Sunday, June 9, 2019

"அந்தோனியாரே! காப்பாத்துங்க!"


"அந்தோனியாரே! காப்பாத்துங்க!"
**************************

"என்ன திடீர்னு உவரிக்கு?"

"வீட்ல ஒரு பிரச்சனை. தொடர்ந்து 13 செவ்வாய்க்கிழமைகள் அந்தோனியார் கோவிலுக்குப் போகணும்னு ஒரு நேர்ச்சை.

இன்று நாலாவது வாரம்."

"போய் என்ன பண்ணுவீங்க?"

"காணிக்கை போடுவோம். செபம் சொல்லுவோம். 13 ஏழைகளுக்கு சாப்பாடு போடுவோம். பூசைக்குப் போவோம்."

$ ........$ ............$........$

"வேளாங்கண்ணிக்குப் புறப்பட்டது மாதிரி தெரியுது? "

"வேளாங்கண்ணிக்கு மட்டுமல்ல, போகும்போது ஓரியூர், வரும்போது பூண்டி மாதாகோயியில்.

விடுமுறை நாட்கள்.  பொடியங்க எங்காவது Tour போக ஆசைப்பட்டாங்க."

"ஒவ்வொரு வருடமும் போவீஙங்களோ?"

"ஆமா.போனவருடம் உவரி, மணப்பாடு.

அடுத்த வருடம் பர்ணஞானம் போகலாம்னு திட்டம்."

$...............$..............$

நம்மவரின் பக்தி முயற்சிகளுக்கு ஒரு Sample!

கிறிஸ்தவ மக்களிடையே பக்தி முயற்சிகளுக்குப் பஞ்சமே இல்லை.

மாதா பக்தி, அந்தோனியார்
பக்தி, மற்றும் புனிதர்கள்மமீது பக்தி.......

நேர்ச்சைகள் நிறைவேற்றுதல், காணிக்கை போடுதல், மன்றாட்டுக்கள் சொல்லுதல், ஏழைகளுக்கு உதவுதல் - இவை சில பக்தி முயற்சிகள்.

எல்லா பக்தி முயற்சிகளுக்கும் பொதுவான அம்சம் ஒன்று உண்டு,

வேண்டுதல்.(Petition)

கோவில் இருக்கும் திசையைப் பார்த்தே தலை வைத்துப் படுக்காத ஒரு ஆசாமி  திடீரென்று அந்தோனியார் கோவிலுக்குப் புறப்பட்டார்.

"என்ன விசயம்"னு கேட்டப்போ

"தொழில் கொஞ்சம் dullலடிக்குது,அந்தோனியார பார்த்துட்டு வரலாம்னு போறேன்"னு ரொம்ப கூலா சொல்ராரு,

ஏதோ அந்தோனியார் ஒரு Businessman மாதிரி!

Business க்கு உதவும்படி அந்தோனியாரிடம் கேட்கிறது தப்பில்லை,

ஆனால் Business க்காக மட்டும் அவரைத் தேடிப்போகிறது ஒரு பக்தி முயற்சியாகத் தெரியவில்லை.

பக்தி என்றால் என்ன?

அன்பு என்ற வார்த்தையின் உயர்தர மறு உருவம்தான் பக்தி.

அன்பை யாருக்காக வேண்டுமானாலும் பயன்டுத்தலாம்.

மனிதர்களை மட்டுமல்ல, வளர்ப்புப் பிராணிகளைக்கூட அன்பு செய்யலாம்.

ஆனால் விண்ணகவாசிகள் மீது நமக்கு உள்ள உயர்ந்த, மேலான,  ஆழமான அன்பைப் பக்தி என்கிறோம்.

நம்மைப் படைத்த கடவுள் மீது, அவருடன் விண்ணகத்தில் ஐக்கியமாய் வாழும் புனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்புதான் பக்தி.

இறைவன்மீது பக்தி உள்ள நாம் அவரை நமது முழு மனதுடன் நேசிக்கிறோம்.

அவரை அவருக்காகவே, நிபந்தனை இன்றி, நேசிக்கிறோம்.

அவர் நம்மைப் படைத்தவர் என்பதற்காகவே அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறோம்.

உண்மையான இறைபக்தன், தனது பக்திக்கு பிரதிபலனாக இறைவனைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க மாட்டான்.

"எல்லாம் இயேசுவே, எனக்கு எல்லாம் இயேசுவே," என்று பாடுகிறோம்.

பொருள் என்ன?

"இயேசுவே,

எனக்கு சகலமும் நீர்தான்.

உம்மைத் தவிர எனக்கு வேறு எதுவும் தேவையில்லை.

நான் பிறந்தது உமக்காக,

வாழ்வது உமக்காக,

மரிக்கவிருப்பது உமக்காக.

நான் மற்றவர்களை உமக்காகத்தான் நேசிக்கிறேன்,

உமக்காகத்தான் மற்றவர்கட்கு சேவை செய்கிறேன்.

என்னைப் பேணுவதும் உமக்காக வாழ்வதற்காகத்தான்."

இத்தகைய மனப்பக்குவம்தான் உண்மையான இறைபக்தி.

உண்மையான இறைபக்தி உள்ளவர்கள் கஸ்டகாலத்திலும் துன்பங்களை இறைவனுக்காக ஏற்றுக்கொள்வார்கள்.

இயேசுமீது பக்தி இருந்தால் இயேசுவுக்காக மட்டுமல்ல,

இயேசுவைப்போல் மட்டுமல்ல,

இயேசுவாகவே வாழ்வோம்.

இயேசுவின் உண்மையான சீடனாக வாழ்வோம்.

இவ்வுலகில் இறைவனுக்காகவே வாழ்ந்து, இப்போது இறைவனோடு வாழ்ந்து கொண்டிருக்கும் புனிதர்கள்மீது நாம் கொண்டுள்ள பக்தியும் சுயநலமற்றதாக இருக்கவேண்டும்.

அந்தோனியாரின் உண்மையான பக்தன் அந்தோனியாராகவே வாழ்வான்.

அந்தோனியாரின் எல்லா குணங்களும் அவனிடமும் இருக்கும்.

அவரை நமக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள agentஆகப் பயன்படுத்த மாட்டான்,

இறைவனிடம் அழைத்துச் செல்லும் வழிகாட்டியாகப் பயன்படுத்துவான்.

அந்தோனியார் இறைவனின் சீடனாக வாழ்ந்தார்,

பக்தனும் அவவாறே வாழ்வான்.

அப்படியானால் நமக்கு வேண்டிய உதவிகளைக் கேட்கக் கூடாதா?

கேட்கலாம்.  அவரும் கேட்ட உதவியைச் செய்வார்.

கோடி அற்புதர், நமக்காக எத்தனை அற்புதங்கள் வேண்டுமானாலும் செய்வார்.

ஆனால் நாம் அவரை அற்புதங்கள் செய்யும் கருவியாக மட்டும் பயன்படுத்தக்கூடாது.

அவரது உண்மையான பக்தனாக, 

அதாவது

இயேசுவின் சீடனாக வாழ வேண்டும்.

பக்தன் = சீடன்.

அந்தோனியாரின் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி:

அந்தோனியார் தினமும் கணக்கில்லாமல் புதுமைகளைச் செய்வதைக் கவனித்த அவரது சுப்பீரியர் அவரை அழைத்தார்.

அந்தோனியார் சுப்பீரியரின் அறைக்குச் சென்று,

முழந்தாள்ப் படியிட்டு,

தரையை முத்தி செய்து, 

எழுந்து,

"சுவாமி! கூப்பிட்டீங்களா?"

"ஆமா. சுவாமி,  உட்காருங்கள். ஒரு சிறிய விருப்பம். இனி நீங்கள் ஒரு நாளைக்குப் 13 புதுமைகள் மட்டுமே செய்யலாம்."

"தங்கள் சித்தம் எனது பாக்கியம், சுவாமி."

அன்று பகலில் அந்தோனியார் வெளியே நடந்து கொண்டிருந்தபோது,  கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்டடம் அருகே  வர நேர்ந்தது.

மூன்றாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு தொழிலாளிக்குக் கால் வழுக்கிவிட்டது.

விழ ஆரம்பித்த அவன் கீழே அந்தோனியார் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தான்.

"அந்தோனியாரே! காப்பாத்துங்க!" என்று கத்தினான்.

அந்தோனியார் மேலே ஏரெடுத்துப் பார்த்தார்.

ஆகாயத்து வழியே விழுந்து கொண்டிருந்த தொழிலாழியைப் பார்த்தார்.

கையை மேலே உயர்த்தினார்.

விழுந்து கொண்டிருந்தவன் அப்படியே ஆகாயத்தில் நின்றுகொண்டான்.

கீழே வரமுடியவில்லை.

அப்போதுதான் அந்தோனியாருக்குப் புரிந்தது, இது அன்றைக்கு அவரது 13 வது புதுமை!  

அதற்குமேல் அன்றைக்கு ஒன்றும் செய்யமுடியாது.

சுப்பீரியரின் உத்தரவை யாரிடமும் கூறவும் முடியாது.

தொழிலாளி "அந்தோனியாரே!
அந்தோனியாரே!" என்று கத்திக் கொண்டிருந்தான்.

கூட்டம் கூடிக்கொண்டிருந்தது.

எல்லோரும் அந்தோனியாரையையும், தொழிலாழியையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தற்செயலாக
சுப்பீரியர் அங்கு வந்தார்.

கூட்டத்தையும்,  அந்தோனியாரையும், ஆகாயத்தில் தொழிலாழியையும் பார்த்தார்.

நிலைமையைப் புரிந்துகொண்டார்.

"சுவாமி."

"சுவாமி?"

"உங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டேன்.

எனது உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.

இனி நீங்கள் கோடிக்கணக்கில் புதுமைகள் செய்யலாம்!"

அந்தோனியார் முழந்தாளில் இருந்து,

தரையை முத்தி செய்து,

எழுந்து

"தங்கள் சித்தம் எனது பாக்கியம், சுவாமி." என்றார்.

பின் ஆகாயத்தை நோக்கி இரு கரங்களையும் உயர்த்தினார்.

தொழிலாளி அப்படியே கீழ்நோக்கி வந்து அந்தோனியாரின் கரங்களுக்குள் பத்திரமாகத் தரை இறங்கினான்.

மக்கள் அந்தோனியாரின் புதுமையைவிட அவரது தாழ்ச்சியைக் கண்டே வியந்தனர்.

புனித அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment