Friday, February 10, 2023

"நம்மிடம் அப்பம் இல்லையே" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்."(மாற்கு. 8:16)

"நம்மிடம் அப்பம் இல்லையே" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்."
(மாற்கு. 8:16)

ஏழு அப்பங்களை கொண்டு 4000 பேருக்கு உணவளித்து, மீதியான
துண்டுகளை ஏழு கூடைகளில் எடுத்து வைத்த அப்போஸ்தலர்கள்

இயேசுவோடு படகில் பயணித்த போது 

அவர்களிடம் ஒரே ஓர் அப்பம்தான் இருந்தது.

"நம்மிடம் அப்பம் இல்லையே"

 என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்."

படகில் பயணம் செய்த  அப்போஸ்தலர்கள் 12 பேர்.

அவர்களிடம் இருந்தது ஒரு அப்பம்.

அவர்களோடு இருந்தவர் ஏழு அப்பங்களைப் பலுகச் செய்து 4000 பேருக்கு உணவளித்த இயேசு.

அவர்களிடம் இல்லாதது நம்பிக்கை.

அதனால்தான் இயேசு அவர்களை நோக்கி,

 "உங்களிடம் அப்பம் இல்லை என்று பேசிக்கொள்வானேன்?

 இன்னுமா உணரவில்லை?
'
 இன்னுமா விளங்கவில்லை?

 உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? 

கண்ணிருந்தும் காண்பதில்லையா? 

காதிருந்தும் கேட்பதில்லையா?

 உங்களுக்கு நினைவில்லையா?"

என்று அவர்களுடைய நம்பிக்கை இன்மையை குத்திக் காட்டுகிறார்.

ஏழு அப்பங்களைக் கொண்டு 4000 பேருக்கு உணவு ஊட்டிய இயேசுவால்,

ஐந்து அப்பங்களைக் கொண்டு 5000 பேருக்கு உணவு ஊட்டிய இயேசுவால்

ஒரு அப்பத்தை கொண்டு 12 பேருக்கு உணவு ஊட்ட முடியாதா?

இந்த எண்ணம் கூட

அப்பங்களை பலுகச் செய்தபோது அவரோடு இருந்த அப்போஸ்தலர்களுக்கு வரவில்லை.

அப்பங்களைப் பலுகச் செய்ததையும்,

அப்போஸ்தலர்கள் பேசியதையும் பல முறைகள் வாசித்து, தியானித்த நம் நிலை என்ன?

அப்போஸ்தலர்களோடு இருந்த
அதே இயேசுதான் இன்று நம்மோடும் இருக்கிறார்.

கானாவூர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை ரசமாக்கிய அதே இயேசு, 

ஏழு அப்பங்களை கொண்டு 4000 பேருக்கு உணவு ஊட்டிய அதே இயேசு, 

ஐந்து அப்பங்களை கொண்டு 5000 பேருக்கு உணவு ஊட்டிய அதே இயேசு, 

அப்பத்தை தனது உடலாகவும்,
ரசத்தை தனது ரத்தமாகவும் மாற்றித் தனது அப்போஸ்தலர்களுக்கு உணவாகக் கொடுத்த  அதே இயேசு,

 இன்று நமக்கும்  தன்னையே உணவாகத் தந்து கொண்டிருக்கும் அதே இயேசு

இப்போதும் நம்மோடுதான் இருக்கிறார்.

ஒவ்வொரு வினாடியும் நம்மோடுதான் இருக்கிறார்.

விசுவசிக்கிறோம்,  விசுவசிக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டிருக்கும் நாம்,

'அது இல்லையே, இது இல்லையே'

என்று எத்தனை தடவை சொல்லுகிறோம்?

கணக்கில் அடங்காது.

"விசுவசிக்கிறேன்"

என்று சொல்லும் வாயிலிருந்து

 "இல்லையே"

என்ற வார்த்தை வரலாமா?.

எல்லாம் இருப்பவர் நம்மோடு இருக்கும் போது நாம் இல்லை என்று சொல்வது அவருக்கு நாம் செய்யும் அவமரியாதை.

"கேள், நான் தருகிறேன்." என்று அவர் சொன்ன வாக்கு  நம்மோடு இருக்கும் போது நம்மிடம் எல்லாம் இருக்கிறது.

இருப்பதை இல்லையே என்று நாம் சொன்னால்,

"கண்ணிருந்தும் காண்பதில்லையா?"

என்று அப்போஸ்தலர்களிடம் கேட்ட அதே கேள்வியை நம்மிடமும் கேட்பார்.

Bank Account ல் பணமும், கையில் ATM Card ம் வைத்துக் கொண்டு "செலவுக்குப் பணமில்லையே"

என்று புலம்புபவர்கள் எவ்வளவு அறிவிலிகளோ,

அவ்வளவு அறிவிலிகள்

 இயேசு தங்களோடு இருக்கும் போது 

"வாழ்வதற்கு வழி இல்லையே" என்று புலம்புபவர்கள்.

இயேசு நம்மோடு இருக்கும் போது நம்மிடம் எல்லாம் இருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து லண்டனுக்கு வந்து கொண்டிருந்த கப்பல் ஒன்றில் குடிதண்ணீர் காலியாகி விட்டது.

உடனே கப்பல் Captain SOS கொடியை ஏற்றினார்.

கொடியைப் பார்த்து அருகில் வந்த படகில்  இருந்தவர்கள்,

"என்ன பிரச்சினை?" என்று கேட்டார்கள்.

கப்பல் Captain, "குடிதண்ணீர் காலியாகி விட்டது." என்றார்.

படகில் இருந்த ஒருவர்,

"நாம் இப்போது இருப்பது கடல் அல்ல. தேம்ஸ் நதி.   நதி முழுவதும் நல்ல தண்ணீர்தான். வேண்டிய அளவு எடுத்து கொள்ளலாமே." என்று சொன்னார்.

எங்கும் நிறைந்த கடவுளுக்குள் நாம் வாழ்க்கைக் கப்பலை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

எதிர்பாராத சில கஷ்டங்கள் வருகின்றன.

நாமும் உடனே,

"SOS கொடியை ஏற்றுகிறோம்.

கப்பலுக்குள் இருந்து ஒரு குரல் கேட்கிறது,

"நான் உங்களோடு எப்போதும் இருக்கும்போது யாருக்கு SOS கொடியை ஏற்றுகிறீர்கள்?"

குரல் வந்த திசையைப் பார்த்தால் இயேசு நிற்கிறார்.

அவர் நம்மிடம் கேட்கிறார்,

"நீங்கள் விசுவசிப்பது உள்ளத்திலிருந்தா? 

உதட்டிலிருந்தா?"

நமது அறியாமையைக் கண்டு நமக்கே வெட்கம் வருகிறது.

உள்ளத்தில் உள்ள  விசுவாசம்தான் 

நமது நற்செய்தி  அறிவிப்புக்கும், 

நல்ல செயல்களுக்கும்

பிறப்பிடமாய் இருக்க வேண்டும்.



"எல்லாம் இயேசுவே,

எனக்கு எல்லாம் இயேசுவே,

இயேசு என்னிடம் இருக்கயிலே,

இல்லை என்று ஒன்றில்லையே,

என் வாழ்விலே எப்போதுமே."

லூர்து செல்வம்.



.

Thursday, February 9, 2023

"இக்கூட்டத்தின்மீது நான் மனமிரங்குகிறேன். ஏனெனில், இவர்கள் விடாமல் இம்மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள்.''(மாற்கு. 8:2)

"இக்கூட்டத்தின்மீது நான் மனமிரங்குகிறேன். ஏனெனில், இவர்கள் விடாமல் இம்மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள்.''
(மாற்கு. 8:2)

கடவுள் மாறாதவர்.

தன்னால் படைக்கப் பட்டவர்களை நித்திய காலமும் நேசிக்கிறார்.

படைக்கப் பட்டவர்கள் அவரது அன்பை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர் அன்பு செய்வதில் மாற்றம் இல்லை.

அனைவர் மீதும் நித்திய காலமாக இரக்கமாக இருக்கிறார்.

அவரது இரக்கத்தை மக்கள் ஏற்றுக் கொண்டாலும்,
 ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவரது இரக்கத்தில் மாற்றம் இல்லை.

தற்பெருமையால் சாத்தானாக மாறிவிட்ட லூசிபெரையும் இன்னும் அன்பு செய்து கொண்டுதான் இருக்கிறார்.

மாறாத அவரது அன்பையும், இரக்கத்தையும் 

ஏற்றுக் கொள்வதும்,

 ஏற்றுக் கொள்ளாததும்

 நமது கையில்தான் இருக்கிறது.

அவரது விருப்பப்படி நாம் வாழ்ந்தால் அவரது அன்பையும், இரக்கத்தையும் நாம் ஏற்றுக் கொள்ள தகுதி உள்ளவர்கள் ஆகிறோம்.

தங்கள் உணவைப் பற்றி கவலைப்படாமல் 

விடாமல் மூன்று நாட்களாக அவருடன் இருந்து,

அவரது போதனையை கேட்டுக் கொண்டிருந்த நாலாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இயேசுவின் இரக்கத்திற்கு தங்களை தகுதி ஆக்கிக் கொண்டார்கள்.

ஆகவே தான் ஆண்டவர் சொல்கிறார் 

"இக்கூட்டத்தின்மீது நான் மனமிரங்குகிறேன். 

ஏனெனில், இவர்கள் விடாமல் இம்மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள்.

 இவர்களுக்கு உணவு ஒன்றுமில்லையே!" என்று.

சொல்வது மட்டுமல்ல,

ஏழு அப்பங்களையும் சில மீன்களையும் கொண்டு அனைவருக்கும் வயிறார உணவு அளிக்கிறார்.

அவர்கள் வயிறார உண்டபின் ஏழு கூடை உணவுத் துண்டுகள் மீதம் இருந்தன.

வேறொரு சமயத்தில் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு 5000 பேருக்கு உணவளித்தார்.

மீதம் 12 கூடைகள் இருந்தன.

இந்த புதுமைகளை எத்தனையோ முறை நாம் வாசித்திருக்கிறோம்,

பிரசங்கங்களில் கேட்டிருக்கிறோம்.

ஆனால் அன்று அவரது இரக்கத்திற்குத் தங்களை தகுதி ஆக்கிக் கொண்ட மக்களது இடத்தில் நம்மை வைத்து தியானித்திருக்கிறோமா?

பிரார்த்தனைகள் கூறும்போது,

"ஆண்டவரே இரக்கமாயிரும், கிறிஸ்துவே இரக்கமாயிரும்"

என்று எத்தனை ஆயிரம் முறை சொல்லியிருப்போம்? 

ஒவ்வொரு திருப்பலியிலும் இந்த மன்றாட்டை எத்தனை முறை சொல்லியிருப்போம்?

நமக்குத் தெரியும் ஆண்டவர் இயல்பிலேயே இரக்கம் உள்ளவர் என்று.

பானை நிறைய நீர் உள்ளது.

பானை மேல் ஒரு தம்ளர் உள்ளது.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் பானையில் அருகில் சென்று தம்ளரை எடுத்து தண்ணீரை மொண்டு குடிக்க வேண்டியது தான்.

அதற்கு மனம் இல்லாவிட்டால் பானையில் தண்ணீர் இருந்தும் நமக்கு பயனில்லை.

கடவுளிடம் இரக்கம் அளவில்லாத விதமாய் உள்ளது.

அதற்கு ஏற்றவர்களாய் நம்மை மாற்றிக்கொள்ள அவரது சித்தத்தை ஏற்று அதன்படி செயல்பட வேண்டும்.

செயல்பட ஆரம்பித்தால் ஆண்டவருடைய  இரக்க மழை நம் மேல் பொழியும்.

அவரது இரக்கத்தின் உதவியால் அவரது சித்தத்தை நிறைவேற்றி ஆன்மீக வாழ்வில் வேகமாக முன்னேறுவோம்.

அவரது சித்தத்தைப் பற்றி கவலைப்படாமல் நாம் நமது இஷ்டப்படி வாழ்ந்து கொண்டு,

"ஆண்டவரே இரக்கமாயிரும்" என்று வேண்டினால்,

நமது இஷ்டப்படி வாழ எப்படி அவர் இரங்கி உதவுவார்?

அவரது சித்தப்படி வாழ நமக்கு இரங்கி உதவும்படி அவரிடம் மன்றாட வேண்டும்.

"ஆண்டவரே, என் மீது இரங்கி நான் தினசரி திவ்ய பலி பூசைக்கு போக வசதி உள்ள ஒரு ஊரில் எனக்கு வேலை கிடைக்கும் படி அருள் புரியும்."

இந்த செபத்தில் இறைவன் விருப்பப்படி நடக்க உதவி செய்ய இரக்கம் காட்டும்படி வேண்டுகிறோம்.

இந்த வேண்டுதலுக்கு இறைவன் கட்டாயம் செவி சாய்ப்பார்.

யாருக்கும் உதவி செய்யும் மனப் பக்குவம் இல்லாதவர்கள்,

"ஆண்டவரே, மனம் இரங்கி எனக்கு அதிக சம்பளம் கிடைக்க உதவி செய்யும்."

இந்த மன்றாட்டு இறைவன் முன் பொருள் அற்றது. .

"ஆண்டவரே, மனம் இரங்கி மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவத்தை எனக்குத் தரும்படி கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்."

இது ஆண்டவருக்கு ஏற்ற மன்றாட்டு.

இறைவனை அறிந்து,

 அவரை அன்பு செய்து,

 அவருக்கு சேவை செய்து,

 அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வதற்காக 

நாம் இவ்வுலகில் படைக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோமோ அதன்படி வாழ நமக்கு வேண்டிய உதவி செய்யும்படி 

அவருடைய இரக்கத்தை கேட்டு தினமும், ஒவ்வொரு வினாடியும் மன்றாட வேண்டும்.

 "ஆண்டவரே, நான் பாவி. என் மீது மனமிரங்கி என் பாவங்களை மன்னித்தருளும்."

"ஆண்டவரே, என் மீது இரக்கமாயிரும். பராக்குக்கு இடமின்றி, பக்தியுடன் திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டிய வரம் தாரும்."

"இயேசுவே, நாங்கள் வாழும் நாட்டின் மீது இரக்கமாயிரும்.

உமது விருப்பப்படி நாட்டை ஆளுகின்ற தலைவர்களை எங்களுக்குத் தாரும்."

"இயேசுவே, நீர் அளிக்கும் திருவிருந்தில் கலந்து கொள்ளும் உமது மக்கள் மீது இரக்கமாயிரும்.

கையில் உம்மை வாங்குவதை கைவிட்டு நாவில் உம்மை வாங்கி பலன் அடைய அவர்களுக்கு அருள் புரியும்."

இத்தகைய மன்றாட்டுக்களுக்கு இறைவன் உறுதியாக செவி சாய்ப்பார்.

"இறைவா, எங்கள் மீது இரங்கி,

உமது இரக்கத்திற்கு ஏற்றவர்களாய் நாங்கள் வாழ எங்களுக்கு வேண்டிய அருள் புரியும்."

லூர்து செல்வம்.

"பின்னர் ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடமிருந்து எடுத்த விலாவெலும்பை ஒரு பெண்ணாகச் செய்து, அந்தப் பெண்ணை ஆதாமிடம் அழைத்துக் கொண்டு வந்தார்." .(ஆதி. 3:22)

"பின்னர் ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடமிருந்து எடுத்த விலாவெலும்பை ஒரு பெண்ணாகச் செய்து, அந்தப் பெண்ணை ஆதாமிடம் அழைத்துக் கொண்டு வந்தார்."
( ஆதி. 3:22)

பைபிள் ஒரு வரலாற்றுப் புத்தகமோ, அறிவியல் புத்தகமோ அல்ல.

கடவுள் தன்னை நமக்கு வெளிப்படுத்த (To reveal Himself to us) 

அவர் தேர்ந்தெடுத்த மனிதர்களைத் தூண்டி (By inspiring the persons of His choice)

எழுதிய நூல்தான் வேதாகமம், (Bible)

பைபிளின்  ஆசிரியர் (Author) கடவுள்தான்.

எழுதிய மனிதர்கள் அவர் பயன்படுத்திய கருவிகள்.

தன்னை வெளிப்படுத்தவே கடவுள் பைபிளை எழுதுவித்தார்,

உலக வரலாற்றை அறிவிக்க அல்ல.

பைபிள் ஒரு  நூல்.

நாம் அனுசரிக்க    கடவுளால் தரப்பட்ட ஒழுக்க நெறிகளைக் கொண்டதுதான் நூல்.  

"காலை மாலை நூலை ஓது." என்ற தமிழ் அறிவுரையில் குறிப்பிடப்பட்ட நூல்.

பைபிளில் நாம் தேட வேண்டியது இறைவன் நமக்கு அருளும் செய்திகளை.

பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தின் முதல் மூன்று அதிகாரங்கள் 

உலகம் மற்றும் மனிதன் பற்றிய படைப்புச் செய்திகளைக் கூறுகின்றன.

 இறைவன் நமக்கு அருளிய செய்திகளை
அறியும் நோக்கோடு வாசிக்க வேண்டுமே தவிர,

வரலாற்றை அறியும் நோக்கோடு அல்ல. 

இறைவன் ஒருவரே.

சர்வ வல்லபர், அன்பே உருவானவர்.

தனது அன்பையும், மற்ற பண்புகளையும் பகிர்ந்து கொள்வதற்காக வாழக்கூடிய மனிதர்களைப் படைக்க தீர்மானித்தார்.

மனிதர்களைப் படைக்கு முன் அவர்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு உலகைப் படைக்கத் தீர்மானத்தார்.

அவர் தனது சர்வ வல்லமையால்   உலகையும், மனிதர்களையும் ஆறு நாட்களில் படைத்ததாக பைபிள் கூறுகிறது.

நாள் எனப்படுவது 24 மணி நேரம் கொண்ட நாளல்ல.

அந்த வார்த்தையை பயன்படுத்தியிருப்பது நமக்கு மிக முக்கியமான ஒரு அறிவுரையை கூறுவதற்காக.

 கடவுள் ஆறு நாட்களில் உலகையும், மனிதர்களையும் படைத்துவிட்டு, 

ஏழாம் நாள்  ஓய்வு எடுத்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

இது நமக்கு அறிவிக்கும் செய்தி,

நாம் வாரத்தின் ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும்.

ஒரு நாள் இறைவனுக்காக ஓய்வு எடுக்க வேண்டும்.

கடவுளை பொருத்தமட்டில் அவரால் ஓய்வு எடுக்க முடியாது.

உலகைப் படைத்து முடித்துவிட்டு, மனிதனை படைத்தார்,

 மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்.

"ஆண்டவராகிய கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்." என்று பைபிள் கூறுகிறது.

நாம் அறிய வேண்டிய செய்தி:

மனித உடல் கடவுளால் ஏற்கனவே படைக்கப்பட்ட மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டது.

மனித ஆன்மா கடவுளால் நேரடியாக படைக்கப்பட்டு உடலோடு சேர்க்கப்பட்டது.

மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட உடல் மண்ணுக்குத் திரும்பி விடும். ஆனால் ஆன்மா இறைவனிடம் செல்லும்.

ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டதாக பைபிள் சொல்லுகிறது.

அது அறிவிக்கும் செய்தி:

விலா எலும்புகள் மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கும் முக்கிய உறுப்புகளாகிய நுரையீரலையும், இருதயத்தையும் பாதுகாப்பதற்காக படைக்கப்பட்டன.

ஆகவே மனைவி கணவனின் பாதுகாப்பிலும், கணவனை பாதுகாப்பவளாகவும் வாழ வேண்டும்.

இருவரும் ஒருவரை ஒருவர் பாதுகாப்பவர்களாக வாழ வேண்டும்.

இருவருடைய உறவும் பிரிக்க முடியாத, நெருக்கமான உறவு.

இந்த உறவை இறைவனே ஏற்படுத்தினார்.

இறைவனால் ஏற்படுத்தப்பட்ட உறவைப் பிரிக்க எந்த மனித சக்திக்கும் அதிகாரம் இல்லை.

கணவன் பெரியவனா, மனைவி பெரியவளா என்ற கேள்விக்கே இடம் இல்லை.

ஏனெனில் இருவராக இருந்தாலும் இணைந்து  ஒருவராகவே வாழ வேண்டும்.

இறைவன் மனிதனை தனது சாயலில் படைத்தார்.

இறைவன் அன்பே உருவானவர்.

மனிதர்களையும் நேசிக்கக் கூடியவர்களாகவே படைத்தார்.

பரிசுத்த தம திரித்துவத்தின் மூன்று ஆட்களும் ஒருவரை ஒருவர் அளவில்லாத விதமாய் நேசிக்கிறார்கள். மூன்று ஆட்களாய் இருந்தாலும் கடவுள் ஒருவரே.

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் நேசித்து, ஒரே குடும்பமாக வாழ வேண்டும்.

கணவனும் மனைவியும் மட்டுமல்ல,

அவர்களுடைய பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் ஏற்றத்தாழ்வு இல்லாமல் நேசித்து,

 ஒருவரை ஒருவர் பாதுகாத்து வாழ வேண்டும்.

குடும்பம் மட்டுமல்ல, குடும்பங்களால் ஆன சமூகமும் குடும்பத்தை போலவே அன்பால் இணைக்கப்பட்டு வாழ வேண்டும்.

சமூகம் அப்படி வாழ்ந்தால் சமூகத்தில் சாதி இன வேறுபாடுகள் இருக்காது.

யார் பெரியவர், யார் சிறியவர் என்ற பேச்சே இருக்காது.

அனைவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருப்பார்கள்.

நாடுகள் அனைத்தும் குடும்பங்கள் போல் வாழ்ந்தால் 

யுத்தம் என்ற சொல்லே அகராதிக்கு வந்திருக்காது.

"உலகம் என்றால் என்ன ?"

என்று ஆசிரியர் கேட்டால், 

 "சமாதானம்"

 என்று மாணவர்கள் பதில் சொல்வர்.

" பின்னர் ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடமிருந்து எடுத்த விலாவெலும்பை ஒரு பெண்ணாகச் செய்து, அந்தப் பெண்ணை ஆதாமிடம் அழைத்துக் கொண்டு வந்தார்."

என்ற இறைவாக்கில் இவ்வளவு செய்திகள் அடங்கியிருக்கின்றன.

கடவுள் பரிபூரண சுதந்திரம் உள்ளவர்.

மனிதர்களையும் சுதந்திரமாக செயல்படக் கூடியவர்களாகவே படைத்தார்.

கடவுள் பரிசுத்தர்.
மனிதர்களையும் பரிசுத்தமானவர்களாகவே படைத்தார்.

மனிதர்களைத் தனது சாயலில் படைத்தார்.

தன்னைப் போல பரிபூரண சுதந்திரம் உள்ளவர்களாகவும், அன்பு செய்யக் கூடியவர்களாகவும், பரிசுத்தர்களாகவும் படைத்தார்,

கடவுள் மனிதர்களுக்கு ஒரு கட்டளை கொடுத்தார்.

அவர்கள் தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்தி கடவுள் கொடுத்த கட்டளைப்படி வாழ வேண்டும்.

கட்டளைப்படி வாழ்ந்தால்தான் அவர்கள் பெற்ற இறைவனது சாயல் அவர்களில் நீடிக்கும்.

ஆனால் நமது முதல் பெற்றோர் சாத்தானின் சோதனைக்கு இணங்கி கடவுள் கொடுத்த கட்டளையை மீறினார்கள்.

அவர்களிடம்  இருந்த கடவுளின் சாயலைப் பழுதுபடுத்தி விட்டார்கள்.

ஆனாலும் அன்பும் இரக்கமும் மிகுந்த கடவுள் 

மனிதர்களை பாவத்திலிருந்து மீட்டு 

அவர்கள் இழந்த அவருடைய சாயலை திரும்பவும் அவர்களுக்கு அளிப்பதற்காக

 தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்புவதாக வாக்களித்தார்.

அவர்களை பாவத்தில் விழத்தாட்டிய சாத்தானை சபிக்கும்போது,

"உனக்கும் பெண்ணுக்கும், 

உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே 

பகையை உண்டாக்குவோம்: 

அவள் உன் தலையை நசுக்குவாள்: 

நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்."

"அவள் உன் தலையை நசுக்குவாள்:" 

என்ற வார்த்தைகளின் மூலம்

 பிறக்க போகும் மீட்பரின் தாய் சென்மப் பாவ மாசு இல்லாமல் பரிசுத்தமாய் உற்பவிப்பாள், 

பாவ மாசு இல்லாமல் வாழ்வாள்

என்ற செய்தியையும் முன்னறிவித்தார்.

படைப்பைப் பற்றிய செய்தியை ஆழ்ந்து வாசித்து,

தியானித்தால், 

(ஆராய்ச்சி செய்தால் அல்ல)

நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் நமக்குப் புரியும்.

நோக்கத்தை அடைய வாழ்வோம்.

ஆகவே, பைபிளை வாழ்வதற்காக வாசிப்போம்.

வாசிப்போம், வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, February 7, 2023

"மனிதனுள்ளிருந்து, வருவதே அவனை மாசுபடுத்தும்."(மாற்கு.7:20)

http://lrdselvam.blogspot.com/2023/02/720.html


"மனிதனுள்ளிருந்து, வருவதே அவனை மாசுபடுத்தும்."
(மாற்கு.7:20)

"முன்னோர் பரம்பரையின்படி உம் சீடர் நடவாமல் தீட்டான கைகளால் உண்பதேன்?" 
(மாற்கு.7:5)

என்று பரிசேயரும் மறைநூல் அறிரும் அவரைக் கேட்ட கேள்விக்கு,

இயேசு கூறிய நீண்ட பதிலில்,

"அனைவரும் நான் சொல்வதைக் கேட்டு உணர்ந்துகொள்ளுங்கள்.


15 புறத்தேயிருந்து மனிதனுக்குள்ளே சென்று அவனை மாசுபடுத்தக்கூடியது ஒன்றுமில்லை.

 மனிதனுள்ளிருந்து வெளிவருவதே அவனை மாசுபடுத்தும்.

16 கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" (மாற்கு.7:14-16)

என்று கூறுகிறார்.

கையைக் கழுவி விட்டுச் சாப்பிட்டாலும்,

 கழுவாமல் சாப்பிட்டாலும்

 வாய் வழியே உண்ட உணவு 
நமது ஆன்மாவிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அது பயணிப்பது உணவு குழல் வழியே தான்.

உணவு குழலுக்கும், ஆன்மாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இயேசு போதித்துக் கொண்டிருந்தது ஆன்மீக நலனுக்கு வேண்டிய நற்செய்தியை,

உடல் ஆரோக்கியத்துக்கான சுகாதாரத்தை அல்ல.

வெளியிலிருந்து வாய்வழியே மனிதனுக்குள்ளே செல்வது எதுவும் அவனை ஆன்மீக ரீதியாக மாசுபடுத்த முடியாது.  

வாய் இரண்டு வித வேலைகளை செய்கிறது.

உடலுக்கு தேவையான உணவை உட்கொள்ளுகிறது.

உள்ளத்தின் எண்ணங்களை வெளியிடுகிறது.

முதல் வேலை உடல் சம்பந்தப்பட்டது.

இரண்டாவது வேலை ஆன்மா சம்பந்தப்பட்டது.

ஆன்மீகத்தை பொருத்தமட்டில் இரண்டாவது வேலை தான் முக்கியமானது.

ஏனென்றால் இயேசு போதிக்கும் நற்செய்தியில் அது முக்கிய பங்கு வகிக்கிறது.

மக்களிடையே இயேசு ஏற்படுத்த விரும்பிய சமாதானம் உள்ளத்தைச் சார்ந்தது.

நல்ல  உள்ளம் உள்ளவர்கள்தான் சமாதானமாக வாழ முடியும்.

நல்ல எண்ணங்கள் உள்ள உள்ளம் நல்ல உள்ளம்.

எண்ணங்கள் வாய் வழியே தான் சொல் வடிவில் வெளி உலகத்திற்கு வருகின்றன.

எண்ணங்கள் நல்லபடியாக இருந்தால் சொற்களும் நல்லபடியாக இருக்கும்,

நல்லதை நினைத்து நல்லதைப் பேசுபவரின் செயல்களும் நல்லவைகளாக இருக்கும்.

ஆனால் உள்ளத்தில் மோகம்,
 களவு, கொலை, விபசாரம்,  பேராசை, தீச்செயல், கபடு, கெட்ட நடத்தை, பொறாமை, பழிச்சொல், செருக்கு, மதிகேடு  சம்பந்தப்பட்ட தீய  எண்ணங்கள் இருந்தால் 

அவை அவற்றை எண்ணுபவனது ஆன்மாவை மாசுபடுத்துவதோடு,

அவன் அவற்றை வாய் வழியே வெளியே விடும் போது அவற்றை கேட்பவனையும் மாசுபடுத்தும்.

ஆகவேதான் இயேசு 

"புறத்தேயிருந்து
 மனிதனுக்குள்ளே சென்று அவனை மாசுபடுத்தக்கூடியது ஒன்றுமில்லை.

 மனிதனுள்ளிருந்து வெளிவருவதே அவனை மாசுபடுத்தும்." என்கிறார்..

புறத்தேயிருந்து வாய் வழியே உள்ளே போவது உணவு. உணவுக்கும் ஆன்மாவுக்கும் சம்பந்தம் இல்லை.

மனிதனுள்ளிருந்து வெளிவருவது நமது எண்ணங்கள்.

எண்ணங்கள்தான்  ஆன்மாவின் பரிசுத்த நிலையையும், பாவநிலையையும் தீர்மானிக்கின்றன.

இப்போது ஒன்றை மனதில் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆண்டவரின் வார்த்தைகள் 
."கை கழுவாமல் ஏன் சீடர்கள் உண்கிறார்கள்?"

என்ற கேள்விக்குப் பதிலாய் சொல்லப்பட்டவை.

நமது ஐம்பொறிகளுள் நான்கு தலையில் உள்ளன.

கண், காது, மூக்கு , வாய்.

இவற்றில் மூக்கு நாம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது.

நமது கண்களும், காதுகளும்  வெளியே இருந்து நல்லதையோ, கெட்டதையோ உள்ளத்திற்குள் அனுப்புகின்றன.

நல்லதையே பார்ப்பவனும், நல்லதையே கேட்பவனும் நல்லதையே  எண்ணுவான்.

கெட்டதையே பார்ப்பவனும் கெட்டதையே கேட்பவனும் கெட்டதையே எண்ணுவான்.

ஆகவே கண்களும், காதுகளும் நமது ஆன்மாவை பாதிக்கலாம்.

ஆனால் வாய் வழியே உணவு மட்டும்தான் உள்ளே செல்லும்.

உணவினால் ஆன்மாவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

இப்பொழுது கேட்கலாம், 

அதிக உணவைச் சாப்பிடுவது வாய் தானே. 

  போசனப் பிரியம் பாவம் அல்லவா?

அதிக போசனம் வாய் வழியே தானே உள்ளே நுழைகின்றது.

அதை ஏன் ஆண்டவர் சொல்லவில்லை? என்று.

இந்தக் கேள்வி புரியாமல் கேட்கப்படும் கேள்வி.

உணவை அளவோடு உட்கொண்டால் புண்ணியம்.

மட்டசனம் தலையான புண்ணியங்கள் ஒன்று.

மட்டு + அசனம் = அளவோடு சாப்பிடுதல்.

போசனப் பிரியம் என்ற தலையான பாவத்துக்கு எதிரான புண்ணியம்.

போசனம் என்றால் உணவு,
உணவு பாவம் இல்லாதது,

பிரியம் என்றால் ஆசை. மனதில் ஏற்படும் அதிக பிரியம்தான் பாவம்.


ஆகவே ,  உணவைச் சாப்பிடுவது பாவமல்ல.

அளவுக்கு மீறி சாப்பிடுவது தான் பாவம்.

அளவுக்கு மீறுவது வாய் அல்ல, நமது மனது.

வாய் வழியே உள்ளே போவது உணவு மட்டும்தான்.

உணவை அளவோடு சாப்பிட வேண்டும்.
 
கை கழுவாமல் சாப்பிடுவது சுகாதாரம் சம்பந்தப்பட்டது,

ஆன்மீகம் சம்பந்தப்பட்டது அல்ல.

வாய் வழியே வெளியே வருவது வார்த்தைகள்.

வார்த்தைகள் நல்லவையா, கெட்டவையா என்பது நமது உள்ளத்தை பொறுத்தது.

நமது உள்ளத்தை அதாவது மனதை சுத்தமாக வைத்துக் கொள்வோம்.

மனது சுத்தமாக இருந்தால் சொல்லும், செயலும் சுத்தமாக இருக்கும்.

நமது சிந்தனையும், சொல்லும், செயலும் சுத்தமாக இருந்தால் நாம் விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்கள்.

 கடவுளை நேருக்கு நேர் பார்த்து அனுபவிக்க ஏற்றவர்கள்.

"தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்."
(மத்.5:8)

லூர்து செல்வம்.

Monday, February 6, 2023

"இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது." (மாற்கு.7:6)(தொடர்ச்சி)

"இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது." (மாற்கு.7:6)
(தொடர்ச்சி)

செபம் என்றாலே இறைவன் உள்ளமும், நமது உள்ளமும் இனணவதுதான்.

ஆனால் உள்ளத்தை எங்கேயோ விட்டுவிட்டு உதட்டினால் மட்டும் இறைவனைப் புகழும் வார்த்தைகளைச் சொன்னால் அது செபம் அல்ல, வெளி வேடம்.

மனிதர்களின் வெளிவேடத்தால் மனிதர்கள் ஏமாறலாம்,

 இறைவன் ஏமாறுவாரா?

மனிதர்களாகிய நாம் மற்றொருவரின் புகழ்ச்சி வார்த்தைகளை கேட்டு நம்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது,

ஏனெனில் நமக்கு பேசுபவரின் உள்ளம் தெரியாது.

உள்ளொன்று வைத்துக்கொண்டு புறம் ஒன்று பேசுபவரை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

ஆனால் இறைவனுக்கு நமது அடிமனதில் உள்ள எண்ணங்கள் கூட தெரியும்.

உள்ளத்தில் வேறு எதையாவது நினைத்துக் கொண்டு உதட்டினால்,

"ஆண்டவரே உம்மைப் போற்றுகிறோம், புகழ்கிறோம், வாழ்த்துகிறோம்." 

என்று சொன்னால் அவர் ஏமாந்து விடுவாரா?

அப்படி செபிக்கிற மக்களை பார்த்து தான் இயேசு,

"இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது."

என்று சொல்கிறார். 

இயேசுவின் பாடுகளைப் பற்றி தியானிக்கும்போது இயேசுவும் அவர் பட்ட பாடுகளும் மட்டும்தான் நமது உள்ளத்தில் இருக்க வேண்டும்.

"இயேசு பூங்காவனத்தில் இரத்த வியர்வை வியர்த்ததை தியானிப்போமாக"

என்று வாயினால் சொல்லிக் கொண்டு,

"இன்று மதிய உணவிற்கு சிக்கன் எடுப்போமா, மட்டன் எடுப்போமா" என்று நினைத்துக் கொண்டிருந்தால்

நமது உள்ளத்தை பார்க்கும் இறைவனுக்கு சிரிப்பு வரும்.

சப்தமாகச் சொல்லும் செபம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு உதடுகள் வழியாக வெளியே வரவேண்டும்.

உதடுகளில் இருந்து மட்டும் வந்தால் அதற்கு பெயர் செபம் அல்ல.

திருப்பலியின் போது 

"ஒருவருக்கொருவர் நமது சமாதானத்தை தெரிவித்துக்கொள்வோமாக"

என்று குருவானவர் சொல்லும் போது,

சுவர் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் 

இடது பக்கம் இருக்கும் ஆளை பார்த்து "சமாதானம்" என்று சொல்லிவிட்டு,

 வலது பக்கம் இருக்கும் சுவரைப் பார்த்தும் "சமாதானம்" என்று சொன்னால்

 அவர் சொல்லிய சமாதானத்திற்கு என்ன அர்த்தம்?

யாரோடாவது சமாதானம் இல்லாமல் இருப்போமானால் அவரிடம் சென்று சமாதானம் என்று சொல்வது தான் முறை.

கோவிலில் அவர் நமது அருகே இல்லாவிட்டால் மனதிற்குள் அவரோடு சமாதானம் செய்து கொண்டு 

திருப்பலி முடிந்தவுடன் அவரிடம் சென்று அவரோடு சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.

 ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் வீட்டிலே சண்டை போட்டுவிட்டு,

பூசைக்கு வந்து அருகில் இருப்பவர்களோடு சமாதானம் செய்துவிட்டு,

 திரு விருந்திலும் கலந்து விட்டு,

இயேசுவோடு வீட்டுக்குத் திரும்பிய பின்,

அவரை சாட்சியாக வைத்துக்கொண்டு,

திருப்பலிக்கு முன் போட்ட சண்டையைத் தொடர்வார்கள்.

இவர்களைப் பற்றி இயேசுவிடம் கேட்டால் அவர் என்ன சொல்லுவார்?

"இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்,

 அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது.

அவர்கள் என்னை வழிபடுவது வீண்." என்று தான் சொல்லுவார்.

திரு விருந்தின் போது திவ்ய நற்கருணையை உட்கொண்ட பின் நமது உள்ளத்திற்குள் வந்திருக்கும் இயேசுவோடு பேச வேண்டும்.

எதைப் பற்றி பேச வேண்டும்?

இயேசுவோடு எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.

நண்பர்கள் சந்திக்கும்போது இதைப்பற்றி தான் பேச வேண்டும் என்று திட்டமிடுவதில்லை.

ஆனாலும் மணிக்கணக்காய்ப் பேசுவார்கள்.

அதுபோல இயேசுவிடமும் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.

ஆனால் இயேசுவை உள்ளத்தில் அமர்த்தி விட்டு நாம் வேறு எதையாவது கற்பனை செய்து கொண்டிருக்கக் கூடாது.

அல்லது வேறு யாரோடும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

திருப்பலி முடியுமுன் கோவிலை விட்டு வெளியேறக்கூடாது.

இவையெல்லாம் நாம் இயேசுவுக்குச் செய்யும் அவ மரியாதை.

உயிர் நண்பன் ஒருவன் வீட்டிற்கு வந்திருக்கும் போது அவனோடு பேசாமல் வேறு வேலை பார்த்துக் கொண்டிருப்போமா?

செபம் என்றாலே இறைவனோடு இணைவது தான்.
(Our union with God.)

இறைவன் பரிசுத்தமானவர்.

 அவரோடு நாம் இணைய வேண்டும் என்றால் நமது ஆன்மாவும் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.

பாவ நிலையில் இருக்கும் ஆன்மா பரிசுத்த இறைவனோடு இணைய முடியாது.

ஆகவேதான் திருப்பலியில் ஆரம்பத்திலேயே பாவ மன்னிப்பு வழிபாடு செய்கிறோம்.

சாவான பாவ நிலையில் உள்ளவர்கள் திருப்பலி ஆரம்பிக்கும் முன்பே பாவ சங்கீர்த்தனம் செய்து கொள்ள வேண்டும்.

இறையன்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பிறரன்பும்.

அதனால் தான் திருப்பலியின் போது நமது அயலானோடு சமாதானம் செய்து கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

சமாதான நிலையில் ஒப்புக் கொடுக்கும் செபம் தான் இறைவனுக்கு ஏற்ற செபம்.

பரிசுத்தமான உள்ளத்தோடும், சமாதானத்தோடும் திருப்பலியை ஒப்புக்கொடுத்தால் தான் 

திரு விருந்தின் போது இறைமகன் மகிழ்ச்சியோடு நமது உள்ளமாகிய கோவிலுக்குள் வருவார்.

பரிசுத்தராகிய இயேசு சமாதானத்தின் தேவன்.

அவரோடு இணைந்து வாழ்வதுதான் செப வாழ்வு.

இவ்வுலகில் நாம் வாழும் செப வாழ்வுதான் விண்ணுலகிலும் தொடரும்.

லூர்து செல்வம்.

Sunday, February 5, 2023

"இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது. (மாற்கு.7:6)

"இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது. (மாற்கு.7:6)


பரிசேயரும் மறைநூல் அறிரும்
இயேசுவிடம்,

"முன்னோர் பரம்பரையின்படி உம் சீடர் நடவாமல் தீட்டான கைகளால் உண்பதேன்?" என்று கேட்டார்கள்.

அதற்கான மறுமொழியை இயேசு,   

"வெளிவேடக்காரராகிய உங்களைப் பற்றி" என்று ஆரம்பிக்கிறார்.

ஏன்?

சுகாதார விதிகளின்படி சாப்பிடுமுன் கைகளைக் கழுவ வேண்டும் என்பதில் 
 பிரச்சனை ஒன்றும் இல்லை.

ஆனால் பரிசேயர்கள் முன்னோர் பரம்பரையின்படி என்று அவர்களது கேள்வியை ஆரம்பித்ததில் தான் பிரச்சனை.

ஒரு செயலை எதற்காக செய்கிறோம் என்பதை பற்றி பரிசேயர்களுக்குக் கவலை இல்லை.

பரம்பரையின்படி செய்கிறோமா என்பதுதான் கவலை.

பரம்பரையின்படி மட்டும் செயல்படுபவர்கள் செயலின் நோக்கத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.

நாம் பெரியவர்களைப் பார்க்கும்போது கையெடுத்துக் கும்பிடுகிறோம்.

நமக்கு பெரியவர்கள் மீது இருக்கும் உண்மையான மரியாதையை காண்பிப்பதற்காக கும்பிடுகிறோமா?

அல்லது,

கும்பிடுவது பழக்கம் என்ற அடிப்படையில் கும்பிடுகிறோமா?

உண்மையிலேயே மரியாதையோடு கும்பிட்டால் அது சரி.

நோக்கத்தைப் பற்றி நினைக்காமல் பழக்கம் என்ற அடிப்படையில் மட்டும்   கும்பிட்டால் அது வெறும் வேடம்.

மனதில் மரியாதை இல்லை, ஆனால் மரியாதை உள்ளவர்கள் போல் நடிக்கிறோம்.

ஆகையினால் தான் பரம்பரையின் அடிப்படையில் மட்டும் ஒரு செயலை நோக்கும் பரிசேயர்களை இயேசு வெளிவேடக்காரர்கள் என்று அழைக்கிறார்.

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம்.

காலையில் திருப்பலி முடிந்து மாணவர்கள் தங்கும் இடத்திற்கு வந்து விட்டோம்.

வந்து துணி மாற்றுவதற்காக சட்டையைக் கழற்றப் போகும்போதுதான்,

அனைவரின் சட்டைகளின் முன்புறத்தில் மை தெளிக்கப்பட்டிருப்பதைக் கவனித்தோம். 

கோவிலுக்குள் போகும்போது சுத்தமாக இருந்த சட்டையில் வரும்போது மை தெளித்தவர்கள் யார்? 

இதைப் பற்றி மாணவர்களை கவனிக்கும் குருவிடம் சென்று புகார் அளித்தோம்.

அவர் ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் கோவிலுக்குச் சென்று,

வாசலில் வைக்கப்பட்டிருந்த தீர்த்த தொட்டியை கவனித்தார்.

உள்ளே தீர்த்தத்திற்குள் மை ஊற்றப்பட்டிருந்தது.

உடனே அவர்கள் நாங்கள் அமர்ந்திருந்த Study Hall க்கு வந்து, எல்லோருடைய சட்டைகளையும் காண்பிக்க சொன்னார்.

ஒரு மாணவனுடைய சட்டையை தவிர மற்ற அனைவரின் சட்டைகளிலும் மை தெளிக்கப்பட்டிருந்தது.

உடனே சாமியார் மை தெளிக்கப்படாத சட்டைக்காரனை நோக்கி,

"தீர்த்த தொட்டிக்குள் மை ஊற்றியது யார்?" என்று கேட்டார்.

அவன் எவ்வித பயமும் இன்றி,

"நான்தான், சுவாமி." என்றான்.

சுவாமியாருக்குக் காரணம் புரிந்து விட்டது. இருந்தாலும் அதை உறுதி செய்து கொள்வதற்காக மாணவனை நோக்கி,

"ஏன் ஊற்றினாய்?" என்று கேட்டார்.

மாணவன் சொன்னான்,

"சுவாமி தீர்த்த தொட்டியில் தீர்த்தம் ஊற்றி வைத்திருப்பதின் நோக்கம்

 கோவிலுக்குள் செல்லும்போதும், வெளியே வரும் போதும் 

தீர்த்தத்திற்குள் விரலை விட்டு,

 "தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால், ஆமென்."

 என்று செபித்துக்கொண்டு சிலுவை அடையாளம் போட வேண்டும் என்பது தானே.

சிலுவை அடையாளம் போடும் போது 

நெற்றியிலும், நெஞ்சிலும், இரு தோள்பட்டைகளிலும் விரலை வைக்க வேண்டும்.

மாணவர்களை முதலில் பார்த்துவிட்டு, சட்டைகளை வாங்கிப் பாருங்கள்.

யாருடைய நெற்றியிலாவது, நெஞ்சிலாவது, தோள்பட்டைகளிலாவது மை இருக்கிறதா என்று பாருங்கள்.

இருக்க வேண்டிய இடங்கள் தவிர மற்ற இடங்களில் மை தெளிக்க பட்டிருக்கும்.

தீர்த்தத்தை தொட்டு செபிப்பதை விட்டுவிட்டு சட்டையை மேல் தெளித்திருக்கிறார்கள்.

கோவிலில் சென்று பார்த்தல் தெரியும் தரையிலும் மை தெளிக்கப்பட்டிருக்கும்.

அவர்களைத் திருத்த விரும்பினேன், அதற்காகத்தான் மையை ஊற்றினேன்.

அது தவறு என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்." என்றான்.

சாமியாருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

மாணவர்களுக்கு சிலுவை அடையாளம் போடும் முறையை விளக்கி விட்டுச் சென்றார்.

நெற்றி விண்ணகம்.
நெஞ்சு பூமி.

"இறைமகன் விண்ணிலிருந்து

 பூமிக்கு மனிதனாய்ப் பிறந்து இறங்கி வந்து,

நமது பாவங்களுக்கு பரிகாரமாகத் தனது தோள்பட்டைகளில் சிலுவையைச் சுமந்து சென்று, அதில் மரித்தார்"

என்று தியானித்துக் கொண்டு சிலுவை அடையாளம் போட வேண்டும்.

நம்மில் எத்தனை பேர் அவ்வாறு செய்கிறோம்.

அவ்வாறு செய்தால் அது செபம். இல்லாவிட்டால் நடிப்பு.

நாம் இயேசுவின் சீடர்களா, அல்லது, வெறும் நடிகர்களா?

சிந்தித்துப் பார்ப்போம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.
.

"அவரைத் தொட்ட அனைவரும் குணம் பெறுவர்." (மாற்கு. 6:56)

"அவரைத் தொட்ட அனைவரும் குணம் பெறுவர்." (மாற்கு. 6:56)

''தாத்தா, இயேசுவைத் தொட்ட அனைவரும் குணம் பெறுவர், என்று புனித மாற்கு எழுதி வைத்துள்ளார்.

அவரது வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொண்டால் உலகில் நோயுள்ள யாருமே இருக்க மாட்டார்களே.

ஏனெனில் கடவுள் எங்கும் இருப்பதால் அவரை எல்லோரும் தொட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள்."

"'உன்னை போல அரைகுறையாக வாசிப்பவர்களால்தான் பிரச்சனைகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.

புனித மாற்கு எழுதிய வசனத்தில் கடைசி வரியை மட்டும் வாசித்து விட்டு உன் மனதில் தோன்றியதைக் கேட்கிறாய்.

அந்த முழு வசனத்தையும் வாசி. "

"அவர் ஊரோ நகரோ பட்டியோ, எங்குச் சென்றாலும்,

 பொதுவிடங்களில் நோயாளிகளைக் கிடத்தி

 அவருடைய போர்வையின் விளிம்பையாகிலும் தொடவிடும்படி அவரை வேண்டுவர். 

அவரைத் தொட்ட அனைவரும் குணம் பெறுவர்."

"'உனது கேள்வியில் நீ சொன்னதற்கும் வசனத்தில் சொல்லப்பட்டிருப்பதற்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?"


"கொஞ்சம் பொறுங்கள். இன்னொரு முறை வாசித்து விட்டுச் சொல்கிறேன்.

நிறைய வித்தியாசம் இருக்கிறது, தாத்தா.

குணம் பெற வேண்டுமென்று விரும்புவோர் அவருடைய போர்வையின் விளிம்பையாகிலும் தொடவிடும்படி அவரை வேண்டுவர். 

அவரைத் தொட்ட அனைவரும் குணம் பெறுவர்."

அதாவது இயேசு சர்வ வல்லமை உள்ளவர்.

அவர் மக்களிடையே வருகிறார்.

ஆனாலும் குணம் பெறுவதற்கு முதல் முயற்சியை மக்கள் தான் எடுக்கிறார்கள்.

அவர்கள் தான் இயேசுவினுடைய போர்வையின் விளிம்பையாவது தொட அனுமதி கேட்கிறார்கள்.

அவரும் அனுமதி அளிக்கிறார்.

தொட்டவர்கள் அனைவரும் குணம் அடைகிறார்கள்.

சர்வ வல்லமையுள்ள கடவுள் எங்கும் இருக்கிறார்.

நம்மைப் படைத்து பராமரித்து வருபவர் அவர்தான்.

அவரது பராமரிப்பின் முழு பயனையும் நாம் அனுபவிக்க வேண்டுமென்றால் நாம் முயற்சி எடுத்து அவரிடம் நம்மை காப்பாற்றும்படி வேண்ட வேண்டும்."

"'கொஞ்சம் பொறு. நாம் படைக்கப்பட்ட நாம் முயற்சி எடுக்கவில்லை.

முயற்சி எடுக்க நாமே இல்லை.

அவர் நம்மை பராமரிக்க நாம் முயற்சி எடுக்கவில்லை.

படைக்கப்பட்ட அனைத்தையும் படைத்தவர் பராமரித்துக் கொண்டு வருகிறார்.

சரி, சொல்லு."

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று சொன்னவர் இயேசு.

நமக்கு வேண்டியதை நாம் கேட்டு பெற வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்."

"'நாம் கேளாமலே நம்மைப் படைத்தவர் தானே இயேசு.

ஏன் நமக்கு வேண்டியதை நாம் கேட்டுப் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்?"

"நம்மை உயிரற்ற பொம்மைகளாகப் படைக்கவில்லை.  

அவை நாம் வைத்த இடத்தில் இருக்கும். அவை நம்மோடு ஒத்துழைக்காது.

நம்மை கேளாமல் அவர் படைத்தது உண்மைதான்.

ஆனால் நம்மை முழுமையான சுதந்திரத்தோடு படைத்தார்.

சுயமாக இயங்கக்கூடிய திறனோடு நம்மைப் படைத்தார்.

ஆகவே இறைவனின் பராமரிப்பு செயல்களில் நாம் சுயமாக ஒத்துழைக்க வேண்டும்..

நமக்கு தருவதற்கு ஒவ்வொரு வினாடியும் காத்துக் கொண்டிருக்கும் அவரிடம் 

நமக்கு வேண்டியதைக் கேட்டுப் பெற வேண்டும்.

அப்போதுதான் நாம் பெற்றதன் அருமை புரியும்."

"'அப்போ உனது கேள்விக்கு உரிய பதில் உனக்கு தெரிந்திருக்கிறது.

பிறகு ஏன் என்னிடம் கேட்டாய்?"

''உங்களோடு பேச வேண்டும் என்பதற்காகத்தான். 

உங்கள் அருகில் உட்கார்ந்து கொண்டு,

"தாத்தா, என்னிடம் கேள்வியும் பதிலும் இருக்கிறது. ஆகவே உங்களிடம் எதுவும்  அமைதியாக உங்களது அருகில் உட்கார்ந்து கொள்கிறேன்." என்று எதையும் சொல்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்தால்,

நம்மை பார்ப்பவர்கள் ஏதோ இரண்டு பொம்மைகள் அருகருகே இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

காதலித்து கல்யாணம் செய்துகொண்ட இருவர்

 கல்யாணத்திற்கு பின்னும் ஏன் ஒருவரை பார்த்து ஒருவர்

 "I love you" என்று அடிக்கடி சொல்கிறார்கள்?

நாம் இயேசுவை நேசிக்கிறோம் என்று அவருக்குத் தெரியும்.

ஆனாலும் நாம் அடிக்கடி, கிடைக்கும் போதெல்லாம்

"Jesus, I love you." என்று சொல்கிறோமே, ஏன்?"

"'நான் உன்னிடம் கேள்வி கேட்டால் நீ பதிலுக்கு என்னிடம் கேள்வி கேட்கிறாய்.

அருகில் இருப்பதாலோ, பார்த்து ரசிப்பதாலோ உறவு நாம்  ஆசைப்படுகிற அளவு வளராது.

உள்ளங்கள் பேசும்போது தான் உறவு வளரும்.

மனித உள்ளங்கள் வாய்மொழி மூலம் பேசும்.

இறைவனோடு பேசுவதற்கு உள்ளங்கள் மட்டுமே போதும், வாய்மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இறைவனோடு பேசுவதை செபம் என்கிறோம். உள்ளத்தில் மட்டும் இறைவனோடு பேசுவதற்கு தியானம் என்ற பெயரும் உண்டு.

  இறைவனுக்கு அனைத்தும் தெரியும். நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அவருக்கும் நமக்கும் உள்ள உறவை வளர்க்கும் வகையில் நாம் உரையாடல் செய்யும்போது அவருக்கு தெரிந்ததையே திரும்ப திரும்ப அவரிடம் சொல்கிறோம்.

நமது உள்ளம் அவருடைய உள்ளத்தோடு இணைந்திருக்க வேண்டும் என்பது ஒன்றே செபத்தின் நோக்கம். 

கடவுள் நம்மீது எப்போதும் இரக்கமாக இருப்பது அவருக்கும் தெரியும், நமக்கும் தெரியும்.

ஆனாலும் "இயேசுவே என் மீது இரக்கமாயிரும்." என்று அடிக்கடி சொல்கிறோம்..

நமது செபத்தை கடவுள் கேட்பார் என்பது நமக்குத் தெரியும். 

ஆனாலும் "ஆண்டவரே, எங்கள் மன்றாட்டை கேட்டருளும்" என்று அடிக்கடி சொல்கிறோம்.

இயேசு நம்மை மீட்பதற்காகத்தான் உலகிற்கு வந்தார் என்பது அவருக்கும் தெரியும், நமக்கும் தெரியும்.

ஆனாலும் "இயேசுவே இரட்சியும்" என்று அடிக்கடி சொல்கிறோம்.

சுருக்கமாக,

 இறைவனோடு எதைப் பேசினாலும்,

 எப்படி பேசினாலும் 

அது அவரோடு நமக்குள்ள உறவை வளர்ப்பதற்கே.

வேறு நோக்கம் இல்லை."

"அதெப்படி, தாத்தா, வேறு நோக்கம் இல்லை என்று சொல்லலாம்.

ஒவ்வொரு செபத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறதே.

சிலர் குழந்தை வரம் கேட்டு செபிப்பார்கள்.

 சிலர் நோய் நொடிகள் நீங்க செபிப்பார்கள்.

சிலர் வேலை கிடைக்க செபிப்பார்கள்.
.
ஒவ்வொருவரும் ஒரு நோக்கத்திற்காக செபிப்பார்கள்.

நீங்கள் உறவை வளர்ப்பதுதான் நோக்கம் என்கிறீர்கள்."

"'My dear man,  நீ எதற்காக வேண்டினாலும் இறுதி நோக்கம் இறுதியில் இறைவனோடு என்றென்றும் விண்ணகத்தில் நிரந்தர உறவோடு வாழ்வதற்காகத்தான்.

நாம் இவ்வுலகில் வாழ்வதே இறைவனோடு உள்ள  உறவை வளர்ப்பதற்காகத்தான்."

"தாத்தா, இயேசு அவரது பொது வாழ்வின் போது கேட்டவர்களை மட்டுமா குணமாக்கியிருக்கிறார்?

கேளாதவர்களுக்கும் அவராக  சென்று குணமாக்கியிருக்கிறாரே.''

"'அது மட்டுமல்ல. சிலரைத் தொட்டும் குணமாக்கியிருக்கிறார்,

சிலரைத் தொடாமலேயே குணமாக்கியிருக்கிறார்.

அது அவரது விருப்பம்.

ஆனாலும் நாம் அவருடைய உதவியின்றி சுயமாக எதையும் செய்ய முடியாது என்பதை 

நாம் உணர்ந்திருக்கிறோம் என்பதை அவருக்கு தாழ்ச்சியோடு தெரியப்படுத்தும் வகையில் 

நமக்கு வேண்டிய ஒவ்வொன்றையும் அவரிடம் கேட்க வேண்டும்.

நமக்கு வேண்டிய அனுதின உணவையும் கூட தந்தையிடம் கேட்க வேண்டும் என்று இயேசு நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்.

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நாம் மீட்பு பெறுவதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்றால் அது அவருடைய உதவியோடு செய்யப்பட வேண்டும்.

நம்மால் முடியும் என்று நினைத்துக் கொண்டு இஷ்டம் போல் செயல்பட்டால் அது நமது மீட்புக்கு உதவாது.

ஆகவே எதை செய்தாலும் இறைவனின் உதவியோடு செய்வோம்.

நடப்பது நாமாக இருந்தாலும் நடத்துவது அவர்தான்.

வாழ்வது நாமாக இருந்தாலும் வாழ வைப்பது அவர்தான்.

நமக்கு எல்லாம் இயேசு தான்."

லூர்து செல்வம்.