Tuesday, August 16, 2022

அவர்களுக்கும் தலைக்கொரு வெள்ளிக்காசுதான் கிடைத்தது".(மத்.20:10)

"அவர்களுக்கும் தலைக்கொரு வெள்ளிக்காசுதான் கிடைத்தது".(மத்.20:10)

"தாத்தா, திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்திய உவமையில்

வேலை செய்தவர்கள் செய்த வேலையின் அளவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் சமமாக கூலி கொடுக்கப்பட்டதாக ஆண்டவர் கூறுவதோடு,

விண்ணரசு கூலி கொடுத்த வீட்டுத்தலைவனுக்கு ஒப்பாயிருப்பதாக ஆண்டவர் கூறுகிறாரே,

விண்ணரசில் நாம் உலகில் வாழ்ந்த வாழ்விற்கு.ஏற்ற பலன் கிடைக்காதா?

புனிதர்களுக்கும், சாதாரணமானவர்களுக்கும் சமமான பேரின்பம்தான் கிடைக்குமா?"

"Hello my dear man, ஒவ்வொரு உவமையும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்தும்.

அதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

காலை ஒன்பது மணி, 
பகல் பன்னிரண்டு மணி,
 பிற்பகல் மூன்று மணி,
மாலை ஐந்து மணி
ஆகிய வித்தியாசமான நேரங்களில் வேலையில் சேருகின்றார்கள்.

ஆரம்பத்திலிருந்து வேலை செய்தவர்களை விட கடைசியில் வேலையில் சேர்ந்தவர்கள் செய்த பணி மிகவும் குறைவு.

ஆயினும் தோட்ட உரிமையாளர் எல்லோருக்கும் முதலில் பணியில் சேர்ந்தவர்களுக்கு அளித்த கூலியையே கொடுக்கிறார். 

ஆண்டவர் அப்போஸ்தலர்களிடம்

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்," என்று கூறியிருந்தார்.

ஆண்டவர் கூறியபடி அப்போஸ்தலர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று நற்செய்தி அறிவித்தார்கள்.

அவர்களின் வாரிசுகளாகிய நம்முடைய குருக்களும் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவர்களுக்கு ஆண்டவர் வாக்களித்த சன்மானம் எது?"

"மீட்பு."

",ஒருவன் பிறந்த உடனேயே ஞானஸ்நானம் பெற்று அவன் வாழ்கின்ற நூறு ஆண்டுகளும் நல்ல கிறிஸ்தவ வாழ்வு வாழ்கின்றான்.

பிற சமய குடும்பத்தில் பிறந்த ஒருவன் அவனது இருபதாவது வயதில் மனம் திரும்பி ஞானஸ்நானம் பெற்று மரணம் வரை நல்ல கிறிஸ்தவ வாழ்வு வாழ்கின்றான்.

இன்னொருவன் தனது எண்பதாவது வயது வரை பாவ வாழ்க்கையே வாழ்ந்து சாகும் தருணத்தில் மனம் திரும்பி ஞானஸ்நானம் பெற்று மரிக்கிறான்.

இம்மூவருக்கும் ஆண்டவர் அளிக்கும் சன்மானம் என்ன?"

"மீட்பு."

",அதாவது நூறு ஆண்டுகள் கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்தவனுக்கும், 

இருபதாவது வயதிலிருந்து கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்தவனுக்கும், 

கடைசி ஒரு சில நிமிடங்கள் மட்டும் கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்தவனுக்கும்

ஆண்டவர் அளிப்பது ஒரே சன்மானம்தான், மீட்பு.

எத்தனை ஆண்டுகள் ஒருவன் கிறிஸ்தவனாக வாழ்ந்தான் என்பதை அல்ல 

மரிக்கும்போது எந்த நிலையில் இருந்தாள் என்பதையே ஆண்டவர் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்.

திராட்சைத் தோட்ட உரிமையாளர் 
அவரது தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு வாக்களித்த கூலி ஒரு வெள்ளிக் காசு.

அதையே வேலை செய்தவர்கள் அனைவருக்கும் தான் வாக்களித்தபடி கூலியாகக் கொடுக்கிறார்.

நற்செய்தியை விசுவசித்து ஞானஸ்நான வாழ்வு வாழ்பவர்களுக்கு ஆண்டவர் வாக்களிக்கும் சன்மானம் மீட்பு.

இறுதி வரை ஞானஸ்நான வாழ்வு வாழ்பவர்கள் அனைவருக்கும்,

( வாழ்ந்த கால அளவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல்)

மீட்பு அளிக்கிறார்.

ஒருவன் நமது கண் முன்னாலேயே வாழ்வின் இறுதிவரை பாவியாகவே வாழ்ந்து மரிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

அவன் அவன் மோட்சத்திற்குச் செல்வானா? நரகத்திற்கு செல்வானா?

திராட்சை தோட்ட உவமை அடிப்படையில் உனது பதில் இருக்க வேண்டும்."

" திராட்சை தோட்ட உவமை அடிப்படையில் சொல்வதானால்

தெரியாது என்று தான் சொல்ல வேண்டும்."

", ஏன்?''

"நம் கண் முன்னால் அவன் வாழ்ந்தது பாவ வாழ்வு.

அவன் நமது கண் முன்னாலே மரிக்கலாம். ஆனால் அவனது மனதில் ஓடிய எண்ணங்கள் நமது கண்ணுக்கு தெரியாது. அவன்  மரணம் அடைந்து கொண்டிருக்கும் போது, கடைசி வினாடியில்  தன் வாழ்நாளில் செய்த பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டிருக்கலாம். 

மனஸ்தாபப்பட்டிருந்தால் அவன் கட்டாயம் மோட்சத்திற்குத்தான் போவான்.

மனஸ்தாபப்படாதிருந்தால் நரகத்துக்குப் போவான்.

 அவன் மனஸ்தாபப்பட்டானா, இல்லையா என்பது நமக்கு தெரியாது.

ஆகவே உங்களது கேள்விக்கு எனக்குப் பதிலும் தெரியாது."

", Very good. நீ உவமையை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்.

நாம் மனம் திரும்புவதற்கு கால வரையறையே கிடையாது.

புனித அகுஸ்தினார் தனது முப்பதாவது வயதில்தான் மனம் திரும்பினார்.

மரணம் அடையும் போது கூட மனம் திரும்பலாம்.

நமது ஆண்டவர் அளவு கடந்த இரக்கம் உள்ளவர்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment