Tuesday, December 12, 2017

இறைவன் சித்தம்.

இறைவன் சித்தம்.
********************************

ஒவ்வொரு  நாளும்

நம் விண்ணகத் தந்தையை நோக்கி,

"உமது சித்தம்

பரலோகத்தில்

செய்யப்படுவது போல்

பூலோகத்திலும்

செய்யப்படுவதாக"

என்று செபிக்கிறோம்.

இந்த செபம்

வாழ்த்தா, வேண்டுதலா?

ஒருவர் இன்னொருவரிடம்,

"நீங்கள் நினைத்தது நடக்கட்டும்" என்று கூறினால், அது வாழ்த்து.

"தயவுசெய்து என்னைக் நினைவுகூறுங்கள்" என்று கூறினால் அது வேண்டுதல்.

நமது செபத்தில் "தந்தையே, உமது சித்தம் நிறைவேறுக" என்று வாழ்த்துகிறோமா?

அல்லது,

"உமது சித்தம் நிறைவேற வேண்டும்" என்று வேண்டுகிறோமா?"

இறைவனது சர்வ வல்லமையையும் நமது ஒன்றுமில்லாத தன்மையையும் நினைத்துப் பார்த்தால், இரண்டுக்குமே நாம் தகுதியற்றவர்கள் என்பது புரியும்.

ஒரு பிச்சைக்காரன் ஒரு கோடீஸ்வரனைப் பார்த்து, "நீங்கள் கோடீஸ்வரனாக வாழ்க" என்று வாழ்த்தினால் எப்படி இருக்கும்?

இறைவன் சர்வ வல்லவர்.

அவர் சித்தப்படிதான் இப்பபிரபஞ்சத்தைப் (Universe) படைத்தார்.

இங்கு நடைபெரும் ஒவ்வொரு செயலும் அவர் சித்தப்படிதான் நடக்கிறது.

அவர் சித்தமின்றி ஒரு அணுகூட அசையாது.

நாம் வேண்டினாலும் வேண்டாவிட்டாலும்
நடப்பதெல்லாம் அவர் சித்தப்படிதான் நடக்கிறது.

நாம் வேண்டுவதுகூட அவர் சித்தத்திற்கு எதிராயிருந்தால் நடக்காது.

அவர் சித்தம் நமக்குக் கெடுதலாக இருக்காது.

நாம் வேண்டும் ஒரு காரியம் நமக்குக் கேடு விளைவிப்பதாக இருந்தால், இறைவன் அதைச் செய்யாமல் நன்மை விளைவிப்பதையே செய்வார்.

ஆகவே நமக்கு என்ன நேர்ந்தாலும் அது நமது நன்மைக்காகத்தான் இருக்கும்.

ஆகவேதான் நமக்கு என்ன நேர்ந்நதாலும் நாம் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

நாம் வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் அவர் சித்தப்படிதான் நடக்குமென்றால் நாம் ஏன்

"உமது சித்தம்

பரலோகத்தில்

செய்யப்படுவது போல்

பூலோகத்திலும்

செய்யப்படுவதாக"

என்று வேண்ட வேண்டும்?

ஒரு அடிப்படை உண்மையை நினைவில் வைத்திருந்தால் இக்கேள்விக்கு விடை கிடைக்கும்.

இறைவன் முன் நாம் ஒன்றுமில்லாதவர்கள்.

நம்மிடம் இருப்பதெல்லாம் இறைவன் தந்தவை.

நம்மால் இறைவனுக்கு ஆக வேண்டியது ஒன்றுமேயில்லை.

ஆனால் நமக்கு இறைவனால் எல்லாம்   ஆக வேண்டும்.

இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவில் பயன்  அடைபவர் நாம்தான்.

இறைவனை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம் என்பதற்கான அடையாளமே நமது செபம்.

செபத்தின் மூலமாக இறைவனின் சித்தத்தை நமது வாழ்வில் ஏற்றுக்கொள்கிறோம் என்பதை இறைவனிடம் அறிக்கையிடுகிறோம்.

"தந்தையே, தங்கள் சித்தத்தை விணணகத்திலுள்ளவர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்களோ அப்படியே நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம்.

தங்கள் சித்தத்தை நாங்கள் எங்கள் வாழ்வில் நிறைவேற்றிட வரம் அருளும்"
என்பதே இச்செபத்தின் பொருள்.

இவ்வுலக வாழ்வில்கூட நாம் ஒருவரை வாழ்த்தும்போது
அவர்பால்  நமக்குள்ள நல்ல மனதை வெளிப்படுத்துகிறோம்.

இறைவன் நிறைவானவர்.

நாம் அவரைப் புகழும்போது நமது புகழ்ச்சியால் அவருக்கு புதிதாக எதுவும் கிடைத்துவிடாது.

(God is perfect. Nothing can be added to perfection.)

நமது புகழ்ச்சி நமது நல்ல மனதை வெளிப்படடுத்தும்.

நமது செபத்தின்மூலம் நல்ல மனதோடு இறைவனின் சித்தத்தை நாம்ஏற்றுக்கொள்கிறோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment