Friday, October 11, 2019

"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான்." (லூக்.11:23)

 "என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான்."
(லூக்.11:23)
----------------------------------------------------
ஆன்மீக வாழ்வில் நடுநிலைமை (neutral position)
என்பதே கிடையாது.

ஆதரிக்கிறோம் அல்லது எதிர்க்கிறோம்.

We are either for or against.

முன்னேறுகிறோம் அல்லது பின்னடைகிறோம்.

We go either  forward or backward.

வளர்கிறோம் அல்லது தேய்கிறோம்.

We either grow or shrink.

நண்பர் ஒருவர் சொன்னார்,

"நான் கடவுளை

ஏற்றுக் கொள்ளவும் இல்லை

மறுக்கவும் இல்லை.

என் மனசாட்சிப்படி இயங்கிக் கொண்டிருக்கிறேன்."

தன்னிச்சாயாக

(கொஞ்சம் கடுமையாகச் சொல்வதானால்,

தானோன்றித் தனமாக)

வாழ்பவர்கள் தங்களைத் தாங்களே நியாயப்படுத்திக் கொள்ளப்

பயன்படுத்தும் வார்த்தைகள் இவை.

கடவுளை விடுத்துவிட்டு மனிதாபிமானம் பேசுபவர்களும் இப்படிப் பட்டவர்கள்தான்.

உண்மையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடம்

உண்மையான மனிதாபிமானம் இருக்கமுடியாது.

நாம் நம்மை நாமே படைத்துக் கொள்ளவில்லை.

நமது பெற்றோரை நாமே தேர்ந்தெடுக்கவில்லை.

நாம்  ஆணா, பெண்ணா என்று  நமது அம்மாவுக்கே நாம் பிறக்குமுன் தெரியாது.

அப்படியானால் நமது பெற்றோர் நம்மைத் திட்டமிடவில்லை.
(திட்டமிட முடியாது.)

இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்

நமது பெற்றோரோ நாமோ நாம் உலகில் பிறக்க காரணம் இல்லை.

நமக்கு அப்பாற்பட்ட, நமது பெற்றோரை

நம் பிறப்பிற்குக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்ட சக்தி ஒன்று இருக்கிறது.

அந்த சக்தியை நாம் கடவுள் என்கிறொம்.

கடவுள் இன்றி மனிதனே இல்லை, பிறகு மனிதாபிமானம் எப்படி வரும்?

கடவுளை நம்பாத நாத்திகவாதிகள்கூட பிறரை நேசித்து உதவி செய்கிறார்களே,

இது மனிதாபிமானம் இல்லையா என்று கேட்கலாம்.

கடவுள் வழியாக நாம் கொள்ளும் மனிதாபிமானமே உண்மையான
மனிதாபிமானம்.

இதைப் புரியவைக்க
ஒரு சிறு கதை.

ஒரு நாள் திருவள்ளுவர் வேலை தேடி பூமிக்கு வந்தார்.

அவர் எழுதிய திருக்குறளுக்கு அவரவர் இஸ்டப்படி பொருள் கூறுவது அவருக்குப் பிடிக்கவில்லை

ஒவ்வொரு குறளுக்கும் தானே விளக்கம் கொடுக்க ஆசித்தார்.

ஒவ்வொரு தமிழனிடமும் தனித்தனியே போய் விளக்கம் கொடுக்க முடியாது.

ஒரு கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தால் மாணவர்கள் மூலமாக இதைச் செய்யலாம் என்று எண்ணினார்.

இதற்காக ஒரு தமிழ் பல்கலைக் கழகத்திற்கு வேலை கேட்டு விண்ணப்பம் போட்டார்.

நேர்காணல் அழைப்பு வந்தது.
போனார்.

"வணக்கம்."

"வணக்கம்."

"தங்கள் பெயர்?"

"திருவள்ளுவர்."

"என்ன வேலைக்கு விண்ணப்பித்துள்ளீர்கள்?'

"தமிழ்ப் பேராசிரியர் வேலைக்கு."

"தங்கள் கல்வித் தகுதி?"

"கசடறக் கற்றவன்."

"Certificates எதுவும் submit பண்ணவில்லையே!'

"புரியவில்லை."

" படித்த கல்லூரியில் பெற்ற கல்விச் சான்றிதள்கள்."

"நான் கல்லூரிக்கே சென்றதில்லை."

"கல்லூரியில் படியாதவர்கள் பல்கலைக் கழகத்தில் எப்படிப் போதிக்க முடியும்?"

"நான் திருவள்ளுவர். திருக்குறளை இயற்றியவன்.

திருக்குறள் விளக்கப் பேராசிரியராகப் பணிபுரியவே விண்ணப்பித்துள்ளேன்."

"திருக்குறளை இயற்றியவராக இருக்கலாம்.

ஆனால், பல்கலைக் கழகத்தில் அதைப் போதிக்க முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்."

"அப்போ நான் இதைக் தெருவில் நின்று விளக்குகிறேன்."

"தாராளமாகச் செய்யுங்கள். ஆனால் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கட்குதான் இங்கு இடம்."

இக்கதை திருவள்ளுவரைப் பற்றிக் கூறுவதற்காக எழுதப்படவீல்லை.

நான் சொல்ல வந்த கருத்தைப் புரியவைப்பதற்காக அவரைப் பயன்படுத்தி இருக்கிறேன்
அவ்வளவுதான்.

எப்படி பல்கலைக்கழகப் படிப்பற்றோருக்கு பல்கலைக்கழகத்தில் வேலை இல்லையோ,

அதுபோல,

விண்ணகத் தொடர்போடு வாழாதவர் எப்பணி புரிந்தாலும் அதற்கு விண்ணகத்தில் அங்கீகாரம் இல்லை.

கடவுளின் பெயரால், அவரது மகிமைக்காகச் செய்யப்படும் காரியங்களுக்கே விண்ணகத்தில் மதிப்பு (Value)
உண்டு.

நமது திருப்திக்காகச் செய்தால் அந்த திருப்தி மட்டும்தான் பரிசு, விண்ணகத்தில் ஏதுமில்லை.

இறைவனையும் விண்ணக வாழ்வையும் விசுவசிப்பவர்கட்கு மட்டுமே இது புரியும்.

விசுவசியாதவர்கட்கு இது புரியாது.

அதற்கு நான் பொறுப்பல்ல.

கடவுளை ஏற்றுக் கொள்பவர்கள் ஆன்மீக வாழ்வையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உடலின் வளர்ச்சியைப் போல ஆன்மீகத்திற்ககும் வளர்ச்சி உண்டு.

உடலின் தளர்ச்சியைப் போல ஆன்மீகத்திற்கும் தளர்ச்சி உண்டு.

இறைவன் மட்டுமே மாறாதவர்.

படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் மாற்றம் உண்டு.

கிறிஸ்தவர்களாகிய நாம் நமது குழந்தைப் பருவத்திலேயே

திரு முழுக்கின்போது நமது ஆன்மீகப் பயணத்தை ஆரம்பித்தோம்.

ஆரம்பிக்கும்போது நம்மிடம் மாசுமறு எதுவும் இல்லை.

திருமுழுக்கினால் நமது ஆன்மா சுத்தப் படுத்தப் பட்டு விட்டது.

குழந்தைப் பருவத்தில் நமக்கு ஆன்மீகம்  என்றால் என்ன. என்றே தெரியாது.

சாப்பிடுவதிலும், விளையாடுவதிலும், தூங்குவதிலும் நேரத்தைச் செலவழித்து

உடல்ரீதி யாக வளர்ந்து கொண்டிருப்போம்.

நமக்கு ஆன்மாவைப் பற்றித்

தெரியாத பருவத்திலும்

நம்மில் வாழும் பரிசுத்த ஆவி இயங்கிக் கொண்டிருப்பார்.

மாறாத தேவன் நம்மில் தனது அருள் வரங்களால் ஆன்மீக மாற்றங்களைச் செய்து கொண்டிருப்பார்.

இறைவனின் செயலோடு நமது பெற்றோர், உடன் பிறந்தோர் ஒத்துழைக்க வேண்டும்.

நம் குடும்பத்தினரின் ஒவ்வொரு செயலும் நமது வளர்ச்சியை

நேர் மறையாகவோ எதிர்மறையாகவோ பாதிக்கின்றன.
(Positively or negatively)

அவர்கள் கிறிஸ்தவ நெறிப்படி வாழ்ந்தால் நாம் ஆன்மீகத்தில் வளர்வோம்.

நெறிதவறி வாழ்ந்தால் தளர்வோம்.

பிள்ளைகளின் தளர்ச்சிக்குப் பெற்றோர் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்.

பெற்றோர் மட்டுமல்ல பங்கிலுள்ள பெரியவர்கள்,

பங்குச்சாமியார் உட்பட,

கணக்குக் கொடுக்க
வேண்டியிருக்கும்.

ஏனெனில் நாம் சமூகப் பிராணிகள்.

நம்முடன் பழகுபவர்கள் எல்லோரையும் பார்த்துதான் வளர்கிறோம்.

நாம் சிந்தனைப் பக்குவம் அடைந்தபின்,

அதாவது சிந்தித்துச் செயலாற்றும்  பக்குவம் பெற்றபின்

நமது வளர்ச்சிக்கோ, தளர்ச்சிக்கோ நாம்தான் பொறுப்பு.

ஆன்மீக வளர்ச்சியை உலகியல் அளவுகோல் கொண்டு அளக்க முடியாது.

ஆனாலும் நம்மால் உணர முடியும்.

நம்மில் பாவம் இல்லாதிருந்தால் மனதில் சமாதானம் நிலவும்.

சமாதானம் என்றால் இறைவனுக்கும் நமக்கும் உள்ள சுமூகமான உறவு.

சமாதானத்தில்தான் அதாவது இறை உறவுநிலையில்தான் புண்ணியங்கள் வளரும்.

(1) தாழ்ச்சி

(2) பொறுமை

(3) கற்பு

(4) ஈகை (தான தருமம் செய்தல்)

(5) பிறர்சிநேகம்

(6) மட்டசனம் (போசனக் கட்டுப்பாடு)

(7) சுறுசுறுப்பு

இந்த ஏழு புண்ணியங்களில் நமது நிலை என்பதை உணர்ந்தால் நமது வளர்ச்சியின் அளவு நிலையும் ஓரளவுக்குப் புரியும்.

இப்புண்ணியங்களில் வளர. இறைவனது அருள் வேண்டும், நமது முயற்சியும் வேண்டும்.

இறைவனது அருள் நமது செபவாழ்வு மூலமாகவும்,

தேவத்திரவிய அனுமானங்கள் மூலமும் நமக்குக் கிடைக்கிறது.

ஏழு தேவத்திரவிய அனுமானங்களில் நாம் அடிக்கடி பெறவேண்டியவை
பாவசங்கீர்த்தனமும்,  திவ்ய நற்கருணையும்.

இவற்றை அடிக்கடி பெறாவிட்டால் புண்ணிய வாழ்வில் வளரமுடியாது.

ஏற்கனவே நமக்குத்தெரியும் ஆன்மீக வாழ்வில் நடு நிலைமை கிடையாது என்று.

வளர முடியாது என்றால் தளர்வோம் என்றுதான் பொருள்.

தளர்ந்து கொண்டே போனால் பாவ நிலையை வந்தடைவோம்

பாவ நிலையை வந்தடைந்தால்  ஆண்டவருக்கு எதிரி ஆகிவிடுவோம்.

கடவுளோடு இராதவன் அவருக்கு எதிரியாக இருக்கிறான்.

எல்லாம் வல்லவருக்கு எதிரியாய் இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து!

இதை இன்னும் விளங்கும்படி சொன்னால்

மோட்ச நிலைக்கு தகுதியாய் இல்லாதவன்

நரக நிலைக்குதான் தகுதியாய் இருக்கிறான்.

இடைநிலை கிடையாது.

இதை உணர்ந்து நாம் ஆன்மீக வாழ்வில் வளர்ந்துகொண்டே இருக்க முயலவேண்டும்.

நாம் வாழும் ஊர் அடிக்டி திவ்யபலி கண்டு, நன்மை எடுக்க முடியாத ஊராய் இருந்தால் என்ன செய்ய?

ஞாயிறு பூசையாவது கட்டாயம் காணவேண்டும், பிரயாணம் செய்தாவது.

சாவான பாவ நிலை ஏற்பட்டால்,

உடனே உத்தம மனஸ்தாபப்பட்டு

கூடிய சீக்கிரம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

செபவாழ்வை ஆழப்படுத்த வேண்டும்.


செபவாழ்வாவது ஆண்டவருக்காக வாழ்வது.

காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்து விட்டு,

ஒவ்வொரு வேலையையும் பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் ஆரம்பிப்பது.

இது ஒன்றும் கடினமான காரியமன்று, நல்ல மனது வேண்டும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம், வேலை இடையே கூட, ஒரு வரி மனோவல்லப செபங்கள் (One liners) சொல்ல வேண்டும்.

இயேசுவே இரட்சியும்.

இயேசுவே இரக்கமாய் இரும்.

இயேசுவே வாரும்.

இயேசுவே என்னோடு தங்கும்.

இயேசுவே என் பாவங்களை மன்னியும்.

இயேசுவே உம்மை நேசிக்கிறேன்.

இயேசு, மரி, சூசை துணை.

இதேபோன்று எண்ணற்ற ஒரு  வரி செபங்களை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். 

ஒவ்வொரு வரியும் கடவுளின் அருளை அள்ளித் தருவது மட்டுமின்றி

நம்மை ஆன்மீகத்தில் வளர்த்துக்கொண்டே இருக்கும்.

நம்மை ஆன்மீகத்தில் வளர்க்கும் மற்றுமொரு சாதனம் நற்செயல்கள்.

இறையன்பால் உந்தப்பட்டு நாம் செய்யும் எல்லா செயல்களும் நற்செயல்கள்.

சாதாரண செயல்கள்கூட இறையன்பிற்காகச் செய்யப் பட்டால் நற்செயல்களாக மாறி விடுகின்றன.

காலையில் நண்பர் ஒருவரைப் பார்த்து, 'Good morning' சொல்லுகிறோம்.

இது ஒரு சாதாரணச் செயல்தான்.

ஆனால் படைக்கப்பட்ட எல்லாரும்  படைத்தவரைப் பிரதி பலிக்கின்றார்கள் என்பதை உணர்ந்து

படைக்ப்பட்ட மக்களுக்கு என்ன செய்தாலும்

இறைவனுக்கே செய்கிறோம் என்ற உணர்வோடு 'Good morning' சொன்னால்

அவர் அதை ஏற்று அருள் மழையைப் பொழிவார்.

நாம் ஆன்மீகத்தில் வளர்வோம்.

தேவைப்படுவோருக்கு 'இறைவன் பெயரால்' செய்யப்படும்  எல்லா உதவிகளும்

இறைவனுக்கே செய்யப்படுகின்றன.

நம் சிந்தனையாலும்,  சொல்லாலும், செயலாலும் 

ஆன்மீகத்தில் வளர்வோம்,

வளர்ந்து கொண்டே யிருப்போம்,

விண்ணை எட்டுவோம்.

வாழ்வோம் இறைவனுக்காக, இறைவனுக்காக மட்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment