Sunday, June 1, 2025

காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டு விடுவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார். (யோவான் நற்செய்தி 16:32)

காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டு விடுவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார். 
(யோவான் நற்செய்தி 16:32)

புனித வியாழனன்று இயேசு உடலைத் தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுத்து விட்டு, அவர்களுக்கு குருப் பட்டம் கொடுத்து விட்டு,

தான் எதற்காக உலகுக்கு வந்தாரோ அதை ஆரம்பிக்குமுன்,

அதாவது பாடுகளை ஆரம்பிக்குமுன் 

தனது சீடர்களைப் பார்த்து,

"நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்;

 என்னைத் தனியே விட்டு விடுவீர்கள்." என்கிறார்.

இந்த வார்த்தைகளைக் கூறும் போது நமது ஆண்டவரின் மனதில் எவ்வளவு வேதனை இருந்திருக்கும்!

இந்த வார்த்தைகளை நினைக்கும் போது ஆண்டவரின் பாடுகள் ஆரம்பித்து விட்டன என்று சொன்னால் அது மிகை ஆகாது. 

எந்த சீடர்களை ஆண்டவரே தேர்ந்தெடுத்தாரோ,

எந்த சீடர்களை ஆண்டவர் மூன்று ஆண்டுகள் இரவும் பகலும் தன்னோடே வைத்திருந்து பயிற்சி கொடுத்தாரோ 

அதே சீடர்கள் அவர் எதற்காக உலகிற்கு வந்தாரோ அதை ஆரம்பிக்கும்போது அவரை விட்டு ஓடி போவார்கள்! 

கெத்சமெனித் தோட்டத்தில் எதிரிகள் கையில் அவரைத் தனியே விட்டுவிட்டு ஓடி போவார்கள்.

"ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்" என்கிறார் ஆண்டவர். 

நித்திய காலத்தில் இருந்து தந்தையும் மகனும் ஒருவருள் ஒருவர் இருக்கிறார்கள். 

  தந்தை மகனை உலகுக்கு அனுப்பினார் என்று நாம் கூறினாலும் ஆன்மீக ரீதியில் தந்தையுள் மகன் இருக்கிறார்.

இருவரையும் பிரிக்க முடியாது.

தந்தையைப் பார்க்க வேண்டுமா?


மகனைப் பார்க்கும்போது தந்தையையும் பார்க்கிறோம்.

 "என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்."
(அரு.14:9)

இது இயேசு சீடரிடம் கூறியது.

நம்மால் தந்தையைப் பார்க்க முடியுமா?

நாம் திருப்பலியில் கலந்து கொள்ளும் போது இயேசுவைப் பார்க்கிறோம், திவ்ய நற்கருணையில்.

இயேசுவைப் பார்க்கும் போது தந்தையையும் பார்க்கிறோம்.

தூய ஆவியும் மகனுள் இருக்கிறார்.

அப்படியானால் இயேசுவைப் பார்க்கும்போது தூய ஆவியையும் பார்க்கிறோம்.

ஆக திவ்ய நற்கருணையை வாங்கும் போது பரிசுத்த தம திரித்துவ இறைவனையே வாங்குகிறோம்.

தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் திருப்பலியை ஆரம்பிக்கும் நாம்,

தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் தான் திருப்பலி முடிந்து வீட்டுக்குச் செல்கிறோம்.

ஆக வீட்டிலும் தனியாக இருப்பதில்லை.


"என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்."
(அரு.14:23)

சீடர்கள் அனைவரும் இயேசுவை விட்டு ஓடி விட்டாலும் இயேசு தனியாக இருப்பதில்லை.

தந்தையுடனும், தூய ஆவியுடனும் இருக்கிறார்.

இந்த உலகிலுள்ள அத்தனை பேரும் நம்மை விட்டுப் பிரிந்து விட்டாலும் நாம் தனியாக இருப்பதில்லை.

கடவுள் நம்மோடு இருக்கிறார்.

சிறுவர்களாக இருக்கும் போது ஞானோபதேச வகுப்பில் சின்னக் குறிப்பிடம் முழுமையையும் மனப்பாடம் செய்து ஆசிரியரிடம் ஒப்பித்தோம்.

அதில் நாம் விசுவசிக்க வேண்டிய அத்தனை வேத சத்தியங்களும் இருக்கின்றன.

நமக்கு விசுவசிக்க வேண்டிய அத்தனையும் தெரியும்.

உயிர் வாழ சாப்பிட வேண்டும் என்று தெரிந்தால் மட்டும் போதாது, சாப்பிட வேண்டும்.

எதை விசுவசிக்க வேண்டும் என்று தெரிந்தால் மட்டும் போதாது, விசுவசிக்க வேண்டும்.

நாம் விசுவசித்தோமா?

கொஞ்சம் நமது ஆழ்மனதில் இறங்கிப் பார்ப்போம்.

மற்றவர்களுடைய அனுபவம் எனக்குத் தெரியாது.

என் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

1947 ஆம் ஆண்டு.

நான் மூன்றாவது வகுப்பு மாணவன்.

ஞானோபதேச வகுப்பில் சின்னக் குறிப்பிடம் முழுவதையும் பாராமல் ஒப்பித்து விட்டேன்.

நீங்கள் எப்படியோ எனக்குத் தெரியாது, நான் இருட்டில் தனியாக இருக்கப் பயப்படுவேன்.

ஏன் இருட்டில் பயம்?

இருட்டில் பேய்கள் அலையும் என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது.

ஒருநாள் பாவூர்சத்திரத்திலிருந்து கீழப்பாவூருக்கு இரவு 10 மணி அளவில் நடந்து வர வேண்டியிருந்தது.

இடையில் கட்டடங்களோ, மின் விளக்குகளோ கிடையாது.

நடக்கும் போது அக்கம் பக்கம் பார்த்தால் ஏதோ கருப்பாக என்னைப் பார்த்து வருவது போல் தெரியும்.

மனது நிறைய பயம், பயம் தவிர வேறோன்றும் இல்லை.

எப்படியோ பயத்தில் உயிர் போகாமல் வீட்டுக்கு வந்து விட்டேன்.

ஞானோபதேச வகுப்பில் நம்மைப் படைத்தவர் கடவுள், அவர் எங்கும் இருக்கிறார் என்று படித்திருக்கிறேன்.

கடவுள் எங்கும் இருக்கிறார் என்று தெரியும், ஆனால் கடுகளவு கூட விசுவாசம் இல்லை.

விசுவாசம் இருந்திருந்தால் இருட்டில் நடக்க பயந்திருப்பேனா?

சர்வ வல்லவக் கடவுள் எங்கும் இருக்கிறார் என்று அறிவது வேறு விசுவசிப்பது வேறு.

விசுவாசம் என்பது வாழ்க்கை.

அவரன்றி அணுவும் அசையாது என்று விசுவசிக்கிறோம்.

என்ன நடந்தாலும் நமது நன்மைக்கே என்று விசுவசிக்கிறோம்.

நிஜ வாழ்க்கையில் என்ன நடந்தாலும் ஏற்றுக் கொள்கிறோமா?

அல்லது, நமக்கு விருப்பமானது நடந்தால் மட்டும் ஏற்றுக் கொள்கிறோமா?

திவ்ய நற்கருணையில் இயேசு இருக்கிறார் என்று விசுவசிக்கிறோம்,

ஆனால் திவ்ய நற்கருணை முன் முழங்கால்படியிட ஏன் மறுக்கிறோம்.

சிந்திப்போம்.

 நமது விசுவாசத்தை நமது வாழ்வாக்குவோம்.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment