Monday, February 14, 2022

"நம்மிடம் அப்பம் இல்லையே" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்."(மாற்கு. 8:16)

"நம்மிடம் அப்பம் இல்லையே" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்."
(மாற்கு. 8:16) 

சில சமயங்களில் அப்போஸ்தலர்களுடைய மனநிலையும், பேச்சும் கொஞ்சம் விசித்திரமாகவே உள்ளது.

அவர்கள் இயேசுவாலேயே நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

தங்களுடைய உடைமைகளை எல்லாம் விட்டு விட்டு அவரைப் பின்தொடர்ந்தவர்கள்.

அவர் சென்ற இடமெல்லாம் அவருடன் சென்றவர்கள்.

மற்ற மக்கள் அவரவர் பகுதிக்கு இயேசு வரும்போது அவரது போதனையைக் கேட்டிருப்பார்கள்,

அவரது புதுமைகளைப் பார்த்திருப்பார்கள்.

ஆனால் அப்போஸ்தலர்கள் இயேசு சென்ற இடமெல்லாம் அவரோடு சென்றதால் அவரது போதனை முழுவதையும்   கேட்டிருப்பார்கள்.

அவரது எல்லா புதுமைகளையும் பார்த்திருப்பார்கள்.

அதுமட்டுமல்ல, மக்களுக்குப் போதித்தபின் இயேசு அப்போஸ்தலர்களுக்குத் தனியாகவும் விளக்கினார்.

ஏனெனில் இயேசு விண்ணகம் எய்தியபின் அவர்கள்தான் நற்செய்தியை உலகம் எங்கும் சென்று அறிவிக்க வேண்டும். 

ஐந்து அப்பங்களை கொண்டு இயேசு 5000 பேருக்கு உணவு அளித்த போதும்,

ஏழு அப்பங்களை கொண்டு 4000 பேருக்கு உணவு அளித்த போதும்,

அவர்கள் இயேசுவுடன்தான் இருந்தார்கள்.

இயேசு இறைமகன் என்றும், யூதர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த  மெசியா என்றும் அவர்களுக்குத் தெரியும்.

தெரிவதனால் மட்டுமே விசுவாசம் ஆகிவிடாது 

தெரிவது அறிவு (Knowledge) மட்டுமே.
விசுவாசம் (Faith) அல்ல.

இன்று கூட  உலகில் பெரும்பாலோருக்கு கடவுள் இருக்கிறார் என்பது தெரியும்.

 ஆனால் எத்தனை பேருக்கு அவர்மேல் விசுவாசம் இருக்கிறது?

நம்மையே எடுத்துக் கொள்வோம். நமக்கு உண்மையான விசுவாசம் இருந்தால் கொரோனாவைக் கண்டு பயப்படுவோமா? 

ஒரு நாள் அப்போஸ்தலர்கள் இயேசுவுடன் கடலில் பயணித்து கொண்டிருந்த போது,

 அப்பம் கொண்டுவர மறந்துவிட்டார்கள். படகில் ஒரே ஓர் அப்பந்தான் இருந்தது.

"நம்மிடம் அப்பம் இல்லையே" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

 இது இயேசுவின் காதில் விழுந்தது.

அவர் அவர்களை நோக்கி,

 "உங்களிடம் அப்பம் இல்லை என்று பேசிக்கொள்வானேன்? இன்னுமா உணரவில்லை? இன்னுமா விளங்கவில்லை?"

என்று கேட்டுவிட்டு ஐந்து அப்பங்களைக்  கொண்டு 5000 பேருக்கும்,

ஏழு அப்பங்களைக்  கொண்டு 4000 பேருக்கும்

உணவு கொடுத்ததை ஞாபகப்படுத்தினார்.

இது அவர்களுக்கு தெரியும்.

 ஆனால் அவர்களிடம் இயேசு எதிர்பார்க்கும் விசுவாசம் இருந்திருந்தால் 

அவர் அவர்களோடு பயணிக்கும்போது உணவைப் பற்றி கவலைப் பட்டிருப்பார்களா?  

அவர் அவர்களை நோக்கி, "இன்னும் உங்களுக்கு விளங்கவில்லையா?" என்றார்.

அதாவது,

"நான் உங்களோடு இருக்கும் போது உங்களது தேவைகளை பற்றி கவலைப்பட தேவையில்லை என்பது உங்களுக்கு இன்னும் விளங்கவில்லையா என்ற பொருளில் கேட்டார்.

இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழும்.

அப்போஸ்தலர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த இயேசு சர்வ வல்லமை உள்ள கடவுள். 

அவர் விண்ணகம் எய்து முன் அவர்களைப் பார்த்து

"பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது, 

அவரது வல்லமையைப் பெற்று

 யெருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்குமே நீங்கள் என் சாட்சிகளாயிருப்பீர்கள்" என்றார்.

ஒரே, ஆனால் இரண்டு வகையான அப்போஸ்தலர்களைப் பார்க்கிறோம்.

பரிசுத்த ஆவியின் வருகைக்கு முந்தியவர்கள், அதாவது இயேசுவின் பயிற்சி காலத்தில் வாழ்ந்தவர்கள்,

பரிசுத்த ஆவியின் வருகைக்கு பிந்தியவர்கள், அதாவது

அவரது வல்லமையைப் பெற்றவர்கள்.

இயேசுவின் பயிற்சி காலத்தில் வாழ்ந்தவர்கள் பயிற்சியின் பலனைப் பெற்றிருந்தது போலவே தெரியவில்லை.

பயிற்சியின் பலனைப் பெற்றிருந்தால்

இயேசு இரத்த வியர்வை வியர்த்தபோது தூங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

 இயேசுவின் பாடுகளின்போது தைரியத்துடன் அவருடனேயே இருந்திருப்பார்கள்.


இயேசு கைது செய்யப் பட்டபோது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போயினர்.
(மத்.26:56)

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்ததைக் 
கேள்விப்பட்ட பின்பும் அதை உறுதி செய்து கொள்ள கல்லறையைப் பார்க்கச் சென்றிருக்க மாட்டார்கள்.

இயேசு அழைத்தபோது மீன் பிடிக்கும் வலையை விட்டு விட்டு அவரைப் பின் சென்றவர்கள் 

இயேசு உயிர்த்தபின் மீன் பிடிக்கச் சென்றிருக்க மாட்டார்கள்.

ஆனால் பரிசுத்த ஆவியின் வருகையின்போது அவரது வல்லமையைப் பெற்று

தைரியத்தோடு இயேசுவின் போதனையை போதிக்க ஆரம்பித்தார்கள்.

முதல் நாளே ஏறத்தாழ மூவாயிரம் பேர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

இயேசு பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் வராத தைரியம்,

பரிசுத்த ஆவி வந்தவுடன் எப்படி வந்தது?

இயேசுவால் செய்ய முடியாததைப் பரிசுத்த ஆவி செய்து விட்டாரா?

ஒரு இறை உண்மையின் அடிப்படையில் இதைத் தியானிக்க வேண்டும்.

இயேசுவும் (பரிசுத்தத் தம  திரித்துவத்தின் இரண்டாம் ஆள்)

பரிசுத்த ஆவியும் (பரிசுத்தத் தம  திரித்துவத்தின் மூன்றாம் ஆள்)

ஆள்வகையில் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் இருவரும் ஒரே கடவுள்.

தந்தை, மகன், பரிசுத்த ஆவி மூவரும் ஒரே கடவுள்.

மனிதனாய்ப் பிறந்த அதே கடவுள்தான் பெந்தெகொஸ்தே என்னும் திருநாளின்போது அப்போஸ்தலர்கள் மீது இறங்கிவந்தார்.

தந்தை மனிதனாகப் பிறக்கவில்லை.

பரிசுத்த ஆவி மனிதனாகப் பிறக்கவில்லை.

மகன் மனிதனாகப் பிறந்தார்.

கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

ஆகவேதான் கன்னி மரியாளை கடவுளின் தாய் என்கிறோம்.


மனிதனாய்ப் பிறந்த அதே கடவுள்தான் 

பெந்தெகொஸ்தே என்னும் திருநாளின்போது அப்போஸ்தலர்கள் மீது இறங்கிவந்தார் என்றால்,

பெந்தெகொஸ்தே திருநாளின்போது பெற்ற கடவுளின் வல்லமையை பயிற்சியின் போது ஏன் பெறவில்லை?

அதாவது மூன்றாவது ஆள் கொடுத்த வல்லமையை இரண்டாம் ஆள் ஏன் கொடுக்க வில்லை? இருவரும் ஒரே கடவுள்தானே?

இதைத் தியானிக்கும்போது மனதில் தோன்றும் உண்மை:

 கத்தோலிக்க திருச்சபையை நிறுவியவரும், அதனோடே இருந்து அதை உலகெங்கும் பரப்புகிறவரும் கடவுளே.

அப்போஸ்தலர்கள்?

கடவுள் பயன்படுத்திக் கொண்டிருக்கிற கருவிகள். (Instruments)

அவர்கள் தாங்கள் பெற்ற பயிற்சியின் மூலம் கிடைத்த திறமையினால் திருச்சபையை பரப்பவில்லை.

கடவுள் தான் தனது வல்லமையால்  திருச்சபையை ஆண்டு கொண்டும், பரப்பிக் கொண்டுமிருக்கிறார்.


அப்போஸ்தலர்களும் சரி, அவர்களுடைய வாரிசுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் பாப்பரசர், ஆயர்கள், குருக்களும் சரி மனிதர்கள் என்ற  முறையில் தவறு செய்யக் கூடியவர்கள்தான்.

ஆனால், பாப்பரசர் திருச்சபையின் தலைவர்  என்ற முறையில் 

இயேசுவின் ஸ்தானத்தில் இருந்து கொண்டு

விசுவாசம் மற்றும் அறநெறி சார்ந்தவற்றில் 

திருச்சபை கடைப்பிடிக்கப்படவேண்டிய  கோட்பாட்டை வரையறுத்துப் பிரகடனம் செய்யும்போது

 அவரால் தவறு செய்ய முடியாது.

பாப்பரசரோடு இயங்கும் ஆயர்களின் கூட்டமைப்புக்கும் இந்த வரம் உண்டு.

குருக்கள் மூலமும் செயலாற்றிக் கொண்டிருப்பவர் கடவுளே.

குருக்கள் நிறைவேற்றும் தேவத்திரவிய அனுமானங்கள் மூலமாக கடவுள் தனது அருள் வரங்களை அள்ளித் தருகிறார்.

குருக்கள் மூலமாக நமது பாவங்களை மன்னிக்கிறார்.

குருக்கள் மூலமாகவே இயேசு திவ்ய நற்கருணை வடிவில் நமது ஆன்மீக உணவாக வருகிறார்.

ஆயர்களும், குருக்களும் தாங்கள் குருமடங்களில் (Seminaries) பெற்ற பயிற்சியின் விளைவாக திருச்சபையை வழிநடத்தவில்லை.

அவர்களைக் கருவிகளாகக் கொண்டு திருக்சபையை வழிநடத்துபவர் பரிசுத்த ஆவியே, அதாவது கடவுளே.

இதை நமக்கு உணர்த்தவே அப்போஸ்தலர்கள் மூன்று ஆண்டுகள் தாங்கள் பெற்ற பயிற்சியினால் அல்ல,

ஒரு நாள் பெற்ற பரிசுத்த ஆவியின் வல்லமையால் கடவுளின் கருவிகளாக மாறி,

நற்செய்தியைப் போதிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்கள் கருவிகள்தான், உண்மையில் நற்செய்தி அறிவிப்பதும், திருச்சபையை வழிநடத்துவதும்

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

என்று கூறிய ஆண்டவர்தான்.

ஆண்டவரால் வழிநடத்தப் 'படுவதால்தான் திருச்சபையால் தவறவே முடியாது.

திருச்சபை கிறிஸ்துவின் சரீரம்.

நாம் மீட்பு பெற வேண்டுமென்றால்

திருச்சபை, 
அதாவது கிறிஸ்து,
அதாவது கடவுள், 

போதிப்பதை நாம் விசுவசித்து,  அதன்படி நடக்க வேண்டும்.

அதனால்தான் இயேசு கூறினார்,


"விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். 

பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். 

இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

இயேசு, அதாவது கடவுள்,
 அப்போஸ்தலர்களோடும்,

அவர்களின் வாரிசுகளோடும் இருப்பதால்தான்

அவர்களின் போதனை வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒரு சிறிய ஒப்புமை:

வேடன் கையில் வில் இருக்கிறது.

வில்லில் அம்பு  இருக்கிறது.

வில்லால் தானே ஒன்றும் செய்ய முடியாது.

வேடன் வில்லை இயக்கினால் அம்பு பாயும்.

அதே போல் ,

கடவுள் இயக்கினால்தான் , அப்போஸ்தலர்களிடமிருந்து 
நற்செய்தி புறப்படும்.

கத்தோலிக்க திருச்சபையை இயக்கிக் கொண்டிருப்பவர் கடவுளே.

திருச்சபையின் எதிரிகளால் திருச்சபையை, அதாவது, கிறிஸ்துவை ஒன்றும் செய்ய முடியாது.

வெற்றி அவருக்கே.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment