.

அப்புறம் அம்மா, அக்கா, தம்பி எல்லோருக்கும் நான் நேசிப்பதைச் சொன்னேன்.

எல்லோரும் சந்தோசப் பட்டாங்க.

தாத்தாவிடம் சொன்னபோது அவர் என்னைக் கட்டி அரவணைத்து முத்தமே கொடுத்து விட்டார்.

அப்போது அவர் அடைந்த இன்பத்தைப் போல வாழ்நாளில் ஒரு நாளும் அடைந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

நானும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்துகொண்டே ,

அப்புறம் யாருக்குச் சொல்லலாம் என்று நினைவதுக் கொண்டே வெளியே போனேன்.

எதிரே பக்கத்து வீட்டு  அக்கா வந்து கொண்டிருந்தாள்.

அவளிடம் போய்,

"I love you." ன்னு சொன்னேன், புன்னகையோடு.

அடுத்த விநாடி அவள்  கொடுத்ததுதான் செருப்படி.

வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அடி."

", வா, உட்கார், இதைப்பற்றி கொஞ்சம் பேசுவோம்."

"எதைப் பற்றி? அடியைப் பற்றியா?"

", இல்லை. அன்பைப் பற்றி."

"எனக்கு அடி வாங்கிக் கொடுத்த அன்பைப் பற்றியா?"

", உனக்கு அன்பு அடி வாங்கிக் கொடுக்கவில்லை. அதைப் பற்றிய தவறான எண்ணம் தான் அடி வாங்கிக் கொடுத்தது.

நமக்குத் தெரியும், கடவுள் அன்பு மயமானவர் என்று.

God is love.

தனது அன்பின் காரணமாகத் தான் அவர் மனிதனைத் தன் சாயலாகப் படைத்தார்."

"அன்பு மயமானவனாகவா படைத்தார்?"

", அன்பு மட்டுமே செய்ய வேண்டியவனாகப் படைத்தார்.

அதாவது அன்பு செய்வதற்காக மட்டுமே அவனைப் படைத்தார்.

கடவுள் மனிதனுக்குக் கொடுத்த கட்டளையே

"உன்னைப் படைத்த என்னையும்,

உன்னோடு படைக்கப்பட்ட உன் அயலானையும் அன்பு செய்" என்பது மட்டுமே.

அன்புக்கு எதிராகச் செய்யப் படுவது பாவம்.

அன்பின் வளர்ச்சிக்காகச் செய்யப் படுவது புண்ணியம்.

மனிதன் தான் செய்த பாவத்தினால் தனக்கு அளிக்கப் பட்டிருந்த இறைச் சாயலைக் களங்கப் படுத்தி விட்டான்,

அதாவது,

அன்பையே களங்கப் படுத்தி விட்டான்.

(குடிப்பதற்காகக்  கொடுக்கப் பட்ட தண்ணீரை,

  குடிப்பதற்காகப் பயன்படுத்தி அதன் பெயரைக் கெடுத்து விட்டதுபோல.)

நீ I love you. சொன்ன போது மகிழ்ந்தவர்கள் அதை இறைவன் கொடுத்த அன்பாக நினைத்தார்கள்.

ஆனால் உன்னை அடித்தவள் பாவத்தினால் களங்கப்படுத்தப் பட்ட அன்பாக நினைத்து விட்டாள்."

"இப்போது ஒன்று புரிகிறது.

உலகத்திலுள்ள பொருட்களைக் கொடுத்தவர் கடவுள்.

மனிதனுக்குப் புத்தியைக் கொடுத்தவரும் கடவுள் தான்.

மனிதன் கடவுள் கொடுத்த புத்தியையும், கடவுள் கொடுத்த பொருட்களையும்

கடவுளுக்கு விரோதமாகப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறான்.

கடவுள் படைத்த அணுவையே அணுக்குண்டு தயாரிக்கப் பயன்படுத்தி

 கடவுளுடைய படைப்பையே அழித்துக் கொண்டிருக்கிறான்."

", மனிதன் திருந்த வேண்டுமென்றால் மனிதன் கடவுளையும், அவரது படைப்புகளையும்,

கடவுள் பகிர்ந்து கொண்ட அன்பினால் அன்பு செய்ய வேண்டும்.

கடவுளை அவரது நன்மைத் தனத்திற்காக அன்பு செய்ய வேண்டும்.

அயலானை அவனுக்கு உதவி செய்வதற்காக அன்பு செய்ய வேண்டும்.

உன்மையான பிறரன்பு பிறனின் ஆன்மாவை நேசிக்கும்.

வெறும் கவர்ச்சிக்கும் மனிதன் அன்பு என்று பெயர் வைத்து விட்டதால்தான்,

அன்பு என்ற சொல் களங்கப் பட்டுவிட்டது.

இறைவனை நேசிக்கும் அன்பைக் கொண்டே அயலானையும் நேசிப்போம்.

பாவ உணர்ச்சிகளால்  அன்பைக் களங்கப்படுத்தி விடக்கூடாது.

ஒருவரது அழகுக்காகவும், அவரிடமுள்ள பொருட்களுக்காகவும் மட்டும் ஒருவரை விரும்பினால் அதற்குப் பெயர் அன்பு அல்ல.

இறைவனுக்காக செய்யப் படும் அன்பே உண்மையான அன்பு.

உண்மையான அன்புடன் அன்பு செய்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, March 20, 2022

விசுவாசத்தோடு கேளுங்கள்.

விசுவாசத்தோடு கேளுங்கள்.

"தாத்தா, சுவாமியார் பிரசங்கத்தில் கடவுளிடம் எதைக் கேட்டாலும் விசுவாசத்தோடு கேளுங்கள் கிடைக்கும் என்றார்.

ஆனால் நான் விசுவாசத்தோடு கேட்பதையெல்லாம் தருகிறது மாதிரி தெரிவிய."


",விசுவாசத்தோடுன்னா?"

"கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு."

", நீ சுவாமியார் சொன்னதை தப்பா புரிஞ்சிருக்க.

இறைவனோடு நம்மைச் சம்பந்தப்படுத்தும் புண்ணியங்கள் எவை?"

"விசுவாசம்,
நம்பிக்கை,
தேவ சிநேகம்."   

", இந்த மூன்றில் சுவாமியார் குறிப்பிட்ட விசுவாசம்தான் நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவின் ஆரம்பம்.

 "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்." என்று ஆண்டவர் அப்போஸ்தலர்களுக்குச் சொன்னாரே 

அதில்  குறிப்பிட்டிருக்கிற விசுவாசம்.

விசுவாசம் என்றால் இறைவனை முழுமையாக ஏற்றுக்கொண்டு, நம்மையும் முழுமையாக அவருக்கு அர்ப்பணித்தல்.

நாம் இறைவனை விசுவசிக்கிறோம் என்றால்

அவர் நமது தந்தை என்று முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.

அதோடு நம்மை முழுமையாக அர்ப்பணிக்கிறோம். நாம் அவருக்காக மட்டும் வாழ்கிறோம்.

இந்த விசுவாச உணர்வோடுதான் செபிக்க வேண்டும், வேண்டியதைக் கேட்க வேண்டும்.

முழுமையான விசுவாசம் இருக்கும் இடத்தில் நம்பிக்கையும் இருக்கும்.

மகன் தந்தையிடம் கேட்பதை மகனுக்கு நன்மை பயக்கும் பட்சத்தில் உறுதியாகத் தருவார்.

மகன் தந்தையிடம் போய்,
" அப்பா விளையாட ஒரு பாம்பு பிடித்துத் தாருங்கள் " என்று கேட்டால் கொடுப்பாரா?

கொடுக்க மாட்டார். ஏனெனில் அது மகனுக்குத் தீமை பயக்கும் என்று அவருக்குத் தெரியும்.

நாமும் இறைவனை தந்தை என்று ஏற்று, அவருக்காக வாழ்ந்து கொண்டு,

அவரிடம் எதைக் கேட்டாலும் நாம் கேட்பது அவருக்காக நாம் வாழ்வதில் உதவியாக இருந்தால் கட்டாயம் தருவார்.

நாம் கேட்பதைத் தராவிட்டால் நாம் கேட்பது பாம்பைக் கேட்பதற்குச் சமம் என்று அர்த்தம்.

ஆகவே விசுவாசத்தோடு கேட்பவன் கேட்டது கிடைத்தாலும் மகிழ்வான் கிடைக்காவிட்டாலும் மகிழ்வான்.

கிடைத்தாலும் நன்றி கூறுவான்.

கிடைக்காவிட்டாலும் நன்றி கூறுவான்."

"அதாவது, கடவுளை நோக்கி,
"தந்தையே, நான் உமக்காகவே வாழ்கிறேன். நான் கேட்பது நமது உறவுக்கு உதவியாய் இருந்தால் தாருங்கள்,

கெடுதியாய் இருந்தால் தர வேண்டாம்.

உதவியாய் இருப்பதைத் தாருங்கள்."
 என்று கூறி கேட்க வேண்டும்.

அதற்குப் பெயர் தான் 'விசுவாசத்தோடு கேட்டல்.'

சரியா?"

"Super சரி!"

லூர்து செல்வம்.

Saturday, March 19, 2022

"காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம்" என்றான்."(லூக்.13:9)

"காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம்" என்றான்."
(லூக்.13:9)

 காய்க்காத அத்திமரத்தை வெட்டிப் போட தோட்டக்காரனுக்கு மனம் வரவில்லை.

"சுற்றிலும் கொத்தி எருப்போடுகிறேன்.

எருப் போட்டு நீரூற்றி கவனித்தால் காய்க்கும்.

அப்படியும் காய்க்காவிட்டால். 

 அதை வெட்டிவிடலாம்."

என்கிறான்.

மனுக்குலம் பாவம் செய்து இறைவனுக்கு எதிராகி விட்டாலும் அதை அழிக்க இறைவனுக்கு மனம் வரவில்லை.

அதைத் திருத்தி, பாவத்திலிருந்து மீட்பதற்காக தன் ஒரே மகனைப் பூமிக்கு அனுப்புகிறார்.

அவர் மனுக்குலத்தை மீட்பதற்காக பாடுகள் பட்டு, தன்னையே சிலுவை மரத்தில் பலியாக்கினார்.

அருள் வரங்களை அள்ளிக் கொடுத்து மனுக்குலத்தை இறைவனுக்கு ஏற்றதாக மாற்றுவதற்காக

திருச்சபையை நிறுவி, திரு அருட்சாதனங்களையும் ஏற்படுத்தினர்.

இயேசுவின் சீடர்களும், அவர்களின் வாரிசுகளும் இயேசுவின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக

தங்கள் உடல் பொருள் ஆவி அத்தனையும் அர்ப்பணித்து உழைக்கிறார்கள்.

மனுக்குலம் மனம் திரும்பி, இயேசுவையும் அவரது மீட்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இறைவன் இவ்வளவு செய்தும் மனம் திரும்பாவிட்டால் அழிவைச் சந்திக்க நேரிடும்.

இயேசுவே இந்த எச்சரிக்கையைத் தருகிறார்.

"மனந்திரும்பாவிடில் நீங்கள் எல்லோரும் அழிவீர்கள்."

இயேசுவின் சொற்படி நடப்போம்.

தேவத்திரவிய அனுமானங்களை ஒழுங்காகப் பெற்று

ஆண்டவரின் அருள் வரங்களோடு மீட்புப் பெறுவோம்.

விண்ணகப் பாதையில் வெற்றி நடை போடுவோம்.

லூர்து செல்வம்.

Friday, March 18, 2022

"நான் சொல்லுவதைச் செய்யாமல் "ஆண்டவரே, ஆண்டவரே" என்று என்னை நீங்கள் அழைப்பானேன்?"(லூக்.6:46)

"நான் சொல்லுவதைச் செய்யாமல் "ஆண்டவரே, ஆண்டவரே" என்று என்னை நீங்கள் அழைப்பானேன்?"
(லூக்.6:46)

ஒவ்வொரு நாளையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆரம்பிப்பதும்,

காலையிலும், இரவிலும் செபமாலை சொல்வதும்,

திருப்பலியில் கலந்து கொண்டு, திவ்ய நற்கருணை உட்கொள்ளுவதும்

போற்றுதற்குரிய செயல்கள்தான்.

ஆனால் இவை மட்டும் செபம் அல்ல. செபத்தின் ஒரு பகுதியே.

"ஆண்டவரே, ஆண்டவரே" என்று ஆண்டவரை அழைத்து, அவரிடம் வேண்டுவது செபத்தின் ஒரு பகுதியே.

அடுத்த பகுதி இல்லாவிட்டால் மேற்கூறியவற்றால் உண்மையான செபத்தின் பயனை அடைய முடியாது.

அடுத்த பகுதி எது?

ஆண்டவர் சொல்வதைச் செய்வது.

ஆண்டவரையும், அயலானையும் சிந்தனை, சொல், செயலால் அன்பு செய்வதும்,

பிறருக்கு நம்மால் ஆன உதவி செய்வதும்,

நமக்கு தீமை செய்தவர்களை மன்னிப்பதும்,

அவர்களுடைய நலனுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வதும்,

எல்லோரும் வாழ உழைப்பதும்
செப வாழ்வின் மிக முக்கிய பகுதி.

இரண்டு பகுதிகளையும் சேர்ந்து வாழ்ந்தால் தான் செப வாழ்வின் முழுப் பயனை அடைய முடியும்.

கிறிஸ்தவ வாழ்வை முழுமையாக வாழ்வோம்.

செப வாழ்வின் பயனாகிய விண்ணக வாழ்வை அடைவோம்.

லூர்து செல்வம்.

Thursday, March 17, 2022

"ஒன்றும் எதிர்பாராமல் கடன் கொடுங்கள். " (லூக்.6:35)

"ஒன்றும் எதிர்பாராமல் கடன் கொடுங்கள். " (லூக்.6:35)

உலகம் ஒரு சடப் பொருள்.
இறைவன் ஆவி.

நமது உடல் ஒரு சடப்பொருள்.
நமது ஆன்மா ஆவி.

நமது உடலைச் சார்ந்த வாழ்க்கை உலக வாழ்க்கை.

நமது ஆன்மாவைச் சார்ந்த வாழ்க்கை இறைவனுக்காக வாழப்படும் ஆன்மீக வாழ்க்கை.

உடலைச் சார்ந்த வசதிகளுக்காகவும், இன்பத்திற்காகவும் மட்டும் வாழ்வோர் லௌகீக வாதிகள்.

ஆன்மாவைச் சார்ந்த அருள் பெறுவதற்காக மட்டும் வாழ்வோர் ஆன்மீக வாதிகள்.

இயேசு மனுவுரு எடுத்தது நமது ஆன்மாவை இரட்சிக்க, உடலை அல்ல.

நமது ஆன்மாவை இரட்சிக்க தன் உடலை சிலுவையில் பலியாக்கினார்.

ஆன்மாவை மீட்க ஆசிக்கும் ஆன்மீகவாதிகள் உடலைச் சார்ந்த லௌகீக வாழ்வைப் பலி கொடுத்து தான் ஆக வேண்டும்.

ஒரே நேரத்தில் இறைவனுக்கும், உலகிற்கும் சேவை செய்ய முடியாது.

இந்த அடிப்படையில் உலகில் வாழ்வோரை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம:

ஆன்மாவிற்காக வாழ்வோர்,
உடலுக்காக அதாவது உலகிற்காக வாழ்வோர்.

ஆன்மாவிற்காக வாழ்வோருக்கு விண்ணகமே தாய்வீடு.

உலகிற்காக வாழ்வோருக்கு உலகமே முதலும், இறுதியும்.

நாம் கிறிஸ்தவர்கள். விண்ணகமே நமது தாய்வீடு.

நாம் உலகிற்காக வாழ்வோரைப் போல் வாழ்ந்தால் கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கு அருகதை அற்றவர்களாக மாறிவிடுவோம்.

கிறிஸ்து நமக்குக் கூறும் அறிவுரைகளை லௌகீக வாதிகளால் பின்பற்ற முடியாது.


கிறிஸ்து கூறுகிறார்:

அனைவரையும் நேசியுங்கள்.
அதாவது உங்களை நேசிப்பவர்களை மட்டுமல்ல,
உங்களை வெறுப்பவர்களையும் நேசியுங்கள்.

லௌகீக வாதிகள் தங்களை வெறுப்பவர்களை நேசிக்க மாட்டார்கள்.

உங்களுக்குத் தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.

லௌகீக வாதிகள் தங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நன்மை செய்வார்கள்.

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்குக் கொடுங்கள். திரும்ப வரும் என்று எதிர் பார்க்காமல் கொடுங்கள்.

லௌகீக வாதிகள் கடனைத் திருப்பிச் செலுத்த முடிந்தவர்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள்.

உங்கள் பகைவர்களுக்கு அன்புசெய்யுங்கள். அவர்களுக்கு நன்மை புரியுங்கள். ஏனெனில், கடவுள் நன்றிகெட்டவர்க்கும் தீயவர்க்கும் பரிவு காட்டுகிறார்.

லௌகீக வாதிகள் தங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு மட்டுமே நன்மை செய்வார்கள்.

நமது சிந்தனையும், பழக்க வழக்கங்களும் கிறிஸ்து ஆன்மீக வாதிகளுக்குக் கொடுத்திருக்கிற அறிவுரைகளை ஒட்டியே இருக்க வேண்டும்.

மைசூர் மகாராஜா அரண்மனையைப் பார்த்திருப்பீர்கள்.

அந்தக் காலத்து மன்னர்கள் தாங்கள் வாழ நிறைய பணம் செலவழித்து கட்டிய அரண்மனைகளுக்கு ஒரு உதாரணம்.

இது உலகவாதிகள் தங்கள் பெருமையை நிலை நாட்ட எடுத்த முயற்சி.

ஆனால் நமது மன்னர், 

உலகில் வாழ்ந்த காலத்தில் தலை சாய்க்கக் கூட இடமில்லாதிருந்த இயேசு,

 தான் வாழ கோடிக்கணக்கில் செலவழித்து அரண்மனை எதுவும் கட்ட சீடர்களுக்குப் பணிக்கவில்லை.

அவர் தனது திருச்சபையைத்தான் (Church) உலகெங்கும் பரப்பச் சொன்னார்.

சென்றவிடமெல்லாம் கோவில்கள் (Churches) கட்டுங்கள் என்று சொல்ல வில்லை.

வழிபாடு செய்ய கோவில்கள் வேண்டும், ஆனால் கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்டவை அல்ல.

வழிபடச் செல்பவர்களில் பெரும்பாலோர் ஏழைகள்தான்.

ஐரோப்பிய நாடுகளில் மன்னர்கள் காலத்தில் கட்டப் பட்ட பெரிய பெரிய கோவில்களிலிருந்து வழிபட

இப்போது போதிய கிறிஸ்தவர்கள் இல்லை என்று சொல்கிறார்கள்.

கிறிஸ்தவர்களின் ஆன்மீக வாழ்வின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்போம்,

கட்டடங்களுக்கு அல்ல.

 திருவிழாக் காலங்களில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

திருவிழாக்கள் கொண்டாடப்படுவதே ஆன்மீக வளர்ச்சிக்காகத்தான்.

நாம் கோவில் அலங்காரம், சப்பர அலங்காரம், திருவிழாவுக்காக நமக்கு எடுக்கப் படும் புதிய துணிமணிகள், திருவிழாச் சாப்பாடு போன்றவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துலத்தை,

ஆன்மாவை அருள் வரங்களால் அலங்கரிக்கும் பாவசங்கீர்த்தனம்,

திருப்பலி,

 நமது ஆண்டவர் நம்முள் உணவாவும், உறவாகவும் வருதல், 

இறைவன் செய்து வரும் உதவிகளுக்கு நன்றி செலுத்துதல் போன்ற ஆன்மீக காரியங்களுக்குக் கொடுக்கிறோமா?

ஆண்டு முழுவதும் கோவிலுக்கு வராதவர்கள் கூட திருவிழா அன்று வந்து விடுவர், சப்பரம் இழுப்பதற்காக.

திருவிழாவுக்கு முன்னால் திருவிழா எப்படிக் கொண்டாடுவது என்று தீர்மானிப்பதற்கான சபையார் கூட்டத்தில் 

வரி எவ்வளவு போடுவது, எப்படி பிரிப்பது என்பது பற்றி ஆராய்வதற்கே வெகு நேரம் செலவழிப்பார்கள்.

திருவிழாவுக்கு பிந்திய கூட்டத்தில் வரி வரவு செலவு பற்றி சண்டை போடவே முழுநேரத்தையும் 
செலவழிப்பார்கள்.

