Saturday, July 29, 2023

நமது பாவங்களும், இயேசுவின் பாடுகளும்.

நமது பாவங்களும்,
இயேசுவின் பாடுகளும்.

மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு

தமது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றால் நாம் செய்த ஒவ்வொரு பாவத்திற்கும் பரிகாரம் செய்தார்.

பாவப் பரிகாரம் செய்வதற்காக பாவம் தவிர அனைத்து மனித பலகீனங்களையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

உண்மையில் அவரது பரிகாரம் செய்தல் அவர் பிறந்த நாளிலேயே ஆரம்பித்து விட்டது.

 மனிதன் இவ்வுலக செல்வத்துக்கு அடிமையாக வாழ்வதற்குப் பரிகாரமாகத்தான் 

 அவர் சாணி நாற்றம் வீசிக் கொண்டிருந்த ஒரு மாட்டுத் தொழுவத்தில் 

ஒரு வசதியும் இல்லாத ஏழையாகப் பிறந்தார்.

மனிதன் தனது அதிகார பலத்தால் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாகத்தான்,

ஏரோது மன்னனின் அதிகாரத்திலிருந்து தப்பிப்பதற்காக எகிப்துக்குப் பயணித்து அங்கு நாடோடியாக வாழ்ந்தார்.

மனிதன் கீழ்படியாமையினால் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாக, 

உலகத்தையே ஆளுகின்ற அவர் தன்னுடைய பெற்றோருக்கு 30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து நடந்தார்.

மனிதன் சுயநலத்தால் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாக 

மூன்று ஆண்டுகள் நற்செய்தி போதித்த காலத்தில் சென்ற இடமெல்லாம் மனிதர்களின் நோய்களைக் குணமாக்கி பிறரன்பு பணியாற்றினார்.

அவரது இறுதி பாடுகள் புனித வியாழன் இரவில் ஆரம்பித்தன.

மனிதன் இறைவனது சித்தத்திற்கு எதிராக வாழும் பாவத்துக்குப் பரிகாரமாக பூங்காவனத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்து பரிகாரம் செய்தார்.

அதற்காகப் பயம் என்ற மனித பலகீனத்தை அவர் ஏற்றுக் கொண்டார்.

புனித வெள்ளியன்று அவர் படவிருக்கும் பாடுகளை நினைத்தவுடன் அவர் மனதில் பயம் தொற்றிக் கொண்டது.

அந்தப் பாடுகளை படத்தான் அவர் நித்திய காலமாகத் திட்டமிட்டு, அதன்படி மனிதனாகப் பிறந்தார்.  

அந்தத் திட்டத்திலிருந்து விடுபட பயமாகிய மனித பலகீனம் அவரைத் தூண்டியது.

அதன் விளைவாக 

 "தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்: "
என்று தந்தையிடம் கேட்டார்.

அவரது பயம் நமது பயத்துக்குப் பரிகாரம்.

நாம் விண்ணகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றாமல் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக, 

தந்தையை நோக்கி,

"எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்.

பயத்தின் காரணமாக அவருடைய வியர்வை பெரும் இரத்தத் துளிகளாக நிலத்தில் விழுந்தது.

நாம் துன்பப்பட வேண்டும் என்பது இறைவனின் சித்தமாக இருக்கும்போது 

அதிலிருந்து விடுதலை பெற இறைவனிடம் நாம் வேண்டுவதற்குப் பரிகாரமாகத் தான் 

இயேசு இரத்த வியர்வை வியர்த்து தந்தையிடம் வேண்டினார்.

நாம் வார்த்தைகள் மூலம் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாக  

விசாரணையின் போது அவர் மௌனம் காத்தார்.

மனிதன் தனது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாலும் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாக  

அவர் கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டார்.

அவர் உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் பாவப்பரிகாரமாக அடி வாங்கின.

நம் தலையில் உள்ள மூளை, கண், காது, மூக்கு, வாய் ஆகிய உறுப்புக்கள் மூலம் நாம் செய்கின்ற பாவங்களுக்கு பரிகாரமாக 

தலையில் முள்முடி சூட்டப்பட்டு அடிக்கப்பட்டார்.

தலை உறுப்புக்கள் அனைத்தும் முள்ளினால் தாக்கப்பட்டு, ரத்தம் சிந்தி பரிகாரம் செய்தன.

நாம் சிற்றின்பத்தைத் சுமைந்து வாழ்வதற்குப் பரிகாரமாக 

அவர் கல்வாரி மலை வரை பாரமான சிலுவையைச் சுமந்தார்.

துன்ப வேளையில் நாம் பாவத்தில் விழுவதற்குப் பரிகாரமாக 

சிலுவையைச் சுமந்து சென்ற போது அதன் பாரத்தைத் தாங்க முடியாமல் பல முறை தரையில் விழுந்தார்.

நமது கைகளாலும் கால்களாலும் நாம் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாக 

அவரது கைகளிலும், கால்களிலும் ஆணிகள் அறையப்பட்டன.

நாம் நமது அயலானைப் 
பரிகாசம் செய்வதற்குப் பரிகாரமாக

இயேசு அவரைச் சிலுவையில் அறைந்த அவரது விரோதிகளால் பரிகாசம் செய்யப்பட்டார்.

நமது துன்ப காலங்களில் இறைவன் நம்மைக் கைவிட்டு விட்டதாக நாம் நினைக்கும் 
அவநம்பிக்கைக்குப் பரிகாரமாக 

 "என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?" - என்று உரக்கக் கூவினார்.

நமது வாழ்நாளில் நாம் செய்கின்ற அனைத்துப் பாவங்களுக்கும் இயேசு பரிகாரம் செய்தார்.

நாம் பாவங்கள் செய்யாமலிருந்தால்தான் அவரது பாடுகளின் பயனைப் பெறுவோம்.

பாவங்கள் செய்வதைத் தவிர்ப்போம்.

செய்த பாவங்களுக்கு நாமும் பரிகாரம் செய்வோம்.

விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்களாக வாழ்வோம்.

அதற்கான அருள் வரங்களைத் தரும்படி இயேசுவிடம் கேட்போம்.

மோட்சம் நமதே.

லூர்து செல்வம்.

Wednesday, July 26, 2023

ஏன் செபிக்க வேண்டும்?

ஏன் செபிக்க வேண்டும்?


"தாத்தா, கடவுள் ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மைப் படைத்து, பராமரித்து வருகிறார் என்பதை விசுவசிக்கிறோம்.

வானத்துப் பறவைகளுக்குக் கூட அவை கேளாமலேயே உணவளிக்கும் கடவுள் நாம் கேளாமலேயே நமக்கு அளிக்க மாட்டாரா?

நாம் ஏன் நமக்குத் தேவையானவற்றை அவரிடம் கேட்டு செபிக்க வேண்டும்?"

"'அதாவது நமது வாழ்க்கையை மட்டும் கவனித்துக் கொண்டு கடவுளைப் பற்றி கவலைப் படாமலிருக்க வேண்டும் என்கிறாய், அப்படித் தானே?"

"ஏறக்குறைய அப்படித்தான்."

"'உன்னைப் பெற்ற உன்னுடைய பெற்றோருக்கு உனக்கு என்னவெல்லாம் தேவை என்று தெரியும் தானே?"

"ஆமா."

"'நீ பிறந்தவுடன் நீ கேளாமல் தானே உனக்கு பாலூட்டினார்கள்.

 நீ வளர்ந்த பின்னும் உனக்கு என்ன தேவை என்று அவர்களுக்குத் தெரியும் அல்லவா?

பின் ஏன் அவர்களிடம் உனக்கு வேண்டியதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாய்?"

"அவர்களிடம் ஏன் பேசுகிறாய் என்று கேட்கிறீர்கள்." 

'"ஏறக்குறைய அப்படித்தான்."

"தாத்தா, நமக்கு வேண்டிய பொருள்களை விட நமது பெற்றோரிடம் நமக்கு இருக்க வேண்டிய உறவு தான் நமக்கு முக்கியம்.

உறவை வளர்ப்பதற்காகத்தான் நான் எனது பெற்றோரிடம் எனக்கு வேண்டியதைக் கேட்கிறேன். 

நான் அவர்களிடம் பேசாமலும், எதையும் கேளாமலும் இருந்து விட்டால் என்னை நன்றி கெட்ட சென்மம் என்பார்கள்.

அது மட்டுமல்ல என் பெற்றோர் மீது எனக்குள்ள அன்பை எப்படி தெரிவிப்பது?"

"'அதாவது உனது பெற்றோருடன் உனக்குள்ள உறவை வளர்ப்பதற்காக நீ அவர்களோடு பேச வேண்டும்.

ஆனால் உன்னைப் படைத்த கடவுளோடு உனக்கு உறவு தேவையில்லை.

அதனால் தான் கடவுளை நோக்கி ஏன் ஜெபிக்க வேண்டும் என்கிறாய். அப்படித்தானே?"

"இல்லை, தாத்தா. வானத்துப் பறவைகளைப் பற்றியும், வயல்வெளி மலர்களைப் பற்றியும் இயேசு கூறியதை வைத்து அவ்வாறு கூறுகிறேன்."

"'ஆனால் "கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: "

என்று இயேசு கூறியதை நீ மறந்து விட்டாய்.

கடவுளின் அரசில் நமக்கு இடம் கிடைக்க வேண்டுமென்றால் 

அவரோடு நமக்கு உறவு இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

அவரோடு நமக்குள்ள உறவை வளர்ப்பதற்காகத் தான் நாம் அவரோடு பேசுகிறோம்.

நாம் சகலவற்றிலும் அவரையே சார்ந்து வாழ்கிறோம் என்பதை நாம் ஏற்றுக் கொள்வதை அவருக்கு தெரிவிப்பதற்காகத் தான் நமக்கு வேண்டியதை அவரிடம் கேட்கிறோம்.

செபம் என்றாலே கடவுளோடு இணைந்திருப்பது (Being United with God) என்பதுதான் பொருள்.

இவ்வுலகில் அவரோடு இணைந்து வாழ்ந்தால்தான் மறு உலகில் நமக்கு அவரோடு இடம் கிடைக்கும்.

அதற்காகத்தான் ஜெபம்."

"கடவுளிடம் நாம் எவற்றை அடிக்கடி கேட்க வேண்டும்?"

"'நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

பாவம் செய்யாமல் அவரோடு இணைந்து வாழ வேண்டிய அருள் வரங்களைக் கேட்க வேண்டும்.

நாம் கேட்கும் உணவு கூட இயேசுவாகிய உணவாக இருக்க வேண்டும்."

"இயேசுவாகிய உணவை உண்ணும் போது நமது ஆன்மா பாவமில்லாமல் இருக்க வேண்டும்."

"'அதற்காகத்தான் திவ்ய நற்கருணை உட்கொள்ளுவோர் அதற்கு முன் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறோம், அதாவது சாவான பாவ நிலையிலிருந்தால்."

"அற்ப பாவ நிலையிலிருந்தால்?"

"'அற்ப பாவ நிலையிலிருந்தாலும் பாவ சங்கீர்த்தனம் செய்யலாம்.

தேவ திரவிய அனுமானத்திற்கான அருள் வரங்கள் நமக்கு நிறைய கிடைக்கும்.

அவை நாம் பரிசுத்தமாக வாழ உதவும்"

"வாயில் உணவை வைக்க வலது கையை பயன்படுத்துகிறோம். கழிவைக் கழுவ இடது கையை பயன்படுத்துகிறோம்.

இடது கையால் திவ்ய நற்கருணையை வாங்குவது ஆண்டவருக்குச் செய்யும் அவமானம் இல்லையா?"

"'குருவானவரின் கைகள் ஆண்டவரைத் தொடுவதற்காக அபிஷேகம் செய்யப்பட்டிருக்கின்றன.

நமது கைகள்?

சிந்திக்கத் தெரிந்தவர்கள் சிந்திக்கட்டும்."

லூர்து செல்வம்

Monday, July 24, 2023

கையில் திவ்ய நற்கருணை.(தொடர்ச்சி)

கையில் திவ்ய நற்கருணை.
(தொடர்ச்சி)

"திருச்சபை திவ்ய நற்கருணையைக் கையில் கொடுக்க அனுமதித்திருக்கிறது.

அதைத் தவறு என்று எப்படி நீங்கள் கூறலாம்?"

"'தவறு என்பது என் கருத்து."

"இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

"'என் கருத்தில் தவறு இருக்கலாம்.

சம்பந்தப்பட்டவர்கள், 

அதாவது திவ்ய நற்கருணையைக் கையில் கொடுப்பவர்கள்,

தங்கள் நிலை சரி என்று அதிகாரப் பூர்வமாக கூறிவிட்டால் என் நிலையை மாற்றிக் கொள்வேன்.

அதாவது, கீழே விழும் நற்கருணைத் துகள்களில் உள்ள இயேசு மற்றவர்கள் கால்களில் மிதி படுவதை திருச்சபை ஏற்றுக் கொள்கிறது என்று அதிகாரப்பூர்வமாக கூறிவிட்டால்

அதிகாரப் பூர்வமான போதனை எனக்குப் புரியாவிட்டாலும் தாய்த் திருச்சபையின் போதனை என்பதால் அதை ஏற்றுக்கொள்வேன்.

ஆனால் தாய்த்திருச்சபை உறுதியாக அப்படிக் கூறாது.

ஒரு காலத்தில் நற்கருணை கீழே விழுந்து விட்டால் குருவானவர் நற்கருணையை கையில் எடுத்த பின் அந்த இடத்தில் யார் காலும் படாதிருப்பதற்காக ஒரு துணியைப் போட்டு விடுவார்.

பிறகு வந்து துணியைக் கையில் எடுத்து விட்டு நற்கருணை விழுந்த இடத்தைத் தண்ணீரைக் கொண்டு நன்கு கழுவி விடுவார்.

ஒரு துகள் கூட கீழே கிடக்காது.

காலம் மாறலாம்.

திருச்சபையின் போதனை மாறாது''

"இப்போது நடப்பது பற்றி திருச்சபை எதுவுமே கூறாததிலிருந்தே திருச்சபை அதை ஏற்றுக் கொண்டுள்ளது என்றுதானே அர்த்தம்."

"'வருடக் கணக்காகப் பாவ சங்கீர்த்தனம் செய்யாதவர்கள் கூட நன்மை வாங்க வருகிறார்கள்.

 ஆகவே நன்மை வாங்குபவர்கள் அனைவரும் அதற்குரிய ஆன்மீக நிலையில் இருக்கின்றார்கள் என்றா அர்த்தம்?

குருக்கள் அவர்களை நம்பி நன்மை கொடுக்கிறார்கள்.

அவரவர்கள் ஆன்மாவை அவரவர்கள் தான் காத்துக் கொள்ள வேண்டும்.

யூதாசுக்குக் கூட இயேசு நன்மை கொடுக்க மறுக்கவில்லை.

அவன் நன்மை எடுத்தவுடன் எதிரிகளிடம் சென்று விட்டான்.

அதற்கு இயேசு என்ன செய்வார்?"

"கொரோனா காலத்தில் மக்களின் நலன் கருதித் தானே திருச்சபை கையில் நன்மை கொடுக்கும் பழக்கத்தை புகுத்தியது."

"'உலக ரீதியில் கொரோனா பரவாமலிருப்பதற்காக நிறுத்தப்பட்ட எல்லா செயல்களும் திரும்பவும் நடைபெற ஆரம்பித்து விட்டன.

மதுபான கடைகள் திறந்து விடப் பட்டுள்ளன.

பேருந்து, புகை வண்டி பயணங்களில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்டன.

ஹோட்டல்கள் எல்லாம் செயல்படுகின்றன.

முகமூடி இல்லாமல் பொது இடங்களுக்கு செல்கிறோம்.

ஆன்மீக ரீதியில் மூடப்பட்ட கோவில்கள் யாவும் திறக்கப்பட்டு விட்டன.

திருவிழாக்கள் நடக்கின்றன.

ஆனால் கையில் நன்மை கொடுக்கும் பழக்கம் மட்டும் தொடர்கிறது.

அதன் காரணம்தான் தெரியவில்லை."

''அதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?"

"'நற்கருணை மீது உள்ள பக்தி குறைந்துவிட்டது என்பதுதான் காரணம்.

இதை இப்படியே தொடர விட்டால் பிரிவினை சபையாருக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் காணாமல் போய்விடும்.

நற்கருணை பக்தி திரும்பவும் வளர வேண்டும் என்றால் நாம் பழமை வாதிகளாக மாறுவதில் தவறு இல்லை.

திவ்ய நற்கருணைப் பேழையை பீடத்தின் மையத்துக்கு கொண்டு வருவோம்.

திவ்ய நற்கருணை முன் தலை மட்டும் வணங்குவதற்குப் பதிலாக முழந்தாள் படியிட்டு எழுவோம். (genuflect)

 முழந்தாள் படியிட்டு நாவில் ஆண்டவரை வாங்குவோம்.

பூசை முடிந்த பின்பும் கொஞ்ச நேரம் கோவிலில் இருந்து நற்கருணை ஆண்டவரோடு பேசுவோம்.

இதை வாசிக்க நேர்பவர்கள் இது தவறு என கருதினால் அதற்கான காரணங்களை விளக்கவும்."

"நீங்கள் எழுதியிருப்பதை யாரும் வாசிக்கப் போவதுமில்லை,

எதையும் விளக்கப் போவதுமில்லை."

"'யார் வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் 

எனது கருத்துக்களைப் பகிர்வதை நிறுத்தப் போவதில்லை."

லூர்து செல்வம்.

Sunday, July 23, 2023

கையில் திவ்ய நற்கருணை.

கையில் திவ்ய நற்கருணை.


"மிஸ்டர் கொஞ்சம் நில்லுங்க"

"'என்ன விஷயம்?"

"நீங்கள் கத்தோலிக்கத் திருச்சபைக்குக் கட்டுப்பட்டவரா அல்லது இஷ்டம் போல் வாழ்பவரா?"

"'உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம்? நீங்கள் ஒரு கத்தோலிக்கர் என்று நினைக்கிறேன்."

"கத்தோலிக்கராக இருப்பதால்தான் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.

திருச்சபை அனுமதித்திருக்கும் விசயங்களைத் தவறு என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?"

"'சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்."

"திருச்சபை திவ்ய நற்கருணையைக் கையில் கொடுக்க அனுமதித்திருக்கிறது.

அதைத் தவறு என்று எப்படி நீங்கள் கூறலாம்?"

"'நீங்கள் ஒரு குடும்பத்தில் பெற்றோருடனும் சகோதர சகோதரிகளுடனும் வாழ்பவர் தானே."

"எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். அதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்?"

"' குடும்பத்தில் அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதுண்டா?"

"பரிமாறிக் கொள்வது மட்டுமல்ல,

கருத்துக்கள் வித்தியாசமாக இருந்தால் வாக்குவாதங்கள் கூட செய்வதுண்டு.

நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் நீங்கள் என்னைக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்."

"'கத்தோலிக்கத் திருச்சபை ஒரு குடும்பம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?"

"அதாவது குடும்ப உறுப்பினர் என்ற அளவில் உங்களுக்குக் கருத்துக்களைக் கூற உரிமை உண்டு என்று சொல்ல வருகிறீர்கள். அப்படித்தானே?"

"'விசுவாச சத்தியங்களை எல்லா கத்தோலிக்கர்களும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவற்றைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களைக் கூற யாருக்கும் உரிமை இல்லை. 

உதாரணத்திற்கு, 

திவ்ய நற்கருணையில் 

இறை மகன் இயேசு உண்மையாகவே கன்னிமரியின் வயிற்றில் உற்பவிக்கும் போது எடுத்த அதே உடலோடு,

மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்த அதே உடலோடு,

நமக்காகப் பாடுகள் பட்டு சிலுவையில் மரித்த அதே உடலோடு 

இருக்கிறார் என்பது விசுவாச சத்தியம்.

இதைப் பற்றி அவரவருக்குத் தோன்றுகிற கருத்துக்களைக் கூற யாருக்கும் உரிமை இல்லை.

ஆனால் திவ்ய நற்கருணையை மக்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது நடைமுறையை சார்ந்த விஷயம்.

விசுவாச சத்தியங்கள் மாற முடியாதவை.

நடைமுறைகள் மாறக்கூடியவை.

மாற்றங்கள் வளர்ச்சியினால் அல்லது  தளர்ச்சியினால்  ஏற்படுபவை.

சிறு குழந்தை வளர்ந்து பெரிய மனிதன் ஆகிறது.

ஆனால் அதன் ஆன்மா மாறுவதில்லை.

விசுவாச சத்தியங்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் உயிர்.

இயேசு நமக்காக தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார் என்பது விசுவாச சத்தியம்.

அதன் ஞாபகமாக ஒவ்வொரு நாளும் குருத்கள் திருப்பலி நிறைவேற்றுவது நடைமுறையை சார்ந்த விஷயம்.

நடைமுறையைச் சார்ந்த விஷயங்களில் மாற்றங்கள் செய்யப்படும் முன் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பாப்பரசர் தலைமையில் ஆயர்களின் கருத்து பரிமாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்று

குருவானவர் மக்களை நோக்கி நின்று,

அந்தந்த நாட்டு மொழியில் திருப்பலி நிறைவேற்றுவது.

அதற்கு முன் குருவானவர் பீடத்தை நோக்கி நின்று, லத்தின் மொழியில் திருப்பலி நிறைவேற்றினார்.

இது விசுவாச சத்தியத்தைச் சார்ந்தது அல்ல,
 நடைமுறையைச் சார்ந்தது.

இதை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஆனாலும் இதைப்பற்றி கருத்துக்கள் கூறுவதில் தவறு இல்லை.

இதுவரைப் பேசியது உங்களுக்கு புரிந்திருந்தால் தான் தொடர்ந்து பேசலாம்,

அதாவது கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம்."

"விசுவாச சத்தியங்களைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைக் கூற யாருக்கும் உரிமை இல்லை.

ஆனால் நடைமுறையைச் சார்ந்த விஷயங்களைப் பற்றிக் கருத்துக்கள் பரிமாறி கொள்ளப் படலாம்.

சரியா?"

"'சரிதான். திவ்ய நற்கருணையில் இயேசு இருக்கிறார்,

அதன் ஒவ்வொரு துகளிலும் இயேசு இருக்கிறார்.

இது விசுவாச சத்தியம்.

திவ்ய நற்கருணையை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பது நடைமுறையை சார்ந்த விஷயம்.

இதைப் பற்றி நாம் இருவரும் ஒருவருக்கொருவர் நமது கருத்துக்களை பரிமாறி கொள்ளலாமா?"

"பரிமாறிக் கொள்வோமே."

"'திவ்ய நற்கருணையை வாங்கும்போது,

 நம்மைப் படைத்து,

நமக்காக மனிதனாகப் பிறந்து,

பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த அதே இயேசுவையே வாங்குகிறோம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?"

"இது விசுவாசம் சார்ந்த விஷயம். இதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்."

"'இப்போது நடைமுறைக்கு வருவோம்.

நம்மைப் படைத்த கடவுள் நம்மிடம் வரும்போது அவரை எப்படி வரவேற்க வேண்டும்?"

"கடவுளுக்குரிய மரியாதையோடு வரவேற்க வேண்டும்."

"'நின்று கொண்டு வரவேற்பது, முழந்தாள் படியிட்டு வரவேற்பது

இந்த இரண்டில் எது கடவுளுக்கு ஏற்றதாக இருக்கும்?"

"நின்று கொண்டு மனிதர்களை வரவேற்கிறோம்.

ஆகவே முழந்தாள் படியிட்டு வரவேற்பதுதான் பொறுத்தமாக இருக்கும்."

"'நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு."என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

ஆகவே திவ்ய நற்கருணை ஒரு ...."

"உணவு."

"'உணவை எப்படி வாங்கி உண்டால் பொறுத்தமாக இருக்கும்?

நான் சொல்வது சாதாரண உணவை அல்ல. இயேசுவாகிய உணவை."

"கையாலும் வாங்கி உண்ணலாம்,

நேரடியாக வாயாலும் வாங்கலாம்.

சாதாரண உணவை பெரியவர்கள் கையால் அள்ளி சாப்பிடுவார்கள்,

குழந்தைகள் வாயில் வாங்கி சாப்பிடுவார்கள்."

'''நாம் பேசிக் கொண்டிருப்பது சாதாரண உணவைப் பற்றி அல்ல, இறை மகன் இயேசுவாகிய உணவைப் பற்றியது.

திவ்ய நற்கருணையின் ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கிறார் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பதில் சொல்லுங்கள்."

"நீங்கள் இப்போது எனது கருத்தைக் கேட்கவில்லை, மாறாக உங்கள் கருத்தை என்னிடம் திணிக்கப் பார்க்கிறீர்கள்."

"'எதை வைத்துச் சொல்கிறீர்கள்?"

"ஒவ்வொரு துகளிலும் இயேசு இருக்கிறார்.

 நற்கருணையைக் கையில் வைத்தால் துகள்கள் கையில் ஒட்டிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

 அந்தத் துகள்கள் வாய்க்குள் போகாது.

 தரையில் விழ வாய்ப்பு இருக்கிறது.

 இது உங்கள் கருத்து."

"'எனது இந்தக் கருத்து சரியா, தவறா என்பது பற்றி உங்கள் கருத்தை கூறுங்கள்."

"கருத்தில் தவறு இல்லை.

ஆனால் இது தாய்த் திருச்சபைக்கும் தெரியுமே.

தாய்த் திருச்சபை பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்படுகிறாள் என்பதும் உங்களுக்குத் தெரியுமே.

தாய் திருச்சபையைப் பார்த்து உங்களது இந்த கருத்தைச் சொன்னால் அது பரிசுத்த ஆவியைப் பார்த்து சொன்னது போல் இருக்குமே.

பரிசுத்த ஆவியைப் பார்த்துக் கருத்து சொல்ல உங்களுக்கு யார் உரிமையைக் கொடுத்தது?"

"'பரிசுத்த ஆவியானவர் மொத்தத் திருச்சபையையும் வழி நடத்துகிறார்.

மனுக் குலமே அவரது கண்காணிப்பில்தான் இருக்கிறது.

நற்கருணைப் பகிர்வு. விஷயத்தில் நாம் கருத்துக்கள் பரிமாறிக் கொள்வது பரிசுத்த ஆவியோடு அல்ல,

 அவரது கண்காணிப்பில் உள்ள அவரது பிள்ளைகளோடு,

 அதாவது திருச்சபையின் உறுப்பினர்களோடு.

அதாவது பிள்ளைகள் ஒருவர் ஒருவரோடு.

பரிசுத்த பாப்பரசர் நமது தந்தை.

நமது ஆயர்களும், குருக்களும் நம்மை வழி நடத்துபவர்கள்.

திருச்சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள்.

நமக்குள் தான் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறோம், கடவுளோடு அல்ல.

கடவுளுக்கு ஆலோசனை கூற நமக்கு உரிமை இல்லை.

ஆனாலும் நமக்குள்ளே நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்களில் பரிசுத்த ஆவியின் உள் தூண்டுதல்கள் (Inspirations) இருக்கும்.

நாம் பரிபூரண சுதந்திரத்தோடு செயல்பட கடவுள் நமக்கு முழு அனுமதி கொடுத்திருக்கிறார்.

இப்போது நமது கருத்துக்கு வருவோம்.

ஒரு கையில் வைக்கப்பட்ட திவ்ய நற்கருணையை மறு கையால் எடுத்து வாயில் வைத்த பின்,

கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு துகள்கள் என்ன செய்யும்?"
.
"தரையில் விழுந்து மிதிபட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.

இது திவ்விய நற்கருணையை நமது கையில் வைத்த குருவானவருக்கு தெரியும் என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன்."

'"அது எனக்கும் தெரியும்.

நான் உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் திவ்ய நற்கருணையை நாவில் வாங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

குருவானவர் நாவில் தர மாட்டேன் என்று சொல்ல மாட்டார்."

"நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு உங்களது கருத்தைத் தொடருங்கள்.

திருச்சபை திவ்ய நற்கருணையைக் கையில் கொடுக்க அனுமதித்திருக்கிறது.

அதைத் தவறு என்று எப்படி நீங்கள் கூறலாம்?"

(தொடரும்)

லூர்து செல்வம்.

Friday, July 21, 2023

"அம்மா, ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் ?" (அரு.20:15)

"அம்மா, ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் ?" 
(அரு.20:15)

இயேசுவை அடக்கம் செய்திருந்த கல்லறையில் அவரது உடலைக் காணாததால் அழுது கொண்டிருந்த மதலேன் மரியாளை நோக்கி 

அவர் "அம்மா, ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் ?" என்று கேட்டார்.

அவள் ஏன் அழுது கொண்டிருந்தாள் என்று இயேசுவுக்குத் தெரியும்.

தான் யார் என்று காட்டிக்கொள்ளாமல்,

தோட்டக்காரன் வேடத்தில் நின்று கொண்டு இந்தக் கேள்வியை கேட்டார்.

அவர்கள் நின்று கொண்டிருந்த சூழ்நிலையை நமது ஞாபகத்தில் வைத்துக் கொண்டு,

அதே போன்ற இன்னொரு சூழ்நிலையை கற்பனை செய்து கொண்டு,

நமது ஆன்மாவுக்கு பயன்படும் வகையில் இந்த வசனத்தை தியானிப்போம்.

மதலேன் மரியாள் இயேசுவின் மீது மிகவும் அன்பு கொண்டிருந்த சீடத்திகளில் ஒருவள்.

இயேசு உயிர்த்தவுடன் முதல் முதல் காட்சி கொடுத்தது தன்னைப் பெற்ற அன்னை மரியாளுக்கு. 

மற்றவர்கள் இயேசு உயிர்ப்பார் என்ற நம்பிக்கை இல்லாததால் தான் அவரது உடலுக்கு பரிமளம் பூச கல்லறைக்கு வந்தார்கள்.

ஆனால் அன்னை மரியாள் இயேசுவின் உயிர்ப்பில் உறுதியான விசுவாசம் கொண்டிருந்ததால் கல்லறைக்கு வரவில்லை.

தனது அன்னைக்கு அடுத்தபடி இயேசு முதல் முதல் காட்சி கொடுத்தது மதலேன் மரியாளுக்குதான்.

மதலேன் மரியாள் இயேசுவைத் தேடியது போல நாமும் அவரைத் தேட வேண்டிய சூழ்நிலைகள் நமது ஆன்மீக வாழ்வில் வரும்.

மன அமைதி இல்லாத நேரங்களில்,

மன அமைதிக்காக இயேசுவை நினைத்துப் பார்த்து செபிப்பதற்காக  நமது மனது முயற்சி செய்யும்.

ஆனால் முயற்சி வெற்றி பெறாது.

திவ்ய நற்கருணை பேழையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும்,

பேழை மட்டும் கண்ணுக்குத் தெரியுமே அன்றி இயேசு நமது உள்ளத்துக்குள் வரும் உணர்வு நமக்கு ஏற்படாது.

ஏதோ ஒரு வெற்றிடத்தில் மாட்டிக் கொண்டது போல உணர்ச்சி ஏற்படும்.

கோவிலை விட்டு வெளியே வந்தால் அங்கே நமது பங்குக் குருவானவர் நின்று கொண்டிருப்பார்.

நமது முகம் வேறு பட்டிருப்பதைப் பார்த்து,

"ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்? என்ன பிரச்சனை?" என்று நம்மிடம் கேட்பார்.

பங்குக் குருவானவர் இயேசுவின் பிரதிநிதி.

நமது ஆன்மீக வழிகாட்டி.(Spiritual Director)

இயேசுவின் பாதத்தில் கொட்ட வேண்டிய நமது உணர்வுகள் அனைத்தையும் அவருடைய பிரதிநிதியிடம் கொட்டி விடுவோம்.

அவரது வார்த்தைகள் நமக்கு மன ஆறுதலையும் நாம் செல்ல வேண்டிய ஆன்மீகப் பாதையையும் காண்பிக்கும்.

அன்று தோட்டக்காரன் வேடத்தில் நின்று கொண்டிருந்த இயேசு,

இன்று பங்கு குருவின் உருவத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஆன்மீகத்தில்  நமக்குத் தொடர்புடைய அத்தனை அதிகாரங்களையும் இயேசு தனது குருக்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

குருக்கள் மூலமாகத்தான்

 தனது நற்செய்தியை நமக்கு அறிவிக்கிறார்.

நாம் செல்ல வேண்டிய ஆன்மீகப் பாதையைக் காண்பிக்கிறார்.

நமது பாவங்களை மன்னிக்கிறார்.

தன்னை நமது உணவாகத் தருகிறார்.

அன்று இயேசு மக்களோடு  வாழ்ந்தது போல,

குருவானவர் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

குருவானவரோடு நாம் பேசும்போது இயேசுவுடன்தான் பேசுகிறோம்.

குருவானவர் தரும் ஆலோசனை இயேசு நமக்குத் தரும் ஆலோசனை. நாம் அதன்படி வாழும் போது இயேசுவின் ஆலோசனைப்படி தான் வாழ்கிறோம்.

அவருடைய ஆலோசனைப்படி நாம் இயேசுவுடன் தொடர்பு கொண்டால் அந்தத் தொடர்பு நம்மை நித்திய பேரின்ப வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி.

புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்த்தால் ஒரு உண்மை நமக்குப் புரியும்.

அவர்கள் தங்கள் ஆன்மீக வழிகாட்டியின் ஆலோசனைப்படி தான் வாழ்ந்திருக்கிறார்கள்.

மதலேன் மரியாள் தோட்டக்காரன் வேடத்தில் நின்ற இயேசுவோடு பேசி இயேசு உயிர்த்ததை அறிந்தது போல,

நமது ஆன்மீக வழிகாட்டியாக நமது பங்கு குருவின் உருவத்தில் நம்மோடு வாழும் இயேசுவோடு பேசி 

நமது ஆன்மீகப் பாதையில் வெற்றி நடை போடுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, July 20, 2023

''பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத்.12:7)

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத்.12:7)

"தாத்தா, "பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" 

என்று இயேசு கூறியிருக்கிறார்.

பின் ஏன் அவர் தன்னையே சிலுவையில் பலியாக்கினார்?

நாம் ஏன் திருப்பலி காண்கின்றோம்?"

"'உன்னுடைய தாய் உன் மேல் அன்பு காட்டாமல் ஒழுங்காக சாப்பாடு மட்டும் தருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

நீ அவர்களிடம் என்ன சொல்வாய்?"

"அம்மா, எனக்கு சாப்பாடு முக்கியமல்ல, உங்களது அன்பு தான் முக்கியம் என்று சொல்வேன்."

"'அப்படியானால் அம்மா தருகின்ற சாப்பாட்டை வேண்டாம் என்று சொல்லி விடுவாயா?"

"நிச்சயமாக மாட்டேன். அன்புடன் சாப்பாடு தரும்படி கேட்பேன்."

"'கடவுள் இரக்கம் உள்ளவர்,

 அவரது இரக்கத்தின் காரணமாகத்தான் அவர் மனிதனாய்ப் பிறந்து, நமக்காக பாடுகள் பட்டு தன்னையே பலியாக்கினார்.



இரக்கம் இருந்திருக்காவிட்டால் நமக்காக தன்னையே பலியாக்கியிருக்க மாட்டார்.

மாறாக நம்மை தண்டித்திருப்பார்.

மழை முக்கியமா, தண்ணீர் முக்கியமா என்று கேட்டால் என்ன சொல்வாய்?"

"மழைதான் முக்கியம் என்று தான் சொல்வேன்.

மழை பெய்தால் கட்டாயம் தண்ணீர் வரும்.

மழை பெய்யாவிட்டால் தண்ணீர் வராது."

"'இரக்கம் உள்ளவன் தனது நண்பனுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருப்பான்.

ஆகவே இரக்கம்தான் முக்கியம்.

இயேசுவின் அப்போஸ்தலர்கள் இரவும் பகலும் அவருடனே இருந்தார்கள்.

இயேசு நோயாளிகளைக் குணமாக்கியதோடு நற்செய்தியை அறிவித்து வந்தார்.

சாப்பாடு யாராவது கொடுத்தால்தான் உண்டு.

ஒரு முறை சாப்பிடாமல் பசியாக இருந்ததால்தான் அத்தி மரத்தில் பழங்களைத் தேடினார்.

இயேசுவுக்கு சாப்பாடு கிடைக்கும் போது அப்போஸ்தலர்களுக்கும் கிடைக்கும்.

இயேசு பட்டினி என்றால் அப்போஸ்தவர்களும் பட்டினி தான்.

ஒரு நாள் இயேசு ஓய்வுநாளில் விளைச்சல்வழியே சென்றார்.

 அவருடைய சீடர்களுக்குப் பசியெடுக்க,

 அவர்கள் கதிர்களைக் கொய்து தின்னத்தொடங்கினர்.

பசியாக இருந்த தனது சீடர்கள் மேல் அவருக்கு இரக்கம் இருந்ததால் அவர் சீடர்களைத் தடுக்கவில்லை.

ஆனால் இயேசுவிடமும் அவருடைய சீடர்களிடமும் குறை காண்பதையே குறியாகக் கொண்ட பரிசேயர்கள் அவரை நோக்கி,

 "இதோ! உம் சீடர் ஓய்வுநாளில் செய்யத் தகாததைச் செய்கிறார்களே" என்றனர்.

சீடர்கள் கதிர்களைக் கொய்ததை அறுவடைக்குச் சமமாக்கி,

"ஓய்வுநாளில் செய்யத் தகாததைச் செய்கிறார்களே" என்றனர்.

ஆனால் இயேசு தனது இரக்கத்தின் காரணமாக சீடர்களிடம் எந்த குற்றத்தையும் காணவில்லை.

உண்மையில் சீடர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை.

கதிர்களைக் கொய்தது ஓய்வு நாளில் செய்யத் தகாத காரியம் அல்ல.

பரிசேயர்களுக்கு இரக்கம் இல்லாததால் அவர்கள் சீடர்களின் ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருந்தார்கள்.

இறைமகன் இயேசு அளவு கடந்த இரக்கத்துடன் செயல்பட்டது போல நாமும் இரக்கத்தோடு செயல்பட வேண்டும்.

நம்மிடம் உண்மையான இரக்கம் இருந்தால் செயல் தானாக வந்து விடும்.

பட்டினி கிடப்பவனை நம்மால் வீணே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அவனது பசியை ஆற்றினால் தான் நமக்கு நிம்மதி கிடைக்கும்.

உலகில் அனேக தீமைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

நம்மிடம் இரக்கம் இருந்தால் தீமை செய்பவர்களை வெறுக்க மாட்டோம்.

நமக்கு தீமை செய்பவர்களைக் கூட வெறுக்க மாட்டோம்.

இரக்கத்தின் காரணமாக அவர்களுக்கு நாம் நன்மை செய்வோம்.

உலகில் எண்ணற்ற தீமைகள் நடந்து கொண்டிருந்தாலும் கடவுள் பொறுமையாக இருப்பதற்கு காரணம் அவரது அளவு கடந்த இரக்கம் தான்.

தீமை செய்பவர்கள் திருந்துவதற்கு கால அவகாசம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

 நாம் மற்றவர்களிடமிருந்து இரக்கத்தையே எதிர்பார்க்கிறோம்.

நாம் மற்றவர்களுக்குத் தீமை செய்தால் அவர்கள் நம்மை மன்னிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

எல்லோரிடமும் இரக்கமும் மன்னிக்கும் குணமும் இருந்தால்

உலகில் காலப்போக்கில் தீமைகள் மறைந்துவிடும். 

அளவு கடந்த இரக்கம் உள்ளவராக இருந்ததால் தான் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது தனது நிலைக்கு காரணமானவர்களை மன்னிக்கும் படி தந்தையிடம் வேண்டினார்.

தந்தையும் மகனும் ஒரே கடவுள் தான்.

ஆகவே தந்தையிடம் வேண்டினார் என்றாலும்,

 அவர்களை மன்னிக்க 
தானே தீர்மானித்து விட்டார் என்றாலும் ஒரே பொருள் தான்.

இயேசுவின் வேண்டுதல் வெறுமனே ஒப்புக்காக செய்யப்பட்டது அல்ல.

முழு மனதோடு செய்யப்பட்டது.

பாவ மன்னிப்புக்கான சிலுவைப் பலியின்போது செய்யப்பட்டது.

ஆகவே அவரது மரணத்திற்கு காரணமான அனைவரும் மன்னிக்கப்பட்டிருப்பர் என்று நம்பலாம்.

அதற்குத் தேவையான உத்தம மனஸ்தாபம் அவர்களுக்கு இலவசப் பரிசாக அளிக்கப்பட்டிருக்கும்.

ஆகவே நாம் மோட்சத்திற்குச் செல்லும் போது இயேசுவின் மரணத்திற்குக் காரணமானவர்களும் அங்கு இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

பாவிகளாகிய நம் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகவே இயேசு தன்னையே சிலுவையில் பலியாக்கினார்.

அவரது மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்தார்.

நாமும் திருப்பலியின் போது,

 நமக்கு விரோதமாக தீமை செய்தவர்களை இரக்கத்தோடு மன்னிப்போம்.

அவர்கள் மனம் திரும்ப நம்மையே இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுப்போம்.

இரக்கம் என்பது பண்பு.
பலி என்பது செயல்.

பலி என்னும் செயலுக்குக் காரணமான இரக்கத்தை இயேசு அதிகம் விரும்புகிறார்.

இயேசுவைப்போல நாமும் இரக்கம் உள்ளவர்களாக வாழ்வோம்."

லூர்து செல்வம்.

Wednesday, July 19, 2023

பாவிகளின் கூடாரம்.

பாவிகளின் கூடாரம்.

"தாத்தா, ஒவ்வொரு முறை மங்கள வார்த்தை செபம் சொல்லும்போதும்,

"பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்."

என்று சொல்லுகிறோம்.

எத்தனை முறை இந்த செபத்தைச் சொன்னாலும் "பாவிகளாய்" என்ற வார்த்தை மாறப்போவதில்லை.

நாம் எப்போது பரிசுத்தவான்களாய் மாறுவோம்?

பரிசுத்தவான்களாய் மாறுவதற்காகத் தானே செபம் சொல்லுகிறோம்."

"'உனக்கு,

 "பரிசுத்தவான்களாய் இருக்கிற எங்களுக்காக" 

என்று சொல்ல ஆசையாக இருக்கிறது, அப்படித்தானே."

''தாத்தா,

" நீதிமான்களை அன்று, மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்" 

என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.

நோயாளிகளைக் குணமாக்க டாக்டர் வருவது போல,

பாவிகளை நீதிமான்களாய் மாற்றுவதற்காகத் தானே இயேசு உலகிற்கு வந்தார்.

வாழ்நாள் முழுவதும் பாவிகளாகவே இருந்தால் எப்போது நீதிமான்களாய் மாறுவது?"

"'உனக்குப் பிரச்சனை மங்கள வார்த்தை செபத்தில் உள்ள "பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக" என்ற வார்த்தைகள் தானே?

பாவம் செய்த நமது முதல் பெற்றோரின் வாரிசுகள் அனைவருக்கும் 

அதாவது மனுக்குலம் முழுமைக்கும் பாவிகள் என்ற வார்த்தை பொருந்தும்.

இயேசு உலகிற்கு வந்தது மனுக்குலம் முழுவதையும் மீட்பதற்காகத்தான்.


"ஆயக்காரரோடும் பாவிகளோடும் நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று கேட்ட பரிசேயரும் அவர்களைச் சார்ந்த மறைநூல் அறிஞரும் பாவிகள்தான், நீதிமான்கள் அல்ல.

அவர்களையும் மீட்கவே இயேசு உலகத்துக்கு வந்தார்.

"பாவிகளோடும் நீங்கள் உண்பது ஏன்?"

என்ற கேள்விக்கு பதிலாகத்தான் இயேசு,

"நீதிமான்களை அன்று, மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்"

என்று பதில் சொன்னார்.

உலகில் நீதிமான்கள் யாரும் இல்லையே!

அன்னை மரியாள் பாவ மாசின்றி உற்பவித்தது சுய முயற்சியால் அல்ல, கடவுளின் விசேச வரத்தினால். 

நம்மைப் பொறுத்த மட்டில் நாம் பாவ மன்னிப்புப் பெற்று விட்டாலும், மனம் திரும்பிய பாவிகள் தான்.

பரிசுத்தர்களாய் மாறுவதற்காகத் தான் நாம் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குச் செல்வோம்.

உத்தரிக்கிற ஸ்தலத்தைக்
கடந்து மோட்சத்துக்குள் நுழையும் போது தான் பரிசுத்தர்களாக இருப்போம்."

"பூமியில் வாழும்போது பரிசுத்தர்களாக மாற முடியாதா?"

"'முடியும். நாம் ஞானஸ்நானம் பெற்றவுடனே நமது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு பரிசுத்தர்களாய் மாறுவோம்.

அந்த வினாடி நாம் இறந்தால் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குச் செல்லாமல் நேரடியாக மோட்சத்திற்குச் செல்வோம்.


ஞானஸ்நானம் பெற்றபின் அற்பப் பாவம் கூட செய்யாமல் வாழ்ந்தால் நமது பரிசுத்தத்தனத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

ஆனால் நமது பழுதடைந்த மனித சுபாவத்திற்கு அது மிகவும் கடினம்.

புனிதர்கள் கூட தங்கள் வாழ்நாளில் பாவ சங்கீர்த்தனம் செய்திருக்கிறார்கள்.

தங்கள் துன்பங்களை பாவப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.

அவர்களும் தாங்கள் பாவிகள் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நமது பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபை பாவிகளின் கூடாரம், 

பரிசுத்தமான கூடாரம்.

மருத்துவ மனைகள் நோயாளிகளின் கூடாரம் தானே.

குணம் பெறுவதற்காக நோயாளிகள் தங்கும் கூடாரம்.

குணம் பெற்ற பின்னும் தாங்கள் நோயாளிகளாய் இருந்ததை மறந்து விடக்கூடாது.

அப்போதுதான் நோய்களுக்கான காரணங்களுக்குள் அகப்படாமல் தங்கள் சுகநிலையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

அதுபோல்தான் நாம் பாவ மன்னிப்பு பெற்ற பின்பும் பாவ சந்தர்ப்பங்களில் விழாமல் இருக்க நாம் பாவிகளாய் இருந்ததை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் குணமான பாவிகள் என்பதை மறந்து விடக்கூடாது.

அதற்காகத்தான் நாம் மங்கள வார்த்தை செபம் சொல்லும்போது நமது அன்னையிடம்,

"பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்." என்று செபிக்கிறோம்.

நம்மிடம் பாவம் இல்லாவிட்டாலும் பாவம் இருந்ததற்கான தழும்பு இருக்கும்.

அந்த தழும்பு அகல்வதற்காக தான் பரிகாரங்கள்.

பரிகாரங்கள் போதாவிட்டால் உத்தரிக்கிற ஸ்தலம்.

பாவம் இருந்ததற்கான இடமே தெரியாமல் நமது ஆன்மா எப்போது சுத்தம் ஆகிறதோ

 அப்போதுதான் நாம் பரிசுத்தர்கள்.

 அதுவரை நாம் பாவிகள் தான்.

யாரிடமாவது ஏதாவது உதவியைப் பெற வேண்டுமென்றால் முதலில் நமது இயலாமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் பரிசுத்த நிலையை அடைய வேண்டுமென்றால் முதலில் நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வங்கியிலிருந்து ஏதாவது பணிக்குக் கடன் பெற வேண்டுமென்றால் முதலில் நம்மிடம் அதற்குத் தேவையான பணம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அடிப்படையில் நாம் ஒன்றுமில்லாதவர்கள்.

ஒன்றுமில்லாமையிலிருந்து தான் நம்மை இறைவன் படைத்தார்.

இறைவனிடமிருந்து ஏதாவது உதவியைப் பெற வேண்டுமென்றால் 

முதலில் நமது ஒன்றுமில்லாமையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் பரிசுத்தமடைய வேண்டுமென்றால் முதலில் நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்."

"நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ளாவிட்டால்?"

"'நமக்கும் பரிசேயர்களுக்கும், அவர்களைச் சார்ந்த மறைநூல் அறிஞர்களுக்கும்  வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

அவர்கள் தாங்கள் மட்டுமே சட்டப்படி வாழ்வதாகவும், மற்றவர்கள் அனைவரும் பாவிகள் என்றும் நினைத்தார்கள்.

அவர்கள்தான் இயேசுவின் சிலுவை மரணத்துக்குக் காரணமானவர்கள்.

தாங்கள் பாவிகள் என்று ஏற்றுக்கொண்ட சாதாரண மனிதர்கள் தான்

உடல் சார்ந்த நோய்களிலிருந்தும்,

பாவங்களில் இருந்தும் விடுதலை பெற்றார்கள்.

இயேசு பரிசேயன் ஒருவன் வீட்டில் உணவருந்திய போது,

அவருடைய கால்மாட்டில் பின்புறமாக இருந்து, அழுதுகொண்டே அவர் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து அவற்றைக் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு அப்பாதங்களில் தைலம் பூசிய பெண்ணைப் பற்றி,

"அவள் செய்த பாவங்கள் பல மன்னிக்கப்பட்டன. அவள் காட்டிய பேரன்பே அதற்குச் சான்று. "

என்று இயேசு கூறினார்.

அவள் செய்த பாவங்களை அவள் ஏற்றுக் கொண்டதால் தான் அவைகள் அவளுக்கு மன்னிக்கப்பட்டன.

அவள் மனம் திரும்பிய பாவியாய் மாறினாள்.

நாமும் நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்வோம்.

பாவ நிலைக்குத் திரும்பாமல் பரிசுத்தத் தனத்தை நோக்கி நடை போடுவோம்.

இறைவன் அருள் நம்மை வழி நடத்தும்."

லூர்து செல்வம்.

Thursday, July 13, 2023

சுரூபங்களும், திவ்ய நற்கருணையும்.(தொடர்ச்சி)

சுரூபங்களும், 
திவ்ய நற்கருணையும்.
(தொடர்ச்சி)

சுரூபங்கள் நினைவுபடுத்தும் கருவிகளே.

புனித அந்தோனியாருடைய சுரூபம் அவரை நமக்கு நினைவு படுத்துகிறது. அது அந்தோனியார் அல்ல.

ஆனால் திவ்ய நற்கருணையில் இயேசு மெய்யாகவே இருக்கின்றார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்த அதே இயேசு தான் திவ்ய நற்கருணை.

சுருபங்களுக்குக் கொடுக்கும் அதே மரியாதையை திவ்ய நற்கருணைக்கும் கொடுத்தால்

திவ்ய நற்கருணையில் இயேசு மெய்யாகவே இருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.

புனித அந்தோனியாருக்குக் கொடுக்கும் அதே மரியாதையை இயேசுவுக்கும் கொடுத்தால்,

இயேசுவைக் கடவுள் என்று நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.

புனிதருக்கு முன் தலை வணங்கி நமது மரியாதையைக் கொடுக்கிறோம்.

ஆனால் இயேசுவின் முன் முழங்கால் படியிட்டு அவருக்கு உரிய ஆராதனை கலந்த மரியாதையைக் கொடுக்க வேண்டும்.

புனிதர் வணக்கத்திற்கு உரியவர்.
கடவுள் ஆராதனைக்கு உரியவர்.

வேலைக்காரனுக்கு கொடுக்கும் அதே மரியாதையை முதலாளிக்கும் கொடுத்தால் 

முதலாளியை அவமதிப்பதாக அர்த்தம்.

புனிதருக்கு கொடுக்கும் அதே மரியாதையைக் கடவுளுக்கும் கொடுத்தால் நாம் கடவுளை அவமதிப்பதாக அர்த்தம்.

திவ்ய நற்கருணைக்கு முன் முழங்கால் படியிட்டு எழும் பழக்கம் திருச்சபையில்  முன்பு இருந்தது.

ஆனால் இப்பொழுது தலைவணங்கும் பழக்கமாக மாறிவிட்டது.

தலையை மட்டும் வணங்குபவர்கள் திவ்ய நற்கருணையில் இயேசு இருப்பதை விசுவசிக்கவில்லை என்று தான் அர்த்தம்.

அவர்களிடம் கேட்டால் விசுவசிக்கிறோம் என்று தான் சொல்வார்கள்.

ஆனால் செயல் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம் என்று அவர்களுக்குத் தெரியும்.

சிந்தனையில் உள்ள விசுவாசம் சொல்லிலும், செயலிலும் வெளிப்பட வேண்டும்.

இயேசு உலகில் வாழ்ந்த போது சென்ற இடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கினார்.

அதே இயேசு தான் என்றும் நம்மோடு திவ்ய நற்கருணையில் வாழ்கிறார்.

அவரை நாவில் வாங்கினால் கொரோனா நோய் பரவும் என்று கையில் வாங்கும் பழக்கம் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்தது?

இயேசுவால் நோய்களைக் குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலா,

அல்லது,

இயேசு நோய்களைப் பரப்புவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலா? 

கொரோனா காலத்தில் நமது ஆலயங்களை இழுத்துப் பூட்டி விட்டோம்.

"ஆண்டவரே நோய்கள் குணம் அடைய மக்கள் கூட்டம் கூட்டமாய் உம்மிடம் வந்ததாக நற்செய்தி நூலில் வாசிக்கிறோம்.

ஆனால் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்தால் நோய் ஒருவரை ஒருவர் தொற்றிக் கொள்ளும் என்று ஆலயத்தை அடைத்து விட்டு வீட்டிலேயே இருக்கிறோம், நற்செய்தி நூலை வாசித்துக் கொண்டு.

குணம் பெற்றவர்களை நோக்கி,

"உனது விசுவாசம் உன்னை குணமாக்கிற்று" என்று சொன்னவர் நீர்.

எங்களுக்கும் விசுவாசத்தைத் தாரும், ஆண்டவரே"

நடுத் தீர்வை நாளில் ஆண்டவர் நம்மிடம்,

"கொரோனா நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்."
என்று சொல்ல வேண்டுமா?

அல்லது,

கொரோனா நோயுற்றும் சிறையிலும் இருந்தேன், என்னைப் பார்க்க வரவில்லை "
என்று சொல்ல வேண்டுமா?

என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வில் நமக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்திருக்கும் இயேசு,

நித்தியப் பேரின்ப வாழ்வைத் தேர்ந்தெடுக்கவும்,

வேண்டாம் என்று சொல்லி விடவும் முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

பைபிளுக்கு முழுமையான உருவம் கொடுத்தவர்கள் நாம்தான்.

ஆனால் அரைகுறை பைபிளைக் கையில் எடுத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றும் நமது பிரிவினை சகோதரர்கள் 

அவர்கள் தான் முழுக்க முழுக்க பைபிள் படி வாழ்வதாகவும்,

நாம் பைபிளைப் பற்றி கவலைப்படாமல் பாரம்பரியத்தை மட்டும் பற்றி கொண்டு வாழ்வதாகவும் 

ஒரு பொய் வதந்தியை பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

"நாங்களும் பைபிள் படியே வாழ்கிறோம்"

என்பதை உலகுக்குக் காட்டுவதற்காக 

நம்மவர்கள் செய்த செயல்களில் ஒன்றுதான் 

அதுவரை நமது பலிபீடத்தில் நடு மையத்தில் இருந்த திவ்ய நற்கருணைப் பேழையை  

ஒரு பக்கவாட்டில் வைத்து விட்டு,

மையப் பகுதியை பைபிளுக்குக் கொடுத்தது.

திவ்ய நற்கருணை இறைவன். 
பைபிள் இறைவாக்கு. 

இறைவாக்கிற்கு பீடத்தின் மையப் பகுதியையும்,

இறைவனுக்கு பீடத்தின் ஒரு பக்க பகுதியையும் கொடுத்த காலத்திலிருந்து 

திவ்ய நற்கருணைக்கு நாம் காட்டிக் கொண்டிருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

அதுவரை திவ்ய நற்கருணை முன் முழந்தாள் படியிட்டு எழுந்த நாம்

 தலை வணங்க ஆரம்பித்தோம்.

முழந்தாள் படியிட்டு இறை உணவை வாங்கிய நாம் நின்று கொண்டு வாங்க ஆரம்பித்தோம்.

அதன் பின் நாவில் வாங்கிய இறை உணவை கையில் வாங்க ஆரம்பித்தோம்.

திவ்ய நற்கருணையின் ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கின்றார்.

கையில் நற்கருணையை வாங்கும் போது ஒன்றிரண்டு துகள்கள் கையில் தங்க நேரிடும்.

கையில் உள்ள துகள்கள் தரையில் விழ நேரிடும்.

தரையில் விழுந்த துகள்கள் வருவோர் போவோரால் மிதிபட நேரிடும்.

அப்படி மிதி படுவது நம்மைப் படைத்த இறைவன் என்ற உணர்வு யாருக்கும் இல்லை.

திவ்ய நற்கருணையின் பெருமையை வாய் நிறையப் பேசிவிட்டு 

செயலளவில் எதிர்மறையாக நடந்தால் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஒரு காலத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைப் பூசைக்கு முன்பும் குருவானவர் பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் அமர்ந்திருப்பார்.

திவ்ய நற்கருணை வாங்க விரும்புவோர் பூசைக்கு முன்பு பாவ சங்கீர்த்தனம் செய்வார்கள்.

ஏனெனில் பரிசுத்தமான இதயத்தோடு தான் திவ்ய நற்கருணை பெற வேண்டும்.

பாவ சங்கீர்த்தனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.

இதற்கு பாவங்கள் குறைந்துவிட்டன என்று அர்த்தமா,

அல்லது பாவத்தைப் பற்றிய பயம் குறைந்துவிட்டது என்று அர்த்தமா?

தின்பண்டத்தை வாங்குவது போல கையில் வாங்கிய நற்கருணையை வாயில் போட்டுவிட்டு 

கையில் Cell phone ஐ எடுத்துக்கொண்டு,

வாயால் பேசுவதற்காக கோவிலை விட்டு வெளியேறுபவர்களைப். பற்றி என்ன சொல்ல?

இயேசுவோடு இருந்து கொண்டு அவரிடம் பேசாமல் ஏதோ ஒரு நண்பரோடு பேசினால்

இயேசு நம்மைப் பற்றி என்ன நினைப்பார்?

"உலகம் முடியும் மட்டும் நான் உங்களோடு இருப்பேன்"

என்று இயேசு நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்.

நம்மோடு இருக்கும் இயேசுவோடு நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பற்றி சிந்திப்போம்.

புனித வியாழனன்று இயேசு பன்னிரண்டு அப்போஸ்தவர்களுக்குத் தன்னையே உணவாக கொடுத்தார்.

ஆனால் அவர்களில் பதினொருவர் தான் அவருக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள்.

அவர்களோடு நாமும் சேர்ந்து கொள்வோம்.

ஒருவர் மட்டும் நற்கருணையை வாங்கிய உடனே வெளியேறிவிட்டார்.

அவரது சகவாசம் நமக்கு வேண்டாம்.

திவ்ய நற்கருணை மீது நமக்கு இருக்க வேண்டிய பக்தியைச் செயலில் காண்பிப்போம்.

லூர்து செல்வம்.

சுரூபங்களும், திவ்ய நற்கருணையும்.

சுரூபங்களும், 
திவ்ய நற்கருணையும்.


"ஹலோ, மிஸ்டர் கத்தோலிக்கன்"

"'சொல்லுங்க."

"சொல்ல வேண்டியது நீங்கள் தான், நான் கேட்கத் தான் போகிறேன்.''

"'வாயாலா? காதாலா?"

"கேள்வியை வாயால், பதிலை காதால்."

"'கேளுங்கள்."

"உருவம் இல்லாத கடவுளுக்கு உருவம் கொடுத்து வணங்குவது சிலை வழிபாடு இல்லையா?"

"'நீங்கள் கையில் பைபிளை வைத்திருப்பது வாசிக்கவா? அழகுக்கா?"

"வாசிக்கத் தான். அதில் என்ன சந்தேகம்?"

"'வாசித்திருந்தால் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டீர்கள். புதிய ஏற்பாடு எதைப் பற்றியது?"

"இயேசு மனித உருவம் எடுத்து, நற்செய்தியை அறிவித்து நமக்காகப் பாடுகள் பட்டு மரித்து, உயிர்த்ததைப் பற்றியது."

"'முதல் நான்கு வார்த்தைகளை திரும்பச் சொல்லுங்கள்"

''இயேசு மனித உருவம் எடுத்து."

'"மனித உருவம் எடுத்தது யார்?"

"இயேசு"

""இயேசு யார்?"

"கடவுள்"

"'அதில் சந்தேகம் இல்லையே!"

"இயேசு கடவுள் என்பதைச் சந்தேகிப்பவன் முட்டாள்."

"'இயேசுவுக்கு உருவம் இல்லை என்று சொல்பவன்?"

"பெரிய முட்டாள்."

"'நீங்கள் பெரிய முட்டாள் என்பதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

கடவுள் மனித உருவம் எடுத்து உலகில் பிறந்தார்.

முதன்முதல் தனக்கு மனித உருவத்தைக் கொடுத்தவர் கடவுள்தான், நாங்கள் அல்ல."

"மனித சுபாவத்தில் இயேசுவுக்கு உருவம் உண்டு. ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் தேவ சுபாவத்தில் அவருக்கு உருவம் இல்லை."

"'அது எங்களுக்குத் தெரியும்.

தந்தை ஒரு ஆள், அவருக்கு ஒரு சுபாவம், தேவ சுபாவம்.

பரிசுத்த ஆவி ஒரு ஆள், அவருக்கு ஒரு சுபாவம், தேவ சுபாவம்.

மகன் ஒரு ஆள், அவருக்கு இரண்டு சுபாவங்கள். தேவ சுபாவம், மனித சுபாவம்.

தேவ சுபாவத்தில் துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

மனித சுபாவத்தில் பிறப்பும் இறப்பும் உள்ளவர்.

தேவ சுபாவத்தில் அவரால் கஷ்டப்பட முடியாது.

மனித சுபாவத்தில் அவரால் கஷ்டப்பட முடியும். 

தேவ சுபாவத்தில் அவர் சர்வ வல்லவர். 

மனித சுபாவத்தில் பாவம் தவிர மற்ற எல்லா மனித பலவீனங்களையும் உள்ளவர்."

"இதையெல்லாம் ஏன் சொல்கிறீர்கள்?

கடவுளுக்கு ஏன் உருவம் கொடுக்கிறீர்கள் என்று தான் கேட்டேன்.

அதற்குரிய பதிலைக் கூறுங்கள்."

"'உங்கள் கையில் என்ன இருக்கிறது?"

"பைபிள்."

"'உங்கள் கையில் இருப்பது ஒரு புத்தகம். பேப்பர்களால் ஆன ஒரு புத்தகம். அதில் வார்த்தைகளால் தானே வசனங்கள் உள்ளன.

ஆனந்த விகடனுக்கும், உங்கள் கையில் இருக்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?

அதுவும் பேப்பர்களால் ஆன ஒரு புத்தகம்தான். அதிலும் வார்த்தைகளும் வாக்கியங்களும் தான் இருக்கின்றன."

"நீங்கள் பைபிளையும் ஆனந்த விகடனையும் ஒப்பிட்டுப் பேசும்போது இறைவாக்கை அவமதிக்கிறீர்கள்.

பைபிள் என்றால் இறைவாக்கு."

"'வாக்கு என்றால் வாயிலிருந்து வரும் வார்த்தை தானே.

வாயிலிருந்து வரும் வார்த்தையைக் காதால் கேட்கலாம். கண்ணால் எப்படி பார்க்க முடியும்? வார்த்தைக்கு உருவம் கிடையாது."

"உங்களுக்கு மொழி அறிவே கிடையாதா?

முதலில் மனிதன் தனது சிந்தனையை வாயால் பேசினான்.

பிறகு குரலுக்கு எழுத்துக்கள் உருவம் கொடுத்தான்.

பிறகு தான் பேசியதற்கு எழுத்துக்களாலாகிய ஆகிய உருவத்தைக் கொடுத்தான்.

அதை பேப்பரில் எழுதி வைத்தான்.

அதனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பேசியதை இப்போது கூட வாசிக்க முடிகிறது.

இறைவாக்கும் அப்படித்தான்.

இறைவாக்குக்கும் உருவம் கொடுத்து எழுதப்பட்ட புத்தகம் தான் பைபிள்."

"'நீ சொல்வதெல்லாம் சரிதான்.

ஆனால் புத்தகம் புத்தகம்தான், இறைவாக்கு அல்ல.

புத்தகத்தில் உள்ள தாள்களில் எழுத்து உருவத்தில் எழுதப்பட்டிருப்பது தான் இறைவாக்கு.

அதை வாசிக்கும் போது கண்ணுக்கு இறைவாக்கின் உருவம் தெரியும்.

மனதில் இறைவாக்கு பதியும்."

"அதாவது கண்ணுக்குத் தெரிவது உருவம்,

 மனதில் பதிவது இறைவாக்கு அப்படித்தானே."

"'அப்படியே தான். ஆனால் நான் சொல்ல வருவது புரிகிறதா?"

"புரிவது போல் தெரிகிறது."

"'புரிந்ததைச் சொல்லுங்கள் பார்ப்போம்."

"இயேசுவின் சுரூபத்தைப் பார்க்கும்போது கண்ணுக்குத் தெரிவது உருவம்,

மனதில் பதிவது இறைமகன் இயேசு.

அதாவது கண்ணுக்குத் தெரிகின்ற சுரூபத்தை நீங்கள் வழிபடவில்லை,

மனதில் பதிகிற இறைமகனை வழிபடுகிறீர்கள்.

இதுதானே நீங்கள் சொல்ல வருவது?"

"'கோவிலில் சுரூபங்கள் வைத்திருப்பது அவைகள் யாரைக் குறிக்கின்றனவோ அவர்களை வழிபடுவதற்காகத்தான்.  

இயேசுவின்  சுரூபத்தின் பாதத்தில் மலர்மாலை வைத்தால்

இயேசுவின் பாதத்தில் தான் மலர்மாலை வைக்கிறோம்.

இயேசுவின்  சுரூபத்தின் பாதத்தில் முத்தம் கொடுத்தால்,

இயேசுவுக்கே முத்தம் கொடுக்கிறோம்.

நீங்கள் உங்கள் மனைவியின் புகைப்படத்திற்கு முத்தம் கொடுத்தால் 

 அது உங்கள் மனைவிக்குத் தானே."

"ஆனால் பார்ப்பவர்களுக்கு அப்படித் தெரியாதே?"

"'வழிபாட்டின் போது வழிபடுபவர்களின் இதயமும், இயேசுவின் இதயமும் இணைகின்றன.

பார்ப்பவர்களுக்கு இதயங்கள் தெரியாது.

நீங்கள் உங்கள் மனைவியோடு வெளியூருக்கு போயிருக்கிறீர்களா?"

"போயிருக்கிறேன்."

"'அங்கு உள்ளவர்களுக்கு உங்களோடு வருவது உங்கள் மனைவி என்பது தெரியாதே."

"தெரிய வேண்டிய அவசியம் இல்லையே."

"'நாங்கள் வழிபாடு செய்வது உங்களைத் திருப்திப் படுத்துவதற்காக அல்ல.

நாங்கள் செய்வது சரி என்று இறைவனுக்குத் தெரியும்."

"ஆனால் திவ்ய நற்கருணையை ஆராதிக்கிறீர்கள்?"

"'இயேசுவின் சுரூபத்தில் இயேசு இல்லை.

ஆனால் திவ்ய நற்கருணையில் இயேசு இருக்கிறார்.

இயேசு தான் திவ்ய நற்கருணை.

திவ்ய நற்கருணையை ஆராதிக்கும் போது இயேசுவைத் தான் ஆராதிக்கிறோம்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

Sunday, July 9, 2023

"என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள்: ஆயினும் நீர் வந்து அவள்மீது உமது கையை வையும்: அவள் உயிர் பெறுவாள்"(மத்.9:18)

, "என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள்: ஆயினும் நீர் வந்து அவள்மீது உமது கையை வையும்: அவள் உயிர் பெறுவாள்"
(மத்.9:18)

மகளுக்காக வேண்ட வந்த தந்தையின் வேண்டுதலில் இருக்கும் ஆழமான விசுவாசத்தை நினைத்துப் பார்ப்போம்.

இயேசுவிடம் வேண்டுவதற்காக அவன் வரும்போது அவனுடைய எண்ண ஓட்டம் இப்படி இருந்திருக்க வேண்டும்:

"என் மகள் இறந்து விட்டாள்.

 எனது வேண்டுதலின்படி இயேசு வருவார்.

 இறந்த எனது மகள் மீது கை வைப்பார். எனது மகள் உயிர் பெற்று எழுவாள்."

விசுவாசத்தின் ஆழம் காரணமாக மிக உரிமையோடு இயேசுவிடம் வந்து,

"ஆண்டவரே, இறந்த எனது மகள் மீது கையை வையும்."

என்று வேண்டும்போதே 

தனது மகள் உயிர் பெற்று எழுவாள் என்று உறுதியாகக் கூறுகிறான்.

அரசுத் தேர்வு எழுதப் போகும் ஒரு மாணவன் தேர்வுக்கு முன்னால் 
இறைவனிடம் இப்படி வேண்டினால் ஆண்டவர் எதிர்பார்க்கும் விசுவாசம் அவனிடம் இருப்பதாக கூறலாம்.

"ஆண்டவரே நான் தேர்வு எழுதப் போகிறேன்.

 நீர் என்னோடு வருகிறீர்.

 உமது அருகில் அமர்ந்து கொண்டே தேர்வு எழுதுவேன்.

 தேர்வில் உறுதியாக வெற்றி பெறுவேன்."

நமது ஒவ்வொரு செயலின் போதும் நமது எண்ண ஓட்டம் விசுவாசம் கலந்ததாக இருக்க வேண்டும்.

"இயேசுவே, நான் இப்போது செய்யப் போகிற செயலின் போது நீர் என்னோடு இருக்கிறீர்.

 என்னை வழி நடத்துகிறீர்.

 நான் அதன் வழியே நடந்து வெற்றி பெறுவேன்."

இத்தகைய எண்ணங்களோடு வாழ்பவன் வாழ்நாள் முழுவதும் விசுவாச வாழ்வு வாழ்கிறான்.

அதாவது விசுவாசத்தையே வாழ்வாக்குகிறான்.

பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண்ணின் செபமும் இப்படித்தான் இருக்கிறது.

 "நான் இயேசுவின் போர்வையைத் தொட்டாலே குணம் பெறுவேன்" என்று கூறிக்கொண்டே

அவரது போர்வையின் விளிம்பை தொடுகிறாள்.

பூரண குணமடைகிறாள்.

இயேசு திரும்பி, அவளைப் பார்த்து,

 "மகளே, தைரியமாயிரு: உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்கிறார்.

இயேசுவின் கூற்றிலிருந்து அவர் இப்படிப்பட்ட விசுவாசத்தைத் தான் எதிர்பார்க்கிறார் என்பது தெரிகிறது.

நம்மில் அநேகர் தங்களது வேண்டுதல் நிறைவேறுவதற்காக வேளாங்கண்ணி ஆலயத்திற்குச் செலவழித்து செல்கிறார்கள்.

அங்கு ஒரு வாரம் தங்கி வேண்டுகிறார்கள்.

அவர்களுக்கு ஆழமான விசுவாசம் இருந்தால் செலவில்லாமலே வேண்டியது கிடைக்கும்.

"அம்மா, வேளாங்கண்ணி அன்னையே,

 எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

 நீங்கள் எனக்காக உங்களது திருமகனிடம் வேண்டி,

 நான் வேண்டுவதை பெற்றுத் தருவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்."

இந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இராமல் ஆழமான விசுவாசத்திலிருந்து பிறந்தவைகளாக இருந்தால் 

செலவில்லாமல் உள்ளூர்க் கோவிலுக்கு நடந்து சென்று வேண்டினாலும்

வேண்டுதல் உறுதியாக நிறைவேறும்.

பாவூர்சத்திரத்திலிருந்து வேண்டினாலும்,

வேளாங்கண்ணிக்கு சென்று வேண்டினாலும்

வேண்டுதல் ஒன்று தான்.

பலன் தருவது வேளாங்கண்ணிக்கு செல்வதல்ல

விசுவாசத்தோடு வேண்டுவது தான்.

இயேசு எப்போதும் நம்மோடு தான் இருக்கிறார் என்ற ஆழமான விசுவாசத்தோடு எதைச் செய்தாலும் அதற்கு இயேசுவின் உதவி உறுதியாகக் கிடைக்கும்.

சிறு குழந்தைக்கு எந்த ஊரில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல,

 தாயின் மடியில் இருப்பது தான் முக்கியம்.

நாம் எப்போதும் ஆழமான விசுவாச உணர்வோடு இயேசுவின் மடியில் இருந்து வாழ்ந்தால் 

நமக்கு வேண்டுவன எல்லாவற்றையும் நாம் கேட்காமலேயே நமக்குத் தருவார்.

நாம் கேட்பதற்கு முன்னமே நமக்குத் தேவையானது இன்னது என்று நமது தந்தைக்குத் தெரியும்.

எப்போதும் அவருடைய பிரசன்னத்தில் நாம் வாழ்ந்தால் 

நமது தந்தை நமக்குத் தேவையானதைத் தந்து கொண்டேயிருப்பார்.

நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

தந்தையின் நினைவோடு வாழ வேண்டும்.

"என்னோடு எப்போதும் வாழும் என் விண்ணகத் தந்தையே,

என்னை உம்மை விட்டு பிரிய விடாதேயும்.

அதுவே எனக்குப் போதும்."

ஆற்றில் பயணம் செய்பவன் தண்ணீரைத் தேடி வேறு எங்கும் போக வேண்டியதில்லை.

எல்லாம் உள்ள இறைவனோடு வாழ்பவன் எதைத் தேடியும் வேறு எங்கும் போக வேண்டியதில்லை.

லூர்து செல்வம்.

Saturday, July 8, 2023

"என் நுகம் இனிது, என் சுமை எளிது."(மத்.11:30)

"என் நுகம் இனிது, என் சுமை எளிது."(மத்.11:30)

ஆன்மீக வாழ்க்கையாக இருந்தாலும் சரி, 

உலகைச் சார்ந்த வாழ்க்கையாக இருந்தாலும் சரி 

கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை இல்லை.

இயேசுவைப் பின்பற்றும் நாம் உலகில் வாழ்ந்து கொண்டிருப்பது ஆன்மீக வாழ்க்கை.

ஆன்மீகப் பயணத்தில் நமக்கு ஏற்படும் கஷ்டங்களை வேறு வழி இல்லாமல் நாமே சுமக்க வேண்டிய சுமையாக நினைத்துக் கொண்டு பயணித்தால் 
அப்பயணம் மிகவும் கஷ்டமானதாக இருக்கும்.

'வேறு வழி இல்லாமல்' என்ற எண்ணத்தை அகற்றிவிட்டு, 

நாமே மனம் உவந்து இயேசுவுக்காக அவற்றைச் சுமந்தால் அந்தச் சுமை நமக்கு ஆன்மீக மகிழ்ச்சியைத் தரும்.

நமது இல்லத்தில் நம்முடைய தாய் நமக்காக முகமலர்ச்சியோடு எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள் என்பதை நாம் அனுபவப் பூர்வமாக பார்த்திருக்கிறோம்.

நாம் நேசிப்பவர்களுக்காக நாமே தேடிச் சென்று கஷ்டங்களை அனுபவித்திருக்கிறோம்.

இந்த உண்மையை மனதில் வைத்துக் கொண்டு ஆண்டவரது வார்த்தைகளை தியானிப்போம்.

சுமக்க முடியாமல் கஷ்டங்களைச் சுமந்து செல்லும் நம்மை பார்த்து ஆண்டவர் சொல்கிறார்,

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்."

நம் மீது கொண்ட அன்பின் மிகுதியால் இயேசு கூறும் வார்த்தைகள் இவை.

வயலிலிருந்து நெல் மூடைகளை வீட்டுக்கு எடுத்துச் செல்ல மாட்டு வண்டிகளை பயன்படுத்துகிறோம்.

15 மூடைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

அவற்றை இரண்டு மாடுகளின் மேல் ஏற்றினால் அவற்றால் சுமக்க முடியாது.

15 மூடைகளையும் வண்டியில் ஏற்றி, வண்டியின் நுகக்கால்களை மாடுகளின் கழுத்தில் மேல் வைத்து,

பூட்டாங்கயிறு கொண்டு கட்டிவிட்டால்

வண்டியில் எவ்வளவு சுமையை ஏற்றினாலும் மாடுகள் எளிதாக வண்டியை இழுத்துச் செல்லும்.

ஒரு சாதாரண குடிமகனுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக,
ஒரு விவசாயியின் அனுபவத்தை இயேசு தனது போதனையில் பயன்படுத்துகிறார்.


"சுமக்க முடியாமல் சிலுவையைச் சுமந்து கொண்டு செல்லும் என் மக்களே என்னிடம் வாருங்கள்.

உங்கள் சுமையை என் முன் இறக்கி வையுங்கள்.

உங்கள் சுமையை நான் என் மேல் ஏற்றிக் கொள்கிறேன்.
(வண்டியில் சுமையை ஏற்றுவது போல.)

உங்கள் கழுத்தில் எனது
 நுகக்காலை மட்டும் வைக்கிறேன்.

என் நுகம் இனிது.

உங்கள் சுமை முழுவதும் என் மேல், என் நுகம் மட்டும் உங்கள் மேல்.

மிக எளிதாக நீங்கள் என்னை இழுத்துக் கொண்டு போகலாம்.

உங்கள் சுமையை நான் சுமப்பதால் உங்களுக்கு விண்ணகப் பாதையில் நடப்பது எளிதாக இருக்கும்."

நமது வாழ்வில் எது நேர்ந்தாலும்,

இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி,

அப்படியே அதை இயேசுவிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

இன்பம் ஆன்மீக இன்பமாக மாறிவிடும்.

துன்பம் சிலுவையாக மாறி நாம் சுமப்பதற்கு மிக எளிதாக இருக்கும்.

நமது வாழ்வில் நமக்கு எது கிடைத்தாலும் நமது அன்பர்களோடு அவற்றைப் பகிர்ந்து கொள்வது போல,

நமது ஆன்மீக அனுபவங்களை எல்லாம் இயேசுவோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஆன்மீகத்தில் நமது அன்பர் அவர் ஒருவரே.

நமது அயலானை அவர் மூலமாகத்தான் நேசிக்க வேண்டும்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அவர் மூலமாகத்தான் நேசிக்க வேண்டும்.

கணவன் மனைவி அன்பு கூட அவர் மூலமாகத்தான் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

உறவுகளை அவர் மூலமாகப் பகிர்ந்து கொள்ளும் போது பாவத்தால் உள்ளே நுழைய முடியாது.

பகிர்ந்து கொள்ளப்படும் அன்பு பரிசுத்தமானதாக இருக்கும்.

இயேசு பரிசுத்தராக இருப்பதால் அவர் வழியே நடைபெறும் எல்லா அனுபவங்களும் பரிசுத்தமானவைகளாகவே இருக்கும்.


கையில் விளக்கோடு நடந்தால் நமது பாதை ஒளி நிறைந்ததாக இருப்பது போல,

நாம் இயேசுவோடு நடந்தால் நமது ஆன்மீகப் பாதை பரிசுத்தமானதாக இருக்கும்.

பரிசுத்தமான பாதை வழியே நடந்தால் பரிசுத்தமான விண்ணக வாழ்வுக்குள் நுழைவோம்.

இயேசுவோடு நடப்போம், அவரோடு என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Friday, July 7, 2023

"பழைய ஆடையில் கோடித் துணியை எவனும் ஒட்டுப்போடுவதில்லை. ஏனெனில், அந்த ஒட்டு ஆடையைக் கிழிக்கும், கிழியலும் பெரிதாகும்." (மத்.9:16)

,"பழைய ஆடையில் கோடித் துணியை எவனும் ஒட்டுப்போடுவதில்லை. ஏனெனில், அந்த ஒட்டு ஆடையைக் கிழிக்கும், கிழியலும் பெரிதாகும்." (மத்.9:16)

கடவுளைத் தவிர மற்ற அனைத்தும் வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டவை.

கடவுள் நிறைவானவர். (Perfect)

ஆகையால் அவரால் வளரவோ மாறவோ முடியாது.

இறைமகன் மனிதரைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக மனவுரு எடுத்தபோது பாவத்தைத் தவிர மற்ற அனைத்து மனித பண்புகளையும் ஏற்றுக் கொண்டார்.

மாறவே முடியாத கடவுள் மனித சுபாவத்தில் மாற்றங்களை ஏற்றுக் கொண்டார்.

கடவுள் மனிதனாகப் பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார், மரித்தார், உயிர்த்தார்.

இயேசு மெய்யாகவே கடவுள்.
Jesus is fully God.

இயேசு மெய்யாகவே மனிதன்.
Jesus is fully Man.

இறைமகன் கடவுள்.

கடவுளால் மாற முடியாது.

இறைமகன் மனிதனாக மாறவில்லை, 

மனிதனாகப் பிறந்தார்.

ஒரு குழந்தை வளர்ந்து வாலிபனாக மாறுகிறது. வாலிபனாக மாறிய பின் அது குழந்தை இல்லை.

இறைமகன் மனிதனாகப் பிறந்த பின்னும் மெய்யாகவே கடவுள். 

கடவுள் பாடுகள் பட்டது மனித சுபாவத்தில்.

கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

கடவுள் குழந்தையாக இருந்தார், மனித சுபாவத்தில்.


கடவுள் வாலிபனாக வளர்ந்தார்,
மனித சுபாவத்தில்.

கடவுள் பாடுகள் பட்டார், மனித சுபாவத்தில்.

கடவுள் மரித்தார், மனித சுபாவத்தில்.

கடவுள் உயிர்த்தார், மனித சுபாவத்தில்.

கடவுள் மனிதனாக பிறந்திருக்காவிட்டால் அவரால் பாடுகள் படவோ, மரிக்கவோ முடியாது.

நமக்காகப் பாடுகள் படவும், மரிக்கவுமே அவர் மனிதனாகப் பிறந்தார்.

இறைமகன் மனிதனாகப் பிறக்குமுன் இருந்த மனித வாழ்க்கையைப் பழைய ஏற்பாடு என்கிறோம்.

இறைமகன் மனிதனாகப் பிறந்தபின் அவரது போதனைப்படி வாழப் படுகின்ற மனித வாழ்க்கையைப் புதிய ஏற்பாடு என்கிறோம்.

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும்,

நமது பாவங்களுக்காக நாம் செய்யும் பரிகார முயற்சிகள் இறைவன் முன் செல்லுபடியாகவும் (To become valid)

இறைமகன் நமக்காக பாடுகள் பட்டு மரித்தார்.

பழைய ஏற்பாட்டு மக்களும் நோன்பு இருந்தார்கள். ஆனால் அவர்கள் இருந்த நோன்பு இயேசு சிலுவையில் பலியான பின்பு தான் செல்லுபடி ஆயிற்று.

அதாவது இயேசு சிலுவையில் பலியான பின்பு தான் அவர்களுடைய நோன்பின் விளைவாக விண்ணகம் செல்ல முடிந்தது.

இயேசு சிலுவையில் பலியாகும் வரை பழைய ஏற்பாட்டு நீதிமான்கள் பாதாளத்தில் தங்கள் பாவங்களுக்காக பலியாகப் போகும் இயேசுவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.


இயேசு சிலுவையில் மரித்த வினாடியில் பாதாளத்தில் இறங்கி அங்கு காத்துக் கொண்டிருந்த பழைய ஏற்பாட்டு நீதிமான்களுக்கு விண்ணக வாழ்வை அளித்தார்.

அரசின் அனுமதிக்குப்பின் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் தான் செல்லும்.

அதேபோல் தான் மக்களின் நோன்பு இயேசுவின் பலிக்குப் பிறகுதான் செல்லும்.

அருளப்பருடைய சீடர்கள் இயேசுவிடம் வந்து, 

"நாங்களும் பரிசேயரும் அடிக்கடி நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்றார்கள்.

அருளப்பருடைய சீடர்களும், பரிசேயரும் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாண சட்டப்படி நோன்பு இருந்தார்கள்.

அவர்களின் நோன்பு இயேசு சிலுவையில் மரிக்கும்போது தான் செல்லுபடியாகும்.

"உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?"

என்ற கேள்விக்குப் பதிலாக 
இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்குமளவும், அவன் தோழர்கள் துக்கம் கொண்டாடலாமா ? மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும்: அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்." என்றார்.

அதாவது 

மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும்போது,

அதாவது இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின்,

 அவர்கள் நோன்பு இருப்பார்கள்."

இயேசுவின் சிலுவை மரணம் தான் மனிதனின் எல்லா தவ
 முயற்சிகளுக்கும் பலனை கொடுக்கும்.

இயேசுவின் சிலுவை மரணத்துக்கப்பின்,

அதாவது புதிய ஏற்பாட்டில் அதன் முறைப்படி பலனோடு நோன்பு இருப்பார்கள்.

அவர்கள் இருக்கும் நோன்புக்கு பாவ மன்னிப்பும், விண்ணகத்தில் சம்பாவனையும் கிடைக்கும்.

அருளப்பரின் சீடர்களும், பரிசேயர்களும் உண்மையான முறைப்படி நோன்பு இருந்திருந்தாலும் அவற்றுக்கும் இயேசுவின் மரணத்திற்கு பின்பு தான் பலன் கிடைக்கும்.

இயேசு பழைய ஏற்பாட்டை பழைய ஆடைக்கு ஒப்பிடுகிறார்.

பழைய ஆடைக்கு ஒட்டுப் போட வேண்டுமென்றால் ஒரு பழைய துணியையே பயன்படுத்த வேண்டும்.

பரிசேயர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆகவே அவர்கள் பழைய ஏற்பாட்டின் சட்டப்படி நோன்பு இருந்தார்கள்.

ஆனால் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொண்ட அவருடைய சீடர்கள் புதிய ஏற்பாட்டில் இரக்கத்தின் சட்டப்படி 
வாழவிருந்தார்கள்.

புதிய ஏற்பாட்டில் இரக்கத்தின் சட்டம் இறையன்பையும், பிறரன்பையும்,

 இயேசுவால் நிறுவப்படவிருக்கும் ஏழு தேவதிரவிய அனுமான வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டது.

தேவதிரவிய அனுமான வாழ்க்கை 

பாவ மன்னிப்பையும், 
பாவப்பரிகாரத்தையும், 
அதற்காக ஒப்புக்கொடுக்கப்படுகிற திருப்பலியையும், 
ஆன்மீக உணவாகிய திவ்ய நற்கருணையையும் 

அடிப்படையாகக் கொண்டது.

இவற்றின்படி வாழ்வதுதான் உண்மையான நோன்பு.


இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின்புதான் சீடர்கள் இந்த நோன்பு வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள்.

இதைக் குறிக்கவே இயேசு,

"மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும்: அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்." என்றார்.

நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பது இயேசு குறிப்பிட்ட நோன்பு வாழ்க்கை தான்.

உண்ணா நோன்பு இருப்பதுவும் இந்த நோன்பு வாழ்க்கையின் ஒரு அம்சம் தான்.

தேவத்திரவிய அனுமானங்களை பெறாமல் உண்ணா நோன்பு இருந்தால் ஒரு பயனும் இல்லை.

பாவ சங்கீர்த்தனம் செய்யாமல்,

பாவத்தோடு உண்ணா நோன்பு இருந்தால் நமது உடல் மட்டுமல்ல ஆன்மாவும் பட்டினி கிடக்கும்.

நோன்பு வாழ்க்கை வாழ்வதே ஆன்மாவுக்கு இறை அருளாகிய உணவை ஊட்டி வளர்ப்பதற்காகத்தான், பட்டினி போடுவதற்காக அல்ல.

பரிசேயர்கள் திருச்சட்டத்தை எழுத்துப் பூர்வமாக பின்பற்றினார்கள்.

வாய் வழியாக உணவை வயிற்றுக்குள் அனுப்புவதற்குப் பெயர் தான் சாப்பிடுதல்.

உணவை அள்ளி வாயில் போட்டு, அப்படியே விழுங்கும் போது நாம் சாப்பிடும் நிகழ்ச்சியை எழுத்துப் பூர்வமாகப் பின்பற்றுகிறோம்.

ஆனால் இப்படிச் சாப்பிடுவதால் நமது வயிற்றுக்கு எந்த பயனும் இல்லை.

நாம் நாம் வயிற்றுக்குள் அனுப்பிய உணவு சீரணம் ஆகாது.

ஆனால் வாயில் போட்ட உணவை நன்றாக மென்று, 

உமிழ்நீரோடு சேர்த்துக் குழைத்து, 

ருசித்து, 

மெதுவாக விழுங்கும்போது நாம் உணர்வுப் பூர்வமாக சாப்பிடுகிறோம்.

உமிழ்நீரோடு உணவை மெல்லும் போதே உணவு சீரணம் ஆக ஆரம்பித்து விடுகிறது.

வயிற்றில் அது எளிதில் சீரணம் ஆகி அதன் சத்துக்கள் நமது உடலோடு கலக்கும்.

நமது உடல் வளர்ச்சி அடையும்.

சாப்பிடுவது இன்பகரமான அனுபவமாக இருக்கும்.

வெறும் எழுத்துப்பூர்வமாக சட்டத்தை அனுசரித்தால் பாவத்திலிருந்து தப்பிக்கலாம்,

ஆனால் புண்ணியத்தை அடைய முடியாது.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது திருச்சபையின் சட்டம்.

ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குச் சென்று திருப்பலி நேரத்தில் கோயிலில் அமர்ந்து,

திருப்பலி முடிந்தவுடன் வீட்டுக்கு வருபவன் சட்டத்தை எழுத்துப் பூர்வமாக அனுசரித்து விட்டான்.

ஆனால் உணர்வு பூர்வமாக திருப்பலியில் தன்னையும் ஈடுபடுத்தி 

குருவானவரோடு சேர்ந்து, திருப்பலியை ஒப்புக்கொடுத்துவிட்டு,

 இறைவன் நினைவோடு வீட்டுக்கு வந்து,

அன்றைய நாளை ஆண்டவருக்காக வாழ்பவன்தான் உண்மையில் திருப்பலியில் கலந்து கொண்டான். 

எழுத்துப் பூர்வமாக மட்டும், அதாவது ஒப்புக்குச் சட்டத்திற்கு கீழ்ப்படிபவன் ஆன்மீக ரீதியாக எந்தப் பயனும் அடைவதில்லை.

 பரிசேயர்கள் எழுத்துப் பூர்வமாக மட்டும் சட்டத்துக்கு கீழ்ப்படிந்தார்கள்.

ஓய்வு நாளில் வேலை செய்வதில்லை.

இறைவனுக்காக வாழவில்லை.

இதை இயேசு விரும்பவில்லை.

உணர்வுப் பூர்வமாக ஓய்வு நாளில் இறைவனுக்காக, பிறர் பணி செய்து வாழ வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.

ஆகவேதான் எழுத்துப் பூர்வமாக மட்டும் பரிசேயர்கள் இருந்த நோன்பை இயேசு புகழவில்லை.

தனது சீடர்கள் தனது மரணத்திற்குப் பின் தனக்காக நோன்பு இருப்பார்கள் என்ற பொருள்பட

"மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும்: அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்."

என்று கூறுகிறார்.

நாம் எதைச் செய்தாலும் இயேசுவுக்காகச் செய்வோம்.

இரக்கத்தின் தேவனாகிய இயேசுவுக்காக நாம் செயல் புரிந்து வாழும் போது,

அவரது இரக்கத்துக்குத் தகுதி உள்ளவர்கள் ஆகிறோம்,

புதுத் துணியைப் புது துணியோடு சேர்த்து தைப்பது போல,

புதிய ஏற்பாட்டில் வாழும் நாம் புதிய ஏற்பாட்டின் தேவனோடு இணைந்து வாழ்வோம்.
.
இவ்வுலகில் ஏற்படும் இணைப்பு நித்திய காலமாக தொடரும்.

லூர்து செல்வம்.

Thursday, July 6, 2023

''உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்பதேன் ?" (மத்.9:11)

"உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்பதேன் ?" (மத்.9:11)

நல்ல ஆசிரியர் எப்போதும் படிப்பில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களோடு தான் இருப்பார், அவர்களின் நிலையை உயர்த்துவதற்காக.

நல்ல மருத்துவர் எப்போதும் நோயாளிகளுடன்தான் இருப்பார், அவர்கள் நோய் நீங்கி குணம் பெறுவதற்காக. 

இயேசு எப்போதும் பாவிகளுடன்தான் இருப்பார், அவர்களது பாவங்களை மன்னித்து அவர்களை பரிசுத்தர்களாக மாற்றுவதற்காக.

விண்ணுலகிலிருந்து இயேசு மண்ணுலகுக்கு இறங்கி வந்தது பாவிகளைத் தேடித்தான்.

ஒரு ஊருக்கு புதிதாக மருத்துவமனை வந்தால் முதலில் மகிழ்ச்சி அடைவது நோயாளிகள்தான்.

மனித உரு எடுத்த இயேசுவை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டியது பாவிகள்தான்.

நமது முதல் பெற்றோரின் பாவத்தின் காரணமாக மனு குலம் முழுவதுமே பாவத்தில் மூழ்கிய குலமாக மாறிவிட்டது.

அதனால் தான் இயேசு தனது சீடர்களிடம்,

" உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்" என்றார்.

நமக்கு அறிவிக்கப்படும் நற்செய்தியைக் கேட்டு அதன்படி வாழ வேண்டியது நம் அனைவரின் கடமை.

இயேசு எப்போதும் நமது அனைவரோடும் இருக்கிறார். 

விசுவாசம் அற்றவர்களோடு 

நாம் அவர்களுக்கு அளிக்கும் நற்செய்திப் போதனை மூலம் அவர்களுக்கு விசுவாசத்தை இலவசமாக அளிப்பதற்காக.

பாவிகளோடு, 

அவர்களுக்கு மனஸ்தாபத்தைக் கொடுத்து, 

பாவங்களை மன்னித்து, அவர்களைப் பரிசுத்தர்களாக மாற்றுவதற்காக.

பரிசுத்தர்களோடு 

அவர்களைப் பரிசுத்தத்தனத்தில் வளர்ப்பதற்காக.

மரணம் அடைபவர்களோடு

 அவர்களை விண்ணக வாழ்வுக்கு அழைத்துச் செல்வதற்காக.

மனிதர்கள் சென்மப் பாவத்தோடு உற்பவிப்பதால் அவர்கள் அனைவரையும் பாவிகள் என்று அழைக்கின்றோம்.

மனிதர்கள் தாங்கள் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சுகம் இல்லாதிருப்பவன் அதை ஏற்றுக் கொண்டால்தான் சுகம் பெற வழி தேடுவான்.

சுகம் அடைந்த பிற்பாடும் தங்களின் சுகமின்மைக்குக் காரணமாக இருந்தவற்றை மறந்து விடக்கூடாது.

அப்போதுதான் அந்தக் காரணங்கள் திரும்பவும் தங்கள் வாழ்வில் புகுந்து விடாதபடித் தடுக்க முடியும்.

பாவங்களிலிருந்து விடுதலை பெற்றவர்களும் தங்களது பழைய நிலையை மறந்து விடக்கூடாது.

இது அவர்களைப் பழைய நிலைக்குத் திரும்பாதவாறு பாதுகாக்க உதவும்.

பாவத்திற்கானக் காரணங்களை மறக்காமல் வாழ்ந்தால்தான் 
திரும்பவும் அவற்றிற்கு இடம் கொடுக்க மாட்டோம்.

லூசிபர் பரிசுத்த நிலையில் இருந்த போது கொண்ட கர்வத்தினால்தான் சாத்தானாக மாறினான்.

பரிசுத்த நிலையை அடைந்தவர்கள் அடையாதவர்களோடுத் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துத் தங்களைப் பற்றி பெருமையாக நினைத்தால் அதுவே பாவமாகிவிடும்.

தற்பெருமை தலையான பாவங்களுள் முதன்மையானது.

ஆகவே அதற்கு இடம் கொடாமல் தங்கள் பழைய நிலையை எண்ணித் தாழ்ச்சியோடு வாழ வேண்டும்.

தங்கள் வாழ்நாள் முழுவதும்,

"இயேசுவே, பாவியாகிய என் மேல் இரக்கமாயிரும்"

என்ற மனவல்லவ செபத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

அது நாம் திரும்பவும் பாவத்தில் விழாதபடி நம்மைப் பாதுகாக்கும்.

இயேசு பாவிகளாகிய நம்மைத் தேடியே உலகத்திற்கு வந்தார் என்றும்,

எப்போதும் நம்முடனே இருக்கிறார் என்றும் ஏற்றுக்கொண்டு,

எப்போதும் அவர் நினைவிலேயே வாழ வேண்டும்.

நமக்கு மீட்பும், நித்திய வாழ்வும் உறுதி.

லூர்து செல்வம்.

Tuesday, July 4, 2023

"தம் நாட்டை விட்டு அகலுமாறு அவரை வேண்டினர்."(மத்.8:34)

"தம் நாட்டை விட்டு அகலுமாறு அவரை வேண்டினர்."(மத்.8:34)

கதரேனர் நாட்டில் பேய்பிடித்த இருவரை இயேசு குணமாக்கினார்.

பேய்கள் சற்றுத் தொலைவில் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்த
பன்றிகளுக்குள் புகுந்தன.

பன்றிகள் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் மடிந்தன.

பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடிப்போய் நகருக்குச் சென்று எல்லாவற்றையும், பேய்பிடித்தவர்களைப்பற்றிய செய்தியையும் அறிவித்தார்கள்.

இயேசுவைப் பார்க்க வந்த நகர மக்கள்  பேய்பிடித்தவர்களைக் குணமாக்கியதற்காக 
அவருக்கு நன்றி சொல்வதற்கு பதிலாக  

அவரைத் தம் நாட்டை விட்டு அகலுமாறு  வேண்டினர்.

ஏன் என்று யூகிக்க முடிகிறது.

இரண்டு மனிதர்களை குணப்படுத்துவதற்காக,

கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்த  பன்றிகளை இழக்க வேண்டியிருந்தது

அந்த ஊர் மக்களுக்குப் பிடிக்கவில்லை. 

 அழியாத ஆன்மாக்களால் வாழ்ந்து வந்த மக்களை விட

இந்த உலகை சார்ந்த அழிந்து போகக்கூடிய பன்றிகளாகிய சொத்து அவர்களுக்குப் பெரியதாக தெரிந்திருக்கிறது.

இயேசுவை ஊருக்குள் விட்டால் மக்களுக்கு நன்மை செய்வதற்காக அவர்களது உலக சொத்துக்களை அழித்து விடுவார் என்ற பயம் இருந்திருக்க வேண்டும்.

இயேசு எங்கும் அப்படி செய்யவில்லை.

சென்ற இடமெல்லாம் மக்களுக்கு நன்மை மட்டுமே செய்தார்.

அவரைப் பற்றித் தவறாக நினைத்து அவரை தம் நாட்டை விட்டு அகலுமாறு அவரை வேண்டியிருக்க வேண்டும்.

நாமும் கூட அனேக சமயங்களில் அந்த ஊர் மக்களைப் போல் நடந்து கொள்கிறோம்.

இந்த உலகப் பொருள்களை நமது பயன்பாட்டுக்காகத் தான் இறைவன் படைத்திருக்கிறார்.

'நமது'  என்ற வார்த்தை கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து மக்களையும் குறிக்கும்.

நாம் பயன்படுத்தும் பொருள்கள் நமது கையை விட்டுப் போய்விட்டால் அவை அழிந்துவிட்டன என்று அர்த்தம் அல்ல.

நம்மைப் போல வேறு  யாராலும் அவை பயன்படுத்தப்படும்.

நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற பொருட்களைத் தான் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நாம் வாசித்த புதுமையில் கூட,

கடவுள் என்ற வகையில் மனிதர்களைப் போலவே பன்றிகளும், அவை விழுந்து மடிந்த கடலும், கடலில் வாழும் பிராணிகளும்  அவருக்கே சொந்தம்.

பன்றிகள் உயிரோடு இருந்திருந்தால் அவைகளை மேய்த்த மனிதர்கள் சாப்பிட்டிருப்பார்கள்.

கடலில் விழுந்த  பன்றிகளை அங்கு வாழ்ந்த மீன்கள் சாப்பிட்டிருக்கும்.

மனிதர்களைப் பராமரிக்கும் கடவுள் தான் மீன்களையும் பராமரிக்கிறார்.

 மீன்களும் மனிதர்களுக்குத் தான் உணவாகப் போகின்றன.

இப்பொழுது நம்மை எடுத்துக் கொள்வோம்.

நாம்  இயேசுவை முழுமையாகப் பின்பற்றுவதற்காக நாம் பயன்படுத்தும் உலகப் பொருட்களை தியாகம் செய்து 

அவர் பின்னால் போக வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்.

நாம் தியாகம் செய்த பொருட்கள் வீணாகப் போய்விடப் போவதில்லை.

மற்றவர்களால் பயன்படுத்தப்படும்.

உதாரணத்திற்கு ஒரு பெற்றோருக்கு 3 பிள்ளைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

அவர்களில் ஒருவர் தேவ அழைத்தலை ஏற்று, தனக்கு உரிய தனது பெற்றோரின் சொத்துக்களைத் தியாகம் செய்து குருவானவர் ஆகிவிடுகிறார்.

அவர் தியாகம் செய்த சொத்துக்கள் அழிந்து போவதில்லை.

அவை அவரது சகோதரர்களால் பயன்படுத்தப்படும்.

ஒருவர் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக ஒரு நாள் நோன்பு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அதனால் மீதமாக உணவை யாராவது அயலானுக்குக் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் நமது நோன்பு முழு பலன் தரும்.

இன்று தியாகம் செய்த உணவை நாளை நாமே சாப்பிட்டு விட்டால் நமது தியாகத்திற்கு அர்த்தமே இல்லை.

இவ்வுலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் அனைவருக்கும் சொந்தம்.

நாம் நமது கையில் உள்ள பொருள்கள் நமக்குச் சொந்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் நாம் அவற்றின் காவலாளிகள் தான்.

அவற்றை நாம் பயன்படுத்துவது போலவே நமது அயலானும் பயன்படுத்த அனுமதித்தால் தான் நாம் அயலானுக்குப் பணி புரிய முடியும்.

அவற்றை நேரடியாக நமது அயலானுக்குக் கொடுக்க முடியாவிட்டாலும் 

தர்ம நிறுவனங்களின் வழியே கொடுக்க வேண்டும்.

"நான் படித்தேன்,
 நான் உழைத்தேன்,
 நான் சம்பாதித்தேன்,
 அனைத்தும் எனக்குதான் சொந்தம்"

 என்ற எண்ணம் யாருக்கும் இருக்கக் கூடாது.

நமது உழைப்பினால் நமக்குக் கிடைக்கும் பொருட்களில் ஒரு பகுதியை அயலானுக்கு உதவியாகக் கொடுக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

நமது அயலானுக்குக் கொடுப்பதை உண்மையில் இயேசுவுக்கே கொடுக்கிறோம்.

நமக்கு உரியதை நமது அயலானுக்குக் கொடுக்க மறுத்தால்

நாம் கதரேனர் நாட்டு மக்களைப் போல  நம்மை விட்டு அகலுமாறு இயேசுவை  வேண்டுகிறோம். 

இயேசுவின் போதனைகளையும், அவரது வாழ்நாளில் நிகழ்ந்தவைகளையும்

நற்செய்தி நூல்களில் அவற்றின் ஆசிரியர்கள் எழுதி வைத்திருப்பது அவர்களது பொழுது போக்கிற்காக அல்ல,

அவற்றை நாம் வாசித்து ஆன்மீகப் பலன் பெறுவதற்காகத் தான்.

இயேசுவுக்காக நாம் செய்யும் தியாகங்களின் மூலமாகத்தான் நாம் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி அடைய முடியும்.

இவ்வுலகில் நாம் தியாகம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் 

மறு உலகில் நமக்கு நித்திய பேரின்ப சம்பாவனை உண்டு என்பதை நினைவில் கொள்வோம்.

ஒரு தம்ளர் தண்ணீரை நாம் குடிக்காமல் நமது அயலான் குடிக்கக் கொடுத்தால் அதற்கும் விண்ணகத்தில் சம்பாவனை உண்டு என்று இயேசு சொல்கிறார்.

இயேசு சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்.

இயேசுவுக்காக தியாகம் செய்வது நமக்கு ஒரு இழப்பு அல்ல, நித்திய பேரின்ப சம்பாத்தியம்.

"இயேசுவே எம்மோடு தங்கும்.

உமக்காக உம்மைத் தவிர வேறு எல்லாவற்றையும் இழக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நீர்தான் எங்களுக்கு எல்லாம். 

நீர் முழுவதும் எங்களுக்குச் சொந்தம்,

 நாங்கள் முழுவதும் உமக்கு சொந்தம்."

லூர்து செல்வம்.

Monday, July 3, 2023

"காணாமலே விசுவசிப்பவர்கள் பேறுபெற்றோர்" (அரு.20:29)

"காணாமலே விசுவசிப்பவர்கள் பேறுபெற்றோர்" (அரு.20:29)

 இயேசு உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் தனது அப்போஸ்தலர்களுக்குக் காட்சி அளித்தார்.

அப்போது தோமையார் அவர்களோடு இல்லை.

இயேசுவைக் கண்டதாக அப்போஸ்தலர்கள் கூறிய போது, தோமையார் நம்பவில்லை.

"அவருடைய கைகளில் ஆணியால் உண்டான தழும்பைப் பார்த்து, ஆணிகள் இருந்த இடத்தில் என் விரலையிட்டு, அவர் விலாவில் என் கையையிட்டாலொழிய விசுவசிக்கமாட்டேன்"

எட்டு நாளுக்குப்பின் அப்போஸ்தலர்களுக்குக் காட்சியளித்த இயேசுவை நேரில் பார்த்த பிறகு அவர் விசுவசித்தார்.

அப்போது இயேசு தோமையாரிடம்,

"என்னைக் கண்டதால் நீ விசுவாசங்கொண்டாய்! காணாமலே விசுவசிப்பவர்கள் பேறுபெற்றோர்" என்று கூறினார்.

இயேசுவின் இந்த கூற்றின் அடிப்படையில் தியானிக்கும் போது,

நாம் பேறு பெற்றவர்கள் என்ற உண்மை நமக்கு புரியும்.

அப்போஸ்தலர்கள் இயேசுவால் நேரடியாக அழைக்கப்பட்டு,

மூன்று ஆண்டுகள் அவரோடு தங்கி,

அவர் சென்ற இடம் எல்லாம் அவரோடு சென்று,

அவரது போதனைகளை நேரில் கேட்டவர்கள்.

தான் பாடுகள் பட்டு, மரித்து, மூன்றாவது நாள் உயிர்க்கவிருக்கும் நற்செய்தியை இயேசுவே கூறியதைத் தங்கள் காதுகளால் கேட்டவர்கள்.

அவர்களே இயேசு உயிர்த்ததை உடனே விசுவசிக்கவில்லை.

அவர் அவர்களுக்குக் காட்சியளித்த பிறகுதான் விசுவசித்தார்கள்.

நாம் இயேசு உலகில் வாழ்ந்த காலத்திற்கு 2000 ஆண்டுகளுக்குப் பிறகு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இயேசுவால் நிறுவப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் போதனையைக் கேட்டு,

அவரை நேரில் பார்க்காமலேயே விசுவசித்து வாழ்கிறோம்.

இயேசு திவ்ய நற்கருணை மூலமாக நம்மோடு வாழ்வதையும் விசுவசிக்கிறோம்.

ஆனாலும் நமது விசுவாசம் இயேசு எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கிறதா என்பதைப் பற்றி தியானிக்கக் கடமை பட்டிருக்கிறோம்.

நாம் எல்லோருமே சாப்பிடுகிறோம்.

ஆனாலும் நமக்கு நோய் நொடிகள் வந்து நமது வளர்ச்சியைப் பாதிக்கின்றனவே, ஏன்?

நாம் சாப்பிடுவது உண்மை. ஆனால் சத்துள்ள உணவைப் போதுமான அளவு சாப்பிடுவதில்லை.

ஆகவே நாம் சாப்பிடும் உணவே நமது நோய் நொடிகளுக்கு காரணமாகி விடுகிறது. 

நாம் விசுவசிக்கிறோம் என்பது உண்மைதான்.

ஆனால் எப்படி விசுவசிக்க வேண்டுமோ அப்படி விசுவசிக்காததுதான் நம்முடைய ஆன்மீக வளர்ச்சி இன்மைக்குக் காரணம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு அரிசி பதம். ஒரு அரிசிக்கு பதம். பார்ப்போம்.

"பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தை இறைவனை விசுவசிக்கிறேன்."

ஒவ்வொரு நாளும் பல முறை சொல்கிறோம்.

யாரை விசுவசிக்கிறோம்?

பரலோகத்தையும் பூலோகத்தையும் ஒன்றுமில்லாமைலிருந்து படைத்த இறைவனை நமது தந்தை என்று விசுவசிக்கிறோம்.

ஒரு பிச்சைக்காரனின் மகன் நாளை உணவுக்கு என்ன செய்வது என்று ஏங்குவதில் அர்த்தம் இருக்கிறது.

ஆனால் ஒரு நாட்டின் அரசனின் மகன் நாளை உணவுக்கு என்ன செய்வது என்று ஏங்கினால்

அவனைப் பற்றி என்ன சொல்லுவோம்?

சர்வத்தையும் படைத்த சர்வ வல்லவ கடவுளின் மக்கள் நாம்.

நடைமுறையில் நமது எண்ணங்களையும், பேச்சுக்களையும், செயல்களையும் பார்த்தால் அப்படியா தெரிகிறது?

நாளைக்கு நாம் எப்படி வாழப் போகிறோம்,

நமது தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்யப் போகிறோம்,

நமது கஷ்டங்களில் யார் துணை நிற்கப் போகிறார்

என்றெல்லாம் எண்ணி நாம் கவலைப்படுவதைப் பார்க்கும் போது நம்மைப் பார்க்க சர்வ வல்லவரின் பிள்ளைகள் போலவா தெரிகிறது?

நமது செயல்களைப் பார்க்கும் போது நாம் எல்லாம் வல்ல கடவுளின் பிள்ளைகள் என்று நாம் நம்புவது போல் தெரியவில்லையே!

நமக்கு வேண்டியதைக் கேட்கும்போது மக்களுக்கு உரிய மனப்பாங்குடனா கேட்கிறோம்?

"அப்பா, தாருங்கள்."

என்று கேட்பதற்கும்,

"ஐயா, சாமி 10 பைசா தர்மம் போடுங்கள்"

என்று கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

கர்த்தர் கற்பித்த செபத்தைப் பிள்ளைக்குரிய மன உணர்வுடன் செபித்தால் இது புரியும்.

"இறைமகன் நமக்காக மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, மரித்து நம்மை மீட்டார்." என்று நாம் விசுவசிப்பதாக கூறுகிறோம்.

நமது விசுவாசம் உண்மையானால் பாவங்கள் செய்ய நமக்கு மனது வருமா?

"நமக்காகப் பாடுகள் பட்டார்" என்று நாம் விசுவசிப்பது உண்மையானால்,

அவருக்காகக் கஷ்டங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்குவோமா?

"திவ்ய நற்கருணையில் இயேசு உண்மையாகவே தனது ஆத்மாவோடும் சரீரத்தோடும் இருக்கிறார்"

 என்று நாம் விசுவசிப்பதாகக் கூறுகிறோம்.

நமது விசுவாசம் உண்மையானால் 

அவரை ஒரு தின்பண்டத்தை வாங்குவது போல் வாங்கி வாயில் போட்டு விட்டு,

உடனே நண்பனோடு உரையாட கோயிலை விட்டு வெளியே வருவோமா?

நமது விசுவாசத்தையும், நமது வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்த்தால் ஒரு உண்மை புலனாகும்.

அநேக சமயங்களில் நமது விசுவாசத்திற்கும், நமது வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை என்ற உண்மை தெரியவரும்.

என்று நமது விசுவாசம் வாழ்க்கையாக மாறுகிறதோ 

அன்றுதான் நாம் பேறு பெற்றவர்கள்.

நாம் பேறு பெற்றவர்களா

அல்லது 

பேருக்கு மட்டும் விசுவாசிகளா என்பதைத் தியானித்து அறிவோம்.

பேறு பெற்றவர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, July 1, 2023

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்." (மத்.10:37)

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்." (மத்.10:37)

ஒன்றும் இல்லாமையிலிருந்து நம்மைப் படைத்தவர் கடவுள்.

கடவுள் மட்டுமே நமது முதல் உறவு.

மற்ற உறவுகள் எல்லாம் நாம் படைக்கப்பட்ட பின் ஏற்பட்டவையே.

கடவுள் நமது ஆன்மாவைப் படைத்த பின்னரே நமது பெற்றோருக்கு பிள்ளையாக உற்பவித்தோம்.

எந்தப் பெற்றோருக்கு நாம் பிள்ளையாக உற்பவித்துப் பிறக்க வேண்டும் என்று தீர்மானிப்பவர் கடவுள்.

அன்பு என்னும் தனது பண்பை நம்மோடு பகிர்ந்து கொண்டவர் கடவுள்.

தன்னை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்க வேண்டும் என்று நமக்கு கட்டளை கொடுத்திருப்பவரும் கடவுளே.

எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்க வேண்டும் என்றால்,

நம்மை நாம் நேசிப்பதற்கு மேலாக கடவுளை நேசிக்க வேண்டும்.

நம்மை முழுவதும் கடவுளுக்காகத் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

"உனக்கு கடவுள் வேண்டுமா, உனது உயிர் வேண்டுமா?"

 என்று யாராவது நம்மிடம் கேட்டால் 

நாம் கொடுக்க வேண்டிய பதில்,
"எனக்கு கடவுளே வேண்டும். 

எனது உயிரின் மேல் முழு உரிமையும் உடையவர் கடவுளே.

என் உயிரை நான் நேசிப்பதற்கு மேலாக அதைப் படைத்த கடவுளையே நேசிக்கிறேன்.

கடவுளை நேசிப்பது எனது கடமை மட்டுமல்ல, உரிமையும் கூட.

ஏனெனில் நான் அவரது பிள்ளை."

எனக்குப் பெற்றோரைக் கொடுத்தவரும் கடவுளே.

எனது பெற்றோருக்கும் மேலானவர் கடவுளே.

எனக்கு மற்ற உறவினர்களைக் கொடுத்தவர் கடவுளே.

நான் வாழ்வதற்கென்று உலகையும், அதில் உள்ள அனைத்துப் பொருட்களையும் எனக்குக் கொடுத்தவர் கடவுளே.

ஆகவே எனது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நேராகவும்,

இந்த உலகில் உள்ள அனைத்துப் படைக்கப்பட்டப் பொருட்களுக்கு மேலாகவும் 

நான் கடவுளை நேசிக்க கடமைப்பட்டிருக்கிறேன்."

"உனக்கு இந்த உலகில் நீண்ட நாள் வாழ விருப்பம்.

ஆனால் கடவுளுக்கு நீ உடனே மரித்து விண்ணகம் செல்ல வேண்டும் என்பது விருப்பம்.

நீ நிறைவேற்ற வேண்டியது உனது விருப்பத்தையா, கடவுளின் விருப்பத்தையா?"

"'கடவுளின் விருப்பத்தையே நிறைவேற்ற வேண்டும்.

இந்த உலகில் நான் எவ்வளவு காலம் வாழ வேண்டும் என்று தீர்மானிப்பவர் கடவுளே.

நான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவருடைய தீர்மானமே நிறைவேறும்.

நான் அவருடைய தீர்மானத்தை விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டால் 

எனக்கு பிரதிபலனாக கிடைக்க விருப்பது நித்திய பேரின்ப வாழ்வு."

உலகில் உள்ள அத்தனை பொருட்களையும் நாம் பயன்படுத்துவதற்காகத்தான் கடவுள் படைத்துள்ளார்.

ஆனால் நமது விருப்பப்படியல்ல, கடவுளது விருப்பப்படியே நாம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

நமது ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு செயலும்,

ஒரே வார்த்தையில்,

நமது வாழ்க்கை முழுவதும்

 நமக்காக அல்ல, இறைவனுக்காக மட்டுமே.

அதனால் தான் நமது ஒவ்வொரு செயலையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆரம்பித்து, 

தந்தை, மகன், தூய ஆவியின் மகிமைக்காகச் செய்து,

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் முடிக்க வேண்டும்.

இவ்வுலகில் கடவுளுக்காக வாழ்ந்து,

மறுவுலகில் கடவுளோடு வாழ வேண்டும்.

லூர்து செல்வம்.