Saturday, July 28, 2018

ஆதியிலே வார்த்தை இருந்தார்.(அரு.1:1)

ஆதியிலே வார்த்தை இருந்தார்.(அரு.1:1)
************---*****-*************

ஆதியும் அந்தமும் அற்றவர் கடவுள்.

அதாவது,

துவக்கமும், முடிவும் இல்லாதவர்.

எக்காலமும் இருக்கிறவர்.

மோயீசனிடம் தன் பெயரை 'இருக்கிறவர் நாமே.'  (I am who I am.)

என்றுதான் வெளிப்படுத்தினார்.

கடவுளுக்கு  துவக்கமும், முடிவும் இல்லாவிட்டாலும்

அவரால் படைக்கப்பட்ட பிரபஞ்சத்திற்கு (Universe) துவக்கமும்,  முடிவும் உண்டு.

அதாவது, நாம் நமது வாழ்வை அவரிடமிருந்துதான்  ஆரம்பித்தோம்.

ஏனெனில் ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மைப் படைத்தவர் அவரே.

அவரிடம்தான் நம் வாழ்வை முடிப்போம்.

அவரோடு இணையவே நம்மைப் படைத்தார்.

நம்மைப் பொறுத்தமட்டில்,

நமது ஆதியும் அந்தமும்,  அவரே.

'அ'கரமும், 'ந'கரமும் அவரே.
(நமது மொழியின் முதல் எழுத்து 'அ'. இறுதி எழுத்து 'ந')

நமக்கு ஆதி (துவக்கம்) இருந்தது.

நமது ஆதியில்,

ஆதியில்லாத கடவுள் இருந்தார்.

ஆதியிலே 'வார்த்தை' இருந்தார்.

'வார்த்தை'  என்று அருளப்பர் குறிப்பிடுவது இறைமகன் இயேசுவை.

"அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார்,

அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்."

இறைமகன் இயேசு நித்தியமாக கடவுளோடு இருக்கிறார்,

அதாவது,

நித்திய காலமாக கடவுளிடமிருந்து பிறக்கிறார்,

ஆகவே நித்திய காலமாகவே அவர் இறைமகனாக இருக்கிறார். 

இறைமகன் நித்திய காலமாக இறைவனாக இருக்கிறார்.

இறைமகன் இறைத்தந்தையினுள்

ஒரே தேவசுபாவத்தோடு இருப்பதால்

தந்தையும், மகனும் ஒரே கடவுள்தான்.

"ஆவியானவர் புறாவைப்போல வானிலிருந்து இறங்கி, இவர்மேல் தங்கியதைக் கண்டேன்."

ஸ்நாபக அருளப்பரின் இவ்வார்த்தைகளோடு  பரிசுத்த தமதிரித்துவத்தின்
இறைவெளிப்பாடு பூர்த்தியாகிறது.

நித்திய காலமாக இறைவனிடமிருந்து பிறக்கிறவரை ஏன் வார்த்தை என்று அழைக்கிறோம்?

இதைப் புரிந்துகொள்ள இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்ட நம்மைப்  புரிந்துகொள்ளவேண்டும்.

அவரை நாம் புரிந்துகொள்ள ஏதுவாகத்தான்

நம்மை அவர் சாயலாகப் படைத்திருக்கிறார் என
நினைக்கிறேன்.

மற்ற ஜீவராசிகட்கு இல்லாத ஒரு முக்கிய பண்பு நமக்கு மட்டும் இருக்கிறது.

அது நமது எண்ணம்.

எண்ணம்தான் பேச்சாகவும், செயலாகவும் வெளிப்படுகிறது.

மற்ற உயிர்ப் பிராணிகள் உள்ளுணர்வினால் (Instinct) இயங்குகின்றன.

நாம் எண்ணியதைத்தான் பேசுகிறோம்.

பேச்சுக்கு அடிப்படை எது?

வார்த்தை.

வார்த்தை எண்ணத்தில் தோன்றி, வார்த்தையில் வெளிப்படுகிறது.

இறைவன் நித்திய காலமாக தன்னைப் பற்றி எண்ணுகிறார்.

எண்ணத்தில் தோன்றுவதை,

நமது மொழிப்படி,

வார்த்தை என்கிறோம்.

நமது எண்ணம் வெறும் எண்ணம்தான்.

ஆனால் இறைவன் தன்னைப் பற்றி எண்ணும் எண்ணம் (வார்த்தை) இறைமகனாகிறது.

இறைவன் தன்னை ('தன்னை' எனும்போது தன்னுள் உள்ள வார்த்தையையும் சேர்த்துதான்)
நேசிக்கிறார்.

அந்நேசமே பரிசுத்த ஆவி.

தந்தை, மகன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்று ஆட்களும் ஒருவருள் ஒருவராக ஒரே தேவசுபாவத்தில் ஐக்கியமாயிருப்பதால் மூவரும் ஒரே கடவுள்.

கடவுளைப் பற்றி யாராலும் முழுமையாக விபரிக்க முடியாது.

இவ்விளக்கம் ஓரளவு உதவும். அவ்வளவுதான்.

மூவொரு கடவுள் மனிதர்களை அவரது சாயலில் படைத்திருப்பதால்

மனித இனமே அன்பில் ஐக்கிமாக வேண்டும் என்று விரும்புகிறார்.

"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக.

தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல்,

அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்: "

நாம் ஒன்றாய் இருப்பதுபோல்

அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி,

நீர் எனக்கு அளித்த மகிமையை நான் அவர்களுக்கு அளித்தேன்.

"இவ்வாறு

நான் அவர்களுள்ளும், நீர் என்னுள்ளும் இருப்பதால்,

அவர்களும் ஒருமைப்பாட்டின் நிறைவை எய்துவார்களாக:

இங்ஙனம், நீர் என்னை அனுப்பினீர் என்றும், நீர் என்பால் அன்புகூர்ந்ததுபோல்

அவர்கள்மீதும் அன்புகூர்ந்தீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்."
(அரு.17:23)

ஆதி முதல் நம்மமோடு இருக்கும்

வார்த்தையின்

வார்த்தைகள்

நம்மை வழிநடத்துவனவாக.

லூர்து செல்வம்.

Thursday, July 26, 2018

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத்.9:13)

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத்.9:13)
*********---********************

ஆதி காலத்திலிருந்தே மனிதனிடம் ஒரு பழக்கம் இருந்தது.

தான் இறைவனுக்கு எதிராகச் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக,

அவரைத் திருப்திப்படுத்தும் நோக்கோடு

ஆடு, மாடுகளைப் பலியிட்டான்.

ஆனால் ஆண்டவர் ஓசே இறைவாக்கினர் மூலமாக கூறினார்,

  "நாம் விரும்புவது பலியை அன்று, அன்பையே நாம் விரும்புகிறோம்." (ஓசே.6:6)

அதாவது, 'மனிதன் இடும் மிருகப்பலிகள் இறைவனைத் திருப்திப்படுத்தாது, மனிதனது அன்புச் செயல்களே அவரைத் திருப்திப்படுத்தும்'.

நம் ஆண்டவர் அதை மேற்கோள் காட்டி

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன் " என்பதன் கருத்தைப் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்."
என்றார்.

நம்ம ஆட்களுக்கு விசேசமான குணம் ஒன்று உண்டு.

பைபிளை வாசித்து,

வாசித்த வசனங்களுக்கு தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற

விளக்கத்தைக் கொடுப்பது அவர்கட்கு கைவந்த கலை.

நண்பர் ஒருவர் ஒரு ஞாயிறு பூசைக்கு வரவில்லை.

"இன்றைக்கு பூசைக்கு வந்தது மாதிரி தெரியலிய. சுகமில்லையா?"

"நான் வாசித்த பைபிள் வசனம் எனக்கு வேறு வேலை கொடுத்தது.

அதைப் பார்க்கப் போய்விட்டேன்."

"சார், நீங்க சொல்றது புரியல."

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்"

இது ஆண்டவர் சொன்னதுதான"

"ஆமா. அதுக்கென்ன?"

"அதுக்கென்னவா? ஆண்டவர்  பலியை விரும்பலன்னு சொல்லியிருக்காரு.

ஆண்டவர் விருப்பத்துக்கு மாறா செயல்படலாமா?

அதுதான் திருப்பலிக்கு வரல்ல."

"உங்களச் சொல்லி குற்றமில்ல.

வாசிக்கச் சொல்லி உங்க கையில பைபிளைத் தந்தவங்களச் சொல்லணும்.

கத்தியக் கொடுக்குமுன்னால அதை எப்படிப் பயன்படுத்தணும்னு சொல்லிக்கொடுக்கணும்.

இல்லாட்டி காய்கறியை வெட்டுமுன்னால கையை வெட்டிக்கொண்டு அழுவான்.

பைபிள புதுசு புதுசா மொழிபெயர்த்து

எல்லாருக்கும் கொடுக்கதுக்கு முன்னால

அத எப்படி வாசிக்கணும்,

எப்படிப் பொருள் கொள்ளணும்கதைப்பற்றி நல்லா பயிற்சி கொடுக்கணும்.

இங்க பாருங்க ஆண்டவர் திருப்பலியை விரும்பலன்னு சொல்லல.

மிருகப்பலியைத்தான் விரும்பலன்னு சொன்னார்.

அதற்குப் பதிலா

'அயலானை நேசியுங்கள்,

அயலான்மீது இரக்கம்  கொள்ளுங்கள்,

உங்கள் இரக்கச் செயல்களைத்தான் விரும்புகிறேன்'னு சொன்னாரு.

புரியுதா?"

'இரக்கத்தையே விரும்புகிறேன்'னு

வாசித்தால் மட்டும் போதாது.

செயலில் காட்டவேண்டும்.

இரக்கத்தைச் செயலில் காட்டுவது எப்படி?

விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியை

மறைநூல் வல்லுநரும் பரிசேயரும்

கொண்டுவந்து

இயேசுவின் முன்னால்

நிறுத்துகிறார்கள்.

"இப்படிப்பட்டவர்களைக்

கல்லாலெறிந்து கொல்லவேண்டுமென்பது மோயீசன் நமக்குக் கொடுத்த சட்டம்.

நீர் என்ன சொல்லுகிறீர் ?" என்கின்றனர்.

இயேசுவோ பாவிகளைத் தேடியே உலகிற்கு வந்தவர்.

உலகியல் அரசு எதற்காகக் குற்றவாளிகளைத் தேடுகிறது?

விசாரித்துத் தண்டனை கொடுப்பதற்கு,  நீதியின் பெயரால்.

இயேசு கடவுள்,

அளவற்ற நீதியுள்ளவர்,

அளவற்ற இரக்கம் உள்ளவர்.

இயேசு பாவிகளைத் தேடிவந்தது

நீதியின் பெயரால் தண்டிப்பதற்கு அல்ல,

இரக்கத்தின் பெயரால் மன்னிப்பதற்கு.

பாவி மன்னிப்பு பெற செய்ய வேண்டியது,

ஒரே ஒரு செயல்தான்,

பாவத்திற்காக வருந்தி, பாவசங்கீத்தனம் செய்ய வேண்டும்.

இரக்கத்தோடு மன்னித்துவிட்டால்,

நீதிக்கு என்ன வேலை?

பாவம் கடவுளுக்கு விரோதமாகச் செய்யப்படுகிறது.

கடவுள் தன் இரக்கப் பெருக்கத்தின் காரணமாக,

நீதியின்படி பாவி தண்டனை பெறாதிருக்க

பாவத்திற்கான

பரிகாரத்தை அவரே ஏற்றுக்கொண்டார்.

அதாவது

குற்றவாளி செய்ய வேண்டிய பரிகாரத்தை

நீதிபதியே

ஏற்றுக்கொள்கிறார்.

தனக்காக மிருகப்பலியை விரும்பாத கடவுள்

மனித செய்த பாவத்திற்காகத் தானே பலியாகிறார்.

இப்படியாக இறைவன் தனது மட்டற்ற இரக்கத்திற்கு செயல்வடிவம் கொடுக்கிறார்.

மறைநூல் வல்லுநரும், பரிசேயரும்

தன் முன் நிறுத்திய

விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை

இயேசு மன்னிக்கிறார்.

அவர் பாவிகளைத் தேடிவந்ததே மன்னிப்பதற்காகத்தானே.

அவரது சீடர்களென்று நம்மையே அழைத்துக்கொள்ளும் நாம்

இரக்கத்தை விரும்புகிறோமா?

நம்மீது மற்றவர்கள் இரக்கம் காட்டவேண்டும் என விரும்புகிறோம்.

நாம் மற்றவர்கள்மீது இரக்கம் காட்டடுகிறோமா?

நமக்குக் கீழ் பணிபுரிபவர்களை இரக்க உணர்வோடு வழி நடத்துகிறோமா?

அரக்கத்தனமான கண்டிப்புடன்

வழி நடத்துகிறோமா?

குற்றம் செய்தவர்கள் மன்னிப்புக் கேட்கும்போது

மன்னிக்கிறோமா?

தண்டனை கொடுக்கிறோமா?

நமக்குக் கீழ் பணிபுரிபவர்ளிடம் புன்னகையோடு பழகுகிறோமா?

அதிகாரத்தோரணையில் கடுகடுப்பாகப் பழகுகிறோமா?

அதிகாரத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல சாதாரண நிலையில் உள்ளவர்களும் மற்றவர்களோடு பழகும்போது இரக்க உணர்வோடு பழகவேண்டும்.

இரக்க உணர்வுள்ளவன் மற்றவர்கள்மீது தீர்ப்பிடமாட்டான்.

"நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள்."(மத்.7:1)

யார்மீதும் தீர்ப்பிட நமக்கு அதிகாரமும் இல்லை, அருகதையும் இல்லை.

ஒரு செயல் எந்த சூழ்நிலையில் செய்யப்பட்டது என்பது நமக்குத் தெரியாது.

தெரியாத ஒன்றைப்பற்றி நாம் எப்படி கருத்து கூறமுடியும்?

நமக்கு இரக்கம் இருந்தால், ஒருவர் செய்த குற்றத்தை அறியவரும்போது,

"ஐயோ பாவம்.

எந்த சூழ்நிலை இவர் இதைச் செய்ய காரணமாயிற்றோ? "

என்று பரிதாபப்படுவோமே தவிர

தீர்ப்பு சொல்லமாட்டோம்.

இதை எழுதும்போது சமீபத்தில் வாசித்த கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.

ஒரு பன்னிரண்டு. வயதுச் சிறுவன்.

அவனுக்கு வேலை செய்ய முடியாத ஒரு அக்கா,  ஒரு சின்னத் தம்பி.

நம்ம கதாநாயகன்தான் ஏதாவது கூலிவேலை பார்த்து கிடைக்கிற சிறு வருமானத்தில் உண்ண உணவு வாங்க வேண்டும். 

ஒரு நாள் பையனுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.

பகல் முழுதும் வேலை தேடியும் கிடைக்காததால் அக்காளுக்கும், தம்பிக்கும் அன்று இரவு உணவு எப்படி வாங்குவதென்று
தெரியவில்லை.

அவன் தன்னைப்பற்றி கவலைப்படவில்லை.

அக்காளையும், தம்பியையும் பற்றிதான் கவலைப்பட்டான்.

ஒரு நாள் வேலை செய்த கடைக்காரரிடம் கடன் கேட்டுப்பார்த்தான்.

கிடைக்கவில்லை.

ஒரு ரொட்டிக்கடைக்காரரிடம் இரண்டு ரொட்டிகள் கடனாகக் கேட்டான்.

கிடைக்கவில்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் கடைமுன் நின்றுகொண்டிருந்தபோது
கடையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த பன் ஒன்று கீழே விழுந்தது.

அதை எடுத்தவன்,

கடைக்காரரிடம்,

"இதற்குக் காசு நாளை தருகிறேன்"

என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

கடைக்காரன் உள்ளே இருந்துகொண்டே,

"திருடன். பிடியுங்கள். திருடன். பிடியுங்கள்"

என்று கத்தினார்.

பையன் ஓட ஆரம்பித்தான்.

அந்தச் சமயம் பார்த்து அந்த வழியே வந்துகொண்டிருந்த போலீஸ் ஒருவர்,

ஓடிக்கொண்டிருந்தவனை 'லபக்'கென்று பிடித்து கடைக்கு இழுத்து வந்தார்.

"கடையிலிருந்து பன் ஒன்றைத் திருடிவிட்டான்.

பன்னைத் தந்துவிட்டு,

பையனை இழுத்துக்கொண்டு போங்கள்."

கடைக்காரர் கூற,

"திருட்டுக்கு ஆதாரம் வேண்டும்.  நாளை ஸ்டேசனுக்கு வந்து பன்னைப் பெற்றுக்கொள்ளுங்கள்."

என்று கூறிவிட்டு பையனை இழுத்துச் சென்றார்.

பையன் தன் நிலை பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லிக் கெஞ்சியும் விடவில்லை.

மறுநாள் கோர்ட் திருட்டுக் குற்றத்திற்காக ஒரு மாதம் ஜெயில் தண்டனை விதித்தது.

ஜெயிலில் பையன் தன்னைப் பற்றி கவலைப்படவில்லை.

அக்காளையும், தம்பியையும் பற்றி மட்டுமே கவலைப் பட்டான்.

எப்படியும் தப்பிச்சென்று அவர்களைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தான்.

ஆனால் தப்பிக்க முயன்றபோது பிடிபட்டான்.

ஜெயிலிலிருந்து தப்பிக்க முயன்ற குற்றத்துக்காக

கோர்ட் அவனுக்கு

ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

இனியும் தப்பிக்க முயன்றால் ஆயுள் தண்டனைகூட கிடைக்கலாம் எனப்பயந்து ஒரு ஆண்டையும் ஜெயிலிலேயே கழித்தான்.

அவனது உடன்பிறப்புகளைப் பற்றிய கவலைதான் அவனை வாட்டி வதக்கியது.

விடுதலை ஆனவுடன்

அவர்களைப் பார்க்கச் செல்லுமுன் ஏதாவது வேலை செய்து, பணம் சேர்த்து ஏதாவது வாங்கிக்கொண்டு போகத் தீர்மானித்தான்.

ஆனால் திருட்டுக் குற்றதிற்காக ஜெயிலுக்குப் போனவனுக்கு யாரும் வேலை கொடுக்கத் தயாராக இல்லை.

பசியும், பட்டினியுமாய் ஒரு கோவில் வாசலில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான்.

அவன் அழுதுகொண்டிருந்ததை அக்கோவில் குருவானவர் பார்த்தார்.

அவன் கதையைப் பரிவுடன் கேட்டார்.

"சரி, வா." என அவனைத் தன் அறைவீட்டிற்கு அழைத்துச் சென்று,

குளிக்கச்சொல்லி,

வயிரார உணவுகொடுத்து,

"இன்று இரவு இங்கே தங்கி ஓய்வெடு. நாளை
பார்க்கலாம்"

என்று கூறி ஒரு அறையில் தங்க வைத்தார்.

இரவில் அவனுக்குத் தூக்கம் வரவில்லை.

தன் உடன்பிறப்புகளை நினைத்துக் கொண்டிருந்தான்.

பணம் இல்லாமல் அவர்களைப் பார்க்கப்போக முடியாது. 

அவன் கவலைப் பட்டுக்கொண்டிருந்தபோது

அறையின் ஒரு பகுதியில்

சில வெள்ளித் தட்டுகளைப் பார்த்தான்.

"ஜெயிலிலிருந்து வந்த நமக்கு வேலை கிடைக்கப் போவதில்லை.

இப்பாத்திரங்களில் ஓரிரண்டை எடுத்துச் சென்று, விற்றால் நல்ல காசு கிடைக்கும்.

அதைக்கொண்டு அக்காளுக்கும், தம்பிக்கும் ஏதாவது
வாங்கிக்கொண்டு போகலாம்.

திருடுவது குற்றம்தான்.

ஆனாலும் வேறு வழி இல்லை."

இரண்டு தட்டுக்களை மட்டும் எடுத்தான்.

ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய்க்குப் போகும்.

மெதுவாக அறையை விட்டு நகர்ந்தான்.

பத்து மணி வரை ஒரு இடத்தில் பத்திரமாக இருந்துவிட்டு

பத்து மணிக்கு வெள்ளி பாத்திரக் கடைக்குச் சென்றான்.

பாத்திரக்கடையில் தட்டுகளுக்கான விலையை விசாரித்துக் கொண்டிருந்தபோதே

கடைக்காரர் பாத்திரத்தின்  பின்னாலிருந்த பெயரை வைத்து

அது யாருடைய தட்டுக்கள் என்பதைக் கண்டுபிடித்து

பையனிடம் விலை பேசிக்கொண்டே போலீசுக்கு Message அனுப்பினான்.

கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்து பையனை தட்டுக்களோடு அள்ளிக்கொண்டு போயிற்று.

குருவானவருக்கு தகவல் போயிற்று.

அவர் ஸ்டேசனுக்கு வந்தார்.

பையனைப் பார்த்தார்.

இன்ஸ்பெக்டர் அவரிடம் விசயத்தைச் சொன்னார்.

குரு: இன்ஸ்பெக்டர் சார், நீங்க நினைக்கிறது தப்பு.

பையன் எனக்குத் தெரிந்தவன்.

நேற்று இரவு என்னோடுதான் தங்கினான்.

நான்தான் இத்தட்டுக்க்களை அவனுக்குக் கொடுத்தேன்.

அவன் ஏதும் சொல்லவில்லையா? "

போலீஸ்: நான் அவனிடம் ஏதும் கேட்கவில்லை.

கடைக்காரர் சொன்னதைக் கேட்டு கூட்டிவந்தேன்.

குரு: தம்பி, இங்கே வா.

பையன் வந்தான்.

போ :சுவாமி, மன்னியுங்கள்.பையனை அழைத்துச் செல்லுங்கள்.

பையனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

தட்டுக்களைப் பெற்றுக்கொண்டு சுவாமியுடன் நடந்தான்.

அறைவீடு வந்ததும்,

சுவாமி அவனைக் கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.

பாடுபட்ட சுரூபத்தைக் காண்பித்தார்.

இரக்கத்தின் இலக்கணமான இயேசுவைப் பார்.

மற்றவர்ட்காக இரக்கப்படக் கற்றுக்கொள்."

பையன்: "சுவாமி, மன்னியுங்கள்.

குரு: நானே காலையில் உனக்கு வேண்டிய உதவி செய்யலாமென்றிருந்தேன்.

நீ  அவசரப்பட்டுவிட்டாய்.

பரவாயில்லை. நீ விரும்பினால் நானே உனக்கு ஏதாவது வேலை தருகிறேன்."

"சுவாமி, வேண்டாம். நான் முதலில் அக்காளையும், தம்பியையும் காணவேண்டும். மற்றவையெல்லாம். அப்புறம்தான்."

"நான் கொஞ்சம் பணம் தருகிறேன். வீட்டுக்கு ஏதாவது வாங்கிக்கொண்டு போ.

தட்டுக்களையும்  வைத்துக்கொள். பிறகு வந்து என்னைப் பார்."

"சுவாமி,  உங்களது இரக்க சுபாவத்தை என்னால் மறக்கமுடியாது. ரொம்ப நன்றி."

வீட்டிற்கு வந்தான். வீடு பூட்டியிருந்தது.

பக்கத்தில் விசாரித்தான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பேயே  அவனைத் தேடிச் சென்றவர்கள் திரும்வேயில்லை என்றார்கள்.

அவர்களைத் தேடப் புறப்பட்டான்.

மனதில் ஒரு உறுதி எடுத்துக்கொண்டான்.

இனி உலகில் உள்ள அனைவரும் அவனது உடன்பிறப்புக்களே.

இரக்க உணர்வுடன், இறைவனுக்காக அவர்கட்கு சேவை செய்வதே அவன் வாழ்வின்  இலட்சியம்.

சிலுவையில் பலியாகித் தன் இரக்கத்தால் உகை இரட்சித்த இயேசுவின் நினைவோடும், 

அவரது ஊழியர் குருவானவர்
நினைவோடும் புறப்பட்டான்.

நாமும் புறப்படுவோம் இரக்க உணர்வுடன்.

லூர்து செல்வம்.




Monday, July 23, 2018

ஒரு போப்பாண்டவரை வெளியேற்றும் பாவம் உங்களுக்கு எதற்கு?

ஒரு போப்பாண்டவரை வெளியேற்றும் பாவம் உங்களுக்கு எதற்கு?

*********-*************-**********

ஹலோ! நான் பாக்கியம் பேசறேன்.

எந்த பாக்கியம்னு கேட்கிறீங்களா?

நான்தாங்க இரண்டு வயசு பாக்கியம்,

போன வாரம்

ஞாயிற்றுக்கிழமை பூசை நேரத்தில, 

அதுதாங்க கோவிலில வச்சி,

நான் அழுதபோது,

என் அம்மாவைப் பார்த்து,

"பிள்ளைய தூக்கிக்கிட்டு வெளியே போம்மா.
நாங்க பூசை காண வந்தோமா?

உன் பிள்ள அழுகையை ரசிக்க வந்தோமா?''ன்னு கத்துனீங்களே, 

அதே பாக்கியம்தான் பேசறேன்.

இரண்டு வயசுப் பிள்ள எப்படி இப்படி பேசும்னு கேட்காம,

நான் சொல்றதை மட்டும் கவனிங்க.

கோவில்ல ஆண்டவர் இருக்காரு.

எந்த ஆண்டவர்?

"குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடுக்க வேண்டாம்.

வரவிடுங்கள்."னு சொன்னாரே,

அதே ஆண்டவர்தாங்க.

இயேசுவுக்கும் இரண்டு வயது இருந்திருக்கும்.

நிச்சயமா அவரும் அழுதுருப்பாரு.

அப்போ, "மேரி, பிள்ளையத் தூக்கிக்கிட்டு வெளியே போ"ன்னு சூசையப்பர் கத்தியிருக்கவே மாட்டாரு.

ஏன்னா அவருக்குத் தெரியும்,

இயேசு மெய்யாகவே ஆண்டவர் (Fully God.),

மெய்யாகவே மனிதன், (Fully man) என்று.

பாவம் தவிர மற்ற எல்லாவற்றிலும் இயேசு நம்மைப்போல்தான் இருந்தார்.

"அழுத பிள்ளைகள என் பக்கத்தில வரவிடாதீங்க"ன்னு இயேசு சொல்லவேயில்லை.

சாமியார் பூசை வைக்கிறது எல்லாக் கிறிஸ்தவர்களுக்காகவும்தான்.

நாங்களும் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம்.

நாங்களும் பூசையில் கலந்தகொள்ள வேண்டும்.

ஒருவன் ஒட்டப் பந்தையத்தில் ஓட பயிற்சி பெறவேண்டுமென்றால் விளையாட்டு மைதானத்திற்கு வந்துதானே பழகவேண்டும்.

நாங்கள் ஒழுங்காகப் பூசைக்கு வரும் மக்களாக வளரவேண்டுமென்றால் சிறு பிள்ளைப் பருவம் முதலே பூசைக்கு வரவேண்டும்.

அழுதவுடனே வெளியே தூக்கிக்கிட்டு போகச்சொன்னீங்கன்னா,

வெளியே போகிறதுக்காகவே

அழ ஆரம்பித்துவிடுவோம்.

வெளியே நிற்கும் கிறிஸ்துவர்களாகவே வளர்வோம்.

நாங்கள் அப்படி வளர உங்களுக்கு விருப்பமா?

நாங்கள் கோவிலில் அழுவது பிடிக்கவில்லையென்றால்

நாங்கள் அழாதிருக்க வழிவகைகளை ஆராயவேண்டுமே தவிர,

வெளியே போங்க'ன்னு சொல்லக்கூடாது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

ஒரு வகையில் உலகமே இறைவன் வாழும் ஆலயம்தான்.

இங்கு வாழும் மனிதன் எவ்வளவு தப்பு செய்கிறான்.

Suppose கடவுள் மனிதரைப் பார்த்து, 

"தப்பு செய்கிறவங்க எல்லாம் உலகை விட்டு வெளியே போங்க"ன்னு சொன்னா என்ன ஆகும்?

உலகமே Empty ஆயிராது?

மனிதன் பெரிய பெரிய பாவம் செய்யும்போதெல்லாம் கடவுள் இவ்வளவு பொறுமையா இருக்காரே,

நாங்க, after all, அழுவதற்காக கோவிலை விட்டு வெளியே போகச்சொல்லலாமா?

என் அம்மாவைப் பார்த்தா பாவமாயில்ல?

அவங்களுக்கு நான் இறைவன் கொடுத்த செல்வம்.

அவங்க இறைபக்தியில யாருக்கும் குறைஞ்சவங்க இல்ல.

என்னையும் அவங்களைப்போலவே பக்தியில வளர்க்க பிரயாசைப்படுராங்க.

வீட்டில இரவு செபம் சொல்லும்போது நான்  அழுதா,

"நம்ம பாக்கியம் சொல்ற செபத்தப் பாருங்க. வித்தியாசமாயில்ல?"ன்னு அப்பாக்கிட்ட சொல்வாங்க.

அப்பாவும் பதிலுக்கு, "ஆமாடி.
பூங்காவனத்தில ஆண்டவர் செபிக்கும்போது பார்த்திருப்பா! "ன்னு சொல்வாரு.

இப்போ  பூசை நேரத்தில எங்கள வெளிய போகச்சொல்லலாமா?

பாவமாயில்ல?

நான் அழுதது நீங்க பக்தியோடு பூசை காண்கதுக்கு இடைஞ்சலா இருக்கா?

வீட்ல குழந்தை அழுதா அதுல இன்பம் காண்கிறவங்க பெற்றோர்.

கோவில் ஆண்டவர் நமக்காக வாழும் வீடுதான.

எத்தனை பேர் தங்கள் வீட்டில் குழந்தை அழும் சப்தம் கேட்கணும்கிறதுக்காக கோவில் கோவிலா ஏறி இறங்குகிறாங்க தெரியுமா?

குழந்தையின் குரல் இறைவன் கொடுத்த வரம்.

அதை இறைவன் இல்லத்திலிருந்து வெளியேற்ற முயல்வது இறைவனுக்குப் பிடிக்காதுங்க.

குழந்தை அழுதால் அழுகையை நிறுத்துவது அம்மாவின் வேலை.

அதை கோவிலுக்குள் இருந்தபடியே செய்ய விடுங்கள். 

கோவிலவிட்டு வெளியே போகச்சொல்லாதீங்க.

பிள்ளை அழுதா வெளியே போகச் சொல்லுவாங்கன்னு நினைத்து கோவிலுக்கே வராத பெற்றோர் இருக்காங்க.

அந்நிலையை நாம் உருவாக்கலாமா?

ஒரு முறை ஒரு குருவானவரிடம் என் அப்பா கேட்டார்,

"Father, what do you think about the disruptions from children in the church?"

அவர் சொன்ன பதில்,

"How blessed we are to have life in our church!

I’d rather have the children there being disruptive than have whole families not there at all.”

"குழந்தைகள் கோவிலுக்கு வருவது இறைவன் தரும் ஆசீர்வாதம்.

குழந்தை அழும் எனப்பயந்து

குடும்பமே கோவிலுக்கு வராதிருப்பதைவிட

குழந்தையின் தொந்தரவுடன் கோவிலுக்கு வருவது எவ்வளவோ மேல்."

கோவில்

பிள்ளைகள் இல்லாத பெற்றோருக்காக மட்டும்

கட்டப்பட்ட இறை இல்லம் அல்ல.

குழந்தைகள் உட்பட   எல்லாருக்காகவும் கட்டப்பட்ட
வீடு.

குழந்தைகட்கும் விசுவாசத்தை ஊட்டவேண்டிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது.

கோவிலில் நாங்கள் அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது எங்கள் அப்பா, அம்மா பொறுப்பு.

அதையும் மீறி நாங்கள் அழுதால் எங்ளை வெளியேற்ற யாருக்கும் உரிமை இல்லை.

கோவில் என்ன சட்டசபையா? நீங்கள்தான் சபாநாயகர்களா?

நாங்கள் உங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதம்.

அதை விரட்டிவிடாதீர்கள்.

முழுப்பூசையிலும் பங்கெடுக்கும் உரிமை

பெரியவர்கட்கு மட்டுமல்ல,

குழந்தைகட்கும் உண்டு.

திருச்சபை என்னும் குடும்பத்தில் நாங்களும் உறுப்பினர்கள்.

எங்களில் ஒருவர் நாளைக்கு உங்கள் ஆயராக ஆகலாம்.

போப்பாகக்கூட வரலாம்.

ஒரு போப்பாண்டவரை வெளியேற்றும் பாவம் உங்களுக்கு எதற்கு?

லூர்து செல்வம்.