Sunday, March 31, 2019

Living in the Spiritual Light of Christ.

Living in the Spiritual Light of Christ.

***********************

Those who live in spiritual light of Christ

go on   renewing their  character non stop,

because,

being  imperfect there is room for growth till the very end.
             
Being human beings with fallen nature, 

they cannot be guaranteed against sin,

but, when they  sin, they cannot rest.

They  cannot just forget their  sin,

but immediately they  repent

and turn from that sin

and receive the Lord’s forgiveness.

Why?

Because they  are like someone who is wearing a white garb:

Even the smallest stain of sin shows up

and they cannot rest until they have it washed

by the blood of Jesus Christ. 

Let us walk in the light of Jesus.

Even the smallest stain of impurity can be easily noticed in the light of Jesus.

His blood is always available for all those who love it.

It is available in the confessional,

where Jesus Himself is sitting in the form of a priest.

It is our right and duty

to make use of our priests

to have our sins forgiven.

Lourdu Selvam.

Friday, March 29, 2019

அருள் பொங்கி வரும் கால்வாய்.

அருள் பொங்கி வரும் கால்வாய்.
*************************

"ஏண்ணே, வெற்றிக்கும் தோல்விக்கும் என்ன வித்தியாசம்? "

"இப்ப ஏன் இந்த சந்தேகம்?"

"இப்ப தபசு காலம்தானே. "

"அதிலேயும் சந்தேகமா? "

"நீங்க ஏண்ணே சந்தேகத்திலேயே நிற்கிறீங்க.கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க."

"உன் கேள்வியே புரியல"

"சரி, புரியும்படி கேட்கிறேன்.

நீங்க ஒரு பொருள் மேல ஆசைவைத்து அதை அடைய போராடுரீங்க.

ஆனா நீங்க போராடிக்  கொண்டிருக்கும்போதே உங்க எதிரி உங்கள கொன்றுபோடுகிறான்.

ஆசைவைத்த பொருள் கிடைக்கு முன்பே நீங்க செத்துப் போறீங்க.
நீங்க வெற்றி பெற்றீங்களா? தோல்வி அடைந்தீர்களா?"

"தோல்விதான்."

"அப்படீன்னா இயேசு கிறிஸ்துவுக்குக் கிடைத்ததும் தோல்விதான.

இறையரசை நிறுவவேண்டும் என்று போதித்தார், உழைத்தார்.

ஆனால் இறையரசை இவ்வுலகில் நிறுவுமுன்,

தன்னை அதன் அரசராகப் பிரகடனப்படுத்துமுன் .

அவரது எதிரிகள் அவரைக் கொன்றுபோட்டார்கள்.

அப்போ அவருக்குக் கிடைத்தது தோல்விதானே? "

"இங்க பாரு. ஆசைப்பட்டது நிறைவேறாவிட்டால்தான் தோல்வி.

அவரது ஆசை நிறைவேறிவிட்டதே.

அவர் பெற்றது முழுமையான வெற்றி.

கடவுளாகிய அவர் மனிதனாய்ப் பிறந்ததே

பாடுகள்பட்டு,

சிலுவையில் அறையப்பட்டு,

மரித்து

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து

நமக்கு இரட்சண்யத்தைத் தரத்தான்.

அதுதான் நிறைவேறியதே!

உலகத்தின் கண்களுக்கு தோல்வியாய்த் தெரிவது இறைவன் முன் மிகப்பெரிய வெற்றியாய் இருக்கும்.

உலகின் கண்களுக்கு அவரது சிலுவை மரணம் ஒரு அவமானம்.

நமக்கு அது இரட்சண்யம்.

ஆமா, அவர் இறந்ததைப்பற்றி பேசும் நீ அவர் உயிர்த்ததை ஏன் மறந்தாய்?"

"மறக்கவில்லை. ஆனாலும்,  இறையரசு?

இயேசு உலகில் எந்த அரசையும் நிறுவவேயில்லையே!"

"இறையரசு ஆன்மீக அரசு.

நமது ஆன்மா இவ்வுலக மண்ணைச் சேர்ந்த உடலோடுகூடி வாழ்ந்தாலும் அது மறு உலகிற்காகப் படைக்கப்பட்து.

அதாவது, இவ்வுலகைச் சாராத, மறுவுலகிற்காகப் படைக்கப்பட்டது.

இவ்வுலகில் வாழ்ந்தாலும்,

இவ்வுலகைச் சாராமல் வாழ்பவர்கள்தான்

இறையரசைச் சார்ந்தவர்கள்.

"கடவுளின் அரசு உங்களிடம் வந்துள்ளது." (மத்.12:28)

"கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" 
(லூக்.17:21)

இயேசுவின் இந்த வார்தைகளை எப்படி மறந்தாய்?

இறையரசு ஆன்மீக அரசாகையால் இறைவனுக்காக வாழும் ஆன்மாக்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கே இறையரசும் இருக்கும்.

இவ்வுலகில் இறையரசை ஊனக்கண்ணால் பார்க்க இயலாது.

ஆன்மாவால் உணரலாம்.

மறுவுலகில் நமது ஆன்மா இறையரசை நேரடியாகவே அனுபவிக்கும்.

ஆமா, இயேசு திருச்சபையை நிறுவியதையும், அதன் தலைவராக புனித இராயப்பரை நியமித்தையும் உன்னால் எப்படி மறக்க முடிந்தது?

இயேசுவின் சீடர்களாகிய நாம் எல்லோரும்  இயேசு நிறுவிய இறையரசில்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!

விண்ணுலகிலும், மண்ணுலகிலும்
இறைவனுக்காக, இறைவனில் வாழும் எல்லா ஆன்மாக்களும்   இறையரசைச் சேர்ந்தவர்கள்தான்.

இயேசுதானே நம் அரசர்.

இவ்வுலகில் வாழும் இறையரசினர் இவ்வுலகில் இருந்தாலும்,

இவ்வுலகைச் சார்ந்தவர்களல்ல.

In the world,  not of the world.

நாம் விண்ணுலகின் உரிமையாளர்கள்.

தினமும் பலமுறை விண்ணகத் தந்தையுடன் பேசுகிறாய்.

அப்போதெல்லாம் இது ஞாபகத்துக்கு வராதா?"

"விளக்கம்தானே கேட்டேன்.
தெரிந்ததுக்குத்தானே விளக்கம் கேட்கமுடியும்.

இன்னொன்றுக்கும் விளக்கம் தேவை.

இயேசு துன்பப்பட்டார். சரி. நம்மையும் துன்பப்படச் சொல்கிறாரே, ஏன்? "

"உன் கையில் ஒரு மோதிரத்தைக் கழற்றாமல் போட்டிருக்கிறாயே, ஏன்?"

"அதை என் மனைவி தன் கையால் எனக்கு அணிவித்தாள்.

மோதிரம் சாதாரணமானதாக இருக்கலாம்.

ஆனால் அதில் என் மனைவியின் கைப்பட்டதால் என்னைப் பொறுத்தமட்டில் அது முக்கியத்துவம் பெறுகிறது.

நான் என் மனைவியை நேசிப்பதுபோலவே அவள் அணிவித்த மோதிரத்தையும் நேசிக்கிறேன்."

"பாவத்தின் விளைவாக உலகிற்குள் நுழைந்த துன்பம் மனுக்குலம் முழுமைக்கும் பொதுவானதுதான்.

ஆனாலும் நமக்கு இரட்சண்யம் தர இயேசுவே துன்பப்பட்டதால்,

அவரோடு சம்ந்தப்பட்ட துன்பம்
அவரோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முக்கியமானதாகிவிட்டது.

இயேசுவின் சிலுவை, துன்பம் வழியே நமக்கு இரட்சண்யம் வந்ததால்

இயேசுவிடமிருந்து நமக்கு வரும் அருள் வரங்கள் சிலுவையாகிய துன்பங்கள் மூலமே வருகின்றன.

நாம் அவற்றை கிறிஸ்துவுக்காக ஏற்றுக்கொள்ளவேண்டும்,

அவர் நமக்காக ஏற்றுக்கொண்டதுபோல.

அவற்றை கிறிஸ்துவுக்காக ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவை வெறும் துன்பங்கள்தான்."

"அதாவது நமக்கு சிலுவை வழியேதான் இரட்சண்யம் வருகிறது."

"ஆமா

'என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.'
(மத்.16:24)

ஆக, இயேசுவின் சீடனாய் இருக்க சிலுவை என்ற சான்றிதழ் கட்டாயம் வேண்டும்."

"இயேசுவுக்காக சிலுவையைச் சுமப்பது எப்படி?"

"நமது துன்பங்களை முதலிலேயே நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசுவுக்கு ஒப்புக் கொடுத்துவிட வேண்டும்.

நமக்கு   வரும் ஒவ்வொரு துன்மும் நம்மை இறையரசுக்கு இட்டுச்செல்லும் இறையருள் பொங்கி வரும் கால்வாயாக மாறிவிடும்."

"மோட்சத்தில்?"

"பயப்படவேண்டாம்,  மோட்சத்தில் பேரின்பம் மட்டும்தான்.

இயேசுவின் மரணத்தோடு அவரது துன்பங்கள் முடிவுக்கு வந்தது போல

நமது துன்பங்களும் நமது மரணத்தோடு முடிவுக்கு வந்துவிடும்.

மோட்சத்தின் பேரின்பமே

உலகில் நாம் இயேசுவுக்காகப்பட்ட துன்பங்களுக்கான சன்மானம்தான்."

சிலுவையே நீ வாழ்க.

இயேசுவைப்போல எங்களையும் சுமப்பாய்.

அவரிடமே கொண்டு சேர்ப்பாய்.

லூர்து செல்வம்.

Thursday, March 28, 2019

சாத்தானின் புலம்பல்.

சாத்தானின் புலம்பல்
*********************

"என்னை இப்படிப் புலம்ப வச்சிட்டாங்களே படுபாவிப்பயலுக!

எத்தன நாள் நெருப்புன்னு பார்க்காம உட்கார்ந்து

அகில பிரபஞ்சத்திலேயே தற்பெருமைக்குப் பேர்போன என் மூளையைக் கசக்கிப்பிழிஞ்சி திட்டம் வகுத்து,

கடவுளே நித்திய காலமும் திட்டம்போட்டுப் படைத்த ஆதாமையும் ஏவாளையும் ஏமாற்றி,

பாவம் செய்ய வச்சி,

துன்பத்தையும், சாவையும் இன்ப வனத்துக்குள் புகுத்தினேன்.

கடவுளால துன்பப்படவும் முடியாது, சாகவும் முடியாதுங்கிறது தெரிஞ்சிதானே

அவர் படைத்த மனினாவது துன்பப்பட்டுச் சாவட்டுமே,

செத்து நம்மிடமே வரட்டுமே,

வந்து நித்திய காலமும் நம்மோடே கிடந்து அவதிப்படட்டுமேன்னுதானே இப்படிச் செஞ்சேன்.

ஏதோ ஒரு பொம்பிள்ள என் தலையை  நசுக்குவாள்னு அண்ணைக்கு கடவுள் போட்ட சாபத்தக்கூட அண்ணைக்கு பெருசா நினைக்கல.

என் தலைய நசுக்கிய அந்த கன்னிப்பொண்ணு வயித்துல கடவுளே மனுசனா உற்பவித்து, பிறந்தவுடனேயே எனக்குப் பகீர்னு ஆயிடிச்சி.

துன்பமே பட முடியாத கடவுள் ஏன் துன்பப்படக்கூடிய மனுசனா பிறக்கணும்?

அதிலும் துன்பம் நான்
புகுத்தியது!

நான் புகுத்திய துன்பம் அவருக்கு எதற்கு?

Something wrong!

பிரச்சனை முத்துததுக்கு முன்னாலே கிள்ளி எறியணும்.

உடனே ஏரோதுக்குள் புகுந்து ஏவி விட்டேன். 

அவனும் குழந்தையை கொல்லும் முயற்சியில் இறங்கினான்.

ஆனால் கொல்லப்படவேண்டிய குழந்தை யாரென்று  ஏரோதுக்குத் தெரியாது,

ஆகவே சம வயதுள்ள எல்லா யூதக் குழந்தைகளையும் கொன்று குவித்தான்.

அக்குழந்தையும் செத்திருக்கும் என்று நிம்மதி அடைந்தேன்.

ஆனால் முப்பது ஆண்டுகள் கழித்து என் நிம்மதி ஆட்டம்கண்டது.

யோர்தான் நதியில் அருளப்பர் கையினால் ஞானஸ்நானம் பெற்ற ஒரு ஆள் மேல் எனக்குச் சந்தேகம் வந்தது. 

குழந்தை சாகாமல்  வளர்ந்திருக்குமோ?

அந்த ஆளைப் பின்தொடர்ந்தேன்.

அந்த ஆள் 40 நாட்கள் நோன்பிருந்து பசியாய் இருக்கும்போது அவரைச் சோதிக்க ஆரம்பித்தேன்.

மூன்றாவது சோதனையில்,

"உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே" 

என்று அவர் கூறியபோது  அவர் மனிதனாகப் பிறந்த இறைமகன்தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.

இனி அடுத்த வேலை அவர்செய்ய வந்த வேலையைச் செய்யவிடாமல் தடுக்கணும்.

அதற்கு ஒரே வழி அவரைக் கொல்வதுதான்.

முன்பு போல் அவசரப்படக்கூடாது.

கொஞ்சம் போதிக்க விடுவோம்.

அதற்குள் கொலை செய்ய ஆட்களைத் தயாரிக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகள் அவரது நற்செய்தியை அறிவிக்க விட்டேன். 

கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய சீடனாகிய யூதாசின் மனதில் பண ஆசையை வளர்த்து,

பணத்திற்காக அவனுடைய கடவுளையே காட்டிக்கொடுக்கும் அளவுக்குத் தயாரித்துவிட்டேன்.

யூத குருக்கள், பரிசேயர், சதுசேயர் மனத்திலும் பொறாமையையும்,  கொலை வெறியையும் ஏற்றினேன்.

நான் திட்டமிட்டபடி

யூதாஸ் உதவியால் இயேசு பிடிபட்டார்.

அடுத்து அடிக்கப்பட்டு,

முண்முடி சூட்டப்பட்டு,

சிலுவை ஏற்றப்பட்டு

சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு

கொலையும் செய்யப்பட்டார்.

எதிரிதான் இறந்துவிட்டாரே பின் ஏன் புலம்புகிறாய் என்று கேட்கிறீர்களா?

அந்த தேவமனுசன் நான்  புலம்புவதற்கென்றே திட்டம் போட்டு இதைச் செய்திருக்கிறார்.

நான் புகுத்திய துன்பத்தையும்பட்டு,

மரணத்தையும் சந்தித்ததால்

அவர் ஆட்டம் க்ளோஸ்

என்று நான் நிம்மதி அடைந்த மூன்றாம் நாள்,

அவர் உயிருடன் எழுந்து

என்னைப் புலம்ப வைத்து விட்டார்.

நற்செய்தியை அறிவிக்க ஆரம்பிக்குமுன்பே கொல்லாமல் விட்டது என் தப்பு

என்று நான் எண்ண ஆரம்பிக்கும்போது

இடி மாதிரி ஒரு செய்தி வந்தது!

அவர் மனிதனாய்ப் பிறந்ததே துன்பப்பட்டு, மரிக்கத்தானாம்!

துன்பப்பட்டு, மரித்து மனிதர் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்யதான் மனிதனாகவே பிறந்தாரம்!

இந்த அநியாயத்தை யாரிடம் சொல்லி புலம்புவேன்?

நான் ஆதாமையும், ஏவாளையும் ஏமாற்றி புகுத்திய தீமைகளான

துன்பங்களையும், மரணத்தையும்

என்னை வெல்வதற்கான கருவிகளாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயேசு!

அதாவது நான் தீமைகளாளாகப் புகுத்திய துன்பங்களையும், மரணத்தையும்

நன்மைகளாக, ஆசீர்வாதங்களாக மாற்றியிருக்கிறார்!

இனி இயேசுவுக்காகத் துன்பப்படுபவன் எவனும் இயேசுவுக்குச் சமமாகிவிடுவான்.

மரணம் அடைபவன் மோட்சத்திற்குச் செல்வான்!

நான் தீமையாகப் புகுத்திய மரணத்தை இயேசு மோட்சத்தின் கதவாக மாற்றிவிட்டார்!

கதவைத் திறந்தால் மோட்சம்!

நானே இரட்சண்ய வேலையில் இயேசுவுக்கு
உதவியிருக்கிறேன்!

எது நடந்துவிடக்கூடாது என்று எண்ணினேனோ அது நடக்க நானே உதவியிருக்கிறேன்!

அவர் சர்வ வல்லபர் எனக்குத் தெரியும்.

ஆனால் தீமையினின்றும்
நன்மையை வரவழைப்பார்

என்று எனக்குத் தெரியாமற்போய்விட்டது!

என் உதவியுடனே மோட்ச வாசலைத் திறப்பார்

என்று எனக்குத் தெரியாமற்போய்விட்டது

இப்போதுதான் அவர் ஏன் தீமையை அனுமதிக்கிறார் என்று புரிகிறது.

இனிப் புரிந்து என்ன பயன்?

இனி புலம்பிதான் என்ன பயன்?"

"ஹலோ! சாத்தான் கொஞ்சம் புலம்புவதை நிறுத்தீரங்களா? "

"யாருய்யா நீ? மனுசனா? "

"பார்த்தவுடனே தெரியல? யாருட்ட புலம்புற?

'படுபாவிப்பயலுக'ன்னு யாரச் சொன்ன?"

"நான் புலம்ப ஆரம்பிச்சவுடனே வந்திட்டியா?

ஒட்டுக் கேட்டுக்கிட்டிருந்தியா?"

"ஒட்டாம நின்னுதான் கேட்டுக்கிட்டிருந்தேன்.

யாரப்  படுபாவிப்பயலுகன்னு சொன்ன?"

"மனுசங்களத்தான் சொன்னேன்.

பைசாவுக்குப்பெறாத படுபாவிப்பயலுக உங்களக் காப்பாற்ற சர்வ வல்லப கடவுள் மனுசனாப் பிறக்கணுமா?

என்ன இப்படிப் புலம்ப வைக்கணுமா?

சம்மனசுக்கள் உங்களவிட எவ்வளவு உயர்ந்தவங்க தெரியுமா?"

"தெரியும். சம்மனசா இருந்திருக்க வேண்டியதுதான.  ஏன் சாத்தானா மாறுன?"

"நாங்களும் பாவம் பாவம் செய்தோம்.

நீங்களும் பாவம் செஞ்சீங்க.

உங்களுக்கு மட்டும்தான இரட்சகர் கிடைச்சிருக்காரு."

"முட்டாள்! முட்டாள்! நீங்க கொழுத்துப்போய் பாவம் செஞ்சீங்க.

நாங்க ஏமாந்து போய் பாவம் செய்தோம்.

இருந்தாலும், ரொம்ப நன்றி."

"நன்றியா? யாருக்கு?"

"உனக்குதான்."

"எனக்கா?  எதுக்கு? "

"நீ எங்கள ஏமாற்றாட்டா எங்களுக்கு இவ்வளவு பெரிய இரட்சகர் கிடைத்திருப்பாரா?

கடவுளே மனுசனா பிறந்திருப்பாரா?

அவரே எங்களுக்கு உணவாகக் கிடைத்திருப்பாறா?

இதற்கெல்லாம் நீ ஏமாற்றி,
நாங்க பாவம் செய்ததுதானே!

பாவம் ஒரு தீமைதான்.

ஆனால் அதிலிருந்தும் கடவுள் மிகப் பெரிய நன்மையை வரவழைச்சிட்டார் பார்த்தியா?"

"அப்போ நான்தான் ஏமாந்து போனேனா?

அது எப்படி நான் விட்ட அம்பு என்மேலே பாயுது?"

"ஹலோ!  சாத்தான்! Bye! Bye "

"ஹலோ! மனுசா! ஏமாந்தாலும் விடமாட்டேன்.

கடைசி வரை முயற்சிப்பேன்.

இயேசு பாவிகளத்தான தேடிவந்தாரு.

நான் பரிசுத்தவான்களத் தேடிப்போறேன்."

"எதுக்கு?"

"அவங்கள பாவிகளாக மாற்றுவதற்கு."

"பாவிகள தேடித்தான் இயேசு வந்தாரு.

நீயே பாவிகள Supply பண்ணப்போறியா? "

"என் குணம் கெடுப்பது. அதை யாராலும் மாற்ற முடியாது."

"இயேசுவின் குணம் இரட்சிப்பது. அதையும் யாராலும் மாற்ற முடியாது."

இறுதி வெற்றி இயேசுவுக்கே!

லூர்து செல்வம்.

Wednesday, March 27, 2019

அன்பைப் பார்க்கப் பாவமாயில்லை?

அன்பைப் பார்க்கப் பாவமாயில்லை?
**************************

அளவு கடந்த அன்பு தன்னையே பகிர்ந்து அளிப்பதற்காக மனிதனைப் படைத்தது.

அன்பின் காரணமாகவே தன்னுடைய சுதந்திரத்தையும் அவனோடு பகிர்ந்துகொண்டது.

மனிதன் தன் சுதந்திரத்தைப் பயன்படுத்தி  அன்பிற்கு விரோதமாகப் பாவம் செய்தான்.

அன்பு சர்வ வல்லமையுள்ளது.

தான் நினைத்திருந்தால் தன் சர்வ வல்லமையைப் பயன்படுத்தி மனிதனைப் பாவம் செய்யவிடாமல் தடுத்திருக்கலாம்.

ஆனால் அப்படிச் செய்வதாயிருந்தால் மனிதனுடைய சுதந்திரத்தில் குறுக்கிட வேண்டியதிருந்திருக்கும்.

தான் கொடுத்த சுதந்திரத்தில் தானே குறுக்கிடுவது அன்பின் சுபாவமல்ல.

ஆயினும் அன்பு மனிதன் செய்த பாவத்தை மன்னிக்கத் துடித்தது.

அன்பின் மற்றொரு பண்பு நீதி.

நீதி மன்னிப்புக்குமுன் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்றது.

மனிதன் செய்த பாவத்துக்கு மனிதன்தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

பாவத்திற்கான பரிகாரத்தைச் செய்ய தானே மனிதன் ஆக  முடிவெடுத்தது அன்பு.

  பாவத்தை மன்னிக்கத் துடித்த

  கடவுளாகிய அன்பு

மனித உருவெடுத்து

மனித சுபாவத்தில்

சொல்லண்ணா  பாடுகள்பட்டு,

சிலுவையில் தன்னையே உயிர்ப்பலி கொடுத்து, 

மனிதன் செய்ய வேண்டிய பரிகாரத்தைத்

மனிதனும் ஆகிய தானே செய்து

மனிதன் செய்த பாவத்தை மன்னித்தது.

என்னே அன்பின் இரக்கம்!

நம்மைப் படைத்ததற்காக சர்வ வல்லப கடவுளாகியஅன்பு பட்ட கஷ்டங்களைப் பார்த்தீர்களா?

நமக்கு வாழ்வு தந்தவருக்கு சிலுவை மரணத்தை அளித்திருக்கிறோம்!

அன்பைப் பார்க்கப் பாவமாயில்லை?

நம்மைப் படைத்த கடவுளுக்கு நன்றி சொல்வதற்குப்பதில் அவரைச் சிலுவைச் சாவு வரை இழுத்து வந்துவிட்டோம்.

முதலில் நாம் செய்த எல்லா பாவங்களுக்கும் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்போம்.

அப்புறம் நன்றி சொல்வோம்.

அப்புறம் நன்றியுடன் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, March 26, 2019

என்னை உம் அன்னையின் பிள்ளையாக மாற்றியருளும்!

என்னை உம் அன்னையின் பிள்ளையாக மாற்றியருளும்!
*************************

இதயத்தாழ்ச்சி நிறைந்த சர்வ வல்லவ தேவனாகிய இயேசுவே!

என் இரட்சகரே!

எனக்கு எல்லாம் ஆனவரே!

உமது கருணை நிறை முகத்தை ஏறிட்டுக்கூட பார்க்கத் தைரியமின்றி கூனிக் குருகி நிற்கும் அடியேனை

உமது கருணைக் கண் கொண்டு பாரும்.

கோடானு கோடி நட்சத்திரங்கள் அடங்கிய இம்மாபெரும் பிரபஞ்சத்தை (universe)

'ஆகுக' என்ற ஒரே சொல்லால் ஒரு நொடிப் பொழுதில் படைத்தவர் நீர்!

சர்வலோக அதிபதியாகிய நீர்  மனத்தாழ்ச்சி உள்ளவராக இருக்கிறீர்.

நானோ

உம்மிடமிருந்து இலவசமாகப் பெற்ற உடலையும், ஆன்மாவையும், ஒன்றிரண்டு திறமைகளையும் வைத்துக்கொண்டு

எல்லாவற்றையும் எனக்கே உரியனவாய் நினைத்துக்கொண்டு

தற்பெருமை பிடித்து அலைகிறேன்.

மனத்தாழ்ச்சி எவ்வாறு அனைத்துப் புண்ணியங்களுக்கும் ஊற்றாய் இருக்கிறதோ,

அதேபோன்று தற்பெருமை அனைத்துப் பாவங்களுக்கும் ஊற்று என்பதை உணர்கிறேன்.

என் இரட்சகரே, உமது சீடனாக இருக்க வேண்டுமானால் உம்மைப்போல் மனத்தாழ்ச்சி உள்ளவனாக இருக்கவேண்டும்.

நான் முழுவதும் உமக்கே சொந்தம் என்பதை உணர வேண்டும்.

நான் செய்ய விரும்பும் ஒவ்வொரு நற்செயலுக்கும் முழுக்கமுழுக்க உம்மையே சார்ந்திருக்கிறேன் என்பதை உணர வேண்டும்.

அன்புள்ள ஆண்டவரே,  உம்முடைய மனத்தாழ்ச்சியில் எனக்கு ஒரு பங்கு தாரும்.

நீரின்றி நான் ஒன்றுமில்லாதவன் என்பதை உணரச்செய்யும்.

நீர் பிதாவுடனும், பரிசுத்த ஆவியாருடனும் இணைந்து ஒரே கடவுள்.

பிதாவின் சித்தமும், உமது சித்தமும், பரிசுத்த ஆவியாரின் சித்தமும் ஒரே சித்தம்தான்.

ஏனெனில் நீங்கள் ஆள் வகையில்தான் மூவர், இறைசுபாவத்தில் மூவரும் ஒருவர்தான்.

ஒரே இறைசுபாவம், ஒரே அன்பு, ஒரே ஞானம், ஒரே வல்லமை, ஒரே சித்தம், ஒரே கடவுள்.

ஆயினும் உமது மனத்தாழ்ச்சியின் காரணமாக

" என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று,

என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே

நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்."(அரு.6:38)

என்று கூறினீர்.

அவ்வாறே இரத்த வியர்வை வியர்த்தபோது

"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" (லூக்22:42)

என்றீர்.

செபெதேயுவின் மக்களுடைய தாய் தன் மக்களுக்காக பரிந்துபேசியபோது,

"என் வலப்பக்கமோ, என் இடப்பக்கமோ அமர அருளுவது என்னுடையதன்று.

யாருக்கு

என் தந்தை

ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அது கிடைக்கும்"

என்றீர்.

இங்கேயும் உம் தந்தையையே முன் நிறுத்திப் பேசுகின்றீர்.

இவ்வாறு பிதாவோடு ஒரே கடவுவான நீர், 

ஆள் வகையிலும் பிதாவுக்கு நிகரான நீர்

உம்மையே தாழ்த்தி தந்தையை மேன்மைப்படுத்தி பேசுவது

உம்முடைய  மனத்தாழ்ச்சியையே சுட்டிக் காண்பிக்கிறது.

மனத்தாழ்ச்சி நிறைந்த இயேசுவே

எனக்கும் மனத்தாழ்ச்சியைத் தாரும், ஆண்டவரே.

சர்வ வல்லவர் பைசாவிற்குப் பெறாத யூத குருக்களால் ஆணிகளால் அறையப்பட்டு சிலுவையிலே தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.

சர்வ வல்லபராகிய உம்மைப் பார்த்து

"நீ யூதரின் அரசனானால் உன்னையே காப்பாற்றிக் கொள்" என்று எள்ளி நகையாடினர்.

ஆயினும் நீர் அமைதி காத்தீர்!

அவர்களுக்கும் சேர்த்துதான் மன்னிப்பு வேண்டி உமது தந்தையிடம் மன்றாடினீர்!

இயேசுவே,  என்னையும் யாராவது அவமானப்படுத்தினால்
நானும் மனத்தாழ்ச்சியுடன் அமைதி காக்க உமது அருள்வரம் தாரும்.

உமது பரம பிதாவின் அதிமிகு மகிமைக்காகவும்,

எனது பாவங்களுக்குப் பரிகாரமாகவும்,

உம்மைப் பின்பற்றுபவர்கட்கு முன்மாதிரியாகவுமே இதைச் செய்தீர்.

நானும் உமது மகிமைக்காகவும்,

எனது பாவங்களுக்குப் பரிகாரமாகவும்,

மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும்

மனத்தாழ்ச்சியுடன் நடக்க அருள் புரியும்.

நான் வெறுமையானவன் என்பதை

நான்  உணர்ந்துகொண்டாலே

உமது அருள் எனக்குள் வர ஆரம்பிக்கும்.

அருள் நிறைந்த உம் அன்னையே தன்னை ஆண்டவரின் அடிமை எனக் கருதினாள்!

என்னை உம் அன்னையின் பிள்ளையாக மாற்றியருளும்.

ஆமென்.

லூர்து செல்வம்.

Sunday, March 24, 2019

நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன்."

"நான் சாந்தமும்

மனத்தாழ்ச்சியும் உள்ளவன்."
+++++++++++++++++++++++++

இயேசு ''என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்,''

என்றுகூறிவிட்டு நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு குணங்களைக் குறிப்பிடுகிறார்.

சாந்தம்,

மனத்தாழ்ச்சி.

ஒளி இருக்கும் இடத்தில் இருள் இருக்கமுடியாது.

ஒளி (Light) இருக்கும் இடத்தில் பிரகாசம் (Brightness) இருக்கும்.

அவ்வாறே

மனத் தாழ்ச்சி இருக்கும் இடத்தில் சாந்தம் இருக்கும்.

சாந்தம் பலவீனத்தின் அடையாளம் அல்ல.

உண்மையில் பலவீனம் தன்னை மறைத்து தான் பலம் என்று என்று வெளியே காட்டிக்கொள்வதற்காகக வேண்டாத சேட்டைகள் செய்யும்.

மனத்தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இறைவன் இயேசு சர்வ வல்லபர்.

ஆனால் தன் வல்லமையை வெளிக் காட்டிக் கொள்வதற்காக
அவர் உகைப்படைக்கவில்லை.

ஆனால் தன் அளவற்ற அன்பைப் பகிர்ந்து கொள்வதற்காகவே

தன் வல்லமையைப் பயன்படுத்தி

மனித இனத்தையும்,

மனித இனம் வாழ உலகையும் படைத்தார்.

நமது முதல் பெற்றோர்

அவருக்கெதிராகப் பாவம் செய்தபோது தன்

தன் வல்லமையைப் பயன்படுத்தி அவர்களை

அழித்திருக்கலாம்.


ஆனால் தன் அளவற்ற அன்பைப் பயன்படுத்தி அவர்களை மன்னித்தார்.

தன் அன்பின் காரணமாகவே தான் படைத்த, நேசித்த மனித குலத்திலேயே மனிதனாய்ப் பிறந்தார்.

அவர் மனித உரு எடுத்த நாளிலிருந்தே

தனது தாழ்ச்சியையும், சாந்தகுணத்தையும்

நமக்கு முன்மாதிரிகையாக்கினார்.

அகில உலகிற்கும் அரசரான அவர் ஒரு ஏழைக் கன்னியைத் தன் தாயாகத் தேர்ந்தெடுத்தார்.

ஒரு ஏழைத் தச்சனைத் தன்னை வளர்க்கத் தேர்ந்தெடுத்தார்.

ஒரு மாட்டுக் கொட்டகையை தனது பிறப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார்.

தனது பிறப்பு பற்றிய முதல் நற் செய்தியை ஏழைகளான ஆடு மேய்ப்பவர்கட்கே அறிவித்தார்.

30 ஆண்டுகள்

தச்சுவேலை செய்த வளர்ப்புத் தந்தை சூசையப்பருக்கும்,

தன்னைப் பெற்ற தாய்க்கும் கீழ்ப்படிந்து நடந்தார்.

தனது பொது வாழ்வின்போது

"ஏனெனில் சாவுக்குத் தம் ஆன்மாவைக் கையளித்தார், பாவிகளுள் ஒருவனாய்க் கருதப்பட்டார்: ஆயினும் பலருடைய பாவத்தைத் தாமே சுமந்து கொண்டு பாவிகளுக்காகப் பரிந்து பேசினார்."(இசையா.53:12)

என்ற இசையாஸ் தீர்க்கத்தரிசியின் முன்னறிவிப்பின்படியே வாழ்ந்தார்.

நமது பாவங்களுக்ப் பரிகாரமாக
சாவுக்குத் தம் ஆன்மாவைக் கையளிக்கவே வாழ்ந்தார்.

பாவிகளையே தேடிவந்த அவர்
பாவிகளுள் ஒருவனாய்க் கருதப்பட்டார்.

பாவிகளையே தேடிச்சென்றார்.

அவர்களிடமே சாப்பிட்டார்.

நமது பாவத்தைத் அவரே சுமந்து கொண்டு

பாவிகளாகிய நமக்காகப் பரிந்து பேசினார்.

"கடவுளோடு ஒப்புரவாகுங்கள். கடவுளுடைய அருள் தன்மையோடு நாமும் கிறிஸ்துவுக்குள் விளங்கும்படி, பாவமே அறியாத அவரை நமக்காகப் பாவ உருவாக்கினார்."(2கொரி.5:21)

என்ற புனித சின்னப்பரின் சொற்கள்

பாவமே அறியாத அவர்

நமக்காகத் தன்னையே பாவ உருவாக்கினதை  விளக்குகின்றன.

இயேசு பாடுகளின்போது தனக்கு ஏற்பட்ட அவமானங்களை எல்லாம்
நமக்காகத் தாழ்ச்சியோடும், சாந்தத்துடனும் தாங்கிக்கொண்டார்.

தன்னைக் காட்டிக்கொடுத்தவனையே,  "நண்பனே" என்று அழைத்த சாந்தம் எவ்வளவு உயர்ந்தது!

இயேசு எதையும் நம்மைப் போல ஒப்புக்குச் சொல்பவரல்ல.

அவர் உண்மை.
Jesus is truth.

உண்மை நினைப்பதைத்தான் சொல்லும், செய்யும்.

இயேசு யூதாசை உண்மையிலேயே நண்பனாகத்தான் நினைத்தார்,

நினைத்ததைச் செய்தார்.

"பிதாவே இவர்களை மன்னியும்" என்று வேண்டும்போது இந்த நண்பனுக்கும் சேர்த்துதான்

நமது அரசு ஒரு பொதுக்காரியம் செய்யும்போது ஒவ்வொரு குடிமகனையும் நினைப்பதில்லை.

புதுசா ரோடு போடும்போது,

"இந்த வழியே லூர்து செல்வம் போவாரு. அவர் கல்கில் தட்டிக் கீழே விழுந்துவிடக்கூடாது.நல்ல ரோடாய்ப் போடுவோம்"

என்று தனித்தனியே ஒவ்வொருவரையும் நினைத்துப் போடுவதில்லை.

ஆனால் இயேசு செய்யும் ஒவ்வொரு செயலும்

அது சம்பந்தப்பட்ட

மனித இனத்தின்

ஒவ்வொரு நபரையும்

தனித்தனியே நினைத்துச் செய்யப்படுவது.

"தந்தையே, யூதாஸ் என்னைக் காட்டிக் கொடுத்தாலும் அவன் என் நண்பன்.

அவனுக்கும் சேர்த்துதான் பலியாகப் போகிறேன்.

அவன் செய்த பாவத்தை மன்னியும், அப்பா"

என்ற செபமும் 'மன்னியும்' செபத்தில் அடங்கி இருக்கிறது.

அவர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த போது அங்கிருந்த சிலர் அவரை அவமானமாகப் பேசியபோதும் அவர் சாந்தமாகதான் இருந்தார்.

அவரது அப்போஸ்தலர்கள் சிலர் பாடுகளின்போது அவரது அருகிலேயே வரவில்லை.

அருகே இருந்த இராயப்பர் அவர் யாருன்னே தெரியாது என்று மூன்று முறை மறுதலித்தார்.

அருளப்பர் மட்டும் சிலுவை அடியில் நின்றார்.

உயிர்த்தபின் அப்போஸ்தலர்களைச் சந்தித்தபோது

தன்னை விட்டுச்  சென்றமைக்காக அவர்கள்மீது கோபப்படவேயில்லை.

மாறாக,   "உங்களுக்குச் சமாதானம் உண்டாகுக" என்று வாழ்த்தினார்!

சர்வ வல்லப கடவுளாகிய இயேசு

இருதயத்தில் தாழ்ச்சி உள்ளவராக இருந்தமையால்தான்

சாந்தமுள்ளவராக இருந்தார்.

எல்லாவித புண்ணியங்களுக்கும் பிறப்பிடம் பரிசுத்தமான இருதயம்தான்.

முதலில் நமது உட்புறமாகிய இதயம் தூய்மையாக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் வெளிப்புறம் தூய்மையாகும்.

நமது உட்புறம் தூய்மையாய் இருந்தால்தான்

நமது எண்ணங்கள் தூய்மையாய் இருக்கும்.

நமது எண்ணங்கள் தூய்மையாய் இருந்தால் நமது சொல்லும் செயலும் தூய்மையாய் இருக்கும்.

நாம் இயேசுவின் சீடர்கள்.

நாமும் இயேசுவைப்போல் சாந்தமும், மனத்தாழ்ச்சியும் உள்ளவர்களாக இருந்தால்தான் நம்மை சீடர்கள் என்று அழைத்துக்கொள்வதில் பொருள் இருக்கும்.

எந்த நேரமும் முகத்தை சிடு சிடு என்று வைத்துக்கொண்டு,

கண்டோர் மீதெல்லாம் எரிந்துவிழும் சுபாவம் உள்ளவர்களாக இருந்தால்

நம்மை இயேசுவின் சீடர்கள் என்று அழைப்பதில் அருத்தம் இல்லை.

"வல்லவனைவிடப் பொறுமைசாலி உத்தமன். நகரங்களை முற்றுகையிட்டவனைவிடத் தன் மனத்தை ஆள்பவன் உத்தமன்." (பழ.16:32)

"He who is slow to anger is better than the mighty, and he who rules his spirit, than he who captures a city" (Pro.16:32).

கோபப்படாதிருப்பவன் பலசாலியை விடச் சிறந்தவன்.

தன்னைத் தானே கட்டுப்படுத்துபவன் ஒரு நகரைக் கைப்பற்றுபவனைவிட சிறந்தவன் என்று பழமொழி ஆகமம் கூறுகிறது.

நாட்டை அடக்கி ஆள்வதைவிட தன்னைத் தானே அடக்கி ஆள்வது கடினம்.

தன்னைத் தானே அடக்கி ஆள்பவன்தான்

நாடுகளோடு போரிட்டு வெல்பனைவிட மேலான வெற்றிவீரன்.

நமது இருதயத்திற்குள் இருந்துகொண்டு

நம்மை ஆட்டிப்படைக்கும்

அகங்காரம், கோபம், மோகம், காய்மாகாரம், போசனப்பிரியம், சோம்பல்

போன்ற துற்குணங்களோடு போரிட்டு,

அவற்றை வெளியேற்றி,

இதயத்தைத் தூய்மைப்படுத்துவது

அவ்வளவு எளிதான காரியமல்ல.

இயேசுவைப் பொறுத்தமட்டில் அவர் கடவுள்.

பரிசுத்தர். தூய்மையானவர்.

அவர் நம் இருதயத்தில் குடியேறினால்தான்

நாம் அவரைப்போல் சாந்தமுள்ளவர்ளாக மாறமுடியும்.

பரிசுத்தர் நம் இதயத்தில் குடியேறவேண்டுமானால்

அங்கு ஆட்டம்போடும் அசுத்த குணங்களை வெளியேற்ற வேண்டும்.

இது இயேசுவின் அருள் உதவி இருந்தால்தான் முடியும்.

இடைவிடாத செப உதவியோடு

இயேசுவின் அருளின் துணைகொண்டு இதயத்தைச் சுத்தப்படுத்தியபின்பு

அதைப் பரிசுத்த ஆவியின் வரங்களால் நிரப்பவேண்டும்.

ஞானம்,

புத்தி,

விமரிசை,

அறிவு,

திடம்,

பக்தி,

தெய்வபயம்

ஆகியவற்றோடு

தேவ ஆவியின் பலன்களான,

அன்பு,

மகிழ்ச்சி,

அமைதி

பொறுமை,

பரிவு,

நன்னயம்,

விசுவாசம்,

சாந்தம்,

தன்னடக்கம்.(கலாத்.5:22)

ஆகியவற்றால் நம் இதயத்தை நிரப்பவேண்டும்.

நிரம்பும்போது சாந்தம் தானாகவே வந்துவிடும்.

நாம் வாழ் நாள் முழுவதும் சாந்தமாக இருக்கவேண்டுமென்றால்

நம் இதயத்தில் இயேசு எப்போதும் குடியிருக்கவேண்டும்.

அவரோடு அடிக்கடி பேசவேண்டும்.

சில சமயங்களில் நமது சாந்தகுணத்திற்குச் சோதனை வரும்.

நம்மைவிட வயதில் சிறியவர் நம்மை அவமரியாதகையாகப் பேசிக்கொண்டிருப்பார்.

நமக்கு மூக்குக்கு மேல கோபம் எட்டிப்பாக்கும்.

நாம் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

"என்னை நினைத்துப்பார்.

என்னால் படைக்கப்பட்டவர்கள் என் பாடுகளின்போது, என்னை  என்னென்ன கேள்விகள் கேட்டார்கள்? 

நினைத்துப் பார்."

இயேசுவின் சாந்தமான முகம் ஞாபகத்துக்குவரும்.

எட்டிப் பார்த்த கோபம் வந்தவழியே போய்விடும்.

இயேசுவிடமிருந்து இயேசுவின் சாந்தகுணத்தைக் கற்றுக்கொள்வோம்.

"சாந்தமுள்ளோர் பேறுபெற்றோர், ஏனெனில், மண்ணுலகு அவர்களது உரிமையாகும்."

லூர்து செல்வம்.