Monday, June 9, 2025

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது." (மத்தேயு நற்செய்தி 5:14)



"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது."
(மத்தேயு நற்செய்தி 5:14)

"அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்."
(தொடக்கநூல் 1:3)

அறிவியல் ரீதியாக ஒளி இல்லையேல் உலகில் வாழ்வு இல்லை. 

ஆன்மீக ரீதியாக இயேசு தான் உலகின் ஒளி.

 "உலகின் ஒளி நானே." (அரு.8:12)

"வழியும், உண்மையும், வாழ்வும் நானே."( அரு.14:6)

 இயேசுவே நமது ஆன்மீக வாழ்வு. வாழ்வை அடைவதற்கான வழியும் அவரே. வழிக்கான ஒளியும் அவரே.

இருட்டில் நடந்தால் வழி மாறிப் போக நேரிடும்.

வழி மாறினால் நிலை வாழ்வை அடைய முடியாது.

இயேசுவாகிய வழியில் இயேசு காட்டும் ஒளியில் நடக்க வேண்டும்.

சூரிய ஒளியை சந்திரன் பிரதிபலிக்கிறது.

சந்திரனின் ஒளியில் நடப்பவர்களும் சூரிய ஒளியில் தான் நடக்கிறார்கள்,

ஏனெனில் சூரிய ஒளியின் பிரதிபலிப்புதான் சந்திர ஒளி.

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்." என்று நம்மைப் பார்த்து இயேசு கூறுகிறார்.

இயேசு சுயமாக ஒளி.

நாம் சுயமாக ஒன்றுமில்லை. இயேசுவின் ஒளியைப் பிரதிபலிக்கும் போது நாம் ஒளியாக மாறுகிறோம்.

நமது ஒளியில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் இயேசுவைப் பார்ப்பார்கள்.

"மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது."

ஒளியாகிய நம்மை மலைமேல் இருக்கும் நகருக்கு இயேசு ஒப்பிடுகிறார்.

நாம் பிரதிபலிக்கும் இயேசுவை மற்றவர்களால் பார்க்காமல் இருக்க முடியாது.

நமது வாழ்வில் மற்றவர்கள் இயேசுவைப் பார்ப்பார்கள்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நாம் நமது வாழ்க்கையின் மூலம் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கிறோம்.

நற் செய்தியை அறிவிப்பதும், இயேசுவை அறிமுகப் படுத்துவதும் ஒன்றுதான்.

நாம் நமது சுய விளம்பரத்திற்காக மலை மேல் இருக்கும் நகரைப் போல் வாழவில்லை. 

நம்மில் பிரதிபலிக்கும் இயேசுவாகிய ஒளியை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக நாம் மலை மேல் இருக்கும் நகரை போல் வாழ வேண்டும்.

இதுவும் ஒரு நற்செய்தி அறிவிப்புப் பணிதான்.

நாம் ஒளியாம் இயேசுவைப் பிரதிபலித்தால் இயேசுவின் என்னென்ன குணங்களை மக்கள் நம்மில் பார்ப்பார்கள்?

இயேசு உலகுக்கே உரிமையாளர்.

ஆனால் அவர் ஏழ்மையை நேசித்தார்.

ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தார்.

தன்னுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

சென்ற இடமெல்லாம் அனைவருக்கும் நன்மை செய்தார்.

தன்னைப் பகைத்தவர்களையும் நேசித்தார்.

தனக்குத் தீங்கு இழைத்தவர்களை மன்னித்தார்.

தான் போதித்த நற் செய்தியை அவரே வாழ்ந்து முன் மாதிரிகை காட்டினார்.

பாவிகளை நேசித்தார்.

தனது பாடுகளையும், மரணத்தையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தந்தைக்கு ஒப்புக் கொடுத்தார்.

தன்னைப் பெற்ற தாயை மிகவும் அதிகமாக நேசித்தார்.

இயேசுவின் இத்தனை குணங்களும் நம்மில் பிரதிபலிக்க வேண்டும்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

அவர்களும் இயேசுவைப் போல் வாழ நமது வாழ்க்கைக் காரணமாக இருக்க வேண்டும்.

லூர்து செல்வம்.



.

No comments:

Post a Comment