Monday, July 24, 2023

கையில் திவ்ய நற்கருணை.(தொடர்ச்சி)

கையில் திவ்ய நற்கருணை.
(தொடர்ச்சி)

"திருச்சபை திவ்ய நற்கருணையைக் கையில் கொடுக்க அனுமதித்திருக்கிறது.

அதைத் தவறு என்று எப்படி நீங்கள் கூறலாம்?"

"'தவறு என்பது என் கருத்து."

"இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

"'என் கருத்தில் தவறு இருக்கலாம்.

சம்பந்தப்பட்டவர்கள், 

அதாவது திவ்ய நற்கருணையைக் கையில் கொடுப்பவர்கள்,

தங்கள் நிலை சரி என்று அதிகாரப் பூர்வமாக கூறிவிட்டால் என் நிலையை மாற்றிக் கொள்வேன்.

அதாவது, கீழே விழும் நற்கருணைத் துகள்களில் உள்ள இயேசு மற்றவர்கள் கால்களில் மிதி படுவதை திருச்சபை ஏற்றுக் கொள்கிறது என்று அதிகாரப்பூர்வமாக கூறிவிட்டால்

அதிகாரப் பூர்வமான போதனை எனக்குப் புரியாவிட்டாலும் தாய்த் திருச்சபையின் போதனை என்பதால் அதை ஏற்றுக்கொள்வேன்.

ஆனால் தாய்த்திருச்சபை உறுதியாக அப்படிக் கூறாது.

ஒரு காலத்தில் நற்கருணை கீழே விழுந்து விட்டால் குருவானவர் நற்கருணையை கையில் எடுத்த பின் அந்த இடத்தில் யார் காலும் படாதிருப்பதற்காக ஒரு துணியைப் போட்டு விடுவார்.

பிறகு வந்து துணியைக் கையில் எடுத்து விட்டு நற்கருணை விழுந்த இடத்தைத் தண்ணீரைக் கொண்டு நன்கு கழுவி விடுவார்.

ஒரு துகள் கூட கீழே கிடக்காது.

காலம் மாறலாம்.

திருச்சபையின் போதனை மாறாது''

"இப்போது நடப்பது பற்றி திருச்சபை எதுவுமே கூறாததிலிருந்தே திருச்சபை அதை ஏற்றுக் கொண்டுள்ளது என்றுதானே அர்த்தம்."

"'வருடக் கணக்காகப் பாவ சங்கீர்த்தனம் செய்யாதவர்கள் கூட நன்மை வாங்க வருகிறார்கள்.

 ஆகவே நன்மை வாங்குபவர்கள் அனைவரும் அதற்குரிய ஆன்மீக நிலையில் இருக்கின்றார்கள் என்றா அர்த்தம்?

குருக்கள் அவர்களை நம்பி நன்மை கொடுக்கிறார்கள்.

அவரவர்கள் ஆன்மாவை அவரவர்கள் தான் காத்துக் கொள்ள வேண்டும்.

யூதாசுக்குக் கூட இயேசு நன்மை கொடுக்க மறுக்கவில்லை.

அவன் நன்மை எடுத்தவுடன் எதிரிகளிடம் சென்று விட்டான்.

அதற்கு இயேசு என்ன செய்வார்?"

"கொரோனா காலத்தில் மக்களின் நலன் கருதித் தானே திருச்சபை கையில் நன்மை கொடுக்கும் பழக்கத்தை புகுத்தியது."

"'உலக ரீதியில் கொரோனா பரவாமலிருப்பதற்காக நிறுத்தப்பட்ட எல்லா செயல்களும் திரும்பவும் நடைபெற ஆரம்பித்து விட்டன.

மதுபான கடைகள் திறந்து விடப் பட்டுள்ளன.

பேருந்து, புகை வண்டி பயணங்களில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்டன.

ஹோட்டல்கள் எல்லாம் செயல்படுகின்றன.

முகமூடி இல்லாமல் பொது இடங்களுக்கு செல்கிறோம்.

ஆன்மீக ரீதியில் மூடப்பட்ட கோவில்கள் யாவும் திறக்கப்பட்டு விட்டன.

திருவிழாக்கள் நடக்கின்றன.

ஆனால் கையில் நன்மை கொடுக்கும் பழக்கம் மட்டும் தொடர்கிறது.

அதன் காரணம்தான் தெரியவில்லை."

''அதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?"

"'நற்கருணை மீது உள்ள பக்தி குறைந்துவிட்டது என்பதுதான் காரணம்.

இதை இப்படியே தொடர விட்டால் பிரிவினை சபையாருக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் காணாமல் போய்விடும்.

நற்கருணை பக்தி திரும்பவும் வளர வேண்டும் என்றால் நாம் பழமை வாதிகளாக மாறுவதில் தவறு இல்லை.

திவ்ய நற்கருணைப் பேழையை பீடத்தின் மையத்துக்கு கொண்டு வருவோம்.

திவ்ய நற்கருணை முன் தலை மட்டும் வணங்குவதற்குப் பதிலாக முழந்தாள் படியிட்டு எழுவோம். (genuflect)

 முழந்தாள் படியிட்டு நாவில் ஆண்டவரை வாங்குவோம்.

பூசை முடிந்த பின்பும் கொஞ்ச நேரம் கோவிலில் இருந்து நற்கருணை ஆண்டவரோடு பேசுவோம்.

இதை வாசிக்க நேர்பவர்கள் இது தவறு என கருதினால் அதற்கான காரணங்களை விளக்கவும்."

"நீங்கள் எழுதியிருப்பதை யாரும் வாசிக்கப் போவதுமில்லை,

எதையும் விளக்கப் போவதுமில்லை."

"'யார் வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் 

எனது கருத்துக்களைப் பகிர்வதை நிறுத்தப் போவதில்லை."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment