"ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்."
(மத்தேயு நற்செய்தி 5:39)
அன்பு செய்கின்றவர்களை அன்பு செய்வது பெரிய சாதனை அல்ல.
நம்மை வெறுப்பவர்களை அன்பு செய்வதுதான் கிறித்தவப் பண்பு.
வெறுப்பவர்களை அன்பு செய்பவன் தான் இயேசுவின் சாயலைப் பெற்றிருக்கிறான்.
பாவம் இறைவனுக்கு எதிரானது.
பாவம் செய்பவன் பாவி.
அதாவது
இறைவனுக்கு எதிராகச் செயல்படுபவன் பாவி.
"நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்கிறார் இயேசு.
பாவிகள் மனம் திரும்பி நித்திய பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்ததன் மூலம் அவரது போதனையை வாழ்ந்து காண்பித்தார்.
ஆன்மீகத்துக்கும், லௌகீகத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இந்த வசனத்தில் தான் அடங்கியிருக்கிறது.
ஆன்மீகம் எல்லா சூழ்நிலைகளிலும் நன்மையையே செய்யும்,
நன்மையை மட்டுமே செய்யும்.
லௌகீகம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும்.
ஆன்மீகவாதிகள் தங்களுக்கு நன்மை செய்தவர்களுக்கு மட்டுமல்ல, தீங்கு செய்பவர்களுக்கும் நன்மை செய்வார்கள்.
உதவி செய்பவர்களுக்கும் பதில் உதவி செய்வார்கள்,
தீங்கு செய்பவர்களுக்கும் பதில் உதவி செய்வார்கள்.
வாழ்த்துபவர்களையும் வாழ்த்துவார்கள்,
வைகின்றவர்களையும் வாழ்த்துவார்கள்.
ஆனால் லௌகீகவாதிகள் வாழ்த்துபவர்களை வாழ்த்துவார்கள்,
வைபவர்களை பதிலுக்கு வைவார்கள்.
இயேசு தன்னைக் கைது செய்ய வந்தவர்களிடம் தன்னைக் கையளித்தார்.
அவர்கள் தன்னைக் கைது செய்ய கெத்சமனித் தோட்டத்திற்கு வருவார்கள் என்று இயேசுவுக்குத் தெரியும்.
தெரிந்து தான் போனார்.
மூன்று ஆண்டுகள் பொது வாழ்வின் போது தந்தை குறித்த நேரம் வராததால் எதிரிகள் பிடிக்க முயன்ற போது அவர்கள் கையில் அகப்பட்டவில்லை.
ஆனால் நேரம் வந்தவுடன் அவர்கள் கைது செய்ய வந்தபோது தடுக்கவில்லை.
விசாரணை மன்றத்தில் தனக்காக அவர் வாதாடவில்லை.
அவர்கள் அடிக்கும் போது மறுக்காமல் அடிகளை வாங்கிக் கொண்டார்.
மிதிக்கும் போது மிதிகளைத் தடுக்கவில்லை.
மரணத் தீர்ப்பிடும்போது தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்.
சிலுவையை ஏற்றிய போது மறுக்கவில்லை.
விழுந்தாலும் எழுந்து நடந்தார்.
சிலுவையில் அறைந்தபோது ஏற்றுக் கொண்டார்.
இவ்வளவு தீங்குகளையும் ஏற்றுக் கொண்டு இறுதியில் , யூதாஸ் உட்பட, தனக்கு தீங்கு இழைத்த அனைவரையும் மன்னித்து விட்டார்.
'நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்."
என்ற அவருடைய போதனையை வாழ்ந்து காண்பித்தார்.
அவருடைய போதனைகளை அப்படியே பின்பற்றுபவர்கள் தான் அவருடைய சீடர்கள்.
ரோமைப் பேரரசு நற் செய்தியை அறிவித்ததற்காக அவருடைய சீடர்களைக் கொடுமைப் படுத்தியபோது, அவர்கள் கொடுமையை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்.
ஆட்சிக்கு வரும்போது முக்கிய பதவி வேண்டும் என்று இயேசுவிடம் கேட்ட பெரிய யாக்கோபு நற் செய்தியை அறிவித்த போது இயேசுவுக்காக ரோமை அரசிடம் தன் தலையைக் கொடுத்து சீடர்களில் முதல் வேத சாட்சி என்ற பதவியைப் பெற்றார்.
விசாரணை மன்றத்தில் மூன்று முறை இயேசுவை மறுதலித்த இராயப்பர் தலை கீழாக சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.
சீடர்களுக்கு ஏற்பட்ட நிலைமை இந்தியாவில் நமக்கும் வரலாம்.
வந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு நாமும் இயேசுவின் சீடர்கள் என்பதை நிருபிப்போம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment