Friday, December 22, 2017

அமைதியா? சமாதானமா?

அமைதியா? சமாதானமா?
********************************
முதல் பாடவேளை (First period)  முடிந்து, இரண்டாவது பாடவேளை ஆரம்பித்தது.

ஒரு வகுப்பிலிருந்து வெளியேறி அடுத்த வகுப்பிற்குள் நுழைந்தேன்.

சமூக அறிவியல் பாடம்.

மாணவர்கள் மிக அமைதியாக இருந்தனர்.

நான்   அன்றைய  பாட போதபோதனையை ஆரம்பிக்குமுன்பு முந்தின நாள் நடத்தப்பட்ட பாடத்தில் கேள்விகள் கேட்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது ஒரு மாணவன் பவ்யமாக எழுந்து நின்றான்.

"என்ன விஷயம்? நீ கேள்வி கேட்கப்போகிறாயா? "

"சார், இல்ல. ஒரு சந்தேகம். முதல் உலகப் போர் முடிந்ததும்
வென்ற நாடுகட்கும்,
தோற்ற நாடுகட்கும்
இடையே ஏற்பட்டது
அமைதி ஒப்பந்தமா, சமாதான ஒப்பந்தமா? "

"நான் இப்போது கேட்கப்போகிற கேள்விக்குப் பதில் சொல். உன் கேள்விக்குப் பதில் அங்கே இருக்கும்.

நான் வகுப்பிற்குள் வந்தபோது எப்படி இருந்தீங்க"

"அமைதியாக இருந்தோம்"

"அதாவது? "

"பேசாம இருந்தோம்."

"சமாதானமாயிருந்தீங்களா?"

"நிச்சயமா இல்லை. கடைசி பெஞ்சுக்காரங்க சண்டை போட்டுக்கிட்டிருந்தாங்க. நீங்க வர்ரத சன்னல் வழியாகப் பார்த்ததும் அமைதி ஆய்ட்டாங்க."

"ஏன் அமைதியானாங்க?"

"உங்களுக்குப் பயந்து."

"எனக்குப் பயந்து அல்ல. என் கையிலிருக்கிற பிரம்புக்குப் பயந்து."

"ஆமா, சார்."

"இப்போ சொல்லு. போருக்குப் பின் ஏற்பட்டது  அமைதி ஒப்பந்தமா, சமாதான ஒப்பந்தமா? "

"அமைதி ஒப்பந்தம்தான், சார்."

"அது சமாதான ஒப்பந்தமா இருந்திருக்க, என்ன செய்திருக்க வேண்டும்?"

"சண்டை போட்ட நாடுகள்
எல்லாம் தாங்கள் போரிட்டது தவறு  என்பதை உணர்ந்து, அதற்காக வருந்தி, ஒருவருக்கொருவர் மன்னிப்புக் கேட்டு,  இனி போரிடுவதில்லை என்று ஒப்பந்தம் செய்தால்,  அதுவே சமாதான ஒப்பந்தம்."

"Very good. சமாதானம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தங்கள் சுமூகமான உறவிற்காக ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக்கொள்வது.

இருவருள் ஒருவர் மட்டும் அடுத்தவருக்கு எதிராகக் குற்றம் செய்திருந்தால், குற்றம் செய்தவர் வருந்தி அடுத்தவரோடு சமாதானம் செய்துகொள்ள வேண்டும்."

"சார், ஒரு சின்ன சந்தேகம்."

"கேளு."

"நாங்க உங்க பிரம்புக்குப் பயந்து அமைதியாய்  இருந்தது உண்மைதான். ஆனால் அமைதியாய் இருப்பவர்கள் எல்லாம் பயந்துபோயா இருக்கிறார்கள்?"

"உன் கேள்வி சரிதான். 'சமாதானம்' என்ற வார்த்தைக்குப் பதில் 'அமைதி' என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது என்பதை விளக்கவே அந்த உதாரணத்தைச் சொன்னேன்.

பாவம் செய்தவர்கள் இறைவனோடு சமாதானம் செய்துகொள்ள வேண்டும், அமைதி செய்துகொள்ள முடியாது.
அமைதி
'' என்ற சொல்லுக்குப் பல பயன்பாடுகள் உண்டு.

1. மன அமைதி.  இறைவனோடு நல்ல உறவோடு இருக்கும்போது நமது மன நிலை.

பாவம் செய்தால் மன அ
மைதி இருக்காது.

தீர்வுகாண இயலாத பிரச்சினைகள் நீடித்தாலும் மனதில் அமைதி இருக்காது.

2. வகுப்பில் அமைதி- Silence

3.கடல் அமைதியாய் இருக்கிறது - பெரிய அலைகள் இல்லை.

4. நாட்டில் அமைதி - போராட்டங்கள் இல்லை.

5.  நாடுகளுக்கிடையே போர்கள் நிகழாவிட்டால்,  'அமைதி நிலவுகிறது' என்போம். ஆனால் இந்த அமைதி நிலையில் நாடுகள் அடுத்த போருக்குத் தயாரித்துக்கொண்டிருக்கும்.

ஆக, அமைதியும், சமாதானமும் ஒரே பொருள் உள்ள வார்த்தைகள் அல்ல.

இறைவனோடு நமது உறவு சுமூகமாக இருந்தால்,

அதாவது,  நம்மிடம் பாவம் இல்லாதிருந்தால்,

அதாவது நாம் இறைவனோடு சமாதானமாயிருந்தால்

நமது மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.

சமாதானம் இருக்குமிடத்தில் அமைதி இருக்கும்.

சமாதானம் இருக்குமிடத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

ஆனால் அமைதியின் பொருள் சமாதானம் அல்ல.

திரும்பவும்   சொல்கிறேன்,    சமாதானம் இருக்குமிடத்தில் அமைதி இருக்கும்.

ஒருவரோடொருவர் சமாதானமாய் இருப்போம்.

புரிகிறதா?"

"புரிகிறது, சார்."

"உலகில் நல்ல மனது உள்ளவர்கட்கு சமாதானம் உண்டாகுக."

இது விண்ணிலிருந்து வந்த கிறிஸ்மஸ் செய்தி.

லூர்து செல்வம்.

"

No comments:

Post a Comment