சூன் 25
"கடவுள் நம் வாழ்வில், நம் வாழ்வின் மூலம், மற்றும் நம் வழியாக மற்றவர்களைச் சென்றடைய முடியும்,"
இவை பாப்பரசர் 14ஆம் லியோ அவரைச் சந்தித்த மக்களிடம் கூறிய வார்த்தைகள்.
"God can work in our lives, through our lives, and through us reach out to other people," the pope told the assembled crowd.
(https://www.facebook.com/share/p/1ENT4Xm3Ek/?mibextid=xfxF2i)
கடவுள் நம்மைத் தனது சாயலில் படைத்தார்.
தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டதன் மூலம் தனது சாயலை நமக்குத் தந்தார்.
கடவுள் அன்பு மயமானவர். நித்திய காலமாக அவர் செய்து கொண்டிருக்கும் ஒரே வேலை அன்பு செய்வது மட்டும் தான்.
தனது அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டதன் மூலம் நம்மையும் அன்பு செய்பவர்களாகப் படைத்தார்.
பாவம் உலகிற்குள் நுழையுமுன் மனிதர்கள்,
அதாவது நமது முதல் பெற்றோர்,
இறைவனை அன்பு செய்தார்கள், தாங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்தார்கள்.
கடவுளை விட விலக்கப்பட்ட கனியை அதிகமாக அன்பு செய்த வினாடி பாவம் நுழைந்தது.
அன்பு இருந்தது, ஆனால் திசை மாறிவிட்டது.
பாவத்திற்கு முன் கடவுளோடு நடந்தவர்கள் பாவத்திற்குப் பின் அவரைப் பார்த்தவுடன் ஒழிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.
மனிதனிடமிருந்த இறைவனின் சாயல் என்ன ஆயிற்று?
பழுதடைந்து விட்டது.
காலையில் கண்ணாடி முன் நின்று பவுடர் போட்டு அழகு படுத்தப்பட்ட முகம்
தெருவுக்கு வந்தவுடன் தெரு மண்ணை அள்ளி வரும் காற்று பவுடர் போட்ட முகத்தில் மண்ணை அப்பிய பின் முகம் எப்படி இருக்கும்,
அப்படி ஆகிவிட்டது மனித ஆன்மா.
பழுதடைந்த சாயலை மீட்டுத் தர,
அதாவது, ஆன்மா இழந்த இறை அன்பை மீண்டும் கொடுத்து
இறைவனோடு நமக்கு இருந்த உறவைப் புதிப்பிக்க இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.
திரு முழுக்கு பெற்றவுடன் நாம் பாவத்தால் பழுது படுத்திய இறைச் சாயலை மீண்டும் முழுமையாகப் பெற்றோம்.
"உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்"
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை." இவைஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள்.
ஆகவேதான் "நானே உலகின் ஒளி" என்று கூறிய ஆண்டவர்,
"நீங்கள் உலகின் ஒளி" என்றும் கூறினார்.
ஆனால்
''நானே வழி" என்று கூறிய ஆண்டவர்
"நீங்களே வழி" என்று கூறவில்லை.
தந்தையிடம் செல்ல அவர் மட்டும்தான் வழி, ஏனெனில் அவர்தான் உலக மீட்பர்.
ஆனாலும் வேறொரு பொருளில் நாம் ஒவ்வொருவரும்
"நான் வழி" என்று கூறலாம்.
என்ன பொருளில்,
"கடவுள் நம் வாழ்வில், நம் வாழ்வின் மூலம், மற்றும் நம் வழியாக மற்றவர்களைச் சென்றடைய முடியும்,"
என்று பாப்பரசர் 14ஆம் லியோ கூறுகிறார்.
"கடவுள் நம் வழியாக மற்றவர்களைச் சென்றடைய முடியும்,"
இயேசு உலகெங்கும் நற் செய்தியை அறிவிக்க அவரது சீடர்களைத்தான் அனுப்பினார்.
சீடர்களின் வழியாகத்தான் இயேசு உலகெங்கும் சென்றார்.
சீடர்கள் தங்கள் வாய் மொழிப் போதனை மூலமும், தங்கள் நற்செய்தி வாழ்க்கை மூலமும் இயேசுவை மக்களுக்கு அளித்தார்கள்.
இன்று நாம் இயேசுவின் சீடர்கள்.
நமது முன்மாதிரியான வாழ்வின் மூலம்,
அதாவது நம் வழியாக கடவுள் மற்றவர்களைச் சென்றடைகிறார்.
இயேசுவை அறியாதவர்கள் நம் வழியாக அறிய வேண்டும்.
நாம் சொல்வதைக் கேட்டும், நாம் வாழ்வதைப் பார்த்தும் மற்றவர்கள் இயேசுவை அறிய வேண்டும்.
"இவன் கிறிஸ்தவன், கிறிஸ்துவைப் போல் வாழ்கிறான்.
நாமும் கிறிஸ்துவைப் போல் வாழ வேண்டுமென்றால் இவனைப் போல் வாழ வேண்டும்." என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும்.
குடிகாரன் வாயிலிருந்து வரும் நாற்றத்தை வைத்து அவன் குடிகாரன் என்பதைக் கண்டு கொள்ளலாம்.
நாம் வாங்கிக் கொடுத்த பௌடரின் வாசத்தை வைத்து மனைவி வருவதை அறிந்து கொள்ளலாம்.
ஒரு கையில் புத்தமும் இன்னொரு கையில் பிரம்பும் இருப்பதைப் பார்த்து இவர் ஒரு ஆசிரியர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஒருவரது இரக்க குணத்தையும், உதவி செய்யும் மனப்பாங்கையும் வைத்து இவர் கிறித்தவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
பகைவரை நேசித்தல்,
தீமைக்கு நன்மை செய்தல், குற்றம் செய்பவர்களை மன்னித்தல்,
துன்ப நேரத்திலும் முக மலர்ச்சியாக இருத்தல்
போன்ற குணங்கள் நம்மிடம் இருந்தால் நாம் சொல்லாமலே நாம் கிறிஸ்தவர்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள்.
இவ்வாறு நமது வாழ்வின் வழியாக நாம் இயேசுவை மற்றவர்களுக்கு அளிக்கலாம்.
நம்மிடம் யார் வழியாக இயேசு வருகிறார்?
நம்முடைய பங்குக் குருவானவர் வழியாக.
திருப்பலியில் போது குருவானவர் "இது என் சரீரம்" என்று சொல்லும் போது அப்பம் இயேசுவின் உடலாக மாறுகிறது.
"இது என் இரத்தம்" என்று சொல்லும் போது திராட்சை இரசம் இயேசுவின் இரத்தமாக மாறுகிறது.
குருவானவர் கையிலிருந்து தான் இயேசு நமது ஆன்மீக உணவாக வருகிறார்.
குருவானவர் மூலமாகத்தான் இயேசு நமது பாவங்களை மன்னிக்கிறார்.
காலையில் திருப்பலியில் இயேசுவைப் பெற்ற நாம் நாள் முழுவதும் அவரை வாழ வேண்டும்.
நமது வாழ்க்கை மூலமாகத்தான்
இயேசுவின் சாயலை நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் பார்ப்பார்கள்.
பார்த்து அவரைத் தேடி வருவார்கள்.
வருகிறவர்களுக்கு நாம் இயேசுவைக் கொடுக்க வேண்டும்.
இயேசு மக்களிடம் வர வழியாக நாம் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment