Wednesday, July 24, 2019

"நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்." (அரு.15:4)

"நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்." (அரு.15:4)
++++++++++++++++++++++++++

"என்னங்க....என்னங்க.....
என்னங்க....என்னாச்சி இவருக்கு? இவ்வளவு கத்துகிறேன், பதிலே இல்ல!"

"பதில் சொல்லாமல் இருக்கிறதே ஒரு பதில்தானே! Busy யா இருக்கேன், கொஞ்சம் பொறுத்து கூப்பிடுன்னு அர்த்தம்!"

"சரி.கொஞ்சம் பொறுத்து கூப்பிடுகிறேன்.

அதுவரை என்னுள்ளே இருக்கிற உங்ககூட பேசிக்கிறேன்."

..."என்னது? உன்னுள்ளே இருக்கிற என்கூடவா? புரியல."

"உங்க மனசுல நான் இருக்கேனா? இல்லையா?"

..."இருக்கிறாய்."

"அதேமாதிரி என் மனசுல நீங்க இருக்கீங்க. அந்த உங்ககூட பேசுவேன்."

..."நான்கூட Busy யா இருந்தபோது என் மனசுல இருக்கிற ஒருத்தர்கூடதான் பேசிக்கிட்டிருந்தேன்."

"நான் அத அப்பவே Guess பண்ணிட்டேன்.

செபம் சொல்லிக்கொண்டு இருந்திருப்பீங்க."

..."யாரிடம்?  Guess. பண்ணு பார்ப்போம்."

"நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்."

என்று யார் சொன்னாரோ அவர்கூட, சரியா?"

..."Correct. அதெப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்ச?"

"நீங்க பதில் சொல்லும்போது பக்கத்தில் பைபிள் திறந்தாப்ல இருந்தது,  அருளப்பர் 15ஆம் அதிகாரத்தில."

..."நீ சொன்ன வசனத்தில உனக்குப் பிடிச்ச பகுதி எது?"

"இன்னொரு சமயம் ஆண்டவர் சொன்னாரு,

'உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல்

உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக'

என்று.

இந்தக் கட்டளையில் இறைவன் 'உன் மீது அன்பு காட்டு,  அதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டு' என்று சொல்லவில்லை. ஏன்?"

...''ஏனென்றால் சுய அன்பு இயல்பானது. அதற்குக் கட்டளை தேவைஇல்லை.

பிறர் அன்புக்குக் கட்டளை தேவை.  

'உன்னை நேசிப்பதுபோல் பிறரையும் நேசி.''

"  'நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல

நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்.'

கடவுள் நம்மில் நிலைத்திருக்கிறார்.

கடவுள் நம்முள் இருக்கிறார்.

நாம் தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே

நம்மைத் தன் சிந்தனையில் அன்புடன் சுமந்து கொண்டிருந்த கடவுள்

அன்பின் காரணமாகவே நம்மைப் படைத்தார்.

கடவுள் மாறாதவர், அவரது அன்பும் மாறாதது.

கடவுள் எங்கும் இருக்கிறார், அன்பாகவே எங்கும் இருக்கிறார்.

ஆகவே கடவுள் நம்முள்ளும் இருக்கிறார்,  அன்பாகவே இருக்கிறார்.

அவரது அன்பு மாறாதது.

நாம் நல்லவர்களாக இருந்தாலும், பாவிகளாக இருந்தாலும்

தம் அன்பில் கொஞ்சங்கூட குறையாமல் நம்முள் இருக்கிறார்.

கடவுளே இல்லை என்று சொல்பவர்களுக்குள்ளும்

தம் அன்பில் கொஞ்சங்கூட குறையாமல்  இருக்கிறார்.

ஏனென்றால் எங்கும் இருப்பது அவர் இயல்பு.

அவர் நமக்குள் எப்போதும் இருக்கிறார்.

எப்போதும் இருப்பதற்குப் பெயர் நிலைத்திருப்பது.

ஆகவேதான் இயேசு

'நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல'

என்று சொல்கிறார்.

அவர் நம்மில் நிலைத்திருப்பதுபோல

நாமும் அவரில் நிலைத்திருக்க
வேண்டும்.

அதாவது

அவரைப்போலவே அன்பு குறையாமல்,

அவரைப்போலவே நேர இடைவெளி விடாமல்,

அவரைப்போலவே பாவம் இல்லாமல்,

அவரைப்போலவே தந்தையின் சித்தத்தை ஏற்று

அவரில் நிலைத்திருக்க
வேண்டும்."

..."ஒரு கேள்வி.

எங்கும் இருப்பது அவர் இயல்பு.

ஆகவே நம்முள்ளும் இருக்கிறார்.

எங்கும் இருப்பது போலவே நம்முள்ளும் இருந்தால் அதில் என்ன விசேசம் இருக்கிறது? "

"விசேசமே அதில்தான் இருக்கிறது.

கடவுள் ஆவி.

ஆவி இருக்க இடம் தேவை இல்லை.

சடப்பொருளாகிய நாம்

இடத்தை அடைத்துக் கொண்டிருப்பது போல

அவர் அடைத்துக் கொண்டிருக்கவில்லை,

அடைத்துக்கொண்டிருக்கவும் முடியாது.

Being a Spirit God does not and cannot occupy space as we, matter,  do.

கடவுள் தன்

ஞானத்தினால்,

வல்லமையால்,

அன்பினால்  எங்கும் இருக்கிறார்.

படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் அவருடைய நினைவில் இருக்கிறது,

அவருடைய நினைவில் இருப்பதால்தான் அப்பொருளே இருக்கிறது.

Suppose,

அவர் அதை மறந்தால்

அது ஒன்றுமில்லாமைக்குத் திரும்பிவிடும்,

அதாவது, இருக்காது.

(ஆனால் அவரால் மறக்கமுடியாது.

ஆனாலும்

அவர் நினைத்தால் மறக்காமலேயே எந்தப் பொருளையும் ஒன்றுமில்லாமல் ஆக்கமுடியும், ஏனெனில் அவர் சர்வ வல்லபர்)

அவர் நம்முள் இல்லாவிட்டால் நாம் ஒன்றுமில்லாமை யாகிவிடுவோம்.

அவர் இருப்பது எல்லா பொருட்களுக்கும் பொதுவானது.

அப்போ நம்மில் இருப்பதில் விசேசம் என்ன இருக்கிறது?"

"காற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

காற்று வெட்ட வெளியிலும் வீசுகிறது,  கல்மீதும் உரசிக் கொண்டு போகிறது.

அதே காற்று என் மூக்கு வழியாக என் நுரையீரலுக்குள்ளும் போகிறது.

ஆனால் அதன பணியைப் பாருங்கள்.

வெட்ட வெளியில் வீசுகிறது,

கல்மீது உரசுகிறது.

என்னை வாழவைக்கிறது.

அதேபோல்தான் நம்முள் வாழும் தேவன் நம்மை வாழவைக்கிறார்.

தன்னை நேசிப்பதுபோலவே நம்மையும் நேசிக்கிறார்.

தனது அருளால் நம்மை இயக்குகிறார்.

தனது தூண்டுதல்கள்மூலம் நம்மோடு பேசுகிறார்.

நம்மை வழிநடத்துகிறார்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்?

ஒவ்வொரு வினாடியும் நம் நினைவாகவே இருக்கும் அவரைக் கண்டு கொள்வதில்லை.

அவர் நம்மோடு பேசுவதையும் கேட்பதில்லை.

நமது ஆன்ம வளர்ச்சிக்காக அவர் தரும் அருளையும் பயன்படுத்துவதில்லை.

அவரது பராமரிப்புக்கு நன்றி கூறுவதுமில்லை.

அவரது அருளால் எதாவது நல்லது நடந்தால் அதை நமது சாதனையாக எண்ணி பீற்றிக்கொள்வோம்.

எதாவது கஷ்டம் வரும்போது மட்டும் அவர் நம்மிடம் இருப்பது ஞாபகம் வரும்.

அப்போதுதான் நமது கஷ்டத்தை நீக்க விண்ணப்பம் வைப்போம்.

கஷ்டம் தீர்ந்தவுடன் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவோம்.

ஆகவேதான் இயேசு நமக்கு அறிவுரையாகக் கூறுகிறார்,

'நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல

நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்.'

ஆண்டவர் எப்படி எப்போதும் நமக்குள் அன்புடன், நம் நினைவாகவே வாழ்கிறாரோ

அதேபோலவே நாமும் எப்போதும் அன்புடன் அவர் நினைவாகவே வாழவேண்டும்.

நாமும் அவருடைய அன்பில் நிலைத்திருக்க வேண்டும்.

அவரது சொற்களுக்கு செவிமடுக்க வேண்டும்.

துன்பத்தில் நினைப்பதுபோல் இன்பத்திலும் நினைக்க வேண்டும்.

அவரால்தான் நாம் வாழ்கிறோம் என்பதை உணரவேண்டும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம்,

  'ஆண்டவரே  நான் உம்மை நேசிக்கிறேன்'

என்று சொல்லவேண்டும்.

எப்போதும் அவர் சந்நிதியில் வாழ வேண்டும்.

அவருள் நிலைத்திருந்தால்தான் நமக்கு நிலைவாழ்வு கிட்டும்."

..."Very good.

இதில் இன்னொரு விசேசம் என்னவென்றால்

அவர் நம்முள் வாழ்வதும் நமக்காகத்தான்,

நாம் அவருள் வாழ்வதும் நமக்காகத்தான்.

அதாவது நமது பக்தி வாழ்வால் அவருக்கு ஒரு பயனும் இல்லை,

ஏனெனில் அவர் நம்மைப் படைக்குமுன்பே பரிபூரணர்.(Perfect)

ஆனால் அவர் நம்மை படைக்கு முன் நாம் ஒன்றுமில்லை.

We were nothing before we were created.

இப்போது நாம்  சொந்தம் கொண்டாடுவது எல்லாம்,நமது உயிர் உட்பட,  இறைவன் தந்தது.

இறைவனது அன்பு

நிபந்தனை அற்றது,

தன்னலம் அற்றது,

குறையாதது,

மாறாதது,

நிரந்தரமானது.

அத்தகைய அன்பிற்குள் நிலைத்து வாழ இயேசு நம்மை அழைக்கிறார்.

அழைப்பினை ஏற்போம்.

அழியா வாழ்வடைவோம்.

லூர்து செல்வம்.

Monday, July 22, 2019

"ஆனால், தேவையானது ஒன்றே." (லூக்.10:42)

"ஆனால், தேவையானது ஒன்றே." (லூக்.10:42)
------------------------------------------------a
அவன் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவன்.

பள்ளியில் மட்டுமல்ல மாவட்டம் முழுவதும் அவன் பெயர் பிரசித்தம்.

ஏனெனில் அவன் District level Ko Ko player.

பள்ளியில் நடைபெறும்

பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, நடிப்புப் போட்டி, நடனப்போட்டி போன்ற போட்டிகளிலும் அவன்தான் First!

எல்லா வெற்றிகளுக்கும் சான்றிதளள்கள் கையில்.

ஆனால், பாடங்களில் கவனம் செலுத்தாததால் S. S. L. C தேர்வில் Fail!

ஒரு போட்டியிலும் கலந்து கொள்ளாத மாணவர்கள்கூட 11th. Std.க்குப் போய்விட்டார்கள்.

S. S. L. C சான்றிதழ் இல்லாமல்,

போட்டிகளில் கிடைத்த சான்றிதள்கள்களால் என்ன பயன்?

சான்றிதழ்களைப் பார்த்துக் கொண்டு வீட்டில் உட்கார்திருக்கிறான்!

"அட மடையா, தேவையானது ஒன்று இல்லாமல்

எங்களை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?"

சான்றிதழ்களின் குரல் காதுகளுள் நெருப்பாய்ப் பாய்கிறது.

*                 *           *               *

இன்னொரு நபர்.

ஊரில் பெரியமனிதர், வசதியிலும், மதிப்பிலும்.

சபைக்கும் முக்கிய ஆள்.

ஒரு ஆண்டு.

கோவில் திருவிழா முழுப்பொறுப்பையும் அவர் கையில் ஒப்படைத்து விட்டார்கள்.

வசதி இருந்ததால் கைப்பணத்தையும் போட்டு செலவழித்தார்.

கோவில் அலங்காரம்,
சப்பரம், 
வாணவேடிக்கை,
மேளம்,
பத்து நாட்களும் சுவாமிமார் சாப்பாடு எல்லாம் அவர் மேற்பார்வையில்தான்.

திருவிழா ஜெகஜோதியாய் நடந்தது.

எல்லோரும் அவரை வானளாவப் புகழ்ந்தார்கள்.

பத்தாம் திருநாள் முடிந்ததும் வீட்டில் வைத்து மனைவி சொன்னாள்,

"திருவிழா பிரம்மாதம்,ஆனால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லையே!"

"ஏண்டி வருமானத்திற்காகவா உழைத்தேன்? வரிப்பணம் போக ஒரு இலட்சம் கையிலிருந்து செலவழித்திருக்கிறேன்.

அதை நன்கொடையாக எழுதிவிட்டேன்."

"உங்களுக்கு ஒரு பயனும் இல்லையே!"

"ஏண்டி சொன்னதையே சொல்லிக்கிட்டிருக்க."

"நான் சொல்வதை நிறுத்தினாலும் ஆண்டவர் ஒரு நாள் சொல்லுவார்.

'நீ ஆடம்பரமாகக் கொண்டாடிய விழாவினால் உனக்கு ஒரு பயனும் இல்லையே! '

'ஏன் ஆண்டவரே?'

'நீ ஒரு நாள்கூட முழுப் பூசை காணவில்லையே!

தேவையான ஒன்றை விட்டுவிட்டாய்.

ஆடம்பரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்.'

*                 *           *               *

ஆயர் ஒருவர் இவ்வுலக வாழ்வை விட்டுவிட்டு விண்ணகம் சென்றார்.

வாசலில் இராயப்பர் ஒரு தராசுடன் உட்கார்ந்திருந்தார்.

"இராயப்பரே, சாவிகளை இடுப்பில் சொருகிவைத்து விட்டு, கையில் தராசுடன் உட்காந்திருக்கீங்க?"

"உங்களுக்காக மோட்ச வாசல் திறந்திருக்கிறது.அதற்கு முன் தராசுக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. "

"இராயப்பரே, எனது Weight பார்க்கணும்னா பூமிக்கல்லவா போகவேண்டியிருக்கும். எனது உடல் அங்கேதானே இருக்கிறது."

"உட்காருங்க, ஆயரே. உங்கள் சாதனைகளை சுருக்கமாக விபரியுங்கள்."

"மேற்றிராசனத் தலை நகரில் பழைய பேராலயத்தை இடித்துவிட்டு பல கோடிகள் செலவழித்து புதிய பேராலயம் கட்டியுள்ளோம்.

கிராமங்களிலும் கோவில்கள் கட்டியுள்ளோம்.

பரவலாக பல பள்ளிக்கூடங்கள் கட்டியுள்ளோம்.

நிறைய ஆசிரியர்களுக்கு வேலை கொடுத்துள்ளோம்.

பள்ளிகளில் C. C. T. V கேமராக்கள் பொருத்தி பணி சரியாகச் செய்யப்பப்படுகிறதா  என்பதைக் கண்காணித்து வருகிறோம்.''

'' கொஞ்சம் பொறுங்கள்.

    ஆசிரியர்கள் பெற்றோர் ஸ்தானத்திலிருந்து மாணவர்களைக் கவனிக்க வேண்டியவர்கள் ஆயிற்றே, அவர்கள்மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?"

"பொதுவாகக் தவறுகள்
எதுவும் நடைபெறாமல் தடுக்க கேமராக்கள் பொருத்துவது பூமியில் வழக்கம்.

பிள்ளைகளின் பெற்றோரும், மற்றவர்களுங்கூட  பள்ளிக்கு வருவார்கள்.

கேமரா எல்லோரையுமே கண்காணிக்கும்."

"மற்ற அமைப்புகளுக்கும், கிறிஸ்தவ அமைப்புக்கும் இடையில் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.

திருச்சபை கிறிஸ்துவின் ஞான சரீரம். இதன் தலை கிறிஸ்து.

இதன் உயிர் அன்பும் நம்பிக்கையும்.

பூமியின் கிறிஸ்துவின் பிரதிநிதியாகிய பாப்பரசர் தனக்குக் கீழ் உள்ள ஆயர்ளையும், குருக்களையும் கேமரா வைத்தா கண்காணிக்கிறார்?

உங்கள் மேலுள்ள நம்பிக்கையின் அடிப்படையில்தானே

இறைவன்  கோடிக்கணக்கான விசுவாசிகளை உங்கள் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார்.

நீங்கள் எந்த அடிப்படையில் பள்ளிகளில் கேமரா வைத்து கண்காணிக்கிறீர்கள்?

அன்பின் அடிப்படையிலா? 

பயத்தின் அடிப்படையிலா?

கேமராவின் முன் இயல்பாக நடமாட முடியுமா?

கேமராவைப் பார்த்தவுடன் முதலில் வருவது பயம், தொடர்வது நடிப்பு.

இயல்பாக நடமாட முடியாதவர்கள் எப்படி இயல்பாக மாணவர்களை உருவாக்க முடியும்?

சாமியாரைப் பார்த்தவுடன் பயப்படுகிறவர்கள் எப்படி அவரிடம் போய் பாவசங்கீத்தனம் செய்வார்கள்?"

"நீங்கள் கூறுவது  உண்மைதான்,  இராயப்பரே."

"சரி, இப்போது கட்டப்பட்ட கோவில்கள், பள்ளிக்கூடங்கள், நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், பயன்பெறும் மாணவர்ள், நிர்வகிக்கப்படும் நிலபுலன்கள்

எல்லாவற்றையும் தராசின் ஒரு தட்டில் வையுங்கள்"

"வைத்தாகிவிட்டது."

"சரி. இப்போது தங்கள் மேற்றிராசனத்தில்

கேட்கப்பட்ட பாவசங்கீத்தனங்கள்,
சந்திக்கப்பட்ட வீடுகள்,
சரிசெய்யப்பட்ட திருமணங்கள், சமாதானப்படுத்தப்பட்ட ஆட்கள்,  குடும்ங்கள்,
சந்திக்கப்பட்ட நோயாளிகள், உதவிபெற்ற ஏழைகள்,
ஆடைகள் கொடுக்கப்பட்டோர்

இன்னும் இதைப்போன்ற ஆன்மீக உதவி பெற்றோர் ஆகியோரை அடுத்த தட்டில் வையுங்கள்."

"வைத்தாகிவிட்டது."

"ஆயரே, கட்டடங்கள் தட்டுதான் Weight அதிகம், கீழே போய்க்கொண்டிருக்கிறது.

ஆன்மீக தட்டு ரொம்ப Light.

ரொம்ப மேல போய்விட்டது.

ஆன்மீகப் பணிதான் குருக்களுடைய முழுநேரப்பணி.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில பள்ளிக்கூடங்கள் அவர்களுடைய ஆன்மீக நேரத்தின் பெரும்குதியைச்

சாப்பிட்டு விடுகின்றன என்று நினைக்கிறேன்.

எந்த பணிக்குத் தங்களை முழுவதும் அர்ப்பணிக்க முடிவெடுத்து குருக்கள் ஆனார்களோ,

எந்தப்பணிக்காக தங்களை பல ஆண்டுகள் தயாரித்தார்களோ

அந்தப் பணிக்கு இன்றைய பள்ளிக்கூடங்கள் இடைஞ்சலாய் உள்ளன.

பள்ளிக்கூடப் பிரச்சனைகளே அவர்களுடைய பொன்னான நேரத்தில் பெரும்பகுதியை விழுங்கிவிடுகின்றன.

ஆயினும் கிறிஸ்தவர்களுடைய சமூக முன்னேற்றத்துக்கு பள்ளிக்கூடங்கள் தேவை.

அவற்றை பொது நிலையினர் கையில் ஒப்படைக்கலாமே.

நமது குருக்கள் முழு நேர ஆன்மீகப்பணி ஆற்ற நேரம் கிடைக்கும்."

"இராயப்பரே, நீங்கள் கூறுவது முற்றிலும் சரி.

நாம் நம் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்வோம்.
அவர் பார்த்துக் கொள்வார்."

*           *          *         *        *

இப்போது நமது வாழ்க்கைக்கு வருவோம்.

நாம் அநேக சமயங்களில் எதற்காகப் படைக்கப்பட்டோமோ அதை மறந்து விடுகிறோம்.

சில பயணிகள்

தங்கள் பயணத்தின்போது இளைப்பாறுவற்காகத் தங்கும் சத்திரங்களையே

வீடு என எண்ணி அங்கேய தங்கிவிட எண்ணுவது போல,

நாமும் நமது விண்ணக வீட்டை மறந்து

சத்திரமாகிய இவ்வுலகையே நமது நிரந்தர வீடு என எண்ண ஆரம்பித்து விடுகிறோம்.

அதன் விளைவுதான் நமது இன்றைய வாழ்க்கை முறை.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் 

நாம் பிறந்ததின் ஒரே நோக்கம் இறப்பதுதான்.

அதாவது,

இவ்வுலகின் 'உள்ளே' வழியான   பிறப்பின் மூலம் உலகிற்குள் நுழைந்த நாம்,

விண்ணகத்தின் 'உள்ளே' வழியான இறப்பின் மூலம்

விண்ணகத்தின் நிரந்தர வாழ்வுக்குள் நுழைய வேண்டும்.

நாம் பிறந்தது இவ்வுலகில்  வாழ்வதற்காக அல்ல.

நாம் வளர்ந்தது இவ்வுலகில்  வாழ்வதற்காக அல்ல.

நாம் உழைப்பது இவ்வுலகில்  வாழ்வதற்காக அல்ல.

நாம் உண்பது இவ்வுலகில்  வாழ்வதற்காக அல்ல.

நாம் படிப்பது இவ்வுலகில்  வாழ்வதற்காக அல்ல.

நாம் சம்பாதிப்பது இவ்வுலகில்  வாழ்வதற்காக அல்ல.

நாம் வாழ்வதே இவ்வுலகில்  வாழ்வதற்காக அல்ல.

நாம்   இவ்வுலகில் வாழ்வதே

மறுவுலக வாழ்விற்கு நம்மைத் தயாரிப்பதற்காகத்தான்.

நாம் அதை மறந்து

இவ்வுலக வாழ்வே சதம் என்று எண்ணி வாழ்ந்தால்,

எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும்,

எவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்தாலும்,

எவ்வளவு புகழோடு வாழ்ந்தாலும்,

எவ்வளவு பெரிய பதவியில் வாழ்ந்தாலும்,

எவ்வளவு பணத்தோடு வாழ்ந்தாலும்,

அத்தனையும் வீண்.

மேற்கூறப்பட்ட எதுவும்   நமக்குத் தேவை இல்லை.

ஆனால், தேவையானது ஒன்றே ஒன்றுதான்.

இயேசுவின் வார்த்தை மட்டும்தான் விண்ணகம் அடைய தேவை.

இயேசுவின் காலடியில் அமர்ந்து அவர்ந்து அவரது வாழ்வுதரும் வார்த்தையைக் கேட்போம்.

அதை நமது வாழ்வாக்குவோம்.

நிலை வாழ்வு பெறுவோம்.

லூர்து செல்வம்.

.

Saturday, July 20, 2019

சமத்துவமா? அப்படீன்னா என்ன?

சமத்துவமா? அப்படீன்னா  என்ன?
**************----------------------+-

..."கிச்சினுக்குள்ள ஏதோ வாசனை கம கம வென்று அடிக்குது!"

"ஏதோ வாசனை இல்லீங்க, பட்சி வாசனை come come என்று அடிக்குது! Come in, உள்ளே வாங்க."

..."பட்சி taste super! ஆமா, இவ்வளவு ருசியா பண்டங்கள் செய்ய எங்கிருந்து கத்துக்கிட்ட?"

"உங்ககிட்ட இருந்துதான்!"

....''அப்படியா? நான்கு சொல்லித்தந்ததா ஞாபகம் இல்லையே."

"அதெப்படி ஞாபகத்தில இருக்கும்? சொல்லித்தந்தால்தானே ஞாபகத்தில் இருக்கும்!"

"ஏண்டி இப்பதாண்டி சொன்ன!"

"ஹலோ! நீங்க சொல்லித்தந்தீங்கன்னு நான் சொல்லல.

உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டேன்னுதான் சொன்னேன்."

"நான் சொல்லித்தராம எங்கிட்ட இருந்து எப்படி கத்துக்க முடியும்?"

"அது தனி கலைங்க.

ஒவ்வொரு நேரமும் நீங்க சாப்பிடும்போதும்

உங்கள்  முகத்தில் தோன்றும் மாற்றங்களை வைத்து சமையலிலும் மாற்றங்கள் செய்துகொள்வேன்."

..."Very good. கற்றுக்கொள்வதில் உனக்கு நிகர் நீ தான்."

"ருசி எவ்வளவு மோசமாக இருந்தாலும்  'taste super' ன்னு சொல்லுவதில் உங்களை மிஞ்ச ஆளே கிடையாதுங்க."

"உனக்கு ஒன்று தெரியுமா?  உலகில் யாரையும் மிஞ்ச யாரும் கிடையாது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விசயத்தில superஆ இருப்பாங்க.

அதாவது Each one is unique.
கடவுளுடைய படைப்பில் சமத்துவம் என்ற வார்த்தைக்கு இடம் கிடையாது."

"எல்லாம் சமமாக இருந்தால் உலகமே இயங்காதே!

மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான் உலகம்.

மேடு பள்ளங்கள் இல்லாவிட்டால் ஆறுகள் எப்படி ஓடும்?

எல்லா இடங்களிலும் ஒரே அளவு வெப்பம் இருந்தால்

காற்றழுத்த மண்டலங்கள் ஒரே மாதிரி  இருக்கும்.

காற்றழுத்த மண்டலங்கள் ஒரே மாதிரி  இருந்தால் காற்று எப்படி வீசும்?

காற்று வீசாவிட்டால் மழை எப்படி பெய்யும்?"

..."இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை பரிசாக கொடுக்கப் பட்டுள்ளது.

அதைப்பயன்படுத்தி ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சாதனைகள் புரிய வேண்டும்.

யாரும் யாரையும் மாதிரி இருக்கமாட்டார்கள்.

எல்லோரும் ஒரே மாதிரி, அதாவது,  சமமாக   இருந்தால் மனுக்குலம் இயங்காது.

நமது உடலில் வித்தியாசமான உறுப்புகள் இருப்பதால்தான் உடலால் இயங்க முடிகிறது.

ஒரு நாள் காலையில் எழவேண்டிய நேரத்தில் நமது உடலில் எல்லா உறுப்புகளும் கால்களாக மாறிவிட்டால் அன்றைய நாள் எப்படி இருக்கும்!

நாட்டில் சமத்துவம் வேண்டு மென்பதற்காக 130 கோடி இந்தியர்களையும் சம அதிகாரமுள்ள பிரததம மந்திரிகளாக மாற்றிவிட்டால்!"

"எல்லோரும் ஒரே நேரத்தில் வெளிநாட்டுக்குச் சுற்றுப்பயணம் போய்விடலாம்!"

..."நாம் மற்றவர்களுக்குச் சமமாக இல்லையே என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு

அவரவர் தகுதிக்கேற்ப அவரவர் கடமைகளை ஒழுங்காகச் செய்தால் போதும் நாடு நல்ல முன்னேற்ற மடையும்."

''ஒரு சந்தேகம்.

'உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.' (மத்.5:48)

என்று ஆண்டவர் கூறியுள்ளாரே,
வானகத் தந்தையைப்போல,

நிறைவில் அவருக்கு நிகராக ஆகமுடியுமா? "

..."நம்  வானகத் தந்தை அளவற்றவர். நாம் அளவுள்ளவர்கள்.

அளவுள்ள எதுவும் அளவற்றதாக ஆகமுடியாது.

ஆனால் அளவுள்ள நமது அளவிற்கு ஏற்றபடி நிறைவாக,

அதாவது  பாவங்கள், குற்றம் குறைகளை நீக்கி,

பரிசுத்தமாய் இருக்க முயலலாமே!

மோட்சத்தில் அப்படித்தானே இருப்போம்.

ஆனால் நம் வாழ்வின் இலட்சியம் நம்  வானகத் தந்தையை

அடைந்து அவரோடு ஒன்றிப்பதுதானே!
(get united)

தந்தை நம்மை தன் சாயலாகப் படைத்துள்ளார்.

அந்த சாயலுக்கு பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.

நமது இவ்வுலக வாழ்வின் இறுதியில் சாயல் நிஜத்துடன் இணைய வேண்டுமென்றால்

அது மாசு, மரு அற்றதாக இருக்க வேண்டும்.

தந்தை நம்முடன் பகிர்ந்துகொண்ட அவருடைய பண்புகளான அன்பு, இரக்கம், நீதி ஆகியவற்றை மென் மேலும் வளர்க்க வேண்டும்.

தந்தையின் பண்புகளை நாம் பிரதிபலிக்க வேண்டும் என்று இயேசு ஆசிக்கிறார்.

நமது விண்ணகப் பயணம் நிறைவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

நமது விண்ணகப் பயணத்தின் வேகம் எல்லோருக்கும் சமமாக இருக்காது.

அன்னை மரியாளின் வேகத்தை யாராலும் எட்ட முடியாது.

எல்லா புனிதர்களும் புனிதத்துவத்தில் ஒரே அளவு இருக்கமாட்டார்கள்.

நமது வீட்டில் பெரிய அண்டா முதல் சிறிய கிண்ணம் வரை பல அளவுள்ள பாத்திரங்கள் இருப்பதுபோல்

மோட்சத்தில் உள்ளவர்களும் புனிதத்துவ அளவில் மாறுபடுவார்கள்.

அண்டாமுதல் கிண்ணம் வரை அனைத்து பாத்திரங்களையும்
தண்ணீரால் நிரப்பினால்

எல்லா பாத்திரங்களுமே நிறைவாய் இருக்கும்.

அவ்வாறேதான் மோட்சவாசிகளும் அவரவர் கொள்ளளவுக்கு ஏற்ப நிறைவாய் இருப்பர்.

விண்ணகத் தந்தை அளவற்ற விதமாய் நிறைவாய் இருப்பார்.

மோட்சவாசிகள் அவரவர் அளவுக்கு ஏற்ப நிறைவாய் இருப்பர்."

"ஆக விண்ணகத் தந்தை 'நிறைவாய்' இருப்பதுபோல

நாமும் மோட்சத்தில் 'நிறைவாய்' இருப்போம்.

தந்தை  அளவற்ற விதமாய் நிறைவாய் இருப்பார்.

நாம் அளவுள்ள விதமாய் நிறைவாய் இருப்போம்."

..."Correct.

ஆண்டவர் கூறிய தாலந்து உவமைப்படி பார்த்தால்,  

அவர் நம்மைப் படைக்கும்போது எல்லோருக்கும் சம அளவு திறமைகளோடு படைத்திருக்க மாட்டார்.

அவரவருக்கு அளிக்கப்பட்ட திறமைகளை முழுமையாகப் பயன்டுத்தி,

சாதனைகள் புரியவேண்டும்.

ஐந்து தாலந்து பெற்றவன் தூங்கிவிட்டால்,  இரண்டு தாலந்து பெற்றவன் அவனைத் தாண்டிவிடுவான்.

நாம் நமது திறமைகளை மற்றவர்ள் திறமைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்திவிட்டு முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

சமத்துவ உணர்வு அல்ல, கடமை உணர்வே வெற்றியைத் தரும்.

லூர்து செல்வம்.