Wednesday, December 22, 2021

"என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைந்து என் இதயம் களிகூருகின்றது."(லூக். 1:46, 47)

"என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது.
 என் மீட்பராம் கடவுளை நினைந்து என் இதயம் களிகூருகின்றது."
(லூக். 1:46, 47)

வயிற்றில் குழந்தை இயேசுவுடன் எலிசபெத்தம்மாள் வீட்டிற்கு அவளுக்கு பணிவிடை செய்வதற்காக சென்ற அன்னை மரியாள், 

இறைவன் தன்னில் ஆற்றிய மாபெரும் செயல்களை நினைத்துப் பார்த்து,

அதனால் தானடைந்த மகிழ்ச்சியை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார்.   

ஆண்டவர் ஆற்றிய அரும்பெரும் செயல்களை அன்னை மரியாவின் ஆன்மா நினைத்துப் பார்த்து, போற்றுகிறது.

 இதயம் மகிழ்ச்சியால் பொங்குகிறது.

மரியாள் தனது ஆன்மா இறைவனை போற்றுவதாகவும்,

இதயம் மகிழ்வாகவும் கூறுகின்றாள்.

ஆன்மாவையும், இதயத்தையும் மையமாக வைத்து சிறிது நேரம் சிந்தித்தால்,

மரியாளின் கூற்று முழுமையாக விளங்குவதோடு,

நாமும் அவளைப் போலவே மாற உதவியாக இருக்கும்.

ஒரு உயிர்ப் பிராணியை மனிதன் ஆக்குவது அதனுடைய ஆன்மா.


ஆன்மாவுக்கு (Soul) ஆன்மீக ரீதியாக (Spiritually) உயிரளிப்பது அன்பு.

அன்பின் இருப்பிடம் இதயம்.
 
உடலின் இதயம் உடலின் இயக்கத்துக்கு உயிர்.

ஆன்மாவின் அன்பு ஆன்மாவின்
இயக்கத்துக்கு உயிர்.

ஆகவே ஆன்மாவின் அன்பை உடல் இதயத்தின் அடையாளத்தால் குறிப்பதோடு அன்பின் இருப்பிடம் இதயம் என்றும் கூறுகிறோம். 

புத்தி, மனது, இதயம் மூன்றும் ஆன்மாவின் அதாவது இயங்கும் மனிதனின் மூன்று தத்துவங்கள்.

புத்தி சிந்தித்து அறிகிறது.

மனது அறிந்ததை ஞாபகத்தில் வைக்கிறது.

இதயம் ஞாபகத்தில் இருப்பதை அன்பு செய்கிறது. 

அன்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் தான் உண்மையான மகிழ்ச்சியும் இருக்கும்.

அன்னை மரியாளின் ஆன்மா இறைவன் அவளுக்கு செய்த அரும்பெரும் செயல்களை முழுமையாக அறிகிறாள். 

தான் அறிந்ததை  தன்னுள்ளத்தில் கொண்டிருக்கிறாள்.

 இறைவன் அவளுக்கு செய்த அரும்பெரும் செயல்களை நினைத்து நினைத்து இறைவனைப் போற்றி புகழ்கின்றாள்.

அவளது இதயம் மகிழ்ச்சியால் பொங்கி வழிகிறது.

அந்த மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம் இறைவன் மட்டில் அவளுக்கு இருந்த அளவு கடந்த அன்பு.

சுருக்கமாகச் சொல்வதானால், இறைவன் அவருக்கு செய்த அரும்பெரும் செயல்களை அறிந்து, நினைத்து, அன்பு செய்து

 அதன் காரணமாக மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறாள் .


நாம் கோடிக் கணக்காக பணம் செலவழித்து 

ஒரு பெரிய வீட்டை கட்டி 

அதை அலங்கரிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். 

அந்த வீடு நம்மை பார்த்து போற்றிப் புகழுமா?

புகழாது. ஏனெனில் அதற்கு ஆன்மாவும் இல்லை, இதயமும் இல்லை.

இறைவன் மரியாள் என்ற வீட்டை ஜென்ம பாவ மாசில்லாமல் கட்டி,

அதை தனது அருள் வரங்களால் நிரப்பி, அலங்கரித்து,

அதில் குடியேறுகிறார்.

அது அவர் கட்டிய வீடு.
பாவ மாசு இல்லாமல் கட்டிய வீடு.
அருள் வரங்களால் நிறைந்த வீடு.

அந்த வீடு இறைவன் தனக்கு செய்த மாபெரும் செயல்களை  எண்ணி எண்ணி மகிழ்ச்சியோடு அவரைப் போற்றி புகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஏனெனில் மரியாள் என்ற அந்த அருள் நிறைந்த வீட்டுக்கு ஆன்மா இருக்கிறது இதயமும் இருக்கிறது.

ஆன்மா புகழ்கிறது,

 இதயம் மகிழ்கிறது.

அன்னை மரியாளைப் பற்றி இப்படி தியானித்து விட்டு நமது கண்களை நம்மை நோக்கி திருப்புவோம்.

 நமக்கும் மரியாளைப் போலவே ஆன்மா இருக்கிறது, இதயமும் இருக்கிறது.

நாம் சென்மப் பாவத்தோடு  உற்பவித்தோம்.

ஆனாலும் இறைவன் ஞானஸ்நானத்தின் மூலம் நமது சென்ம பாவத்தை நம்மை விட்டு நீக்கிவிட்டார். 

இது அவர் நமக்குச் செய்த அரும்பெரும் செயல்.

ஞானஸ்நானம் பெற்ற வினாடியில் நமது ஆன்மா பாவ மாசு இல்லாமல் இருந்தது. 

அன்னை மரியாள் தனது வாழ்நாள் முழுவதும் சிறு அற்ப பாவம் கூட செய்தது இல்லை.

தான் உற்பவிக்கும் போது பெற்றிருந்த பரிசுத்த தனத்தை கடைசிவரை காப்பாற்றினாள். 

ஆனால் நாம் ஞானஸ்நானம் பெற்ற பின்பும் தொடர்ந்து பாவங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

 ஆனால் எல்லாம் வல்ல இறைவன் நமது பாவங்களை பாவசங்கீர்த்தனம் என்ற திரு அருள் சாதனத்தின் மூலம் மன்னித்துக் கொண்டே வருகிறார்.

 அன்னை மரியாளின் வயிற்றிலிருந்து அவர் பிறந்ததே நமது பாவங்களை மன்னிக்கத்தானே!

இயேசு சிலுவையில் தன்னைப் பலியாக்கி கொண்டிருந்தபோது

 அன்னைமரியாள் சிலுவை அடியில் நின்று அவரது பலியை நமது பாவங்களுக்கு பரிகாரமாக பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்து கொண்டிருந்தார்.

அந்தப் பாக்கியத்தை நாமும் பெறுவதற்காகத்தான் இயேசு  குருத்துவத்தை ஏற்படுத்தி ஒவ்வொரு நாளும் திருப்பலி ஒப்புக்கொடுக்க  ஏற்பாடு செய்திருக்கிறார். 

தனது பாடுகளுக்கு முந்திய நாள் வியாழக்கிழமை தனது சீடர்களுக்கு தனது உடலையும் இரத்தத்தையும் உணவாகக் கொடுத்தது போலவே 

இன்று நமக்கும் ஒவ்வொரு நாளும் தன்னையே உணவாகத் தந்து கொண்டிருக்கிறார்.

அன்று எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக

எப்படி யூத மக்கள் பாஸ்கா நாளன்று

 ஒரு ஆட்டுக்குட்டியை இறைவனுக்கு பலியாக ஒப்புக் கொடுத்துவிட்டு 

அதை அவர்களே உணவாக உண்டார்களோ,

அதேபோல இன்று பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக 

இறை மகனையே இறைத் தந்தைக்கு பலியாக ஒப்புக் கொடுத்துவிட்டு,

  பலிப் பொருளாகிய இயேசுவையே நாம் உணவாக உட்கொள்கிறோம்.

இயேசு ஏற்படுத்தி நமக்குத் தந்த எல்லா தேவ திரவிய அனுமானங்களும் அவர் நமக்கு செய்து கொண்டு வரும் அரும்பெரும் செயல்கள்தானே.

தாயைப் போல பிள்ளை என்பார்கள்.

நாம் நமது மரியன்னையைப் போல் இருக்கிறோமா?

நமது தாயைப் போல நாமும் இறைவன் நமக்கு செய்துவரும் அரும்பெரும் செயல்களை நமது மனதில் இருத்தி

 நமது ஆன்மாவால் போற்றி புகழ்கின்றோமா?

இறைவன் நமக்கு செய்துவரும் அரும்பெரும் செயல்கள் நமது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகின்றனவா?


நமது ஆன்மாவால் ஆண்டவரை ஏத்திப் போற்றி,

அவரை நினைந்து நமது இதயம் களிகூர்ந்தால்தான் 

நாம் மரியாளை அம்மா என்று உரிமையோடு  அழைக்க முடியும்.

திருவருள் சாதனங்களை இறைவனது அருளைப் பெறும் நோக்கத்தோடு பெற்றால்

நாம் உண்மையிலேயே இறைவனை ஆன்மாவால் போற்றுவோம், இதயத்தில் மகிழ்வோம்.

தினமும் வழக்கம் போல் சாப்பிடுவதுபோல வழக்கப்படி அவற்றைப் பெற்றால் நம்மால் போற்றவும் முடியாது, மகிழவும் முடியாது.

ஒவ்வொரு நாளும் காலை உணவு முடிந்தவுடன் அதை தந்ததற்காக அம்மாவை போற்றுகிறோமா? 
உணவு உண்டதற்காக மகிழ்கிறோமா?


அன்னை மரியாளின் மனநிலை நமக்கு இருந்தால்தான்

 ஒவ்வொரு முறையும் ஆண்டவரை உணவாக பெற்றவுடன் 

நம்மால் அவரைப் போற்ற முடியும், இதயத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

வழக்கம்போல  கையால் நற்கருணையை வாங்கி, வாயில் போட்டு விட்டுப் போனால்

 எங்கிருந்து மகிழ்ச்சி வரும்?

தேர்வில் வெற்றி பெற்று விட்டால் எப்படி மகிழ்கின்றோமோ,

அதைப்போலவாவது நன்மை எடுத்தவுடன் மகிழ்கின்றோமா?

அன்னை மரியாள் எப்படி இயேசுவுக்காக மட்டும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தாளோ

 அதேபோல நாமும் நம்மை அர்ப்பணித்து வாழ்ந்தால்தான் நம்மால் உண்மையிலேயே இறைவனை போற்றவும், புகழவும் முடியும்,

 இதயத்தில் மகிழவும் முடியும்.

ஆண்டவர் நமது வாழ்வில் செய்துவரும் அரும்பெரும் செயல்களுக்காக அவரைப் போற்றிப் புகழ்வோம்.

ஆண்டவரைப் புகழ்வதற்காக வாழ்ந்தால் மட்டுமே நமது இதயத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment