Friday, April 5, 2019

அன்பின் விளையாட்டு!

அன்பின் விளையாட்டு!
**************************

"செல்வம், இங்கே வா. உட்கார்.
எங்கிட்ட ஒரு கேள்வி இருக்கு,

அதற்குரிய பதிலும் இருக்கு.

நான் கேள்வியைக் கேட்பேன்.
நீ என் மனதிலுள்ள பதிலைச் சொல்லணும்.''

"ஏங்க, இது உங்களுக்கே சரியா படுதா. கேள்வியும் பதிலும் உங்களிடம் இருக்கும்போது எங்கிட்டே எதுக்கு கேட்கிறீங்க?"

"உங்கிட்டே கேட்காம ரோட்ல போற ஆளிடமா கேட்கமுடியும்?"

"உங்களுக்கு நேரம் போகல. நேரத்தப் போக்க என்ன விட்டா வேற ஆளும் கிடைக்கல. சரி. கேளுங்க."

"துன்பம் அதாவது  Suffering என்றால் என்ன பொருள்?"

"அன்பு அதாவது love."

"Correct. எப்படிக் கண்டுபிடிச்ச?"

"love இருக்கிற இடத்தில் கட்டாயம் Suffering இருக்கும்."

"எப்படி? "

"நம்மீது அன்பு இருந்ததால்தானே நம் ஆண்டவர்  நமக்காகப் பாடுபட்டார்."

"Correct."

"அடுத்த கேள்வி? "

"இலாசர் சுகமில்லாதிருக்கும்போது ஏன் இயேசு அவனை பார்க்ச் செல்லவில்லை?"

"அவனைச் சாகவிடுவதற்காகத்தான். "

"என்னது? "

"ஆமா. சாகவிட்டால்தானே உயிர்ப்பிக்க முடியும்."

"எதற்காக சாகவிட்டு உயிர்ப்பிக்க வேண்டும்?"

"சாவு நமது உலகப் பார்வையில் ஒரு தீமை.

ஆனால் இறைவனைப் பொறுத்தமட்டில் அது நித்திய காலமாக திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வு.

நமது பிறப்பைத் திட்டமிட்ட அதே கடவுள்தான் நமது இறப்பையும், துன்பங்களையும் திட்டமிடுகிறார்.

நமது பிறப்பும் சரி, துன்பங்களும் சரி, இறப்பும் சரி அவர் நம்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுதான்.

அன்பின் காரணமாக நம்மைப் படைத்த கடவுள்

அன்பின் காரணமாவே நம்மைப் பராமரித்தும் வருகிறார்.

துன்பங்கள் இறைப் பராமரிப்பின் ஒரு பகுதிதான்.

விழத்தாட்டுபவரும் அவரே, தூக்கி விடுபவரும் அவரே!

இலாசருக்குச் சுகமில்லை என்ற செய்தி இயேசுவுக்கு அறிவிக்கப்பட்டபோது இயேசு சொன்னார்,

"கடவுளின் மகிமைக்காகவே இப்படி ஆயிற்று: இதனால் கடவுளுடைய மகன் மகிமை பெற வேண்டியிருக்கிறது" 

இறைமகன் மகிமை பெறவே இலாசரின் சாவு இறைவனாலேயே திட்டமிடப்பட்டது

நமது வாழ்வின் நிகழ்வுகளும் இவ்வாறு இறைவனால் திட்டமிடப்படுபவைதான்.

பாவத்தை மட்டும்தான் நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தி நாம்  செய்கிறோம்.

ஆனால் இறைவன் அதிலிருந்தும் நன்மையை வரவழைத்து,

தன் திட்டத்திற்குப் பயன்டுத்திக்கொள்கிறார்.

இறந்துவிட்ட இலாசரை உயிர்ப்பிக்கச் சென்ற இயேசு,

அவன் இறந்துவிட்டான் எனத் தெரிந்தும்,

"நம் நண்பன் லாசர் தூங்குகிறான், அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பச் செல்லுகிறேன்." 

என்கிறார்.


"உங்களுக்கு விசுவாசம் உண்டாகும் என உங்கள்பொருட்டு, நான் அங்கு இல்லாமற்போனதுபற்றி மகிழ்கிறேன். வாருங்கள், அவனிடம் செல்வோம்" 


ஆக இயேசு இறைவன் மகிமை பெறவும்,  மக்கள் தன்மேல் விசுவாசம் கொள்ளவுமே இலாசரது மரணத்தையும், உயிர்ப்பையும் திட்டமிட்டார்.

"மரியாளிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரில் விசுவாசங்கொண்டனர்."

நமது வாழ்வில் துன்பங்கள்  வரும்போது நமது விசுவாசம் உறுதிப்பட வேண்டும்.

ஏனெனில்,

1.நம்மைத் தனக்காகப் படைத்த கடவுள்

நாம் நமது  ஆன்மீவாழ்வில் வெற்றி பெறவே

அதாவது

நாம் அவரை அடைய உதவுவதற்காகவே துன்பங்ளை வரவிடுகிறார்.

2.துன்பங்கள் நமது பாவங்களுக்குப் பரிகாரமாகவும், அதன் மூலம் நமது ஆன்மா பரிசுத்தம் அடையவும் உதவுகின்றன.

Sufferings are helpful for our own sanctification.

3.இலாசரின் மரணத்தினால் இறைவனுக்கு மகிமை ஏற்பட்டது போல

நமது துன்பங்கள் செபத்தின் வல்லமையால் நீங்கும்போது இறைவனது மகிமை வெளிப்படும்.

இலாசர் இயேசுவின் வல்லமையால் உயிர்பெற்றபோது

யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரில் விசுவாசங்கொண்டதுபோல,

நமது துன்பம் செபத்தின் வல்லமையால் நீங்கும்போது

பலருக்கு விசுவாசம் உறுதிப்படும்.

4.அநேக சமயங்களில் துன்பங்கள்தான் நம்மை இறைவனை நோக்கி ஈர்க்கும்.

துன்பமே இல்லாதிருக்கும்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் இறைவனை மறக்கநேர்ந்தால்

துன்பங்கள்தான் உதவிக்கு அழைக்க இறைவனை நமக்கு ஞாபகப்படுத்தும்.

அழுகிற பிள்ளைதான் அம்மாவை அதிகம் தேடும்.

5.பணத்திற்கும் வாங்கப்படும் பொருளுக்கும் உள்ள மதிப்பு நேர் விகிதத்தில் (direct proportion) உள்ளது.

அதாவது அதிகப் பணம்கொடுத்தால் அதிகப் பொருள் கிடைக்கும்.

  குறைந்த  பணம்கொடுத்தால் குறைந்த பொருள் கிடைக்கும்.

அதேபோன்றுதான் இவ்வுலகத் துன்பங்களுக்கும், மறுவுலக பேரின்பத்திற்கும் உள்ள தொடர்பு நேர் விகிதத்தில்தான் உள்ளது.

இவ்வுலகில் குறைந்த துன்பத்தை ஆண்டவருக்காக ஏற்றுக்கொண்டால் மறுவுலகில் குறைந்த பேரின்பம்.

இவ்வுலகில் அதிக துன்பத்தை ஆண்டவருக்காக ஏற்றுக்கொண்டால் மறுவுலகில் அதிக பேரின்பம்.

இவ்வுலக துன்பத்திற்கு  ஏற்றபடிதான் மறுவுலக பேரின்பம் இருக்கும்.

ஆகவே இவ்வுலகில் அதிக துன்பத்தை அனுபவிப்போர் இறைவனுக்கு அதிக நன்றிகூறவேண்டும்.

பரிசுத்தத்தை நோக்கிப் பயணிப்போருக்குதான் துன்பத்தின் அவசியம் புரியும்.

சிலுவைப்பாதைதான் இரட்சண்யத்தின்  பாதை.

6.நற்செய்திப் பணியின்போது ஏற்பபடும் துன்பங்கள் அதிக ஆன்மாக்கள் மனந்திரும்ப உதவும்.

இக்காலத்தில் நற்செய்திப் பணிக்காக வருடக்கணக்காக தங்களையே தயாரித்த குருக்களை

ஏற்கனவே நற்செய்தி அறிவிக்கப்பட்டு

நம் திருமறையின் உறுப்பினர் ஆனவர்கள் உள்ள பங்குகளில்

பணியாற்ற நியமிக்கிறார்கள்.

ஆனால் அந்தக்காலத்தில் திருமறையில் புதியவர்களைச் சேர்ப்பதற்காக,

கலாச்சாரமும், பேசும் மொழியும் தெரியாத

புதிய நாடுகளுக்கு

தாமாகவே சென்ற

தோமையார், சவேரியார், அருளானந்தர், வீரமாமுனிவர் போன்ற மறைபரப்பாளர்கள்

எவ்வளவு சங்கடப்பட்டிருப்பார்கள்!

அவர்களது அர்ப்பண வாழ்வையும், அவர்கள் பட்ட துன்பங்களுமே பார்த்த மக்களுக்கு அவர்கள்மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கும்.

அந்த ஈர்ப்பே நிறைய மக்கள்  மனம்திரும்ப காரணமாய் இருந்திருக்கும்.

நற்செய்தியை அறிவிப்பது எளிதான செயல் அல்ல.

துன்பங்கள் அதிகரிக்க அதிகரிக்க அறிவிப்பின் பலனும் அதிகரிக்கும்.

25ஆண்டுகளாக

பிரிக்கப்படாத தென்காசிப் பங்கின்

பங்குத் தந்தையாக இருந்த

சங். அல்போன்ஸ் டியூர் S.J சுவாமியவர்கள்

பங்கு முழுவதும்

நடந்து சென்றுதான் இறைப்பணியாற்றினார்.

அவர் கேட்ட பாவசங்கீர்த்தனங்களின்  எண்ணிக்கையை

இன்று பைக்கிலும், காரிலும் சென்று பணியாற்றுபவர்களால் எட்டியிருக்க முடியாது.

7.கஷ்டப் படுபவர்கட்குதான் கஷ்டப்படும் மற்றவர்கள்மீது பரிவும், அனுதாபமும் ஏற்படும்.

துன்பப்படுபவர்கள்தான் துன்பப்படுபவர்களைப் புரிந்துகொள்வார்கள்.

நாம் மற்றவர்களின் துன்பங்களைப் புரிந்துகொள்வதற்காகவே இறைவன் நமக்குத் துன்பங்களை அனுப்புகிறார்.

நம் அம்மா நமக்குச் சாப்பாடு தருமுன் அவர்கள் முதலில் ருசி பார்ப்பார்கள்.

அதே தத்துவம்தான்.

ஒரே ஒரு வித்தியாசம்,

அவர்கள் மற்றவர்கட்கு  சாப்பாடு
தருவதற்காக ருசி பார்க்கிறார்கள்.

நாம் மற்றவர்கள் துன்பங்களைப் போக்க ருசி பார்க்கவேண்டும்.''

"அடியே, உனது கடைசி வாக்கியத்தில் ஒரு சந்தேகம்.

கடவுளே திட்டமிட்டு மற்றவர்கட்கு அனுப்பிய துன்பத்தை நாம் போக்க முயற்சிப்பது

கடவுளுக்கு  எதிரான செயல் இல்லையா?"

"ஏங்க, என்னத்த கவனிச்சீங்க?

இயேசுவே திட்டமிட்டு இலாசரை சாகவிட்டுவிட்டு

அவரே உயிர்ப்பிப்பது

அவருக்கே எதிரான செயலா?

உயிர்ப்பிப்பதற்காகத்தானே சாகவிட்டார்!

அதேபோல் நாம் மற்றவர்களது துன்பம் நீங்க உதவி செய்து அன்பில் வளர்வதற்காகத்தானே

மற்றவர்களுக்குத் துன்பத்தை வரவிடுகிறார்!

எல்லாம் இறைவன் செயல்!

தபசு காலத்தில் மற்ற நாட்களைவிட அதிகமாக தர்மம் இடவேண்டும்.

தர்மம் வாங்க ஆட்களை அவரே அனுப்புவார்."

"இறைவனுக்கு இது ஒரு விளையாட்டடு! "

"சாதாரண விளையாட்டல்ல!  அன்பின் விளையாட்டு!"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment