Friday, August 1, 2025

அவரன்றி அணுவும் அசையாது.



அவரன்றி அணுவும் அசையாது.


Do your best and leave the rest to God என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு.

உன்னால் இயன்றதைச் செய், மீதியைக் கடவுளிடம் விட்டு விடு என்பது இதன் பொருள்.

இது மனிதனுடைய கூற்று.

ஆனால் இறைவன் என்ன சொல்கிறார்?

உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை; அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய். 
(பழமொழி ஆகமம்.16:3)

உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். 
(1 பேதுரு. 5:7)

மனிதன் "உன்னால் இயன்றதைச் செய், மீதியை இறைவனிடம் விட்டு விடு என்கிறான்.

ஆனால் கடவுள் "உனது எல்லாக் கவலைகளையும் என்னிடம் விட்டு விடு.

நான் உன்னை வாழ வைப்பேன்" என்கிறார்.

நாம் நமது முயற்சியால் உலகுக்கு வந்தோமா?

கடவுளால் வந்தோமா?

 நாம்  வரும் முன் Zero முயற்சி என்று கூட சிந்திக்கக்  நாம் இல்லை.

We were absolutely nothing before our coming into this world.

நாம் உலகுக்குள் வருவதற்கு முழு முதற் காரணம் கடவுள் மட்டுமே.

இப்போதும் சுயமாக நம்மால் எதுவுமே இயலாது, மூச்சு விடக்கூட முடியாது.

நமது உடல் இலட்சக்கணக்கான அணுக்களின் கணம்.

Our body is nothing but a set of countless atoms.

கடவுளின் உதவியின்றி நம் உடலால் அசையக்கூட முடியாது, உள்ளத்தால் சிந்திக்கவும் முடியாது.

அவரன்றி அணுவும் அசையாது.

நம்மால் ஒன்று செய்ய முடியும், நம்மால் நம்மை முழுவதும் கடவுளிடம் ஒப்படைத்து விட முடியும்.

"ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார்."
(திருப்பாடல்கள்.55:22)

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படி எனக்கு ஆகட்டும்'' 

என்ற அன்னை மரியாளின் வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இதுதான்.

அடிமையால் சுயமாக
 ஒன்றும் செய்ய முடியாது, முதலாளியின் கட்டளைப்படி நடப்பது மட்டும் தான் அவன் வேலை.

அதுதான் அவன் வாழ்வின் இலட்சியம்.

மரியாள் தனது சுயத்தை முழுவதும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டாள்.

அவளது ஒவ்வொரு அசைவும் கடவுள் விருப்பப்படி தான் நடந்தது.

எந்த தாயாவது சுயமாகத் தன் மகனைச் சிலுவையில் அறைந்து கொல்ல விடுவாளா?

மரியாள் விட்டாள், ஏனெனில் அது இறைவனின் சித்தம்.

நாம் நம்மை மரியாள் பக்தர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம்.

உண்மையான பக்தன் மாதாவின் அத்தனை குணங்களையும் தான் கொண்டிருக்க வேண்டும்.

நாம் உண்மையான ஆன்மீக வாழ்வு வாழ நம்மை முழுவதும் அடிமையாக இறைவனிடம் ஒப்படைத்து விட்டு அவர் சொற்படி மட்டும் வாழ வேண்டும்.

இயேசு நமக்கு முன் மாதிரிகை காட்டினார்.

தனது தந்தையின் சித்தப்படி நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்தார்.

அவருடைய சீடர்கள் அவருடைய முன்மாதிரிகைப் படி அவருக்காக தங்கள் உயிரைக் கொடுத்து வேத சாட்சிகளாக மரித்தார்கள்.

நாமும் நம்மை முழுவதும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டால் ஒவ்வொரு வினாடியும் அவருடைய விருப்பப்படி நடப்போம், அவர் நம்மை நடத்துவார்.

அவருடைய விருப்பம் எதுவாக இருந்தாலும் அதுதான் நமது வாழ்க்கை.

மரணமாக இருந்தால்?

இவ்வுலகில் மரணம் தான் மறு உலகில் நித்திய வாழ்வு.

தனது மரணத்தால் நமது மரணத்தை வென்றவர் இயேசு.  

ஆன்மீக வாழ்வு வாழ 
அவருடைய உதவியால் முயற்சி செய்வோம்,

அவருடைய உதவியால் முயற்சியில் வெற்றி பெறுவோம்.

"வாழ்வது நாம் அல்ல, நம்மில் அவர் வாழ்வார்.''

நாம் எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறோம்?

சோதனைகள் நிறைந்த உலகில்.

வேதனைகள் நிறைந்த உலகில்.

ஆன்மீகத்துக்கு எதிரான கவர்ச்சிகள் நிறைந்த உலகில்.

யாரை விழுங்கலாம் என்று சாத்தான் சுற்றிக் கொண்டிருக்கும் உலகில்.

யாரைக் கெடுக்கலாம் என்று சாத்தானின் சீடர்கள் அலைந்து கொண்டிருக்கும் உலகில்.

இவர்களுக்கு இடையில் நாம் தனியாக நடந்தால் அவர்கள் விரிக்கும் வலையில் நாம் வீழ்ந்து விட வாய்ப்பு உண்டு. 

ஆனால் சர்வ வல்லப கடவுளின் கையை இறுகப் பற்றிக்கொண்டு நடந்தால்  நமக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது.

தாயின் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை எதற்கும் அஞ்சத் தேவையில்லை.

கடவுளின் கரங்களைப் பற்றி நடப்பவர்கள் எந்த சோதனையிலும் விழ மாட்டார்கள்.

எப்போதும் கடவுளுடைய பிரசன்னத்தில் வாழ்பவர்கள் நூறு சதவீதம் ஆன்மீக வாழ்வில் வெற்றி பெறுவார்கள்.

எப்போதும் கடவுளையே நினைத்து வாழ்பவர்களால் அவருக்கு எதிராக எதையும் நினைக்க முடியாது.

கடவுளால் நிறைந்த மனதில் கடவுளைப் பற்றிய சிந்தனைகள் தான் நிறைந்திருக்கும்.

 சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் பரிசுத்தர்களாக வாழ்வார்கள்.

இறைவன் அருளால் நமக்கு எல்லாம் முடியும்.

இறைவனை இறுக்கமாகப் பற்றிக் கொள்வோம்.

அவர் தான் நமக்கு நிலை வாழ்வு.

லூர்து செல்வம்.

Thursday, July 31, 2025

" அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.'(மத்தேயு நற்செய்தி 13:58)



"அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.'
(மத்தேயு நற்செய்தி 13:58)

இயேசு 30 ஆண்டுகள் நசரேத்தில் தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தது உலகிலிருந்து மறைந்த‌ வாழ்க்கை.

அவர் இறைமகன் என்று அன்னை மரியாளுக்கும் யோசேப்புக்கும் மட்டும் தான் தெரியும்.

நசரேத் மக்கள் அவரை யோசேப்பின் மகன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அதனால் தான் இயேசு பொது வாழ்க்கையின் போது நசரேத்துக்கு வந்த சமயத்தில் அங்கிருந்த மக்கள்

"இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?" (மத்.13:55) என்றார்கள்.

யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் அன்னை மரியாளின் தங்கை மரியாளின் மக்கள், அதாவது, அல்பேயுவின் மக்கள்.

அல்பேயுவுக்கு இன்னொரு பெயர் கிளேயோப்பா.

அதனால்தான் மரியாளின் தங்கையை கிளேயோப்பா மரியாள் என்றும் அழைக்கிறோம்.

கிளேயோப்பா இயேசு உயிர்த்த பின் எம்மாவுக்குச் சென்ற இருவரில் ஒருவர்.

இவர்களில் யாக்கோபும், யூதாவும் இயேசுவின் சீடர்கள்.

இவர்கள் நசரேத்தில் வாழ்ந்தபோது இயேசுவோடு பெரியம்மா மகன் என்ற முறையில் தான் பழகியிருந்திருக்க வேண்டும்.  

பொது வாழ்வுக்கு வந்த பின்பு இயேசு தான் யாரென்று வெளியிட்ட  பின் அவரோடு இறைமகன் என்ற முறையில் பழகினார்கள்.

பொது வாழ்வின் போது இயேசு நசரேத்துக்கு வந்த மக்கள் இயேசுவோடு இவர்களையும் பார்த்திருப்பார்கள்.

இயேசுவின் போதனையைக் கேட்டு வியப்பு அடைந்தாலும் மக்கள் அவரைத் தச்சனின் மகனாகத்தான் பார்த்தார்கள்.

அதாவது இயேசு இறைமகன் என்ற விசுவாசம் அவர்களுக்கு இல்லை.

இயேசு விசுவாசம்  உள்ளவர்களுக்கு மட்டும் புதுமைகள் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

தான் சிறுவயது முதல் வளர்ந்த ஊராக இருந்தாலும் அங்கு வாழ்ந்த மக்களின் விசுவாசமின்மை காரணமாக இயேசு அதிக புதுமைகள் செய்யவில்லை.

இயேசு தனது இந்த செயல் மூலமாக நமக்கு ஒரு பாடம் கற்பிக்கிறார்.

இறைவனிடம் எதைக் கேட்டாலும் விசுவாசத்தோடு கேட்க வேண்டும்.

விசுவாசத்தோடு என்றால்?

 நம்மைப் படைத்த இறைவன் சர்வ வல்லவர் என்பதையும்,

அவர்தான் நம்மை அன்புடன் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும்,

நமது உடல், உயிர் உட்பட நாம் சொந்தம் கொண்டாடும் அனைத்தும் அவருடையவை என்பதையும்,

நமது நல வாழ்வில் நம்மை விட கடவுளுக்கு அதிக அக்கறை இருக்கிறது என்பதையும்,

அவர் நமது தந்தை என்பதால் நாம் என்ன கேட்டாலும் நமக்கு நலன் பயப்பதாக இருந்தால் கட்டாயம் தருவார், கேடு விளைவிப்பதாக இருந்தால் தரமாட்டார், அதற்குப் பதில் நமக்குப் பயன்படுவதைத் தருவார் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கடவுள் மீது உறுதியான விசுவாசம் இருந்தால் நமக்கு வேண்டியதைக் கேட்டு விட்டு,

 தரும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிட்டு 

நமது கடமைகளை ஒழுங்காகச் செய்து கொண்டிருப்போம்.

கடவுள் என்ன செய்தாலும் நமது நன்மைக்குதான் செய்வார் என நாம் உறுதியாக நம்பினால், 

கடவுள் நாம் கேட்டதை தந்தாலும் அவருக்கு நன்றி கூறுவோம், 

தராவிட்டாலும் நன்றி கூறுவோம்,

கேளாததைத் தந்தாலும் நன்றி கூறுவோம்.

நம்மிடம் கடவுள் மீது உறுதியான விசுவாசம் இருந்தால் நமது ஆன்மீக வாழ்வுக்குக் கேடு விளைவிக்கும் எதையும் கேட்க மாட்டோம்.

கடவுளும் கேட்டதை தருவார்.

முதலில் விசுவசிப்போம்.
விசுவாசத்தோடு கேட்போம்.

கேட்டது கிடைக்கும் 

லூர்து செல்வம்

Wednesday, July 30, 2025

இறைவன் நம்மோடு பேசும் வழிகள்.



இறைவன் நம்மோடு பேசும் வழிகள்.

உலகினராகிய நாம் இருக்கிற பொருட்களைப்
 பயன்படுத்தி புதிய பொருட்களை உருவாக்குகிறோம்.

ஆனால் நித்திய காலமும் சுயமாக வாழும் சர்வ வல்லப கடவுள் ஒன்றுமில்லாமையில் இருந்து நாம் வாழும் பிரபஞ்சத்தைப் படைத்தார்.

மனிதனைப் படைத்த கடவுள் அவன் எப்படி வாழ வேண்டும் என்று வழி காட்ட அவனுள் மனசாட்சியை ஏற்படுத்தினார்.

மனசாட்சி மூலம் மனிதன் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது என்பதற்கான வழியைக் காட்டினார்.

முதலில் மனிதனுடைய மனசாட்சி மூலம்

அதாவது உள்ளுணர்வு மூலம் பேசினார்.

தனக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியதைச் செய்ததால் மனிதன் பாவம் செய்தான்.

அவனைப் பாவத்திலிருந்து மீட்கவும் அவனோடு நேரடியாகப் பேசவும் அசரீரியான கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

அன்னை மரியாளின் மூலமாக மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு 

தனது முன்மாதிரிகையான வாழ்க்கை மூலமும், நற்செய்தியை வாய் மொழியில் அறிவித்ததன் மூலமும் மனிதன் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்பதற்கான வழியைக் காட்டினார்.

அதோடு மனிதனுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

தனது சிலுவை மரணத்தின் மூலம் மனிதனைப் பாவத்திலிருந்து மீட்டார்.

மனிதன் மீட்பின் பயனை அடைய, அதாவது, பாவமன்னிப்புப் பெற ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்கக் கத்தோலிக்க திருச்சபையை நிறுவினார்.

உலகமெங்கும் நற்செய்தியை அறிவிப்பதும், மனிதர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை விண்ணகப் பாதையில் வழி நடத்துவதும் திருச்சபையின் பணிகள்.

இப்போது கத்தோலிக்கத் திருச்சபையின் மூலமும்,

கத்தோலிக்கத் திருச்சபையால் தரப்பட்ட பைபிளின் மூலமும்,

 ஆரம்பம் முதல் செய்தது போல மனசாட்சியின் மூலமும்

 இறைவன் நம்மோடு பேசுகிறார்.

தனது மரணத்துக்குப் பின் அவர் உயிர்த்து விண் எய்தி விட்டாலும் தூய ஆவியின் மூலம் திருச்சபையை வழி நடத்துவதோடு, திவ்ய நற்கருணை மூலம் நம்மோடு தொடர்ந்து வாழ்கிறார்.

கத்தோலிக்கத் திருச்சபை இயேசு இறைவனின் நற்செய்தியை உலகெங்கும் அறிவித்துக் கொண்டிருக்கிறது.

இயேசு தான் நிறுவிய திருச்சபை மூலம் உலகம் முழுவதும் தனது  நற் செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

நாம் கத்தோலிக்கத் திருச்சபைக்குச் செவி கொடுப்பதின் மூலமும்,

பைபிளை வாசிப்பதன் மூலமும் இறைவன் பேசுவதைக் கேட்கிறோம்.

எப்படி காந்தி என்றவுடன் மகாத்மா காந்தி என்று புரிந்து கொள்கிறோமோ 

அதேபோல

திருச்சபை என்றவுடன் கத்தோலிக்கத் திருச்சபை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இராயப்பர் தலைமையில் நிறுவப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபை மட்டுமே இயேசுவால் நிறுவப் பட்டது.

''நீ இராயாய் இருக்கிறாய், இந்த இராயின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."

விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார். 
(மத்தேயு நற்செய்தி 16:28,19)

"என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்,
என் ஆடுகளை மேய்,
என் ஆடுகளைப் பேணி வளர்."
(அரு.21:15,16,17)

என்று ஆண்டவர் சீமோனைப் பார்த்துக் கூறிய வார்த்தைகளே இதற்குச் சான்று.

பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் ஆகியோர் மூலம் இயேசு பேசுகிறார்.

திருப்பலியின் போது நமது குருக்கள் வைக்கும் பிரசங்கங்கள், 

நமக்குத் தியானம் கொடுக்கும்போது அவர் ஆற்றும் மறை உரைகள், 

பாவ சங்கீர்த்தனத்தின் போது அவர்கள் கொடுக்கும் அறிவுரைகள், 

வீடுகளைச் சந்திக்கும் போது அவர்கள் கூறும் ஆலோசனைகள்,

ஆன்மீக வழிகாட்டுதலின் போது (Spiritual Direction) அவர்கள் கூறும் வார்த்தைகள்

அனைத்தும் இயேசுவின் வார்த்தைகளே.

இயேசு திவ்ய நற்கருணைப் பேழையில் இருந்து கொண்டு தனது குருக்கள் மூலமாக நம்மோடு பேசுகிறார்.

நமது ஆன்மீக வாழ்வில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் நாம் ஆலோசனை கேட்க வேண்டியது இயேசுவின் பிரதிநிதிகளான நமது குருக்களிடம்தான்.

அவர்கள் தரும் ஆலோசனை இயேசு தரும் ஆலோசனை.

இயேசுவின் ஆலோசனைப்படி நடந்தால் நமக்கு விண்ணக வாழ்வு உறுதி.

பரிசேயர்கள் இயேசுவின் வார்த்தைகளில் குறை காண்பதற்காகவே அவரிடம் பேச்சுக் கொடுப்பார்கள்.

நாம் அவர்களைப் போல நடக்கக்கூடாது.

நமது குருக்களில் நாம் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

பைபிள் வழியாக இயேசு நம்மோடு பேசுகிறார்.

 கத்தோலிக்கத் திருச்சபை தொகுத்துத் தந்த 73 புத்தகங்கள் கொண்ட இறை வாக்குதான் பைபிள்.

நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் பைபிள் என்ற பெயரில் வைத்திருக்கும் புத்தகம் பைபிள் அல்ல.

46 புத்தகங்கள் கொண்ட பழைய ஏற்பாடும், 27 புத்தகங்கள் கொண்ட புதிய ஏற்பாடும் சேர்ந்தது கத்தோலிக்க பைபிள்.

ஒரு ஆளை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் ஆளை முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பைபிளுக்கு உரிய 73 புத்தகங்களில் 7 புத்தகங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

அது Mr. So and so வேண்டும், அவருடைய கால் கைகள் இல்லாமல்
என்று சொல்வது போலிருக்கிறது.

அவர்களை விட்டு விடுவோம், நாம் நமது பைபிளை எப்படி வாசிக்க வேண்டும்?

பள்ளிக் கூடத்தில் பாடப் புத்தகங்களைத் தேர்வு எழுதுவதற்காகப் படிக்கிறோம்.

அதிலுள்ள விடயங்களைப் பற்றி கேட்கப்படும்
கேள்விகளுக்கு பதில் எழுதுவதற்காகப் படிக்கிறோம்.

கணித அறிவு பெற கணிதம் படிக்கிறோம்.

ஆனால் பைபிள் அறிவு பெற பைபிள் வாசிக்கவில்லை.

சாத்தானுக்கு நம்மை விட பைபிள் அறிவு அதிகம், ஆனால் அறிவினால் அவன் மீட்பு அடைய முடியாது.

நாம் பைபிளைக் Cover to cover நன்கு படித்து 

கேட்கப்படும் கேள்விகளுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் அளவுக்குப் பதில் கூற அறிவு இருந்தாலும் 

அந்த அறிவு மட்டும் மீட்பு அடைய உதவாது.

பைபிளை வாழ்வதற்காக வாசிக்க வேண்டும்,

பைபிளை வாழ வேண்டும்.

இயேசு மாட்டுத் தொழுவத்தில் ஏழையாகப் பிறந்து தீவனத் தொட்டியில் கிடத்தப் பட்டார் என்ற வாசிப்பு நாம் ஏழ்மையை நேசிக்கவும் ஏழையாக வாழவும் உதவ வேண்டும்.

நமக்குச் சொந்தமாக பைபிள் இருந்து பயனில்லை, 

நாம் பைபிளுக்குச் சொந்தமாக வேண்டும்.

பைபிள் நம்மை வாழ வைக்க வேண்டும்.

நாம் வாசிக்க வேண்டியது புத்தகத்தை அல்ல, இறை வாக்கை.

நமக்குச் சொந்தமான வாகனத்தை நாம் விரும்பும் இடத்துக்கு ஓட்டிச் செல்வது போல 

பைபிள் அது விருப்பப்படி நம்மை அழைத்துச் செல்ல வேண்டும்.

அவரவர் விருப்பப்படி அவரவர் பைபிளை அழைத்துச் செல்லக்கூடாது. 

அவரவர் விருப்பப்படி பைபிள் வசனங்களுக்குப் பொருள் கூறக்கூடாது.

பைபிளைத் தந்த கத்தோலிக்கத் திருச்சபைக்குதான் அதற்குப் பொருள் கூறும் அதிகாரம் உண்டு.

கத்தோலிக்கத் திருச்சபை கூறும் பொருள் தான் நமது ஆன்மீக வாழ்வின் உயிர்நாடி.

இயேசு தம் உள்ளத்தில் பேசுகிறார், கூர்ந்து கவனிப்போம்.

தான் நிறுவிய திருச்சபை மூலம் பேசுகிறார், அதன்படி வாழ்வோம்

பைபிள் மூலம் பேசுகிறார், இறைவாக்கை நமது வாழ்வாக்குவோம்.

"பற்றுக பற்றற்றான் பற்றினை
அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு "

உலகப் பற்றற்ற இயேசுவை இறுகப் பற்றிக் கொண்டு நாமும் உலகப் பற்றை விடுவோம்.

இயேசுவின் வார்த்தைகள் அதற்குத் துணை நிற்கும்.

லூர்து செல்வம்.

Tuesday, July 29, 2025

" ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். (மத்தேயு நற்செய்தி 13:44)



"ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். 
(மத்தேயு நற்செய்தி 13:44)

புகை வண்டியின் வருகையை எதிர்பார்த்து ப்ளாட்பாரத்தில் காத்துக் கொண்டிருக்கிறோம்.

வண்டி வந்தவுடன் ப்ளாட்பாரத்தை விட்டு விட்டு வண்டியில் ஏற வேண்டும்.

ப்ளாட்பாரத்தை விட 
மனமில்லாத வர்கள்  புகை வண்டியில் ஏற முடியாது.

ஹோட்டலில் சாப்பிட விரும்புகிறவர்கள் அதற்கு ஈடான தொகையை இழக்க வேண்டும்.

பணம் கொடுக்காமல்  சாப்பிட முடியாது.

நித்திய பேரின்ப வாழ்வை விரும்புகிறவர்கள் அநித்திய சிற்றின்ப வாழ்வை இழக்கக் தயாராக இருக்க வேண்டும்.

சிற்றின்ப விரும்பிகள் பேரின்பத்துக்கு ஆசைப்பட முடியாது.

நமது ஆண்டவர் கூறிய புதையல் உவமையில் 

நமக்குச் சொந்தமில்லாத ஒரு நிலத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கப் புதையல் இருப்பது நமக்குத் தெரிய வருகிறது.

நமக்குப் புதையல் மேல் ஆசை.

புதையலை எடுக்க வேண்டுமென்றால் நிலத்தைத் தோண்ட வேண்டும்.

அடுத்தவர் நிலத்தை நம்மால் தோண்ட முடியாது.

புதையலை எடுக்க வேண்டுமென்றால் முதலில் நிலத்தை என்ன விலை கொடுத்தாவது வாங்க வேண்டும்.

கையில் போதிய பணம் இல்லையென்றால் நம்மிடம் உள்ள மற்ற பொருட்களை விற்றாவது பணம் திரட்டி புதையல் உள்ள நிலத்தை வாங்க வேண்டும்.

நிலத்தை வாங்கிவிட்டால் புதையல் நமதாகிவிடும்.

இயேசு விண்ணரசை இந்த புதையலுக்கு ஒப்பிடுகிறார்.

நிலத்தை எதற்கு ஒப்பிடலாம்?

நாம் வாழும் உலகம் விண்ணகம் பயணத்துக்கான தளம்.

ஆனால் லௌகீக வாழ்க்கை மூலம் விண்ணரசை அடைய முடியாது.

உலகில் நாம் வாழ வேண்டிய ஆன்மீக வாழ்வு தான் விண்ணரசுக்கான வழி.

லௌகீக வாழ்வு முடிவுள்ளது.

ஆன்மீக வாழ்வு முடிவில்லாதது, உலகில் ஆரம்பித்து மோட்சத்திலும் தொடரும்.

ஆன்மீக வாழ்வையும் விண்ணரசையும் பிரிக்க முடியாது.

ஆனால் இயேசுவின் வழி நடக்கும் ஆன்மீக வாழ்வுதான் விண்ணரசு இருக்கும் நிலம்.
(லௌகீக நிலமல்ல, ஆன்மீக நிலம்.)

இந்த ஆன்மீக நிலத்தை, அதாவது, ஆன்மீக வாழ்வைப் பெற வேண்டுமென்றால் லௌகீக இன்பங்களைத் தியாகம் செய்ய வேண்டும்.

 உலகப் பற்று, 
சிற்றின்ப ஆசைகள்,
பண ஆசை,
ஆடம்பரம்,
உணவு, 
உடை போன்ற உடல் சார்ந்த இன்பங்களில் மீது அளவுகடந்த ஆசை,
பெண்ணாசை,
மண்ணாசை,
பொன்னாசை

போன்ற லௌகீக ஆசைகளைத் தியாகம் செய்து,

ஆன்மீக வாழ்வாகிய நிலத்தை தியாகம் என்ற செல்வத்தைக் கொடுத்து வாங்கி,

சிலுவை என்ற ஆயுதத்தால் தோண்டினால் விண்ணரசு என்ற புதையலை எடுத்து அனுபவிக்கலாம்.

மண்ணரசை விட என்ன வகைகளில் விண்ணரசு சிறந்தது?

மண்ணரசு இடம், காலம் ஆகியவற்றுக்கு உட்பட்டது, ஆகவே தற்காலிகமானது.

விண்ணரசு இடம், காலம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது, ஆகவே நிரந்தரமானது.

மண்ணரசில் வாழ்வோர் அனுபவிப்பது சிற்றின்பம்
விண்ணரசில் வாழ்வோர் அனுபவிப்பது பேன்பம்.

மண்ணரசினர் படைக்கப்பட்ட பொருட்களோடு இணைந்திருப்பர்.
விண்ணரசினர் அனைத்தையும் படைத்த கடவுளோடு ஒன்றித்து வாழ்வர்.

நாம் கடவுளின் அரசை பெறுவதற்கு நம் வாழ்வில் உலகைச் சார்ந்த எல்லாவற்றையும் தியாகம் செய்வோம் 

நமது வாழ்வை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.

 நாம் எதையாவது விற்கிறோம் என்றால், அதைவிட மதிப்புமிக்க ஒன்றை வாங்கப் போகிறோம் என்று அர்த்தம். 

 உலகச் செல்வங்கள் அனைத்தையும் விட விண்ணரசு  மிக மிக மதிப்புமிக்கது.

 இந்த உலகச் செல்வங்கள், ஆசைகள், கவலைகள் போன்றவை  கடவுளுடனான நமது உறவுக்குத் தடையாக இருப்பதால் அவற்றைத் தியாகம் செய்து விட்டு 

 கடவுளை முழுமையாகச் சார்ந்து வாழ்வதற்காக அவருடைய சித்தத்திற்கு நம்மையே ஒப்புக் கொடுப்போம்.

விணாணரசின் மகிழ்ச்சி நிலையானது. ஆகவே அதை அடைவதற்காக நிலையில்லாதவற்றைத் தியாகம் செய்வோம்.

அழியக்கூடிய பொருட்களைத் தியாக விலையாகக் கொடுத்து அழியாத பேரின்ப அரசை உரிமையாக்கிக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

Monday, July 28, 2025

நாள் முழுவதும் இடை விடாமல் பராக்கின்றி செபிப்பது எப்படி?



நாள் முழுவதும் இடை விடாமல் பராக்கின்றி செபிப்பது எப்படி?

மனிதனுக்கும், மிருகத்துக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் 

மனிதனுக்கு புத்தி இருக்கிறது, மிருகத்துக்குப் புத்தி இல்லை.

புத்திதான் சிந்திக்கிறது.

சிந்தனையிலிருந்து வார்த்தையும் செயலும் பிறக்கின்றன

இவை இறைவனின் பண்புகள், அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்புகள்.

நாம் இறைவனோடு பேசும் போது நமது சிந்தனை, வார்த்தை, செயல் மூன்றுமே செயல்படுகின்றன.

உதாரணத்திற்கு திவ்ய நற்கருணை நாதரோடு பேச கோவிலுக்குச் செல்கிறோம்.

நமது புத்தி திவ்ய நற்கருணையை இறைமகன் இயேசு என்று ஏற்றுக் கொள்கிறது.

சிந்தனையில் வார்த்தைகளோடு முழங்கால் படியிடுகிறோம்.

நாட்டின் முதல்வரைப் பார்க்கும் போது முழங்கால் படியிடுவதில்லை.

ஏனெனில் நமது புத்தி சொல்கிறது அவர் நம்மைப் போன்ற மனிதன் என்று.

திவ்ய நற்கருணை முன் முழங்கால் படியிடுகிறோம்,

ஏனெனில் நமது புத்தி சொல்கிறது அவர் நம்மைப் படைத்த கடவுள் என்று.

திவ்ய நற்கருணை முன் முழங்கால் படியிடாவிட்டால் நாம் இறைவனுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை என்று அர்த்தம்.

இது நின்று கொண்டு நன்மை வாங்குவோர் கவனத்துக்கு.

ஒருவரோடு நேருக்கு நேர் பேசும் போது நமது கவனம் நாம் யாரோடு பேசுகிறோமோ அவர் மேல் இருக்கும்.

வீட்டில் இறைவனிடம் செபிக்கும் போது இறைவனை நமது ஊனக் கண்ணால் பார்க்க முடியாது.

நமது ஆன்மீகக் கண்ணால் மட்டும் பார்க்க முடியும்.

செபிக்கும் போது இறைவனை மனதில் நினைத்துக் கொண்டு அவரோடு பேச வேண்டும்.

கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

வாயைத் திறந்து, "விண்ணகத்தில் இருக்கும் எங்கள் தந்தையே"  என்று சொல்லும் போது மனதில் விண்ணகத் தந்தை இருக்க வேண்டும்.

அதாவது செபத்தின் போது சிந்தனையும் சொல்லும் இணைய வேண்டும்.

வேறு எதையாவது நினைத்துக் கொண்டு தந்தையை அழைத்தால் அது செபம் அல்ல.

ஆனால் நமது மனம் குரங்கு போன்றது.

நிமிடத்திற்கு நிமிடம் இடம் விட்டு இடம் தாவிக் கொண்டேயிருக்கும்.

காலை உணவை நினைத்துக் கொண்டு, "விண்ணகத்தில் இருக்கும் எங்கள் தந்தையே" என்று சொன்னால் நாம் உணவைத் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம் என்று அர்த்தம்.

செபத்தின் போது சிந்தனையும் சொல்லும் இணைந்திருக்க பயிற்சி ஒன்று இருக்கிறது.

நீண்ட செபத்தை ஒரே நேரத்தில் சொன்னால்தான் பராக்கு ஏற்படும்.

செபத்தை வாக்கியம் வாக்கியமாகப் பிரித்து, வாக்கியத்தை வார்த்தை வார்த்தையாக நிறுத்தி மெதுவாக, அமைதியாக மனதில் நினைத்து, தியான முறையில் செபித்தால் வேறு எண்ணங்கள் மனதில் நுழையாது, பராக்கும் ஏற்படாது.

"விண்ணகத்தில்"என்ற வார்த்தையை நினைக்கும் போது மோட்சம் மட்டும் நினைவில் இருக்கும்.


"இருக்கிற" என்று நிறுத்தி சொல்லி, "எங்கள் தந்தையே 'என்று தியானித்தால் மோட்சத்தில் வாழும் தந்தை மட்டும் நினைவில் இருப்பார்.

இப்படி வார்த்தை வார்த்தையாக தியான உணர்வோடு செபித்தால் செபம் தவிர வேறு பராக்கு நுழைய வாய்ப்பே இல்லை.

செபிக்க நீண்ட நேரம் ஆகுமே. ஆனால் என்ன, தேவையில்லாத கற்பனைகளில் நேரத்தை வீணடிப்பதை விட இறைவனோடு இணைந்திருப்பது எவ்வளவோ மேல்.

ஒரு செபமாலை சொல்லும் நேரத்தில் பத்து மணிகள்தான் சொல்வோம்.

தேவையில்லாத பராக்குகளோடு ஒரு செபமாலை சொல்லும் போது கிடைக்கும் பலனை விட பத்து மணிகளில் அதிகப் பலன் கிடைக்கும்.

முறைப்படி செபம் செய்யாமல் சாதாரணமாக இருக்கும் நேரத்தில் கூட சிறு சிறு மனவல்லப செபங்களை மனதில் நினைத்துக் கொண்டிருந்தால் புனிதத்தில் வளர்ந்து கொண்டேயிருப்போம்.

இப்படி செபிக்க பெரிய செபப் புத்தகங்கள் தேவையில்லை.

ஏதாவது ஒரு பைபிள் வசனத்தை மனதுக்குள் நினைத்து அசை போட்டுக் கொண்டிருந்தாலே போதும்.

"உன்னை நீ நேசிப்பது போல உனது அயலானை நேசி."

சிறு வசனம்தான். மனதுக்குள்ளே அசை போட்டுக் கொண்டேயிருந்தால் நம்மை அறியாமலேயே நமக்குள் பிறரன்பு வளரும்.

நமது மனமும் பராக்குகளுக்கு இடம் கொடாமலிருக்க பயிற்சி.

எவ்வளவு செபிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல, எப்படிச் செபிக்கிறோம் என்பது தான் முக்கியம்.

வார்த்தைகளை விட இறைவனை நினைத்துக் கொண்டிருப்பது தான் இறைவனோடு ஒன்றித்திருக்கத் தேவை.

சிந்தனையில் இறைவன் இருந்தால் சொல்லிலும் செயலிலும் கட்டாயம் இருப்பார்.

லூர்து செல்வம்.

Sunday, July 27, 2025

ஒவ்வொரு இரவும் முதல் இரவாகட்டும்.



ஒவ்வொரு இரவும் முதல் இரவாகட்டும்.

திருமணமான தம்பதியரின் முதல் இரவின் பரவச அனுபவம் (Thrilling experience) வாழ் நாளெல்லாம் தொடர வேண்டுமானால் ஒவ்வொரு இரவையும் முதல் இரவாகக் கருத வேண்டும்.

தங்கள் அறுபதாம் கல்யாண
(60th. Marriage anniversary) இரவைக் கூட முதல் இரவாக அணுகும் தம்பதியர், வயது ரீதியாக அல்ல, உற்சாகம், மகிழ்ச்சி, இன்பம் ஆகியவற்றின் ரீதியாக இளமைக்குத் திரும்புவார்கள்.

எனது பள்ளிக்கூட நாட்களில் ஆண்டுக்கு ஒரு முறை மூன்று நாட்கள் தியானம் இருக்கும்.

மூன்று நாட்களும் தியானப் பிரசங்கங்களில் கூறப்படுபவற்றைத் தியானிக்க வேண்டும்.

மாணவர்கள் ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது.
 
மூன்றாம் நாள் பாவ சங்கீர்த்தனம் முடிந்தவுடன் எங்களுக்கு பரலோக வாழ்வே ஆரம்பித்து விட்டதாக உணர்வு ஏற்படும்.

தியானத்தின் மூன்றாவது நாள் எங்களுக்கு ஆன்மீக வாழ்வின் முதல் நாளாகத் தோன்றும்.

இந்த உணர்வு ஆண்டு முழுவதும் நீடிக்க வேண்டுமானால் ஆண்டின் ஒவ்வொரு நாளையும் முதல் நாளாக எண்ணி வாழ வேண்டும்.

அப்படி வாழ்ந்தால் மூன்று நாள் தியானம் ஆண்டு முழுவதும் நம்மை வழி நடத்தும்.

ஆனால் அனுபவத்தில் தியானம் முடிந்து ஓரிரு வாரங்களில் ஆரம்ப உற்சாகம் குறைய ஆரம்பிக்கும்.

அப்படி குறையவிடாமல் தியான நாட்களில் ஏற்பட்ட ஆன்மீக உணர்வை ஆண்டு முழுவதும் அனுபவிப்பவர்கள் பாக்கியசாலிகள்.

வாழ்வின் ஒவ்வொரு நாளையும் முதல் நாளாக எண்ணி வாழ்பவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டிருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு இவ்வுலக வாழ்வின் இறுதி நாள் விண்ணுலக வாழ்வின் ஆரம்ப நாளாக இருக்கும்.

வாழ்வின் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு வினாடியையும் இப்போதுதான் நமது வாழ்வு ஆரம்பித்திருக்கிறது என்று எண்ணி வாழ வேண்டும்.

ஒவ்வொரு வினாடியிலும் நமது  முழு ஆன்மீகமும் அடங்கியிருக்கிறது.

இந்த வினாடி தான் நமது வாழ்க்கை என்று நினைத்து வாழ்ந்தால் ,

ஒவ்வொரு வினாடியையும்  அப்படியே நினைத்து வாழ்ந்தால் 

ஆரம்ப உற்சாக வாழ்வு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

நாம் திரு முழுக்குப் பெறுவதுதான் நமது ஆன்மீக வாழ்வின் ஆரம்பம்.

திரு முழுக்குப் பெற்ற பின் நமது ஆன்மா பாவ மாசின்றி பரிசுத்தமாக இருக்கும்.

அந்நிலையை வாழ்நாள் முழுவதும் காப்பாற்ற வேண்டும்.

நாம் திரு முழுக்குப் பெறும் போது சிறு குழந்தைகளாக இருந்திருப்போம்.

அப்போது விபரம் புரியாது.

வளர்ந்து பையனாகும்போது புது நன்மைக்கு நம்மைத் தயாரிப்போம்.

அப்போது பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது ஆன்மா பரிசுத்தமாகும்.

இந்த ஆரம்ப நிலையை வாழ்வின் ஒவ்வொரு நாளும் காப்பாற்ற வேண்டும்.

பாவ சங்கீர்த்தனம் செய்த பின்
"இப்போது இறந்தால் நமக்கு மோட்சம்" என்ற நம்பிக்கை வரும்.

ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாதவே நினைத்து வாழ்வோம்.

ஒவ்வொரு ஆரம்ப வினாடியையும் இறுதி வினாடியாக நினைத்து வாழ்ந்தால் நம்மால் பாவம் செய்யவே முடியாது.

இறுதி என்று கூறுவது இவ்வுலக வாழ்வின் இறுதி.

ஆன்மீக வாழ்வுக்கு இறுதி கிடையாது.

"கடவுள் இருக்கின்றவராக இருக்கிறவர்."

அவருக்கு இறந்த காலமும் இல்லை, எதிர் காலமும் இல்லை.

எப்போதும் நிகழ் காலத்தில் வாழ்பவர்.

நாமும் கடவுளைப் போல வாழ வேண்டுமென்றால் முடிவு இல்லாத ஆன்மீக வாழ்வில் நமது கவனத்தை முழுவதும் செலுத்த வேண்டும்.

நமது ஆன்மா முடிவு இல்லாதது.

லௌகீக மரணத்துக்குப் பின்னும் ஆன்மா உயிர் வாழும், அதாவது நாம் உயிர் வாழ்வோம்.

ஒரு வகையில் நமக்கு மரணம் கிடையாது.

நித்திய காலமும் எப்படி இறைவனோடு ஒன்றித்து வாழ்வோமோ,

 அப்படியே இப்போதும் செபம் மூலம் இறைவனோடு ஒன்றித்து வாழ்ந்தால் நாம் விண்ணக வாழ்வை பூமியிலேயே ஆரம்பித்து விட்டோம் என்று தான் அர்த்தம்.

நாமும் நிகழ் காலத்திலேயே  இறைவனோடு ஒன்றித்து வாழ்ந்தால் லௌகீக மரணம் நம்மை எந்த விதத்திலும் பாதிக்காத ஒரு சாதாரண நிகழ்ச்சி ஆகிவிடும்.

இறைவன் எப்போதும் நம்மோடு இருக்கிறவர்.

(இருக்கிறவர் நாமே.)

"இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். 

அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன" 
(திருவெளிப்பாடு 21:3,4)

கடவுள் ஆரம்பமும் முடிவும் இல்லாதவர்.

ஆனாலும் நமது ஆன்மீக வாழ்வுக்கு ஆரம்பமும் நோக்கமும் அவரே.

ஒவ்வொரு வினாடியும் அவர்  நிகழ் காலத்திலேயே வாழ்பவர்.

நாமும் அவரோடு நமது வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் நிகழ் காலத்திலேயே வாழ்வோம். 

மண்ணுலகில் ஆரம்பித்த ஆன்மீக வாழ்வு   விண்ணுலகிலும் தொடரும். 

கடவுள் மணவாளன், நமது ஆன்மா அவரது மனவாட்டி. 

ஒவ்வொரு நாளும் நமக்கு முதல் நாளே.

ஒவ்வொரு இரவும் நமக்கு முதலிரவே.

லூர்து செல்வம்

Saturday, July 26, 2025

"இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்."(லூக்கா நற்செய்தி 10:37)



"இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்."
(லூக்கா நற்செய்தி 10:37)

திருச்சட்ட அறிஞர் ஒருவர் "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று கேட்டபோது இயேசு நல்ல சமாரியன் உவமையைக் கூறி

 "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்."

பயணத்தின்போது கள்வர்களால் அடிபட்டு குற்றுயிராக விடப்பட்ட யூதர் ஒருவருக்கு அவரது இனத்தைச் சேர்ந்த குருவும், லேவியரும் உதவி செய்யாமல் போய்விடுகிறார்கள்.

ஆனால் கலப்பின மக்களாக யூதர்களால் ஒதுக்கப்பட்ட சமாரியர் ஒருவர் உதவி செய்கிறார்.

உவமையைக் கூறி விட்டு இயேசு திருச்சட்ட அறிஞரிடம்

"கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார். 

அதற்கு திருச்சட்ட அறிஞர், "
 "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். 

இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார். 

இயேசு கேட்ட கேள்வியை அவரது கோணத்திலிருந்து தியானிப்போம்.


"நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசி."

இது இயேசு நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளை.

இயேசு போதகர் மட்டுமல்ல சாதகரும் கூட.

தனது போதனையைத் தானே சாதித்து மற்றவர்களுக்குப் போதித்தவர்.

"நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசி."

இது அவருடைய போதனை.

இதை எவ்வாறு சாதித்தார்?

இயேசுவுக்கு அயலான் யார்?

அவரால் படைக்கப்பட்ட மனிதன் தான் அவருக்கு அயலான்.

இயேசு கடவுள். கடவுள் என்றாலே அன்பு.

கடவுள் தன்னைத் தானே நித்திய காலமும் அளவில்லாத விதமாய் அன்பு செய்கிறார்.

அவர் அவரையே அன்பு செய்வது போல 
அவரது அயலானாகிய நம்மை அளவில்லாத விதமாய் அன்பு செய்கிறார்.

தன் அயலானுக்காக தன் உயிரைத் தியாகம் செய்வதை விட மேலான அன்பு இருக்க முடியாது.

தன்னையே தனது சிலுவை மரணத்தின் மூலம் நம் மட்டில் அவருக்கு இருந்த அளவு கடந்த அன்பை வெளிக்காட்டினார்.

திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் கேட்ட கேள்வி என்ன?

  "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" 
(லூக்கா நற்செய்தி 10:29)

அதாவது என் அயலான் யார்?

திருச்சட்ட அறிஞர் ஒரு யூதர்.

அவரது கேள்விக்குப் பதிலாகத்தான் இயேசு நல்ல சமாரியன் உவமையைக் கூறுகிறார்.

உவமையில் அடிபட்டுக் கிடப்பவர் யூதர்.

உதவி செய்தவர் சமாரியர்.

இயேசு என்ன கேள்வி கேட்டார்?

"கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார். 
(லூக்கா நற்செய்தி 10:36)

அடிபட்டுக் கிடந்தவருக்கு அயலான் யார்?

கேள்வியைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இயேசுவின் கட்டளை,

உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" 
(லூக்கா.10:27)

உவமையில் தன் அயலானை அன்பு செய்தவர் சமாரியர்.

அப்படியானால் சமாரியரின் அயலான் யூதர்.

உதவி செய்தவருக்கு அயலான் யார் என்று இயேசு கேட்கவில்லை.

உதவி செய்யப் பட்டவருக்கு அயலான் யார், உதவி செய்தவரா,  செய்யாமல் போனவரா என்று கேட்கிறார்.

கேள்வியிலிருந்து என்ன புரிகிறது?

மற்றவர்களை அன்பு செய்பவர் அயலானா, அன்பு செய்ய மறுப்பவர் அயலானா என்று இயேசு கேட்கிறார்.

அன்பு செய்து, அதன் விளைவாக உதவி செய்தவர் தான் அயலான்.

அதாவது உதவி தேவைப் படுபவர் தன் இனத்தவரா, உறவினரா என்று கவலைப் படாமல் உதவுபவர் தான் அயலான்.

இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று சொல்கிறார்.

அதாவது குலம் கோத்திரம் பார்க்காமல் அன்புக்காகவே அன்பு செய்யும்.

‌Love for the sake of love, not for the sake of relationship. 

அப்படி அன்பு செய்பவன் தான் உண்மையான அயலான்.

இருவர் இருந்தால் இருவரும் ஒருவருக்கொருவர் அயலான் தான்.

இருவரிடமும் அயலானுக்கு உரிய பண்பு இருக்க வேண்டும்.

"நீரும் போய் அப்படியே செய்யும்" 

நீரும் குலம் கோத்திரம் பார்க்காமல் அன்புக்காகவே அன்பு செய்யும்.

இயேசுவின் வார்த்தைகளில் ஒரு ஆழமான மறையியல் உண்மை பொதிந்திருக்கிறது.

அடிபட்டுக் கிடந்தவர் யூதர்.
உதவி செய்தவர் அவருக்கு இரக்கம் காட்டிய சமாரியர்.

கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இரக்கம் காட்டிய சமாரியர் தான் அயலான் என்று அறிஞர் கூறுகிறார்.

நீரும் போய் அப்படியே செய்யும்" என்றால் எப்படிச் செய்ய வேண்டும்?

சமாரியர் (யூதர் அல்லாதவர்) செய்தது போல திருச்சட்ட அறிஞர்
(யூதர்) செய்ய வேண்டும்.

யூதர்கள் தங்கள் இனத்தைச் சேர்ந்தவன் தான் தங்களுக்கு அயலான் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அதனால் தான் சமாரியர்களை ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

ஒதுக்கி வைக்கப்பட்ட சமாரியர் செய்தது போல யூதராகிய திருச்சட்ட அறிஞர் செய்ய வேண்டும்.

வார்த்தைகளில் அடங்கியுள்ள மறையியல் உண்மை எது?

யூதருக்கு அயலான் சமாரியன்.

சமாரியர் யோசேப்பின் வழித் தோன்றல்கள், அதாவது இஸ்ரேல் மக்கள். ஆனால் கலப்பினமாக மாறிய இஸ்ரேலர்கள்.

யாக்கோபின் பன்னிரு புதல்வர்களில் பதினொருவருக்கும் பஞ்ச காலத்தில் உதவி செய்தவர் யோசேப்பு.

அவரது வழித்தோன்றல்களில் அசிரியர் படையெடுப்பின் போது அசிரியக் கலப்பு ஏற்பட்டு விட்டது.

ஆனாலும் அவர்களும் அபிரகாமின் பிள்ளைகள் தான்.

நாம் கடைக்குச் சென்று விலை கொடுத்து பன்னிரண்டு மாம்பழங்கள் வாங்கி வருகிறோம்.

அவற்றில் ஒன்று நாம் வரும் வழியில் கீழே விழுந்து அடிபட்டு விட்டது‌.

அதற்காக அதைக் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவோமா?

நாம் காசு கொடுத்து வாங்கியது.

இயேசு உலகிலுள்ள அத்தனை மக்களுக்காகவும் தான் பாடுகள் பட்டு இரத்தம் சிந்தி மரித்தார்.

அனைத்துப் பாவிகளுக்காகவும் தனது விலைமதிப்பில்லாத இரத்தத்தை விலையாகக் கொடுத்திருக்கிறார்.

அனைவரும், இன் வேறுபாடின்றி,
இயேசுவில் நமது சகோதரர்கள்.

அவர்களிலும் உதவும் குணமுள்ள நல்ல சமாரியர்கள் இருக்கிறார்கள்.

நல்ல சமாரியன் உதவினான்.

அவனும் அயலான் தான்.

"நீரும் போய் அப்படியே செய்யும்" என்று இயேசு கூறியதற்கு "உதவி செய்தவனைப் போல நீரும் உதவி செய்யும்"

அதாவது "இன வேறுபாடின்றி தேவையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் உதவி செய்யும்." என்றார்.

இதில் தான் இன வேறுபாடின்றி உலகோர் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற மறை உண்மை அடங்கியிருக்கிறது.

உவமையில் வரும் குரு, லேவியரைப் போல் நாம் செயல்படக் கூடாது.

அவர்கள் அவர்களுடைய இனத்தவருக்கே உதவி செய்யவில்லை.

பிறரன்பு இல்லாதவர்கள் என்று அர்த்தம்.

அனைவரும் இறைவனின் பிள்ளைகளே என்று ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும், பிறரன்பும் உள்ளவர்கள் தான் இயேசுவின் சகோதரர்கள் என்ற பெயருக்கு அருகதை உள்ளவர்கள்.

இஸ்ரேலுக்கும் , ஈராக்குக்கும் போர் நடந்து கொண்டிருக்கிறது.

இஸ்ரேலர்களும், இஸ்லாமியர்களும் ஆபிரகாமின் பிள்ளைகள்தான்.

போருக்குக் காரணம் சகோதர பாசமின்மை.

ஆபிரகாமின் கடவுளும், ஈசாக்கின் கடவுளும், யாக்கோபின் கடவுளும் ஒருவர் தான்.

அப்படியானால் இஸ்ரேலர்களும், இஸ்லாமியரும் ஒரே கடவுளைத்தான் வழிபடுகிறார்கள்.

இல்லை, வழிபடுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.

உண்மையில் அவர்களிடம் இறையன்பும் இல்லை, பிறரன்பும் இல்லை.

அவர்கள் ஒருவரையொருவர் அயலானாக ஏற்றுக் கொள்ளவில்லை.

ஏற்றுக் கொள்ளும் வரை, போருக்குத் தீர்வு கிடையாது.

நாம் இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனையும் நமது அயலானாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு உதவி செய்வோம்.

லூர்து செல்வம்.

Friday, July 25, 2025

ஒரு தலை ராகம்



ஒரு தலை ராகம்.

வகுப்பில் ஆசிரியர் பேசுகிறார், மாணவர்கள் கேட்கிறார்கள்.

மாணவர்கள் கேட்கும் போது ஆசிரியர் பதில் அளிக்கிறார், 

ஆசிரியர் கேட்கும் போது மாணவர்கள் பதில் அளிக்கிறார்கள்.

மாணவர்கள் கற்கிறார்கள்.

கற்பது மாணவர்கள்,
கற்பிப்பது ஆசிரியர்.

இருவருக்கும் கருத்துப் பரிமாற்றம் நடக்கிறது.

கருத்துப் பரிமாற்றம் நடக்காவிட்டால் கற்றல் இல்லை.


பரிமாற்றம் என்றால் ஒருவருக்கொருவர் கொடுத்து, பெற்றுக் கொள்வது.

ஒருவர் மட்டும் கொடுத்துக் கொண்டிருப்பது அல்ல.

அரசியல் கூட்டங்களில் மேடையில் நின்று கொண்டு ஒருவர் பேசுவார், கீழே அமர்ந்திருப்பவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

பேசுபவர் மட்டும் தனது கருத்துக்களைக் கொடுத்துக் கொண்டிருப்பார்.

கேட்பவர்கள் தங்கள் கருத்துக்களைப் பேசுபவரோடு  பரிமாறிக் கொள்வதில்லை.

இது ஒரு தலை ராகம்.

இறைவனோடு நமக்கு இருக்கும் செப உறவில் நாம் மாணவர்களைப் போல் நடந்து கொள்கிறோமா?

அல்லது, அரசியல்வாதி போல் நடந்து கொள்கிறோமா?

அநேக சமயங்களில் நாம் அரசியல்வாதிகளைப் போல்தான் நடந்து கொள்கிறோம்.

"கடவுளே, நான் பேசுவதைக் கேளும்" என்று சொல்லி விட்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டேயிருப்போம்.

நீண்ட நேரம் பேசினால்தான் நன்றாகச் செபிப்பதாக நமக்கு எண்ணம்.

கடவுளைப் பேச விடாமல் நாம் மட்டும் பேசிக் கொண்டிருப்பது, செபம் அல்ல. சொற்பொழிவு.

"நாம் நன்கு பேசி விட்டோம்" என்று சொற்பொழிவு ஆற்றியவருக்கு திருப்தி.

செபத்தின் வல்லமை நாம் பேசுவதில் அல்ல,   இறைவன் பேசுவதில் தான் அடங்கியிருக்கிறது.

"கேளுங்கள் தரப்படும்." - இதில் தான் முழுமையான செபம் அடங்கியிருக்கிறது.

நாம் கேட்கிறோம், மணிக்கணக்கில் அல்ல, வருடக்கணக்கில்.

ஆனால் தரப்படுவதை ஏற்றுக் கொள்வதில்லை.

தரப்படும் என்ற வார்த்தைக்கு நாம் கொடுக்கும் பொருள் வேறு,
உண்மையான பொருள் வேறு.

கடைக்குச் செல்கிறோம்.

"ஒரு Hero pen வேண்டும்." என்று கேட்கிறோம்.

"Hero pen  இல்லை. ஆனால் அதை விடக் குறைந்த விலையில் அதை விட நன்கு எழுதக்கூடிய பேனா இருக்கிறது." என்று கடைக்காரர் கூறுகிறார்.

நாம் வந்து விடுகிறோம்.

கேட்டது கிடைக்கவில்லை என்பது நமது எண்ணம்.

ஆனால் கடைக்காரர் தந்த ஆலோசனையை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

நாம் கேட்டோம்.
தரப்பட்டது ஆலோசனை.

நாம் தரப்பட்டதை ஏற்றுக் கொள்ளவில்லை.

செபம் இறைவனுக்கும் நமக்கும் நடக்கின்ற உரையாடல்.

அடுத்தவரைப் பேச விடாமல் ஒருவர் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் அது செபம் அல்ல.

இறைவனுக்கு பேச நேரம் கொடுத்தால் அவர் ஆலோசனை தருவார்.

அதன்படி நாம் நடக்க வேண்டும்.

நாம் கேட்பதும், கடவுள் ஆலோசனை தருவதும்,

அதன்படி நாம் நடப்பதும் சேர்ந்துதான் செபம்.

ஒரு உதாரணத்துடன் ஆய்வோம்.

திருமணமாகி நான்கு ஆண்டுகளாக குழந்தை இல்லை.

ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று கேட்கிறார்கள்,  கேட்கிறார்கள், கேட்கிறார்கள்.

இறைவன் பேச ஒரு வினாடி கூட ஒதுக்கவில்லை.

உள்ளக் கதவை அடைத்து விட்டதால் இறைவன் செயல் மூலம் பேசுகிறார்.

வேளாங்கண்ணி திருத்தலத்துக்கு தங்கள் வேண்டுதலுக்காகத் திருயாத்திரை சென்றபோது  தற்செயலாக இவர்கள் நிலையில்
உள்ள தம்பதியரைச் சந்திக்க நேர்கிறது.

அவர்கள் இவர்களுடன் உரையாடிய போது 

"எங்களுக்குப் பத்து ஆண்டுகளாக குழந்தை இல்லை. இறைவனைத் தொடர்ந்து வேண்டினோம்.

ஆனால் நாங்கள் இறை ஊழியம் செய்ய இறைவன் விரும்புவதாக மனதில் இறைவன் பேசுவதை உணர்ந்தோம்.

ஆகவே இப்போது இறை‌‌ ஊழியம் செய்து வருகிறோம். செபக்கூட்டங்கள் நடத்துவதிலும், பிறர் அன்புப் பணியிலும் ஆர்வமாக இருக்கிறோம். 

குழந்தை இறைவன் விரும்பும்போது பிறக்கட்டும்.

நாங்கள் மகிழ்ச்சியுடன் இறை ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறோம்."

அதைக் கேட்ட பின் இவர்களுடைய மனமும் மாறியது.

தங்கள் விடயத்திலும் இறைவன் சித்தம் அப்படி இருக்கும் என்பதை உணர்ந்து இவர்களும் தங்கள் பங்கில் சேவையை ஆரம்பித்தார்கள்.

அதன்பின் செப வேளையில் தங்கள் பேச்சைக் குறைத்துக் கொண்டு இறைவனுக்கு ஊழியம் செய்வது பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

நம்மைப் பற்றி கவலைப் படுவதை விட்டு விட்டு இறைப் பணியில் முழு மனதுடன் ஈடுபட்டால் கடவுள் நமக்கு வேண்டியதை நாம் கேட்காமலே தருவார்.

நமது செபத்தில் இறைவனுக்கு தான் அதிக பங்கு கொடுக்க வேண்டும்.

வாயால் அல்ல, மனக் கண்ணால் இறைவனைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்.

இறைவன் பேசுவார்.

அவர் சொன்னபடி நாம் நடக்க வேண்டும்.

நாம் பேசுவது மட்டுமல்ல கடவுளும் நம்மோடு பேசுவதும் சேர்ந்துதான் முழுமையான செபம்.

அதாவது இறைவனோடு நாம் ஒன்றிப்பதுதான் செபம்.

ஒன்றிப்பின் இரு உள்ளங்ஙளும் ஒன்றோடொன்று பேசும்.

செபம் இருதலை ராகம்.

லூர்து செல்வம்.

Thursday, July 24, 2025

"நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே."(மத்தேயு நற்செய்தி 26:53)




"நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே."
(மத்தேயு நற்செய்தி 26:53)

மேற்படி வசனத்தை வாசித்துக் காட்டி நண்பர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார்,

"தனது துன்ப நேரத்தில் தனக்கு உதவும் படி ஏன் இயேசு தந்தையிடம் வேண்டவில்லை?"

நண்பர் வசனங்களை 
அரைகுறையாய் வாசித்தது தான் அவரது சந்தேகத்துக்குக் காரணம்.

அடுத்த வசனத்தையும் வாசித்து விட்டு வசனங்களைத் தியானித்திருந்தால் சந்தேகமே வந்திருக்காது.

"அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்?" என்றார்."
(மத்தேயு நற்செய்தி 26:54)

மறைநூல் வாக்குகள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே தந்தையிடம் வேண்டவில்லை.

இயேசு, தந்தை சம்பந்தப்பட்ட வசனங்களை வாசிக்கும் போது 

"நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" 

"I and the Father are one."

என்ற இயேசுவின் வார்த்தைகள் ஞாபகத்தில் இருக்க‌ வேண்டும்.. 
(அரு. 10:30)

தந்தையும், மகனும், தூய ஆவியும் ஒரே கடவுள்.

மூவருக்கும் ஒரே சிந்தனை.

ஒரே கடவுளின் வாக்கு தான் பைபிள்.

இயேசுவைப் பற்றிய பைபிள் வாக்கு (இறைவாக்கு) நிறைவேற வேண்டும் என்பதே இறைமகன் மனுமகனாய்ப் பிறந்ததன் நோக்கம்.

அதாவது தன்னைப் பற்றி தானே சொன்ன வாக்கு நிறைவேற வேண்டும் என்பதற்காகவே இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.

மனிதர் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக கடவுள் மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரிக்க வேண்டும் என்பது இறைவாக்கு.

இறை இயேசு தனது வாக்குக்கு எதிராக தானே நினைப்பாரா?

தந்தையின் சித்தத்தை, அதாவது தூய ஆவியின் சித்தத்தை, அதாவது தனது சித்தத்தை நிறைவேற்றவே இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.
(மூவருக்கும் ஒரே சித்தம்)

இயேசு கைது செய்யப்பட்டபோது அவர் கூறிய வார்த்தைகளிலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இறைவன் திட்டத்துக்கு எதிராக நாம் செபிக்கக் கூடாது.

நாம் இறைவனிடம் எதை வேண்டினாலும்,

நமது வேண்டல்,

"கடவுளே, உமக்கு விருப்பமானல் நான் எனக்காகக் கேட்பதைத் தாரும்" என்று ஆரம்பிக்க வேண்டும்.

"உமக்கு விருப்பமானால் நான் எழுதியுள்ள தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற அருள் புரியும்."

"உமக்கு விருப்பமானால் நான் விரும்புகிற பெண்ணை நான் மணம் புரிய உதவும்."


"தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்ற இயேசுவின் செபம் நமக்கு முன் மாதிரியாக இருக்க  வேண்டும்.
(லூக்கா நற்செய்தி 22:42)

நமது ஒவ்வொரு செபத்தையும் தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் ஆரம்பிக்கிறோம்.

"தந்தை மகன் தூய ஆவிக்கு விருப்பம் இருந்தால் எனது வேண்டுதல் கேட்கப் படட்டும் என்று தான் இதற்கு அர்த்தம்.

நாம் தலைகீழ் நின்று எதை வேண்டினாலும் இறைவன் விரும்புவதுதான் நடக்கும்.

நமது விருப்பம் கடவுளின் விருப்பத்துக்கு எதிராக இருந்தால் அது நிறைவேறாது.‌

இறைவன் விருப்பத்தை நமது விருப்பமாக ஏற்றுக் கொண்டால் நமது விருப்பம் நிறைவேறும்.

நமது சிலுவையைச் சுமந்து சென்றால்தான் இயேசுவின் சீடராக முடியும் என்று பைபிள் சொல்கிறது.

இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புவோர் சிலுவை வரும் போது வேண்டாம் என்று வேண்டலாமா?

Domine quo vadis?
(ஆண்டவரே, எங்கே போகிறீர்?)

இது ஒரு சினிமா.

இராயப்பரைப் பற்றியது.

ரோமைப் பேரரசர் நீரோ கிறித்தவர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த போது கிறித்தவர்கள் இராயப்பரிடம்,

"உம்மையும் மன்னன் கொன்று விட்டால் கிறித்தவத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். 

எங்கள் மரணத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆகவே திருச்சபையின் நலனுக்காக நீங்கள் வாழ வேண்டும்.

ஆகவே நீங்கள் ரோமையை விட்டு சென்று விடுங்கள்." என்று ஆலோசனை கூறினார்கள்.

அதில் நியாயம் இருப்பதாக எண்ணி திருச்சபையின் நலனுக்காக இராயப்பர் ரோமையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்.

வெளியேறிக் கொண்டிருந்தபோது இயேசு எதிரில் வந்து கொண்டிருந்தார்.

இராயப்பர் இயேசுவைப் பார்த்து,

"ஆண்டவரே, எங்கே போகிறீர்?"
என்று கேட்டார்.

இயேசு மறு மொழியாக,

"இராயப்பா, நீ எதிரிகள் கொன்று விடுவார்கள் என்று பயந்து நாட்டை வெளியேறிக் கொண்டிருக்கிறாய்.

உனக்குப் பதில் எதிரிகள் கையால் இரண்டாம் முறையாக சிலுவையில் அறையப்பட்டு சாகப் போகிறேன்." என்றார்.

"ஆண்டவரே, மன்னியும். நீர் திரும்பவும் சாக வேண்டாம்.

நானே திரும்பிச் செல்கிறேன். 
உமது மகிமைக்காக நானே சிலுவையில் மரிக்கிறேன்." என்று கூறி விட்டுத் திரும்பிச் சென்றார்.

சிலுவையில் அறையப்பட்டு வேதசாட்சியாக மரித்தார்.

அதுதான் இறைவன் சித்தம்.

வருகிற சிலுவையை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதுதான் சீடனுக்கு அடையாளம்.

நமக்கு விரோதமாக குற்றம் செய்பவர்களை நாம் மன்னிக்க வேண்டும் என்பது இறைவாக்கு.

மன்னிக்க விரும்பாதவர்களால் கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்ல முடியுமா?

இயேசுவின் போதனைப் படி பகைவர்களை நேசிக்காதவர்வர்கள்

ஆண்டவரை நோக்கி, "இயேசுவே உம்மை நேசிக்கிறேன்" என்று கூற முடியாது.

இயேசுவை நேசிப்பவர்கள் அவருடைய போதனைப்படி வாழ்வார்கள்.


நமது செபம் எப்போதும் இறை வாக்குக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

லூர்து செல்வம்.

Wednesday, July 23, 2025

"எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது."(மத்தேயு நற்செய்தி 25:13)


"எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது."
(மத்தேயு நற்செய்தி 25:13)

இளைஞர் ஒருவர் இருந்தார்.

வயது 20.

திடகாத்திரமான உடல். அது வரை ஒரு முறை கூட மருத்துவ மனைக்குச் சென்றதில்லை.

பள்ளிக் கூட நாட்களில் படிப்பிற்காகப் பெற்ற சான்றிதழ்களைவிட விளையாட்டுகளுக்காகப் பெற்ற சான்றிதழ்களே அதிகம்.

ஆன்மீக வாழ்வில் காட்டிய அக்கறையை விட தனது உடல் நலத்தைப் பேணுவதில் அதிக அக்கறை காட்டினார்.

சத்தான உணவு அளவோடு சாப்பிட்டார்.

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்தார்.

ஆனால் உடல் நலத்தில் காட்டிய அக்கறையை ஆன்மீக நலத்தில் காட்டவில்லை.

ஒரு நாள் திருப்பலியின் போது மறையுரையில் குருவானவர் இயேசு நம்மை அழைக்க நினையாத நேரத்தில் வருவார், ஆகவே நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் நண்பர் நினைத்துக் கொண்டார்,

"நாம் உடல் நலத்தோடு வாழ்ந்தால் நூறு ஆண்டுகளைத் தாண்டி வாழ்வோம். இருபது வயதிலே மரணத்தை நினைத்து வாழ வேண்டுமா?"

மறுநாள் காலையில் பைக்கில் அலுவலகம் சென்று கொண்டிருந்த போது சாலையின் சரியான பக்கம் தான் சென்றார்.
(He kept to the left while driving)

ஆனால் எதிரில் வந்து கொண்டிருந்த கார் Wrong side ல் வந்ததால் ஏற்பட்ட மோதலில் நண்பர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார்.

இறைவன் எதிர் பாராத நேரத்தில் வருவார்.

புகை வண்டி நிலையத்தில் வண்டி வருவதற்கான, புறப்படுவதற்கான கால அட்டவணையை எழுதிப் போட்டிருப்பார்கள்.

ஆனால் புகை வண்டியைப் பொறுத்த மட்டில் அது குறிப்பிட்ட நேரத்தில் வந்ததாகச் சரித்திரமே இல்லை.

எவ்வளவு நேரம் பிந்தி வரும் என்று சொல்வதற்காகத்தான் கால அட்டவணையே.

ஆனால் உலகில் வாழும் நம்மில் யார் யாரை எப்போது அழைக்க வருவார் என்ற கால அட்டவணையை எல்லோருக்கும் தெரியும் படி இறைவன் அறிவிக்கவில்லை.

அது அவருக்கு மட்டுமே தெரிந்த பரம இரகசியம்.

எதிர் பாராத நேரத்தில் வருவார்.

எப்போது வேண்டுமானாலும் வருவார்.

அவர் வரும் போது நாம் தயாராக இருக்க வேண்டும்,

அதாவது எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

இயேசு பிறந்த போது மாசில்லாக் குழந்தைகளை பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அழைத்துக் கொண்டார்.

நாம் எப்போதும் நமது ஆன்மாவைப் பாவ மாசின்றிப் பாதுகாத்துக் கொண்டால் போதும்.

இயேசு அழைக்க வரும் போது, "இதோ வருகிறேன், ஆண்டவரே" என்று உற்சாகமாகப் புறப்பட்டு விடலாம்.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடனும், இரவில் படுக்கப் போகும் போதும் ஆன்மப் பரிசோதனை செய்ய வேண்டும்.

பாவம் இருந்தால் உடனே உத்தம மனத்தாபப்பட்டு பாவ மன்னிப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.

அடிக்கடி பாவ சங்கீர்த்தனம். செய்ய வேண்டும்.

எப்போதும் ஆன்மா பரிசுத்தமாக இருந்தால் மரணத்தை நினைத்து பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

"ஆண்டவரே, நீர் எப்போது வேண்டுமானாலும் வாரும்.
நான் எப்போதும் தயார்."

லூர்து செல்வம்.

Tuesday, July 22, 2025

"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். (மத்தேயு நற்செய்தி 9:12,13)

  

"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 

 நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். 
(மத்தேயு நற்செய்தி 9:12,13)

இயேசு பாவிகளை அழைக்கவே உலகுக்கு வந்தார்.

இயேசு நம்மை அழைக்க உலகுக்கு வந்தார் என்பதை ஏற்றுக் கொண்டால் நாம் பாவிகள் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டோம்.

நம்மை அழைக்கவே இயேசு உலகுக்கு வந்தார் என்பதையும் ஏற்றுக் கொண்டு விட்டோம்.

"நேர்மையாளரை அல்ல," என்று குறிப்பிடப்படும் நேர்மையாளர்கள் யார்?

இந்த வசனத்தை இயேசு சொன்னது அவர் வரிதண்டுபவராகிய மத்தேயுவின் வீட்டில் உணவு அருந்திக் கொண்டிருந்த போது.

பரிசேயர்கள் வரிதண்டுபவர்களைப் பாவிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

தங்களைத் தவிர மற்ற அனைவருமே, இயேசு உட்பட, திருச் சட்டப்படி வாழாதவர்கள்  என்பது அவர்கள் எண்ணம்.

அதனால் தான் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

 இயேசுவின் சீடரிடம் அவர்கள், "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" என்று கேட்டனர். 

அதற்கு மறுமொழியாக இயேசு,

"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். 
(மத்தேயு நற்செய்தி 9:13)

வரி தண்டுபவர்ளைப் பற்றி பரிசேயர்கள் நினைத்தது போல  இயேசு நினைக்கவில்லை.

இயேசுவுக்குத் தெரியும் பரிசேயர்கள் உட்பட அனைத்து மனிதர்களும் பாவிகள் என்று.

அனைவரையும் மீட்கவே அவர் உலகுக்கு வந்தார்.

மீட்பு தேவையில்லாத நேர்மையாளர் யாரும் உலகில் இல்லை.

அன்னை மரியாள் கடவுளின் விசேட சலுகையினால் மீட்பின் பயனை தாய் வயிற்றில் உற்பவிக்கும் போதே பெற்றாள்.

அவளும் இயேசுவின் பாடுகளால் மீட்கப் பட்டவள் தான்.

மீட்புத் தேவையில்லாத நேர்மையாளர் உலகில் யாருமே இல்லை.

இயேசு பாவிகளை மீட்க வந்த கடவுள்.

 பாவிகள் மீது தனக்கு இருந்த முழுமையான அக்கறையை அழுத்திச் சொல்லவே (to stress) "நேர்மையளர்களை அல்ல"  என்கிறார்,

பள்ளிக்கு வருவது படிப்பதற்கு, விளையாடுவதற்கு அல்ல என்று ஆசிரியர் மாணவர்களிடம் சொல்வது போல.

இயல்பிலேயே மீட்புப் பெறத் தேவையில்லாத,  நேர்மையாளர் யாரும் இல்லை.

ஆனால் மீட்பின் பலனைப் பெற்று, அதாவது பாவ மன்னிப்புப் பெற்று பரிசுத்தவானாக மாற்றம் அடைந்து,

இறைவன் சித்தப்ப்படி நற்செயல்கள் புரிந்து வாழ்பவர் நேர்மையாளர்.

புனிதர்கள் அனைவரும் நேர்மையாளர்கள்.

30 ஆண்டுகள் பாவியாக வாழ்ந்த அகுஸ்தீனார் அவரது அன்னையின் செப வல்லமையால் மனம் திரும்பி நேர்மையாளராக மாறினார்.

நாம் வழிபடும் புனிதர்கள் அனைவரும் நேர்மையாளர்கள்.

ஆனாலும் நேர்மையாளர்கள் தொடர்ந்து நேர்மையாளர்களாக வாழ தொடர்ந்து கடவுளின் அருள் உதவி  அவசியம் தேவை.

மனம் திரும்ப மட்டுமல்ல புண்ணிய வாழ்வு வாழவும் ஆண்டவரின் அருள் உதவி கேட்டு தொடர்ந்து செபிக்க வேண்டும்.

ஏனெனில் உலகம் பாவச் சோதனைகள் நிறைந்தது.

கவனமாக வாழா விட்டால் எவ்வளவு பெரிய புண்ணியவானும் பாவத்தில் விழ வாய்ப்பு உண்டு.

நேர்மையாளர்களாக மாறியவர்களும் இறுதி வரை நேர்மையாளர்களாக வாழவும் இயேசுவின் பாடுகளின் பலன் தேவை.

பாவிகளாகிய நாம் மன்னிப்பு பெறவும் , பெற்ற பின்பு நாம் பாவத்தில் விழாமல் காப்பாற்றவும் நம்மைத் தேடி உலகிற்கு வந்தார் இயேசு.

மனம் திரும்பிய பாவிகளாய்ப் பயணித்து,

நேர்மையாளர்களாக நிலை வாழ்வுக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்

Monday, July 21, 2025

"ஆனால் அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை."(அரு. 20:14)



"ஆனால் அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை."
(அரு. 20:14)

இயேசு மரித்த மூன்றாம் நாள் காலையில்  உயிர்த்து விட்டார்.

அவரை அடக்கம் செய்திருந்த கல்லறை அருகில் அவர் மகதலா மரியாளுக்குக் காட்சி கொடுத்தார்.

ஆனால் அவள் அவர் இயேசு என்று அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

அவரைத் தோட்டக்காரர் என்று எண்ணிப் பேசிக் கொண்டிருந்தாள்.

நாமும் அநேக சமயங்களில் அப்படித்தான்.

இயேசுவைத் தேடுவோம்.

ஆனால் அவர் நம்மிடம் வரும்போது அவரை அடையாளம் கண்டு கொள்ள மாட்டோம்.

நண்பர் ஒருவர் காலையில் எழுந்து செபமாலை சொல்லும் போது ஆண்டவரின் பாடுகளைத் தியானித்துக் கொண்டிருந்தார்.

இயேசு சிலுவையைச் சுமந்து சென்றதைத் தியானிக்கும் போது 

நான் மட்டும் அங்கு  இருந்திருந்தால்  சிலுவையை அவரிடமிருந்து வாங்கி நானே சுமந்திருப்பேன் என்று நினைத்துக் கொண்டார்.

உண்மையிலேயே விசுவாச உணர்வோடு தான் அப்படி நினைத்தார்.

அவர் அலுவலகம் சென்று கொண்டிருந்த போது ஒருவர் அவர் ஏற்றிவந்த சைக்கிளை ஒரு மரத்தில் சாய்த்து வைத்து விட்டு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார்.

அவர் நண்பரைப் பார்த்தவுடன் கையசைத்தார்.

நண்பர் நின்று என்னவென்று கேட்டார்.

"தம்பி, என்ன காரணமோ தெரியவில்லை, சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது கிறுகிறுவென்று சைக்கிளோடு கீழே விழுந்து விட்டேன்.

உடம்பில் அடிபட்டிருக்கிறது.

சைக்கிளில் ஏறவும் முடியவில்லை, நடக்கவும் முடியவில்லை.

தயவுசெய்து உன் சைக்கிளில் அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு விட்டு விடேன்."

"ஆனால் நான் அலுவலகம் சென்று கொண்டிருக்கிறேன்.

உங்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றால் நான் சரியான நேரத்தில் அலுவலகம் செல்ல முடியாது.

ஏதாவது Auto வரும். அதில் ஏறிச் செல்லுங்கள்." என்று கூறிவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டார்.

அன்று மாலையில் படுக்கைக்குச் செல்லும் முன் வழக்கம் போல பைபிள் வாசித்துக் கொண்டிருந்தார்.

"அப்பொழுது அவர், "மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" எனப் பதிலளிப்பார்."
(மத்தேயு நற்செய்தி 25:45)

என்ற வசனத்தை வாசிக்க நேர்ந்தது.

அப்போது அன்று காலையில் அலுவலகம் செல்லும்   நடந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.

காலையில் செய்த செபமாலை தியானமும் நினைவுக்கு வந்தது.

மனதில் ஏதோ வலி ஏற்பட்டது.

"காலையில் அலுவலகம் செல்லும் போது இயேசுவைச் சந்தித்திருக்கிறேன்.

அவருக்கு உதவ மறுத்திருக்கிறேன்." என்ற எண்ணம் அவருக்கு வலியைக் கொடுத்தது.

ஆன்மீக ரீதியாக உலக மக்கள் அனைவரிலும் நாம் கடவுளைக் காண வேண்டும்.

ஏனெனில் அனைவரும் கடவுளின் சாயலில் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.

நாம் அனைத்து மக்களிலும் இயேசுவைப் பார்த்தால் நாம் யாருக்கு என்ன செய்தாலும் அதை இயேசுவுக்கே செய்வோம்.

யாரோடு எதைப் பகிர்ந்து கொண்டாலும் அதை இயேசுவோடே பகிர்ந்து கொள்கிறோம்.

நமது மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது இயேசுவோடே நமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம்.

மற்றவர்களின் துக்கத்தில் பங்கெடுக்கும் போது இயேசுவின் பாடுகளில் பங்கெடுக்கிறோம்.
மற்றவர்களை நமது வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கும்  இயேசுவையே விருந்துக்கு அழைக்கிறோம்.

யாரையாவது பகைமை பாராட்டினால் இயேசுவையே பகைமை பாராட்டுகிறோம்.

நாடு, இன, மொழி வேறுபாடின்றி அனைவரையும் நேசிப்போம், அனைவருக்கும் உதவி செய்வோம்.

லூர்து செல்வம்

Sunday, July 20, 2025

தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க வல்லவர் நம் இறைவன்.



தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க வல்லவர் நம் இறைவன்.

கடவுள் நன்மைத்தனத்தின் உருவம்.

God is all goodness.

நல்லதை மட்டும் நினைத்து, நல்லதை மட்டும் செய்பவர்.

மனிதனை நல்லவனாகத்தான் படைத்தார்.

ஆனால் அவன் செய்த பாவத்தின் காரணமாக கெட்டவனாக மாறி விட்டான்.

கெட்டவனாக மாறியவனை நல்லவனாக மாற்ற மீட்பின் திட்டத்தை வகுத்தார்.

மனிதர்கள் மத்தியில் தான் மீட்பின் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

அதற்காக கடவுளே மனிதனாகப் பிறக்கத் திட்டமிட்டார்.

அதற்காக ஒரு இனத்தைத் தேர்வு செய்யத் திட்டமிட்டார்.

கடவுளின் திட்டத்தில் குறை இருக்க முடியாது.

ஆனால் மனிதர்கள் குறை உள்ளவர்கள்.

தான் மனிதனாகப் பிறக்க தேர்வு செய்த இனம் இஸ்ரேல் இனம்.

இஸ்ரேல் இனத்தின் முதல் மனிதன் யாக்கோபு.

யாக்கோபை இஸ்ரேல் இனத்தின் தந்தையாக கடவுள் நித்திய காலமாகத் திட்டமிட்டு விட்டார்.

ஆனால் யாக்கோபும் ஆதாமைப் போல பரிபூரண சுதந்திரம் உள்ள மனிதன் தானே.

பரிபூரண சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஆதாம் பாவம் செய்தது போல யாக்கோபும் பாவம் செய்தார்.

என்ன பாவம்?

அண்ணனாகிய ஏசாவைப் போல வேடமிட்டு 

தந்தையை ஏமாற்றி 

அவர் ஏசாவுக்குக் கொடுக்கத் திட்டமிட்டிருந்த ஆசீர்வாதங்களை எல்லாம் அபகரித்துக் கொண்ட பாவம்.

இந்த வரலாற்றைப் பைபிளில் வாசிக்கும் போது ஒரு கேள்வி எழும்.

ஏன் இறைவன் ஒரு ஏமாற்றுக் காரனை
 தான் மனிதனாகப் பிறக்கயிருந்த இனத்தின் தந்தையாக தேர்ந்தெடுத்தார்?

ஆனால் கேள்வி தவறு.

கடவுள் ஒரு ஏமாற்றுக் காரனை அவர் மனிதனாகப் பிறக்கயிருந்த இனத்தின் தந்தையாகத் தேர்ந்தெடுக்கவில்லை.

எப்படி ஆதாமைப் பாவம் செய்தவனாகப் படைக்கவில்லையோ

அப்படியே பாவம் செய்தவனை, தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தின் தந்தையாக தேர்வு செய்யவில்லை.

எப்படி  பரிசுத்தமானவனாகப் படைக்கப்பட்ட ஆதாம் பாவம் சேய்தாரோ

இறைவனால் தேர்வு செய்யப்பட்ட யாக்கோபு பாவம் செய்தார்.

இருவருடைய பாவத்துக்கும் கடவுள் பொறுப்பல்ல.

ஆனால்  இவர்கள் செய்த தீமையிலிருந்து கடவுளுடைய ஆற்றலை நாம் அறிகிறோம்.

என்ன ஆற்றல்?

தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க முடியும் என்ற ஆற்றல்.

யாக்கோபு செய்தது தீமை.

ஆனாலும் அத்தீமையின் மூலமாக ஈசாக்கின் ஆசீர்வாதங்கள் யாக்கோபுக்கு வந்தன.

அந்த ஆசீர்வாதங்கள் அவனுடைய வாழ்வில் உதவிகரமாக இருந்தன.

"வானின் பனித்துளியும் மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திராட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக! 

நாடுகள் உனக்குப் பணி புரிந்திடுக! மக்கள் உனக்குப் பணிந்திடுக! உன்றன் சோதரர்க்குத் தலைவன் நீ ஆகிவிடுவாய்! உன் அன்னையின் மைந்தர் உன்னடி பணிந்திடுவர்! உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக! உன்னை வாழ்த்துவார் வளமுற வாழ்க!" 
(தொடக்கநூல் 27:28,29)

இவை யாக்கோபு பெற்ற ஆசீர்வாதங்கள்.


"ஆண்டவர் அவரை நோக்கி, "உன் கருப்பையில் இரு இனங்கள் உள்ளன; உன் வயிற்றிலிருந்தே ஈரினத்தார் பிரிந்திருப்பர். ஓர் இனம் மற்றதைவிட வலிமை மிக்கதாய் இருக்கும் மூத்தவன் இளயவனுக்குப் பணிந்திருப்பான் என்றார்."
(தொடக்கநூல் 25:23)

இவை ஏற்கனவே ரெ‌பேக்காளிடம் கடவுள் கூறியிந்த வார்த்தைகள்.

எப்படி ஆதாமைப் படைக்கும் போதே அவன் பாவம் செய்வான் என்று கடவுளுக்குத்  தெரியுமோ அப்படியே யாக்கோபைப் படைக்கத் திட்டமிட்டபோதே அவன் பாவம் செய்வான் என்று அவருக்குத் தெரியும்.

ஆனால் அவருக்குத் தெரிந்ததால் அவன் பாவம் செய்யவில்லை.

அவர் தன் ஞானத்தினால் பின்னால் நடக்கப் போகின்றவற்றை அறிந்திருந்தார்.

ஆனாலும் தீமை தீமைதான். அதை நியாயப்படுத்த முடியாது.

அத்தீமையிலிருந்து கடவுள் நன்மையை வரவழைத்தார்.

யாக்கோபுக்குப் பிறந்த 12 புதல்வர்களின் வழி வந்தவர்கள் இஸ்ரேல் மக்கள்.  

இயேசு நம்மை எப்படி மீட்டார்?

தனது பாடுகளாலும், சிலுவை மரணத்தினாலும்.

அவரது பாடுகளுக்கும் மரணத்துக்கும் காரணம் யார்?

யூத மதத் தலைவர்கள்.

அவர்கள் செய்தது மிகப்பெரிய பாவம்.

மெசியாவைக் கொன்றது மிகப்பெரிய தீமை.

ஆனாலும் இந்தத் தீமையிலிருந்து தானே மனித குல மீட்பு என்ற மகத்தான நன்மையை இயேசு வரவழைத்தார்!

 "கடவுள் தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க வல்லவர்."

ஆனால் இதற்கு  கடவுள் பாவத்தை அங்கீகரிக்கிறார் என்று பொருள் அல்ல.

மாறாக, கடவுளின் ஞானமும், வல்லமையும் அளப்பரியது என்றுதான் பொருள்.

 மனிதர்களின் குறைகள், தவறான தேர்வுகள், ஏன் அவர்களின் தீய நோக்கங்கள் கூட, அவரது  திட்டங்களை நிறைவேற்றுவதைத் தடுக்க முடியாது. 


மாறாக, அவற்றைக்கூட அவர் தன் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


யாக்கோபின் ஏமாற்று வேலை மூலமாக தந்தையின் ஆசீர்வாதம் அவனுக்குக் கிடைத்தது. அவனது ஏமாற்று வேலையை ஒரு பெரிய நன்மைக்குக் கடவுள் பயன்படுத்திக் கொண்டார்.

யூத மதத் தலைவர்களின் கொலைவெறி மூலம் இயேசுவின் சிலுவை மரணம் நிகழ்ந்தது.

அவர்கள் செய்த தீமையை நம்மை மீட்பதற்கு‌க் கடவுள்  பயன்படுத்திக் கொண்டார்.

மனிதனின் புரிதலுக்கு அப்பாற்பட்டது தெய்வீக ஞானம்.

இந்த உண்மை நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது. 

மனிதச் சமுதாயத்தில் எப்பேர்ப்பட்ட இருண்ட சூழ்நிலைகள் வந்தாலும்,

 கடவுளால் அவற்றிலிருந்து நன்மையை வரவழைக்க முடியும்.

தனது திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

நமது பாவங்களைவிட கடவுளின் ஞானமும் வல்லமையும் பெரியன.

இன்றும் கூட கிறித்தவத்துக்கு எதிராக நமது மத்திய அரசே செயல்படுகிறது.

இதிலிருந்து எப்படி நன்மையை கொண்டு வருவது என்று கடவுளுக்குத் தெரியும்.


. லூர்து செல்வம்

Saturday, July 19, 2025

"எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்."(லூக்கா நற்செய்தி 11:3)

"எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்."
(லூக்கா நற்செய்தி 11:3)

மனிதன் பயன்படுத்த அனைத்து பொருட்களையும் படைத்து விட்டுதான் கடவுள் மனிதனைப் படைத்தார்.

ஆதிகாலம் முதல் இந்நாள் வரை மனிதன் ஏற்கனவே தனக்கென இறைவனால் படைக்கப்பட்ட பொருட்களைத்தான்  பயன்படுத்தி வருகிறான்.

ஆக கடவுள் மனிதருக்கு வேண்டியதை ஏற்கனவே படைத்து சேமித்து வைத்து விட்டார்.


நாம் செய்ய வேண்டியதெல்லாம் அன்றன்றைக்கு வேண்டியதை அன்றன்று எடுத்துப் பயன்படுத்த வேண்டியதுதான்.

அன்றன்றைக்கு வேண்டியதை அன்றன்று  எடுப்பதற்காகத் தான் நாம் தினமும் உழைக்கிறோம்.

அனைத்துப் பொருட்களும் அனைவருக்கும் பொது.

ஒருவர் தன் உழைப்பின் மூலம் ஈட்டிய பொருள் பல நாள் பயன்பாட்டுக்குப் போதுமென்றால் 

அன்றைக்குத் தேவையானதை வைத்துக் கொண்டு மீதமிருப்பதைத் தேவைகள் உள்ள நமது பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இது இயேசுவின் விருப்பம்.

அனைவரும் இயேசுவின் விருப்பப்படி நடந்தால் உலகில் தேவைகள் நிறைவேறாமல் யாரும் இருக்க மாட்டார்கள்.

யாரும் பட்டினி கிடக்க மாட்டார்கள்.

ஆனால் நாம் அனைவருமே எதிர் காலத்துக்காக சேமித்து வைப்பதை ஊக்குவிக்கிறோம்.

"அன்றாட உணவை இன்று தாரும்" நம்  தந்தையிடம் வேண்டிக் கொண்டே எதிர் காலத்துக்காக சேமித்து வைக்கிறோம்.

இது உண்மையில் தந்தையின் மீது நமக்கு விசுவாசம் இல்லை என்பதைக் காட்டுகிறது.


 "விசுவசிப்பவர்கள் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 

பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று கூறினார். 
(மாற்கு நற்செய்தி 16:17,18)

இயேசு கூறியுள்ள எதையாவது நம்மால் செய்ய முடிகிறதா?

முடியவில்லை.

காரணம்?

" உங்களுக்குக் கடுகளவு விசுவாசம் இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து" இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ" எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் " 
(மத்தேயு நற்செய்தி 17:20)

இயேசு கூறிய எதையும் நம்மால் செய்ய முடியாமைக்குக் காரணம் நம்மிடம் கடுகளவு கூட விசுவாசம் இல்லாமைதான்.

புனித அந்தோனியாரால் கோடிக்கணக்கில் புதுமைகள் செய்ய முடிந்தது, காரணம் அவருடைய முழுமையான விசுவாசம்.

நாம் அந்தோனியார் பக்தர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம்.

அவரிடம் நமக்கு வேண்டியதைக் கேட்குமுன் நம்முடைய விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொள்வோம்.

வேலைக்கு விண்ணப்பிக்குமுன் நாம் தகுதித் தேர்வு வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ் கையில் இருக்க வேண்டும்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

விசுவாசம் இல்லாமல் கொடுக்கப்பட மாட்டாது.

கர்த்தர் கற்பித்த செபம் வேண்டுதல் மட்டுமல்ல,

அதைத் தியானத்துடன் செபித்தால் அது நமது வாழ்க்கை.

இன்றைய வசனத்தை நம்மை மையமாக வைத்துத் தந்தையிடம் செபித்தால் நமது வாழ்க்கை எப்படி இருக்கும்?

"தந்தையே, நாங்கள் யாவரும் உமது பிள்ளைகள்.

பிள்ளைகள் என்ற முறையில் உமக்கு உரியவை  அனைவருக்கும் உரியவை.

உணவை மட்டுமல்ல, நீர் படைத்த அனைத்துப் பொருட்களையும் நாங்கள் அனைவரும் பயன்படுத்துகிறோம்.

ஒவ்வொரு நாளும் எங்களிடம் அதிகமாய் இருப்பதை அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம்.

இல்லாததை மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கோள்ககிறோம்.


அனைவரும் அனைத்தையும் பகிர்ந்து வாழ்ந்தால் உமது மகிமைக்காக அனைவரும் அனைவருக்காகவும் வாழ்வோம்.

இன்றைய உணவை இன்று தந்ததுபோல நாளைய உணவை நாளைக்குத் தருவீர் என்று உறுதியாக நம்புகிறோம்."

விண்ணகத் தந்தையை "எனது தந்தை " என்று அல்ல, "எங்கள் தந்தையே" என்று அழைக்கும் படி தான் இயேசு கற்றுத் தந்தார்.

ஆகவே ஒவ்வொரு முறை கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும் போதும் மனுக் குலத்தைச் சேர்ந்த அனைவருக்காகவும்  வேண்டுகிறோம். 

தினமும் அனைத்து மனிதர்களுக்கும் உணவு அளிக்கும் படி வேண்டுகிறோம்.

மனிதர்கள் அனைவரும் நமது சகோதர சகோதரிகள் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் வேண்டுகிறோம். 

நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து, ஒருவரிடம் இருந்து ஒருவர் பெற்று வாழ வேண்டும் என்ற குடும்ப உணர்வோடு வேண்டுகிறோம். 

இந்த செபம் அனைவரின் வாழ்க்கையாக மாற வேண்டும் என்பதுதான் நமது விண்ணகத் தந்தையின் விருப்பம்.

தந்தையின் விருப்பம் நிறைவேற விசுவாச உணர்வோடு அனைவரும் செபித்து, அதன்படி வாழ்ந்தால் அனைவரும் நிலைவாழ்வு பெறுவது உறுதி.

லூர்து செல்வம்

Friday, July 18, 2025

"பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்."(மத்தேயு நற்செய்தி 12:14)



"பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்."
(மத்தேயு நற்செய்தி 12:14)

பரிசேயர்கள் யூதர்கள்.
இயேசுவும் யூதர்தான்.

ஏன் பரிசேயர்கள் தங்கள் இனத்தைச் சேர்ந்த இயேசுவை ஒழிக்க சூழ்ச்சி செய்தார்கள்?

ஏனெனில் இயேசு உண்மையைப் பேசினார்.

இயேசுவின் பேச்சைக் கேட்பதற்காக மக்கள் கூட்டம் அவர் சென்ற‌ இடமெல்லாம் சென்றது.

இயேசு தன்னைப். பின்பற்றி வந்தவர்களை உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் குணப்படுத்தினார்.

மக்கள் கூட்டம் அவர் பின்னால் சென்றது பரிசேயர்களுக்குப் பிடிக்கவில்லை.

அவர்கள் சட்டம் பயின்றவர்கள்.
தங்கள் சொற்படி தான் மக்கள் வாழ வேண்டும் என்று ஆசைப் பட்டவர்கள்.

சட்டத்தின் நோக்கத்தை விட்டு விட்டு அதன் எழுத்தை மட்டும் பின் பற்றியவர்கள்.

ஓய்வு நாளின் நோக்கம் அதை இறைவனுக்காக வாழ்வதுதான்.

இறை அன்பும் பிறர் அன்பும் தான் ஓய்வுநாள் வாழ்வின் அடிப்படை.

இயேசு ஓய்வு நாளில் நோயாளிகளைக் குணமாக்கினார்.

ஆனால் பரிசேயர்கள் அதை ஓய்வு நாளில் செய்யக்கூடாத வேலை என்றார்கள்.

ஆனால் அது வேலையே இல்லை, பிறர் உதவி.

 இயேசு  "ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை" என்றார். 
(மத்தேயு நற்செய்தி 12:12)

மனிதாபிமானத்தின் அடிப்படையில் செய்யப்படும்  உதவி ஓய்வு நாளுக்கு எதிரானது அல்ல.


 இயேசு ஓய்வு நாளில் கை சூம்பியவரைக் குணமாக்கியபோது

பரிசேயர்கள்  இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். 

சாதாரண மக்கள் எங்கே இயேசுவைப் பின்பற்றி தங்கள் முக்கியத்துவத்தைக் குறைத்து விடுவார்களோ என்று பயந்தார்கள்.

அதனால் தான் இயேசுவைக் கொல்வதிலேயே குறியாக இருந்தார்கள்.

பரிசேயர்களைப் பற்றி சிந்திக்கும் நாம் வாழும் இக்காலத்தை உற்று நோக்கினால் இக்காலத்திலும் பரிசேயர்கள் (நோக்கத்தின்படி வாழாதவர்கள்) இருப்பது புரியும்.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்குச் செல்ல வேண்டும் என்பது தாய்த்திருச்சபையின் போதனை.

இப்போதனையின் நோக்கம் என்ன?

ஞாயிற்றுக்கிழமை ஆண்டவருடைய நாள். 

அந்நாளில் ஆண்டவருக்காக மட்டுமே தான் வாழ வேண்டும்.

வாழ் நாள் முழுவதுமே ஆண்டவருக்காக மட்டும்தான் வாழ வேண்டும், ஆனால் அன்று நமது லௌகீகம் சார்ந்த பணிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ஆன்மீகம் சார்ந்த பணிகள் மட்டும் செய்ய வேண்டும்.

பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெறுதல்,
குருவானவரோடு சேர்ந்து இயேசுவைத் தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுத்தல், 
திரு விருந்து அருந்துதல்,
சுகமில்லாதவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுதல்,
உணவில்லாதவர்களுக்கு உணவு கொடுத்தல்,
வருந்துவோருக்கு ஆறுதல் கூறுதல் 

போன்ற ஆன்மீகம் சார்ந்த பணிகளைச் செய்ய வேண்டும்.

நாம் ஞாயிறு திருப்பலிக்குச் செல்கிறோம்.

எத்தனை பேர் பாவ மன்னிப்புப் பெற பாவ சங்கீர்த்தனம் செய்கிறோம்?

எத்தனை பேர் பராக்குக்கு இடம் கொடுக்காமல் திருப்பலியில் மட்டும் கவனம் செலுத்துகிறோம்?

எத்தனை பேர் திவ்ய நற்கருணை நாதரை இறைவனுக்குரிய ஆராதனை உணர்வோடு முழங்கால் படியிட்டு வாங்குகிறோம்?

எத்தனை பேர் திருப்பலி முடிந்த பிறகு பத்து நிமிடங்களாவது நற்கருணை நாதருக்கு நன்றி கூறுகிறோம்?

எத்தனை பேர் நாள் முழுவதும் நற்கருணை நாதரின் பிரசன்னத்தில் வாழ்கிறோம்?

எத்தனை பேர் திருப்பலி முடிந்த பின் பிறருதவிப் பணிகள் செய்கிறோம்?

கோவிலுக்கு வந்து திருப்பலி நேரத்தில் அமைதியாக இருந்து விட்டு வீட்டுக்குப் போனால் எழுத்து அளவில் கடமை முடிந்து விட்டது. அவ்வளவுதான்.

திருமுழுக்கு, திருமணம் ஆகியவை தேவத்திரவிய அனுமானங்கள்.

நம் மக்களுக்கு குழந்தைக்குத் திருமுழுக்குக் கொடுக்கும்போது குழந்தையின் சென்மப் பாவம் மன்னிக்கப் பட்டு விட்டது என்பதால் ஏற்படும்  மகிழ்ச்சியை விட 

விருந்தினர்களோடு உணவு உண்ணும்போது ஏற்படும் ஏற்படும் மகிழ்ச்சிதான் அதிகமாக இருக்கும்.

கோவிலில் இறைவன் முன்னிலையில் ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக மந்திரிக்கப் படும் போது பக்தி உணர்வு ஏற்பட வேண்டும்.

ஆனால் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பவர்களைப் பார்க்கும் போது ஏதோ சினிமா Shooting எடுக்கிற உணர்வு தான் ஏற்படுகிறது.

திருமணத் தேவத்திரவிய அனுமானத்துக்கு அத்தியாவசியமானவை பெண், மாப்பிள்ளை, சம்மதம்,  ஆகிய மூன்றும்தான்.

திருமணம் எனும் தேவத்திரவிய அனுமானத்தை நிறைவேற்றுபவர்கள் மணமக்களே.

குருவானவர் திருச்சபையின் அதிகாரப்பூர்வமான சாட்சி.
அவர் முன்னிலையில் இறைவனுடைய ஆசீரோடு திருமணம் நடைபெறூகிறது.

ஆனால் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது தேவத்திரவிய அனுமானத்தோடு சம்பந்தம் இல்லாத நகைகள், வரதட்சணைப் பணம், ஆடம்பரமான வரவேற்பு, பரிசுகள், விருந்து ஆகியவற்றுக்குதான் 

பெண் பார்க்கப் போகும் போது பெண் பக்தி உள்ளவளா என்பதைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள்.

ஆனால் எவ்வளவு நகை போடுவார்கள், எவ்வளவு வரதட்சணை கொடுப்பார்கள் என்றுதான் கேட்பார்கள்.

மக்களைப் பொறுத்தவரை விருந்து நன்றாக இருந்தால் திருமணம் நன்றாக இருந்தது.

புது நன்மை வாங்கும் விழாவில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவது இயேசுவின் வருகையிலா, 

வீட்டில் விருந்தினரோடு கொண்டாடப்படும் விழாவிலா?

ஆன்மீக நிகழ்ச்சிகளில் லௌகீக அம்சங்களே முக்கியம் பெறுகின்றன.

கோவில் திருவிழாக் கொண்டாட்டங்களில் கூட மக்கள் பக்தியை விட ஆடம்பரத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

மக்கள் சட்டம் படிக்காத பரிசேயர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் மாற வேண்டும். இயேசுவுக்காக, இயேசுவுக்காக மட்டும் வாழ வேண்டும்.

இயேசுவின் சிலுவை மரணத்துக்கு நமது பாவங்களே காரணம் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

மனம் திரும்புவோம்.

மன்னிப்பு பெறுவோம்.

லூர்து செல்வம்

Thursday, July 17, 2025

"உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து." (மத்தேயு நற்செய்தி 22:37)



 "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து." 
(மத்தேயு நற்செய்தி 22:37)


நம்மிடம் இருப்பது ஒரு இருதயம், ஒரு உள்ளம், ஒரு மனம்.

நமது முழு இருதயத்தையும், முழு உள்ளத்தையும், முழு மனதையும் இறைவனை அன்பு செய்யப் படுத்த வேண்டும் என்று இயேசு சொல்கிறார்.

இந்த வசனத்தைச் சிந்திக்காமல் கேட்பவர்கள் மனதில் ஒரு கேள்வி எழும்.

நம்மிடம் உள்ள அத்தனை ஆற்றல்களையும் கடவுளுக்குக் கொடுத்து விட்டால் நம்மை    எதை வைத்து அன்பு செய்ய?

நம்மை அன்பு செய்யா விட்டால் 

"உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்ற கட்டளையை எப்படி நிறைவேற்ற?

ஆனால் சிறிது சிந்தித்தால் இந்த கேள்விகள் எழாது.

அனைத்தையும் படைத்த கடவுள் அனைத்திலும் இருக்கிறார்.
அனைத்தும் அவருக்குள் இருக்கின்றன.

ஒருவர் தனது மாதச் சம்பளம் முழுவதையும் தனது மனைவியிடம் கொடுத்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன் பெறுவர்.

நாம் நம் அன்பு முழுவதையும் கடவுளுக்குக் கொடுத்து விட்டால் அது அவருள் இருக்கிற நமக்கும் நமது பிறருக்கும் போய்ச் சேரும்.

இயேசு கொடுத்த .இரண்டு கட்டளைகளும் இணையானவை.

இயேசு முதல் கட்டளையைக் கூறிவிட்டு இரண்டாவது கட்டளையை 
 
"இதற்கு இணையான இரண்டாவது கட்டளை." என்கிறார்.

அப்படியானால் இயேசு முதல் கட்டளையோடு நிறுத்தியிருக்கலாமே!

நாமும் நமது பிறரும் இறைவனுள் இருக்கிறோம் என்பதை நமக்கு புரிய வைப்பதற்காகவே இரண்டாவது கட்டளை.

நமது முழு இருதயத்தோடு இறைவனை நேசிக்கும் போது நாம் அவருள் இருக்கிற மனுக்குலம் முழுவதையும் நேசிக்கிறோம்.

நம்மோடு பிற மதத்தவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் உட்பட அனைவரும் சேர்ந்து தான் மனுக் குலம்.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நாத்திகவாதியை நாம் வெறுத்தால் கூட நாம் முதல் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை.

நம்மைப் பகைப்பவர்களையும் நாம் நேசிக்க வேண்டும் என்பதுவும் இயேசுவின் கட்டளை தான்.

இறைவன் நல்லவர்களை நேசிப்பது போல தீயவர்களையும் நேசிக்கிறார்.

உண்மையில் தீயவர்களைத் தேடிதான் உலகத்துக்கே வந்தார்.

இயேசு,  "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். 
(மாற்கு நற்செய்தி 2:17)

கடவுள் கெட்டவர்களைத் தேடி வந்திருக்கும்போது நாம் அவர்களை வெறுக்கலாமா?

பாவிகளை மீட்கவே தந்தை இறைவன் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.

மகன் அதே நோக்கோடு தான் தன் சீடர்களை உலகெங்கும் அனுப்பினார்.

நமது ஆன்மீகப் பணியின் நோக்கமும் அதுவே.

இப்பணியை நாம் சிறப்புறச் செய்வது தந்தை இறைவனின் மாட்சிக்காகவே.

இறைவனை முழு இருதயத்தோடு நேசிப்பவர்கள் உறுதியாக அயலானையும் நேசிப்பார்கள்.

ஒருவன் தன் அயலானை நேசிக்காவிட்டால் அவன் கடவுளை நேசிக்கவில்லை என்று தான் அர்த்தம்.

இறைவனை நேசிப்பவன்தான் தன்னையும் நேசிக்கிறான்.

இறைவனை நேசிக்காமல் பாவம் செய்பவன் தன்னை நேசிக்கவில்லை.

இறைவனை முழுமையாக அன்பு செய்வோம்.

இறைவனை அன்பு செய்யும் போது அவருள் இருக்கிற நம்மையும், நமது பிறனேயும் அன்பு செய்கிறோம். ன

லூர்து செல்வம்.

Wednesday, July 16, 2025

துன்ப வேளையிலும் இன்ப வேளையிலும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.



துன்ப வேளையிலும் இன்ப வேளையிலும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

நாம் வளமாக வாழ வேண்டும் என்று இறைவன் விரும்பினால் 
"உமது விருப்பப்படியே நடக்கட்டும் ஆண்டவரே!"  என்கிறோம்.

"உமது சித்தம் எனது பாக்கியம் 
என்று மகிழ்ச்சி பொங்க என்கிறோம்.

நாம் துன்பப்பட வேண்டும் என்பது இறைவனது சித்தமானாலும்

வளமான காலத்தில் இருந்த மகிழ்ச்சி அப்படியே தொடர வேண்டும்.

நமது மகன் பொதுத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று பெற்றால்,

நாம் கூறும் 
"இறைவா உமக்கு, நன்றி." .

மிகக் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தாலும் 

 கூறப்பட வேண்டும்.

நாம் நன்றி சொல்வது மகனுடைய செயல்பாட்டுக்காக அல்ல, ‌இறைவனின் சித்தம் நிறைவேறியதற்காக.

நாம் பிறந்த பிறகுதான் நமது பெற்றோர் யாரென்று நமக்குத் தெரியும்.

ஆனால் நாம் எந்த நாட்டில், எந்த ஊரில், யார் யாருக்கு, எப்படிப் பிறக்க வேண்டும் என்பது‌ இறைவனுடைய நித்திய காலத் திட்டம்.

அவரன்றி அணுவும் அசையாது.

நாம் இயங்குவது இறைவன் அருளால்.

நம்மை இயக்குவதற்கு இறைவனுக்கு ஏன்  நன்றி கூற வேண்டும்?

இதற்கு இரண்டு படிநிலைகள் உள்ளன

முதலில் ஒரு ஒப்புமையைக் கூறுவோம்.

சிறு பிள்ளைகளாக இருக்கும் போது எதற்காக சாப்பிட்டோம்?

பசித்தது, பசியை நீக்க சாப்பிட்டோம்.

பசித்தால் அழுவோம், அம்மா பால் தருவார்கள்.

இப்போதும் பசி இருக்கிறது, அதோடு வேறொரு காரணமும் இருக்கிறது.

எதற்காக பிரியாணியை விரும்பிச் சாப்பிடுகிறோம்?

அதன் ருசிக்காக.

பசியில்லா விட்டாலும் ருசியான உணவைச் சுவைத்துச் சாப்பிடுகிறோம்.

கடவுள் நம்மைப் படைத்தது அவருடைய நலனுக்காக அல்ல.

அவர் சுயமாக எல்லா நன்மைகளாலும் நிறைந்தவர்.

நம்மால் அவருடைய அளவில்லாத நலனை அதிகரிக்க முடியாது.

குறைந்த நீருள்ள பாத்திரத்தை நிறப்பலாம்.

நீர் நிறைந்த பாத்திரத்தில் நம்மால் நீரை ஊற்ற முடியாது.

ஆரம்பத்தில் நமது நலனுக்காகத்தான் அவருக்கு நன்றி கூறுகிறோம்.

அவர் நம்மைப் படைத்ததும் நமது நன்மைக்காக.

நாம் அவருக்கு நன்றி கூறுவதும் நமது நன்மைக்காகத்தான்.

நாம் இறைவனுக்கு நன்றி உள்ளவர்களாக வாழ்ந்தால் அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

இறைவனை நன்றியோடு எண்ணி எண்ணி சுவைக்க ஆரம்பித்து விட்டால் பிறகு அவரை அவருக்காகவே நன்றியோடு நேசிக்க ஆரம்பிப்போம்.

அவருடைய நன்மைத்தனத்தை எண்ணிப் பார்த்து, அவரது பண்புகளால் ஈர்க்கப்பட்டு அதற்காகவே அவரை நேசிப்போம்.

புனிதர்கள் இறைவனை இறைவனுக்காகவே நேசித்தார்கள்.

ஆகவேதான் நாம் நமக்கு என்ன நேர்ந்தாலும் அவருக்கு நன்றி கூற வேண்டும்.

பழைய ஏற்பாட்டு யோபு அவருடைய வளங்களை எல்லாம் இழந்த போதும்


"என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; 

அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்;

 ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக்கொண்டார். 

ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!" என்றார். 
(யோபு 1:21)

தன் உடமைகளை எல்லாம் இழந்த போதும் அதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறார்.

நமது வாழ்வில் துன்பங்கள் தற்செயலாக வருவதில்லை.

இறைவனுடைய அனுமதி இன்றி எந்த துன்பமும் நமக்கு நேராது.

உலகில் நம்மைப் பிடிக்காத சிலர் நமக்குத் துன்பத்தைத் தந்திருக்கலாம்.

கடவுளுக்குத் தெரியாமல் நமக்கு யாரும் எதுவும் செய்ய முடியாது.

கடவுள் அதைத் தடுக்காவிட்டால் நமது நன்மைக்காக அதை அவர் அதை அனுமதிக்கிறார் என்று அர்த்தம்.

துன்பம் ஒரு தீமை அல்ல.
பாவம் மட்டும் தான் தீமை.

இறைவனின் கட்டளையை மீறி நாம் செய்வது பாவம்.


நம்முடைய விருப்பம் கடவுளுடைய விருப்பத்தோடு ஒன்றாக இருக்கும் போது, நாம் பாவம் செய்ய மாட்டோம். 

அவர் நமக்கு எதைக் கொடுத்தாலும்,

 வளத்தைக் கொடுத்தாலும்  வறுமையைக் கொடுத்தாலும்,

 சுகத்தைக் கொடுத்தாலும்  நோயைக் கொடுத்தாலும்

வெற்றியைக் கொடுத்தாலும்  தோல்வியைக் கொடுத்தாலும்,

 வாழ்வைக் கொடுத்தாலும்  மரணத்தைக் கொடுத்தாலும் 

 நன்றியுடன் ஏற்றுக்கொள்வோம்.

ஏனெனில் அவர் நல்லவர்.

நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா?
இறைவன் போற்றப் படுவாராக.

நாம் நோய் நொடியால் துன்பப் படுகிறோமா?
இறைவன் போற்றப் படுவாராக.

நாம் வளமாக இருக்கிறோமா?
இறைவன் போற்றப் படுவாராக.

நாம் வறுமையில் வாடுகிறோமா?
இறைவன் போற்றப் படுவாராக.

நாம் விபத்தில் மாட்டிக்கொண்டோமா?
இறைவன் போற்றப் படுவாராக.

நாம் சுகமாகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
இறைவன் போற்றப் படுவாராக.

நாம் மரணம் அடைவது உறுதியா?
இறைவன் போற்றப் படுவாராக.

நமது விருப்பம் இறைவனுடைய விருப்பத்தோடு ஒன்றித்து இருந்தால்,

மரணத்தால் கூட நம்மை அவரிடமிருந்து பிரிக்க முடியாது.

என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

நமக்கு ஏதாவது கிடைக்கும் என்பதற்காக அல்ல, அவரது நன்மைத்தனத்தால் (Goodness) ஈர்க்கப்பட்டு அவருக்கு நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்.

Tuesday, July 15, 2025

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். (மத்.7:7)



கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். (மத்.7:7)


"தம்பி, உட்கார். என்ன பிரச்சினை?"

"தெரியல, டாக்டர்.  உடம்புக்கு சரியில்லை. என்ன பிரச்சினைன்னு தெரியல.'

"உன்னுடைய உடம்புக்கு என்ன பிரச்சினைன்னு உனக்கே தெரியலையா?"

"உடம்பு என்னுடையதாக இருக்கலாம். ஆனால் அதை நான் உண்டாக்கவில்லையே. என்னால் 
கை, கால், தலை ஆகியவற்றைத் தான் பார்க்கவே முடியும்.

என் முகத்தைத் கூட என்னால் பார்க்க முடியாது. 

உடலுக்கு உள்ளே உள்ள உறுப்புகள் எது எது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது.

பிரச்சினை அவற்றில்தான் இருக்க வேண்டும்."

"என்னாலும் அவற்றைப் பார்க்க முடியாது. Scan எடுத்துப் பார்ப்போம்."

"மன்னிக்க வேண்டும். நீங்கள் இது விடயமாக நான் பார்க்கும் நான்காவது டாக்டர். மற்ற மூவரும் நீங்கள் சொன்னபடி தான் சொன்னார்கள். மூவரும் scan எடுத்தார்கள்."

"என்ன சொன்னார்கள்?"

"டாக்டர், ஐந்தும் மூன்றும் எத்தனை என்று யாரிடம் கேட்டாலும் எட்டு என்று தான் சொல்வார்கள்.
யாராவது ஒன்பது என்று சொன்னால் அவருக்குக் கணக்குத் தெரியாது என்று அர்த்தம் ""

"அதாவது மூன்று பேரும் வெவ்வேறு விதமாகச் சொன்னார்கள். யாரும் உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை.

அப்போ என்னாலும் கண்டுபிடிக்க முடியாது என்கிறாய். அப்படித்தானே."

"அப்படியேதான்."

"பிறகு ஏன் என்னிடம் வந்தாய்?"

'அது என்னுடைய அறியாமை."

"அப்போ ஒன்று செய். எல்லாம் அறிந்தவர் கடவுள் மட்டும் தான்.

முழுப் பாரத்தையும் அவர்மேல் போட்டு விடு.  டாக்டர் என்ற முறையில் நானும் பார்க்கிறேன். ஆனால் கடவுள் நினைத்தது தான் நடக்கும்."

"சரி, டாக்டர் அப்படியே செய்கிறேன்."
                  ************

சுகம், சுகமின்மை என்றால் நாம் நினைப்பது நமது உடலை மட்டும் தான்.

உடல் உறுப்புகள் பிரச்சினை இல்லாமல் இயங்கினால் நாம் சுகமாக இருக்கிறோம், பிரச்சினை ஏற்பட்டால் நமக்குச் சுகமில்லை என்பது நமது எண்ணம்.

ஆனால் நம்மைப் படைத்த கடவுள் நமது உடலை மட்டும் படைக்கவில்லை.

உடலையும் ஆன்மாவையும் படைத்தார்.

நமது உடலை உயிரோடு வாழ வைப்பது ஆன்மா தான்.

ஆன்மா பிரிந்து விட்டால் உடலால் அசையக்கூட முடியாது. அது பிணமாகிவிடும்.

உண்மையில் நாம் என்றால் நமது ஆன்மா தான்.

ஆனால் உடலைப் பற்றி அக்கறை எடுக்கும் நாம் ஆன்மாவைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.

உடலுக்கு ஒரு சிறிய நோய் வந்தாலும் டாக்டரிடம் ஓடுகிறோம்.

ஆன்மாவுக்கு நோய் வந்தால்?

பாவம் தான் ஆன்மாவுக்கான நோய்.

ஆன்மா பாவத்தில் விழ நேரிட்டால் அதிலிருந்து சுகம் பெற கடவுளிடம் ஓடுகிறோமா?

கடவுளை நோக்கி 'ஓட' வேண்டிய அவசியம் இல்லை, அவர் எப்போதும் நம்முடன் தான் இருக்கிறார்.

நமது பாவங்களுக்காக மனம் வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்கிறோமா?

அவர் கேட்டுக் கொண்டபடி அவருடைய பிரதிநிதியாகிய குருவானவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்கிறோமா?

நாம் செய்யும் ஆன்மீக செயல்களில் கூட உடல் மட்டும் தானே இயங்கிக் கொண்டிருக்கிறது.

செபமாலை செபிக்கும்போது கை செபமாலை மணிகளை உருட்டுகிறது.

வாய் செபத்தைச் சொல்கிறது.

மனம் தியானிக்கிறதா?

திருப்பலிக்குப் போகும் போது உடல் கோவிலில் தான் இருக்கிறது.

கண் பீடத்தின் மீது தான் இருக்கிறது.

காதில் பிரசங்கம் விழுகிறது, செபம் விழுகிறது, பாட்டு விழுகிறது.

மனம்?

பிரசங்கம் எப்போது முடியும்?
பூசை எப்போது முடியும்?
எவ்வளவு கறி வாங்கலாம்?
TV யில் என்ன‌படம் போடுவான்?

என்று சுற்றிக் கொண்டிருந்தால்,

தண்ணீர் மேல் படாமல் குளித்தால் உடலுக்கு எப்படி இருக்குமோ அப்படி ஆன்மாவுக்கு இருக்கும்.

உடல் நலமாக இருக்க வேண்டுமென்றால்
 சத்துள்ள ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும்.

ஆன்மா  நலமாக இருக்க வேண்டுமென்றால் அதற்குக் கொடுக்க வேண்டிய சத்துள்ள உணவு செபமும், நற் செயல்களும்.

செபத்தின் மூலம் ஆன்மா இறைவனோடு ஒன்றித்திருக்கும்
நற் செயல்கள் மூலம் நாம் நமது அயலானோடு ஒன்றித்திருக்கும்.

இறையன்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பிறரன்பும்.

இயேசு தனது பொது வாழ்வின் போது சென்ற இடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கினார். 

ஒவ்வொரு முறை குணமாக்கும் போதும் அவர் கூறிய வார்த்தைகள், "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று."

அடுத்து "உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டன."

அவ்வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்.

நம்மிடமும் விசுவாசம் இருந்து நாம் பாவமில்லாமல் இருந்தால் நமது உடல் நோயும் குணமாகும்.

டாக்டரைப் பார்க்க வேண்டாமா?

டாக்டரைப் பார்த்தாலும் மருந்து சாப்பிட்டாலும் குணமளிப்பது விசுவாசமே.

"நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்.

என்ன பொருள்?

நம்பிக்கையோடு செபிக்கும் போது என்ன நடந்தாலும் நல்லதுதான்.

நலம் என்ற வார்த்தைக்கு லௌகீகத்தில் பொருள் வேறு,  ஆன்மீகத்தில் பொருள் வேறு.

லௌகீகத்தில் நமது உடல் 
உடல் சார்ந்த நோய் நொடிகள் இன்றி வாழ முடிவது நலம்.

ஆன்மீகத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்று படைக்கப்பட்டோமோ அப்படி வாழ முடிவது நலம்.

எங்கு வாழ்ந்தாலும் நாம் இறை உறவுடன் வாழ்வதுதான் நலமான வாழ்வு.

இவ்வுலகில் மட்டுமல்ல மறுவுலகில் இறை உறவுடன் வாழ்வதும் நலமான வாழ்வு தான்.

"நம்புங்கள், செபியுங்கள், நலமுடன் வாழ்வீர்கள்.

புனித யோசேப்பை எடுத்துக் கொள்வோம்.

இயேசு திருக் குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே யோசேப்பு இயேசுவின் மடியில் தலை வைத்து மரித்தார்.

இயேசு ஏன் அவரை வாழ வைக்காமல் இறக்க விட்டார்?

கேள்வி தவறு.

இயேசு அவரை  வாழ வைத்தார், நித்திய பேரின்ப வாழ்வு.

இப்போது மோட்சத்தில் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவ்வுலகில் வாழ்வதும் வாழ்வு தான், மறுவுலகில் வாழ்வதும வாழ்வுதான்,

ஒரு வித்தியாசம்,

இவ்வுலக வாழ்வு தற்காலிகமானது,

மறுவுலக வாழ்வு நிலையானது.

ஒரு அப்பாவுக்கு இரண்டு பிள்ளைகள்.

ஒரு நாள் அவர் இரண்டு பிள்ளைகளையும் அழைத்து,

"இந்த பீரோ உள்ளே ஏராளமாக தங்க நகைகளும், பணமும் உள்ளன.

எதை வேண்டுமானாலும் கேளுங்கள். 

யார் அதிகம் கேட்கிறார்களோ அவர்களுக்கு கேட்டதைக் கொடுப்பேன்."

மூத்தவன் கேட்டான். 

"எனக்கு ஆயிரம் பவுன் நகையும், பத்து இலட்சம் பணமும் கொடுங்கள்."

இளையவன் கேட்டான்,

"எனக்கு பீரோ சாவியைக் கொடுங்கள்."

அப்பா சாவியைக் கொடுத்து விட்டார்.

மோட்சம் நமக்கு வேண்டுமா?

கடவுளிடம் விசுவாசத்தைக் கேட்போம்.

அதுதான் மோட்ச வாழ்வுக்கான சாவி.

விசுவாசம் இருந்தால் இவ்வுலகிலும் நலமாக வாழலாம், மறுவுலகிலும் நலமாக வாழலாம்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்."

"விசுவாசத்தைத் தாரும். அதுவே போதும்."

விசுவாசத்தினால் எதையும் சாதிக்கலாம்.

லூர்து செல்வம்.

Monday, July 14, 2025

இறைவன் வழிகள் அதிசயமானவை.



இறைவன் வழிகள் அதிசயமானவை.

பைபிளைக் கூர்ந்து வாசித்தால் சில நிகழ்வுகளுக்கு நம்முடைய பார்வையிலிருந்து விளக்கம் கொடுக்க முடியாது.

இறைவனுடைய பார்வையிலிருந்து (From the point of view of God) பார்த்தால்தான் புரியும்.

இறைவனின் வழிகள் நமது புரிதலுக்கு அப்பாற்பட்டவை,
அதிசயமானவை.

நமது வீட்டில் brake பிடிக்காத ஒரு சைக்கிள் இருக்கிறது.

brake பிடிக்காது என்று வீட்டில் அனைவருக்கும் தெரியும்.

நமது மகன் அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் ப்ரேக் பிடிக்காத காரணத்தினால் சைக்கிளோடு கீழே விழுந்து காயத்தோடு வீட்டுக்கு வருகிறான்.

நமது முதல் கேள்வி எதுவாக இருக்கும்?

"ஏண்டா ப்ரேக் பிடிக்காது என்று தெரிந்தும் சைக்கிளை எடுத்துக்கொண்டு போனாய்?"

இதுதான் நமது பார்வை.

பாவம் செய்வான் என்று தெரிந்தும் ஏன் கடவுள் மனிதனைப் படைத்தார்?

கடவுள் அளவில்லாத அன்புள்ளவர்.

அன்பு காரணமாக தன்னைப் போல், தன் சாயலில் மனிதனைப் படைக்க விரும்பினார்.

கடவுள் துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

துவக்கம் இல்லாத மனிதனைப் படைக்க முடியாது.

படைக்கும் போதே துவக்கம் வந்து விடுகிறது.

ஆகவே முடிவில்லாத மனித ஆன்மாவைப் படைத்தார்.

பரிபூரண சுதந்திரமாகிய‌ தன் பண்பை அவனோடு பகிர்ந்து கொண்டார்.

பரிபூரண சுதந்திரத்தில் அவர் குறுக்கிட மாட்டார், குறுக்கிட்டால் பரிபூரணம் போய்விடும்.

சுதந்திரத்தை மனிதன் பாவம் செய்யப் பயன்படுத்துவான் என்று கடவுளுக்குத் தெரியும்.

ஆகவே அன்பின் மிகுதியால் அவனைப் படைக்கும் திட்டத்தோடு அவனை மீட்கும் திட்டத்தையும் போட்டார்.

இரண்டு திட்டங்களும் நித்தியமானவை.

அன்பின் மிகுதியால் மனிதனைப் படைத்த கடவுள் அதே அன்பின் மிகுதியால் மனிதனைப் பாவத்திலிருந்து மீட்க மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

மனிதன் மீது உள்ள அன்பின் மிகுதியால்தான் பிறப்பும் இறப்பும் இல்லாத கடவுள் பிறப்பும் இறப்பும் உள்ள மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டார்.

அவரது அன்பின் மிகுதியை நமக்குக் காட்ட அவர்‌ தேர்ந்தெடுத்த வழி நமது புரிதலுக்கு அப்பாற்பட்டது.

தனது பாடுகள் மூலமும், சிலுவை மரணத்தின் மூலமும் தனது அன்பின் மிகுதியை நமக்குப் புரிய வைத்தார்.
                   ****
கடவுள் மனிதனாகப் பிறக்க தேர்ந்து கொண்டது  யாக்கோபின் வம்சம்.

ஈசாக்குக்கு இரண்டு பிள்ளைகள் ,
ஏசா, யாக்கோபு.

யாக்கோபை இஸ்ரேல் இனத்தின் தந்தையாக இறைவன் தேர்வு செய்தார்.

தேர்வு செய்யப்பட்ட யாக்கோபு பாவம் செய்தார்,  மனித இனத்தின் முதல் தந்தையாகப் படைக்கப்பட்ட ஆதாம் படைக்கப்பட்ட பின் பாவம் செய்ததைப் போல.


யாக்கோபு தன் தந்தையை ஏமாற்றி அவர் ஏசாவுக்காக வைத்திருந்த ஆசீர்வாதங்களைக் கைப்பற்றினார். 

அவர் செய்த பாவத்துக்காக அவரை இறைவன் தள்ளி விடவில்லை, மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

பாவிகளாகிய நம்மையும் இறைவன் மன்னிப்பார் என்பதற்கு இது ஒரு முன் அடையாளம்.

பாவிகளைத் தேடித்தானே இயேசு உலகுக்கு வந்தார்!

நாம் இயேசுவிடம் மன்னிப்புக் கேட்போம்.

யாக்கோபின் பன்னிரு புதல்வர்களுள் ஒருவர் யூதா.

யூதாவின் கோத்திரத்தில் தான் இயேசு பிறந்தார்.

யூதாவில் ஆரம்பித்து தாவீது வரை வம்ச பரம்பரை நான்கு பெண்கள் வருகிறார்கள்.

தாமார், ராகாப், ரூத், பத்சேபா.

இவர்களில் ரூத்தைத் தவிர மற்ற மூவரும் பாவிகள்.

தாமார் தனது மாமனார் யூதா மூலமாக அவருக்குத் தெரியாமல் அவரது மகனைப் பெற்றவள்.

ராகாப் ஒரு கானானிய விபச்சாரி.

யூதர்கள் எரிக்கோ நகரைக் கைப்பற்ற உதவினாள்.


இவர் சல்மோன் என்ற யூதரை மணந்து போவாஸைப் பெற்றார்

. போவாஸ் ரூத்தின் கணவனும், தாவீது மன்னரின் தாத்தாவுமாவார். 

ஒரு கானானிய விபச்சாரியாக இருந்த ராகாப், மெசியாவின் வம்சாவளியில் சேர்க்கப்பட்டது, கடவுளின் திட்டம்.

பத்சேபாவைப் பற்றிக் குறிப்பிடும் போது மத்தேயு,

" ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்." ‌என்று எழுதுகிறார்.
(மத்தேயு நற்செய்தி 1:6)

தாவீது அரசர் மனம் திரும்பிய பாவி.

இப்போது ஒரு கேள்வி எழும்.

தன்னைப் பெற்ற தாயைப் பாவ மாசில்லாமல் காப்பாற்றிய பரிசுத்தராகிய இயேசு 

ஏன் பாவிகள் நிறைந்த ஒரு வம்சாவளியில் பிறந்தார்?

இயேசு பாவிகளைத் தேடியே உலகுக்கு வந்தவர்.

சாக்கடைக்குள் விழுந்து விட்ட ஒருவரைக் காப்பாற்ற சாக்கடைக்குள் குதித்து தானே ஆக வேண்டும்.

இயேசு பாவிகளை நேசித்தார் என்பதற்கு பாவிகள் நிறைந்த வம்சாவளியில் பிறந்ததே ஒரு ஆதாரம்.

மீட்பு யூதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்கும், மக்களுக்கும் உரியது என்பதையும், 

கடவுள் குறைபாடுள்ள மனிதர்களைக்கூட தமது நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறார் என்பதையும்

வம்சாவளியில் இடம்பெற்ற பாவிகளிலிருந்து அறிகிறோம்.

 இயேசுவின் வாழ்வின் போது அவரைச் சந்தித்த எந்த பாவியையும் அவர் சபிக்கவில்லை.  மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

கல்லால் எறிந்து கொல்லப் படுவதற்காகப் பரிசேயர் அழைத்து வந்த பெண் அதற்குச் சான்று.

இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட நல்ல கள்ளனும் ஒரு சான்று.

உலகில் உள்ள அத்தனை பெரிய பாவங்களையும் விட இயேசுவின் இரக்கம் பெரியது.

சுகமில்லாத பிள்ளையை மற்ற பிள்ளைகளைவிட நேசிக்கும் தாயைப்போல இயேசு பாவிகளை அதிகம் நேசிக்கிறார்.

நல்ல ஆடுகளை மேய விட்டு விட்டு நொண்டி ஆட்டைக் கையில் வைத்திருக்கும் ஆயனைப் போல இயேசு பாவிகளாகிய நாம் மனம் திரும்புவதற்காக‌ நம்மை அவரது பாதுகாப்பில் வைத்திருக்கிறார்.

நோயாளிகளைத் தேடும் மருத்துவரைப் போல இயேசு பாவிகளாகிய நம்மைத் தேடுகிறார்.

இதற்காக அவர் கையாளும் முறைகள் நமக்குப் புரியாமல் இருக்கலாம்.

நமக்குக் துன்பங்கள் வருவதே நம்மை மனம் திருப்புவதற்காகத் தான்.

அவரது வழிகள் அதிசயமானவை.

லூர்து செல்வம்.