Monday, May 23, 2022

திருப்பலியில் ஏன் பங்கேற்க வேண்டும்?

திருப்பலியில் ஏன் பங்கேற்க வேண்டும்?

"தாத்தா, ..."

", என்னடா, பொடியா, ஏதாவது கேள்வியை வைத்துக்கொண்டு விடையைத் தேடி அலைகின்றாயா?"

"அலையவில்லை, தேடி வந்திருக்கிறேன்."

", கேள்வியைச் சொல்லு."

"ஒரு நல்ல கிறிஸ்தவன் கடவுளையும், பிறனையும் அன்பு செய்ய வேண்டும். சரியா?"

", சரி.". 

அவன் கடவுளை அன்பு செய்தால் அவரது கட்டளைககளை அனுசரிப்பான். 

சரியா?".

'', சரி.''

 அவன் பிறரை அன்பு செய்தால் அவர்களுக்கு உதவி செய்வான்,

சரியா?"

'', சரி.''


"ஒருவன் கடவுளின் கட்டளைகளை 
அனுசரித்து, பிறருக்கு உதவி செய்து வாழ்ந்தால் மோட்சத்திற்கு போவான். சரியா?"

'', சரி.''

"ஆகவே ஒருவன் மோட்சத்திற்கு போக வேண்டுமென்றால் அவன் கடவுளது இரண்டு கட்டளைகளையும் அனுசரிக்க வேண்டும். 

சரியா?"

"சரி.''

மோட்சம் செல்ல அன்பு செய்வது மட்டுமே போதுமானதாக இருக்கும்போது திருச்சபை ஏன் திருப்பலிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.?

ஞாயிற்றுக் கிழமை திருப்பலி காணாவிட்டால் பாவம் என்று வேற சொல்கிறது?"

",உனக்கு இப்போது என்ன பிரச்சனை?"

"இயேசுவின் நற்செய்தியை விசுவசித்து, ஞானஸ்நானம் பெற்று, அவரது கட்டளைகளை அனுசரித்து வாழ்ந்தால் மீட்பு அடையலாம். 

திருப்பலி காண்பது மீட்புக்கு அத்தியாவசியமா?

 அதாவது திருப்பலி காணாவிட்டால் மீட்புப் பெற முடியாதா?"

",முதலில் காணாவிட்டால் என்ற வார்த்தைக்குப் பதில் பங்கெடுக்காவிட்டால் என்று கூறு.''

"திருப்பலியில் பங்கெடுக்காவிட்டால் மீட்புப் பெற முடியாதா?"

",இப்போது நான் கேக்கும் கேள்விகளுக்குப் பதில் கூறு."

"எனது கேள்விக்கு நான் தான் பதில் கூற வேண்டுமா?"

", ஆமா. உனது கேள்விக்கு உனக்கு பதில் தெரியும். பதில் தெரியும் என்பதை உனக்கு புரிய வைப்பதற்காக தான் எனது கேள்விகள்.

"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்"

என்று யார் யாரைப் பார்த்து சொன்னார்?"

"நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய அப்போஸ்தலர்களைப் பார்த்துச் சொன்னார்."

",அப்படியானால் கிறிஸ்தவனாகிய நீ யார்?"

"இயேசுவின் சீடன்."

", இயேசு எதற்காக உலகிற்கு வந்தார்.?"

"நம்மை பாவத்திலிருந்து மீட்க."

", மீட்பு அடைவதால் நமக்கு என்ன பயன்?" 

"மீட்பு என்றாலே பாவத்திலிருந்து விடுதலை பெற்று மோட்சத்திற்கு செல்வதுதான். மீட்பு அடைந்தவர்கள் நித்திய காலம் இறைவனோடு பேரின்ப வாழ்க்கை வாழ்வார்கள்."

",நாம் மீட்பு பெறுவதற்காக இயேசு என்ன செய்தார்?"

"பாடுகள் பட்டு, சிலுவை மரணத்தின் மூலம் தன்னையே பலியாக்கினர்."

",அப்படியானால் நமக்கு மீட்பு தருவது எது?"

"இயேசுவின் சிலுவை மரணம், அதாவது, பலி."

", அப்படியானால் இயேசு உலகிற்கு எதற்காக வந்தார்?"

"நம்மை மீட்பதற்காக தன்னைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்க."

", அப்படியானால் இயேசுவின் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வு எது?"

"அவரது சிலுவைப் பலி."

",நாம் யார்?".

" இயேசுவின் சீடர்கள்."

", சீடர்கள் யாரைப் போல வாழ வேண்டும்."

" குருவை போல வாழ வேண்டும்.
 அதாவது நாம் இயேசுவைப் போல வாழ வேண்டும்."

",இயேசுவைப் போல வாழ வேண்டும் என்றால்?"

"நாமும் இயேசுவைப் போல சிலுவையைச் சுமந்து நமது பாவங்களுக்கு பரிகாரமாக நம்மையே பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்."

",இதுவரை எனது கேள்விகளுக்கு நீ கொடுத்த பதில்களிலிருந்து ஏதாவது புரிகிறதா?"

"இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரமாக தன்னையே பலியாக்கினார். 

அவரது சீடர்களாகிய நாமும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக  நம்மையே பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும்."

",அப்படியானால் நமது ஆன்மீக வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வு எது?"

"பலி.''

'',குருவானவர் நிறைவேற்றும் திருப்பலியை பற்றி உனக்கு தெரிந்தது என்ன?"

"இயேசு ரத்தம் சிந்திய விதமாய் கல்வாரி மலையில் ஒப்புக்கொடுத்த அதே பலியைத்தான் .

குருவானவர் இயேசுவின் இடத்திலிருந்து ரத்தம் சிந்தாத விதமாய் ஒப்புக் கொடுக்கிறார்.

கல்வாரி மலையிலும் இயேசு தான் பலியானார்.

 திருப்பலியிலும் இயேசுதான் பலியாகிறார்."

", இயேசுவின் வாழ்வின் மையம் எது?"

"கல்வாரிப் பலி."

", கிறிஸ்தவ வாழ்வின் மையம் எது?"

"திருப்பலி."

"இதிலிருந்து உனக்கு என்ன புரிகிறது?"

",குருத்துவமும், திருப்பலியும் இல்லாவிட்டால் கிறிஸ்தவம் இல்லை."

", இப்போ சொல்லு, கிறிஸ்தவர்கள் திருப்பலியில் பங்கேற்க வேண்டும் என்று கூறுவது தவறா?"

"தவறு இல்லை. நான் உங்களிடம் கேட்டதுதான் தவறு."

", கொஞ்சம் கூர்ந்து கவனித்திருந்தால் கிறிஸ்துவின் வாழ்க்கையே திருப்பலியில் அடங்கியிருக்கும்.

நீ கவனித்திருக்கிறாயா?"

"கிறிஸ்து உலகிற்கு வந்து 30 ஆண்டுகள் மறைந்த வாழ்வு வாழ்ந்துவிட்டு, 

அதன் பின் நற்செய்தியை அறிவித்து விட்டு,

அதன் பின் பலியானார்.

திருப்பலியில் இயேசுவின் நற்செய்தி வாழ்க்கையும், பலியும் இடம்பெறுகின்றன. 

நற்செய்தி வாசகங்களும், குருவானவரின் விளக்கவுரைப் பிரசங்கமும் இயேசுவின் நற்செய்தி வாழ்க்கையைச் சார்ந்தவை.

குருவானவர் அப்பத்தையும் இரசத்தையும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாற்றும் நடுப் பூசையும், திருவிருந்தும் பலி வாழ்க்கையைச் சார்ந்தவை.

திருப்பலி துவங்குவதற்கு முன்பே நாம் நம்மையே திருப்பலியில் பங்கேற்க தயாரிக்க வேண்டும்.

பாவ மாசற்ற உள்ளத்தோடு திருப்பலியில் பங்கேற்பது தான் நமக்கு அதன் முழு பலனையும் கொடுக்கும்.

அதற்காக தேவைப்பட்டால் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்."

",சரியான தயாரிப்போடு நாம் திருப்பலியில் பங்கேற்றால்  

அதன் பயனாக மீட்படைவது உறுதி.

ஏனெனில்.....பூர்த்தி செய்."

" மீட்பரோடு பயணித்தால் அவரோடே விண்ணகம் அடைவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment