''மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது."
(மத்தேயு நற்செய்தி 6:1)
"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது."
என்று சொன்ன இயேசு ஏன் "மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்."
என்று சொல்கிறார்?
ஒரு செயலின் தன்மை அதன் நோக்கத்தில் இருக்கிறது.
தேர்தல் சமயத்தில் அரசியல் வாதிகள் மக்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள்.
அதற்குப் பெயர் ஈகையா?
இல்லை. இலஞ்சம்.
ஏழைகள் வாழ்வதற்கு உதவியாக பணம் கொடுத்தால் அது ஈகை, தர்மம்.
ஓட்டு வாங்கப் பணம் கொடுத்தால் அது இலஞ்சம்.
செயலின் நோக்கம்தான் அது நல்ல செயலா, கெட்ட செயலா என்பதைத் தீர்மானிக்கிறது.
இயேசுவின் மகிமைக்காக, மக்கள் நம்மில் இயேசுவைக் காண வேண்டும் என்பதற்காகத் தர்மம் கொடுத்தால் அது நற்செய்தி வாழ்க்கை.
சுய விளம்பரத்திற்காக தர்மம் கொடுத்தால் தற்பெருமை. ஒரு வகையில் வியாபாரம்.
மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யக்கூடாது.
இறைவனின் மகிமைக்காக நாம் அறச் செயல்களைச் செய்ய வேண்டும். அதைப் பார்க்கும் மக்கள் நம்மில் இயேசுவைப் பார்ப்பார்கள்.
மீட்புப் பெற வேண்டுமானால் விசுவாசம் மட்டும் போதாது, நற்செயல்களும் அவசியம்.
நமது அயலானுக்கு அவனும் இறைவனின் பிள்ளை என்ற உண்மையின் அடிப்படையில் இறைவனின் அதிமிக மகிமைக்காக செய்யும் உதவியே நற்செயல்.
நற்செயல்களின் நோக்கம் இறைவனை மகிமைப் படுத்துவதற்காக மட்டும் இருக்க வேண்டும்.
சுய திருப்தியோ, சுய விளம்பரமோ நமது நோக்கமாக இருக்கக்கூடாது.
ஆகவேதான் ஆண்டவர்
"நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்.
வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர்.
அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(மத்தேயு நற்செய்தி 6:2)
இறைவனின் மகிமைக்காக நற்செயல் பரிவோருக்கு நித்திய பேரின்ப வாழ்வு சன்மானமாகக் கிடைக்கும்.
சுய விளம்பரத்துக்காகச் செய்வோருக்கு விளம்பரத்தினால் கிடைக்கும் மகிழ்ச்சி மட்டுமே சன்மானம்.
இறைவனிடமிருந்து எதுவும் கிடைக்காது.
பொது மேடைகளில் பொன்னாடை போர்த்தப்பட வேண்டும், நமது சேவைக்காகப் புகழப்பட வேண்டும் என்ற ஆசை நம்மிடம் இருக்கக் கூடாது.
இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலி தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆரம்பித்து தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் நிறைவடையும்.
ஆரம்ப செபத்துக்கும், இறுதி செபத்துக்கும் இடையில் திருப்பலி சார்ந்த நிகழ்வுகள் மட்டுமே இடம் பெற வேண்டும்.
திருப்பலியைச் சாராத எந்த நிகழ்வும் இடம்பெறக் கூடாது.
திருப்பலி பீடம் பொதுக்கூட்ட மேடை அல்ல.
நமக்காகச் சிலுவையைச் சுமந்து சென்றபோது சிலுவையின் பாரம் தாங்காமல் இயேசு மூன்று முறை கீழே விழுந்தார்.
அவர் விழும்போது முட்டு அடிபட்டிருக்கும்.
நமக்காக முட்டில் அடிவாங்கிய இயேசுவின் முன் முழங்காலில் இருந்து, திவ்ய நற்கருணை வாங்க நமக்கு மனதில்லை.
நட்டமாய் நின்று கையில் வாங்குகிறோம்.
திவ்ய நற்கருணையில் இருப்பவர் கடவுள் என்ற விசுவாசம் நம்மிடம் இருந்தால் அப்படிச் செய்வோமா?
ஆண்டவரையே தங்கள் இட்டப்படி வாங்குபவர்கள் எப்படி இறைவன் இட்டப்படி வாழ்வார்கள்?
கோவிலுக்கு வருவது பிறர் நம்மைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல.
பிறர் நம்மைப் பார்க்க வேண்டும் என்பதற்காக நாம் எதையும் செய்யக் கூடாது.
கடவுள் நம்மைப் பார்க்கிறார் என்பதை மனதில் கொண்டு செயல்படுவோம்.
"எல்லாம் உமக்காக, இயேசுவே, எல்லாம் உமக்காக."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment