Wednesday, December 15, 2021

"என்னைப்பற்றி இடறல்படாதவன் பேறுபெற்றவன்" (லூக்.7:23)

"என்னைப்பற்றி இடறல்படாதவன் பேறுபெற்றவன்" 
(லூக்.7:23)

அருளப்பர் தம் சீடருள் இருவரை அழைத்து, "வரப்போகிறவர் நீர்தாமோ ? 

அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமோ?" என்று கேட்டுவர ஆண்டவரிடம் அனுப்பினார்.

அருளப்பருக்கு இயேசுதான் மெசியா என்பது உறுதியாக தெரியும்.

இயேசுவுக்கு முன்னோடியாக வந்தவர் அவர்தானே.

அன்னை மரியாள் எலிசபெத்தம்மாளை  பார்க்கச் சென்றபோதே

 மரியாளின் வயிற்றில் இருந்த குழந்தை இயேசுவை அடையாளம் கண்டு 

தன் தாயின் வயிற்றினுள்ளே குழந்தையாய் இருந்தபோதே அக்களிப்பால் துள்ளியவர் அருளப்பர்.

அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற இயேசு யோர்தான் நதிக்கு வந்தபோதே  

"இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்.''


என்று கூறி   அவரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.

பெலவேந்திரருக்கும், மற்றொரு சீடருக்கும் இயேசுவை அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.

தம் சீடருள் வேறு இருவருக்கு இயேசுவை அறிமுகப் படுத்துவதாகத்தான் அவர்களை இயேசுவிடம் 

நேரடியாக அனுப்பி,

"வரப்போகிறவர் நீர்தாமோ ? 

அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமோ?" என்று கேட்டுவரச்  சொன்னார்.
 
அவர் அவர்களுக்கு மறுமொழியாக, "நீங்கள் போய்க் கண்டதையும் கேட்டதையும் அருளப்பருக்கு அறிவியுங்கள்:

 குருடர் பார்க்கின்றனர், 

முடவர் நடக்கின்றனர்,

 தொழுநோயாளர் குணமடைகின்றனர், 

செவிடர் கேட்கின்றனர், 

இறந்தவர் உயிர்க்கின்றனர்,

 எளியவருக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது." என்று கூறியதோடு,

"என்னைப்பற்றி இடறல்படாதவன் பேறுபெற்றவன்" என்றார்

(And blessed is the one who takes no offense at me.)

இயேசு தான் செய்த புதுமைகளைக் முதலில் சொல்கிறார்,

அடுத்து,

என்னைப்பற்றி இடறல்படாதவன் பேறுபெற்றவன்"

என்று சொல்கிறார்.

இயேசு செய்த புதுமைகளில் இடறல் படுவதற்கு என்ன இருக்கிறது? 

மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது இடறல் பட எதுவும் இல்லாதது போல் தோன்றும்.

ஆனால் இயேசுவின் வார்த்தைகளை ஆழ்ந்து தியானித்தால் 

அவரது கூற்றுக்கு பொருள் புரியும்.

இயேசு தாம் செய்த புதுமைகளை பற்றி கூறும்போது அவற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய  உண்மையைக் கூறுகிறார்.

மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது இயேசு உடல் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணமாக்குவதற்காக வந்திருப்பது போல் தோன்றும்.

இயேசு உடற்கூறு சம்பந்தப்பட்ட மருத்துவர் அல்ல, 

ஆன்மீக மருத்துவர்.

தியானிப்பவர்களுக்கு அவர் குறிப்பிட்ட ஒவ்வொரு நோயும் ஆன்மீக சம்பந்தப்பட்ட நோயைக் குறிப்பது புரியும்.

அவற்றைக் குணமாக்கவே இயேசு மனிதனாகப் பிறந்தார்.

உடற்கூறு சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் போதே

அவை குறிப்பிடும் ஆன்மீக  நோய்களையும்  குணமாக்கினார்.

அதற்காகவே நோய்களை குணமாக்கும் முன் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசுவாசத்தை பரிசாக  முதலில் கொடுத்துவிட்டு,

பின் அவர்களிடம்,

"உன் விசுவாசம் உன்னைக் 
குணமாக்கிற்று" என்று சொல்வது அவர் வழக்கம்.

விசுவாச கண்ணோடு பார்க்கும்போது குணமான ஆன்மீக நோயாளிகள் யார் என்பது நமக்குப் புரியும்.

குருடர்
முடவர்
தொழுநோயாளர்
செவிடர்
இறந்தவர்

 ஆகியோர் அவர் குணமாக்கிய நோயாளிகள்.

இந்த உடற்கூறு சம்பந்தப்பட்ட நோய்கள் குறிப்பிட்டுக் காட்டும் ஆன்மீக நோய்கள்:

விசுவாசக் கண் இல்லாமை.

ஆன்மீக பாதையில் நடக்க முடியாமை.

எது நல்லது, எது கெட்டது என்ற உணர்ச்சி இல்லாமை.

இறை வாக்கிற்கு செவி கொடாமை.

பாவத்தால் ஏற்படும் ஆன்மீக இறப்பு.

இந்த நோய்களைக் குணமாக்கவே  இயேசு உலகிற்கு வந்தார்.

மக்களுக்கு இறைவன் மேல் விசுவாசத்தை கொடுக்க வேண்டும்.

விசுவாச அர்ப்பண வாழ்வின் மூலம் மக்கள் விண்ணகப் பாதையில் நடக்க வேண்டும்.

கெட்டது  எது,  நல்லது எது என்பதை உணர்ந்து, கெட்டதை நீக்கி நல்லதை செய்ய வேண்டும்.

இறைவன் அளிக்கும் நற்செய்தியை காதுகொடுத்து கேட்கவேண்டும்.

ஆன்மாவின் சாவிற்கு காரணமாகும் சாவான பாவங்களுக்கு  மன்னிப்புப் பெறவேண்டும்.


இவை சம்பந்தப்பட்ட ஆன்மீக நோய்கள்  நம்மிடம் உள்ளன என்று இயேசு கூறும் போது நாம் இடறல் படக்கூடாது.

We should not feel offended by His words.

நம்மிடம் உள்ள ஆன்மீக நோய்களை நமக்கு இயேசு உணர்த்தும் போது நாம் மனம் உவந்து ஏற்றுக்கொள்வதோடு மனம் திருந்தி வாழ வேண்டும்.

அனேக சமயங்களில் நாம் எதையும் விசுவாச கண்ணால் பார்ப்பதில்லை.

நமக்கு வரும் துன்பங்களை விசுவாச கண்ணால் பார்த்தால் அவை ஆசீர்வாதங்கள் என்பது புரியும்.

நாம் சுமப்பதற்கு இயேசு தந்த சிலுவை என்று அவைகளை ஏற்றுக் கொள்வோம்.

விண்ணக பாதையில் ஆன்மீக நடைபோடும்போது உலகத்தின் மீது நமக்கு பற்று ஏற்படாது.

உலகத்தின் மீது  பற்று ஏற்பட்டால்
நமது ஆன்மீக வாழ்வு பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும்.

ஆன்மீக வாழ்வுக்கு ஊறு விளைவிக்கும் செயல்களை செய்யக்கூடாது.

நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.

நற் செய்தியை வாசித்து அதன்படி வாழ வேண்டும்.

சாவான பாவத்தில் விழ நேர்ந்தால் ஆன்மீக இறப்பு ஏற்படும்.உடனே பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற வேண்டும். ஆன்மா மீண்டும் உயிர் பெறும்.


இவற்றையெல்லாம் இயேசுவின் இடத்திலிருந்து நம்மை வழிநடத்தும் பங்கு குரு அடிக்கடி சுட்டி காண்பிப்பார்.

 நமது ஆன்மீக நோய்களை குருவானவர் நமக்கு சுட்டிக் காண்பிக்கும் போது அவர் மீது வருத்தப் படாமல் மனம் திரும்பி வாழ வேண்டும்.

பங்குக் குருவின் வார்த்தைகள் 
இயேசுவின் வார்த்தைகள்.

அவரைப்பற்றி நாம் இடறல் படக்கூடாது.

மகிழ்ச்சியோடு  அவற்றை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ வேண்டும்.

இது இயேசு நமக்கு வழங்கும் அறிவுரை.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment