"நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல."
(அரு. 17:16)
இயேசு கடவுள்.
உலகைப் படைத்த கடவுள் ஏன்,
"நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல்" என்கிறார்?
கடவுள் ஒன்றுமில்லாமையில் இருந்து உலகைப் படைத்தார்.
அவர் தன்னிலேயே முழுமையானவர், சுயமாக வாழ்கிறார்.
நாம் வாழ அவர் படைத்த பஞ்சபூதங்களாகிய நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவை தேவைப்படுகின்றன.
நமது உடல் இவற்றால் ஆனதுதான்.
உடலியல் ரீதியாக நாம் வாழ இவற்றைச் சார்ந்திருக்கிறோம்.
கடவுள் வாழ இவற்றைச் சார்ந்திருக்கவில்லை.
ஆனால் உலகம் முழுக்க முழுக்க கடவுளைச் சார்ந்திருக்கிறது.
ஒரு வினாடி அவர் உலகை நினைக்காவிட்டாலும் அது ஒன்றுமில்லாமை ஆகிவிடும்.
நாம் வாழ கடவுள் படைத்த பஞ்சபூதங்களைச் சார்ந்திருக்கிறோம்.
அப்படியிருக்க "அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல" என்று ஏன் சொல்கிறார்?
நமது உடல் மண்ணிலிருந்து எடுக்கப் பட்டிருந்தாலும் நமது ஆன்மா விண்ணில் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டது.
ஆகவே ஆன்மீக வாழ்வு வாழப் படைக்கப் பட்டிருக்கிறோம்.
நாம் உலகில் வாழ்ந்தாலும் ஆன்மீக வாழ்வுதான் வாழ வேண்டும்.
அதாவது விண்ணக வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டு வாழ வேண்டும்.
நாம் விண்ணைச் சார்ந்தவர்கள், மண்ணை அல்ல.
இப்போது நாம் உலகில் இருக்கிறோம், ஆனால் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.
We are in the world, not of the world.
மண்ணில் நாம் வாழ்வதே விண்ணக வாழ்வுக்காக நம்மைத் தயாரிப்பதற்காகத் தான்.
மண்ணக வாழ்வு நிரந்தரமானது அல்ல.
மண்ணில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் தற்காலிகமானவை.
அழியாத பேரின்ப வாழ்வைப் பற்றிக் கவலைப் படாமல்
அழிந்து போகக்கூடிய சிற்றின்பத்தைத் தேடி அலைபவர்கள் அறிவிலிகள்.
அப்படியானால் கடவுள் ஏன் உலகப் பொருட்களைப் படைத்தார்?
நமது ஆன்மீக வாழ்வில் நமக்கு உதவிகரமாக இருப்பதற்காக.
கடவுள் நினைத்திருந்தால் மனிதனை விண்ணகத்தில் படைத்திருக்கலாம்.
ஆனால் பேரின்ப வாழ்வை மனிதனே முயற்சி செய்து ஈட்ட வேண்டும் என்று தீர்மானித்து அவனை உலகில் படைத்தார்.
அவனுக்கு இரு கட்டளைகளைக் கொடுத்து, அவற்றை அவன் வாழ்ந்தால் விண்ணக வாழ்வு என்ற நிபந்தனையோடு அவனை உலகில் வாழ விட்டிருக்கிறார்.
இரண்டு கட்டளைகளும் இன்பகரமானவை.
1. கடவுளை அன்பு செய்ய வேண்டும்.
2. சக மனிதர்களை அன்பு செய்ய வேண்டும்.
சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அன்பு செய்ய வேண்டும்.
நமது அன்பை செயல்படுத்த உலகப் பொருட்கள் தேவைப்படுகின்றன.
அன்பு செய்ய உலகப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு தாய் தன் பிள்ளைகள் மீதுள்ள அன்பை அவர்களுக்கு உணவு கொடுப்பதன் மூலமும்,
அவர்களைப் பராமரிப்பதன் மூலமும் செயல்படுத்துகிறாள்..
அவ்வாறே மனிதன் பிறர் மீது தனக்கு உள்ள அன்பை அவர்களுக்கு உதவுவதன் மூலமும், சேவை செய்வதன் மூலமும் வெளிப்படுத்துகிறான்.
நாம் பிறருக்குச் செய்யும் சேவையைத் தனக்கே செய்ததாகக் கடவுள் கருதுகிறார்.
கடவுளை நமது தந்தையாக ஏற்றுக் கொள்வதன் மூலமும்,
அவரது சித்தப்படி வாழ்வதன் மூலமும்,
அவரை ஆராதித்து வழிபடுவதன் மூலமும்,
நமது பிறரன்புப் பணிகள் மூலமும் நாம் அவரை அன்பு செய்கிறோம்.
கடவுள் அளித்த இரண்டு கட்டளைகளின்படி வாழ்ந்தால் நமக்கு விண்ணக பேரின்ப வாழ்வு பரிசாகக் கிடைக்கும்.
இயேசு போதித்த நற் செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்து அவர்களை இயேசுவிடம் அழைத்து வரவேண்டியது நமது கடமை.
"எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்."
(மத்தேயு நற்செய்தி 28:20)
இது இயேசு நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளை.
இக்கட்டளையை மையமாக வைத்தே நாம் வாழ வேண்டும்.
நாம் நற் செய்தியை அறிவிப்பதைத் தடை செய்ய எந்த உலக அதிகாரத்துக்கும் உரிமை இல்லை.
எந்த அதிகாரமாவது தடை விதித்தால் அதற்கு நாம் அடிபணியக் கூடாது.
கடவுளின் கட்டளை மட்டுமே நம்மை இயக்க வேண்டும்.
இயேசு உலகைச் சார்ந்தவராய் இல்லாததால் அவர் பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு மரிக்க நேர்ந்தது.
நாமும் உலகைச் சார்ந்தவர்களாய் இல்லாததால் இயேசுவுக்கு நேர்ந்தது நமக்கும் நேரிடும்.
அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
இயேசுவின் பாடுகளில் பங்கு பெற்றால் அவரது மகிமையிலும் பங்கு பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment