"என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!"
(மத்தேயு நற்செய்தி 5:11)
இயேசு என்று சொன்னவுடன் ஞாபகத்துக்கு வருவது சிலுவை தான்.
சிலுவையை நினைக்கும் போது ஞாபகத்துக்கு வருவது இயேசுவின் பாடுகளும், மரணமும்.
அவரைப் பாடுபடுத்தியவர்கள் அவர்மீது இல்லாத பொல்லாத குற்றச் சாட்டுகளைச் சுமத்தினார்கள்.
ஓய்வு நாளுக்கு ஆண்டவரே இயேசு தான்.
அவர் ஓய்வு நாளில் நோயாளிகளைக் குணமாக்கியதைக் குற்றம் என்றார்கள்.
கடவுளே தேவ தூசணம் பேசியதாக அவர் மேல் குற்றம் சாட்டினார்கள்.
இயேசு மறுமொழியாக அவர்களிடம், "இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" என்றார். (அரு.2:19)
இயேசு தன்னைப் பற்றி சொன்ன முன்னறிவிப்பை அவர் கோவிலைப் பற்றிச் சொன்னதாக யூத மதப் பெரியவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
அவர்கள், "இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்" என்று கூறினார்கள்.
(மத்தேயு நற்செய்தி 26:61)
இயேசு, " மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறியதை .
கடவுளைப் பழித்துரைப்பதாகக் குற்றம் சாட்டினார்கள்.
உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, "இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இவன் சாக வேண்டியவன்" எனப் பதிலளித்தார்கள்.
(மத்தேயு நற்செய்தி 26:64-66)
இப்படியே இயேசுவின் மேலே இல்லாதவை பொல்லாதவை யெல்லாம் சொல்லி யூத மதத் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
நாம் அவருடைய சீடர்கள். அவருக்கு நேர்ந்ததே நமக்கும் நடக்கும்.
அப்போது நாம் மகிழ வேண்டும், இயேசுவுக்குக் கிடைத்தது நமக்கும் கிடைத்திருக்கிறது.
நாம் இயேசுவின் சீடர்கள் என்று மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தம்.
நாம் பேறுபெற்றவர்கள்.
மற்றவர்கள் நம்மைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை சொல்லி நமது பெயரைக் கெடுக்கும் போது நாம் கவலைப்பட வேண்டாம்,
ஏனெனில் நாம் வாழ்வது அவர்களைத் திருப்திப்படுத்துவநற்காக அல்ல,
கடவுளுக்காக வாழ்கிறோம்.
அவருக்கு நம்மைப் பற்றித் தெரியும்.
மற்றவர்கள் நம்மைக் கெடுத்துப் பேசும் போது அதைச் சிலுவையாக ஏற்றுக் கொண்டு
நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக் கொடுப்போம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment