Wednesday, August 17, 2022

"உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."(மத்.22:39)

"உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."(மத்.22:39)

''தாத்தா, கடவுளையும், அயலானையும் நேசிக்க வேண்டும் என்று நமக்கு கட்டளை கொடுத்த இயேசு, நம்மை நாமே நேசிக்க வேண்டும் என்று தனியாக ஏன் கட்டளை கொடுக்கவில்லை?" 

",நம்மை நாமே நேசிப்பது நமது இயல்பு.(Nature)

கடவுள் தன்னைத் தானே நேசிப்பது போல அவரது சாயலில் படைக்கப்பட்ட நாம் நம்மையே நேசிக்கிறோம்.

உலகில் பிறந்த நாம் வாழ வேண்டும் என்று ஆசிப்பதே நம்மை நாமே நேசிப்பதன் விளைவுதான்."

 "கடவுள் தன்னைத்தானே நேசிப்பதும் நம்மை நேசிப்பதும் அவரது  இயல்புதானே. 

அதே இயல்பை அவரது சாயலில் படைக்கப்பட்ட  நமக்கும் இயல்பாக தந்திருக்கலாமே. 

அப்படித் தந்திருந்தால் நாம் அவரை நேசிக்கவும் பிறரை நேசிக்கவும் தனியாக கட்டளைகள் கொடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே, அதை ஏன் கடவுள் செய்யவில்லை?"

",கடவுள் சுதந்திரம் என்ற அவரது இயல்பை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இறையன்பையும், பிறர் அன்பையும் நம்முடைய இயல்பாகிவிட்டால் நமக்கு தந்திருக்கும் சுதந்திரத்திற்கு அர்த்தமே இல்லாமல் போய் விட்டிருக்கும்.

யாரை நேசிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க கடவுள் நமக்கு முழு சுதந்திரத்தை தந்திருக்கிறார்.

அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி நாம் இறைவனையும், நமது பிறரையும் நேசிக்க வேண்டும்.

அதற்காகத்தான் கடவுள் அவரையும், பிறனையும் நேசிக்க வேண்டும் என்று கட்டளைகள் தந்திருக்கிறார்.

கட்டளைகளை அனுசரிக்கவும் அனுசரியாதிருக்கவும் நமக்கு முழுமையான சுதந்திரம் இருக்கிறது. 

அனுசரிப்பவர்களுக்கு நிலையான விண்ணக பேரின்ப வாழ்வு காத்துக் கொண்டிருக்கிறது.

விண்ணக பேரின்ப வாழ்வை நாம் முயற்சி செய்து ஈட்ட வேண்டும். நமது முயற்சிக்கு வேண்டிய அருள் உதவிகளை கடவுள் செய்வார்.

விண்ணக பேரின்ப வாழ்வை ஈட்ட நமக்கு சுதந்திரம் தந்திருக்காவிட்டால் நாம் சாவி கொடுக்கப்பட்டு இயங்கும் பொம்மைகளாக மாறிவிடுவோம்.

நமக்கும், இயற்கை விதிகளின்படி இயங்கும் சடப் பொருட்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்."

"தாத்தா, சுதந்திரம் இருப்பதினால்தானே பாவம் செய்கிறோம்.

நாம் பாவம் செய்ததால்தானே நம்மை மீட்க கடவுள் மனிதனாய்ப் பிறந்து, பாடுகள் பட்டு சிலுவையில் மரிக்க வேண்டியிருந்தது.

நமக்கு சுதந்திரம் இருந்திருக்காவிட்டால் நம்மால் பாவம் செய்ய முடிந்திருக்காது,

கடவுளுக்கும் பாடுகள் படவேண்டிய அவசியம் இருந்திருக்காது."

", இங்கே பார் பேரப்புள்ள, கடவுளுக்கு சிந்திக்க, செயல்பட முழு சுதந்திரம் இருக்கிறது.

அதைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.

அவரால் படைக்கப்பட்ட நாம் அவர் சொல்கிறபடி செயல்பட வேண்டும். அவ்வளவுதான்."

"சரி, தாத்தா, இனிமேல் கடவுளைப் பற்றி ஏன் என்று கேள்வி கேட்க மாட்டேன்.

நம்மை நாம் நேசிப்பதுபோல பிறனையும்  நேசிக்க வேண்டும் என்ற கட்டளை  நமக்கு மட்டுமா, அல்லது ....?"

",மனிதர்களாய்ப் பிறந்த அனைவருக்கும்."

"இறந்து போட்சத்துக்குச் சென்று விட்டவர்களுக்குமா?"

'', கட்டளைப்படி நடக்கிறவர்கள் மட்டும் தான் மோட்சத்திற்குப் மோட்சத்துக்குப் போவார்கள்.

மோட்சத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை எதுவும் தேவை இல்லை.

 இறைவனையும், நம்மையும் நேசிப்பது மட்டுமே அவர்கள் வேலை.

நாமும் அவர்களை நேசிக்க வேண்டும்.

உலகில் நாம் நமது பிறனிடம் உதவி கேட்பதுபோல விண்ணக வாசிகளிடமும் உதவி கேட்கலாம்."

"தாத்தா, நம்மிடம் அன்பு அதிகமாக இருந்தால் நம்மிடம் உதவி கேட்காதவர்களுக்கும் நாமே சென்று உதவுவது போல் விண்ணகவாசிகளும் நாம் கேட்காமலேயே நமக்கு உதவலாம் அல்லவா?"

",நிச்சயமாக. அவர்கள் எப்போதும் நமக்கு தங்களது செபத்தின் மூலம் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அன்னை மரியாள் திருச்சபையின் தாய்.

 அவளுடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருக்காகவும் அவள் தன் திரு மகனிடம் பரிந்து பேசிக்கொண்டு தான் இருக்கிறாள்.

ஒவ்வொரு புனிதரும் அதையே செய்கிறார்கள்.

 புனிதர் பட்டம் பெறாத நமது உறவினர்களும் விண்ணகத்தில் நமக்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பூமியில் நம்மைப் பெற்று கண்ணும் கருத்துமாக வளர்த்த நமது தாயும்,

நம்மோடு உயிருக்கு உயிராய் வாழ்ந்த நமது சகோதர, சகோதரிகளும்,

மற்ற உறவினர்களும் 
 விண்ணகத்திற்குச் சென்றபின் நம்மை மறப்பார்களா?

நமக்காக இறைவனிடம் பரிந்து பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

நாம்தான் அதைப்பற்றி எண்ணுவதில்லை."

"உங்களுடைய உறவினர்களுள் யாராவது உங்களுக்கு நேரடியாக விண்ணிலிருந்து உதவி செய்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?"

",மறக்க முடியாத அனுபவம் ஒன்று இருக்கிறது. 

ஒருமுறை சுகம் இல்லாத எனது தம்பியை (அமலோற்பவம்) தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம்.

இரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான்.

அரசு மருத்துவர் எவ்வளவோ முயன்றும் அவனை குணமாக்க முடியவில்லை.

அவர் எங்களிடம், "நாங்கள் கொடுக்க வேண்டிய மருந்து எல்லாம் கொடுத்து விட்டோம்.

இதற்கு மேல் எங்களால் முடியாது.

நீங்கள் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுங்கள்." என்றார்.

நான்: ''டாக்டர், நீங்கள் இதுவரை கொடுக்காத வேறு ஏதாவது மருந்து இருந்தால் ஒரு முறை கொடுத்துப் பாருங்கள். அதற்கும் வாந்தி கட்டுப்படாவிட்டால் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறோம்."

"ஒரு மருந்து இருக்கிறது. ஆனால் அதை உற்பத்தி செய்யும் கம்பெனி இப்போது இல்லை. ஆகவே அந்த மருந்து எங்கும் கிடைக்காது. நீங்கள் விரும்பினால் மருந்தின் பெயரை எழுதி தருகிறேன், வாங்கித் வந்தால் கொடுத்து பார்க்கிறேன்."

மருந்தின் பெயரை எழுதித் தந்தார். கிடைத்தால் ஐந்து மாத்திரைகள் வாங்கி வர சொன்னார்.

நான் மருந்து வாங்க செல்லும் போதே எங்களை பெற்ற தாயிடம் வேண்டிக் கொண்டே சென்றேன்.

"அம்மா உங்களது மகன் சாகும் தருவாயில் இருக்கிறான். ஏதாவது புதுமை செய்தாவது அவனை காப்பாற்ற வேண்டியது உங்களது பொறுப்பு. இறைவனிடம் மன்றாடுங்கள். நான் வாங்க செல்கிற மருந்து கிடைக்க வேண்டும். உங்கள் மகன் குணமாக வேண்டும். குணம் ஆனபின் நன்றியாக உங்களது கல்லறையில் எனது தலைமுடி எடுத்து விடுவேன்." என்று நேர்ச்சை செய்து கொண்டே சென்றேன். 

பிரேமா மெடிக்கல் ஸ்டோரில்தான் நான் மறந்து வாங்குவது வழக்கம்.

நான் கடைக்குச் சென்ற போது மருந்து கடைக்காரர் மதிய உணவிற்காக கடையைப் பூட்டிவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்.

அவரிடம் மருந்து சீட்டைக் காட்டினேன்.

"இந்த மருந்து ஒரு காலத்தில் இருந்தது. இப்போது இல்லை. உங்களுக்காக ஒரு முறை தேடி பார்க்கிறேன்" என்று கூறி கடையை திறந்தார்.

நேராக சென்று ஒரு இடத்தில் கையை வைத்தார். ஆச்சரியத்தோடு என்னை திரும்பி பார்த்தார்.

"சார், கடவுள் உங்களோடு இருக்கிறார். இன்று காலை வரை இங்கு இல்லாத மருந்து இங்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை." என்று கூறிக்கொண்டு மருந்தை கையில் எடுத்தார்.

சரியாக ஐந்து மாத்திரைகள் தான் இருந்தன.

"நம்பிக்கையோடு செல்லுங்கள். இது கடவுள் செயல்."  என்று கூறிக்கொண்டே  மருந்தை என் கையில் தந்தார்.

நான் அதை நன்றியோடு வாங்கிக்கொண்டு,  வேகமாக மருத்துவமனைக்குச் சென்று டாக்டரிடம்  கொடுத்தேன்.

டாக்டருக்கு ஒரே ஆச்சரியம்.

" இதன் கம்பெனியை மூடி ஒரு ஆண்டு ஆகிறது. இப்போது இது கிடைத்திருப்பது கடவுள் அருளால்தான்." என்று கூறிக்கொண்டு தம்பிக்கு உடனே ஒரு மாத்திரை கொடுத்தார்.

அதை சாப்பிட்டவுடன் தூங்கிவிட்டான்.

இரத்த வாந்தி அதன் மேல் எடுக்கவே இல்லை.

இரவில் ஒரு மாத்திரை கொடுத்தார்.

டாக்டருக்கு அதிசயத்தின் மேல் அதிசயம்.

"கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். இன்று ஒரு நாள் மருத்துவமனையில் இருக்கட்டும். நாளை காலையில் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்."

இறைவனுக்கு நன்றி கூறியதோடு

 எங்களுக்காக  இந்த உதவியை பெற்றுத் தந்த என்னுடைய அம்மாவுக்கும் நன்றி கூறினேன்.

சில நாட்கள் கழித்து நான் வாக்குக் கொடுத்தபடி எனது அம்மாவின் கல்லறைக்கு சென்று முடியை எடுத்துக் கொண்டேன்.'

"தாத்தா, எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. நமக்காக வேண்ட புனிதர் பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது புரிகிறது. நமக்கு வேண்டியது விசுவாசம்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment