Thursday, June 19, 2025

"மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.". (மத்தேயு நற்செய்தி 6:19)



"மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்."
(மத்தேயு நற்செய்தி 6:19)

செல்வம் இருவகை, அருட்செல்வம், பொருட்செல்வம்.

அருளின் ஊற்று இறைவன்.
இறைவனோடு ஒன்றித்து வாழ்பவர்கள் ஆன்மாவில் அருள் மிகுந்திருக்கும்.

இறைவனில், இறைவனோடு ஒன்றித்து வாழ்பவர்களின் ஒவ்வொரு செயலும் இறையருளைப் பெற்றுத் தரும்.

நற்செயல்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் பெறும் அருளின் அளவும் அதிகரிக்கும்.

அருளின் அளவு
 அதிகரிக்க அதிகரிக்க விண்ணகத்தில் அவர்கள் அனுபவிக்கயிருக்கும் பேரின்பத்தின் அளவும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

அவர்கள் செய்யும் பிறரன்புச் செயல்கள் தான் நற்செயல்கள்.

இறையன்பினால் தூண்டப்பட்டு இறைவனின் மகிமைக்காக நமது அயலானுக்கு நாம் செய்யும் உதவிச் செயல்கள்தான் நற்செயல்கள்.

ஒரு செயல் தற்செயலாக வேண்டுமென்றால் முதலில் நாம் சாவான பாவமின்றி, இறை உறவில் இருக்க வேண்டும்.

அடுத்து நாம் செய்யும் பிறருதவி தற்பெருமைக்காக இல்லாமல் இறைவனது மகிமைக்காகச் செய்யப்பட வேண்டும்.

வலதுகை செய்வது இடது கைக்குத் தெரியாமல் செய்ய வேண்டும்.

நற்செயல்கள் செய்பவர்கள் இறை அருளில் வளர்ந்து கொண்டிருப்பார்கள்.

பொருட்செல்வர்கள் இறை அருளைப் பற்றிக் கவலைப் படாமல் இவ்வுலகப் பொருளை ஈட்டுவதில் மட்டும் குறியாக இருப்பார்கள்.

உணவு, உடை, இருப்பிடம், பணம், பட்டம், பதவி போன்றவை பொருட்செல்வங்கள்.

கடவுளைத் தேடாமல் இவற்றை மட்டும் இவற்றுக்காக அனுபவிப்பவர்கள் பொருட் செல்வர்கள்.

அருட் செல்வம் நித்திய காலமும் நம்மோடு சேர்ந்து இருக்கும்.

"இயேசுவே இரட்சியும்."

ஒரு முறை செபிக்க ஒரு வினாடி ஆகும்.

ஆனால் அதற்குச் சன்மானமாக நாம் பெறும் இறை அருள் ‌நித்திய காலமாக நம்மோடு இருக்கும்.

பொருட் செல்வம் வெள்ளம் வந்தால் போய்விடும்.

வெந்தணல் பட்டால் எரிந்து விடும்.

ஆனால் உலகமே அழிந்தாலும் அருட் செல்வம் அழியாது.

இறைவனோடு நித்திய பேரின்பத்தில் வாழ வேண்டுமென்றால் நாம் உலகில் அருட்செல்வர்களாக வாழ வேண்டும்.

எது எளிது?  அருட் செல்வத்தை ஈட்டுவதா? பொருட்செல்வத்தை ஈட்டுவதா?

அருட்செல்வத்தை ஈட்டுவதுதான் எளிது.

பொருட்செல்வத்தை ஈட்டுபவர்கள் அது இருக்கும் இடத்தைத் தேடி நாயாய் அலைய வேண்டும்.

இரவு பகல் பார்க்காமல் உழைக்க வேண்டும்.

சிறிது அசந்தால் இலாபமெல்லாம் நட்டமாய் மாறிவிடும்.

சுகமில்லாமல் படுத்து விட்டால் உழைப்பும் போய்விடும், ஈட்டியதும் போய்விடும்.

கோடிக்கணக்காய் ஈட்டி வைத்திருந்தாலும் மரணம் வந்து விட்டால் ஈட்டியவனால் அதை அனுபவிக்க முடியாது.

இருப்பவர்கள் அனுபவிப்பார்கள்.

ஆனால் அருட்செல்வத்தை ஈட்டுவது மிக எளிது, ஏனெனில் நமக்குத் துணையாய் வருபவர் சர்வ வல்லப கடவுள்.

அவர் உதவியுடன் நற்செயல்களைச் செய்து  செய்ததை அவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

தூங்கும் போதும் அருட்செல்வத்தை ஈட்டலாம், நமது தூக்கத்தை
 இறைவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

தூக்கத்தை மட்டுமல்ல, சுவாசிப்பது முதல் எதைச் செய்தாலும் நம்முடன் இருக்கும் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தால் போதும்.

நாம் சுகமில்லாமல் படுத்த படுக்கையாய் இருந்தாலும் அதை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்துவிட்டால் நமது நோயும் அருளை ஈட்டித்தரும்.

பொருட்செல்வர்கள் எதைச் செய்தாலும் தங்களுக்காகச் செய்வார்கள்.

ஆனாலும் செல்வம் ஒரு நாள்
"செல்கிறேன்" என்று டாட்டா காட்டி விட்டுப் போய் விடும்.

ஆனால் அருட்செல்வம் நாம் இறந்தால் நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லும்.

ஆகவே அருட்செல்வத்தை ஈட்டி விண்ணகத்தில் சேர்த்து வைப்போம்.

நித்திய காலமும் அதை அனுபவிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment