Friday, May 6, 2022

"என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி கொடுக்கின்றன."(அரு.10:27)

"என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி கொடுக்கின்றன."
(அரு.10:27)

"தாத்தா, நாம் இயேசுவின் சீடர்கள். சீடர்களைக் குரு வழி நடத்த வேண்டும்.

நம்மை இயேசு எப்படி வழிநடத்துகிறார்?"

", அவரால் நிறுவப்பட்ட கத்தோலிக்க திருச்சபை மூலம் நம்மை வழிநடத்துகிறார்."

"தாத்தா, இது எல்லோருக்கும் தெரிந்த பதில். எனக்கும் தெரியும். நானும் கத்தோலிக்க திருச்சபையில் தான் இருக்கிறேன்."

",அப்போ, ஒருவருக்கும் தெரியாத பதிலைக் கூற வேண்டுமா?"

"ஒருவருக்கும் தெரியாத பதிலை என்று நான் கூறவில்லை.

எல்லோருக்கும் தெரிய வேண்டிய பதிலைக் கூறுங்கள்.

தாத்தா தாய்த் திருச்சபை குருக்கள் மூலமாகவும், பைபிள் மூலமாகவும் நம்மை வழி நடத்துகிறது.

குருக்களது பிரசங்கங்களைக் கேட்கிறோம். ஒழுங்காகப் பைபிள் வாசிக்கிறோம்.

குருக்களின் சொற்படியும், பைபிளின் இறை வாக்கின்படியும் நடக்கிறோம். 

ஆனால் 24 மணி நேரமும் நாம் குருக்களோடு இருப்பதில்லை.

செல்லும் இடத்திற்கெல்லாம் பைபிளை எடுத்துச் செல்வதுமில்லை. பள்ளிக்கூடம் போகாத அநேகருக்கு பைபிள் வாசிக்கவே தெரியாது.

ஆனாலும் 24 மணி நேரமும் இயேசு நம்மோடு தான் இருக்கிறார்.

அப்போது அவர் நம்மை எப்படி வழி நடத்துகிறார்?
.
இதுதான் என் கேள்வி."

", அடேயப்பா, எவ்வளவு நீளக் கேள்வி!"

"கேள்வி நீளமில்லை. அதற்கான முன்னுரை தான் நீளம்."

", அதே போல் பதில் சுருக்கமாக இருக்கும். அதற்கான முன்னுரை நீளமாயிருக்கும்.

இப்போது நீ யாரோடு பேசிக் கொண்டிருக்கிறாய்?"

"உங்களோடு."

", அது எனக்கும் தெரியும்....."

"புரிந்துவிட்டது. தாத்தாவோடு."

", அதாவது, சாமியாரோடு அல்ல."

"அது எனக்கும் தெரியும். நீங்கள் சொல்லப் போவதை நானே சொல்லிவிடுகிறேன்.

இயேசு சாமியாn மூலம் மட்டுமல்ல, தாத்தா மூலமும் பேசலாம், பேசி வழி நடத்தலாம். சரியா?"

", தாத்தா மட்டுமல்ல, யார் மூலமாகவும் வழி நடத்தலாம்.

உனது அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், பள்ளிக் கூடத்தில் ஆசிரியர்..

யார் மூலமாகவும் வழி நடத்தலாம்"

"எதிரிகள் மூலமாகக் கூட வழி நடத்தலாம்"

", Correct. யாரை நாம் நேசித்தாலும் இயேசுவைத்தான் நேசிக்கிறோம். 

யாரைப் பார்த்தாலும் இயேசுவைப் பார்ப்பதாக நினைத்துக் கொண்டால், அவர்களை நேசிப்போம்.

அப்படி நேசித்தால் அவர்களுடைய வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளிலும் இயேசுவின் வார்த்தைகளை அடையாளம் கண்டு கொள்வோம்."

"ஆனால், தாத்தா, அவர்கள் ஆன்மீக விஷயங்களைப் பேசினால் தான் இயேசுவின் வார்த்தைகள் வர வாய்ப்பு உண்டு.

ஆனால் நம்மோடு பேசுபவர்கள் கடவுளைப் பற்றியா பேசுவார்கள்?

 கண்டதை எல்லாம் பேசுவார்கள்.

நாத்திகன் ஒருவன் கடவுள் இல்லை என்று நம்மோடு பேசிக் கொண்டிருக்கிறான். அதில் இயேசு எப்படி நம்மோடு பேசுவார்?"

", அவன் கடவுள் இல்லை என்று பேசும் போது உனது உள்ளத்திற்குள் என்ன தோன்றும்?"

"அதற்கு எதிர் மாறான கருத்துக்கள், அதாவது, கடவுளைப் பற்றிய கருத்துக்கள் தோன்றும். நான் அவற்றை அவனிடம் சொல்வேன்."

". இப்போது இயேசு உன் மூலம் அவனிடம் பேசுகிறார். கடவுளைப் பற்றி உன் மூலம் இயேசுவைப் பேசவைப்பது யார்?"

"நாத்திகன்."

",கடவுளைப் பற்றியே பேச வைப்பதும் ஒரு இறைப்பணி தானே. ஒரு நாத்திகனையே இறைபணி செய்யவைக்க இயேசுவால் முடியும்."

"அம்மா என்னைப் பார்த்து,

"கடைக்குப் போய்ட்டு வா, பாடத்தைப்படி, பேசாம தூங்கப் போ" என்றெல்லாம் சொல்வாங்க.

இதிலே இயேசுவின் குரல் எங்கே இருக்கிறது?"

", பேரப்புள்ள, பெற்றோரோ, ஆசிரியரோ உனக்கு வேலை கொடுக்கும் போது

பெரியவர்களுக்கு கீழ்ப்படிந்து நட என்ற இயேசுவின் குரல் உள் உள்ளத்தில் கேட்கும், அதாவது, எப்போதும் இயேசுவின் பிரசன்னத்தில் இருந்தால்.

நீ ஆண்டவரைப் பார்த்து மனதிற்குள்,

'இயேசுவே, உமக்காக இந்த வேலையைச் செய்கிறேன்' என்று சொல்லி விட்டு வேலையைச் செய்தால் அது ஆண்டவரது அருள் வரங்களை கொண்டுவரும் செபமாக மாறிவிடும்."

"அதாவது யார் பேசினாலும் ஆண்டவரும் பேசுவார். 

நமது எதிரி நம்மோடு சண்டைக்கு வரும்போது

 ஆண்டவர் நமது உள்ளத்திலிருந்து 

"எதிரியை நேசி. அவனோடு சண்டை போடாதே. அவனுக்காக வேண்டிக்கொள்." என்று நம்மிடம் சொல்வார்,

 அதாவது இயேசுவின் பிரசன்னத்தில் நாம் இருந்தால். சரியா?" 

", இப்போது புரிந்து கொண்டாய். இயேசுவின் பிரசன்னத்தில் நாம் வாழ்ந்தால்

எல்லோர் மூலமாகவும் இயேசு பேசுவார்."

"நாம் சாத்தானின் பிரசன்னத்தில் வாழ்ந்தால் எல்லோர் மூலமாகவும் சாத்தான் தான் பேசுவான்."

", ஒருவன் சாத்தானை மனதில் வைத்துக் கொண்டு கோவிலுக்குப் போனால்,

எல்லோரிடமும் சாமியார் பேசும்போது,

அவனுடைய உள்ளத்தில் இருந்து மட்டும் சாத்தான் பேசுவான்."

"கோவிலுக்கும் போய்விட்டு வந்து சாமியாரைத் திட்டுபவர்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் தான்."


", நாம் எப்போதும் இறைவன் பிரசன்னத்தில் வாழவேண்டும்.

வயலுக்கு அறுவடைக்குப் போனாலும் இயேசுவோடுதான் போக வேண்டும். வயல் வேலை எல்லாம் செபமாக மாறிவிடும்.

அலுவலகம் செல்லும்போதும்
இயேசுவோடு செல்ல வேண்டும். இயேசு நம்மோடு இருக்கும்போது வேலையை ஒழுங்காகச் செய்வோம்.

லஞ்சம் வாங்க மாட்டோம்

தவறு எதுவும் இல்லாமல் வேலையைச் செய்வோம்.

இயேசுவின் வழி நடத்துதலின்படி வேலையைச் செய்தால், வேலையும் செபமாக மாறிவிடும்."

" ஆனால் அரசியல்வாதி இயேசுவோடு வாழ முடியுமா?"

", நல்ல அரசியல்வாதிகளும் இருக்கிறார்களே!

அரசர்களே புனிதர்களாக இருக்கிறார்களே!

இயேசு நம்முள் இருப்பதுவும், நாம் அவரது சன்னிதானத்தில் வாழ்வதுதான் முக்கியம்.

இயேசுவோடு நாம் நமது எதிரியை பார்த்தால்,

அவன் நம்மைப் பார்த்து

"நீ என்னை நேசித்தால் இயேசுவையே நேசிக்கிறாய்,

எனக்கு நன்மை செய்தால் இயேசுவிற்கு சேவை செய்கிறாய்,

என்னை நீ மன்னித்தால் கடவுள் உன்னையும் மன்னிப்பார்"

 என்று சொல்லாமல் சொல்லுவான்.

இயேசு அவன் மூலமாகவும் நம்மோடு பேசுவார்."

"தாத்தா, இப்போது ஒன்று புரிகிறது."

", என்ன புரிகிறது?"

"என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி கொடுக்கின்றன."  

என்று இயேசு சொன்னதன் பொருள் புரிகிறது.

"என்னைப் பின்பற்றுபவர்களுக்கு நான் சொல்வது கேட்கும்."

இயேசு யார் மூலமாக பேசினாலும் அவரது சீடர்களுக்குக் கேட்கும்.

அவர் நமது மனதில் இருந்தால்
எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் அவரே வழி நடத்துவார்."

", எப்போதும் இயேசுவுடனே வாழ்வோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment