Thursday, August 18, 2022

"உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."(மத்.22:39)(தொடர்ச்சி)

"உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."(மத்.22:39)
(தொடர்ச்சி)

"தாத்தா, புனிதர்களும், மற்ற மோட்சவாசிகளும் விண்ணகத்தில் வாழ்கின்றார்கள்.

நாம் மண்ணகத்தில் வாழ்கிறோம்.

விண்ணகம் எங்கே இருக்கிறது?"

", உனது கேள்வியே தவறு."

"வேறு எப்படி கேட்க வேண்டும்?"

",நீ பூமியில் வாழும் மனிதர்கள் பேசும் மொழியில் கேள்வி கேட்கிறாய்."

" தாத்தா நான் பூமியில் வாழும் மனிதன் தானே, என்னால் மனித மொழியில் தானே கேள்வி கேட்க முடியும்.''

",அது எனக்கும் தெரியும். உன்னால் மனித மொழியில் தான் கேள்வி கேட்க முடியும். என்னால் மனித மொழியில் தான் பதில் சொல்ல முடியும்.

கணித ஆசிரியர் கணித பாடம் நடத்தும் போது கணிதம் தொடர்புடைய வார்த்தைகளைத் தான் பயன்படுத்துவார், 

அறிவியல் ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்தும் போது அறிவியல் தொடர்புடைய வார்த்தைகளைத் தான் பயன்படுத்துவார், 

தமிழ் ஆசிரியர் தமிழ்ப் பாடம் நடத்தும் போது இலக்கியத் தொடர்புடைய வார்த்தைகளைத் தான் பயன்படுத்துவார்."

" தாத்தா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அதோடு சம்பந்தம் இல்லாத வார்த்தைகளை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்."

",சம்பந்தம் இருக்கிறது என்பது இப்போது புரியும்.

மனித மொழி பேசும் நாம் எது சம்பந்தமான வார்த்தைகளை பயன்படுத்துவோம்?"

"மனித அனுபவத்திற்குள் வரும் வார்த்தைகளை பயன்படுத்துவோம்."

",நீ 'விண்ணகம் எங்கே இருக்கிறது?' என்று கேட்டாய்.

எங்கே என்ற வினாவிற்கு எது விடையாக வர வேண்டும்?" 

"ஏதாவது ஒரு இடம் விடையாக வர வேண்டும்."

",ஆனால் விண்ணகம் ஒரு இடம் அல்ல. அதைப் பற்றிய கேள்விக்கு 
இடம் தொடர்புடைய வினாச் சொல்லை பயன்படுத்தக்கூடாது."

"வேறு எந்த வினாச்சொல்லை பயன்படுத்த வேண்டும்?"

",முதலில் விண்ணகத்தைப் பற்றி சொல்கிறேன், மனித மொழியில் தான் சொல்கிறேன், வேறு வழி இல்லை.

 ஆனால் புரிந்து கொள்ள வேண்டிய விதமாய் புரிந்து கொள்ள வேண்டும்.

விண்ணகம், அதாவது, மோட்சம் ஒரு வாழ்க்கை நிலை. (State of life) அதற்கு இடமும் இல்லை, நேரமும் இல்லை.

எங்கே, எப்போது எந்த வினாச் சொற்களுக்கு அங்கு இடமில்லை.

நேரம் இல்லாததால் அது தொடர்புடைய   வார்த்தைகள்  பயன்படுத்தப்படுவதில்லை,    

 நாம் மனித மொழியில் பேசுவதால் அவற்றைப் பயன்படுத்த நேர்ந்தாலும் புரிந்து கொள்ள வேண்டிய விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
 
மனித கணக்குபடி இயேசுவோடு சிலுவையில் தொங்கிய நல்ல கள்ளன் விண்ணகம் சென்று 1,989 ஆண்டுகள் ஆகின்றன.

சென்று என்ற வார்த்தையை வேறு வழியில்லாமல் பயன்படுத்துகிறோம். ஏனெனில் மனித மொழியில் இடத்திற்குத்தான் செல்ல முடியும்.

இன்று ஒருவன் மரித்து விண்ணகம் சென்றால் மனித கணக்குபடி நல்ல கள்ளன் சென்று 
1,989 ஆண்டுகள் கழித்து செல்வான்.

ஆனால் விண்ணகத்தில் இருவருக்கும் மத்தியில் நேர இடைவெளியே கிடையாது. ஏனென்றால் அங்கு நேரம் இல்லை.

அங்கு இருப்பது நித்தியம்.

உலகத்தில் உள்ள காலத்தை ஒரு நேர்கோடாக எடுத்துக் கொண்டால், நித்தியம் ஒரு புள்ளி மட்டுமே."

"தாத்தா, விண்ணக அனுபவத்தை மனித மொழியால் விவரிக்க முடியாது. ஆனாலும் வேறு வழி இல்லாமல் மனித மொழியால் தான் விவரிக்கிறோம். புரிந்து கொள்ள வேண்டிய விதமாய் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு உதாரணம் கூறுங்கள்."


", இயேசு 'வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.'

என்று கூறுகிறோம்.

ஆனால் விண்ணகத்தில் வலது பக்கம், இடது பக்கம் எதுவும் கிடையாது.

'இயேசு தனது தந்தைக்கு நிகரான வல்லமையில் இருக்கிறார்' என்று புரிந்து கொள்ள வேண்டும்.

உலகம் சட பொருட்களால் ஆனது. மனித உடலே ஒரு சடப் பொருள்தான்.

சடப் பொருளுக்குதான் வலது, இடது பக்கங்கள் உண்டு.

ஆவிக்கு பக்கங்கள் இல்லை

கடவுள் ஒரு ஆவி.

புனிதர்களும் மற்ற மோட்ச வாசிகளும் விண்ணகத்தில் இருக்கிறார்கள் என்றால் விண்ணக பேரின்ப நிலையை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பொருள்."

"கடவுள் எங்கும் இருக்கிறார் என்று கூறுகிறோம்?"

",கடவுள் எங்கும் நம்மைப் போல இடத்தை அடைத்துக் கொண்டிருக்கவில்லை.

தன்னுடைய ஞானத்தாலும், காரணத்தாலும், வல்லமையாகும், அன்பினாலும் எங்கும் இருக்கிறார்.

இப் பிரபஞ்சத்தை முழுவதும், ஒவ்வொரு அணுவையும், படைத்து பராமரித்து வருபவர் அவரே.

அனைத்துக்கும் ஆதி காரணர் அவரே.

அனைத்துக்கும் ஆதி காரணராகவும்,
அனைத்தையும் அறிந்தவராகவும், அனைத்தையும் பராமரிப்பவராகவும் இருப்பதால் அவரை எங்கும் இருக்கிறார் என்கிறோம்."

"கடவுள் எங்கும் இருக்கிறார். ஆனால் மற்ற மோட்ச வாசிகள்? அவர்கள் மனிதர்கள்தானே?

ஒரே நேரத்தில் இந்தியாவில் இருப்பவர்களும் புனித அந்தோனியாரை நோக்கி வேண்டுகிறார்கள்.

அமெரிக்காவில் இருப்பவர்களும் அவரை நோக்கி வேண்டுகிறார்கள்.

உலகமெங்கும் இருப்பவர்களும்
அவரை நோக்கி வேண்டுகிறார்கள்.

எல்லோருடைய வேண்டுதல்களையும் அவர் கேட்கிறார்.

எல்லோருக்காகவும் ஒரே நேரத்தில் இறைவனிடம் வேண்டுகிறார்.

இது எப்படி முடிகிறது?"

", இதற்காகத்தான் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்,

உலகில் வாழும் நமக்குதான் இடமும், நேரமும்.

விண்ணகத்தில் இடமும் இல்லை, நேரமும் இல்லை. ஆகவே அவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை.

மனித மொழியில் கூறுகிறேன்,

யார் உலகில் எங்கிருந்து ஒரு விண்ணக வாசியுடன் பேசினாலும் அவர்கள் பேச்சை அவர் கேட்பார். இடப் பிரச்சனை அவருக்கு இல்லை.

அதுமட்டுமல்ல விண்ணக வாசிகள் கடவுளோடு இணைந்து இருக்கிறார்கள்.

ஆகவே அவர்களுக்கு நாம் அனுப்பும் செய்தி கடவுள் வழியாகத்தான்  செல்லும்.

கடவுளுக்குத் தெரியாமல் நாம் எதுவும் செய்ய முடியாது.

உலகில் நமது அனுபவத்தை விண்ணக வாசிகளோடு ஒப்பிடக் கூடாது.

உலகில் நண்பர் ஒருவருக்கு செய்தி அனுப்பினால் அது போக நேரம் ஆகும்.

விண்ணகத்தில் நேரம் கிடையாது.

"அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்று நாம் நினைக்கும் போதே நமது செபம் அவருக்குச் சென்று விடும். 

நாம் சப்தமாக வார்த்தைகளை பயன்படுத்தி செபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மனதால் நினைத்தாலே போதும்.

நினைக்கும் போதே யாரை நோக்கி வேண்டுகிறோமோ அவரிடம் வேண்டுதல் சேர்ந்து விடும். 

வார்த்தைகளும், சப்தமான குரலும் நமது திருப்திக்காகத்தான்.

பரிமாறப்படுவது எண்ணங்களே, மொழி அல்ல."

"அப்படியானால் நமது செபத்திற்கு வல்லமை கொடுப்பது நாம்தான் என்று சொல்லுங்கள்."

", நானென்ன சொல்வது, இயேசுவே சொல்லியிருக்கிறார்.

நோயாளியைக் குணமாக்கிய ஒவ்வொரு முறையும்

'உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று'

என்று சொல்வதே அவர் வழக்கம்.

விசுவாசத்தோடு சொல்லப்படும் செபம் தான் வல்லமை உள்ள செபம்.

விசுவாசம் இருக்க வேண்டியது செபிக்கும் நம்மிடம்தான்.

விசுவாசத்தின் அளவுக்கு ஏற்ப செபத்தின் வல்லமை கூடும் அல்லது குறையும்.

உறுதியான விசுவாசத்துடனும், கேட்பது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் சொல்லும் செபம்தான் வல்லமை உள்ளது.

விசுவாசம் இல்லாமல், மனதில் வேறு எதையோ நினைத்துக் கொண்டு யாரோ எழுதிய செப வார்த்தைகளைச் சப்தமாகச் சொன்னால், அது செபம் அல்ல

செபம் உள்ளத்திலிருந்து வரவேண்டும், உதட்டிலிருந்து மட்டுமல்ல.

உள்ளங்கள் பேசுவதுதான் உண்மையான செபம்.

மனதை ஒருநிலைப்படுத்தாமல் செபிக்க முடியாது

வாயைத் திறக்காமல் செபத்தை மனதில் நினைத்துக் கொண்டிருந்தாலே போதும்.

உள்ளங்கள் பேச ஆரம்பித்து விடும்.

நீண்ட செபங்களை விட ஒரே வாக்கியத்தில் முடியும் மனவல்லப செபங்களுக்கு வல்லமை அதிகம்.

இயேசுவே இரட்சியும்.

இயேசுவே இரக்கமாயிரும்.

மரியே வாழ்க.

சேசு, மரி, சூசை துணை.

புனித அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

காவல் சம்மனசே எனக்குத் துணையாக இரும்.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால், ஆமென்.

இது போன்ற சிறு செபங்களை மனதிற்குள் சொல்லிக் கொண்டேயிருக்கலாம்.

நீண்ட செபங்களை விட இவற்றுக்கு வல்லமை அதிகம்.

கடவுளை நோக்கியும், வின்ணக வாசிகளை நோக்கியும் நாம் செய்யும் செபம் நாம் எப்போதும் விண்ணக நினைவாகவே இருக்க உதவும்.

நமது விண்ணக பயணத்தில் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

புனிதர்களோடு நமக்குள்ள உறவு நம்மையும் புனிதர்களாக வாழ உதவும்.

புனிதர்களோடு செப உறவில் இணைவோம்.

புனிதத்தோடு வாழ்ந்து, புனிதர்களோடு நாமும் நிலை வாழ்வில் இறைவனோடு இணைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment