Wednesday, December 18, 2019

"நம்மோடு கடவுள் "

" நம்மோடு கடவுள் "
*   *    *   *   *    *   *    *    *   *  *  *

கடவுள் இன்றேல் நாம் இல்லை, ஏனேனில் அவர் நம்மைப் படைத்தவர்.

ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மை அவர் உருவாக்கிய காரணத்தால் 

நாம் தொடர்ந்து இருக்க (Exist) அவர் நம்மோடு இருந்தாக வேண்டும்.

நமக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்துப் பொருட்களுக்கும், நடப்புகளுக்கும் அவரே ஆதிகாரணர்.

நாம் அவரையே சார்ந்திருக்கிறோம்.

ஒரு சிறுமி கடவுளிடம் வேண்டினாள்,

"இறைவா, எங்களைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம்.

 நாங்கள் உமது கரங்களில் பத்திரமாக இருக்கிறோம். 

நீர் உம்மைப் பத்திரமாகப் பார்துக்கொண்டால் போதும்."

அந்தச் சிறுமியின் அசைக்க முடியாத விசுவாசம் 

வளர்ந்தவர்களாகிய நம்மிடம் இருக்கிறதா? 

கடவுள் நம்மோடு  இருப்பது தவிர்க்க முடியாதது,

நம்மைப் படைத்ததற்காக நம்மோடு இருந்துதான் ஆகவேண்டும்.

பெற்ற தாய் பிள்ளையைக் கவனித்துதானே ஆகவேண்டும்.

இப்போ கேள்வி,

நாம் அவரோடு இருக்கிறோமா? 

அதாவது நாம் அவரோடு இருப்பதை உணர்கிறோமா?

 கப்பல் ஒன்று கடலில் பயணித்துக் கொண்டிருந்தது.

வெகு நாள் பயணத்திற்குப் பின் கப்பலில் குடிநீர் முழுவதுமாகத் தீர்ந்து விட்டது.

பயணிகள் தாகத்தால் துடித்துக் கொண்டிருந்தார்கள்.

தண்ணீர் உதவி கேட்பதற்காக கப்பலின் மேல்தளத்தில் S.O.S கொடி  பறக்கவிடப்பட்டது.

(S.O.S = Save our souls.)

கொடியைப் பார்த்த படகு ஒன்று கப்பலை நெருங்கி வந்தது.

கப்பல் Captain மேல் தளத்தில் நின்று கொண்டிருந்தான்.

படகில் இருந்தவர்கள் கேட்டார்கள்,

"என்ன பிரச்சனை?"

"கப்பலில் குடிநீர் தீர்ந்து விட்டது."

"அதனால் என்ன?  கப்பல் தண்ணீரில்தானே மிதக்கிறது. தண்ணீரைக் கோதிக்கொள்ள வேண்டியதுதானே!"

"உப்புத் தண்ணீரை எப்படீங்க குடிக்க முடியும்?"

"உப்புத் தண்ணீரா?  தேம்ஸ் நதி நீர் நல்ல  நீருங்க."

"நாங்கள் பயணிப்பது கடலாச்சே!"

"இல்லை. நாம் மிதந்து கொண்டிருப்பது தேம்ஸ் நதியில்!"

Captain தண்ணீரைக் கோதிக் குடித்துப் பார்த்தான். 

நல்ல தண்ணீர்!

கப்பல் கடலிலிருந்து  நதிக்குள் நுழைந்துவிட்டதை உணராமல்

 தாகத்தால் துடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்! 

நாமும் அப்படித்தான்.

பிரச்சனைகள் வரும்போது நம்மைப் படைத்தவர் நம்மோடு இருப்பதை உணர்வதில்லை.

உணர்ந்தால் பிரச்சனைகளை அவர் பார்த்துக் கொள்வார் என்று அமைதியாய் இருப்போமே!

அபிரகாமை ஏன் விசுவாசத்தின்  தந்தை என்கிறோம்?

இறைவன் அபிரகாமிடம் அவரது மகனைப் பலியிடச் சொன்னபோது கவலைப் படாமல் கீழ்ப்படிந்தார்.

ஏன்?

"அது கடவுளுடைய பிரச்சனை. நமது வேலை சொன்னதைச் செய்வது."

கடவுளால் கொடுத்த வாக்குறுதியயை மீறமுடியாது என்று அவருக்குத் தெரியும்!

நாம் கடவுளோடு இருக்றோம்,

எந்தச் சூழ்நிலையிலும் அவர் நம்மைக் கைவிடமாட்டார்,

எதைச் செய்தாலும் நமது நன்மைக்காக மட்டுமே செய்வார்

என்ற உண்மைகளைத் தீர்க்கமாக உணர்ந்தால் 

நம்மால் எப்படிக் கவலைப்பட முடியும்.

"நம்புங்கள்,

செபியுங்கள்,

நல்லது  நடக்கும்."


செபம் என்பது 
நாம் எப்போதும் கடவுளோடு இணைந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து, அந்த உணர்வில் வாழ்வது.

Prayer is to live in union with God.

இந்த வாழ்வுக்கு அடிப்படை நம்பிக்கை.

நமது வாழ்வில் நல்லது மட்டும்தான் நடக்கும்.

பிறப்போ, இறப்போ,

சுகமோ, சுகவீனமோ,

வெற்றியோ, தோல்வியோ

எது நடந்தாலும் நன்மைக்கே.

ஆகவேதான் 

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்"

என்று கூறுகிறோம்.


இந்த மனப்பக்குவம் வரவேண்டுமானால் நாம் கடவுளோடு இருக்க வேண்டும்.

"நாம் கடவுளோடு."

லூர்துசெல்வம். 





No comments:

Post a Comment