Wednesday, February 9, 2022

",புறத்தேயிருந்து மனிதனுக்குள்ளே சென்று அவனை மாசுபடுத்தக்கூடியது ஒன்றுமில்லை. மனிதனுள்ளிருந்து வெளிவருவதே அவனை மாசுபடுத்தும்."(மாற்கு. 7:15)

",புறத்தேயிருந்து மனிதனுக்குள்ளே சென்று அவனை மாசுபடுத்தக்கூடியது ஒன்றுமில்லை. மனிதனுள்ளிருந்து வெளிவருவதே அவனை மாசுபடுத்தும்."
(மாற்கு. 7:15)

"தாத்தா, நாமெல்லாம் தினமும் சாப்பிடு முன்னும், சாப்பிட்ட பின்னும் கைகளைக் கழுவுகிறோம், பாத்திரங்களைக் கழுவுகிறோம், வெளியே போய்விட்டு வந்தால் குளிக்கிறோம்.

இதெல்லாம் தவறா, தாத்தா?"

",தவறு என்று யார் சொன்னா?"

"யாரும் சொல்லல. எதைப்பற்றியெல்லாமோ போதித்த இயேசு,

இதைப்பற்றி ஒன்றும் சொல்லலிய, அதான் கேட்டேன்."

", இதைப் பற்றி சொல்லத்தான் இறைமகன் மனிதனாகப் பிறந்தாரா?"

"இல்ல. அவருடைய சீடரில் சிலர்  கழுவாத கைகளால் உண்பதைக் கண்ட பரிசேயரும் மறைநூல் அறிஞரும் 

இதைப்பற்றி இயேசுவிடம் கேட்டபோது அவர் சீடர்களுக்கு இதைப்பற்றி புத்திமதி சொல்லவில்லையே."

", அதற்குப் பதிலாக இயேசு என்ன சொன்னார்?"

"கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு மனிதர்களுடைய பரம்பரையைக் கைப்பிடிக்கிறீர்கள்" என்று சொன்னார்."

", ஏன் அப்படிச் சொன்னார்?"

"அது தெரியாமல்தானே உங்க கிட்ட கேட்கிறேன்."

", வகுப்பில் ஆசிரியர் ஆங்கில பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது நீ எழுந்து, "எலிகளை உயிரோடு பிடிப்பது எப்படி, சார்?" என்று கேட்டால் அவர் என்ன சொல்லுவார்?"

"அதை Biology ஆசிரியரிடம் போய்க் கேளு. ஆங்கில வகுப்பில் எலிகளை அறுக்க வேண்டிய அவசியம் இல்லை, என்பார்."

", இயேசு கடவுளுடைய மகன்.

கடவுளுடைய கட்டளைகளை மனிதர் அனுசரிப்பது பற்றிய நற்செய்தியைப் போதிக்கவே அவர் மனிதனாகப் பிறந்தார்.

அவரிடம் போய் சாப்பிடுமுன் கை கழுவது பற்றியும், பாத்திரம் கழுவது பற்றியும் கேட்டால் அவர் என்ன சொல்லுவார்?


"கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு 

மனிதர்களுடைய பரம்பரையைக் கைப்பிடிக்கிறீர்கள்."

என்றுதான் சொல்லுவார்.

மனிதர்களுடைய பரம்பரையைக் கைப்பிடிக்க வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை.

கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டது ஏன்? என்றுதான் கேட்கிறார்.

அவர் போதிக்க வந்தது கடவுளுடைய கட்டளைகளைக் கடைபிடிப்பது பற்றிதானே.

கைகழுவாமல் சாப்பிடும்போது உணவோடு நமது வயிற்றுக்குள்ளே செல்லும் அழுக்கு நமக்கு, அதாவது, நமது ஆன்மாவிற்கு எந்த தீங்கும் செய்யாது.

இயேசு முக்கியமாக கருதுவது நமது ஆன்மாவின்  நலனைப் பற்றிதான்.

உடலுக்கு நலனோ, தீங்கோ செய்யும்   எதையும் பற்றி ஆண்டவர் பேசவில்லை.

பேசுவது அவர் செய்ய வந்த பணியைச் சார்ந்தது அல்ல.

ஆன்மா சுத்தமாக இருந்தால் அங்கு உற்பத்தியாகி வெளிப்படும் எண்ணங்கள் யாவும் சுத்தமாக இருக்கும்.

மனிதர் உள்ளத்தில் 
 தீய எண்ணம்,
 மோகம்,
 களவு,
கொலை,
 விபசாரம், 
 பேராசை, 
தீச்செயல், 
கபடு, 
கெட்ட நடத்தை, 
பொறாமை, 
பழிச்சொல், 
செருக்கு, 
மதிகேடு 
ஆகியவை இருந்தால்

 அவை வெளியே வந்தாலும்,
 உள்ளத்தில் இருந்தாலும்  மனிதனை மாசுபடுத்தும்" என்று ஆண்டவர் கூறுகிறார்.

இயேசு பேசுவது ஆன்மீகத்தைப் பற்றி மட்டுமே.

ஒரு முறை ஒருவன், "போதகரே, என் சகோதரன் என்னுடன் சொத்தைப் பங்கிட்டுக்கொள்ளுமாறு சொல்லும்" என்றான்.

அதற்கு அவர், "அன்பனே, நியாயம் தீர்க்கவோ பாகம்பிரிக்கவோ என்னை ஏற்படுத்தியவர் யார்?" என்றார்.
( லூக். 12:13, 14)

இதிலிருந்து என்ன தெரிகிறது?"

"செபத்தின்போது ஆன்மீக உதவிகளை மட்டுமே கேட்க வேண்டும்.

'கேளுங்கள், கொடுக்கப்படும்' என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

நமது ஆன்மாவுக்கு உதவக்கூடிய உதவிகளை மட்டுமே கேட்க வேண்டும்."

",உலகைச் சார்ந்த உதவிகளைக் கேட்கக் கூடாதா?"

"கேட்கலாம். ஆனால் அவை  நமது ஆன்மீக வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கக் கூடியவையாய் இருந்துவிடக் கூடாது.

அப்படி இருந்தால், கேட்டது கிடைக்காது."


", மகனோ, மகளோ, பேரனோ, பேத்தியோ அமெரிக்காவில் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

அவர்களைப் பார்க்கச் செல்ல வேண்டுமென்றால் bus ல் போக முடியாது.. Flight லதான் போக வேண்டும்.

ஆனால் Flight ல போவதற்காக அமெரிக்கா போகவில்லை.

அதேபோல் இவ்வுலகில் வாழ்ந்துதான் விண்ணகம் போகவேண்டும்.

விண்ணகம் போவதற்காகத்தான்  இவ்வுலகில் பிறந்திருக்கிறோம்.

இவ்வுலகில் வாழ்வதற்காக பிறக்கவில்லை.

இவ்வுலகில் வாழ்வதற்காக சுவாசிக்கவில்லை.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஆன்மீகம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.

செபம் சொல்லும்போது ஆண்டவரின் அருளைக் கேட்டு தான் இறைவனிடம் மன்றாட வேண்டும், இவ்வுலக பொருளைக் கேட்டு அல்ல.

முழுக்கமுழுக்க ஆன்மாவின் மீட்புக்காக வாழ்பவனே உண்மையான கிறிஸ்தவன்.

அதெப்படி முழுக்கமுழுக்க?

ஆன்மாவின் மீட்புக்காக ஆலயம் செல்லலாம், ஆபீசுக்குச் செல்வது எப்படி?

ஆபீசில் பார்க்கும் வேலையை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்து விட்டால் அதுவும் மீட்புக்கான பணிதான்.

வயலில் தான் பார்க்கும் வேலையை விபசாயி ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்து விட்டால் அதுவும் மீட்புக்கான பணிதான்.

ஆண்டவருக்காக மட்டும் வாழ்பவனுக்கு உலகமே மீட்புக்கான பணியிடம்தான்."

"உலக மீட்புக்காக நம் ஆண்டவர் வாழ்ந்ததும், மரித்ததும் உலகில் தானே."


", நாம் வாழ்வது இவ்வுலகிலாக இருக்கலாம்,

ஆனால் இவ்வுலகிற்காக அல்ல என்பதை நினைவில் கொள்வோம்.

நாம் வாழும் ஒவ்வொரு வினாடியையும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்து வாழ்வோம்.

விண்ணுலகு நம்முடையதே."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment