Sunday, October 13, 2019

"பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?" (லூக்.17:17)

"பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?"
(லூக்.17:17)
--------------------------------------------------

"குருவே, இயேசுவே, எங்கள்மேல் இரக்கமாயிரும்."

என்று செபித்து இயேசுவின் உதவியைக் கேட்டவர்கள் பத்து பேர்.

பத்து பேர் பேரிலும் அவர் இரக்கமாயிருந்தார்.

பத்து பேரும் குணமானார்கள்.

ஆனால் நன்றி கூற ஒருவன்தான் வந்தான்.

மீதி ஒன்பதுபேர் எங்கே என்று இயேசு கேட்டார்.

ஏன் இந்தக் கேள்வி?

நன்றி கூறுவதால் அவருக்கு ஏதாவது கிடைக்குமென்றா?

அவர் நிறைவானவர்.

நித்திய காலமாக நிறைவானவர்.

அவர் அன்பு செய்யக்கூட இன்னொருவர் தேவையில்லை.

ஏனெனில் அவர்தான் அன்பு.

He is Love.

நித்திய காலமாக பூரணமாக அன்பு செய்வதற்காகத்தான் ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார்.

ஆனாலும் அன்பு செய்வதெற்கென்றே மனுக்குலத்தைப் படைத்தார்.

மொத்தமாகச் சொல்வதைவிட நம் ஒவ்வொருவரையும் படைத்தார் என்று கூறுவதே சரியானது.

ஏனெனில் நம் ஒவ்வொருவர் மேலும் முழுமையான தனிக்கவனம் செலுத்துகிறார்.

நாம் முழுமையும் நல்லவர்களாக இருக்க வேடுமென்று இயேசு விரும்புகிறார்.

நன்றி உணர்வுதான் ஒருவனை முழு மனிதனாக்கும்.

மிருகங்களிடம்கூட அந்த உணர்வு இருக்கிறது.

நம்மிடம் அது இல்லாவிட்டால்
நாம் மிருகங்களை விடத் தாழ்ந்துவிடுவோம்.

ஒன்று மில்லாமை யிலிருந்து
நம்மை உண்டாக்கிக்
காப்பாற்றி வருவதற்காக என்றாவது நன்றி கூறியிருக்கிறோமா?

இதே கேள்வியை நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.

"நான் படுகிற கஸ்டங்களை நினைக்கும்போது கடவுள் என்னைப் படைக்காமல் இருந்திருக்கலாம் போலிருக்கிறது." என்றார்.

இவரைப் போன்றோர் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இவர்கள் தங்களுக்குக் கஸ்டங்களை அனுமதிக்கும் கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது என்று எண்ணுகிறார்கள்.

ஒருமுறை என் பிள்ளைகளிடம்
Picnic போய்வரலாமா என்றேன்.

மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்கள்.

குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்றோம்.

பேருந்தில் பிரயாணம் செய்து மலை அடிவாரத்தில் இறங்கினோம்.

"இனிமேல் கொஞ்சம் நடக்கவேண்டும்" என்றேன்.

"எவ்வளவு தூரம்?" .

"கொஞ்ச தூரம்தான்."

நடக்க ஆரம்பித்தோம், மலை அடிவாரத்திலிருந்து மேல்நோக்கி!

மலை மேல் ஏற ஆரம்பித்தவுடன் பிள்ளைகளின் முகம் மாறிவிட்டது.

"அப்பா, என்ன இது? நடப்போம் என்று கூறிவிட்டு ஏற ஆரம்பித்து விட்டீர்கள்! "

"கொஞ்ச நேரம்தான்."

மலைமேல் ஏறஏற முணுமுணுத்துக் கொண்டே வந்தார்கள்.

அவர்கள் முகத்தில் Picnic போகிற சந்தோசமே இல்லை.

என் மனைவி அவர்களை ஊக்கப்படுத்திப் பார்த்தாள்.

"போங்கம்மா. அப்பா எங்களை ஏமாற்றிவிட்டார்கள்.

Picnic என்று ஆசை காட்டிவிட்டு
மலை மேலே ஏறவைத்து விட்டார்கள்.

இப்படித் தெரிஞ்சிருந்தா Picnic வரச் சம்மதிச்சிருக்கவே  மாட்டோம்."    

"கொஞ்ச நேரம்தானே. அப்பா உங்களுக்காகத்தானே இந்த Picnicஐ ஏற்பாடு செய்திருக்கிறார்."

"எங்களுக்காகத்தான் இவ்வளவு கஸ்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்! நாங்களா கேட்டோம். அவர்தான்,

"Picnic போய்வரலாமா" என்றார்.

ஏமாந்தது நாங்கள்! "

முணங்கிக் கொண்டே ஏறினார்கள்.

முக்கால் மணி நேரம் ஏறியபின் Picnic Spot க்கு வந்து சேர்ந்தோம்.

அது மலைமேலே சம தளத்தில் அமைந்திருந்த ஒரு  Estate.

இயற்கை அழகோடு கூடிய ஒரு  பழத்தோட்டம்.

எல்லா வகையான பழ மரங்களும்,

கண்ணுக்கு ரம்மியமான பலவகை பூஞ்செடிகளும்,

குளிப்பதற்கு வசதியாக நீரோடை ஒன்றும் அமைந்த சமதளமான ஒரு அழகான எஸ்டேட்.

பிள்ளைகளுக்கு ரொம்ப சந்தோசம்! 

ஓடி ஆடி விளையாட ஆரம்பித்தார்கள்.

"ரொம்ப நல்லா இருக்கப்பா!

இவ்வளவு அழகான ஒரு இடத்தைப் பார்த்ததே இல்லை!

ரொம்ப நன்றிப்பா!

ஏறிவந்த கஸ்டமெல்லாம் மறந்தே போச்சி!

அவ்வளவு கஸ்டப் பட்டிருக்கா விட்டால் இவ்வளவு அழகான இடத்திற்கு வந்திருக்க முடியாது!

மோட்சத்திற்கு வந்தது மாதிரி இருக்கு!"

இதே மாதிரிதான்  வாழ்க்கையின் கஸ்டங்களும்.

கடவுள் நாம் கஸ்டப்பட வேண்டுமென்று நம்மைப் படைக்கவில்லை.

கஸ்டங்களைத் தாண்டிச் சென்று

முடிவில்லாத காலம் தன்னோடு பேரின்பமாக வாழவேண்டும்

என்பதற்காகத்தான் படைத்தார்.

நித்திய பேரின்பத்தோடு ஒப்பிடும்போது தற்காலிகமான கஸ்டகாலம் ஒன்றுமேயில்லை!

முடிவில்லா பேரின்ப வாழ்வுக்காக நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றிகூற வேண்டாமா?

படைத்தது மட்டுமல்ல இடைவிடாது கண்காணித்து வழிநடத்தியும் வருகிறார்.

தமது பராமரிப்பினால் நம்மைக் காப்பாற்றி வருகிறார்.

ஒவ்வொரு வினாடியும் நம்மோடு இருந்து, நாம் வழி தவறிவிடாமல் பாதுகாத்துவரும் கடவுளுக்கு

நாம் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டாமா?

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நன்றி கூறுவோம்.

இறைவன் பராமரிப்பில் என்ன நேர்ந்தாலும் நமது நன்மைக்கே.

ஆகவே என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment