Saturday, December 11, 2021

"இரண்டு அங்கி வைத்திருப்பவன் இல்லாதவனோடு பகிர்ந்து கொள்ளட்டும்: உணவு உடையவனும் அவ்வாறே செய்யட்டும்" (லூக்.3:11)

"இரண்டு அங்கி வைத்திருப்பவன் இல்லாதவனோடு பகிர்ந்து கொள்ளட்டும்: உணவு உடையவனும் அவ்வாறே செய்யட்டும்" (லூக்.3:11)

இயேசுவின் வருகைக்காக மக்களை ஆயத்தப்படுத்த வந்த அவரின் முன்னோடியான ஸ்நாபக அருளப்பரின் போதனை இயேசுவினுடைய போதனையை ஒட்டி இருப்பதில் வியப்பில்லை.

''ஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடை கொடுங்கள், 

பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுங்கள்"

என்ற இயேசுவின் போதனையை பிரதிபலிக்கிறது ஸ்நாபக அருளப்பரின் போதனை.

(ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள்.

பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள்)

 இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்வதுதான் மனித இயல்பு.
அப்போதுதான் நாம் கொடுத்தது திரும்பி வரும்.

வசதி உள்ளவர்களுக்கு ஏதாவது gift கொடுத்தால் அது என்றாவது ஒருநாள் திரும்பிவரும்.

திரும்பி தரக் கூடியவர்களுக்கு கொடுப்பவன் சாதாரண மனிதன்.

திரும்பி தர முடியாதவர்களுக்கு கொடுப்பவன்தான் உண்மையான விசுவாசி.

"நீ பகல் உணவிற்காவது இராவுணவிற்காவது,
 உன் நண்பர்களையோ சகோதரர்களையோ உறவினர்களையோ, 
செல்வரான அண்டை வீட்டாரையோ அழைக்காதே. 

அவர்களும் உன்னைத் திரும்ப அழைக்கலாம். 

அப்போது உனக்குக் கைம்மாறு கிடைத்துவிடும்.

13 மாறாக, நீ விருந்து நடத்தும்போது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரைக் கூப்பிடு.

14 அப்போது நீ பேறுபெற்றவன். ஏனெனில், உனக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை.

 நீதிமான்கள் உயிர்த்தெழும்போது உனக்குக் கைம்மாறு கிடைக்கும்" 
(லூக்.14:12-14)

என்று ஆண்டவர் சொல்கிறார்.

ஆண்டவருடைய கூற்றிலிருந்து ஒரு மிக முக்கியமான உண்மை தெரிய வருகிறது.

இல்லாதவனுக்கு கொடுப்பவன் உண்மையிலேயே பேறு பெற்றவன். ஏனெனில் அவன் உண்மையில் எல்லாம் உள்ளவருக்கு, அதாவது, கடவுளுக்குக், கொடுக்கிறான்.

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்." (மத்.25:40)

உலகில் எதுவுமே இல்லாதவனுக்கு கொடுக்கும்போது எல்லாம் உள்ள கடவுளுக்கு கொடுக்கிறோம்.

கடவுள் தனக்கு கொடுப்பவர்களுக்கு நித்திய பேரின்ப வாழ்வை பரிசாக அளிக்கிறார்.

உலகில் உள்ளவர்களுக்கு கொடுப்பவர்கள் கொடுத்த அளவையே திரும்ப பெறுவார்கள்.

எதுவும் பெறாமல் கூட போகலாம்.


 ஆனால் தாகம் உள்ள ஒருவருக்கு கடவுள் பெயரால் ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்தாலும் நமக்கு
 அழியாத நித்திய பேரின்ப வாழ்வு பரிசாகக் கிடைக்கும்.

இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆண்டவரின் போதனையை ஆழ்ந்து தியானித்தால் மற்றொரு முக்கியமான உண்மை நமக்கு தெரியவரும்.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டுமென்றால் உலகில் இருப்பவர்களும் இருக்கவேண்டும், இல்லாதவர்களும் இருக்க வேண்டும்.

இல்லாதவர்களே இல்லாவிட்டால் ஆண்டவரின் இந்த போதனையை கடைப்பிடிக்க இயலாமல் போய்விடும்.

இருப்பவர்களை படைத்த அதே கடவுள் தான் இல்லாதவர்களையும் படைத்திருக்கிறார்.

அதாவது சமூக ஏற்ற தாழ்வுகளோடு உலகை படைத்திருக்கிறார்.

ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமத்துவ உலகை விரும்புகிறவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

 ஏற்ற தாழ்வுகளே இல்லாவிட்டால் உலகம் இயங்க முடியாது.

மனிதனைப் படைப்பதற்கு முன்னால் இறைவன் இயற்கையை படைத்தார்.

இயற்கையை ஒட்டி வாழும் விதமாகவே மனிதனை படைத்தார்.

 ஏற்ற தாழ்வுகள் இருப்பதால்தான் இயற்கையே இயங்கிக் கொண்டிருக்கிறது.

வெப்பமும் குளிர்ச்சியும் இருப்பதால்தான் குறைந்த காற்றழுத்த மண்டலமும் அதிக காற்றழுத்த மண்டலமும் இருக்கின்றன.

அவை இல்லாவிட்டால் காற்று வீச முடியாது.

காற்று வீச முடியாவிட்டால் மேகங்கள் பயணிக்க முடியாது.

மேகங்கள் பயணிக்காவிட்டால் மழை பெய்ய முடியாது.

மழை பெய்யாவிட்டால் ஆறுகள் ஓட முடியாது.

மேட்டிலிருந்துதான் பள்ளத்தை  நோக்கி
 தண்ணீர் ஓடும்.

ஆகவே மேடு பள்ளம் இல்லாவிட்டால் 
ஆறுகளும் இருக்காது, 
ஏரிகளும் இருக்காது,
 குளங்களும் இருக்காது, 
குட்டைகளும் இருக்காது.

ஏற்றதாழ்வுகள் இருப்பதால்தான் இயற்கையே இயங்கிக் கொண்டிருக்கிறது.

இயற்கையை ஒட்டி வாழும் சமூகமும் அப்படியே.

எல்லோரும் அரசர்களாக உள்ள நாட்டையும்,

எல்லோரும் முதலாளிகளாக உள்ள தொழிற்சாலையையும்,

எல்லோரும் நிர்வாகிகளாக உள்ள அலுவலகத்தையும் 

கற்பனை செய்து பாருங்கள்.

ஏற்றத்தாழ்வின் அவசியம் புரியும்.

இருப்பவர்கள் கொடுப்பதற்காகவே இல்லாதவர்களையும் இறைவன் படைத்திருக்கிறார்.

இல்லாதவர்களுக்கு கொடுப்பவன் இறைவனுக்கே கொடுக்கிறான்.

இல்லாதவர்களுக்கு கொடுப்பதுதான் இறைவனுக்கு நாம் செலுத்தும் காணிக்கை.

நேசிப்பவர்களுக்குதான் கொடுப்போம்.

நாம் ஏழைகளை நேசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இயேசுவே ஏழையாகப் பிறந்தார்.

ஏழைகளை நேசிப்பவன் தான் இயேசுவையும் நேசிக்கிறான்.

ஏழைகளுக்கு கொடுப்பவன்தான் இயேசுவுக்கு கொடுக்கிறான்.

இயேசுவின் பெயரால் இல்லாதவர்களுக்கு கொடுப்போம்.

இறையரசில் நிலை வாழ்வு பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment