Wednesday, July 31, 2019

உரையாடல்தான் உறவினை வளர்க்கும்.

உரையாடல்தான் உறவினை வளர்க்கும்.
************     **********   ********

...."செல்வம், ..செல்வம்.."

"வந்துட்டேங்க!  நல்லா தூங்கிக்கிட்டு இருந்தீங்க,

அதான் எழுப்பல. சரி, நேற்றைய செப அனுபவம் எப்படி இருந்தது?"

..."Locationஅ shift பண்ணச் சொன்னியா,

உடனே நம்ம கோயில் நற்கருணைப் பேழை ழுன்னாலே முழந்தாழ்ப்படியிட்டேன்.

விசுவாசக் கண்ணால் பேழையுள் இருக்கும் ஆண்டவரைப் பார்த்தேன்.

அவரும் என்னைப் பார்த்தார்.

இரக்கத்துடன் என்னைப் பார்த்தார்."

"நீங்க என்ன பேசினீங்க?"

..."எதுவும் பேசல. அவரும் எதுவும் பேசல. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தோம்.

இயேசு எவ்வளவு நல்லவர் என்று கண்களால் ருசித்துப் பார்த்தேன்.

அவர் பரிசுத்தர்.

நான் பாவி.

பாவியிடம் அப்படி என்ன இருக்கிறது, அவர் இப்படி பரிவு காட்ட?"

"அவர் படைத்த ஆன்மா இருக்கிறதுங்க.

உடலும் அவர் படைத்ததுதான்.

ஆனால், பாவம் செய்தது ஆன்மாதானே!

இரட்சிக்கப்பட வேண்டியதும் அதுதானே!

அப்புறம்?"

..."அப்புறம்,  உள்ளங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்  கொண்டன, மௌனமாக.

எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம், தெரியாது.

தூங்கிவிட்டேன்.

விழித்து உன்னைக் கூப்பிட்டேன்."

"இதுதாங்க பராக்கே இல்லாத உண்மையான செபம்."

..."வாயினால் சொல்லப்படும் செபம் பற்றி பேசுவோமா?"

"அதில முக்கியமான விசயம் ஒன்று இருக்குதுங்க.

சிலர் நினைக்கிறார்கள் 'நீண்ட, அலங்கார வார்த்தைகளினாலான செபம் ஆண்டவரின் கவனத்தை ஈர்க்கும் என்று.

ஆனால் ஆண்டவர் வார்த்தைகளை அல்ல, அவற்றின் ஊற்றாகிய உள்ளத்தைத்தான் பார்க்கிறார்.

வார்த்தைகள் உள்ளத்திலிருந்து வராமல் உதட்டிலிருந்து மட்டும் வந்தால், அவை உயிரற்றவை.

உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளில்தான் உணர்வு இருக்கும்."

..."ஆகையினால்தான் மனப்பாட செபத்தைவிட உடனுக்குடன் வரும் செபங்களில் பக்தி அதிகம் இருக்கும்.

மனப்பாட செபங்கள் மனதிலிருந்து வர வேண்டும்.

'அருள் நிறைந்த மரியே' செபம் சொல்லும்போது தாய் முன் நின்று குழந்தை பேசும் உணர்வுடன் சொல்ல வேண்டும்.

ஆனால்,
நமது உள்ளமும், இறைவன் உள்ளமும் பேசும்போது

அன்பு உணர்வு மொழியில் நமது உள்ளத்தோடு பேசிய கடவுள்

ஏன் நாம் சப்தமாக சொற்களால் பேசும்போது,

மோயீசனிடம் பேசியதுபோல

நம்மிடமும் பேசுவதில்லை?"

"ஏங்க, நான் என்ன பைபிள் படிப்பில Degreeயா வாங்கியிருக்கேன்.

நான் பங்குச் சாமியார் பிரசங்கத்தில சொல்றத வச்சி வண்டிய ஓட்டிக்கிட்டிருக்கேன்.

என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியதைச் சொல்றேன்.

ஆதாம், ஏவையை நேரடியாக படைத்த கடவுள்,

நம்மைப் படைக்கும்போது பாதி வேலையை நம் பெற்றோருக்குக் கொடுத்திருக்கிறார்.

நமது உடலைப் பெற்றோர் உற்பவிக்க,

நமது ஆன்மாவை மட்டும் நேரடியாகப் படைத்திருக்கிறார்.

நாம் 'எங்கள் அன்றாட உணவை இன்று தாரும்' என்று அவரிடம் வேண்டுகிறோம்.

ஆனால் அதை நமது பெற்றோர் மூலம்தான் தருகிறார்.

நமக்கு வேண்டிய அறிவை நமது ஆசிரியர் மூலம்தான் தருகிறார்.

நமக்கு நற்சுகத்தை மருந்துகள் மூலம் தருகிறார்.

'உன்னைப்போல உன் அயலானையும் நேசி ' என்று உத்தரவிட்டிருப்பதே

நாம்  ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

'நான் ஆடை இல்லாதிருந்தேன், நீ எனக்கு ஆடை அணிவித்தாய்'

என்று சொல்லும்போதே நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் நம் அயலானுக்கு நம் மூலம்தான் உதவி செய்கிறார்.

'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, சமாதானமாய் போ'

என்று குருவானவர் மூலம்தான் நமது பாவங்களை மன்னிக்கிறார்.

'இது என் சரீரம்' என்று குருவானவர் மூலம் கூறி,

அப்பத்தைத் தன் சரீரமாக மாற்றுகிறார்.

மேலும் கடவுள் நம்மோடு பேசுகிறார்,

நமது மொழியிலேயே பேசுகிறார்

அவரது ஏவுதலினாலேயே எழுதப்பட்ட பைபிள் வழியாக, நம்மோடு பேசுகிறார்,

அன்னை கத்தோலிக்க திருச்சபை வழியாக நம்மோடு பேசுகிறார்,

நமது ஆன்ம குரு வழியாக நம்மோடு பேசுகிறார்,

நமது அயலான் வழியாக நம்மோடு பேசுகிறார்,

இயற்கை வழியாக நம்மோடு பேசுகிறார்.

நடந்த சம்பவம்.

ஒருவர் ஒரு மலையில் காடுகளின் இடையே இறங்கி வருகிறார்.

ஒரு விச முள் அவரது ஆழமாய்க் கீற ரத்தம் வேகமாக வெளி வருகிறது.

'ஆண்டவரே, நீர்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்' என வேண்டிக்கொண்டே,

வரவர காட்டுச் செடிகளின் இலைகளைப் பறித்து இரத்தத்தைத் துடைத்துப் போட்டுக் கொண்டே வருகிறார்.

வழியெல்லாம் இரத்தம்.

இரத்தத்தைப் பார்க்க மனமில்லாமல்,

'ஆண்டவரே காப்பாற்றும்' செபத்துடன்

இலைகளைப் பறித்துத் துடைப்பதை விடாமல் செய்து வரருகிறார்.

மலை அடிவாரத்துக்கு வந்தபின்

கடைசியில் துடைத்த இலையைப் பார்க்கிறார்.

இலையில் இரத்தமில்லை!

காலைப் பார்க்கிறார்,

காயத்தையே காணோம்!

அவர் துடைத்த இலைகளில் ஏதோ ஒரு சக்தியுள்ள மூலிகை  காயத்தைக் குணப்படுத்தியுள்ளது!

அது எந்த மூலிகை என்பது அவருக்குத்  தெரியாது.

கடவுள் நம் அயலான் மூலம் மட்டுமல்ல, தான் படைத்த இயற்கை மூலமும் செயலாற்றுகிறார்."

..."பாடுபட்ட சுரூபத்தைப் பார்க்கும்போது,

'மகனே, என் கரங்களை மரத்தோடு சேர்த்து ஆணிகளால் அறைந்துவிட்டார்கள்.

இனி நீதான் என் கரங்களாக செயல்பட வேண்டும் '

என்று இயேசு கூறுவது போலிருக்கிறது."

"நற்கருணையைப் பார்க்கும்போது,

'மகளே, நான் அப்ப வடிவில் இருப்பதால்

அநேகர் என்னை சாதாரண தின்பண்டம் என நினைத்து

இடது கையால் வாங்கி

வலது கையால் எடுத்து

வாயில் போட்டுக்கொண்டு போகிறார்கள்.

நான் முழுமையாய் இருக்கும் துகழ்கள் தரையில் விழ நான் வருவோர் போவோரிடமெல்லாம் மிதிபடுகிறேன்.

அவமானமாய் இருக்கிறது.

நீயாவது என்னை நாவில் வாங்கம்மா'

என்று கெஞ்சுவது போலிருக்கிறது.

இயேசுவே அவர்ளை மன்னியும்."

..."பாடுபட்ட சுரூபத்தைப் பார்க்கும்போது

இயேசு ,

'என்னைச் சிலுவையில் அறையுமுன் என் அங்கியை உறித்து விட்டார்கள்.

அது என் அம்மா நான் சிறுவனாய் இருக்கும்போது எனக்காக பின்னியது.

நான் வளரவளர அதுவும் வளர்ந்தது.

அதைத்தான் உறித்துவிட்டார்கள்.

அதை என் குருக்களாவது அணிவார்கள் என்று எண்ணினேன்.

அதை அணிய அவர்களும்  வெட்கப்படுகிறார்கள்.

இதை யாரிடம் போய்ச் சொல்வேன்?'

என்று என்னிடம் கேட்பது போலிருக்கிறது.

எனக்கும் யாரிடமாவது சொல்லணும் போலிருக்கு.

'யாரிடம் சொல்வேன்,இறைவா.
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம்தானே உள்ளன'

என்று சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை."

"ஏங்க, நமது சக்திக்கு அப்பாற்படட்டதைக் கடவுளிடம் விட்டுவிடுவோம்.

உரையாடல்தான் உறவினை வளர்க்கும்.

இறைவனோடு உரையாடி
உறவினை வளர்ப்போம்.

லூர்து செல்வம்

Tuesday, July 30, 2019

உள்ளங்கள் பேசும்போது உலகம் மறைந்துவிடும்!

உள்ளங்கள் பேசும்போது உலகம் மறைந்துவிடும்!
***************-******************

"ஏங்க, சாப்பாடு முன்னால உட்கார்ந்து தூங்கரீங்களா? "

..."ஏண்டி, என்னப் பார்த்தா தூங்கு மூஞ்சி மாதிரியா இருக்கு? "

"வச்ச சாப்பாடு அப்படியே இருக்கு. கண்ண மூடிக்கொண்டே உட்கார்ந்திருக்கீங்க.
சரி, சாப்பிடுங்க."

"காதுக்கு ஏதும் இல்லாதபோது கொஞ்சம் வயிற்றுக்கும் போடப்படும்னு வள்ளுவரே  சொல்லியிருக்கார்.

உட்கார். செவிக்கு ஏதாவது போடு, அப்புறம் வயிற்றுக்குள் போட்டுக்கலாம்."

"சரி, இட்லிய மூடிவச்சிட்டு வாரேன்......ம், சொல்லுங்க."

..."எப்போவாவது கடவுள் உங்கிட்ட நேருக்கு நேர் பேசியிருக்கிறாரா?

இன்று பைபிள் வாசித்துக் கொண்டிருந்தபோது,

 "ஒருவன் தன் நண்பனோடு பேசுவதுபோல ஆண்டவர் மோயீசனோடு நேரிலே உரையாடிக் கொண்டிருப்பார்."
(யாத்.33:11)

என்ற வசனம் கண்ணிலும் சிந்தனையிலும் பட்டது.

அதைப்பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.''

''அதைப்பற்றி  என்ன சிந்தித்துக் கொண்டிருந்தீங்க?

நாம மோயீசனா இருந்திருக்கக் கூடாதான்னா?"

..."ஊஹூம்!

மோயீசனோடு பேசிய கடவுள்,

அபிரகாமோடு பேசிய கடவுள்,

அதேபோல நம்மோடு பேசினால் என்ன என்று நினைத்துப்  பார்த்தேன்.

ஏண்டி, உனக்கு இதைப்பற்றி ஏதாவது தோணுதா?"

"இப்போ நான் கேட்கதுக்குப் பதில் சொல்லுங்க.

நீங்க எப்போதாவது கடவுளிடம் பேசியிருகீங்களா?"

..."இது ஒரு கேள்வியா?

நான் கடவுளை நோக்கி செபம் செய்யும் போதெல்லாம் அவரோடு பேசத்தானே செய்கிறேன்."

"செபத்தின் ஒரு வகையை மட்டும்தான் சொல்லியிருக்கீங்க.

இன்னும் இரண்டு வகை?"

..."நீயே சொல்லிவிடு. நீ பேசி நான் கேட்கணும்போல இருக்கு."

"இருக்கும்.

முதல்லே செவிக்கு உணவு வேணும்னு சொல்லீட்டீங்களே.

நாம்
சிந்திக்கிறோம்.
பேசுகிறோம்.
செயல்புரிறோம்.

நமது வாழ்க்கையே இந்த மூன்றில்தான் அடங்கியிருக்கிறது.

சிந்தித்ததைத்தான் சொல்லுகிறோம்.

சிந்தித்ததைத்தான்
செய்கிறோம்.

நமது செபமும்,

அதாவது இறைவனோடு  நாம் செய்யும் உரையாடலும்,  

இம்மூன்றாலும்தான் நடைபெறுகிறது.

இறைவனைப் பற்றி
தியானிக்கிறோம், சிந்தனையால்.

செபம் சொல்கிறோம், வாயால்.

செபம் செய்கிறோம், உடலால்.

தியானிப்பதற்கும், செய்வதற்கும் மொழி தேவை இல்லை.

பாடுகளைப் பற்றி தியானிக்கும்போது  இயேசு பட்ட பாடுகள்,

அவர் இரத்த வியர்வை வியர்த்தது,

அவர் கைது செய்யப்பட்டது,

ஏரொது முன், பிலாத்துவின் முன் பட்ட அவமானங்கள்,

கசையடி வாங்கியது,

முள் முடி சூட்டப்பட்டது,

சிலுவையைச் சுமந்து சென்றது,

சிலுவைப் பாரத்தைத் தாங்க முடியாமல் கீழே விழுந்தது,

சேவகர்கள் செருப்புக் காலால் அவரை மிதித்து எழுப்பியது,

சிலுவையில் அறையப்பட்டது,

சிலுவையில் மரணம் அடைந்தது

போன்ற நிகழ்ச்சிகள் மனத்திரையில் தத்ரூபமாக ஓடிக்கொண்டிருக்கும்.

நமது மனக்கண்ணால்
அன்பு உணர்வோடும்,  மனஸ்தாப உணர்வோடும் அவற்றைத் தியானிப்போம்.

நமது உணர்வுக்கு மொழி தேவை இல்லை.

காலையில் விழித்தது முதல் மறுநாள் காலையில் விழிப்பது வரை நாம் செய்யும் அனைத்து செயல்களும்,

ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டால்,

செபமே.

இந்த வாழ்க்கைதான் செபம் செய்தல்.

செபம் செய்ய மொழி தேவை இல்லை.

செபம் சொல்லும்போது மட்டும்தான் மொழி தேவைப்படுகிறது.

ஆக நாம் மொழியின் உதவி இன்றி இறைவனோடு பேசுவதே அதிகம்.

மொழியின்றி நாம் பேசும்போது இறைவனும் நம்மிடம் மொழிஇன்றி பேசுகிறார்."

..."அதெப்படி மொழிஇன்றி பேசுகிறார்?"

"ஏங்க, நீங்க முதன்முதல்ல என்னோடு எப்படிப் பேசினீர்கள்?"

..."கண்ணால் பேசினேன். நீயும் கண்ணால்தான் பேசினாய்.

கண்ணும் கண்ணும் பேசும்போது கண்கள்மட்டுமா சந்தித்தன?

நமது உள்ளங்களும் சந்தித்தன.

நமது உள்ளத்து உணர்வுகளும் தாங்கள் சுமந்து வந்த அன்போடு சந்தித்தன.

நமது அன்பு இணைந்தது.

நாமும் இணைந்தோம்."

"இப்போ அப்படியே Locationஅ shift பண்ணுங்க,

உங்கள் மனக்கண்ணையும் இறைவனின் மனக்கண்ணையும்

அப்படியே
close up ல சந்திக்க விடுங்க.

Wait. நான் ஒரு close up shot எடுத்துவிடுகிறேன்.

அடேயப்பா! பிரம்மாதமுங்க!

இருவர் கண்கள் இணையும்போது ஒரு ஒளி தோன்றியதே!

ஏங்க,  ஏங்க.

அப்போ சரி.

கண்ணால் பேச ஆரம்பிச்சிட்டீங்க.

இப்போ என்னோடு பேசமாட்டீங்க!

நீங்க பேசிக்கிட்டிருங்க.

பேசி முடித்தபின் வர்ரேன்.

உள்ளங்கள் பேசும்போது உலகம் மறைந்துவிடுமே!"

லூர்து செல்வம்.

Monday, July 29, 2019

எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு நாள்தோறும் அளித்தருளும்,(லூக்.11:3)

எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு நாள்தோறும் அளித்தருளும்,(லூக்.11:3)
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

"ஏங்க, இயேசு

'எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு நாள்தோறும் அளித்தருளும்'

என்று நாம் தந்தையிடம் வேண்டவேண்டும் என்று  கற்றுத் தந்திருக்கிறாரே,

அன்றன்றைக்கு வேண்டிய உணவு அன்றன்றைக்கு கிடைக்கும்  என்று நம்பாமல்

எதிர்காலத்திற்காக சேர்த்து வைப்பது தப்பாங்க?"

..."ஆங்கிலத்தில்

The letter of the law ,

the spirit of the law

என்று இரண்டு  சொற்றொடர்கள் உண்டு.

' Keep to the letter of the law' என்றால் சட்டத்தின் வார்த்தைகளுக்கு அகராதியிலுள்ள பொருள்படி விளக்கம் கொடுத்து அப்படியே வாழ்வது.

Keep to the spirit of the law என்றால் சட்டம் நம்மிடம் என்ன எதிர் பார்க்கிறதோ  அதன்படி வாழ்வது.

கடவுள் தந்த பத்து கட்டளைகளுள் ஐந்தாவது கட்டளை என்ன? "

"கொலை செய்யாதிருப்பாயாக."

..."நான் தேவை இல்லாமல் உன்னிடம் கோபப்பட்டு,  கடுமையான வார்த்தைகளால் உன்னைத் திட்டினால், பாவம் செய்கிறேனா?"

"ஆமா."

"எந்த கட்டளைக்கு விரோதமான பாவம்?"

"தெரியலிய.

'மனைவியைத் திட்டாதிருப்பாயாக' என்று கட்டளையே இல்லையே!"

..."அப்படியானால் நான் திட்டியது பாவம் இல்லையே!

நான் எந்த கட்டளையையும் மீறவில்லையே!"

"எனக்குப் புரியவில்லையே!"

..."இப்போது ஐந்தாங்கட்டளைக்கு வருவோம்.

அகராதியில் உள்ள பொருள்படி நமது அயலானைக் கொல்வது, அதாவது உயிரை எடுப்பது பாவம்.

ஆனால் அந்தக் கட்டளை நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கிறது.

நான் உன்னைத் தேவை இல்லாமல் திட்டும்போது உனது மகிழ்ச்சி கொல்லப்படுகிறது.

உன்னைப்பற்றிக் கெடுத்துப் பேசினால் உன் நல்ல பெயர் கொல்லப்படுகிறது.

சதா உன்னைக் குறை சொல்லிக் கொண்டேயிருந்தால் உனது உற்சாகம் கொல்லப்படுகிறது.

ஆக இவையும் ஐந்தாங்கட்டளைக்கு விரோதமான பாவங்கள்தான்.

கொலை செய்வது மட்டுமல்ல, காயப்படுத்துவதும் பாவம்தான்."

"அப்போ நீங்கள் பாடம் படிக்காத மாணவர்களைத் திட்டியது, அடித்தது எல்லாம்?"

..." 'தேவை இல்லாமல்' என்று சொன்னது காதில் விழவில்லையா?

மாணவர்கள் நன்கு படிக்கவேண்டும்,

நல்லவர்களாய் வளரவேண்டும் என்பதற்காக

அவர்கள் தவறு செய்யும்போது

அர்களைத் திருத்துவதற்காக

அவர்களைக் கண்டிக்க
வேண்டியது ஆசிரியரது கடமை.

பிரம்பை எடுக்காதவன் பிள்ளையைப் பகைக்கிறான்."

"விழுந்தது. சும்மா கேட்டேன்.

சரி, நான் முதலில் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் கேளாத கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?"

..."நீ கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொல்லிக் கொண்டிக்கிறேன்.

'எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு நாள்தோறும் அளித்தருளும்'

என்று வேண்டும்போது

நாம் நமது அன்றாட. உணவிற்காக மட்டுமல்ல,

அன்றாடத் தேவைகளுக்காகவும் தந்தையை வேண்டுகிறோம்.

கடவுள் நேரடியாக நமக்கு நம் உணவைத் தருவதில்லை.

நாம் சிறுவர்களாக இருக்கும்போது நம் பெற்றோர் வழியாக நமக்குத் தந்தார்.

நமது பெற்றோருக்கு வயதாகும்போது நம் மூலமாகப் பெற்றோருக்குக் கொடுப்பார்.

நம் அயலான் மூலமாக நமக்குத் தருகிறார்.

நம் மூலமாக நம் அயலானுக்குக் கொடுக்கிறார்.

நமது அன்றாட உழைப்பில் நமது
தேவைக்குப் போக மீதியை,

போதிய வருவாய் இல்லாத நம் அயலானோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்.

அதுவும்போக மீதி இருப்பது  சேமிப்பில் சேரும்.

அப்படியே தினமும் மிஞ்சுவது தினசேமிப்பில் சேரும்.

இப்படிச் சேர்வது

நமது சொந்தப் பயன்பாட்டுக்காக மட்டுமல்ல

தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதிருக்கும் நமது அயலானின் பயன்பாட்டுக்காகவும்தான்.

கிறிஸ்துவின் மதிப்பீட்டின்படி  (Christian value) நம் உடைமையும் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய

(ஆடையில்லாதோருக்கு ஆடை கொடுக்க,

பட்டினியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்க,

தாகமாய் இருப்போருக்குத் தண்ணீர் கொடுக்க,

நோயாளிகளைக் குணமாக்க,

அன்னியனை வரவேற்று உபசரிக்க,

சிறைப்பட்டோரை விடுவிக்க)

பயன்படுத்தப்பபட வேண்டும்.

ஏனெனில் எல்லோரும் இறைவனின் பிள்ளைகள்.

அதனால்தான்

ஒரு ஆள் வேண்டினாலும்

'என்னுடைய அன்றாட உணவை எனக்கு நாள்தோறும் அளித்தருளும்'

என்று வேண்டாமல்

'எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு நாள்தோறும் அளித்தருளும்'

என்று எல்லோருக்கும் சேர்த்தே வேண்ட இயேசு கற்றுத் தந்திருக்கிறார்.

கிறிஸ்துவின் மதிப்பீடுகளின்படி செயல்படுபவர்கட்கு சேமிப்பு நல்லது.

ஏனெனில்,

அவர்கள் தங்கள் சேமிப்பை மற்றவர்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்டுத்துவார்கள்."

"அந்த சிறிய செபத்தில் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருகேகிறதா?"

..." 'நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள்.' (அரு.13:34)

என்ற ஒரு வசனத்தில் மொத்த கிறிஸ்தவமே அடங்கியிருக்கிறது."

"அனைவரையும் நேசிப்போம்.

அன்றாட உணவு அனைவருக்கும் கிடைக்க,

அன்றாட தேவைகள்

அனைவருக்கும் பூர்த்தியாக

நம்மைக் கரங்களாய்ப் பயன்டுத்த

நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்."

லூர்து செல்வம்.

Wednesday, July 24, 2019

"வானத்துப் பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டன." (மத்.13:4)

"வானத்துப் பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டன."
(மத்.13:4)
ooooooooooooooooooooooooo

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மக்கள் பூசைக்கு வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை முழுப்பூசை காண வேண்டியது நமது கடமை.(Obligation)

ஆயினும் வெறுமனே கடனுக்காக பூசைக்கு வரக்கூடாது.

உண்மையிலேயே திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நோக்குடன் வரவேண்டும்.

வேறு வழி இல்லையே என்று சாப்பிடுகிறவனுக்கும்,

பயங்கர பசியுடன் சாப்பிடுகிறவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

ஒப்புக்குச் சாப்பிடுகிறவன் சோற்றை பிசைந்து போட்டுவிட்டுப் போவான்.

பசியுடன் சாப்பிடுபவன் ஒரு பறுக்கை கூட மிச்சம் வைக்காமல் முழுவதும் சாப்பிட்டுவிடுவான்.

அவ்வாறுதான் உண்மையான ஆவலுடன் திருப்பலிக்கு வருபவன் முழுப்பூசையும் காண்பான்.

முழுப்பூசை என்றால் என்ன?

நாம் நமது வாழ்க்கையை தாயின் கருவறையில் தொடங்கி
கல்லறையில் முடிக்கின்றோம்.

யாரும் வாழ்க்கையை 5 வயதில் தொடங்குவதில்லை.

அது போல்தான் பிந்தி வருபவனின் விருப்பத்திற்கு ஏற்றபடி முழுப்பூசை ஆரம்பிக்காது.

முழுப்பூசை வருகைப் பாடல் (introit)  பாட ஆரம்பிக்கும்போது ஆரம்பிக்கிறது.

"சென்று வாருங்கள், பூசை முடிந்துவிட்டது" (Ite,  missa est)
என்ற குருவானவரின் முடிரையோடு முடிகிறது.

ஒரு நண்பர் தான் பூசை காணாததுக்கு சாமியாரை நொந்து கொண்டார்.

"நான் பூசை காணவேண்டும் என்ற ஆசையோடு ஓடோடி வந்தேன். நான் கோவிலின் Main gate பக்கம் வரும்போதே சாமியார்

"சென்று வாருங்கள், பூசை முடிந்துவிட்டது"

என்று கூறிவிட்டார்,

என்று தான் பூசை காண முடியாமைக்குப் பழியைச் சாமியார் மேல போட்டார்!

சில ஆசாமிகள் பூசை ஆரம்பிக்கும்போது இருப்பார்கள்.

சாமியார் பிரசங்கம் ஆரம்பிக்கும்போது நைசாக வெளியே போய்விடுவார்கள்,

பிரசங்கம் முடிந்தபின் ஆர அமர உள்ளே வருவார்கள். அதற்கு வசதியாக வாசல் பக்கம் அமர்ந்து கொள்வார்கள்.

திருப்பலியில் எல்லாப் பகுதிகளும் முக்கியமானவைதான்.

நம் ஆண்டவரின் வாழ்க்கையின் Climax அவருடைய சிலுவை மரணம்.

ஆனால் அது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில்தான் நடந்தது.

அவரது மூன்று வருட பொதுவாழ்வில் அவரது பாடுகள்வரை அவர் நற்செய்தி அறிவித்துக்கொண்டுதான் இருந்தார்.

திருப்பலியின் Climax எழுந்தேற்றம்தான்.

நற்செய்தி வாசித்தலும்,

வாசகங்களுக்கான விளக்கம்    தரும் பிரசங்கமும்

ஆண்டவரின் நற்செய்திப் பணியை நினைவுக்குக் கொண்டுவருவதால் 

அவையும் முக்கியமானவைதான்.

நற்செய்தி வாசகங்களின் நோக்கம் வெறும் செய்தி ஞானம் மட்டுமல்ல.

அந்த வார ஆன்மீக வாழ்க்கைதான் வாசிப்பின் நோக்கம்.

அதனால்தான்

அன்றைய வாசகத்தை எப்படி வாழ்வாக்குவது

என்ற விபரத்தை குருவானவர் பிரசங்கத்தில் விளக்குவார்.

விதை விதைப்பவனுடைய உவமையை இயேசுவே கூறினார்.

இறை வார்த்தையாகிய விதையை குருவானவர் நமது உள்ளமாகிய நிலத்தில் விதைக்கிறார்.

அந்த விதை முளைத்து பலன் தர வேண்டும் என்பதுதான் குருவானவரின் ஆசை.

இயேசுவின் ஆசையும் அதுதான்.

குருவானவரும், இயேசுவும் ஆசைப்பட்டால் போதுமா?

நாம்தான் உள்ளமாகிய நிலத்தைப் பண்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

பண்படுத்தி வைத்திருந்தால்மட்டும் போதாது,

காக்கா, குருவிகளிடமிருந்து விதையைப் பாதுகாக்க வேண்டும்.

அதென்ன காக்கா, குருவிகள்?

விதை நிலத்தில் விழாதபடி

விழும்போதே அபகரித்துக் கொள்ள

சாத்தான் பராக்குகளை அனுப்புவான்.

சில பராக்குகள் வெளியே இருந்து வரும்.

கோவிலை அளவுக்கு மீறி அலங்கரிப்பதும் பராக்குதான்.

பலிபீடத்தில் நடந்து கொண்டிருப்பதைக் கவனியாமல் பீட அலங்காரத்தையே இரசித்துக் கொண்டிருப்பவன்

எப்படி பூசையிலும், பிரசங்கத்திலும் கவனம் செலுத்துவான்?

Fashion show வுக்கு வருவதுபோல் dress செய்துகொண்டு வருபவர்கள்

பராக்குகளின் பிறப்பிடங்கள்!

சில சமயங்களில் நாமே நமக்கு எதிரிகளாகிவிடுவோம்.

வீட்டில் வரும் தூக்கத்தை விட பிரசங்க நேரத் தூக்கம் இனிமையாய் இருக்கும்.

விலக்கப்பட்ட கனிக்கு எப்பவுமே ருசி அதிகம்தான்!

சாமியார் பிரசங்கத்தை ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களுக்குள்

எங்கிருந்தோ வந்த தூக்கம் கண் இமைகளில் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

சிலர் தூங்கி விடுவர், சிலர் தூக்கத்தோடு போராடுவர்.

இரண்டிற்கும் net result ஒன்றுதான்.

பிரசங்கம் கேட்கும். வார்த்தைகள் காதில் விழாது.

இத்தகைய நிகழ்விலிருந்து தப்பிக்க

பிரசங்கத்திற்கு முன்பே மனவல்லப செபங்களால்

தூக்கத்திற்கு எதிராக நம்மையே தயாரித்துக் கொள்ள வேண்டும்.

பிரசங்கம் முடிந்தவுடன் அந்த வாரத்திற்கான வழிகாட்டி வாக்கியம் ஒன்றைத் தேர்ந்து கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு நற்செய்தி வாசகம்

எம்மாவூஸ் நகருக்கு சீடர்களோடு உயிர்த்த இயேசு சென்ற நிகழ்வு என்று வைத்துக்கொள்வோம்.

பிரசங்கத்திற்குப்பின் அந்த வார வழிகாட்டி வாக்கியம்

"இயேசுவே எங்களோடு/என்னோடு தங்கும்."

அந்த வாரம் முழுவதும் அந்த வாக்கியம்  வழிகாட்டியாய் இருக்கும்.

"இயேசுவே எங்களோடு வாரும்."

"இயேசுவே எங்களோடு பேசும்."

போன்ற வாக்கியங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் அந்த வாரம் முழுவதும் அந்த செப விதையை

மறதி, அசமந்தம், சம்பந்தம் இல்லாத கற்பனைகள் போன்ற

காக்கா, குருவிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

அதற்காக அவற்றை உள்ளத்தில் ஆழப்பதித்து,  அப்பப்போ வாய்க்கும் கொண்டுவர வேண்டும்.

அவை நமக்கு வழிகாட்டியயாய் மட்டுமன்றி வழியாயும் பயன்பட வேண்டும்.

அந்தந்த வார வார்த்தைகள் அந்தந்த வாரத்திற்கு மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் பயன்பட வேண்டும்.

நமக்குச் சோதனைகள் வரும்போதெல்லாம் அவற்றைப் பாதுகாப்புக் கேடையமாகப் பயன்படுத்துவோம்.

ஒவ்வொரு வாரமும் இதைச் செயல்படுத்தினால் நாமே  இறை வார்த்தைகளின் பொக்கிசமாக மாறிவிடுவோம்.

வானத்துப் பறவைகளிடமிருந்து இறைவார்த்தையைப் பாதுகாத்து,

வாழ்நாளெல்லாம் பயனடைவோம்!

லூர்து செல்வம்.