Wednesday, January 6, 2021

ஆண்டவர் தந்ததை வீணாக்கலாமா ?

http://lrdselvam.blogspot.com/2021/01/blog-post_6.html


         ஆண்டவர் தந்ததை வீணாக்கலாமா ?


ஒரு கல்யாண வீட்டு விருந்து.

வகை வகையாக உணவுப்பொருட்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன.

எல்லோரும் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

"அண்ணாச்சி, சாப்பாடு."

" இலையில சாப்பாடு இருக்க."

"நீங்க வைங்க, அண்ணாச்சி. அதை எல்லாம் சாப்பிட்டு விடுவேன்."

வைத்து விட்டுப் போனார்.

"சாம்பார் ஊற்றுங்க."

ஒருவர் ஊற்றிவிட்டுப் போனார்.

கொஞ்சம் பொறுத்து,

"அண்ணாச்சி, சாப்பாடு."

"தம்பி, இலையில சாப்பாடு இருக்க."

"இப்ப வத்தக் குழம்புக்கு."

" சாம்பார் ஊற்றினதை சாப்பிட்டு முடி."

"அது எனக்குத் தெரியும். வைக்க சொன்னால் வைக்க வேண்டியது தானே. சாப்பிட எனக்கு தெரியாதா?"


வைத்து விட்டுப் போனார்.

"வத்தக் குழம்பு."

ஒருவர் ஊற்றிவிட்டுப் போனார்.

"சாப்பாடு.."

 "தம்பி, இலையில சாப்பாடு இருக்க."

"அது எனக்கு தெரியும் இப்போ ரசத்துக்கு."

"தம்பி முதலில் சாம்பார் ஊத்தின சாப்பாட்டையும், வத்த குழம்பு ஊத்தின சாப்பாட்டையும் சாப்பிட்டு முடி. அப்புறம் சாப்பாடு வைக்கிறேன்."

'"அது எனக்கு தெரியும். வைக்கச்சொன்னால் வைக்க வேண்டியதுதானே."


"தம்பி, சாப்பாட்டை வீணாக்கக்கூடாது. வைத்ததை சாப்பிட்டு முடி, அப்புறம் வைக்கிறேன்."

"ஏன்யா, உங்க அப்பன் வீட்டு சாப்பாடா? வைக்கச்சொன்னால் வைக்க வேண்டியதுதானே."

"ஆமா, இது எங்க அப்பன் வீட்டு சாப்பாடு தான். இது இலையில் இருப்பதை சாப்பிட்டு முடி. அப்புறம் எவ்வளவு வேண்டுமானாலும் வைக்கிறேன்."

"யோவ், சாப்பாடு வைக்கப் போறியா? அல்லது நான் 
கத்தட்டுமா?"

வேறு வழியில்லாமல் வைத்துவிட்டுப் போனார்.

 கொஞ்சம் பொறுத்து சாப்பிட்ட பையன் எழுந்துவிட்டான். இலையில் சாப்பாடு நிறைய மீதம் இருந்தது.

"தம்பி, இது என்ன?"

ஒரு முழி முழித்து விட்டு போய்விட்டான்.


கோவிலில்.

பதினாறு வயசு மதிக்கத்தக்க ஒரு பையன் திவ்யநற்கருணை முன்னால் முழங்காலில் இருந்தான்.

அவனது கண்கள் நற்கருணை பேழையின் மேல் இருந்தன.

கோவிலில் வேறு யாரும் இல்லை.

"ஆண்டவரே,"

"ம். சொல்லு."

சுற்றும் முற்றும் பார்த்தான்.

 யாருமே இல்லை சப்தம் எங்கிருந்து வருகிறது?

"ஆண்டவரே,"

"கேட்கிறேன். சொல்லு."


திரும்பி பின்னால் பார்த்தான்.
 யாரும் இல்லை.

"தம்பி, முன்னால். பார்."

இப்போது முன்னால் பார்த்தான்.

இயேசு புன்சிரிப்போடு நின்று கொண்டிருந்தார்.

"ஆண்டவரே,நீங்கள் எப்போது" வந்தீர்கள்?"

"என்னை தேடி தானே வந்திருக்கிறாய்.

 நான் 24 மணி நேரமும் இங்கேதான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று உனக்கு தெரியும் அல்லவா.

எப்போது" வந்தீர்கள் என்று கேட்கிறாய்?"

"ஆண்டவரே மன்னியுங்கள்." 

"சரி. வந்த விஷயத்தை சொல்லு."

"ஆண்டவரே, நாளைக்கு S.S.L.C Exam."

"எனக்குத் தெரியும்."

"நான் தேர்வு எழுத வேண்டும்."

"அதுவும் எனக்குத் தெரியும்."

"நான் நல்ல முறையில் தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற உங்களது உதவி எனக்கு வேண்டும்."

".நீ அதைக் கேட்கத்தான் வந்திருக்கிறாய் என்பதுவும் எனக்கு தெரியும். 

ஆனால் நான் உனக்கு இதுவரை செய்த உதவிகளை ஒழுங்காக பயன்படுத்தியிருக்கிறாயா?"

"எந்த உதவியை சொல்கிறீர்கள்?"

"ஏன், கேட்டபின் செய்வது மட்டும்தான் உதவியா? கேட்காமலே செய்வது உதவி இல்லையா?"

"எந்த உதவியை சொல்கிறீர்கள்?"

"S.S.L.C தேர்வுக்குத் தயாரிப்பதற்காக ஒரு வருடம் கொடுத்திருந்தேன்.

நீ அன்றன்றைய பாடத்தை அன்றன்றே ஒழுங்காக படித்திருக்க வேண்டும்.

நீ ஆண்டு முழுவதையும் Cell phone ஐ நோண்டியே வீணடித்தாய்.

இப்போ ஆண்டு முடியப்போகும் போது வந்து உதவி கேட்கிறாய்."

"ஆண்டவரே இனிமே ஒழுங்காக படிப்பேன்."


"இனிமேன்னா எப்போ? படிக்க வேண்டிய வருடம் முடிந்து விட்டது."

"ஆண்டவரே 11வது வகுப்பிலிருந்து ஒழுங்காக படிப்பேன்.

 இந்த ஆண்டு மட்டும் உதவி செய்யுங்கள்."


"ஹலோ, யாருக்கு உதவி செய்ய வேண்டும்?"

இயேசுவை காணவில்லை,
 பங்கு சுவாமியார் நின்று கொண்டிருந்தார்.

"சுவாமி, நீங்கள் எப்போது வந்தீர்கள்?

 நான் ஆண்டவரோடு பேசிக்கொண்டிருந்தேன்.

 திடீரென்று அவரை காணவில்லை"


"அப்படியா? என்ன பேசிக் கொண்டிருந்தாய்?"


"நாளைக்கு தேர்வு. ' நன்கு எழுத உதவி செய்யுங்கள்' என்று கேட்டேன்.

 அவர் 'ஆண்டு முழுவதையும் செல்போன் நோண்டியே வீணடித்துவிட்டு இப்போது வந்து உதவி கேட்கிறாய்' என்று சொல்கிறார்"

"அவர் சொல்லுறது சரிதானே."

"உண்மைதான். நீங்கள் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்."

சுவாமியிடம் சொல்லிவிட்டு வெளியே புறப்பட்டான்.

இயேசு வாசலில் நின்று கொண்டிருந்தார்.

"ஆண்டவரே ஏன் திடீரென்று இங்கு வந்து விட்டீர்கள்?"

''.இதுதானே நீ போகும் வழி."

"ஆண்டவரே.''

"நம்பிக்கையோடு போய்விட்டு வா"

"ஆண்டவரே! இது போதும், நன்றி அப்பா, வருகிறேன்."



அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளி படுக்கையின் மேல் அமர்ந்து கொண்டு:

"ஆண்டவரே அடியேனைக் கண் நோக்கியருளும்."

"இதோ உன் அருகில்தான் அமர்ந்து இருக்கிறேன்."


"ஆண்டவரே எப்போது வந்தீர்கள்?"

"நான் வரவில்லை. இங்கேதான் இருக்கிறேன். உன்னைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்."

".நான் இங்கு வந்து ஒரு மாதம் ஆகிறது.

தினமும் உங்களை நோக்கி வேண்டிக் கொண்டுதான் இருக்கிறேன்.

 ஆனால் உங்களை ஒருபோதும் நான் பார்க்கவில்லையே."

"நீ பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் நான் உன் அருகில்தான் இருக்கிறேன்."

"கேளுங்கள் தரப்படும் என்று சொல்லி இருக்கிறீர்கள்.

 நானும் இங்கு வந்த நாளிலிருந்து எனக்கு நல்ல சுகம் தரும்படி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.

 நீங்கள் எனது ஜெபத்தை கேட்டதுபோல் தெரியவில்லை."


"வாயால் கேட்கிற நீ நான் சொன்னதை ஏன் கேட்கவில்லை?"

"என்ன சொன்னீர்கள்? எப்போது கேட்கவில்லை?"

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."
(மத். 16:24)
என்று நான் சொன்னது கேட்கவில்லையா?"

"இதோ சுமந்து கொண்டிருக்கிறேனே!"

கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஜெபமாலையில் இருந்த பாடுபட்ட சுரூபத்தை காண்பித்தான்.


"ரொம்ப சந்தோஷம். நான் சொன்னது இந்த சிலுவையை அல்ல. நான் சுமந்த சிலுவையை."

"அவ்வளவு பெரிய மரச் சிலுவையை எப்படித்தான் சுமந்தீர்களோ? என் மேல் ஏற்றினால் நான் நசுங்கி செத்துப் போவேன்."

"நான் சொல்வது என்னுடைய துன்பங்களாகிய சிலுவையை."


"நான் ஒரு மாதமாக அனுபவிப்பது வியாதியாகிய துன்பத்தை தானே, ஆண்டவரே."


"அனுபவிப்பது வேறு, சுமப்பது வேறு.

விருப்பமோ, விருப்பம் இல்லையோ, அனுபவிப்பதை அனுபவித்தான் ஆக வேண்டும்.

 ஆனால் சுமப்பதை இஷ்டம் இருந்தால் சுமக்கலாம், அல்லது இறக்கிவைத்து விடலாம்.

  நீ வேறு வழி இல்லாமல் துன்பத்தை 
அனுபவித்திருக்கிறாய்.

 அனுபவிக்க உனக்கு இஷ்டம் இல்லாததினால் தான் அதை நீக்கும்படி என்னிடம் 
வேண்டியிருக்கிறாய்.


 ஆனால் வியாதி என்கிற துன்பத்தை சிலுவையாக நினைத்து, நீ மனதார மகிழ்ச்சியோடு சுமந்தால் நீ என் சீடனாகத் தகுதி பெறுவாய்.   

"அப்படியானால் வியாதி குணமாக வேண்டும் என்று வேண்டக் கூடாதா?"

" வேண்டலாம். நான் கூட என் தந்தையிடம் வேண்டினேன்.

"தந்தையே, உமக்கு விருப்பமானால், 

இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்:

 எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"

என்றுதானே வேண்டினேன்.

அது உனக்கு முன்மாதிரி காட்டத்தானே.

என் சீடனாக நீ இருக்க விரும்பினால் என் 
முன்மாதிரிகையை பின்பற்ற வேண்டும்.

"இயேசுவே, உமக்குச் சித்தமிருந்தால் இந்த வியாதியிலிருந்து என்னை குணமாக்கும்"
என்று வேண்யிருக்க வேண்டும்.

 குணம் ஆகாமல் இருந்தால் துன்பத்தை ஏற்று அதை எனக்கு ஒப்புக்கொடுத்திருக்க வேண்டும்.

அப்படி ஒப்புக்கொடுத்திருந்தால் விண்ணகத்தில் உனக்கு நிறைய சம்பாவனை சேர்ந்திருக்கும்.

இப்போது நீ அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பத்தால் உனக்கு எந்த ஆன்மீக பயனும் இல்லை."

"இப்போ நான் என்ன செய்ய வேண்டும்?" 

"துன்பத்தையே எனக்கு ஒப்புக் கொடுத்து விட்டு நம்பிக்கையுடன் இரு.

உன் வியாதி சீக்கிரம் குணமடையும்."

"நன்றி ஆண்டவரே!"


லூர்து செல்வம்
.

அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான்."


"அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான்."




"Brother, உங்களை பார்க்க வேண்டும் என்றுதான் வந்தேன்."

"என்ன விஷயமோ?"

"ஒன்றுமில்லை......"

"ஒன்றும் இல்லாதது ஒரு விஷயமா?"

"சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா அதையே பிடித்துக் கொள்கிறீர்கள்.

இயேசுவுக்கு கடவுளாகிய மட்டும் தாய் இல்லை,

 மனிதனாகிய மட்டும் தந்தைஇல்லை.

என்று நீங்கள் கூறியது ஞாபகத்தில் இருக்கிறதா?"

"ஆமா. இயேசுவுக்கு தேவ சுபாவத்தில் தாய் இல்லை, மனித சுபாவத்தில் தந்தை இல்லை.

அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?"

"எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை.

என் நண்பனுக்கு, 

அவன் கிறிஸ்தவன் அல்ல,

 அவனுக்கு தான் பிரச்சனை."

"அவன் கிறிஸ்தவன் அல்ல என்கிறீர்கள்.

நான் கூறியது நமது விசுவாச சத்தியம்,

 கிறிஸ்தவன் அல்லாதவனுக்கு நமது சத்தியத்தால் என்ன பிரச்சனை?"

"அவன்

'அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். '

என்ற பைபிள் வசனத்தை எடுத்துக்கொண்டு 

'இயேசுவுக்கு தந்தை பரிசுத்த ஆவி' என்கிறான்.

 அவனுக்கு நான் என்ன பதில் சொல்லி விளக்கம் கொடுக்க?"

"உங்களுக்கு விளக்கம் தெரியுமா,
 தெரியாதா?"

"தெரியாது."

"அப்போ, உங்களுக்குதான் பிரச்சனை.

கிறிஸ்தவராக இருந்துகொண்டு இதற்கான விளக்கம் தெரியாது இருப்பது உங்களது பிரச்சனை. சரி, பரவாயில்லை விளக்கத்தைப் பார்ப்போம்.

மரியாள் கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள்.

அவளுடைய கன்னிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இறை மகன் அவளது உதரத்தில் மனு உரு எடுத்தார்.

மனு உரு எடுத்தது யார்?"

"இறைமகன்."

"இறைமகன் என்றால்?"

"பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாவது ஆளாகிய மகன்."

"அவர் யார்?"

"கடவுள்."

"அதாவது......"

"நம் எல்லோரையும் படைத்த சர்வ வல்லப கடவுள்."

"அதாவது,......"

"உலகத்தையும் அதில் வாழும் நம்மையும் ஒன்றுமில்லாமையில் இருந்து படைத்த கடவுள்."


"ஒன்றுமில்லாமல் இருந்து நம்மை உருவாக்கிய கடவுளுக்கு தான் மறு உரு எடுப்பது கஷ்டமான காரியமா?"

"ஹலோ' நான்கஷ்டமான காரியம்னு சொன்னேனா? நான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் என்னவெல்லாமோ கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

நான் கேட்டது பரிசுத்த ஆவியை பற்றி."

"பரிசுத்த ஆவி கடவுள்தானே."

"நான் இல்லை என்று சொன்னேனா?"


"ஹலோ! கேள்விக்குப் பதில் சொல்லுங்க."

"ஆமா, பரிசுத்த ஆவி கடவுள்தான்."

"மனுவுரு எடுத்த இறைமகன்?"

"அவரும் கடவுள்தான்.''

"இறைமகனது தந்தை?" 

"அவரும் கடவுள்தான் "

"மொத்தம் எத்தனை கடவுள்கள்?"

"ஒரே கடவுள்."

"மனு உரு எடுத்தது?"

"நீங்கள் குழப்புகிறீர்கள்."

"குழப்பவில்லை, விளக்குகிறேன்.
உங்களுடைய கேள்விக்கு உங்களிடமிருந்து தான் பதில் வரவழைக்க வேண்டும்.

 ஏனெனில் உங்களுக்கு பதில் தெரியும்."

"இப்போ புரிகிறது."

"என்ன புரிகிறது?"

"தந்தை, மகன், தூய ஆவி மூன்று ஆட்களும் ஒரே கடவுள் தான்.

மனு உருவெடுத்தது மகன் கடவுள். கடவுளை பிரிக்க முடியாது.

ஆட்கள் தனித்தனி. மனுவுரு எடுத்தது தந்தை அல்ல. பரிசுத்த ஆவியும் அல்ல.

மகன்தான் மனுவுரு எடுத்தார்.

மனுவுரு எடுத்த இறைமகன் மனுவுரு எடுக்காத தந்தையோடும் பரிசுத்த ஆவியோடும் சேர்ந்து ஒரே கடவுள் தான்.

ஆகவே மனு ஒரு எடுத்தவர் ஒரே கடவுள் தான்.

ஒரே கடவுளின் வல்லமையால் தான் ஒரே கடவுளாகிய இறைமகன் மனுவுரு எடுத்தார்.


ஆகவே பரிசுத்த ஆவியால் என்று சொன்னாலும் அது ஒரே கடவுளைத்தான் குறிக்கும்.

  புரிந்து கொண்டேனா?"

"இப்போ உங்களிடம் கேள்வி கேட்ட நபருக்கு என்ன பதில் சொல்வீர்கள்?"

"ஒரு பெண்ணுக்கு ஆணின் உதவியால் பிறந்த குழந்தைக்கு மட்டும்தான் தந்தை இருக்க முடியும்.

இயேசு கடவுள், அவரே அவரது வல்லமையால் அவர் படைத்த பெண்ணின் வயிற்றில் மனுவுரு எடுத்து பிறந்தார். 

இயேசு மனுவுரு எடுத்ததால் மரியாளின் கன்னிமைக்கு எந்த பங்கமும் இல்லை.

மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசுவுக்கு மனித சுபாவத்தில் தந்தை இல்லை."

"ஏன் பரிசுத்த ஆவியால் என்று எழுதியுள்ளது என்று கேட்பானே!"

"கேட்பான்.பரிசுத்த ஆவி அன்பின் கடவுள், 

மனுக்குலம் மீது கடவுள் கொண்டுள்ள அன்பின் காரணமாகவே கடவுள் மனிதன் ஆனார். 

ஆகவே பரிசுத்த ஆவியால் என்று எழுதியுள்ளது.

 ஆனாலும் கடவுள் தன் வல்லமையால் மனுவுரு எடுத்தார்.

தமதிரித்துவம் பற்றி சொன்னாள் அவனுக்குப் புரியாது."

"நீங்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
மனுவுரு எடுத்தது இறைமகன்தான்.

மற்றபடி மனுக்குலத்தோடு உள்ள
இறைஉறவில் சம்பத்தப்படுவது மூன்று ஆட்களாக வாழும் தமதிரித்துவ தேவன்தான்.

"Three Persons of the Blessed Trinity act as one single Principle when it comes to all divine acts ad extra (i.e., all divine acts "toward the outside" or in relation to creation."

நமது ஞானஸ்நானத்தின்போதும், உறுதிப்பூசுதலின் போதும் நம்மீது இறங்கி வருவது பரிசுத்த ஆவி மட்டுமல்ல பரிசுத்த தமதிரித்துவம் என்பதை நினைவில் கொள்வோம்.

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நம்மை வழி நடத்தி கொண்டிருப்பதும் பரிசுத்த தமதிரித்துவம் தான்.


லூர்து செல்வம்.

Tuesday, January 5, 2021

"மரியாளின் வழியே மைந்தனிடம் செல்வோம்.""To Jesus Through Mary."

http://lrdselvam.blogspot.com/2021/01/to-jesus-through-mary.html



"மரியாளின் வழியே மைந்தனிடம் செல்வோம்."
"To Jesus Through Mary."


""மரியாளின் வழியே மைந்தனிடம் செல்வோம்."
"To Jesus Through Mary."

எப்படி?

தாயைப் போல் பிள்ளை என்பார்கள்.

மரியாளைப் பொறுத்தமட்டில்:

பிள்ளையைப் போல் தாய்.

உலகியலில் 

தாய் --> பிள்ளை.

 தாயிடம் பிள்ளை உண்டாகிறது. ஆகவே தாயின் குணங்கள் பிள்ளையிடம் இருக்கின்றன.

மரியாளியலில்

இறைமகன் --> தாய் --> மனு மகன்.

இறைமகன் மரியாளைப் படைத்தார்.

மரியாள் தன்னைப் படைத்த இறைமகனை மனுமகனாகக் கருத்தரித்து, பெற்றாள்.

இயேசு ஒரு ஆள் - தேவ ஆள். 
சுபாவங்கள் இரண்டு,

தேவ சுபாவம், நித்தியகாலமாய்.
மனித சுபாவம், மரியின் வயிற்றில் கருத்தரித்த நேரத்திலிருந்து.

இறைமகனாகிய தேவ ஆள்தான் மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுத்தார்.

ஆகவேதான் மரியாள் தேவதாய்.

இறைமகன் தன் தாயைப் படைக்கும்போதே பாவமாசு இல்லாதவளாக, தன்னுடைய பண்புகளோடு படைத்தார்.

தன் தாயோடு அவர் பகிர்ந்து கொண்ட, முக்கியமான பண்பு இறை சித்தத்திற்கு முற்றிலும் பணிதல். (Total Submission to the will of God)

இயேசு

"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"

என்ற வார்த்தைகள் மூலம் தனது தந்தையின் சித்தத்திற்கு முற்றிலும் பணிந்தது போலவே, 

 அன்னை மரியாளும்,

"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" 

என்ற வார்த்தைகள் மூலம் இறைத் தந்தையின் சித்தத்திற்கு முற்றிலும் பணிந்தாள்.

ஆகவேதான் மரியாளைப் பற்றி கூறும்போது "பிள்ளையை போல் தாய்" என்கிறோம்,

பரிசுத்த தம திரித்துவத்தின் முதல் ஆளாகிய இறைத் தந்தையின் மகளாகிய மரியாள்,

அவரின் சித்தத்தை கபிரியேல் தூதர் மூலம் அறிந்தபின் 

இயேசுவின் தாய் ஆகிறாள்

இறைவனை மனிதனாகப் பெற்றெடுத்த மரியாள்,

எந்த நோக்கத்திற்காக இறைவன் மனிதன் ஆனாரோ 

அந்த நோக்கத்தை நிறைவேற்ற தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒத்துழைத்தாள்.

கருத்தரித்த நாளிலிருந்து கல்வாரி வரை மட்டுமல்ல,

 அதன் பிறகும் அவளது பணி தொடர்ந்தது,

 இன்றும் தொடர்கிறது,

நாளையும் தொடரும்.

அன்று இயேசுவுக்கு தாயாக இருந்த அதே மரியாள் 

இன்று இயேசுவின் திருச்சபைக்கு தாயாக இருக்கிறாள். 

அன்று பாலன் இயேசுவை ஏரோதுவின் கையிலிருந்து காப்பாற்றிய அதே மரியாள்

 இன்று திருச்சபையை அதன் எதிரிகளின் கையில் இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறாள்.

மரியாளின் வழியேதான் இயேசு நம்மிடம் வந்தார்.

ஆகவே நாம் மரியாளின் வழியே இயேசுவிடம் போவது சிறந்தது.

சில நண்பர்கள்,

" நாங்கள் இயேசுவிடம் நேரடியாக போவோம். மரியாள் வேண்டாம்." என்று சொல்கிறார்கள்.

 நேரடியாகப் போகின்றவர்களை நாம் தடுக்க வில்லை. ஆனால் மரியாளை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார்கள்? அதுதான் புரியவில்லை.

இயேசு இறுதிவரை தன் தாயின் அன்பின் அரவணைப்பில் தான் இருந்தார்.

பிறந்தவுடன் தாயின் மடியின் மேல் இருந்த இயேசு

 கல்லறைக்கு போகும் முன்னாலும் தாயின் மடியில் தலை வைத்து விட்டுத்தான் போனார்.

சிலுவையில் மரிப்பதற்கு முன் தனது தாயை அருளப்பர் மூலமாக நமது தாயாக தந்திருக்கிறார்.

தாய்ப் பற்று இல்லாதவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும்.

நாம் தாய்ப் பற்று உள்ளவர்கள்.

 தாய் வழியாக மைந்தனிடம் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

இயேசுவின் உடலில் ஓடியது அவருடைய தாயாகிய மரியாளின் இரத்தம்.

அதைத்தான் நமது மீட்பிற்காக சிலுவையில் சிந்தினார்.

மரியாளை மறுப்பவர்களால் இதை மறுக்க முடியுமா?

இயேசு தன்னுடைய தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களை தன்னுடைய தாய்க்கு ஒப்பிட்டார்.

அதன் அடிப்படையில் மரியாள் இயேசுவை பெற்றதால் மட்டுமல்ல, இறைத் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றியதாலும் இயேசுவின் தாயாகிறாள்.


உண்மையில் மனிதர்களில் இறைவனை மிக அதிகமாக அறிந்திருந்ததில் மாதாவை மிஞ்ச யாருமே இல்லை.

ஒரு புதிய இடத்திற்கு tour போகும்போது அந்த இடைத்தைப் பற்றி நன்கு தெரிந்த ஒரு ஆளை guide ஆக வைத்துக் கொள்கிறோம்.

இறைவனிடம் செல்ல அவரை நன்கு அறிந்திருக்கும் அன்னை மரியாளை guide ஆக வைத்துக்கொள்வது எப்படி தவறாகும்?

"அன்னையே எங்களை வழிநடத்தி ஆண்டவனிடம் சேர்த்து விடுங்கள்" 

என்று மாதா விடம் நம்மை ஒப்படைத்து விட்டால் இறைவனை எளிதில் அடைவது உறுதி.

  மாதாவிடம் ஒப்படைத்து விடுவது என்றால் வெறும் வாயளவில் அல்ல, செயல் அளவில்.

செயல் அளவில் மாதா பக்தனாக இருப்பது சொல்வது போல் அவ்வளவு எளிது அல்ல.

நம்மில் அநேகர் நினைக்கிறார்கள், மாதா பக்தி ஜெபம் சொல்வதிலும் ஜெபமாலை சொல்வதிலும் மட்டும் அடங்கி இருக்கிறது என்று.

ஜெபம், ஜெபமாலை கட்டாயம் தேவை. 

ஆனால் அதைவிட முக்கியம் நாம் நமது சிந்தனை, சொல், செயலில் அதாவது நமது வாழ்க்கையில்

மாதாவின் உயிருள்ள Xerox copy யாக மாற வேண்டும்.

இயேசு நம்மை தன் தாயோடு பார்க்கும் போது

 உண்மையிலேயே யார் தனது தாய் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணர வேண்டும்!

அந்த அளவுக்கு நாம் மாதாவாக மாற வேண்டும். அதுதான் உண்மையான மாதா பக்தி.

மாதாவாக மாறும்போது இயேசுவாகவும் மாறியிருப்போம்.

அன்னை மரியாள் ஏழ்மையை ஏற்றுக்கொண்டாள்.

இறைவனுக்கு அடிமையாக வாழ்வதை ஏற்றுக்கொண்டாள்.

வாழ்நாள் எல்லாம் வியாகுல மாதாவாக வாழ்வதை ஏற்றுக்கொண்டாள்.

தன் மகன் நமக்காக மரிப்பதை ஏற்றுக்கொண்டாள்.

நமது வாழ்வும் மாதாவின் வாழ்வை போல மாறினால் இயேசு நம்மை மனம் உவந்து ஏற்றுக்கொள்வார்.

இதற்கு பெயர்தான் மரியாளின் வழியாக இயேசுவிடம் செல்லுதல். 

அன்பின் வழி நடந்து அன்னையாக மாறுவோம்.

அன்னை வழி நடந்து ஆண்டவன் பாதம் சேருவோம்.

லூர்து செல்வம்.

Monday, January 4, 2021

"முன்பு எழக்கண்ட அந்த விண்மீன்," (மத்.2:9)

http://lrdselvam.blogspot.com/2021/01/29.html


"முன்பு எழக்கண்ட அந்த விண்மீன்," (மத்.2:9)


"யூதர்களின் அரசர் பிறந்திருக்கின்றாரே, அவர் எங்கே ?

 அவருடைய விண்மீன் எழுதலைக் கண்டு,

 அவரை வணங்க வந்தோம்" என்றார்கள்."

மத்தேயு நற்செய்தியில் இந்த வரிகளை வாசித்ததுமே என்னுடைய மனதில் சில கேள்விகள் என்னையும் அறியாமல் எழுந்தன.

 கீழ்த்திசை ஞானிகள் புதிய விண்மீன் எழுதலைக் கண்டு யூதர்களின் புதிய அரசர் பிறந்திருக்கின்றார் என்பதை அறிந்தார்கள்.

விண்மீனின் வழிகாட்டுதலின்படி தான் அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து ஜெருசலேமை
 நோக்கி வந்திருக்கிறார்கள்.

அவர்கள் ஏன் ஏரோது மன்னனிடம் அவரைப் பற்றி விசாரிக்கச் சென்றார்கள்?

ஜெருசலேம் வரை வழி காட்டிய விண்மீன் அவர்களை நேரே இயேசு பாலன் பிறந்த இடத்திற்கு வழிநடத்தி செய்திருக்கலாமே?

"அவர்கள் அரசன் கூறியதைக் கேட்டுப் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழக்கண்ட அந்த விண்மீன், குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரை, அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது."

என்ற வசனத்தில், "இதோ! முன்பு எழக்கண்ட அந்த விண்மீன்," 

என்ற என்ற வார்த்தைகளிலிருந்து ஜெருசலேம் வரை வழிகாட்டிய விண்மீன் அங்கு வந்தவுடன் மறைந்துவிட்டது என்று யூகிக்க முடிகிறது.

ஏரோது அரசனிடம் பேசிவிட்டு வந்த பின் அது மீண்டும் தோன்றியிருக்கிறது. 

ஜெருசலேம் வரை வந்த விண்மீன் ஏன் மறைந்தது?


வின்மீன் மறையாமல் ஞானிகளை நேராக இயேசுவிடம் அழைத்துச் சென்றிருந்தால்

 ஏரோது மன்னனுக்கு இயேசு பிறந்திருந்தது தெரிந்திருக்காது,''

' அது மட்டுமல்ல 

 அவன் மாசில்லா குழந்தைகளை கொல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

இக்கேள்விகளுக்கு விசுவாசத்தின் அடிப்படையில் விடை காண நேர்ந்தபோது என் மனதில் உதித்த எண்ணங்கள்,

வெறும் எண்ணங்கள் அல்ல ஆறுதலான எண்ணங்கள்.

இன்று மனிதன் மனதில் எழும் அநேக கேள்விகளுக்கு விடையாக வந்த எண்ணங்கள்.


விசுவாசத்தின் அடிப்படையில்

 ஏரோது மன்னனிடம் ஞானிகள் சென்று இயேசுவின் பிறப்பைப் பற்றி விசாரித்தது ஏன்?

கடவுள் சர்வ ஞானம் உள்ளவர்.

என்றென்றும் நிகழ் காலத்திலேயே வாழ்பவர்.

 நடந்தவை, நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை எல்லாம் இறைவனுக்கு நிகழ் காலமே.

இன்று ஒவ்வொரு வினாடியும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் காலங்களுக்கு எல்லாம் முன்பே இறைவன் மனதில் இருந்தவைதான்.

எல்லாம் அவரது நித்திய கால திட்டத்தின்படிதான் (Eternal plan) நடக்கின்றன.

மனிதன் தனது முழுமையான சுதந்திரத்தைப் பயன்படுத்தி செய்யும் நிகழ்ச்சிகளில் இறைவன் குறுக்கிட மாட்டார்.

இன்று நாம் செய்யும் செயல்கள் இறைவனின் ஞானத்தினால் நித்திய காலமாகவே அவருக்கு தெரியும்.

 ஆகவே நாம் சுதந்திரத்தோடு இன்று செய்கிற  செயல்களையும் நித்திய காலமாகவே அவரது திட்டத்திற்குப்  பயன்படுத்திக் கொள்கிறார்.

இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றது யூதர்களுடைய சுதந்திரமான செயல். 

அதில் இறைவன் குறிக்கிடவில்லை. 

ஆனால் அச்செயலை மனிதனை மீட்பதற்கு தான் பாவப் பரிகாரம் செய்ய பயன்படுத்திக் கொண்டார். 

ஏரோது மன்னன் ஒரு கொடுங்கோலன் என்பது இறைவனுக்கு நித்திய காலமாக தெரியும்.

அவன் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள தனது மனைவியையும் பிள்ளைகளையுமே கொன்றவன்.

"ஏரோதுவிற்கு பிள்ளையாகப் பிறப்பதை விட பன்றிக்கு குட்டியாக பிறப்பது எவ்வளவோ மேல்" என்று அக்காலத்தவர் பேசிக் கொள்வார்களாம்!

அப்படிப்பட்டவன் தனக்கு போட்டியாக இன்னொரு அரசர் பிறக்கப் போகிறார் என்பது தெரிந்தால் அவரை சும்மா விடுவானா?

ஏரோது வைப்பற்றி Webல் தேடிக் கொண்டிருந்தபோது ஒரு வரலாற்றுக் குறிப்பு கண்ணில் பட்டது.

 ஏரோது யூதன் அல்ல, Edomites வம்சத்தை சேர்ந்தவன்.

Edomites யார்?

ஈசாக்கிற்கு இரண்டு பிள்ளைகள் , எசாயூ, யாக்கோபு.

எசாயூ தின்பண்டத்திற்காக
தலைச்சனுக்குரிய தன் உரிமையை யாக்கோபிடம் விற்று விட்டான்.

அது மட்டுமல்ல,

யாக்கோபு அண்ணன் போல் நடித்து, அவன் தந்தையிடமிருந்து பெறவேண்டிய ஆசீர்வாதத்தை களவு செய்து கொண்டவன்.

ஆகவே இருவருக்கும் இடையே பகைமை இருந்தது.

Edomites எசாயூவின் வம்சத்தினர். 

Edomites were descendants of Esau,

ஆகவே, ஏரோது எசாயூவின் வம்சத்தில் பிறந்தவன்.

இயேசு யாக்கோபுவின் வம்சத்தில் பிறந்தவர்.

இந்த வரலாற்று குறிப்பின் உதவியோடு ஏரோதுவை நோக்கினால் அவனது கோபம் நமக்கு புரியும்.

பதவிக்காக தான் பெற்ற மக்களையே கொன்றவன் எதிராளியின் வம்சத்தில் பிறந்த இயேசுவை விட்டு வைப்பானா?

இது எல்லாம் வல்ல இறைவனுக்கு நித்திய காலமாகவே தெரியும்.

ஒவ்வொரு வினாடியும் இறைவன் திட்டப்படியே செயல்கள் நடப்பதால்

 கீழ்த்திசை ஞானிகளுக்கு வழிகாட்டிய விண்மீன் ஜெருசலேத்தை அடைந்தவுடன் மறைந்தது இறைவனின் திட்டம் தானே!

விண்மீன் உயிரி அல்ல, அது சுயமாக இயங்க கூடியது அல்ல.

விண்மீன் மறைந்ததால்தான் ஞானிகள் அரசனின் ஆலோசனையை கேட்க சென்றார்கள்.

புதிதாக பிறந்துள்ள யூதர்களின் அரசரைப் பற்றி ஏரோதுவிடம் சொல்லிவிட்டு திரும்பும்போது மறைந்த விண்மீன் இறைவன் திட்டப்படி தோன்றி,

 ஞானிகளை இயேசுவிடம் வழிகாட்டி அழைத்துச் சென்றது.

இறைவன்தான் தன்னுடைய தூதர் மூலமாக ஞானிகளை வேறுவழியே அவர்களுடைய நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

தேவதூதரின் சொற்படி சூசையப்பரும் மாதாவையும் பிள்ளையையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு சென்று விட்டார்.

ஞானிகள் வந்து தங்களது அனுபவத்தை கூறாததால் ஏரோது கோபமடைந்து,

பெத்லெகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளையெல்லாம் கொன்றான்.

உலக கண் நோக்கின்படி இறைவனின் இந்த செயல்பாட்டை பார்த்தால்  

தந்தை இறைவன் தனது திட்டத்தால்

 தன்னுடைய ஒரே குமாரனையும் மாசில்லா குழந்தைகளையும் கஷ்டப்படுத்தி விட்டது போல் தோன்றும். 


அவரிடம் சென்று நாம்,

''தந்தையே, ஏன் விண்மீனின் போக்கில் குறுக்கிட்டு
 உங்கள் ஏக குமாரனைக்  
 கஷ்டப்படுத்தி,
சிறு குழந்தைகளின் சாவிற்கு காரணமாக இருந்தீர்கள்"

என்று கேட்டால் அவர் சொல்லுவார்,

"ஒரு நல்ல மருத்துவருக்கு நோயாளிகளை எப்படி குணமாக்குவது என்று தெரியும்.

 மாத்திரை கொடுத்தால் போதுமா, ஊசி போட வேண்டுமா, அல்லது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டியவர் அவர், நோயாளி அல்ல. 

நோயாளி முழுமையாகக் குணம் பெற வேண்டும் என்பதுதான் மருத்துவரின் ஆசை.

அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் நோயாளி குணம் அடைவதை மையமாக வைத்துதான் இருக்கும்.

நான் மனிதனை படைத்தது நித்திய காலமும் என்னோடு பேரின்பமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

எனது ஒவ்வொரு செயலும் அதை மையமாக வைத்துதான் இருக்கும்.

நோயாளி குணம் அடைந்த பின்புதான் மருத்துவரின் செயலின் மேன்மை புரியும்.

அதேபோல் நீங்கள் விண்ணகம் வந்த பின்புதான் எனது ஒவ்வொரு செயலில் தன்மையும் உங்களுக்கு புரியும்.

எனது மகனை உங்களது பாவங்களுக்குப் பரிகாரமாக கஷ்டப்படுவதற்காகத்தான் அனுப்பினேன்.

என் மகனும் நானும் பரிசுத்த ஆவியும் ஒரே கடவுள்தான்.

இந்த விசுவாச அடிப்படையில் சிந்தித்தால்தான் உண்மை புரியும்.

இயேசுவுக்கு கஷ்டங்கள் வரவில்லை. அவராகவே அவற்றை மனமுவந்து தேர்ந்தெடுத்தார்.  

உலகப் பார்வையில் மாசில்லா குழந்தைகள் மரித்தார்கள்.

 என் பார்வையில், உலகிற்கு அவர்களை அனுப்பிய நான்தான், திரும்பி அழைத்துக் கொண்டேன்.  

அவர்கள் நித்தியமும் என்னோடு பேரின்பமாக வாழ வேண்டும் என்பதற்காகவே படைத்தேன்.

உண்மையில் ஏரோதுவின் தீச்செயல் குழந்தைகளுக்கு நன்மையில்தான் முடிந்தது!

இப்போது என்னோடுதான் வாழ்கின்றார்கள்."

மனிதர் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு செயலையும் இறைவனது பார்வையின் மூலமாகவே நாமும் பார்க்கவேண்டும்.

விசுவாசப் பார்வையில் பார்த்தால்தான் எல்லாம் நன்மைக்கே என்பது புரியும்.

இயேசு பாலனின் வாழ்வில் அன்று துன்பங்கள் வந்தது போல, இல்லை, துன்பங்களை தந்தை இறைவனே வர விட்டது போல,

நமது வாழ்விலும் துன்பங்கள் வருகின்றன, இறைத் தந்தையின் அனுமதியோடு.

நாம் நினைக்கலாம்: அன்புள்ள கடவுள் நம் வாழ்வில் துன்பங்களே வர விடாமல் நம்மை பாதுகாத்திருக்கலாமே என்று.

இயேசு தான் கடவுளாக இருந்தும் மனித சுபாவத்தில் அவரே தன்மீது துன்பங்களை வரவழைத்து கொண்டதற்கு காரணமே நமக்கு பாடம் கற்பிப்பதற்காகத்தான்.

நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய இறைவனே மனிதனாக பிறந்து துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டது போல 

நாமும் நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக நமக்கு வரும் துன்பங்களை மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவரது துன்பங்கள் நம்முடைய மீட்பு என்ற மகிழ்ச்சியாக மாறியது போல 

நமது துன்பங்களும் விண்ணகத்தில் பேரின்பமாக மாறும்.

இவ்வுலகில் நமது துன்பங்கள் முடிவுக்கு வந்துவிடும்,

 ஆனால் அவற்றின் பயனாக நாம் பெறும் பேரின்பம் நித்தியமாக நம்முடன் நிலைத்திருக்கும்.

சுனாமி, கொரோனா போன்ற துன்பங்களால் ஏற்படும் மரணங்கள்

 இறைவனை பொறுத்தமட்டில் மரணங்கள் அல்ல,

 மாறாக நித்திய பேரின்பத்தின் வாசல்கள்.


நமக்கு பாடம் கற்பிப்பதற்காகத்தான் அன்று மாசில்லா குழந்தைகள் இயேசுவுக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள்.

 வேறு வார்த்தைகளில், இளமையிலேயே நித்திய பேரின்பத்திற்குள் நுழைந்தார்கள்.

நமக்கு வரும் துன்பங்களையும் அதன் விளைவாக ஏற்படும் மரணங்களையும் இறைவனின் கண் நோக்கிலிருந்து பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்..

 அதுதான் விசுவாசம்.

நமக்குள் உண்மையாக விசுவாசம் இருந்தால் நமக்கு வரும் துன்பங்களைக் கண்டு அஞ்ச மாட்டோம்,

அவற்றை நன்றி உணர்ச்சியோடு ஏற்று,

 இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து, 

விண்ணகத்தில் பேரின்பத்தைச் சேர்த்து வைப்போம்.

லூர்து செல்வம்.

Sunday, January 3, 2021

"வந்து பாருங்கள்" (அரு.1:38)

http://lrdselvam.blogspot.com/2021/01/138.html



"வந்து பாருங்கள்" (அரு.1:38)

இராயப்பரின் சகோதரரான பெலவேந்திரர் ஸ்நாபக அருளப்பரின் சீடர்.

அவர் மற்றொரு சீடருடன் அருளப்பருடன் இருந்த போது,
இயேசு அந்தப் பக்கம் வர நேர்ந்தது.

அருளப்பர் இயேசுவை உற்று நோக்கி,

"இதோ! கடவுளுடைய செம்மறி" என்றார்.


அதைக் கேட்ட பெலவேந்திரரும், மற்றொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு,

 "என்ன வேண்டும் ?" என்று கேட்டார். 

அவர்கள், "ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் ?" என்றனர்

இயேசு அவர்களிடம்,

"வந்து பாருங்கள்" என்றார்.

அருளப்பர் மெசியாவிற்கு முன்னோடி என்று பெலவேந்திரருக்குத் தெரியும்.

ஆகவே இயேசுவின் சீடராகும் பொருட்டே அவர் இயேசுவைப் பின்தொடர்ந்தார்.

இயேசு அவரிடம்,

"என்ன வேண்டும் ?" என்று கேட்டபோது, பெலவேந்திரர் தன்னைப் பற்றி எதுவும் கூறாமல்

இயேசுவைப் பற்றியே விசாரிக்கிறார்.

நம்முடைய அனுபவத்தோடு இதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

நாம் எதாவது பெரிய மனிதரைப் பார்க்கச் சென்றால் முதலில் நம்மைப் பற்றிதான் கூறுவோம்.

அப்புறம் பார்க்கச் சென்றதின் நோக்கத்தைக் கூறுவோம்.

அவரைப்பற்றி அவரிடமே விசாரிக்க மாட்டோம்.

ஆனால் பெலவேந்திரர் வித்தியாசமாக செயல்படுகிறார்.

அவரது நோக்கம் இயேசுவை அறிவது தான். தன்னை பற்றி அவரிடம் தெரிவிப்பது அல்ல.

குருவை நன்கு அறிந்திருந்தால் தான் அவர் வழி சரியாக நடந்து அவரது உண்மையாக சீடராக வாழ முடியும்.

குருவை பிரதிபலிப்பவன்தான் உண்மையான சீடன்.

அவரை அறியாமல் பிரதிபலிப்பது எப்படி முடியும்?

அவரது அணுகுமுறை மிக சரியானது. 

"ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று அவர் கேட்டது மிகவும் பொருள் பொதிந்த கேள்வி.

தனது குருவை வாய் மொழி வழி அல்ல, நேரடியாகவே அறிய விரும்புகிறார்.

குருவிடம் சென்று,

" நீங்கள் எப்படிபட்டவர்கள்?" என்று நேரடியாக கேட்க முடியாது.

அவரோடு தங்கினால் அவரை நேரடியாக அறிய முடியும்.

அவரைப் பற்றி அல்ல, அவரை.

'அவரைப் பற்றி' அறிந்தால் அவரைப் பற்றிய சில புள்ளி விவரங்கள் கிடைக்கும்.

 ஆனால் 'அவரை' அறிந்தால் அவரது அனுபவம் கிடைக்கும்.

 இயேசுவைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும் இயேசுவைத் தெரிந்து கொள்வதற்கும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.

இயேசுவைப் பற்றி தெரியும் என்றால் அவரது வாழ்க்கை வரலாறு தெரியும் என்று அர்த்தம்.

இயேசுவை தெரியும் என்றால் இயேசு எனது வாழ்க்கையோடு ஒன்றித்து விட்டார் என்று அர்த்தம்.

சீடனுக்கு குருவை தெரிய வேண்டும், அவரை தெரிந்து கொள்வதற்காக அவரோடு தங்க வேண்டும், அவரது விருப்பங்களை நமது விருப்பங்கள் மாற்ற வேண்டும். 

அதற்காகத்தான், பெலவேந்திரர்

 "ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்டார்.

இயேசு அவரது கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லவில்லை.

"வந்து பாருங்கள்" என்று மட்டும் கூறுகிறார்.

இயேசுவின் பதிலிலும் பொருள் பொதிந்திருக்கிறது.

நமது உலக அனுபவத்தில் 

நாம் இருக்கும் இடத்தை சொன்னால் மட்டும் சம்பந்தப்பட்ட நபர் நம்மை வந்து பார்ப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இயேசு "வந்து பாருங்கள்" என்று சொன்னதில் 

"என்னுடன் வாருங்கள், என்னுடன் தங்குங்கள், என்னை அறிந்து கொள்ளுங்கள், என்னைப் பின்பற்றுங்கள்"

முதலிய அழைப்புகளும் அடங்கி இருக்கின்றன.

பெலவேந்திரரும் இயேசுவுடன் சென்றார், 

இயேசுவுடன் தங்கினார்,

 இயேசுவை நன்கு புரிந்துகொண்டார்,

 அதுமட்டுமல்ல 

தான் மெசியாவை கண்டதை தன் சகோதரரிடம் தெரிவிக்கவும் சென்றார்.


நாம் இறைவாக்கை வாசிப்பது வெறுமனே வாசிப்பதற்காக மட்டும் அல்ல.

பொழுது போக்கிற்காகவும் அல்ல.

விஷய அறிவுக்காக மட்டும் அல்ல.

இறைவாக்கை நமது வாழ்வாக மாற்றிக் கொள்வதற்காக.

நாம் உண்ணும் உணவு ஜீரணித்து, நமது இரத்தத்தோடும் தசைகளோடும் கலந்து, நமது உடலாக மாறினால்தான் உணவினால் நமக்கு பயன்.


அதேபோல இறைவாக்கும், நமது வாழ்வும் ஒன்றித்தால்தான் இறைவார்த்தையை வாசிப்பது பயனுள்ளது.


நாமும் இயேசுவை அறிய வேண்டும்.

இயேசுவை அறிய வேண்டுமென்றால் இயேசுவிடம் தான் செல்ல வேண்டும்.

இயேசுவிடம் செல்வது எப்படி?

அதற்கான வழிவகைகளை அவரே ஏற்பாடு செய்திருக்கிறார்.

தான் விண்ணகம் செல்லும் முன் தன் சீடர்களை நோக்கி "உலகெங்கும் சென்று நற்செய்தியை" அறிவியுங்கள் எங்கு கட்டளை இட்டார்.

இயேசுதான் விண்ணிலிருந்து நமக்காக வந்த நற்செய்தி.

தனது சீடர்களுக்கு மூன்று ஆண்டுகள் அவர் பயிற்சி கொடுத்ததே அவரை உலகெங்கும் சென்று அறிவிப்பதற்காகத்தான்.

இன்று நமக்கு இயேசுவை அறிவித்துக் கொண்டிருக்கும் குருக்கள் இயேசுவின் பிரதிநிதிகளே.

இயேசுவையும், அவர் உலகிற்கு அளிக்க வந்த பாவமன்னிப்பையும் நமக்கு அளிப்பதற்கென்றே இயேசுவினால் நம்மிடம் அனுப்பப்பட்டவர்கள்.

  நம்மில் எத்தனை பேர் பாவமன்னிப்பு பெறுவதற்கென்றே குருக்களை அணுகுகிறோம்?


ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாய் இலவசமாக தரப்படும் என்று அரசு அறிவித்து விட்டால் அங்கு அதை பெறுவதற்காக கூடும் கூட்டம் மைல் கணக்கில் நீள்கிறது .


ஜவுளி கடைகளில் ஆடி கழிவு அறிவித்து விட்டால் அங்கு ஜனங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

"நான்கு சோப்பு வாங்கினால் ஒரு சோப்பு இலவசம்" என்று ஒரு கடையில் அறிவிப்பு தொங்கினால்,

 ஒரு சோப்பை இலவசமாக பெறுவதற்காக நான்கு சோப்பிற்கு காசு கொடுக்க தயாராக இருக்கும் கூட்டம் கடையையே முற்றுகையிடுகிறது.

ஆனால் இலவசமாக பாவங்களை மன்னிக்க குருக்கள் தயாராக இருக்கிறார்கள். நாட்டில் பாவிகளே இல்லை!!!

பங்கு குருக்களில் முக்கிய பணியே பங்கு மக்களின் ஆன்மீக காரியங்களில் அவர்களை வழி நடத்துவதுதான்.

  நாம் நமது ஆன்மீக காரியங்களில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் நமதுஆன்மீக வழிகாட்டிகளான பங்கு குருக்களின் ஆலோசனை உதவியை நாடவேண்டும்.

இயேசுவே அவர்கள் மூலமாக நமக்கு ஆலோசனைகள் நல்குகிறார்.

"வந்து என்னை பாருங்கள்" என்று கூறி பங்கு குருக்களின் வடிவில் நம்மை இயேசுவே அழைக்கிறார்.

அழைப்பினை ஏற்று இயேசுவை சந்தித்து அவரது வழிகாட்டுதலின்படி விண்ணக பயணத்தை தொடர்வோம்.


அடுத்து இயேசு நம்மை அழைப்பது பைபிள் மூலமாக.

பைபிள் வழியாக இயேசு நம்மோடு பேசுகின்றார்.

பைபிளை ஒவ்வொரு நாளும் வாசித்தால் மட்டும் போதாது.

 இறைச் செய்தியை புரிந்துகொண்டு அதை நமது வாழ்வாக மாற்ற வேண்டும்.

 இறைச் செய்தியை வாழ்வதன் மூலம் இயேசுவையே வாழ்கிறோம்.


தனது பிரதிநிதிகள் மூலமாகவும்,, பைபிள் மூலமாகவும் நம்மோடு பேசுகின்ற இயேசு நம்மோடு நேரடியாக பேசுவது திவ்ய நற்கருணை மூலமாக. 

திவ்ய நற்கருணையை உட்கொள்ளும் போது நாம் இயேசுவையே உணவாக உட்கொள்கிறோம்.


கன்னி மரியின் உதரத்தில் உதித்த அதே இயேசு நற்கருணையாக நம்மிடம் வருகிறார்.

அன்று பெலவேந்திரர் இயேசுவோடு தங்கியது போல இன்று இயேசு நம்மில் தங்குகிறார்.

 அவர் நற்கருணையாக நம்முள் வந்து தங்கும்போது நமது சுக துக்கங்களை அவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

திருப்பலியின் போது மட்டுமல்ல, 24 மணி நேரமும் நமக்காக கோவிலில் திவ்ய நற்கருணைப் பேழையில் காத்துக்கொண்டிருக்கிறார்.

நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்குச் சென்று பேழையில் நமக்காக காத்துக் கொண்டிருக்கும் நற்கருணை நாதரோடு உரவாட வேண்டும்.

எதுவுமே பேசாமல் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும், நமக்கு மன அமைதி கிட்டும். 

திவ்ய நற்கருணைப் பேழையில் இருந்துகொண்டு நம்மை நோக்கி,

 "என்னிடம் வந்து என்னைப் பாருங்கள். என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்,"

 என்று நம்மை இயேசு அழைக்கிறார்.

கோவிலுக்குப் போக நேரம் கிடைக்காவிட்டாலும் கூட

 நமது உள்ளம் என்னும் கோவிலில் அமர்ந்திருக்கும் அவரோடு நேரம் கிடைக்கும்போதெல்லாம் உறவாட வேண்டும். 

வேலை இல்லாது இருக்கும்போது எதையெல்லாமோ கற்பனை செய்து நேரத்தை வீணாக்குவதை விட்டு விட்டு இயேசுவோடு உறவாடி பயன்பெறுவோம்.

பெலவேந்திரரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது:

1. இயேசுவை அறிய ஆவல் கொள்ள வேண்டும்.

2. அவரைப் பின்பற்ற வேண்டும்.

3. இயேசுவுடன் தங்கி அவரை அறிய வேண்டும்.

4. இயேசுவை வாழ வேண்டும்.


அறிவோம், 

வாழ்வோம் நிலைவாழ்வு.

லூர்து செல்வம்.

Saturday, January 2, 2021

"இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்." (அரு.1::29)

"இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்."
(அரு.1::29)


பழைய ஏற்பாட்டில் யூதர்கள் மத்தியில் பாவங்களுக்குப் பரிகாரமாக செம்மறியாட்டைப் இறைவனுக்குப் பலியாகச் செலுத்தும் பழக்கம் இருந்தது.

ஸ்நாபக அருளப்பர் யூதர், ஆகையால் உலகின் பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே பலியாக்க மனிதனாகப் பிறந்த இயேசுவை ஒரு செம்மறியாகச் சித்தரிக்கிறார்.

மனிதர் செய்த பாவங்களை செம்மறியின் மேல் சுமத்தி அதைப் பலியிட்டுவிட்டால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது அவர்களது நம்பிக்கை.

பலியிடப்பட்ட ஆட்டைப் பலியிட்டவர்களே சாப்பிட்டு விட வேண்டும்.

உலகின் பாவங்களைப் போக்குவதற்காக தன்னையே சிலுவை மரத்தில் பலியாக ஒப்புக்கொடுக்க மனிதனாக பிறந்த இயேசு,

அவர் பலியிடப்படுவதற்கு முந்திய நாளான வியாழக்கிழமை இரவு தன்னையே தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுத்தார்.


"அவர் அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி, பிட்டு அவர்களுக்கு அளித்தது, "இதை வாங்கிக்கொள்ளுங்கள்.
இது என் உடல்" என்றார். 


பின்னர், கிண்ணத்தை எடுத்து, நன்றிகூறி அவர்களுக்கு அளிக்க, அதில் அனைவரும் பருகினர்.


 அப்போது அவர், "உடன்படிக்கைக்கெனப் பலருக்காகச் சிந்தப்படும் என் இரத்தம் இது."
(மாற்கு14:22-24)

அவர் பலியிடப்படப்போவது வெள்ளிக்கிழமை தான்.

ஆனால் அப்போது தன் உடலையும் இரத்தத்தையும் அப்போஸ்தலர்களுக்கு உணவாக கொடுக்க அவரும் உயிரோடு இருக்கமாட்டார், அப்போஸ்தலர்களும் அருகில் இருக்கமாட்டார்கள்.

ஆகவே பலியிடப்பட்ட தன்னை உணவாக கொடுக்கும் நிகழ்ச்சியை முந்திய நாள் இரவு உணவின்போது முடித்துக் கொள்கிறார்.

அப்பத்தை தன் உடலாகவும், இரத்தை இரத்தமாகவும் மாற்றி தன்னை சீடர்களுக்கு உணவாக கொடுக்கிறார்.

சீடர்கள் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும்தான் உணவாக உண்டார்கள்.

அதுமட்டுமல்ல உலகம் முடியும் மட்டும் தன்னுடைய பலியைத் கொண்டாடுவதற்காக தன்னுடைய சீடர்களுக்கு குரு பட்டமும் கொடுத்தார்.

அதன்மூலம் அவர் கூறிய அதே வசீகர வார்த்தைகளை அவர்களும் கூறி அப்பத்தை அவரின் உடலாகவும், இரசத்தை இரத்தமாகவும் மாற்றும் வல்லமையை கொடுத்தார்.

அன்று திருச்சிலுவையில் ரத்தம் சிந்திய விதமாய் ஒப்புக் கொடுக்கப்பட்ட அதே திருப்பலி இன்றுவரை ரத்தம் சிந்தாத விதமாய் தினமும் பலிபீடத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இது உலகம் முடியும் மட்டும் தொடரும்.

இன்று பீடத்தில் பலியாக ஒப்பு கொடுக்கப்படுவது அன்று கல்வாரி மலையில் சிலுவையில் இரத்தம் சிந்தி பலியான அதே இயேசு தான்.

திருப்பந்தியின்போது நாம் உண்பது அன்று இரவு உணவின்போது சீடர்களால் உண்ணப்பட்ட அதே
 இயேசுவைத்தான்.


மனிதர் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு பலியிடப்பட போகிறார் என்பதை குறிப்பிடவே ஸ்நாபக அருளப்பர்,

"இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்."

என்று ஆண்டவர் பொது வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்னரே மக்களுக்குச் சுட்டி காண்பிக்கிறார்.

மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து கொண்டிருந்த ஸ்நாபக அருளப்பர்,

இயேசு தம்மிடம் வருவதைக் கண்டவுடன் , "இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்."
என்றார்.

ஸ்நாபக அருளப்பர் இயேசு பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே பிறந்துவிட்டார்.

இயேசு பிறந்தவுடன் அவரை கொல்லும் நோக்கத்தோடு ஏரோது மன்னன் இரண்டு வயதும் அதற்கு உட்பட்ட வர்களுமான குழந்தைகளை கொல்லும் படி உத்தரவிட்டபோது 

எலிசபெத்தம்மாள் தன்மகனை காப்பாற்றும் பொருட்டு அவரை பாலைவனத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டாள்.

 அருளப்பர் அங்கேயேதான் வளர்ந்தார்.

இயேசுவும் எகிப்துக்கு சென்றுவிட்டார்.

ஏரோது மன்னன் இறந்த பின்பு தான் ஊருக்கு திரும்பினார்.

அருளப்பர் பாலைவனத்திலும், இயேசு நசரேத்தூரிலும் வளர்ந்ததால், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை.

 அருளப்பர் இயேசுவை அதற்குமுன் பார்த்திருக்காவிட்டாலும் அவர்மேல் பரிசுத்த ஆவி இறங்கி நிற்பதை பார்த்து அவரை அடையாளம் கண்டு கொண்டார்.
(அரு.1:33,34)

இயேசு கடவுள் என்பதை சுட்டிக் காண்பிக்கவே, அருளப்பர் இயேசுவைப் பற்றி,

"அவர் எனக்குமுன்பே இருந்தார்." என்றார்.


மறுநாள் மீண்டும் அருளப்பர் தம்முடைய சீடர் இருவரோடு இருக்கையில்,

36 இயேசு அப்பக்கம் நடந்து சென்றார். 

அருளப்பர் அவரை உற்றுநோக்கி, "இதோ! கடவுளுடைய செம்மறி" என்றார்.

37 சீடர் இருவரும் அவர் கூறியதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

அருளப்பர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் பெலவேந்திரர் ஒருவர்.

 அவர் சீமோன் இராயப்பரின் சகோதரர். (அரு1:35-37,40)

இயேசு கடவுளுடைய செம்மறி என்பதன் ஆழமான கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் இயேசுவின் சீடர்கள். அவரை நமது வாழ்வில் பிரதிபலிக்க வேண்டியவர்கள். இயேசுவின் சாயல் நம்மிடம் முழுமை பெற வேண்டும் என்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். 

அப்படியானால் இயேசுவைப்பற்றி சொல்லப்படுகின்ற ஒவ்வொன்றும் நம்மைப் பற்றியும் சொல்லப்பட வேண்டும்.

இயேசு இறைமகன். அவரது தந்தையை "நாமும் தந்தையே" என்றுதான் அழைக்கிறோம்.

அதுவும் இயேசு கற்றுத்தந்த படியே.

கடவுளின் பிள்ளைகள் என்ற பெயருக்குப் பொருத்தமாக வாழ வேண்டிய நாம்,

கடவுளுடைய செம்மறி என்ற பெயருக்கும் பொருத்தமாக வாழ வேண்டும் அல்லவா?

அவர் பாவப் பரிகாரப் பலிப்பொருள் என்றால்,

நாமும் பாவப் பரிகாரப் பலிப்பொருள்தானே!

அவர் நமது பாவங்களை தன் மீது சுமந்து சென்று நமக்காக பலியானார்.

நமது பாவங்களை நாம் தான் சுமந்து கொண்டிருக்கிறோம். அவற்றிற்காக நாம் பலியாக நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டியது அவசியம்தானே!

 நமது சுபாவமே உரிமைக்காக குரல் கொடுப்பதும் கடமையை கண்டால் ஒதுங்கி இருப்பதும் தானே.

இறைவன் தந்தை என்பதால் நமக்கு வேண்டியதை எல்லாம் உரிமையோடு கேட்போம்.

அதேசமயத்தில் இறைமகன் எப்படி பலிப்பொருளாக மாறினாரோ,

 அப்படியே நாமும் மாற வேண்டும் என்று சொல்வதை கேட்க தயக்கமாக இருக்கிறது.

திருப்பலிக்குச் செல்லும் போது குருவோடு சேர்ந்து நாமும் இயேசுவே தந்தைக்கு பலியாக ஒப்புக் கொடுக்கிறோம்,

பலிப் பொருளை உணவாக அருந்தவும் செய்கிறோம்.

நம்மையும் இயேசுவோடு சேர்த்து பலியாக ஒப்புக் கொடுக்கிறோமா?

உண்மையிலேயே ஒப்புக்கொடுத்தால் இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட பொருளை திரும்ப கேட்கக் கூடாது.

அதாவது கோவிலில் இருக்கும் போது நம்மையே தந்தை இறைவனுக்கு வழியாக ஒப்புக் கொடுத்து விட்டால் கோவிலை விட்டு வெளியே வரும்போது அதை பொருளாகத்தான் வரவேண்டும்.

ஆனால் நாம் பலிபொருளாக வருகிறோமா அல்லது பழைய நாமாகவே வருகிறோமா?

பலிபொருளாக வந்தால் அன்று நமக்கு வரும் கஷ்டங்களை எல்லாம் சிலுவைகளாக கருதி மகிழ்ச்சியுடன் சுமப்போம்.

 நாமாக வந்தால் கஷ்டங்களைக் கண்டு முணுமுணுப்போம்.

இயேசுவைப் போல நாமும் பலிப்பொருள் தான் 

ஒவ்வொரு வினாடியும் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது நம்மையே நாம் இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கும் பலி நிகழ்வுதான் என்பதை நாம் உணர வேண்டும்.

உணர்கிறோமா?

நாம் இயேசுவாக மாற வேண்டும் என்றால் 

இயேசுவைப்போல் பலிப் பொருளாகவும் மாறவேண்டும்.

 மாறுவோம்.

லூர்து செல்வம்.

Friday, January 1, 2021

"இடையர் வெட்டவெளியில் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக்கொண்டிருந்தனர்.." (லூக்.2:8)

http://lrdselvam.blogspot.com/2021/01/28.html



"இடையர் வெட்டவெளியில் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடைக்குச்
 சாமக் காவல் காத்துக்கொண்டிருந்தனர்.." (லூக்.2:8)





இயேசு பிறந்த அன்று

" இடையர் வெட்டவெளியில் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக்கொண்டிருந்தனர்.


ஆண்டவருடைய தூதர் அவர்களுக்குத் தோன்ற, விண்ணொளி அவர்களைச் சூழ்ந்து சுடர்ந்தது. 

மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.


வானதூதர் அவர்களை நோக்கி, " அஞ்சாதீர், இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்."

பெத்லகேமில் இயேசு பிறந்த விபரத்தை கீழ்த்திசை ஞானிகள் அவர்களுடைய முயற்சியால் கண்டறிந்தார்கள்.

ஆனால் ஞானத்திற்கு அர்த்தம் புரியாத 
சாதாரண ஏழை இடையர்களுக்கு இயேசு பிறந்த செய்தி விண்ணகத்திலிருந்து தேவ தூதர்கள் மூலம் நேரடியாக அறிவிக்கப்பட்டது.  

இதிலிருந்து என்ன தெரிகிறது?

இறைவன் முன் பாமர மக்கள் படித்தவர்களுக்குக் குறைந்தவர்கள் அல்ல.

மனிதர்களுக்கு ஞானத்தைக் கொடுப்பவர் இறைவன்தான். அதை வைத்து அவர்கள் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும்.

பாமர மக்களை பாமர மக்களாக படைத்தவர் இறைவன் தான். அவர்களால் சுயமாக அறிய முடியாததால் இறைவனே இறங்கி வந்து நேரடியாக அவர்களுக்கு அறிவிக்கிறார்.

இறைவனே தான் மனிதனாகப் பிறப்பதற்கு ஒரு ஏழையைத்தான் தன் தாயாகத் தெரிந்து கொண்டார்.

மாடுகள் அடையும் தொழுவைத்தான் தான் பிறப்பதற்கு உரிய இடமாக தெரிந்து கொண்டார்.

இங்கு வேறொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும்.


"இடையர் வெட்டவெளியில் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக்கொண்டிருந்தனர்."

என்று இறைவாக்கு கூறுகிறது.

வெறுமனே இடையர் என்று கூறவில்லை.

"வெட்டவெளி " மார்கழிப் பனியிலிருந்து தங்களை பாதுகாக்க முடியாத திறந்த வெளி. 

இரவு முழுதும் தூங்காமல் தங்கள் ஆடுகளை காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்கள்.


தங்களுக்கு பாதுகாப்பு இல்லாவிட்டாலும் தங்கள் ஆடுகளுக்கு பாதுகாப்பாக விடியவிடிய உறங்காமல் காத்திருந்த இடையர்கள்.

இயேசு உலகிற்கு செய்ய வந்த பணியை இடையர்களை பற்றிய விளக்கம் தெளிவாக்குகிறது.

தமது பொது வாழ்வின் போது தன்னை ஒரு நல்ல ஆயன் என்றே குறிப்பிடுவார்.

இடையர்கள் தங்கள் பாதுகாப்புக்காக அல்ல, அவர்களது ஆடுகளின் பாதுகாப்பிற்காக விடிய விடிய காத்திருந்தார்கள்.

 அதேபோல,

நல்ல ஆயன் என்று தன்னையே கூறிக்கொண்ட இயேசுவும் தன் உயிரைப் பாதுகாக்க அல்ல,

 பாவிகளின் ஆன்மாவை பாதுகாக்கவே உலகிற்கு வந்தார்.

பாவிகளின் ஆன்மாவை மீட்பதற்காக தன் உயிரையே தியாகம் செய்தார்.

புத்தகம் எழுதுவோர் முன்னுரையில் நாங்கள் எழுதப் போவதைப் பற்றி குறிப்பிடுவார்கள்.

ஒருவகையில் ஆயர்களைப் பற்றிய விபரம் இயேசுவின் வாழ்க்கைக்கு ஒரு முன்னுரை என்று கருதலாம். 

ஆயர்கள் தங்களுடைய ஆடுகளில் பாதுகாப்பிற்காக தங்களையே தியாகம் செய்து கொண்டிருந்தார்கள்.

நல்ல ஆயன் ஆகிய இயேசு தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களின் ஆன்மாக்களைப் பாதுகாப்பதற்காக தன்னையே தியாகம் செய்தார்.


விண்ணிலிருந்து மற்றொரு வாழ்த்துரையையும் வானதூதர்கள் பூமிக்கு கொண்டு வந்தார்கள் 

"விண்ணுலகில் இறைவனுக்கு மகிமை, பூவுலகில் நன்மனதோர்க்கு சமாதானம்."

நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானம் உண்டாகட்டும் என்று வானதூதர்கள் வாழ்த்தினார்கள்.

தான் செய்த பாவத்தினால் மனிதன் இறைவனோடு தனக்கிருந்த சமாதான உறவை முறித்துக் கொண்டு வெளியேறினான்.

மனிதன் இழந்த சமாதான உறவை மீட்டுக் கொடுக்கவே இயேசு மனிதனாகப் பிறந்தார்.

இயேசு விண்ணிலிருந்து கொண்டு வந்த சமாதானத்தை பெற மனிதருக்கு என்ன தகுதி வேண்டும்?

நல்ல மனது.

ஆன்மீக வாழ்வின் அடிப்படை நல்ல மனது.

 புனிதர்கள் ஆன்மீக வாழ்வில் சாதனை படைத்தவர்கள்.

புனிதர்கள் புரிந்த சாதனைகளை எல்லோராலும் செய்ய முடியாமல் போகலாம்.

சாதனை புரிய ஆசைப்பட எல்லோராலும் முடியும்.

உண்மையிலேயே ஆசைப்பட வேண்டுமென்றால் நல்ல மனது இருக்க வேண்டும்.

நல்ல மனது இருந்தாலே இறைவனது சமாதானம் நமக்கு கிடைக்கும்.

நல்ல மனது உள்ளவர்கள் தங்களால் இயன்ற அளவு சாதனைகள் படைக்க முயற்சி செய்வார்கள்.

சாதனைகள் படைக்க முடியாவிட்டாலும் அவர்களுடைய நல்ல மனதிற்கு இறைவன் சன்மானம் அளிப்பார்.

இடையர்களிடம் நல்ல மனது இருந்தது.

அவர்களது நல்ல மனதுக்கு சன்மானமாக இறைவன் மனிதனாக பிறந்த செய்தி முதல் முதலில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

உலகப் பார்வையில் இடையர்கள் ஏழைகள்.

இரவில் அவர்களது வீடு வெட்டவெளிதான்!

அவர்களுடைய சொத்து ஆடுகளும், அவற்றின் மேல் உள்ள அன்பும்தான்.

ஆனால் ஆன்மீகப் பார்வையில், அவர்களது நல்ல மனதின் காரணமாக,

இப்பிரபஞ்சத்தின் உரிமையாளருக்கு நெருக்கமானவர்கள்.

ஆன்மீகத்தின் மிகப் பெரிய சொத்து நல்ல மனதுதான்.


Switch ஐப் போட்டால் தான் light எரியும்.

நலல மனது இருந்தால்தான் ஆன்மீக வாழ்வை ஆரம்பிக்கவே முடியும்.

ஆன்மீகம் என்ற light எரிய வேண்டுமென்றால், நல்ல மனது என்ற Switch ஐப் போடவேண்டும்.


நல்ல மனதுடன் என்ன செய்தாலும் இறைவனுக்குப் பிடித்ததாகத்தான் இருக்கும்.

நல்ல மனது இல்லாமல் கோடிகோடியாய் அள்ளி தர்மம் செய்தாலும், இறைவன் முன் அதற்கு மதிப்பே இல்லை.

நல்ல மனதுடன் ஒரு ஏழைச் சிறுவனுக்கு தாகம் தணிக்கக் கொடுக்கப்படும் ஒரு தம்ளர் தண்ணீருக்கு உள்ள மதிப்பு,


சுய விளம்பரத்துக்காக கோடிக்கணக்காய் செலவழித்து ஊருக்கே ஒரு பெரிய ஆலயம் கட்டிக் கொடுப்பவனின் செயலுக்கு இல்லை.

இறைவனின் சன்மானம் செயலுக்காக இல்லை, அதற்குக் காரணமான மனதுக்காகத்தான்.

நன்மனது + செயல் = நற்செயல்

நமக்கு நல்ல மனது இருந்தால்,

 இடையர்களுக்குத் தன்னைத் தெரியப் படுத்தியது போல,

இறைவன் நமக்கு தனது சித்தத்தைத் தெரிவித்துக் கொண்டேயிருப்பார்.   

நாம் அதைச் செயல் படுத்திக்கொண்டே யிருக்கலாம்.

இடையர்கள் உடனே செயல்பட்டது போல நாமும் செயல்பட வேண்டும்.

வரமாக நல்ல மனது வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.

நல்ல மனது கிடைத்துவிட்டால் விண்ணகமே கிடைத்தது போல் தான்.

நல்ல மனது என்று செடியிலிருந்துதான்
சமாதானம் என்ற மலர் மலரும்.

நல்ல மனது நமக்கு இருந்தால்

 இடையர்கள் தங்களது ஆடுகளின் பாதுகாப்பிற்காக தங்களையே தியாகம் செய்து வாழ்ந்தது போல,

 இறைமகன் இயேசு ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக தன்னையே தியாகம் செய்தது போல,
 
நாமும் நம்மைப் படைத்த இறைவனுக்காக நம்மையே தியாகம் செய்வோம்.

லூர்து செல்வம்.