ஆன்மாவைப் பற்றி கவலைப் பட பங்குச் சாமியார் மட்டும் இருப்பார். ஆனால் அவர் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள்.


பையன் புதுநன்மை வாங்க பெற்றோர் ஏற்பாடு செய்து கொண்டிருப்பார்கள்.

பையனுக்கு புதுநன்மை பற்றி Sister ஞானோபதேசம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

பெற்றோர் புதுநன்மை வாங்கும் விழாவை எப்படிக் கொண்டாடுவது என்று திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

பையனுக்கு White and White dress தைக்க எங்கே, என்ன விலைக்குத் துணி எடுப்போம்?.
யாரிடம் தைக்கக் கொடுப்போம்?

விழாவுக்கு யார் யாரை அழைப்போம்?

Card அச்சிட்டுக் கொடுப்போமா? வாயினால் சொன்னால் போதுமா?

என்ன சாப்பாடு போடுவோம்?

Photos எடுத்தால் போதுமா? அல்லது Video எடுப்போமா? எந்த Photographer ஐ ஏற்பாடு செய்வோம்?

இப்படியெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

விழா கோலாலமாக நடக்கும்.

விழா முடிந்தபின் யார் யார் என்ன Gift கொடுத்திருப்பார்கள் என்று கணக்கெடுத்துக் கொண்டிருப்பார்கள்.

விழாவின் நாயகனைப் பற்றி யாரும் கவலைப் படமாட்டார்கள்.

இயேசுவைப் பற்றிப் பேச,
சாப்பாட்டைப் பற்றி பேச எடுத்துக் கொண்ட நேரம் கிடைக்காது.

ஆனால் உண்மையில் விழா அவருக்குதான்.

ஆனால் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பது விழாவுக்கு மட்டும்தான்.

இப்படித்தான் அநேக ஆன்மீக விழாக்களை உலகத்தனமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

ஆன்மீக வாழ்வை உலகத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆன்மாவிற்காக வாழ்வோம்.
ஆன்மாவிற்காக மட்டுமே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, March 16, 2022

"ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு, மறுகன்னத்தையும் காட்டு. உன் மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் மறுக்காதே."(லூக்.6:29)

"ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு, மறுகன்னத்தையும் காட்டு. உன் மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் மறுக்காதே."
(லூக்.6:29)

நாம் கிறிஸ்தவர்கள்.

மற்றவர்களிடம் பேசும் போது கிறிஸ்துவைப் பற்றி பெருமையாகப் பேசுகிறோம்.

இது ஒரு அரசியல்வாதி தன் கட்சித் தலைவரைப் பற்றி பெருமையாகப் பேசுகிறானே,
அது மாதிரியா?

அல்லது,

உண்மையிலேயே மனதாற பேசுகிறோமா?

வழக்கமாக அரசியல்வாதிகளின் பேச்சில் உண்மையை விட சுயநலம்தான் அதிகம் இருக்கும்.

அநேக கட்சித் தொண்டர்கள் தங்கள் தலைவரைப் பற்றி பெருமையாகப் பேசுவது தலைவரின் குணநலன்களை விரும்புகிறார்கள் என்பதற்காக அல்ல,

கட்சியில் சலுகைகள் கிடைக்கும், பதவி கிடைக்கும் என்பதற்காகத்தான்.

நம் நிலை எப்படி?

கிறிஸ்துவின் குணநலன்களை உண்மையிலேயே  பிடிக்கும் என்பதற்காக அவரைப் பற்றி புகழ்கிறோமா?

அல்லது,

நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காக மட்டும் தானா?

உண்மையிலேயே கிறிஸ்துவைப் பிடித்தால் அவரைப் போலவே வாழ முயல்வோம். அவர் சொன்படி நடப்போம்.

கிறிஸ்து சொல்கிறார்,

உங்களைச் சபிக்கிறவர்களுக்கு ஆசிகூறுங்கள். 

உங்களைத் தூற்றுவோருக்காகச் செபியுங்கள்.

ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு, மறுகன்னத்தையும் காட்டு. 

உன் மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் மறுக்காதே.

உன்னிடம் கேட்பவன் எவனுக்கும் கொடு. 

உன் உடைமைகளைப் பறிப்பவனிடமிருந்து திருப்பிக் கேட்காதே.

இவற்றை எல்லாம் இயேசு சொல்ல மட்டும் செய்ய வில்லை,
'
வாழ்ந்தே காண்பித்தார்.

அவரது பாடுகளைப் பற்றிய முழு விவரங்களையும் வாசித்தால் இது புரியும்.

பிலாத்துவுக்கு இயேசுவிடம் குற்றம் எதுவும் இல்லை என்று தெரிந்திருந்தும் 

அவரைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். எல்லா அடிகளையும் தன் உடல் முழுவதும் வாங்கிக் கொண்டார்.

அவரது தலையில் முள்முடியை
வைத்து, அவர்மேல் துப்பிப் பிரம்பை எடுத்து அவரைத் தலையிலடித்தனர்.

அருகில் வந்து  அவருடைய கன்னத்தில் அறைமேல் அறை அறைந்தனர்.

எல்லாவற்றையும் மறுப்பு இல்லாமல் ஏற்றுக் கொண்டார்.

அவரைச் சிலுவையில் அறையும் முன்   அவருடைய ஆடைகளைக் களைந்து,

 சீட்டுப்போட்டு தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்.

ஆடையில்லாமல்தான் சிலுவையில் அறையப்பட்டார்.

அப்படியேதான் மரித்தார்.

நாம் இயேசுவின் சீடர்கள்.

நம்மை யாராவது சபிக்கும்போது, அவர்களை 
ஆசீர்வதித்திருக்கிறோமா?

நம்மை யாராவது தூற்றும் போது அவர்களுக்காக செபித்திருக்கிறோமா?

யாராவது நம்மைக் கன்னத்தில் அறைந்திருக்கிறார்களா?

அதை ஏற்றுக் கொண்டு மறுகன்னத்தையும் 
காட்டியிருக்கிறோமா?

நம்மிடமிருந்து எதையாவது பிடுங்குபவர்களுக்கு,

வேறு எதையாவது சேர்த்துக்  கொடுத்திருக்கிறோமா?

நம்மிடம் கேட்பவர்களுக்கு மறுக்காமல் கொடுக்கிறோமா?

நமது பையிலுள்ள பணத்தை ஒருவன் நம் அனுமதி இல்லாமல் எடுத்துக் கொண்டால்

"அவனும் நம் சகோதரன் தானே. அவன் பயன்படுத்தினாலும் நாம் பயன் படுத்தியது மாதிரிதான்."

என்று விட்டு விடுகிறோமா?

இப்படி எல்லாம் நாம் செய்தால் நம்மிடம் இயேசு விரும்பும் சகோதர உணர்வு இருக்கிறது.

நாம் நம்மை நேசிப்பதுபோல் நம் சகோதரனையும்  நேசிப்பது உண்மையிலேயே கிறிஸ்தவ பண்பு.

இயேசு தன்னை நேசிப்பது போல நம்மையும் நேசிக்கிறார்.

அதனால்தான் அவரது தந்தையை நமது தந்தை என்றார்.

அவர் அவரது தந்தையுடன் விண்ணகத்தில் வாழ்வதுபோல நாமும் வாழ வேண்டும் என்று ஆசிக்கிறார்.

அதற்கு நம்மை அழைப்பதற்காகவே மனிதனாய்ப் பிறந்து நம்மிடையே வாழ்ந்தார்.

உலக வாழ்க்கை முடிந்து விண்ணகம் சென்ற பின்பும் தொடர்ந்து நம்மிடையே வாழ்வதற்காகத்தான் 

திவ்ய நற்கருணையை ஏற்படுத்தி தொடர்ந்து நம்மோடு வாழ்ந்து வருகின்றார்.

இதை எல்லாம் உணர்ந்து நாமும் இயேசுவின் குணங்களோடு வாழ்ந்தால்

அவரைப் பற்றி பெருமையாகப் பேச நமக்கு தன்னலம் அற்ற உரிமை இருக்கிறது.

இயேசுவின் குணநலன்களோடு வாழ்ந்தால்தான் கிறிஸ்தவன் என்ற பெயர் நமக்கு ஏற்றதாக இருக்கும்.

நாம் உண்மையிலேயே கிறிஸ்தவனாக, மறு கிறிஸ்துவாக, வாழ வேண்டும்.

இயேசு நம்மில் வாழ வேண்டும்.
நம்மைப் பார்ப்போர் நம்மில் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

"வாழ வேண்டியது நாம் அல்ல.
கிறிஸ்து நம்மில் வாழ வேண்டும்."

லூர்து செல்வம்.

Tuesday, March 15, 2022

"குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா?"(லூக்.6:39)

"குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா?"(லூக்.6:39)

கண் பார்வை இல்லாதவனை சரியான வழியே அழைத்துச் செல்பவனுக்கு நன்கு கண் பார்வை இருக்க வேண்டும்.

எழுத வாசிக்கத் தெரியாதவனுக்கு அதைக் கற்றுக் கொடுப்பவனுக்கு
எழுத வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வழி நடத்துபவனுக்கு வழி தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால்,

நற்செய்தியை அறிவிப்பவருக்கு 
நற்செய்தி தெரிந்திருந்தால் மட்டும் போதாது,

அவர் நற்செய்திப்படி வாழ்பவராகவும் இருக்க வேண்டும்.

ஆண்டவர் சீடர்களிடம் வெறுமனே நற்செய்தியை அறிவிக்க மட்டும் சொல்லவில்லை.

"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்."

அதாவது நற்செய்தியை வாழச் செய்யுங்கள்.

நற்செய்தியை வாழ்பவன்தான் சீடன்.

வெறும் அறிவிப்பு அறிவை மட்டும் வளர்க்கும்.

அறிவிப்பவர்கள் தாங்களும் அதன்படி வாழ்ந்தால்தான் மற்றவர்களை வாழ வைக்க முடியும்.

நற்செய்தியை அறிவிக்கும் போது அறிவிக்கப் படுபவர்கள் கேட்க மட்டும் செய்ய மாட்டார்கள்.

அறிவிப்பவர்களை பார்க்கவும் செய்வார்கள்.

தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பழி வாங்குவதையே பழக்கமாகக் கொண்ட ஒருவர்,

"உங்கள் விரோதிகளை நேசியுங்கள், உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்"

என்று மற்றவர்களிடம் சொன்னால்,

கேட்பவர்கள் சொல்வதைக் கேட்பதற்குப் பதிலாக 

சொல்பவரை விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

நற்செய்தி வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் வாழப்பட  வேண்டும்.

உதாரணத்திற்கு நமது பள்ளிக் கூடங்களை எடுத்துக் கொள்வோம்.

நாம் பள்ளிக்கூடங்கள் நடத்துவது வெறுமனே எழுத வாசிக்கக் கற்றுக் கொடுப்பதற்கும்,

மாணவர்களை மருத்துவர்களாகவும், பொரியியல் வல்லுநர்களாகவும்  ஆக்குவதற்கும் அல்ல.

நற்செய்தி பணியை வாழ்க்கை பணியாக செய்துவரும் நாம் பள்ளிக்கூடங்கள் நடத்துவதன் முக்கிய நோக்கம் 

அங்கு படிப்போருக்கும் , பணி புரிவோருக்கும் நற்செய்தியின் மதிப்பீடுகளை அளிப்பதுதான்.

நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு எதிராக நாம் எதுவும் செய்துவிடக்கூடாது.

ஒரு உதாரணத்திற்கு,

பள்ளியில் படிக்கும் மாணவரோ, பணி புரியும் ஆசிரியரோ ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

 மன்னியுங்கள், மன்னிக்கப் படுவீர்கள் என்பது நம்மை இயக்கக்கூடிய நற்செய்தி மதிப்பீடு.

தப்பு செய்தவர்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால் உடனே மன்னிக்க வேண்டும்.

அதை விடுத்து தப்பு செய்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து

 பணி நீக்கம் அல்லது பணி மாற்றம் செய்வதை மட்டும் நடை முறைப் படுத்திக் கொண்டிருந்தால்,

 நமக்கும், மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

நமக்கு முன்மாதிரிகையான நமது ஆண்டவராகிய
இயேசு 

யூதாசைக்கூட பணிநீக்கம் செய்யவில்லையே!

 "தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" 

என்ற அவரது செபம் யூதாசுக்கும் சேர்த்துதானே!


இராயப்பர் அவரை மூன்று முறை மறுதலித்தாலும் அவர் மீது இயேசு ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே.

அழுதவுடன் மன்னித்து விட்டாரே.

நம்மிடம் ஒப்படைக்கப் பட்டவர்களை மன்னித்து திருத்துவதுதான் நமது கடைமை, தண்டிப்பதற்காக வெளியேற்றுவது அல்ல.

இயேசுவின் சீடர்கள் நாம்.
அவர் சாதித்ததைத்தான் போதித்தார்.

நாமும் அவரைப் பின்பற்றுவோம்.

நாம் எங்கெல்லாம் வாழ்கின்றோமோ அங்கெல்லாம் நற்செய்தியை அறிவிக்கும்  கடமை உண்டு.

அங்கெல்லாம் நற்செய்தியை வாழும் கடமையும் நமக்கு உண்டு.

சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் நமது மிகப் பெரிய சொத்து. இறைவன் அளித்தது.

சிந்தனை முழுவதும் நற்செய்தியால் நிறைந்திருக்க வேண்டும்.

அது சொல்லிலும், செயலிலும் மற்றவர்களிடையே வெளிப்பட வேண்டும்.

செயலால் வெளிப்படுவது தான் வாழ்க்கை.

நாம் ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பதாக வைத்துக் கொள்வோம்.

அலுவலகக் கடமைகளை நற்செய்தியின் மதிப்பீடுகளின் படி நிறைவேற்றினால்,

நாம் விளக்குத் தண்டின் மீது வைக்கப்பட்ட விளக்கு போல நற்செய்தி ஒளியை வீசிக் கொண்டேயிருப்போம்.

ஒளி அதன் கடமையை செவ்வனே செய்யும்.

நாம் நமது வாழ்க்கை மூலம் மற்றவர்களை இயேசுவின் சீடர்களாக மாற்றிக் கொண்டேயிருப்போம்.

வார்த்தை மூலம் நற்செய்தியை அறிவிப்பதை விட வாழ்க்கை மூலம் அறிவிப்பது சிறந்தது.

உணவு வாங்க பணம் கொடுப்பதைவிட, உணவையே கொடுப்பது சிறந்தது அல்லவா? 


பெற்றோர் நற்செய்தியை வாழ்ந்தால் தான் பிள்ளைகளும் வாழ்வார்கள்.

ஆசிரியர்  வாழ்ந்தால் தான் மாணவர்கள் வாழ்வர்.

நாம் வாழ்ந்தால்தான் நம்மைச் சுற்றியுள்ளோரும் வாழ்வர்.

நற்செய்தியைப் போதிக்கும் நாம் அனைவரும் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

Monday, March 14, 2022

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே." (அரு. 3:17)


"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே." (அரு. 3:17)

இந்த வசனத்தை வாசித்து விட்டு நண்பர் ஒருவர்,

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று,"

என்று இயேசு கூறியிருக்கிறாரே,

ஆனால் நாம்  

"இயேசு சீவியரையும் மரித்தவரையும் நடுதீர்க்கவருவார்."

என்று விசுவசிக்கிறோமே,

நமது விசுவாசம் தவறா?"

என்று கேட்கிறார்.

இறுதித் தீர்ப்பு உண்டு என்று
(மத்.25:31-46) இயேசுவே கூறியிருக்கிறார்.

ஆகவே நமது விசுவாசம் சரியானது தான்.

"அப்படியானால்

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."
என்ற வசனம்?

அதுவும் இயேசு கூறியதுதானே!

அதெப்படி
இயேசுவே 

இறுதித் தீர்ப்பு உண்டு என்றும்,
அவர் உலகிற்கு வந்தது தீர்ப்பளிக்க அல்ல என்று கூறுவார்?"

இயேசுவின் இரு கூற்றுக்களும் சரியானவையே,

நாம் தான் புரிந்து கொள்ளக் கூடிய விதமாய்ப் புரிந்து கொள்ள வேண்டும்.

இயேசு சொன்ன வசனம் முழுமையாக:

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே.

அவரில் விசுவாசம் கொள்பவன் தீர்ப்புக்கு ஆளாவதில்லை:

 விசுவாசங்கொள்ளாதவனோ ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டான்."

பள்ளிக்கூட மாணவர்கள்களுக்கு இது புரியும்.

தேர்வு எழுதுகிறவர்களுக்கு,
விடைத்தாளை மதிப்பிட்ட பின்

Pass, fail ஆகிய இரண்டில் ஒரு முடிவு வரும்.

விடைத்தாளைத் தாளைத் திருத்துபவர் ஆசிரியர், மதிப்பெண் போடுபவரும் அவர்தான்.

Pass Mark போடுபவரும் அவர்தான்.

fail mark போடுபவரும் அவர்தான்.

ஆனால் மாணவனை fail ஆக்குபவர் பேப்பர் திருத்தும் ஆசிரியரா?

மாணவன் 35 மதிப்பெண்ணுக்குக் கூட சரியான பதில் எழுதாவிட்டால் அவன் fail தான்.

உண்மையில மாணவன் தன்னைத் தானே fail ஆக்கிக் கொள்கிறான், சரியாக பதில் எழுதாததன் மூலம். 

அவன் தன்னைத் தானே fail ஆக்கிக் கொண்டதை ஆசிரியர் சொல்கிறார். அவ்வளவுதான்.
அவர் fail ஆக்குவதில்லை.

 கடவுள் மனிதனை முழுமையான சுதந்திரம் உள்ளவனாகப் படைத்தார்.

விண்ணக வாழ்வுக்காக அவனைப் படைத்திருந்தாலும் அதை அவன் தன் சுதந்தரத்தைப் பயன் படுத்தி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவர் திட்டம்.

அவர் "என்னோடு வாழ்வதை (மோட்சத்தை) தேர்ந்தெடு" என்று சொல்கிறார்.

மனிதன் மோட்ச வாழ்வைத் தேர்ந்தெடுப்பதற்காகவே கடவுள் மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, தன்னையே சிலுவையில் பலியாக்கினார்.


கடவுளை விசுவசித்து, அதன்படி வாழ்ந்து, மரிப்பவர்கள் விண்ணகம் செல்வார்கள் என்பதும்,

கடவுள் வேண்டாமென்று பாவ வாழ்க்கை வாழ்ந்து மரிப்பவர்கள்

 அவர்கள் விருப்பப்படி கடவுளைப் பிரிந்த நிலைக்கு, அதாவது, நரகத்திற்குப் போவார்கள் என்பதும் இறைவன் வகுத்த நியதி.

மோட்சம் வேண்டுமா, நரகம் வேண்டுமா என்று தீர்மானிப்பவர்கள் வாழும் மனிதர்கள்தான், கடவுள் அல்ல.

இறக்கும்போது
கடவுள் வேண்டும் என்று வாழ்ந்தவர்கள் அவர்கள் விருப்பப்படி மோட்சத்திற்கும்,

வேண்டாம் என்று வாழ்ந்தவர்கள் அவர்கள் விருப்பப்படி நரகத்துக்கும் செல்வார்கள்.

இறுதி நாளில் இறந்தவர்கள் உயிர்பெற்று எழுவார்கள்,

அப்போதுதான் நடுத்தீர்வை இருக்கும்.

இயேசு வருவார்.

 ஏற்கனவே தங்கள் நித்திய நிலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் 

தங்கள் உடலோடு ஏற்கனவே தாங்கள் போன நிலைக்கே போவார்கள்.

மரணத்துக்குப் பிந்திய நமது வாழ்க்கை நிலையை நாம்தான்
தேர்ந்தெடுக்க வேண்டும்.

35 மதிப்பெண் பெற்றால்தான் pass, குறைவாகப் பெற்றால் fail என்று தெரிந்த பின்னும் படிக்காதவர்களை ஆசிரியர் என்ன செய்வார்?

பாவம் இல்லாமல் வாழ்ந்து மரித்தால் மோட்சம்,

 பாவத்தோடு வாழ்ந்து மரித்தால் நரகம் 

என்று தெரிந்த பின்பும்

 பாவ நிலையில் வாழ்ந்து மரிப்பவர்களை  கடவுள் என்ன செய்வார்?

கடவுள் இரக்கம் உள்ளவராய் இருப்பதால் தான் நாம் பாவம் செய்யும்போதும் நாம் திருந்தி வாழ அழைப்பும், நேரமும் கொடுத்திருக்கிறார்.

கடவுளது இரக்கத்தைப் பயன் படுத்தி திருந்தி வாழ்பவர்கள் மோட்சத்துக்கும்,

திருந்தி வாழாதவர்கள் நரகத்துக்கும் போவார்கள்.  

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் நடத்துகிறார். தேர்வு வைக்கிறார். 

தேர்வில் 35 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்கள் வெற்றி என்றும்,

குறைவாகப் பெறுபவர்கள் தோல்வி என்றும் சொல்லி விடுகிறார்.

வெற்றி பெற ஆசிப்பவர்கள் நன்கு படிப்பார்கள்.

வெற்றியைப் பற்றி அக்கறைப் படாதவர்கள், அதாவது, தோற்றாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் நன்றாகப் படிக்க மாட்டார்கள்.

வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பவர்கள் மாணவர்களே, ஆசிரியர் அல்ல.

அதேபோல்தான்,

கடவுளோடு வாழ வேண்டுமா,

அல்லது கடவுளைப் பிரிந்து வாழ வேண்டுமா

என்று தீர்மானிப்பவர்கள் மனிதர்களே, கடவுள் அல்ல.

மனிதர்கள்தான் தங்களைத்  தாங்களே தீர்ப்பிட்டுக் கொள்கிறார்கள், கடவுள் அல்ல.

உலக முடிவில் இறுதித் தீர்ப்பு இருக்கும். இயேசு வருவார். தீர்ப்பிட அல்ல.

 தங்கள் வாழ்க்கை மூலம் தங்களையே தீர்ப்பிட்டுக் கொள்பவர்கள் மனிதர்களே.

கடவுள் திட்டப்படி வாழ்வோம்.
நித்திய பேரின்ப வாழ்வைத் தேர்ந்து கொள்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, March 13, 2022

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்." (லூக்.6: 36)

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்." (லூக்.6: 36)

 நம்மைப் பற்றி இயேசுவுக்கு எவ்வளவு பெரிய ஆசை பாருங்கள்!

நேசர்களுக்கு தாங்கள் நேசிப்பவர்களும் தங்களைப் போலவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயற்கைதான்.

ஆனால் நாட்டை ஆளும் மன்னர் தனது குடிமக்கள் தனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று ஆசிப்பாரே  தவிர,

தன்னைப் போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட மாட்டார்.

இயேசு நம்மைப் படைத்த கடவுள்.

அவர் அற்ப மனிதர்களாகிய நாம் கடவுளாகிய அவரைப் போல் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவதை  சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது.

ஆனால் அதுதான் உண்மை.

அவரே சொல்கிறார்:

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்."

தந்தையும், மகனும் ஆட்கள் தான் இரண்டே தவிர ஒரே கடவுள்தான்.

ஆகவே தந்தையைப் போல என்றாலும், மகனைப் போல என்றாலும் ஒன்று தான்.

கடவுள் அளவில்லாதவர். அவருடைய எல்லா பண்புகளும்
 அளவில்லாதவை.

நாமோ அளவுள்ளவர்கள். 

அளவுள்ள நாம் எப்படி அளவில்லாதவரைப் போல் இருக்க முடியும்?

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, 

நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்.

இரக்கத்தைப் பொறுத்த மட்டில்:


உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருக்கிறார்.

அதுபோல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்.

அளவைப் பொறுத்த மட்டில் 

கடவுள் அளவில்லாதவர், ஆகவே அவருடைய இரக்கமும் அளவில்லாதது.


நாம் அளவுள்ளவர்கள்.
நாம் நம்முடைய அளவு எவ்வளவோ அவ்வளவு முழுமையும் இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கடல் நிறைய தண்ணீர் உள்ளது.

நமது வீட்டில் தம்ளர் நிறையவும் 
தண்ணீர் உள்ளது.

அளவு வித்தியாசமாக இருக்கலாம்.

ஆனால் முழுமையில் வித்தியாசமில்லை.

கடவுள் முழுமையும் இரக்கம் உள்ளவராக இருப்பதால், அவரிடம் இரக்கத்திற்கு எதிரான எந்த பண்பும் இருக்க முடியாது.

நாமும் முழுமையாக இரக்கம் உள்ளவர்களாக இருந்தால் நமக்குள்ளும் இரக்கத்திற்கு எதிரான எந்த பண்பும் சிறிது கூட இருக்கக் கூடாது.

இரக்கத்திற்கு எதிரான எந்த பண்பும் சிறிது இருந்தாலும் நாம் கடவுளைப் போல இரக்கம் உள்ளவர்கள் அல்ல.

கடவுள் இவ்வுலக மக்கள் தனக்கு எதிரான பாவங்களைச் செய்து கொண்டேயிருந்தாலும்

 அவர்களைத் தொடர்ந்து பராமரித்துக் கொண்டே வருவதற்குக் காரணம் 

அவரது அளவு கடந்த இரக்கம்தான்.

நாம் வருடக்கணக்காக நமது பிள்ளைகளை இரக்கத்தோடு பராமரித்து விட்டு,

நமக்கு வயது வந்த காலத்தில் அவர்கள் நம்மைக் கவனிக்கா விட்டால்,

 அதற்காக அவர்களை வெறுக்க ஆரம்பித்து விட்டால்,

நம்மிடம் முழுமையாக இரக்கம் இல்லை.

எந்தக் காலத்திலும், எந்த காரணத்தை முன்னிட்டும் மாறாத இரக்கம்தான் முழுமையான இரக்கம்.

நம்மைப் பார்ப்பவர்கள் நமது அன்பையும், இரக்கத்தையும் பார்த்து 'இவர்கள் இயேசுவின் சீடர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

லூர்து செல்வம்.

Saturday, March 12, 2022

"இராயப்பரும் அவரோடு இருந்தவர்களும் தூக்க மயக்கமாயிருந்தனர்."( லூக்.9:32)

"இராயப்பரும் அவரோடு இருந்தவர்களும் தூக்க மயக்கமாயிருந்தனர்."
( லூக்.9:32)

எல்லா அப்போஸ்தலர்களுக்கும் இயேசு இறை மகன், கடவுள், என்பது தெரியும்.

ஆயினும் அவர்களில் இராயப்பர், யாகப்பர், அருளப்பர் ஆகிய மூவருக்கும் இயேசு அவருடைய தெய்வீக தோற்றத்தைக் காண்பிக்க விரும்பினார்.

அதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு மலை மேல் ஏறினார்.

அங்கு அவரது முகத்தோற்றம் மாறியது. அவரது ஆடையும் வெண்மையாய் ஒளிவீசியது.

மோயீசனும் எலியாசும் விண்ணொளியிடையே தோன்றி அவரோடு உரையாடிக் கொண்டிருந்தனர்.

இயேசுவின் பாடுகள் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவருடைய சீடர்கள் தூக்க மயக்கமாயிருந்தனர்.

விழித்தெழுந்து, அவருடைய மாட்சிமையையும், அவரோடு நின்ற இருவரையும் கண்டனர்.

அவ்விருவரும் அவரை விட்டுப் பிரியும்பொழுது இராயப்பர் இயேசுவிடம்,

 "குருவே, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! உமக்கொன்றும், மோயீசனுக்கொன்றும், எலியாசுக்கொன்றுமாகக் கூடாரம் மூன்று அமைப்போம்" என்று

தாம் சொல்லுவது இன்னதென்று அறியாமல்- கூறினார்.

இயேசு தனது சீடர்களை மலைக்கு அழைத்துச் சென்றது தூங்குவதற்கு அல்ல.

ஆனால் அதை அந்த மூவருமே செய்தார்கள்.

இயேசுவும், மோயீசனும், எலியாசும் ஆண்டவரது பாடுகள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது இவர்கள் அதைக் கவனித்திருக்க வேண்டும்.

ஆனால் அப்போது தூக்கக் கலக்கமாய் இருந்து விட்டு,

தூக்கம் கலைந்த பின்

அவருடைய மாட்சிமையையும், அவரோடு நின்ற இருவரையும் கண்டனர்.

நல்ல வேளை ஆண்டவரது மாட்சிமையாவது பார்த்தார்களே!

ஆனால் மோயீசனையும், எலியாசையும் பார்த்த இராயப்பர்,

'அவர்கள் ஆண்டவரை விட்டுப் பிரியும் பொழுது'

 இயேசுவிடம், "குருவே, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! உமக்கொன்றும், மோயீசனுக்கொன்றும், எலியாசுக்கொன்றுமாகக் கூடாரம் மூன்று அமைப்போம்" என்று கூறினார்.


அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது தூங்கிவிட்டு,

புறப்படும்போது இராயப்பர்

"நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று!''
என்று கூறுகிறார்!

அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்தபின் கூடாரம் எதற்கு?

ஆனாலும் மூவருக்கும் சேர்த்து ஒரு கூடாரம் அமைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கலாம்.

மூவருக்கும் தனித்தனியே மூன்று கூடாரங்கள் அமைத்தால் எப்படி மூவரும் பேச முடியும்?

"தாம் சொல்லுவது இன்னதென்று அறியாமல்- கூறினார்."

என்று நற்செய்தி ஆசிரியரே கூறிவிட்டார்!


ஆனால் ஒரு வகையில் அவரைப் பாராட்ட வேண்டும்.

இராயப்பர் தன்னைப் பற்றியும், மற்ற இரு சீடர்களைப் பற்றியும் கவலைப் படவில்லை.

ஆண்டவருக்கும், மோயீசனுக்கும், எலியாசுக்கும் மட்டுமே உதவி செய்ய நினைத்தார்.

இங்கு போலவே இயேசு தனது பாடுகளுக்கு முந்திய நாள் கெக்சமனி தோட்டத்திற்கு செபம் சொல்லப் போகும்போதும்

இந்த மூன்று சீடர்களை மட்டுமே அழைத்துச் சென்றார்.

அங்கும் அவர் செபித்துக் கொண்டிருந்த போது இந்த மூவரும் தூங்கிக் கொண்டுதான் இருந்தார்கள்.

நாம் இவர்களைப் பற்றி தியானிக்கும் போது நம்மைப் பற்றியும் தியானிக்க வேண்டும்.

இயேசு சீடர்களைத் தேர்ந்தெடுத்தது போலவே நம்மையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

குறைகள் உள்ளவர்களைத்தான் சீடர்களாகத் தேர்ந்தெடுத்து,

தான் சென்ற இடமெல்லாம் அவர்களையும் அழைத்துச் சென்றார், தன்னிடமிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக.

அவர் நினைத்திருந்தால் ஒரு புதுமை செய்து அவர்களை நிறைவானவர்களாக (perfect) மாற்றியிருக்கலாம்.

ஆனால் இயேசு மரணமடையும் மட்டும் அவர்கள் குறை உள்ளவர்களாகவே இருந்தார்கள்.

அவர் பாடுகள் ஆரம்பித்தவுடன் அவரை விட்டு ஓடிவிட்டார்கள்.

இராயப்பர் அவரை மூன்று முறை மறுதலித்தார்.

பின் மனம் வருந்தி அழுதார்.
 
'அவர் உயிர்த்ததைக் கூட அவர்கள் முதலில் நம்பவில்லை.

ஆயினும் பரிசுத்த ஆவியின் வருகைக்குப் பின் அவர்கள் முற்றிலுமாக மாறிவிட்டார்கள்.

குறைகள் உள்ள நம்மையும் இயேசு தன்னைப்  பின்பற்ற அழைத்திருக்கிறார்.

அன்று இயேசு மோயீசனோடும், எலியாசோடும் பேசும்போது இராயப்பரும், மற்ற இரண்டு சீடர்களும் தூக்கக் கலக்கத்தில் இருந்தது போலவே

நாமும் ஞான காரியங்களில் தூக்கக் கலக்கத்தோடுதான் செயல்படுகிறோம்.

காலை செபத்தையே தூங்கிக் கொண்டுதான் சொல்கிறோம்.

(உடனே பக்தியுடன் சொல்பவர்கள் கோபப்படக் கூடாது. எனக்கும் நண்பர்கள் இருப்பார்கள்.)

ஞாயிறு திருப்பலியின்போது பிரசங்கம் கொஞ்சம் நீண்டு விட்டால் கனவில் தான் பிரசங்கம் கேட்கிறோம்.

செபமாலை சொல்ல ஆரம்பித்து விட்டாலே தூக்கம் எங்கிருந்தோ வந்து விடுகிறது.

சிலருக்கு இரவில் செபமாலைதான் தூக்க மருந்து.

 பொதுவாகவே ஞான வாழ்வை முழுமையான ஈடுபாட்டோடு வாழ்வதில்லை.

சிலர் நன்மை வாங்கியவுடன் ஆண்டவரையும் அழைத்துக் கொண்டு டீக்கடைக்கும், கசாப்புக் கடைக்கும் போய்விடுகிறார்கள்.

ஞான வாழ்வில் குறைபாடுகள் உள்ளவர்கள் நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம்.

அப்போஸ்தலர்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

ஆண்டவருடனே
இருந்தவர்களுக்கே குறைகள் இருந்தன.

அதற்காக அவர்களை ஆண்டவர் விலக்கி விடவில்லை.

அவரது திருச்சபையையே அவர்கள் கையில்தான் ஒப்படைத்தார்.

தங்கள் உயிரைக் கொடுத்து
திருச்சபையை உலகெங்கும் பரப்பியவர்கள் அவர்கள் தான்.

பரிசுத்த ஆவியின் வல்லமையால் இது சாத்தியம் ஆயிற்று.

நாமும் பரிசுத்த ஆவியை உதவிக்கு அழைப்போம்.

நமது குறைகளை எல்லாம் நீக்க அவரை மன்றாடுவோம்.

பரிசுத்த ஆவி இருக்கும் இடத்தில் மகன் இருக்கிறார்.

மகனும், பரிசுத்த ஆவியும் இருக்கும் இடத்தில் தந்தை இருக்கிறார்.

மூவரும் ஒரே கடவுள்.

ஒவ்வொரு செயலையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்

 ஆரம்பித்து கடவுள் முன்நிலையில் செய்தால்

அது அவருக்கு ஏற்றதாக இருக்கும்.

கடவுள் பெயரால், கடவுளுக்காக வாழ்வோம். 

குறைகள் காணாமல் போய்விடும்.

லூர்து செல்வம்.

Friday, March 11, 2022

முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள். பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து." ( மத். 5:24)

"முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள். 

பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து." ( மத். 5:24)

தன் அயலானை நேசியாத 
எவனும் கடவுளை நேசிக்கிறேன் என்று சொன்னால் அவன் பொய்யன்.

இறைவன் மீது கொண்டுள்ள அன்பையும், பிறன் மீது கொண்டுள்ள அன்பையும் பிரிக்க முடியாது.

இறைவன் மீது அன்பு இருந்தால், பிறன் மீதும் கட்டாயம் அன்பு இருக்கும்.

யார் மீது நமக்கு உண்மையான அன்பு இருக்கிறதோ அவருடைய நற்குணங்கள் நம்மையும் பற்றிக் கொள்ளும்.

கடவுள் எல்லோரையும் நேசிக்கிறார். நாம் அவரை நேசித்தால், நாமும் அவரைப் போலவே எல்லோரையும் நேசிப்போம்.

எல்லோரையும் என்றால் எல்லோரையும்தான்.

அதாவது நல்லவர், கெட்டவர் என்ற குண வேறுபாடு இன்றி,

ஏழை, பணக்காரன் என்ற பொருளாதார 
வேறுபாடு இன்றி,

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற சமூக வேறுபாடு இன்றி,

நண்பன், எதிரி என்ற வேறுபாடு இன்றி எல்லோரையும்.

கடவுளை நேசிப்பவர்களுக்கு எதிரிகளே இருக்க முடியாது. கடவுள் முன் எதிரியும் நண்பனாகி விடுவான்.

நான் எப்படி எனக்கோ, அப்படியே அனைவரும் எனக்கு.

கடவுளே இல்லை என்பவர்களையும் 
 அவர் நேசிக்கிறார்.

 கடவுளை நேசியாதவர்களையும்,
 அவர் நேசிக்கிறார்.

ரஷ்யர்களையும் நேசிக்கிறார்.
உக்ரேனியர்களையும் நேசிக்கிறார்.

இராயப்பரை நேசிப்பது போலவே யூதாசையும் நேசிக்கிறார்.

நம்மை நேசியாதவர்களையும் நாம் நேசிக்க வேண்டும்.

அன்பின் விளைவு சமாதானம்.

இறைவனை உண்மையாகவே நேசிப்பவர்கள் அவருக்கு விரோதமாக பாவம் எதுவும் செய்ய மாட்டார்கள்.

 ஆகவே இறைவனுக்கும் அவர்களுக்கும் இடையே பரிபூரண சமாதானம் நிலவும்.

அயலானை நேசிப்பவர்கள் பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் எதையும் செய்ய மாட்டார்கள்.

சமூகத்தில் இறையன்பின் அடிப்படையில் சமாதானம் நிலவும்.

அன்பு இருக்கும் இடத்தில் சமாதானமும் இருக்கும்.

இயேசு பிறந்த நாளில் விண்ணவர் பாடிய கீதம்

 அன்பு இருக்கும் இடத்தில் உண்மையாகும்.

இறையன்பாலும், பிறரன்பாலும் நிறைந்த அனைவர் மனமும் நன்மனமாக இருப்பதால்

மனதிலும், சொல்லிலும், செயலிலும் சமாதானம் நிலவும்.

அத்தகையோர் வாழும் உலகில் சண்டை, சச்சரவு, போர் என்ற வார்த்தைகளே இருக்காது.

'இறைவனோடு சமாதான நிலையில் உள்ளவர்களால்தான் அவருக்கு காணிக்கை செலுத்த முடியும்.

இறைவிரோத பாவ வாழ்க்கை வாழ்வோரால் இறைவனுக்கு காணிக்கை செலுத்த முடியாது.

பிறரோடு சமாதானம்  இன்றி காணிக்கை    செலுத்தினால் இறைவன் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார். 


''நீ பீடத்தின்மேல் காணிக்கை செலுத்த வரும்பொழுது, 

உன் சகோதரனுக்கு உன்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால்,

24 அங்கேயே, பீடத்தின்முன், உனது காணிக்கையை வைத்துவிட்டு, 

முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள். 

பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து." ( மத். 5:23, 24)
என்று இயேசு கூறுகிறார்.

நமக்கு நம் சகோதான் மீது எந்த கோபமும் இல்லாவிட்டால்கூட 
அவனுக்கு நம்மீது மனத்தாங்கல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. 

ஒருவேளை அவன் நம்மைத் தவறாக புரிந்து கொண்டால்கூட அவனுக்கு நம்மீது மனத்தாங்கல் ஏற்படலாம். 

நம்மைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவுவதன் மூலம் மனத்தாங்கலை நீக்கலாம்.

எப்படியாவது மனத்தாங்கலை நீக்கியபின் அவருக்குக் காணிக்கை செலுத்தும்படி ஆண்டவர் சொல்கிறார்.

இதிலிருந்து மக்கள் சமாதானமாக வாழ்வதற்கு ஆண்டவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது.

ஆண்டவரது விருப்பங்களை முழு மனதோடு நிறைவேற்றுவதுதான் அவருடைய சீடர்களாகிய நமது தலையாய கடமை.

இயேசு நமது அன்பர்.

சீடர்கள் என்ற முறையில் குருவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பதுபோல,

அன்பர்கள் என்ற முறையில் அவரை எல்லாவற்றுக்கும் மேலாக அவரை அன்பு செய்ய வேண்டும்,

 அவரை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும்.

சமாதான வாழ்வே மகிழ்ச்சியான வாழ்வு.

காணிக்கை என்று சொன்னவுடனே ஒரு உண்மை நினைவுக்கு வருகிறது.

காணிக்கை இறைவனுக்கு செலுத்தப்படுவது.

இறைவன் பரிசுத்தர்.

அவருக்குச் செலுத்தப்படும் காணிக்கையும் பரிசுத்தமாக இருக்க வேண்டும், அதாவது, பரிசுத்தமான முறையில் ஈட்டியதாக இருக்க வேண்டும்.

பாவ வழியில், குறுக்கு வழியில் ஈட்டிய பணத்தை இறைவனுக்குச் செலுத்துவது

அவரை அவமானப் 
படுத்துவதற்குச் சமம்.

இறைவனுக்கு ஆலயம் கட்டுவதற்காக நன்கொடை பிரிப்பார்கள்.

அதுவும் காணிக்கைதான்.

நம்மால் இயன்றதை, காணிக்கை செலுத்தும் மன நிலையுடன் நன்கொடையாகக் கொடுக்க வேண்டும்.

நன்கொடை பிரிப்பவர்,

"பத்தாயிரமும் அதற்கு மேலும் கொடுப்பவர் பெயர் கற்பலகையில் பொறிக்கப்பட்டு, 

கோவில் சுவரில் பதிக்கப்படும்"

என்று கூறினால்,

"அப்போ 10,000 எழுதிக் கொள்ளுங்கள்" என்று சொல்லி 10,000 கொடுத்தால்

கொடுத்தது இறைவனுக்குக் கொடுத்த காணிக்கை அல்ல.

சுயவிளம்பரத்துக்கான கூலி.

ஆலயம் கட்டுவது நமது பெயரை விளம்பரப் படுத்துவதற்காக அல்ல.

நல்ல, தாழ்ச்சியான மனதுடன் காணிக்கை செலுத்த வேண்டும்.

அதுதான் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும்.

சமாதான மனதுடன் செலுத்தப்படும் காணிக்கைதான் உண்மையான காணிக்கை.

பாவம் இல்லாதிருக்கும் போது இறைவனோடு சமாதான நிலையில் இருக்கின்றோம்.

பிறருக்கு தீங்கு நினைக்காமல் நல்லதையே நினைக்கும் போது பிறரோடு சமாதான நிலையில் இருக்கின்றோம்.

சமாதானம் என்றாலே இறைவனோடும், பிறனோடும் அன்பு உறவு நிலையில் இருப்பதுதான்.

இறையன்பையும், பிறரன்பையும் பிரிக்க முடியாது.

நமது பிறனுக்கு அன்புடன் செய்யும் உதவியே இறைவனுக்கு செலுத்தும் காணிக்கைதான்.

நம்மிடம் பணம் இருக்கும்போது பிறனது அவசரச் செலவுக்கு 
10 ரூபாய் கொடுக்க மறுத்து விட்டு,

கோவில் உண்டியலில் 
1000 ரூபாய் காணிக்கை போட்டால் அது இறைவனுக்கு ஏற்ற காணிக்கை அல்ல.

நன்மனதோடு இருப்போம். இறைவனோடும், பிறனோடும் சமாதான நிலையில் இருப்போம்.

சமாதான நிலைதான் இறைவனுக்கு காணிக்கை செலுத்த ஏற்ற நிலை.

லூர்து செல்வம்.

Thursday, March 10, 2022

விண்ணிலிருந்து ஒரு கடிதம்.

விண்ணிலிருந்து ஒரு கடிதம்.

அன்புள்ள தம்பிமாருக்கு,

இறையண்ணன் இயேசுவின் அன்பும், அரவணைப்பும் ஆசீரும்.

பெற்றோருக்குப் பிள்ளைகள் கடிதம் எழுதும்போது பெற்றோர் அதில் எதிர்பார்ப்பது பிள்ளைகளின் அன்பின் வெளிப்பாட்டையா? அல்லது வார்த்தைகளையா?

நிச்சயமாக பிள்ளைகளின் அன்பைத்தான்.

கடிதம் வார்த்தைகளின் தொகுப்பு அல்ல, அன்பின் வெளிப்பாடு.

அதேபோல்தான் மண்ணில் வாழும் எனது சகோதரர்கள் எனக்கு அனுப்பும் கடிதங்களில் நான் எதிர்பார்ப்பது அன்பின் வெளிப்பாட்டைத்தான்,

வெறும் வார்த்தைகளையோ, உலகைச் சார்ந்த விண்ணப்பங்களையோ அல்ல.

உடனே நீங்கள்,

" கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நீங்கள்தானே சொன்னீர்கள்.

அதன்படிதானே நாங்கள் கேட்கிறோம்.

கேட்பதற்கு நாங்கள் விண்ணப்பங்களையும், வார்த்தைகளையும்தானே பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

வேறு எப்படி கேட்க?"
என்று கேட்பீர்கள்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்"
என்ற வார்த்தைகளின் உண்மையான பொருளை நீங்கள் தெரிந்து கொண்டிருந்தால் இப்படி கேட்க மாட்டீர்கள்.

இறை மகனாகிய நான் மனுமகனாகப் பிறந்து மக்களிடையே வாழ்ந்தது அவர்களின் உடல் நோய்களைக் குணம் ஆக்குவதற்காக அல்ல.

ஆன்ம நோயைக் குணமாக்கவே மனுவுரு எடுத்தேன்.

நான் சென்றவிடமெல்லாம் மக்களின் நோய்களைக் குணமாக்கியது உண்மைதான்.

ஆனால் அதன் நோக்கம் அவர்களிடையே என்மீது விசுவாசத்தை ஏற்படுத்தவே.

ஒவ்வொரு முறை குணமாக்கியபோதும், "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றுதான் சொன்னேன்.

நான் வளர்ந்த ஊர் மக்களிடம் விசுவாசமில்லாமையால் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை.

நான் மனிதன் ஆனதன் நோக்கம் ஆன்மீக மாற்றம், லௌகீக மாற்றம் அல்ல.

விசுவாசம், அன்பு, பாவப் பரிகாரம், பாவ மன்னிப்பு, ஆன்மாவின் மீட்பு, இறையரசு ஆகியவை மட்டுமே நான் மனிதன் ஆனதன் நோக்கம்,

நான் நிறுவிய திருச்சபையின் நோக்கமும் அவை மட்டுமே.

இவைகள் சம்பந்தப்பட்ட உதவிகளைத்தான் "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று சொன்னேன்.

எனது சகோதார்கள் இவை சம்பந்தப்பட்ட உதவிகளைக் கேட்டால் கட்டாயம் கொடுப்பேன்.

உடனே நீங்கள்,

"நீங்கள்தானே, ஆண்டவரே, எங்களைப் படைத்து இந்த உலகில் வாழ வைத்திருக்கிறீர். 

 உங்களுடைய உதவி இல்லாமல் நாங்கள் எப்படி இங்கே வாழ முடியும்?

உலகம் சம்பந்தப்பட்ட உதவிகளையும் உம்மிடம் அல்லாமல் வேறு யாரிடம் கேட்போம்."
என்று கேட்பீர்கள்.

உங்களைப் படைத்தது நான்தான், உங்களை இந்த உலகில் வாழவைத்ததும் நான்தான்.

ஆனால் நான் உங்களை இந்த உலகில் வாழவைத்தது முழுக்க முழுக்க ஆன்மீகம் சார்ந்தது.

லௌகீகம் சார்ந்தது அல்ல.

நீங்கள் இவ்வுலகில் வாழ்ந்தாலும் நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

விண்ணகத்தைச் சார்ந்தவர்கள்.

நீங்கள் இவ்வுலகில் வாழ்வது விண்ணகம் வருவதற்காகத்தான், உலகில் நிரந்தரமாக வாழ்வதற்காக அல்ல.

ஆகவே உங்கள் சிந்தனை, சொல், செயல் எல்லாம் எப்போதும் விண்ணகம் நோக்கியே இருக்க வேண்டும்.

நீங்கள் மூச்சு விட்டால்தான் இவ்வுலகில் வாழ முடியும்.

ஆனால் அது விண்ணகம் செல்வதற்காகத்தான்.

நீங்கள் சாப்பிட்டால்தான் இவ்வுலகில் வாழ முடியும்.

ஆனால் அதுவும் விண்ணகம் செல்வதற்காகத்தான்.

நீங்கள் வேலை பார்த்து சம்பளம் வாங்கினால்தான் இவ்வுலகில் வாழ முடியும்.

ஆனால் அதுவும் விண்ணகம் செல்வதற்காகத்தான்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் விண்ணகம் செல்வதற்காகச் செய்தால்
அது ஆன்மீகம் சார்ந்த செயலாக மாறிவிடுகிறது.

 நீங்கள் கேட்கும் உதவிகள் ஆன்மீகம் சார்ந்தவையாக இருந்தால்தான்

அவை "கேளுங்கள் கொடுக்கப் படும்" என்ற எனது வாக்குறுதியின் கீழ் வரும்.

நீங்கள் கேட்கும் உதவி ஆன்மீக வாழ்விற்கு கேடு விளைவிக்குமானால் அதை எத்தனை தடவை கேட்டாலும் கொடுக்க மாட்டேன்..

ஆகவே நீங்கள் கேட்கும் ஏதாவது ஒரு உதவி உங்களுக்கு கொடுக்கப்படாவிட்டால் அது உங்களது ஆன்மீக நன்மைக்காகவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே ஆன்மீகம் சார்ந்த உதவிகளைக் கேளுங்கள்,

கட்டாயம் கிடைக்கும்.

எனது சகோதரர்களின் கடிதங்களில் நான் எதிர் பார்ப்பது அன்பை மட்டுமே.

அன்பை வெளிப்படுத்தும் கடிதங்கள் நமது உறவை வலுப்படுத்தும்.

அன்பை மட்டுமே வெளிப்படுத்தி கடிதங்கள் எழுதலாம்.

எனது அன்பையும், எனது பாடுகளையும் தியானித்து அதன் அடிப்படையில் எழுதப் படும் கடிதங்களில் அன்பும், நன்றி உணர்வும் மட்டுமே இருக்கும்.

விண்ணப்பங்கள் எதுவும் இருக்காது.

உதாரணத்திற்கு,

செபமாலை தியானங்களைக் கடிதமாக அனுப்புகிறவர்கள் நான் அவர்களுக்காகப் பிறந்து வாழ்ந்ததை மட்டும் தியானித்து எழுதுவதால்,

அவர்கள் அதில் எனது அன்பையும், எனது அன்பினால் தூண்டப்படும் அவர்களது அன்பையும் மட்டும் குறிப்பிட்டிருப்பார்கள்.

நான் கற்றுக் கொடுத்த செபத்திலும், மங்கள வார்த்தை செபத்திலும் உள்ள ஆன்மீக விண்ணப்பங்களைத் தவிர வேறு எந்த விண்ணப்பமும் இருக்காது.

ஒரு 53 மணி செபமாலைக் கடிதத்தில்

எங்கள் அன்றாட உணவை இன்று தாரும்,

எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்,

எங்களை சோதனையில் விழாதபடி காப்பாற்றும்,

தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்

என்று ஆறு முறை விண்ணப்பிப்பார்கள்.


53 முறை எனது அன்னையை நோக்கி

"இப்போதும்,எங்கள் மரண நேரத்திலிலும் வேண்டிக் கொள்ளும்" 

என்றும் விண்ணப்பிப்பார்கள்.

தினமும் 153 மணி செபமாலை கடிதம் அனுப்புபவர்கள் அவர்களது வாழ்நாளில் எத்தனை முறை இந்த விண்ணப்பங்களை அனுப்புவார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள்!

அவர்களது விண்ணப்பங்கள் அனைத்தும் உறுதியாக நிறைவேற்றப்படும்!

எல்லா விண்ணப்பங்களும் ஆன்மீகம் சார்ந்தவை.

ஆகவே செபமாலைக் கடிதம் எனக்கு மிகவும் பிடிக்கும்,

செபமாலை கடிதத்தை ஒழுங்காக எழுதுபவர்களை எனது அன்னையே விண்ணகம் அழைத்து வந்துவிடுவார்கள். 

மனிதர்கள் அனைவரையும் படைத்தவர் நான்தான்.

ஆயினும் அனைவரையும் எனது சகோதரர்களாக ஏற்றுக் கொண்டுள்ளேன்.

எனது தந்தை அனைவருக்கும் தந்தை.

நான் அனைவருக்கும் சகோதரன்.

நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர்.

அன்பால் இணைந்து வாழும் குடும்பத்தினர்.

தந்தையும், நானும், பரிசுத்த ஆவியும் உங்கள் அனைவரையும் நேசிப்பதுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள்.

எல்லோரும் விண்ணகத்தில் என்றென்றும் அன்பில் இணைந்து வாழ்வோம்.

உயிருக்கு உயிராய் என்றும் உங்கள் அன்பு அண்ணன்,

இயேசு.

    *********** ***********

இயேசுவே,

உங்கள் சகோதரர்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம்.

நாங்களும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம்.

தொடர்ந்து நேசிக்க வரம் அருளும்.

லூர்து செல்வம்.

Sunday, March 6, 2022

Meditation on God’s Love.


Meditation on God’s Love.



(‘I’ refers both to the Author and the reader of the article.)

I am not like a grain of the sand in the long and wide Marina beach.

 I am not just one of the millions and millions of human beings past, present, and future.

I am a unique human being loved by God as if I were the only child — the only fruit of His creative powers.

He loves me.

He created me out of nothing.

He has endowed me with whatever good I have in order to use it for His glory as long as I am in this world and to live with Him for all eternity when I leave this world.

It is not because I am worthy of it, but because He loves me.

Even if I were the only sinner in the world, Jesus would have died on the cross for me.

When I look at Jesus, I see His Father, who is one with His Son and the Holy Spirit who is one with the Father and the Son.

The love of the whole human race put together would be merely as a spark in comparison with the love Jesus has for me.

I cannot fathom the depth of His love, it is so deep.

 

At the Last Supper, “The disciple Jesus loved was reclining next to Jesus . . . so leaning back on Jesus’ breast he said, ‘Who is it Lord?’ ” (Jn. 13:23, 25).

John asked who His betrayer was.

Judas, whom He loved to the extent of choosing him as His disciple, became s betrayer.

Am I not also a betrayer if I deny Jesus the love He deserves and the gratitude His grace demands?

 

******

Our Lady gave birth to Jesus and now she shares the longing of His broken Heart to suffer for the mankind and for me.

He loves me too as He loves His dear Mother.

But do I react to His love as His Mother reacted?

Our Lady loved her Son so much that she accepted whatever He did, even His sacrifice on the Cross as amendment for my sins.

In a way she sacrificed her Son for me.

Am I ready to sacrifice myself for my neighbours?

Am I ready to sacrifice at least a few small desires of mine to satisfy some small needs of my brethren?

******

 

His Heart yearns to prove Itself by its sacrifice.

My love manifests itself when receiving; His, by giving.

My love diminishes in pain, His has no limits.

My love expands when He says “yes” to all my requests; His love was joyful to do His Father’s Will even when His request was not granted.

My love vacillates, it is on fire one day and cold the next day; His love for me is constant and faithful, forever the same.

 

When I am hurt by someone, my love grows cold and this coldness hardens my heart.

This is not so with His Heart.

His love continues to burn for me even when I offend Him.

The burning Heart of Jesus is surrounded with thorns, which represent my sins against His love.

 

The Heart of Jesus longs for my love because He is so good.

He longs to fill me with His own peace which the world I love cannot give.

He stands at the door of my heart, waiting to be invited in.

He is waiting outside in the cold, as He once did in a cave of Bethlehem.

He is waiting for me to acknowledge His presence, to respond to His Love.

Come in, my Lord, I love You.

I love You with all my heart and soul.

Have mercy on me and accept my love, my dear Jesus.

Henceforth I am Yours and Yours alone.

Lourdu Selvam.

"அங்கு நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார்"(லூக்.4:2)

"அங்கு நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார்"
(லூக்.4:2)

1. இயேசு அருளப்பர் கையால் ஞானஸ்நானம் பெறுகிறார்.

2. பாலைவனத்தில் நாற்பது நாட்கள் நோன்பு இருக்கிறார்.

3. அலகையினால் சோதிக்கப் படுகிறார்.

4. நற்செய்தி போதனையை ஆரம்பிக்கிறார். 

இயேசு முழுமையாக கடவுள்,
(Fully God)

முழுமையாக மனிதன்.
(Fully Man)

கடவுள் என்ற முறையில் அவருக்கு எதற்கும்  தன்னைத் தானே தயாரிக்கத் தேவையில்லை.

ஆனால் மனிதன் என்ற முறையில் தான் செய்யவிருக்கும் நற்செய்திப் பணிக்குத் தன்னைத் தானே தயாரிக்கிறார்.

அதற்காகத்தான் ஞானஸ்நானம், நோன்பு, சோதனை.

இயேசுவின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு நற்செய்தி அறிவிப்பு இருக்கும்.

நாம் அதைத் தியானித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அவரது நற்செய்திப் பணிக்கான தயாரிப்பில் தன்னைச் சோதிக்க அலகைக்கு அனுமதி அளித்ததிலும் ஒரு நற்செய்தி இருக்கிறது.

இது நற்செய்தி அறிவிப்பிற்காகத் தங்களைத் தாங்களே தயாரிப்போர் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய நற்செய்தி.

இயேசு சந்தித்த சோதனையைத் தியானித்து தெரிந்து கொள்வோம்.

நற்செய்தி அறிவிப்பு முழுக்க முழுக்க ஆன்மீகப் பணி, இதில் லெளகீகத்திற்கு கொஞ்சம் கூட இடமில்லை.

லெளகீகத்தில் ஏதாவது ஒரு பணியைத் தேர்ந்தெடுப்போர் மனதில் மூன்று வித நோக்கங்கள் இருக்கும்.

1. உணவும் வாழ்க்கை வசதிகளும்.

2. சொத்து சேர்த்தல்.

3. தங்கள் திறமையை நிரூபித்தல்.

அலகை இயேசுவைப் பார்த்து:

"நீர் கடவுளின் மகனானால் இந்தக் கற்கள் அப்பம் ஆகும்படி கட்டளையிடும்"

அதாவது அவரது கடவுள் தன்மையை தனக்குத் தானே உணவு தயாரிக்கப் பயன்படுத்தும்படி கேட்கிறான்.

இயேசு அலகையை நோக்கி:

" மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று, கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர்வாழ்கிறான் "

என்கிறார்.

அதாவது, நற்செய்திக்காகத் தங்களைத் தாங்களே தயாரிப்போர் 

உணவிற்காவும், வாழ்க்கை வசதிகளுகாகவும் பணி புரிய ஆசைப்படக்கூடாது.

தாங்களும் இறை வாக்கினால் வாழ வேண்டும், மற்றவர்களையும் இறை வாக்கினால் வாழ வைக்க வேண்டும்.

அவர்களது ஆன்மீக வாழ்வின் உணவு இறை வாக்கு மட்டும்தான்.

உணவுக்காகவும், வாழ்க்கை வசதிகளுக்காகவும் வாழ நினைப்போர் நற்செய்திப் பணியை முழு நேரப் பணியாகத் தேர்ந்தெடுக்கக் கூடாது

அடுத்து அலகை 

உலக அரசுகள் அனைத்தையும் அவற்றின் மாட்சியையும் காட்டி,

"நீர் என்னைத் தெண்டனிட்டு வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குக் கொடுப்பேன்" என்றது.

இயேசு

 "போ அப்பாலே, சாத்தானே, ஏனெனில், " உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவரை மட்டுமே ஆராதிப்பாயாக " 

என்றார்.

உலக அரசுகள் அனைத்தையும் அவற்றின் மாட்சியையும் சம்பாதிப்பது நற்செய்திப் பணியின் நோக்கமல்ல,

கடவுளை வணங்கி ஆராதிப்பதும், மற்றவர்களையும் அதேபோல் செய்ய வைப்பதும்தான் நற்செய்திப் பணியின் நோக்கம்.

உலகச் சொத்துக்களை சம்பாதிக்க ஆசைப்படுவோர் நற்செய்திப் பணிக்கு வரக்கூடாது.

அடுத்து

"நீர் கடவுளின் மகனானால் கீழே குதியும்: 

ஏனெனில், " தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்,

 உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் " என எழுதியுள்ளது" என்றது.

அதாவது,

தான் கடவுளின் மகன் என்பதை நிரூபிக்க 

கோவில் முகட்டிலிருந்து கீழே குதிக்கக் சொன்னது.

இயேசு அதனிடம்,  " உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே " என்றார்.

நற்செய்தி அறிவிப்பதில் தனக்குள்ள திறமையை காண்பிப்பதற்காக 
நற்செய்தி அறிவிக்கக் கூடாது.

நற்செய்தி அறிவிப்பதின் நோக்கம் நற்செய்தி சார்ந்த வாழ்வாக மட்டுமே இருக்க வேண்டும், தன் திறமையைக் காட்டுவது அல்ல.

உலக வாழ்வு சார்ந்த பணியை மேற்கொள்வோர் தங்களின் உழைப்பின் திறமையை பறைசாற்ற 

வெள்ளி விழா பொன் விழா போன்ற விழாக்களைக் கொண்டாடுவார்கள்.

நற்செய்தி பணியாளர்கள் இதற்கெல்லாம் ஆசைப்படக்கூடாது.

உலக நோக்கங்களுக்காக நற்செய்தி பணி அறிவிக்க வருவோர் அதில் வெற்றி பெற மாட்டார்கள்.

நற்செய்தி சார்ந்த ஆன்மீக வாழ்வுக்குத் தங்களை அற்பணிப்போர் மட்டுமே
அப்பணிக்கு வரவேண்டும்.

லூர்து செல்வம்.