Thursday, July 13, 2023

சுரூபங்களும், திவ்ய நற்கருணையும்.

சுரூபங்களும், 
திவ்ய நற்கருணையும்.


"ஹலோ, மிஸ்டர் கத்தோலிக்கன்"

"'சொல்லுங்க."

"சொல்ல வேண்டியது நீங்கள் தான், நான் கேட்கத் தான் போகிறேன்.''

"'வாயாலா? காதாலா?"

"கேள்வியை வாயால், பதிலை காதால்."

"'கேளுங்கள்."

"உருவம் இல்லாத கடவுளுக்கு உருவம் கொடுத்து வணங்குவது சிலை வழிபாடு இல்லையா?"

"'நீங்கள் கையில் பைபிளை வைத்திருப்பது வாசிக்கவா? அழகுக்கா?"

"வாசிக்கத் தான். அதில் என்ன சந்தேகம்?"

"'வாசித்திருந்தால் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டீர்கள். புதிய ஏற்பாடு எதைப் பற்றியது?"

"இயேசு மனித உருவம் எடுத்து, நற்செய்தியை அறிவித்து நமக்காகப் பாடுகள் பட்டு மரித்து, உயிர்த்ததைப் பற்றியது."

"'முதல் நான்கு வார்த்தைகளை திரும்பச் சொல்லுங்கள்"

''இயேசு மனித உருவம் எடுத்து."

'"மனித உருவம் எடுத்தது யார்?"

"இயேசு"

""இயேசு யார்?"

"கடவுள்"

"'அதில் சந்தேகம் இல்லையே!"

"இயேசு கடவுள் என்பதைச் சந்தேகிப்பவன் முட்டாள்."

"'இயேசுவுக்கு உருவம் இல்லை என்று சொல்பவன்?"

"பெரிய முட்டாள்."

"'நீங்கள் பெரிய முட்டாள் என்பதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

கடவுள் மனித உருவம் எடுத்து உலகில் பிறந்தார்.

முதன்முதல் தனக்கு மனித உருவத்தைக் கொடுத்தவர் கடவுள்தான், நாங்கள் அல்ல."

"மனித சுபாவத்தில் இயேசுவுக்கு உருவம் உண்டு. ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் தேவ சுபாவத்தில் அவருக்கு உருவம் இல்லை."

"'அது எங்களுக்குத் தெரியும்.

தந்தை ஒரு ஆள், அவருக்கு ஒரு சுபாவம், தேவ சுபாவம்.

பரிசுத்த ஆவி ஒரு ஆள், அவருக்கு ஒரு சுபாவம், தேவ சுபாவம்.

மகன் ஒரு ஆள், அவருக்கு இரண்டு சுபாவங்கள். தேவ சுபாவம், மனித சுபாவம்.

தேவ சுபாவத்தில் துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

மனித சுபாவத்தில் பிறப்பும் இறப்பும் உள்ளவர்.

தேவ சுபாவத்தில் அவரால் கஷ்டப்பட முடியாது.

மனித சுபாவத்தில் அவரால் கஷ்டப்பட முடியும். 

தேவ சுபாவத்தில் அவர் சர்வ வல்லவர். 

மனித சுபாவத்தில் பாவம் தவிர மற்ற எல்லா மனித பலவீனங்களையும் உள்ளவர்."

"இதையெல்லாம் ஏன் சொல்கிறீர்கள்?

கடவுளுக்கு ஏன் உருவம் கொடுக்கிறீர்கள் என்று தான் கேட்டேன்.

அதற்குரிய பதிலைக் கூறுங்கள்."

"'உங்கள் கையில் என்ன இருக்கிறது?"

"பைபிள்."

"'உங்கள் கையில் இருப்பது ஒரு புத்தகம். பேப்பர்களால் ஆன ஒரு புத்தகம். அதில் வார்த்தைகளால் தானே வசனங்கள் உள்ளன.

ஆனந்த விகடனுக்கும், உங்கள் கையில் இருக்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?

அதுவும் பேப்பர்களால் ஆன ஒரு புத்தகம்தான். அதிலும் வார்த்தைகளும் வாக்கியங்களும் தான் இருக்கின்றன."

"நீங்கள் பைபிளையும் ஆனந்த விகடனையும் ஒப்பிட்டுப் பேசும்போது இறைவாக்கை அவமதிக்கிறீர்கள்.

பைபிள் என்றால் இறைவாக்கு."

"'வாக்கு என்றால் வாயிலிருந்து வரும் வார்த்தை தானே.

வாயிலிருந்து வரும் வார்த்தையைக் காதால் கேட்கலாம். கண்ணால் எப்படி பார்க்க முடியும்? வார்த்தைக்கு உருவம் கிடையாது."

"உங்களுக்கு மொழி அறிவே கிடையாதா?

முதலில் மனிதன் தனது சிந்தனையை வாயால் பேசினான்.

பிறகு குரலுக்கு எழுத்துக்கள் உருவம் கொடுத்தான்.

பிறகு தான் பேசியதற்கு எழுத்துக்களாலாகிய ஆகிய உருவத்தைக் கொடுத்தான்.

அதை பேப்பரில் எழுதி வைத்தான்.

அதனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பேசியதை இப்போது கூட வாசிக்க முடிகிறது.

இறைவாக்கும் அப்படித்தான்.

இறைவாக்குக்கும் உருவம் கொடுத்து எழுதப்பட்ட புத்தகம் தான் பைபிள்."

"'நீ சொல்வதெல்லாம் சரிதான்.

ஆனால் புத்தகம் புத்தகம்தான், இறைவாக்கு அல்ல.

புத்தகத்தில் உள்ள தாள்களில் எழுத்து உருவத்தில் எழுதப்பட்டிருப்பது தான் இறைவாக்கு.

அதை வாசிக்கும் போது கண்ணுக்கு இறைவாக்கின் உருவம் தெரியும்.

மனதில் இறைவாக்கு பதியும்."

"அதாவது கண்ணுக்குத் தெரிவது உருவம்,

 மனதில் பதிவது இறைவாக்கு அப்படித்தானே."

"'அப்படியே தான். ஆனால் நான் சொல்ல வருவது புரிகிறதா?"

"புரிவது போல் தெரிகிறது."

"'புரிந்ததைச் சொல்லுங்கள் பார்ப்போம்."

"இயேசுவின் சுரூபத்தைப் பார்க்கும்போது கண்ணுக்குத் தெரிவது உருவம்,

மனதில் பதிவது இறைமகன் இயேசு.

அதாவது கண்ணுக்குத் தெரிகின்ற சுரூபத்தை நீங்கள் வழிபடவில்லை,

மனதில் பதிகிற இறைமகனை வழிபடுகிறீர்கள்.

இதுதானே நீங்கள் சொல்ல வருவது?"

"'கோவிலில் சுரூபங்கள் வைத்திருப்பது அவைகள் யாரைக் குறிக்கின்றனவோ அவர்களை வழிபடுவதற்காகத்தான்.  

இயேசுவின்  சுரூபத்தின் பாதத்தில் மலர்மாலை வைத்தால்

இயேசுவின் பாதத்தில் தான் மலர்மாலை வைக்கிறோம்.

இயேசுவின்  சுரூபத்தின் பாதத்தில் முத்தம் கொடுத்தால்,

இயேசுவுக்கே முத்தம் கொடுக்கிறோம்.

நீங்கள் உங்கள் மனைவியின் புகைப்படத்திற்கு முத்தம் கொடுத்தால் 

 அது உங்கள் மனைவிக்குத் தானே."

"ஆனால் பார்ப்பவர்களுக்கு அப்படித் தெரியாதே?"

"'வழிபாட்டின் போது வழிபடுபவர்களின் இதயமும், இயேசுவின் இதயமும் இணைகின்றன.

பார்ப்பவர்களுக்கு இதயங்கள் தெரியாது.

நீங்கள் உங்கள் மனைவியோடு வெளியூருக்கு போயிருக்கிறீர்களா?"

"போயிருக்கிறேன்."

"'அங்கு உள்ளவர்களுக்கு உங்களோடு வருவது உங்கள் மனைவி என்பது தெரியாதே."

"தெரிய வேண்டிய அவசியம் இல்லையே."

"'நாங்கள் வழிபாடு செய்வது உங்களைத் திருப்திப் படுத்துவதற்காக அல்ல.

நாங்கள் செய்வது சரி என்று இறைவனுக்குத் தெரியும்."

"ஆனால் திவ்ய நற்கருணையை ஆராதிக்கிறீர்கள்?"

"'இயேசுவின் சுரூபத்தில் இயேசு இல்லை.

ஆனால் திவ்ய நற்கருணையில் இயேசு இருக்கிறார்.

இயேசு தான் திவ்ய நற்கருணை.

திவ்ய நற்கருணையை ஆராதிக்கும் போது இயேசுவைத் தான் ஆராதிக்கிறோம்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment