"ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது."
(மத்.5:37)
பேச்சாளர்கள் (Orators) என்று பெயர் எடுத்திருப்பவர்கள் ஒரு சிறு விடயம் பற்றி மணிக்கணக்காகப் பேசுவார்கள்.
அதன் சிறப்பு என்னவென்றால் கேட்பவர்களுக்கு சலிப்பு ஏற்படாது.
ஆனால் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் இரண்டு மணி நேர சொற்பொழிவின் மையக்கருத்து என்னவென்று கேட்டால் சொல்லத் தெரியாது.
ஏனெனில் சொற்பொழிவை ரசிக்க வைப்பதற்காக கருத்தை விட நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்.
நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கும்.
சொல்ல வேண்டியதை மட்டும் சொன்னால் கேட்பவர்கள் மனதில் அது மட்டும் தங்கும்.
நான்காவது வகுப்பு மாணவர்களுக்கு கிராம நிர்வாக அதிகாரியின் பணியை விளக்கிக் கொண்டிருந்த ஆசிரியர்,
"கிராம் நிர்வாக அதிகாரியின் முக்கிய பணி நிலவரி வசூலித்தல்.
வரியை ஒழுங்காகச் செலுத்தாதவர்களின் வீட்டுக்கு தலையாரி வந்து அவர்கள் வீட்டில் இருக்கும் சட்டி, பானை, மற்றும் பொருட்களைப் பொறுக்கி தெருவில் போடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்.
அனைத்து மாணவர்களும், "ஆமா, சார்." என்றார்கள்.
அந்த ஆண்டு இறுதித் தேர்வில் கிராம நிர்வாகப் பாட வினாத்தாளில் ஒரு கேள்வி.
"கிராம நிர்வாக அதிகாரியின் வேலை என்ன?"
அநேக மாணவர்கள் எழுதியிருந்த பதில்,
"கிராம நிர்வாக அதிகாரியின் வேலை வீடுகளுக்கு வந்து சட்டி பானைகளைப் பொறுக்குவது ஆகும்."
கோவிலில் பிரசங்கம் கேட்பவர்கள் அநேகரின் மனதில் சுவாமியார் சொன்ன நகைச்சுவை மட்டும் மனதில் தங்கும்.
சொல்ல வேண்டியதை
அலங்காரமாகச் சொன்னால் அலங்காரம் மட்டும் மனதில் தங்கும்.
சொல்ல வேண்டியதை மட்டும் சொல்ல வேண்டும்.
கதை அளக்கக் கூடாது.
இதைத்தான் ஆண்டவர்
"நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள்."
என்று சொல்கிறார்.
சிலர் விதவிதமான வார்த்தைகளைப் பயன்படுத்தி நீண்ட நேரம் செபம் செய்தால்
நமது செபம் கேட்கப்படும் என்று நினைக்கிறார்கள்.
வார்த்தைகளைக் குறைத்து சொன்னால் போதும்.
வகுப்பில் மக்கு மாணவர்களுக்குப் புரிய வைக்க சிறிய விடயத்தை நீண்ட நேரம் விளக்குவோம்.
அனைத்தையும் அறிந்த கடவுளுக்கு எதையும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
கடவுள் அனைத்தையும் அறிந்தவர்.
நமது திருப்திக்காக சொல்ல வேண்டியதை சுருக்கமாகச் சொல்வோம்.
ஆனால் மனதில் எப்போதும் கடவுள் ஞாபகமாக இருக்க வேண்டும்.
எப்போதும் இறைவன் சந்நிதானத்தில் இருக்க வேண்டும்.
We must always be in the presence of God.
அதுதான் உண்மையான செபம்.
செபமாலையின் வல்லமையே இதில்தான் இருக்கிறது.
மங்கள வார்த்தை செபம் அளவில் சிறியது.
ஒரு 53 மணிச் செபமாலையில் மங்கள வார்த்தை செபத்தை 53 தடவைகள் சொல்கிறோம்.
கர்த்தர் கற்பித்த செபத்தை 6 முறை சொல்கிறோம்.
ஆனால் எப்போதும் இறைவன் சந்நிதானத்தில் தியானித்துக் கொண்டே சொல்கிறோம்.
தியானத்துக்கு வார்த்தைகள் தேவையில்லை.
மனதை ஒரு நிலைப்படுத்துவது தான் முக்கியம்.
மகிழ்ச்சி நிறை தியானத்தில் அன்னை மரியாளுடன் குழந்தை இயேசுவின் சந்நிதானத்திலும்,
துக்கம் நிறை தியானத்தில் பாடுகள் படும் இயேசுவின் சந்நிதானத்திலும்,
மகிமை நிறை தியானத்தில் உயிர்த்த இயேசுவின் சந்நிதானத்திலும்
மனதை ஒரு நிலைப்படுத்தி செபிக்க வேண்டும்.
செபத்துக்கு வல்லமையைக் கொடுப்பது வார்த்தைகளே இல்லாத தியானம் தான்.
தியானிக்கும் போது மனதை வேறு எங்கும் அலைய விடக்கூடாது.
வார்த்தைகளாலான நீண்ட செபத்தில் மனதை ஒரு நிலைப்படுத்துவது கடினம்.
ஆனால் வார்த்தைகள் தேவையில்லாத தியானத்தில் மனதை ஒரு நிலைப்படுத்துவது எளிது.
ஆகவே வார்த்தைகளைக் குறைத்து தியானத்தை அதிகப்படுத்தி செபிப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment